நீ இல்லாத வெற்றிடங்களில்
வெறுமனே லயித்து லயித்து, கொடூரத்தனிமைக்கு
பலியாகிக் கொண்டிருக்கிறேன்.
இன்றைய நாழிகைகளில்
பிறர் என் மீது செலுத்தும் பாசத்தையெல்லாம்,
உட்கொள்ளும்படியாக நான் இல்லை. உனதொரு பிம்பம்
அங்கே உருப்பெருகிறது.
அதன் சாயலில்
வேறெதனையும் ஏற்க முடியாத,
மகா துயரொன்று
என் நாளங்களிலெல்லாம்
விரவிக் கிடக்கிறது.
என் இப்போதைய
உளச்சிதைவுக்கும் சேர்த்தே,
சற்று அதிகமாய்
உன்னை காதலித்திருக்கிறேன்.
அதற்கான பிரதியுபகாரமாய்
இப்படிச் சிதைந்த என்னை,
எனக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கிறாய்.
இதோ எனதிந்த தனிமையில்
ஆன்மாவைச் சோதித்துப் பார்க்கும்
ஏகாந்தம் நிறைந்திருக்கிறது...
இருவருக்கும் சொந்தமாகியிருந்த காதல்,
அயர்ச்சியின்றி அதனோடு
சம்பாஷணை
நடத்திக் கொண்டேயிருக்கிறது.
இடையிடையே...!
உன் சிரிப்புச் சப்தம்,
உன் குரலோசை,
நீ மெளனிக்கும் நிமிடங்கள்,
உன் செய்கை,
யாவற்றின் மனப் பிரதியும், அசரீரியும்,
என் பெரும் மெளனத்தை கலைத்து
போதை தரவல்லதாய் உள்ளது.
தனிமையெனும் பெரும் காட்டில்
வழி தவறுவதென்பது,
மரணத்துக்கான பாதையென்பதை
நீ அறிவாயா?
உன் நினைவுகளை விட்டும் தப்பிப்பிழைப்பதற்காய்
நான் எடுத்த பிரயத்தனங்கள் எல்லாமுமே உன்னில் தான்
மறுபடி வந்து முடிவுறுகிறது.
என் உயிர் வேரினில்
நீ காதல் மலராய்
பூத்துக் குலுங்குகிறாய்.
நீ உயிர்ப்போடு இருக்க வேண்டுமெனில்,
நான் சரியவே கூடாதென
தீர்மானம் பூண்டிருக்கிறேன்.
கவனி!
உன் மீதான அளவற்ற
மன நெருக்கத்தின் விபரீதத்தில்,
என்னை தனியாய்
இவ்வாழ்விலிருந்து பிரித்தெடுத்து
வதைத்துக் கொண்டிருக்கிறேன்...
பிரிவினைக்குப் பின்னர் காதலென்பது
அங்கீகரிக்கப்பட்ட ஒரு நச்சு....💔