ஆழியின் மகளும் நானே ,மகனும் நானே,
சில நேரங்களில் அன்னையாய் அரவணைப்பேன்..
சில நேரங்களில் தந்தையாய்
கண்டிப்பேன்...
ஒருவகையில் நானும் அர்த்தநாரி தான் ......
எனது பெருமை உணர்ந்த வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை முதலில் வைத்து
அடுத்து எனது சிறப்பை உணர்த்த
வான் சிறப்பை இரண்டாவதாய் வைத்தான்..
புரட்சிப் புலவன் இளங்கோவும்
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
என, தனது சிலம்பில் என்னைப்
போற்றியே ஆரம்பித்தான்....
மாரியல்லாது காரியமில்லை
என்றிருந்த என்னை தற்போது
கண்டுகொள்வாருமில்லை
சீண்டுவாருமில்லை.....
மண்ணை நனைத்திருக்கிறேன்
மலையை நனைத்திருக்கிறேன்
மரங்களை நனைத்திருக்கிறேன்
மலர்களை நனைத்திருக்கிறேன்
அப்போதெல்லாம் கிட்டாத மகிழ்ச்சி
இந்தப் பிஞ்சுப் பாதங்களின் தழுவல்களிலும்,
இளந்தளிர் குழந்தைகளின் மேனி
நனைத்தலிலும், கோடிகோடியாய் கிட்டுகிறதே...
பொறுப்பான தகப்பனின் அன்பில்
நனைந்தும், என்னால் ஈரமாகியும்
குதூகலிக்கும் இக்குழந்தைகளின்
வாழ்வில் என்றும் ஆனந்தமும் பூரிப்பும்
தொடரட்டும் ..
ஆனாலும் ஏதோ ஒரு சோகம்
எட்டிப் பார்க்கிறதே என்னுள்?
அதற்குக் காரணம் அந்த
ஒற்றைச் சிறுமி தானோ....?
இப்போது என் ஏக்கமும் தேவையும்
இரண்டு விஷயங்கள் மட்டுமே...
எனக்கான கற்பகத் தருக்களை அழித்து
வனங்களையெல்லாம் வீடுகளாக்கி விட்டு,
நான் வேண்டுமென்று யாகம் வளர்த்தும்,
யாசகம் கேட்டும் திரியும் இந்தப்
பொல்லாத மனிதர்கள் திருந்த வேண்டுமென்று ஒன்று...
மற்றொன்று...
மழை கண்டும் வாடிய பயிராய் நிற்கும்
ஒற்றைச் சிறுமியே உன் கண்ணீரைக்
கரைத்துவிட மட்டுமே முடியும் என்னால்,
அதன் காரணத்தை உன்னால் மட்டுமே
துடைத்தெறியவும் தூக்கிப் போடவும் முடியும்..
உனக்கான தந்தையாய் தாயாய் என்றும்
நானிருப்பேன் வா மகளே வா !!!
என்னோடு கலந்து விளையாடு
கொண்டாடு வா மகளே வா....
#இப்படிக்கு மாமழை....