ஒரு மனிதனின் மூளைத்திறன் அவனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் சார்ந்திருக்கிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமாக இருப்பது உங்கள் உயிர்நிலை உறுப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 1.5 கிலோ எடையுள்ள மனித மூளை இயற்கையின் படைப்பில் உருவான ஒரு அற்புதமே. இந்த விஞ்ஞான யுகத்தின் தலை சிறந்த படைப்பான, மிகச்சிறந்த தொழில்நுட்பத்தால் உருவான மீத்திறன் கணினி (Super Computer) கூட, மிக நுண்ணிய நரம்பணுக்களால் ஆன நம் மூளையின் சிந்திப்பு, அறிவாற்றல் மற்றும் படைப்புத்திறன் ஆகியவற்றை நெருங்கக் கூட முடியாது என்றால் அது எவ்வளவு பெரிய அதிசயம்! மனித மூளையானது வெளி உலகத்தின் தொடர்புகளைக் கொண்டு வளர்ச்சி அடையும் ஒரு அறிவார்ந்த உறுப்பு. இருந்தாலும், வயது முதிர்ச்சி அடைந்ததும் வரும் நோய்களின் காரணமாக, உதாரணத்திற்கு அறிவாற்றல் குறைப்பாடு, மனம் மற்றும் உடல் நலக் கோளாறு போன்ற நோய்களால் மூளையின் செயல்பாட்டுத் திறன் குறைந்துவிடுகிறது.
முப்பத்தைந்து வயதை எட்டிய ஒவ்வருவரும், தினசரி சுமார் 7000 நரம்பணுக்களை (மூளை உயிரணுக்கள்) இழந்து கொண்டே வருகின்றனர். இதைத் தடுக்கவும் வழியில்லை; இழந்த அணுக்களை நிரப்பவும் வழியில்லை. மனித மூளை சுமார் 100 பில்லியன் நரம்பணுக்களால் ஆனது. இந்த 100 பில்லியன் நரம்பணுக்களும் மற்றொரு 1000 முதல் 10,000 நரம்பணுக்களில் இணைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இலகுவான கணித முறைகளுடன் உங்கள் நரம்பணுக்கள் அனைத்தும் எப்பொழுது முற்றிலும் தீரும் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!