FTC Forum
தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Anu on March 06, 2012, 02:27:07 PM
-
சுந்தரகாண்டம் பகுதி-1
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ராமனுக்கு தேவர்கள் மட்டுமல்ல, ரிஷிகள், மனிதர்களுடன் விலங்குகளும், பறவைகளும் கூட சேவை செய்யப் போகின்றன. அந்த விலங்கினங்களில் வானரங்களும் அடக்கம். பார்வதி! நீ ஒரு வானரப் பிள்ளையைப் பெற்றுத் தருவாயா? என பார்வதியிடம் கேட்டார் சர்வேஸ்வரன். நாதா! எனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஒரு வானரக் குழந்தையைப் பெற வேண்டும் எனக் கூறுகிறீர்களே! என்றதும் சர்வேஸ்வரன் சிரித்தார்.எல்லாம் காரணப்படியே நடக்கிறது. பார்வதி மறுத்தால் என்ன? ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தையில்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தாள். இந்த பூமியில் பிறக்கும் எல்லோரும் அழகாக இருப்பதில்லை. குறிப்பாக கருத்த பெண்களை மாப்பிள்ளைகள் ஒதுக்குவதும், கருத்த ஆண்களை பெண்கள் ஒதுக்குவதுமான சூழ்நிலையால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நிர்ப்பந்தம் காரணமாக இவர்கள் வாழ்வில் இணைந்திருந்தாலும் கூட, எதையோ இழந்தது போல துக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்படி ஒரு பழக்கம் கூடவே கூடாது. அழகு, நிறம் ஆகியவற்றை விட மனதை உற்றுப் பார்க்க வேண்டும். மகரிஷியின் தோற்றத்தைப் பார்த்து சிரித்து கேலி செய்த புஞ்ஜிகஸ்தலைக்கு அவருக்குள் உறைந்து கிடந்த தவவலிமை புரியாமல் போய்விட்டது. ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ, என சாபமிட்டு விட்டார்.
புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். ரிஷியின் சாபம் எப்படி மாறும்? மேலும், எல்லாமே காரண காரியத்துடனேயே அல்லவா நடக்கிறது. அவள் சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீரைக் கண்டு கலங்கிய ரிஷி, கோபம் காரணமாக அவள் முகத்தை மாற்றி விட்டோமே என வருந்தி, பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன், என்ற விதிவிலக்கையும் அளித்தார்.அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்ற பெயர் அமைந்தது. கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் பேரழகு. ஒருநாள், தன் வடிவை மறைத்து, அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான்.இப்படி ஒரு சுந்தரியா? அவன் அவளை நெருங்கி ஆலிங்கனம் செய்தான். யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த அந்தப்பெண், எந்த ஒரு உருவத்தையும் காண முடியாமல், ஒரு ஸ்திரீயிடம் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வது யார்? எனக் கதறினாள்.அப்போது வாயு பகவான் அவளுக்கு தரிசனம் தந்தார். பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் ஆலிங்கனம் செய்யவில்லை. உன் அழகில் மெய்மறந்து மனதால் மட்டுமே உன்னை ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. அன்பு ததும்பும் முகம் கொண்டவளே! நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய், என சொல்லி மறைந்தார்.அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுபுத்திரன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறக்கத் துவங்கி விட்டான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை. அவன் வேகமாக வான மண்டலத்தை சுற்றி வந்தான். அப்போது சூரியன் வெளிப்பட்டான்.
சிவந்த பழம் போல் அது காட்சியளித்தது. வானரமாயிற்றே! பழமென்றால் விட்டு வைக்குமா? அதிலும், சாதாரண வானரமே எண்பதடி பாயும். இவன் வாயு செல்வன்! கேட்கவா வேண்டும். சூரியனை நோக்கிப் பறந்தான்.அன்று கிரகணம். ராகு என்னும் நாகம் சூரியனைக் கவ்விப்பிடிக்க எத்தனித்து அவனை விரட்டிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனைக் கவ்விப்பிடிக்கவும், மாருதி அங்கே வரவும் சரியாக இருந்தது. ராகுவை ஓட ஓட விரட்டியடித்தான். குரங்குகளுக்கு பிறர் கையிலுள்ளதை பிடுங்குவது ஜென்ம சுபாவம். விடுவானா நம் சின்ன மாருதி? ராகுவை விரட்டிக்கொண்டே இருந்தான்.இந்திரா! தேவேந்திரா! என்னைக் காப்பாற்று, இந்தக் குரங்கு என்னை விரட்டுகிறது, எனக் கதறிக் கொண்டே இந்திரலோகத் திற்குள் புகுந்தான் ராகு.அங்கே இந்திராணியுடன் ஜெகஜோதியாக வீற்றிருந்த தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தை எடுத்து மாருதியின் மீது வீசினான். அது சக்தி வாய்ந்த ஆயுதம். மாருதி பச்சைப் பிள்ளையல்லவா! தாங்குவானா? அந்த ஆயுதம் அவன் மேல் பட்டு, கதறியபடியே கீழே விழுந்தான். ஒரு மலை முகட்டில் அவன் விழுந்த போது, தோள்பட்டை எலும்பு முறிந்து விட்டது. குழந்தை கதறுகின்ற சப்தம் கேட்டு அஞ்ஜனை ஓடோடி வந்தாள்.ஏ தேவேந்திரா! இது உனக்கே அடுக்குமா? உன் துன்புறுத்தலுக்கு என் பச்சைக்குழந்தை தானா கிடைத்தான்? பார்...பார்...ஒரு வழி செய்கிறேன், என்றவள் வாயு பகவானைப் பிõர்த்தித்தாள்.நடந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளை அடிபட்டுக் கிடக்கிறான். நீங்கள் அமைதியாக நிற்கிறீர்களே! என்றாள்.வாயுவுக்கும் கடும் கோபம். மகனை அன்போடு அணைத்தான். அந்த மலையில் இருந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். வாயு உடலுக்குள் நின்றாலும் கஷ்டம்... வெளியில் நின்றாலும் கஷ்டம்...உலக ஜீவன்களெல்லாம் திணறின. தேவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். தேவேந்திரன் உட்பட...!
-
சுந்தரகாண்டம் பகுதி-2
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி சொல்லியனுப்பினார். அனைவரும் வாயுவிடம் ஓடிவந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவே, அவர்கள் மீது இரக்கம் கொண்ட வாயு பகவான் மீண்டும் சஞ்சரிக்கலானார். தேவேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, வாயு! உன் புத்திரன் மாருதி சிரஞ்சீவியாய் (என்றும் நிலைத்திருப்பவர்) இருப்பான். என் வஜ்ராயுதம் யார் மீதாவது பட்டால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். இவனுக்கு அவ்வாறு ஏதும் ஆகவில்லை. எனவே, இவன் நினைக்கும் போது மட்டுமே மரணமடைவான். அதுவரை இவனுக்கு அழிவில்லை, என்று அன்பு பொங்கக் கூறினான்.தன் மைந்தனுக்கு கிடைத்த பேறு குறித்து வாயு மிகவும் மகிழ்ந்தான். குழந்தைகள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இளமையிலேயே நடந்து கொள்ள வேண்டும். கல்லூரி, பள்ளிகளில் படிக்கிற குழந்தைகள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற முடியாமல் போனாலும் கூட, பெற்றவர்கள் தங்கள் குழந்தை போட்டிகளில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைப்பார்கள் இல்லையா? அதுபோல், மாருதியால் சூரியனைப் பிடிக்க முடியாமல் போனாலும், அவனது திறமைக்கு கிடைத்த அரிய பரிசு கண்டு, கேஸரியும், அஞ்சனையும் மகிழ்ந்தார்கள். ஆஞ்சநேயரைப் பற்றிய இந்த அறிமுகம் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது. நாம் படித்துக் கொண்டிருப்பது சுந்தரகாண்டம் என்றாலும், அதன் கதாநாயகன் ஆஞ்சநேயரைப் பற்றிய அறிமுகம் அந்தக் காண்டத்தில் கிடைக்கிறது என்பதால் தான், இவ்வளவு நேரமும் கிஷ்கிந்தையில் நாம் இருந்தோம். இனி, போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சுந்தரகாண்டத்திற்குள் நுழைவோம். இந்த காண்டத்தின் சிறப்பை சொற்களால் விளக்க முடியாது. ஒரு பெண், அதிலும் திருமணமானவள், மாற்றானிடம் சிக்கியிருக்கிறாள் என்றால், அவளது மனநிலை எந்தளவுக்கு இருக்கும்...அவளது கண்ணீர் இலங்கையின் கடலில் கிடக்கும் பெரு நீரையும் தாண்டி விடாதா என்ன! அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் என்ன நினைப்பாள்...ஐயோ! இந்த உயிர் இப்படியே போய் விடாதா என்று தானே சிந்திப்பாள். இப்படி அந்த உயிர் பிரிய இருந்த வேளையில், ஆஞ்சநேயப் பெருமான் சீதாவின் முன்னால் போய் நிற்கிறார்.
ராம ராம ராம என்கிறார். உயிர் திரும்பியது. தன் மணாளனின் பெயரை யாரோ உச்சரிக்கிறார்களே! சரி...இங்கே வந்திருக்கும் வானரன் யார்? ஒருவேளை அவனும் ராவணனால் அனுப்பப்பட்ட ராட்சஷனோ? சீதையின் மனம் தடுமாறுகிறது. மீண்டும் உயிர் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது கணையாழியை எடுத்துக் காட்டுகிறார் ஸ்ரீ ஆஞ்சநேயன். ஆஹா...கண்டேன் என் ராமனை என்று சீதை அகமகிழ்ந்தாள்.இந்த கணையாழிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு.இதை ஜனகமகராஜா ராமனுக்கு சீதனமாக அளித்திருந்தார். ஒருநாள், ராமனுக்கும், சீதைக்கும் ஊடல். கடவுளாக இருந்தால் என்ன...மனிதனாகப் பிறந்து விட்டார்களே இருவரும்! பிறகு ஊடல் வராமல் போகுமா...சிறிது நேரத்தில் இருவருக்குமே கோபம் தணிகிறது. ஆனாலும், யார் முதலில் பேசுவது என்ற ஈகோ! பொதுவாக, பெண்களிடம் வைராக்கியம் அதிகம். நம் சீதாபிராட்டியும் அதற்கு விதிவிலக்கா என்ன! அவள் ராமனிடம் பேசவில்லை.அந்த மனுஷன் தானே வீண் வம்பிழுத்தார்! அவரே வந்து பேசட்டுமே, என தன் செந்தாமரைக் கண்ணின் ஓரத்தால் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.அவள் நம் மனைவிதானே! இவளுக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுத்தால் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள். இருக்கட்டும், இருக்கட்டும், என்று எந்நேரமும் அவளை மார்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனின் அம்சமான ராமன், மனிதனாகிப் போனதால் கோபப்படுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு முக்கிய விஷயம்! ஆண்களுக்கு வைராக்கியம் பெண்களை விட குறைவென்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்! ராமபிரானால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. நேரடியாக பேச தயக்கம்! எனவே, மாமனார் போட்ட மோதிரத்தை கழற்றி, சீதாவுக்கு தெரியாமல், ஒரு பலகையில் வைத்து விட்டு, என் மோதிரத்தை எங்கே! யாராவது பார்த்தீர்களா! அம்மா கோசலா! நீ பார்த்தாயா? சுமித்ராதேவி நீ பார்த்தாயா? அம்மா கைகேயி நீ கண்டாயா? அடேய் தம்பிகளே! நீங்கள் கண்டீர்களா? என வீட்டையே இரண்டுபடுத்திக் கொண்டிருந்தார்.
நாம், காலையில் அலுவலகம் கிளம்பும் போது பேனா ஒரு பக்கம், சீசன் டிக்கெட் ஒரு பக்கம், போன் ஒரு பக்கம் என வைத்து விட்டு, இதையெல்லாம் எங்கே வைத்து தொலைத்தீர்கள்? என்று பெண்டாட்டியை அதிகாரம் செய்வோமே! அதுபோல், ராமனும் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்.சீதாதேவியும் அவர்களோடு சேர்ந்து தேடினாள்.பலகையில் இருந்த மோதிரம் அவள் கண்ணில் பட்டு விட்டது. எடுத்தாள்! அப்பா போட்ட மோதிரமாச்சே! அந்தக் கரிசனை வேறு நம் சீதாபிராட்டிக்கு இருக்காதா என்ன! எடுத்த மோதிரத்தை ராமனிடம் கொண்டு வந்தாள். இந்த சண்டைக்கார மனுஷனிடம் பேசுவதாவது... மோதிரத்தை மட்டும் அவனிடம் நீட்டினாள். இப்போது, ராமபிரான் சீதையிடம் சரணடைந்து விட்டார்.ஆமாம்! மோதிரத்தை எடுத்தாய் அல்லவா! கையில் போட்டு விட வேண்டியது தானே, என்று பேச்சுக் கொடுத்தார்.கணவர் முதலில் பேசியதில் சீதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரருகே வந்தாள். பேசாமலே மோதிரத்தைப் போட்டாள். பேசாவிட்டாலும், மோதிரத்தை போட்டுவிட்டாளே! இப்போது கோபம் தீர்ந்து விட்டதா? என்று சொல்லி, அவளை அப்படியே ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து கொண்டார். இப்போது அதே மோதிரத்தை ஆஞ்சநேயர் காட்டுகிறார். அதைப் பார்த்து சீதை சொன்னாளாம்!ஏ மோதிரமே! அன்று ஊடலின் போதும் நீ தான் எங்களைச் சேர்த்து வைத்தாய்! இன்று பிரிந்திருக்கும் போதும் நீ தான் எங்களைச் சேர்த்து வைக்க வந்திருக்கிறாய்... என்று.
-
சுந்தரகாண்டம் பகுதி-3
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் தேர்ந்தெடுத்து காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது. கிஷ்கிந்தா காண்டத்துடன் 11 ஆயிரம் ஸ்லோகங்கள் முடிந்து சுந்தரகாண்டம் துவுங்குகிறது. இதன் முதல் ஸ்லோகம், ததோ ராவண நீதாயா: ஸீதாயா:என்று துவங்குகிறது. இதில் வரும் ராவண என்ற பதத்தில் உள்ள வ என்ற அக்ஷரமே காயத்ரியின் 12வது அக்ஷரம்.இந்த ஸ்லோகத்தில் பெரும் பொருள் புதைந்து கிடக்கிறது. ராவண நீதாயா: என்றால் ராவணனால் கொண்டு போகப்பட்ட என்று அர்த்தம். ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை என்று நாம் அர்த்தம் கொள்ளவோ பேசவோ கூடாது. ஏனெனில் சீதாபிராட்டியை யாராலும் தொட இயலாது. ஏனெனில், அவள் அக்னி ஸ்வரூபம். யார் இந்த அக்னி என்றால், அக்னியே விஷ்ணு தான் என்கிறார்கள். அக்னியை யாராலும் தொட இயலாது. அக்னியான விஷ்ணுவை யாரால் தொட இயலும்! சீதையால் மட்டுமே முடியும். அவள் அக்னியில் இரண்டு முறை இறங்கியவள் என்பது தெரிந்த விஷயம்.இந்த ஸ்லோகத்தில் ராவண என்ற பதமும் வருகிறது.ராவணன் என்ற சொல்லுக்கு பிறருக்கு இம்சை தருவதில் சுகம் காண்பவன் என்று பொருள். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தும் கூட, சீதையை இம்சை செய்தவன் அந்தக் கொடியவன்.அடுத்து ஸீதோயா என்ற பதம் வருகிறது. சீதா என்றால் ஆண் பெண் உறவில்லாமல் உண்டானது என்று பொருள். லட்சுமிதேவி ஜனகரின் மகளாகும் பொருட்டு, அவர் தங்கக் கலப்பை கொண்டு யாகத்திற்குரிய நிலத்தை உழும்போது அவர் முன் தோன்றினாள். மகாத்மாக்களின் இல்லங்களில் தான் லட்சுமி வாசம் செய்வாள்.
ஜனகர் பெரிய மகாராஜா. ஆனால், ரிஷி...ராஜாவுக்கும், துறவிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆனால், பதவியில் இருந்தாலும் அதோடு ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்ததால் அவர் ராஜரிஷி எனப்பட்டார். செல்வம் நிறைய இருந்தாலும் அதை பிறருக்காக செலவிட்டு, அதன் மேல் பற்றின்றி திகழ்ந்தாரே...அப்படிப்பட்ட நல்லவரின் வீட்டில் பிறந்தவள் அவள். அந்த பிராட்டியைத் தேடி ஆஞ்சநேயர் புறப்பட்டார். இங்கே பெரிய தத்துவம் புதைந்து கிடக்கிறது. ஜீவாத்மா என்பது பரமாத்மாவை தேடிச் செல்ல வேண்டும். ஆனால், பரமாத்மா இருக்குமிடம் ஜீவாத்மாவுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் போக மனமில்லை. ஏனெனில், பொன்மான் போன்ற உலக இன்ப விஷயங்கள் ஜீவாத்மாவைப் புரட்டியெடுக்கின்றன. அதை உண்மையென்று நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றன. ஆபத்தில் சிக்கும் உயிர்களைக் காப்பாற்றுபவன் ஆச்சார்யன் என்ற குரு. நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்து விட்டால், அவர் இறைவனை அடையும் வழியைச் சொல்லித் தந்து விடுவார்.அதுபோல் சீதையாகிய ஜீவாத்மாவை, ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும் திவ்ய பணியைச் செய்ய ஆஞ்சநேயர் கிளம்புகிறார் இலங்கை நோக்கி! இதனால் தான் ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார். ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடையவர். அவர் விஸ்வரூபம் எடுத்தார். வானரர்களெல்லாம் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். சூரிய பகவான், இந்திரன், தன் தந்தை வாயு பகவான், பிரம்மா, பூதகணங்களை மனதால் வணங்கினார்.
மகேந்திர பர்வத மலையின் உச்சியில் நின்ற அவர், அதை ஒரு அழுத்து அழுத்தினார்.அந்த மலை பிளந்தது போன்ற சப்தத்தை எழுப்பியது. ஆஞ்சநேயருக்கு மலை போன்ற துன்பங்களையும் தகர்க்கும் சக்தியுண்டு. மகேந்திர மலையை அழுத்தியவர், சஞ்சீவி மலையைச் சுமந்தவர். மலை போல் மனிதர்களுக்கு துன்பம் வரத்தான் செய்யும். அதைக் காலில் போட்டு அழுத்தவும் தெரிய வேண்டும். கையில் தூக்கி வைத்துக் கொண்டு சுகமான சுமையாகவும் கருத வேண்டும். நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்று பிறருக்கு சேவையும் செய்ய வேண்டும். ஆஞ்சநேயர் தனக்காகவோ, தன் அம்மா அஞ்சனாவுக்காகவோ, தந்தை வாயுவுக்காகவோ, தன் அரசன் சுக்ரீவனின் நன்மை கருதியோ இலங்கைக்கு போகவில்லை. யாரோ ஒரு ராமன்...அயோத்தியில் இருந்து தங்கள் அரசனை நாடி வந்து தன் மனைவியை மீட்க உதவி கேட்டவன்.. அவனுக்காக ஆபத்தான கடலைத் தாண்ட வேண்டுமென கட்டாயமா என்ன? இன்றைய நிலையைப் பார்ப்போமே! சாலையில் ஒருவன் அடிபட்டுக் கிடந்தால், காவல்துறைக்குப் பயந்து, அவன் முகத்தைப் பார்க்காமலே ஓட்டம் பிடித்து விடுகிறோம். ஆனால், ஆஞ்சநேயன் முன்பின் தெரியாத ஒருவனின் மனைவியைத் தேடி புறப்படுகிறான். எவ்வளவு பெரிய மனது! எவ்வளவு பெரிய கைங்கர்யம் பாருங்கள். பிறருக்கு உதவி செய்யும் போது, அதனால் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட தைரியமாகச் செய்யுங்கள். அதனால் உயிர் போகும் நிலை வந்தாலும் கூட பரவாயில்லை, என்பது தான் ஆஞ்சநேயர் நமக்கு கற்றுத்தரும் பாடம். சுந்தரகாண்டம் உணர்த்துவதும் இதுவே!
-
சுந்தரகாண்டம் பகுதி-4
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் அல்லவா இப்போது வேகம் கொண்டிருக்கிறது. சீதாவைக் காண்போமா! அவளை ராமபிரானிடம் ஒப்படைப்போமா! ஒருவேளை இலங்கையில் சீதா இல்லையென் றால், ராமன் உயிர் தரிக்கமாட்டாரே! அந்தச்சூழலில் சுக்ரீவன் இறந்து விடுவான், லட்சுமணன் இறந்து போவான், இதைக் கேள்விப்படும் பரத, சத்ருக்கனர் மடிவர், அயோத்தி மக்களில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள். வானர வீரர்கள் தங்களை மாய்த்துக் கொள்வர். என் ஒருவனின் பாருட்டு, இத்தனை பேர் அழிவரா! ஸ்ரீராமா! நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.நிச்சயமாக நீயும் காப்பாற்றப்படுவாய்! நானும் காப்பாற்றப்படுவேன். ஏனெனில், நான் ராமநாமத்தை உச்சரிப்பவன்.இப்படி அவன் பறந்த வேளையில், சீதாவிடம் தான் ராமதூதன் என்பதை நிரூபிக்க, ராமபிரான் சொன்ன ஒரு சம்பவம் அவன் நெஞ்சிலே நிழலாடியது. அதை நினைத்தபடியே அவன் வேகமாகப் பறக்கிறான். அந்த சம்பவம் என்ன? கருணையில் ராமன் உயர்ந்தவனா? சீதா சிறந்தவளா? என்று ஒரு போட்டி வைத்தால், நம் பிராட்டியே வெற்றி பெறுவாள். ராமனையும் விட கருணையா? அவனே கருணாமூர்த்தியாயிற்றே! உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவன் ஆயிற்றே! அவனது கண்களில் கருணை சிந்துமாமே! ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா. ஏன் தெரியுமா? கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.
ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம். இப்படி முன்னால் கண்ணழகு, பின்னால் நடையழகு என மாறி மாறிபகவானை அனுபவித்த பாக்கியசாலி அவர். அப்படிப்பட்ட கருணைக் கண்களுக்கு சொந்தக்காரரான ராமனை விட சீதா எந்த விதத்தில் உசத்தி?ஒருமுறை, ராமபிரான் சீதாவுடன் ஏகாந்தமாக (தனிமை) இருந்தார். மனைவியின் மடி மீது தலை வைத்து அஞ்சனவண்ணன் கண் மூடியிருக்கிறான். கணவரின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்று சீதா அசையவில்லை. இன்னொரு காரணம், அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். தூக்கத்தில் கூட இரண்டு வகையை சுந்தரகாண்டம் காட்டுகிறது. அனுமான் இலங்கை சென்ற பிறகு, ராவணனின் மாளிகையை நோட்டமிட்டார். அங்கே ராவணனால் கடத்தி வரப்பட்ட பெண்களும், இன்னும் ஆசைநாயகியரும் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டு, படுத்திருந்த காட்சியைப் பார்த்து ஆஞ்சநேயன் தலை குனிந்து, இதையெல்லாம் பார்க்க என்ன பாவம் செய்தோமே! என்று கலங்கினான். அதே நேரம் ராவணின் தர்மபத்தினியான மண்டோதரி துயில்வதைப் பார்த்து, இவள் சீதையோ என்று சந்தேகமும் கொண்டானாம். அப்படி ஒரு அடக்கமான பெண்மணி மண்டோதரி. ராவணனுக்கு வாழ்க்கைப்பட்டதைத் தவிர வேறெந்த பாவமும் செய்யாத பெண்மணி அவள்.அதுபோல், இங்கே ராமன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். சீதா அவனது அழகைப் பருகிக் கொண்டிருக்கிறாள். அப்போது இந்திரனின் மகனான ஜெயந்தன் காக வடிவெடுத்து, அங்கே வந்தான். அவன் சீதையின் அழகை ஒரு மரத்தில் இருந்தபடி பருகிக் கொண்டிருந்தான். பிறன் மனை காண்பது கொடிய பாவமல்லவா? அவர்களுக்கு சொர்க்கமும் கிடைக்காது, நரகமும் கிடைக்காது. நரகம் போனால் கூட ஏதாவது ஒரு காலத்தில் விடிவு கிடைத்து விடும். அங்கும் போகாதவன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பான். இங்கே இறந்த பிறகு, அங்கும் தினம் தினம் மரண பயத்தில் அலறியபடியே தொங்குவான். அப்படி ஒரு கொடிய பாவத்தை செய்து கொண்டிருந்தான் ஜெயந்தன். காக வடிவெடுத்ததால் அவனை காகாசுரன் என்றும் சொல்வார்கள். அந்தப் படுபாவி, நம் அன்புத்தாய் சீதாவின் மார்பைக் கொத்தினான். அன்னைக்கோ தர்ம சங்கடம். ரத்தம் வழிந்தது. ராமன் விழித்து விடக்கூடாது என்பதில் அந்நிலையிலும் அக்கறையாக இருந்தாள். ஆனால், ராமனின் கைகளால் தற்செயலாக வழிந்த ரத்தம் விழ, பிசுபிசுவென ஏதோ ஒட்டியதால் விழித்தெழுந்தார் ராமன். நிலைமையைப் புரிந்து கொண்டார்.
தான் படுத்திருந்த தர்ப்பை படுக்கையில் இருந்து ஒரு புல்லை எடுத்து வீசினார். அது பாணமாய் மாறி அவனை விரட்டியது. கர்வம் கொண்டவன் அல்லவா ஜெயந்தன். அந்த பாணத்தில் இருந்து தப்பி விடலாமென பல இடங்களுக்கும் பறந்தான். பாணம் விரட்டியது. தான் விபரீதத்தில் சிக்கிக் கொண்டோம் என்பது புரிந்து விட்டது. நம் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. ஒரு மானிடன் வீசிய அம்பு தேவலோகத்துக்கு எப்படி வரும்? எனவே, தேவலோகம் நோக்கிப் பறந்தான். பாணம் அங்கும் வந்து விரட்டியது. அவனுக்கு மரண பயம் வந்து விட்டது. அம்மா இந்திராணியிடம் ஓடினான். என்னடா தப்பு செய்தாய்? என அவள் அவனை அதட்டினாள். அவளிடம் நடந்ததைச் சொன்னான். அடப்பாவி! லோகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டி சீதாவாக பூமியில் அவதரித்துள்ளதை நீ அறிவாய். அறிந்தும் தவறு செய்தாய். உனக்கு மன்னிப்பே இல்லை. உனக்கு அடைக்கலம் அளித்தால், தேவலோகமே அழிந்து போகும். என் பிள்ளைப்பாசத்தின் பொருட்டு, ஆயிரக்கணக்கான தேவர்களை நான் இழக்கமாட்டேன். நீ சாக வேண்டியவன் தான்! பிறர் மனைவியைத் தொட்ட கயவனே! நீ என் பிள்ளையே அல்ல, ஒழிந்து போ, என சொல்லிவிட்டாள். காகாசுரன் பறந்தான்... பறந்தான்... பறந்தான்... எங்கும் அவனுக்கு அடைக்கலம் தர நாதியில்லை. கடைசியில், ராமபிரானையே சரணடைவது என முடிவெடுத்தான். அவரது பாதங்களில் வந்து விழுந்தான்.ஸ்ரீராமா சரணம் சரணம்! நான் உம்மை அடைக்கலமடைந்தேன், நான் செய்த தவறுக்கு மன்னிப்பில்லை தான்! இருப்பினும், கருணைக்கடலான நீர் உயிர்பிச்சை இடுவீர் என நம்பி, உம்மை சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள், என்று கதறினான். அப்போது காகமாக இருந்த அவனது தலை, ராமனின் பாதம் இருந்த திசைக்கு எதிர்திசையில் இருந்தது. கருணைக்கடலான சீதாபிராட்டி, அந்த காகத்தின் தலையை ராமனின் பாதம் பக்கமாக திருப்பி வைத்தாள். அவள் நினைத்தால் தலையைத் திருகியிருக்கலாம். ஆனால், லோகமாதாவான அந்த திருமகள், தனக்கு துன்பமிழைத்தவனுக்கும் இப்படி ஒரு கருணையைச் செய்தாள். எப்பேர்ப்பட்ட உத்தமி இந்த சீதா? அவளைக் காப்பாற்ற வேண்டாமா? என்று அவளின் கல்யாண குணங்களைச் சிந்தித்தபடியே பறந்தார் ஆஞ்சநேயர்.
-
சுந்தரகாண்டம் பகுதி-5
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் வரும். நல்லது செய்யப் போனாலும் சிலருக்கு கெடுதலாகத் தெரியும். ஆஞ்சநேயர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி ராமபிரானுக்கு நன்மை செய்யச் செல்கிறார். சீதாபிராட்டியை அவரோடு சேர்த்து வைக்கப் போகிறார். பிரிந்திருக்கிற கணவன், மனைவியை சேர்த்து வைப்பது போல புண்ணியம் உலகில் வேறு ஏதுமில்லை. அவர்களைப் பிரிப்பது போல கொடிய பாவமும் வேறு ஏதுமில்லை. எந்தக் குடும்பத்திலாவது கணவன், மனைவி என்ன காரணத்தில் பிரிந்திருந்தாலும், அதையெல்லாம் மறந்து விட்டு சேர்த்து வைக்க பெரியவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல! இங்கே இன்னொரு தத்துவமும் விளக்கப்படுகிறது. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய வழி தெரியாமல் சிரமப்படுகின்றன. இவ்வுலக வாழ்வின் தற்காலிக இன்பங்களை நிஜமெனக் கருதி, மாயையில் மூழ்கித் தவிக்கின்றன. இவர்களை பரமாத்மாவுடன் இணைத்து வைப்பவர் ஆச்சார்யர் எனப்படும் குரு தான். நல்ல குரு அமைவது ரொம்பவே கஷ்டம். குரு கிடைக்காதவர்கள், ஆஞ்சநேயரை தங்கள் குருவாகக் கொள்ளலாம். சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மாவுடன் சேர்த்து வைத்த கருணை குருவாக அவர் விளங்குகிறார். ஆச்சார்ய, சிஷ்ய சம்பந்தம் சுந்தரகாண்டத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயர் இப்போது கடலைக் கடந்து கொண்டிருக்கிறார். அதைக் கவனிக்கிறான் கடலரசனான சமுத்திர ராஜன். இவனை வளர்த்தவன் இக்ஷ்வாகு குலத்து அரசனான ஸகரன். இந்தக் குலத்தில் வந்தவர்களே தசரதர், ராமன் ஆகியோரெல்லாம். தன்னை வளர்த்த இக்ஷ்வாகு குலத்தவர்க்கு நன்றி தெரிவிக்க இதுதான் சமயமென நினைத்தான் சமுத்திரராஜன். அவன் தனக்குள் மைநாக பர்வதம் என்ற மலை, அடைக்கலமாக இடம் தந்திருந்தான்.
ஒரு காலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அவை பல்வேறு இடங்களுக்கு பறந்து செல்லும் போது, தேவர்கள், பூதகணங்கள் மீது மோதி பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திரன், மலைகளைப் பிடித்து அவற்றின் இறக்கைகளை வெட்ட ஆரம்பித்தான். மைநாக மலையையும் அவன் விரட்ட, அது பயந்து வேகமாகப் பறந்தது. அது வாயு பகவானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டியது. வாயுவும் கருணை செய்து, பின்னால் ராமசேவையின் போது இந்த மலைக்கு வேலையிருக்கும் என்பதை மனதில் கொண்டு, கடலுக்குள் அடித்து தள்ளி ஒளித்து வைத்தது. இந்திரனும் அது நல்லதே என நினைத்து, கடலுக்கடியில் ஒளிந்திருக்கும் அசுரர்கள், இந்த மலையைத் தாண்டி வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்துவது தடைபடும் என்பதால், மைநாக மலையை அப்படியே விட்டுவிட்டான். அதுவும் இந்திரனுக்கு பயந்து கடலுக்குள்ளேயே கிடந்தது. அந்த மலைக்கு கீழும், மேலுமாக வளரும் சக்தியும் உண்டு.சமுத்திரராஜன் அந்த மலையிடம், நண்பா! நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ராம காரியத்தின் பொருட்டு, ஸ்ரீஆஞ்சநேயர் லங்காபுரிக்கு பறந்து கொண்டிருக்கிறார். நீ சற்று மேலே வந்து. அவரை மறித்து உன் மேல் இளைப்பாறிச் செல்ல வகை செய். ஆஞ்சநேயர் கடலைத் தாண்டுவதால் களைப்படைந்திருப்பார். அவரை ஆசுவாசப்படுத்த வேண்டியது என் கடமை. மேலும், அவர் வாயுபுத்திரர். வாயு பகவான் உன்னைத் தூக்கி வந்து எனக்குள் ஒளித்து வைத்தார். அவ்வகையில், நீயும் வாயுவுக்கு நன்றி செய்ய கடமைப்பட்டிருக்கிறாய். அவருக்கு செய்யும் நன்றியை அவரது புத்திரருக்கு செய்தால் மேலும் சந்தோஷப்படுவார், என்றான்.யாருக்காவது மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார். மைநாக மலையும் உயர எழுந்தது.
ஆஞ்சநேயருக்கு அந்தமலை உபகாரம் செய்வதற்காக எழுகிறது என்பது தெரியாதல்லவா? ஏதோ ஒரு தடை ஏற்படுகிறதென கருதி, அவர் தன் மார்பால் அந்த மலையில் மோதினார். அந்த மலைக்கு வலித்தது. ஆஹா...இப்படி ஒரு பலவானா? மலையையே அசைக்கும் சக்தி வாய்ந்தவனாக இருக்கிறானே! என்று சந்தோஷப் பட்ட மைநாக மலை மானிட உருவமெடுத்து அவன் முன்னால் நின்று, தன்னைப் பற்றி விளக்கி, தனது விருந்தினராகத் தங்கிச் செல்ல வேண்டும் என்றது.ஆஞ்சநேயர் மிகுந்த மகிழ்ச்சியுடன், பர்வதராஜா! உன் உபசரிப்பை ஏற்கிறேன். ஆயினும், என்னால் தங்க இயலாது. இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் தங்குவதில்லை என என் வானர நண்பர்களிடம் சத்தியம் செய்துள் ளேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. உன் உபசரிப்பை ஏற்றதற்கு அடையாளமாக உன் மேல் கைவைக்கிறேன், என்று சொல்லி மானிட வடிவில் நின்ற மலையின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து விட்டு, தொடர்ந்து பறந்தார். அப்போது இந்திரன் மலை முன்னால் தோன்றி, பர்வதராஜா! சிரஞ்சீவியால் ஆசிர்வதிக்கப்பட்டதால் நீ உயர்ந்த கதி பெற்று விட்டாய். இனி நீ உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம், எனச்சொல்லி பல வரங்களையும் தந்தான். ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம். இந்நேரத்தில், ஆஞ்சநேயரிடம் விஞ்சியிருப்பது பலமா, புத்திசாலித்தனமா என்று பரிட்சித்து பார்க்க தேவர்கள், கின்னரர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆசைப்பட்டார்கள். அந்தக் காலத்திலேயே ஆஞ்சநேயரைப் பற்றி இவர்கள் பட்டிமன்றம் நடத்தியிருப்பதாகக் கொள்ளலாம். இதற்கு நடுவர் வேண்டுமே! அவர்கள் நாகங்களின் தாயான சுரஸை என்பவளை அழைத்தனர்
-
சுந்தரகாண்டம் பகுதி-6
சுரசா! வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் தேர்வில், அவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம், என்றனர்.மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு கூட சோதனையைக் கொடுப்பதில் கடவுளுக்கு எப்போதுமே ஆனந்தம். அந்த சோதனையைக் கண்டு பயந்தோடுபவன் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டான். சோதனையை எதிர்ப்பவனை ஓரளவு விரும்புவான். ஆனால், அந்த சோதனையை ஆனந்தமாக ஏற்று அனுபவிப்பவனுக்காக தன்னையே கொடுத்து விடுவான். சுந்தரகாண்டம் ஒரு ஆனந்த காண்டம். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று விட்ட சீதாதேவியின் மனதில் நம்பிக்கை கீற்றையும், ஆனந்ததத்தையும் உருவாக்கிய காண்டம். அங்கே (இலங்கை) அவள் ராவணனைக் கண்டு சற்றும் நடுங்காமல், அவனை எதிர்த்துப் பேசுவதில் ஆனந்தம் கண்டாள். இங்கே, ஆஞ்சநேயர் சுரஸையுடன் என்ன விளையாட்டு விளையாடப் போகிறார் என்பதை ஆனந்தமாக அனுபவிப்போமோ!சுரஸை ஆஞ்சநேயரை வழிமறித்தாள். கோரைப்பற்களும், கொடிய உருவமும் கொண்ட பூதகி வடிவில் அவர் முன் நின்றாள்.ஏ மாருதி! என் பெயர் சுரஸை. நீ எனக்கு இரையாக வேண்டும் என்பது தேவர்களின் கட்டளை. நீயாக என் வாய்க்குள் போய் விடுகிறாயா? இல்லை, நானே உன்னைக் கசக்கிப் பிழிந்து விழுங்கி விடட்டுமா? ஆஞ்சநேயர் அவளுக்கு மரியாதை கொடுத்தார்.யாராவது நம்மிடம் வம்புக்கு வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். நாமும் வரிந்து கட்டிக் கொண்டு போனால், சண்டை தீவிரமாகி விடும். அடிதடியில் போய் முடியும். வம்புக்காரர்களிடம் பொறுமை காட்ட வேண்டும். இன்முகம் காட்ட வேண்டும். அதே நேரம் அவர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.ஆஞ்சநேயர் நினைத்தால் சுரஸையை ஒரே அடியில் சாய்த்து விடுவார். ஆனால், அவள் பெண். பெண்களுக்கு அருள்பாலிப்பதில் ஆஞ்சநேயனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. அந்த மகாலட்சுமியின் அம்சமான சீதாவையே அவன் காப்பாற்றியிருக்கிறான் என்றால், சாதாரண மானிடப்பிறவிகளான நாம் அவனைச் சரணடைந்தால் கேட்கவும் வேண்டுமோ!
பூதகியாயினும், தன்னையே கொல்ல வந்தவளாயினும் ஆஞ்சநேயர் அவளைக் கையெடுத்து வணங்கினார்.தாயே! தசரத புத்திரரான ராமபிரான், தன் சகோதரன் லட்சுமணனோடும், மனைவி ஜானகியோடும் தண்டகாரண்யத்தில் இருந்தபோது, ராவணன் என்ற அசுரன் அவளை எடுத்துச் சென்று விட்டான். அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஸ்ரீராமன் என்னிடம் ஒப்படைத் துள்ளார். அவருடைய ராஜ்யமே உலகெங்கும் நடக்கிறது. அவ்வகையில், அவருக்கு உதவ வேண்டியது உன் கடமை. அது மட்டுமல்ல! ஒருவர் ஒரு பணியை நம்மை நம்பி ஒப்படைக்கும் போது, அதை முழுமையாக முடித்துத் தர வேண்டியதும் கடமை தானே! நம்பியவர்களை நட்டாற்றில் விட்டால், அது பெரிய பாவமல்லவா? அத்தகைய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விடாதே! உனக்கு இரையாவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஏனெனில், ஒருவரின் பசியைத் தீர்த்து வைக்க வேண்டியது இன்னொருவரின் கடமை. ஆனால், சீதையைப் பற்றி கணநேரத்தில் அறிந்து, ராமபிரானிடம் தகவல் சொல்லிவிட்டு, உன்னிடம் வந்து இரையாகிறேன், என்றார் மிகுந்த பணிவுடன். சுரஸை மறுத்தாள்.ஆஞ்சநேயா! எனக்கு பிரம்மா ஒரு வரம் தந்திருக்கிறார். என்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும் என் வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும். அதன்படி நீ நடந்து கொள், என்றாள். ஆஞ்சநேயர் சம்மதித்தார். தன் குறுகிய உருவத்தை பெரிதாக்கினார். அவள் அதையும் விட அதிகமாக வாயை அகலப்படுத்தினாள். ஆஞ்சநேயர் உள்ளே நுழையும் போதே தன் உருவத்தை மேலும் நீட்டித்தார். இப்படியாக இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.
தட்சப்பிரஜாபதியின் புத்திரியான சுரஸையே! உன்னை மீண்டும் வணங்குகிறேன். பிரம்மாவிடம் நீ பெற்ற வரத்துக்கு பாதகமின்றி நடந்து உன்னிடமிருந்து வெளிப்பட்டேன். நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு, என்றார்.சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள். வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும். ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.சுந்தரகாண்டம் எந்த நோயையும் தீர்க்கும் மாமருந்து. எந்த கிரக தோஷத்தையும் அது நீக்கி விடும். குழந்தைகளுக்கு தைரியத்தையும், கல்வி நலனையும் தரும். திருமணமாகாத கன்னிகள் இந்த அத்தியாயங்களைச் சேர்த்து வைத்து நாளுக்கு ஒன்று வீதம் படித்தால், ஸ்ரீராமன் போல் நல்ல மணவாளன் அமைவார்.இந்த பகுதியில், ஆஞ்சநேயர் சுரஸையிடம், தசரத புத்திரன் ராமனின் மனைவியை ராவணன் கடத்திச் சென்றதாகச் சொல்கிறார். ராமன் என்றாலே பிரபலம் என்றாலும், தசரதர் பெயரையும் ஏன் சொன்னார் தெரியுமா? தசரதர் ராமனையும் விஞ்சிய வீரர். தன் நாட்டில் சனி பார்வையால் பஞ்சம் வர இருந்த நேரத்தில் அவர் விண்ணுலகுக்கே தேரில் சென்று சனீஸ்வரனை எதிர்க்கச் சென்ற கடமை வீரர். கடமையின் காவலர்களாக அரசுப்பொறுப்பில் உள்ளவர்கள் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டம் காட்டுகிறது.தசரதர் என்பதே காரணப்பெயர் தான். அவரது நிஜப்பெயர் தர்மராஜா. விண்ணுலகம், பாதாளம் உள்ளிட்ட பத்து திசைகளில் ரதம் செலுத்தும் வல்லமை பெற்ற மாவீரர் தசரதர். அதனால் தான் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அதுவே நிலைத்தும் விட்டது. அப்படிப்பட்ட மாவீரரின் மருமகளைத் தேடி தொடர்ந்து பறந்தார் ஆஞ்சநேயர்.
-
சுந்தரகாண்டம் பகுதி-7
ஆஞ்சநேயருக்கு பறக்கும் சக்தி இருக்கிறது என்பதில் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது தெரியுமா? ஒரு பறவை பறக்கிறது என்றால், மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதற்கு ஏதாவது பிடிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்போம். எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் தான் அது பறக்கிறது. ஆஞ்சநேயரும் அப்படித்தான். அவர் பற்றற்றவர். தனக்காக ஏதும் வேண்டாதவர். உலகில் யார் யார் சிரமப்படுகிறார்களோ, அவர்களுக்கு பறந்து வந்து உதவுபவர். அதற்காக எந்தக் கூலியையும் எதிர்பாராதவர்.ஆனால், நமக்கெல்லாம் பெரும் பற்று இருக்கிறது. செல்வத்தின் மீதான பற்று அது. பணம் கொடுத்தால் தான் எந்தக் காரியமும் இங்கே நடக்கும். ஆஞ்சநேயரைப் போல் பற்றற்ற வாழ்க்கை மேற் கொள்பவர்களுக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி, பணத்தை தேடி அலையும் போதோ, அந்தப் பணத்தால் கிடைக்கும் சுகத்தாலோ கிடைப்பதில்லை.இப்படி பற்றில்லாமல் பறந்து சென்ற அந்த மாவீரன், இப்போது ஸிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கிக் கொண்டார். அவளுக்கு ஒரு விசேஷ சக்தியுண்டு. யாரையும் அவள் நேரடியாக பிடிக்க வேண்டியதில்லை. ஒரு உயிரின் நிழலைப் பிடித்தாலே போதும். அது அவளிடம் சிக்கி விடும்.ஸிம்ஹிகைக்கு கோரப்பசி. ஒன்றும் அகப்படவில்லையே என நினைத்திருந்தவளின் கையில் ஆஞ்சநேயரின் நிழல் சிக்கியது. மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த ஆஞ்சநேயரின் ஓட்டம் தடைபட்டுப் போயிற்று. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, திறந்திருந்த அவளது வாய்க்குள் நுழைந்தார். அவளது உயிர் ஸ்தானம் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடித்து தன் நகங்களால் கீறினார். அவள் வலியால் துடித்தாள். அவளது உயிர் அடங்குமுன், தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் வாயை மூடுவதற்குள் வெளியே வந்துவிட்டார். ஆகாயத்தில் இருந்து அந்த ராட்சஷி கதறியபடியே கடலுக்குள் விழுந்து உயிர்விட்டாள். தொடர்ந்து பறந்த அவரது கண்களில் லங்காபுரி தென்பட்டது. அந்நகரின் அழகு அவரை வெகுவாகக் கவர்ந்தது. லங்காபுரிக்கு சற்று தள்ளியிருந்த ஸ்வேல மலை மேல் இறங்கிய அவர், அங்கிருந்தபடியே லங்காபுரியை நன்கு நோட்டமிட்டார். அதன் செல்வ வளம் அவரை ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு காலத்தில் குபேரனின் தேசமாக இது விளங்கியது. குபேரனின் நாடு என்றால் கேட்கவா வேண்டும் செழிப்புக்கு?இங்குள்ள ராட்சதர்களுக்கு ராமபிரான் பெருமளவு செல்வத்தைக் கொடுத்து சீதையை மீட்டுச்செல்ல இயலாது. ஏனெனில், இங்கேயே அளவுக்கு மீறி செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இதில், மற்றவர்கள் தருவதை வாங்க வேண்டுமென்ற அவசியமே இல்லையே, என்று ஆஞ்சநேயரே நினைக்குமளவுக்கு லங்காபுரி சகல ஐஸ்வரியங்களுடன் திகழ்ந்தது.இந்த பணம் இருக்கிறதே...இது யார் புத்தியையும் மாற்றிவிடும், சாட்சாத் ஆஞ்சநேயப்பெருமானே, இலங்கையின் செல்வவளத்தை இவ்வளவு ஆய்வு செய்கிறான் என்றால் மற்றவர்களைக் கேட்கவா வேண்டும்? இப்போது, ஆஞ்சநேயர் இலங்கையின் செழிப்பு குறித்த நினைவை அகற்றி விட்டு, சீதாதேவி எங்கிருக்கிறாள் என்ற கவலை தொற்ற அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தார். இலங்கைக்குள் நுழைய அவர் ஆயத்தமானார். பகலில் உள்ளே சென்றால் ராட்சதர்கள் பிடித்து விடுவார்கள். மிக மிக குறுகிய வடிவெடுத்துச் சென்றால், மாடமாளிகைகளில் அவளைத் தேடுவது கஷ்டம். எனவே, இரவுப்பொழுதை தேர்ந்தெடுத்து உருவத்தை ஓரளவு சுருக்கிக் கொண்டு நுழையலாம் என காத்திருந்தார்.இவ்வளவு சிரமப்பட்டு இலங்கை வந்த பிறகு, ஏதாவது அவசரப்பட்டு செய்தால் என்னை புத்தியில்லாதவன் என உலகம் தூற்றும். அப்படி ஒரு அவப்பெயரை வாங்கி விடக்கூடாது, என்று ஆஞ்சநேயர் நினைத்தார்.ஒரு வழியாக இரவும் வந்தது. மாருதி தன் உருவத்தை ஒரு பூனையின் அளவுக்கு சுருக்கிக் கொண்டார். பூனை ஒன்று தான் சந்தடியில்லாமல் பதுங்கி வந்து பாலை பருகிவிட்டு ஓடிவிடும் பிராணி. அதனால் தான் சத்தமே இல்லாமல் உள்ளே நுழைய பூனையளவு உருவத்தை ஆஞ்சநேயர் விரும்பியிருக்கிறார்.பின்னர் மிக வேகமாக நகரத் திற்குள் நுழைந்தார். அந்த நகரத்திலுள்ள அரண்மனைகள் மின்னின. ஏனெனில், எங்கும் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட தூண்கள் அதில் இருந்தன. ஜன்னல் கதவுகளைக் கூட தங்கத்தால் செய்திருந்தார்கள்.
இதுபோன்று தான் ஆகாயத்திலுள்ள கந்தர்வ லோகம் இருக்குமாம். ஆனால், இவ்வாறு இருப்பது நல்லதல்ல என்பார்கள். சில நேரங்களில் வானத்தில் ஒரு வகை மேகக்கூட்டம் வரும். அது பார்ப்பதற்கு ரத்தினங்களில் இழைக்கப்பட்ட கோபுரம் போன்றும், அரண்மனைகள் போன்ற உருவத்திலும் வந்தால் அது பூமிக்கு நல்லதல்ல. மனிதர்கள், மிருகங்கள் இந்த மேகம் வரும் காலத்தில் பூமியில் விழுவார்கள். அவர்களின் ரத்தத்தை பூமி உறிஞ்சி விடும் என்பது சாஸ்திரம். இதை ஏன் இவ்விடத்தில் வால்மீகி சொல்கிறார் என்றால், தங்கமும், வைரமும் இழைக்கப்பட்ட இந்த இலங்கையும் இன்னும் சில நாட்களில் செந்நீர்க் காடாக மாறப் போகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு.அதிலும் சந்திரன் வானத்தில் தோன்றியவுடன், அவனது கிரணங்கள் பட்டு அந்த நகரம் இன்னும் ஜொலித்தது.இப்படிப்பட்ட அழகிய நகரை ரசித்துப் பார்த்து அவர் உள்ளே நுழையும் சமயத்தில், இங்கும் வந்து நின்றாள் கோர ரூபமுடைய ஒரு பெண்.அவள் கரகரத்த குரலுடன், ஏ குரங்கே! இங்கே எதற்கு வந்தாய்? யார் நீ? எங்கே போகிறாய்? என அதட்டினாள். ஆஞ்சநேயர் அந்தப் பெண்ணிடம், மாதரசியே! என்னைத் தடுத்து நிறுத்தி, இவ்வளவு கேள்விகள் கேட்கும் உன்னை யாரென்று தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவளுக்கு கோபம் அதிகமாகி விட்டது.நான் சொல்வதை சற்றும் பொருட்படுத்தாமல் என்னையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா? ஏ குரங்கே! நான் இலங்கையைப் பாதுகாக்க ராவணேஸ்வரனால் நியமிக்கப்பட்ட காவல் தேவதை. என்னை மீறி யாரும் இந்நகருக்குள் செல்ல முடியாது. மீறினால் உயிர் போய்விடும், என்று அதட்டினாள்.இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆஞ்சநேயரை அவர் வரும் வழியில் தடுத்த எல்லாருமே பெண்கள். எதற்காக பெண்கள் மட்டும் ஆஞ்சநேயரைத் தடுக்கிறார்கள்?
-
சுந்தரகாண்டம் பகுதி-8
தன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா?பெண்களிடம் ஆண்கள் வீரத்தைக் காட்டக்கூடாது. லட்சுமணன் கூட அவசரப்பட்டிருக்கிறான், சூர்ப்பனகை விஷயத்திலே. அதனால் தான், இன்று இவ்வளவு விபரீதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவளை சமாதானம் செய்து பார்த்தார்கள் ராம, லட்சுமணர்கள். அவள் கேட்பதாக இல்லை. அதற்காக, அவசரப்பட்டு நோஸ்கட் பண்ணியிருக்க வேண்டுமா! தப்புத்தானே!ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்சநேயர் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். லங்காதேவியை அவரும் அடித்தார். ஏனெனில், அவள் அடிபட வேண்டும் என்பது விதி. அதுவும் எப்படி அடித்தார் தெரியுமா? அவள் பெண் என்பதால், வலது கையால் அடித்தால் தாங்கமாட்டாள் என்று, இடது கையால் அடித்தாராம். இடது கைக்கு சக்தி குறைவு தானே! அதனால் வலியோடு போயிற்று. அவளது உயிருக்கு ஆபத்து வரவில்லை. மேலும், அவளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவே அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார். சுரஸையையும் அவர் கொல்லவில்லை. அவள் சொன்ன நிபந்தனையை நிறைவேற்றி, அவளது ஆசியையும் பெற்றார். பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுந்தரகாண்டம் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார். லங்காதேவி ஆஞ்சநேயரிடம் அடிபட்டாள். உடனே, தன் ராட்சஷ ரூபம் மறந்து, ரூப லாவண்யம் மிக்க பேரழகியாக அவர் முன் நின்றாள். வானர வீரரே! பிரம்மா எனக்கிட்ட சாபத்தால் இங்கு நான் தங்கியிருந்தேன். என்று ஒரு வானரன் உன்னை வெல்கிறானோ, அப்போது நீ விமோசனம் பெறுவாய். அப்போது, இலங்கையில் ஆளும் ராட்சஷர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே இன்று நடந்தது. பிரம்மாவின் வாக்குப்படி, நீ ராட்சஷர்களை அழிப்பாய், என்று சொல்லி இலங்கையை விட்டுப் புறப்பட்டு சென்று விட்டாள்.இதன்பிறகும், ஆஞ்சநேயருக்கு பெண்களைக் குறித்த அனுபவம் ஏற்படப்போகிறது.
காவல் தெய்வமே அனுமதி தந்து விட்டதால், இலங்கைக்குள் புகுந்த அவர் சீதாதேவியை தேடி வீடு வீடாக அலைகிறார். எங்கும் அவள் இல்லாமல் போனதால், ராவணனின் அரண்மனைக்கே வந்து விடுகிறார். அப்போது, அங்கே அவனது ஆசைநாயகியர் அலங்கோலமாக கிடக்கிறார்கள். அதைப் பார்த்து அவர் கண்களை மூட வேண்டிய நிலைமை வந்துவிட்டது. பெண்கள் தூங்கும் போது அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் அடக்க ஒடுக்கமாக தூங்கிப் பழகினால் தான், வெளியிடங்களில் தங்கும் போதும் அதே பழக்கம் வரும். நாம் ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும் இரவு நேரத்தில் சென்றால், பல பெண்கள் தாறுமாறாக படுத்திருப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக் கொடுக்காமையே ஆகும்.ராவணனின் அரண்மனையில் படுத்திருந்த பெண்களின் நிலையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்களை மூடிக் கொண்டு, ராமா! நான் என்ன பாவம் செய்தேனோ! உன் திருஉருவத்தை மட்டுமே எந்நேரமும் தரிசித்துக் கொண்டிருந்த என் கண்கள், இந்த அலங்கோலக் காட்சிகளையெல்லாம் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே! என்று சொன்னாராம்.இது மட்டுமா! சீதாதேவியை ஒரு வழியாக அவர் அசோகவனத்திலே பார்த்த போது, அவளை ராட்சஷிகள் ராவணனோடு இணையும்படி துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். மிரட்டினர். அதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். அவர்கள் தூங்கிய பிறகு, சீதையை சந்தித்த அவர், அம்மா! இந்த ராட்சஷிகளை நான் அடிக்கட்டுமா? என்றார்.அப்போது கருணைக்கடலான சீதா சொன்னாள்.
அடேய் ஆஞ்சநேயா! உனக்கு பெண்களை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தங்கள் தலைவன் இட்ட கட்டளையைச் சரிவர செய்கிறார்கள். அவ்வளவுதானே! பாவம் செய்தாலும் சரி..நன்மையே செய்தாலும் சரி..ஒருவரை தயையுடன் ஆட்கொள்வது தான் சிறந்த தர்மம். இதைப் புரிந்து கொள். மேலும், உலகத்தில் தப்பே செய்யாதவர்கள் கிடையாது, என்றாள். ஆஞ்சநேயருக்கு இன்னும் வருத்தம் வந்து விட்டது.இவ்வளவு கஷ்டப்பட்டு கடலைத் தாண்டி குதித்து வந்திருக்கிறேன். இந்த அம்மா தப்பு செய்யாதவனே கிடையாது என்கிறார்களே. நான் என்ன தப்பு செய்தேன்? என்று அவளிடமே கேட்டுவிட்டார். இவர்களை அடிக்க நினைத்தது நீ செய்த தப்பு, என்றாள் பிராட்டி.சரி...என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்கள். என் தலைவன் ராமன் என்ன தப்பு பண்ணினான்? என்று அடுத்த கேள்வியை கேட்டார்..மனைவியை ஒருவன் கடத்திப் போய் விட்டானே! அவளை மீட்க அவரே நேரில் வராமல், உன்னை அனுப்பி வைத்தாரே! அது அவர் செய்த தப்பு, என்கிறாள்.ஏன்... அவளே கூட தவறு செய்திருக்கிறாளே! பொன்மானைக் கேட்டது பெரிய தப்பு. கொழுந்தனை சந்தேகப்பட்டது மன்னிக்க முடியாத தப்பு. அதனால் தான் இப்படி சொல்கிறாள்.ஆக, தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் கூட பெண்களை கைநீட்டக்கூடாது என்று சுந்தரகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. இதனால் தான் கணவனும், மனைவியும் பிரிந்திருந்தால், சுந்தரகாண்டத்தில் தினமும் ஒரு ஸர்க்கம் படி என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மனைவியோ, கணவனோ...யார் தப்பு செய்திருந்தாலும் சரி...தப்பு செய்யாதவர் யாருமில்லை என்ற உண்மையை உணரவும், பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளவும் சுந்தரகாண்டம் நமக்கு வழிகாட்டுகிறது.
-
சுந்தரகாண்டம் பகுதி-9
சுந்தரகாண்டத்தை பாராயணம் செய் என்று சொல்பவர்கள், அயோத்தியா காண்டத்தையோ, யுத்த காண்டத்தையோ இன்னும் பிற காண்டங்களையோ படி என்று சொல்லவில்லை. காரணம் என்ன? அத்தனை காண்டங்களின் சாறும் சுந்தரகாண்டத்திலே விரவிக்கிடக்கிறது.ஆஞ்சநேயர், தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம், ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும், தசரதரைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்கிறார். இதிலேயே பிற காண்டங்களின் சரக்கெல்லாம் அடங்கி விடுகிறது. சுந்தரகாண்டம் படித்தால் மொத்த ராமாயணத்தையும் படித்த திருப்தி ஏற்படுகிறது. மேலும், பல படிப்பினைகளை அது தருகிறது.ஆஞ்சநேயர், இலங்கையில் புகுந்து அங்குலம் அங்குலமாக அளந்து பார்க்கிறார். எப்படி அந்த நகருக்குள் கால் வைத்தாராம் தெரியுமா? இடது காலை முதலில் தூக்கி வைத்தாராம். ஒரு சுபநிகழ்ச்சியாக இருந்தால் வலதுகாலை தூக்கி வைத்து வரச்சொல்வார்கள். வலதுபாதத்தை ஊன்றி நடக்கும்போது, நரம்புகளின் உணர்வுகள் தூண்டப்பட்டு மனவலிமை அதிகரிக்கும் என்பதும், பூமி வலமாகச் சுற்றுவதால் இயற்கையை மதித்து வலது பாதத்தை முதலில் தரையில் ஊன்ற வேண்டும் என்ற அறிவியல் காரணங்களே, ஆன்மிகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், ஆஞ்சநேயர் இடது பாதத்தை தூக்கி வைத்து இலங்கைக்குள் நுழைந்தார். வலது என்பது நமக்கு நன்மை கிடைக்க...இடது என்பது எதிரிக்கு தோல்வியை உண்டாக்க. நீதிசாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, எதிரி ஒருவனை ஜெயிக்க வேண்டுமானால், அவனது ஊர் அல்லது நாட்டுக்குள் நேரடி வழியில் செல்லாமல், ஏதோ ஒரு குறுக்கு வழியில் நுழைய வேண்டுமாம். அவனது எல்லைக்குள் கால் வைக்கும் போது, இடதுகாலை ஊன்றி செல்ல வேண்டுமாம்! இதன்படி, லங்காதேவதையை வெற்றி கொண்ட ஆஞ்சநேயர், கோட்டை வாசல் வழியே நுழையாமல், மதில் சுவர் ஏறிக் குதித்து, இடது பாதத்தை தரையில் ஊன்றிச் சென்றார்.
அந்த நகரை முழுமையாக சுற்றி வந்தார். எங்கும் வாத்திய இசை, மக்கள் மகிழ்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்திருந்தனர். காரணம் ராவண ராஜ்யத்தில் பஞ்சத்திற்கு இடமேது. எல்லா தேவர்களுமே அவன் கைக்குள்...பிறகென்ன செழிப்புக்கு பஞ்சம்...இதில் இன்னொரு சூட்சுமம் வேறு...லட்சுமியின் மறுஅவதாரமான சீதாவும் அந்த தேசத்துக்குள் இருக்கிறாளே! விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவள் அங்கே இருப்பதால் வந்த களை வேறு அந்த நாட்டை பிரகாசிக்கச் செய்தது. பூக்களின் நறுமணம் அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் பாடும் அற்புதமான பாடல்கள், விண்ணுலகில் அப்சரஸ்கள் பாடுவது போல் தேனாய் இனித்தது. ராட்சஷர்களாக இருந்தாலும் பல வீடுகளில் வேத அத்யயனம் நடந்து கொண்டிருந்தது விசேஷத்திலும் விசேஷம். சிலர் தங்கள் மன்னன் ராவணனின் கீர்த்தியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சில இடங்களில் அல்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பசுத்தோலை உடுத்திக் கொண்டு சிலர் யாகம் செய்து கொண்டிருந்தனர். சில வீரர்கள், ஆயுதமில்லாமல் தங்கள் பலத்தை நம்பி சக வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இப்படியே பல்வேறு தரப்பு மக்களையும், இடங்களையும் பார்த்த ஆஞ்சநேயரின் கண்களில் ராவணனின் பொன்கூரை வேயப்பட்ட அரண்மனை தெரிந்தது. தாமரை மலர் நிறைந்த அகழிகளால் அது சூழப்பட்டிருந்தது. அரண்மனை மதில் சுவர்கள் விண்ணை முட்டுமளவு எழுந்திருந்தது. அழகிய குதிரைகள், நான்கு தந்தங்களைக் கொண்ட அதிசய யானைகள்...இப்படி செல்வக்களஞ்சியமாகத் திகழ்ந்த ராவணனின் அரண்மனைக்குள் ஆஞ்சநேயர் நுழைந்தார்.அவர் வந்த வேலை சீதையைத் தேட மட்டும் தான்! அவள் எங்கிருக்கிறாள் என கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு, இவர் தேட வேண்டியது தானே! இவர் என்னவோ இலங்கைக்கு சுற்றுலா வந்தது போல, வீடு வீடாக, தெருத்தெருவாக நோட்டம் விடுவானேன்!இவர் தூதர் பணியை மட்டும் செய்யவில்லை. இந்த இடங்களை நோட்டம் விட்டு வைத்துக் கொண்டால், ராமன் போருக்கு வரும் சமயத்தில் அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சவுகரியமாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்தார்.
ஒரு ஊருக்குப் போனால், அந்த ஊரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மதுரைக்கு போனோம், மீனாட்சி கோயிலை மட்டும் பார்த்தோம், சென்னைக்குப் போனோம், கடற்கரையோடு திரும்பி விட்டோம்... என்று இருக்கக்கூடாது. அவ்வூர் சரித்திரம் முழுவதையும் தெரிந்து வர வேண்டும். அப்படியானால் தான் பயணம் போன திருப்தியும் கிடைக்கும், எதிர்காலத்தில் நாம் யாரையேனும் அங்கே அழைத்துப் போகும் போது அவர்களுக்கும் சொல்ல வசதியாக இருக்கும்.சிறு விஷயமாக நமக்குப் படுவதில் கூட, எவ்வளவு பெரிய நன்மை அடங்கியுள்ளது என்பதை சுந்தரகாண்டம் சுட்டிக்காட்டுவதைக் கவனியுங்கள்.ஆஞ்சநேயர் ராவணனின் இல்லத்தை அடையும் போது, மாலைநேரம் வந்து விட்டது. வானத்தில் சந்திரன் உலா வரத் துவங்கி விட்டான். இந்த மாலை நேரம் இருக்கிறதே...இது தான் மக்களின் மனதை மயக்கும் நேரம். நம் வீடுகளில் குத்துவிளக்கேற்றி, இறை சிந்தனையுடன் பூஜை செய்கிறோமே...ஏன் தெரியுமா? மாலை நேரத்தின் தகாத சிந்தனைகளை மறக்கத்தான்!ராட்சஷர்கள் தங்கள் அன்றாடத் தொழிலை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் மதுபானங்களை குடம் குடமாய் குடித்தார்கள். தங்கள் ஆசை நாயகியருடன் கூடிக்களித்தார்கள். சில வீடுகளில் உத்தம ஸ்திரீகளும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் நாயகர்களுக்குரிய பணிவிடையை இனிதே செய்தார்கள். பல ரகப் பெண்களை ஆஞ்சநேயர் பார்த்தார். ஆனால், தர்மத்தை விட்டு சற்றும் வழுவாத ராஜரிஷி ஜனகரின் புத்திரியான சீதாதேவியை மட்டும் அவரால் எங்கும் காண முடியவில்லை. அவளை அவர் பார்த்ததில்லை எனினும், அங்க அடையாளத்தைக் கொண்டே அவள் இன்னாரென கணித்து விடும் நிபுணரல்லவா அந்த மகாபுத்திமான்! அவர் சற்றே சோர்வடைந்தார்.
-
சுந்தரகாண்டம் பகுதி-10
ஆஞ்சநேயர் சீதாபிராட்டியைத் தேடும் போது, அவளை ஜனகபுத்திரி என்று குறிப்பிடுகிறார் வால்மீகி. ராமனின் பத்தினியான பிறகும், தந்தையாகிய ஜனகருக்கு இப்படி ஒரு மரியாதை கொடுப்பானேன்!ஜனகரின் மகிமை அத்தகையது...கடவுளுக்கே தந்தையாக தசரதர் இருந்தாலும் கூட, அவரையே வளர்க்கும் பேறு பெற்றாலும் கூட, ஒரு கட்டத்தில் மனைவியின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, அடே ராமா! காட்டுக்குப் போ என்று சொல்ல வேண்டி வந்து விட்டது. இறைவனை வளர்ப்பதென்பதும் சரணாகதி தான் என்றாலும் கூட, தந்தை சொன்னால் மகன் கேட்டாக வேண்டும் என்ற அதிகார உணர்வை அவர் காட்ட வேண்டி வந்தது.ஆனால், மாமனார் அப்படியல்லவே! மருமகனே! என் மகளை காட்டுக்கு கூட்டிப் போகிறீர்களே! நீங்கள் செய்வது சரிதானா? வாழ வேண்டிய வயதில், காட்டில் வந்து என்ன சுகம் காணப் போகிறாள்? சரி...காட்டுக்குத் தான் கூட்டிப் போனீர்கள்! அங்கே, இன்னொருவன் வந்து கடத்திக் கொண்டு போகுமளவுக்கு கவனக்குறைவாக இருந்துள்ளீர்களே! இதெல்லாம் நியாயம் தானா? என்று அவர் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. அதனால் தான் தந்தையை விட மாமனார் உயர்ந்தவர் ஆகிறார். தெய்வம் என்ன செய்தாலும் அதை மறுக்கக்கூடாது. பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மாமனார் ஜனகர் செய்தார். பொறுமைக்கு என்றும் பெருமை உண்டு. அதற்காக, அவளை ஜனக புத்திரி என்று வால்மீகி கொண்டாடுகிறார். அது மட்டுமா! மகரிஷிகள் கூட பல விஷயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க வருவார்கள். அரசாங்கம் கையில் இருந்தாலும் ராஜரிஷியாகவே அவர் விளங்கினார்.அப்படிப்பட்ட மகாஉத்தமியைக் காணாமல், ஆஞ்சநேயர் மனம் தளர்ந்த நிலையில், மதில் சுவர் ஒன்றைத் தாவினார். அவர் குதித்த இடம் ஒரு நந்தவனமாக இருந்தது. அங்கே அசோகம், ஆச்சா, செண்பகம், மாமரங்கள் ஏராளமாக இருந்தன. பட்சிகள் சந்தோஷமாக கீச்சிட்டுக் கொண்டிருந்தன. இருட்டு நேரம்...ஆஞ்சநேயர் அந்தப் பறவைகளை எழுப்பி விட்டார். அவை பறந்து போயின. அப்போது, மரங்களில் இருந்து உதிர்ந்த மலர் அவரை முழுமையாக நிரப்பியது. மரங்களை அவர் அசைத்த அசைப்பில் அவை இலைகளை முழுமையாக உதிர்த்து விட்டன.
அந்த நந்தவனத்தில் இருந்த பல வகை கொடிகளையும் அவர் அறுத்தெறிந்தார். சற்றுநேரத்தில் அந்த நந்தவனத்தின் பெரும்பகுதி அழிந்து போயிற்று. தன் வாலால் பல மரங்களை அவர் இழுத்து சாய்த்தார்.வால் என்று சொல்லும் போது பலருக்கும் ஒரு வழிபாடு நினைவுக்கு வரும். ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகிறவர்கள் அனுமானின் வாலில் பொட்டு வைத்து, வெண்ணெய் தடவி வழிபடுகிறார்கள். ஒரு குரங்கின் வாலை யாராவது வணங்குவார்களா? இதெல்லாம் மூடத்தனமாக தெரியவில்லையா? என்று விமர்சிப்பவர்களும் உண்டு. பிறகேன் வாலை வழிபடுகிறோம்?ரோம ரோமமு ராம நாமமே...ஆஞ்சநேயரின் உடலிலுள்ள ஒவ்வொரு தனி முடியும் கூட, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரது வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று கூறுவர். ஆம்...அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அதில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது. அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை நோட்டுப் போட்டு எழுதவே வேண்டாம். ஏனெனில், அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்.நந்தவனத்தின் தரையில் நவரத்தினங்களைப் பதித்திருந்தார்கள். பல இடங்களில் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. தவம் செய்வோர்க்கு ஏற்ற இடமாக அது தெரிந்தது. நிச்சயமாக, சீதாதேவி இங்கே நீராட வருவாள் என்று ஆஞ்சநேயர் நம்பினார். எல்லாத்திசைகளிலும் அவர் பார்வை சென்றது. அவர் நினைத்தது வீண்போகவில்லை. அந்த நந்தவனத்தில் யாகசாலை போல் கட்டப்பட்ட ஒரு மாளிகை இருந்தது. ஆயிரம் வெண்ணிற தூண்கள் அதில் காணப்பட்டன. தங்கத்தால் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாளிகை அருகில் ஒரு பெண் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
அவள் நீண்ட நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும். மிகவும் களைத்தும் இளைத்தும் போயிருந்தாள். உடலில் ஒரே அழுக்கு. குளித்து பல நாள் ஆகியிருக்க வேண்டும். ஒரு புடவை மட்டும் உடுத்தியிருந்தாள். அதுவும் கிழிந்து போயிருந்தது. ஆபரணங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை. கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. சுந்தரகாண்டம் படித்தால் மனதில் நம்பிக்கை வளரும் என்று சொன்னதே இந்தக் கட்டத்தைக் கருத்தில் கொண்டு தான்! சாட்சாத் மகாலட்சுமி பூமிக்கு வந்திருக்கிறாள். ராஜா வீட்டில் பிறந்திருக்கிறாள். ராஜா வீட்டில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். கணவனோ லோக நாயகனான ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமபிரான். இந்த உலக செல்வத்துக்கெல்லாம் அவளே அதிபதி. அப்படிப்பட்ட உத்தமிக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா! கிழிந்த புடவை கட்டியிருக்கிறாளாம்! நம்மிடம் செல்வம் நிறைய இருந்து, பங்கு மார்க்கெட்டில் கோட்டை விட்டுவிட்டால் மனசொடிந்து போகிறோம்! உயிரை விட எத்தனிக்கிறோம்! சோதனைகள் என்பது நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறோம். தெய்வமே பூமிக்கு வந்தாலும் கூட சோதனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இது இயற்கையின் நியதி! இறைவனின் நியதி! இதற்காக இறைவனைக் கடிந்து கொள்ளக்கூடாது. நம் முன்வினைப் பாவங்களே இந்த துன்பங்களுக்கெல்லாம் காரணமாகின்றன. சீதாதேவி, இப்பிறவியில் செய்த பாவத்தை இப்போதே அனுபவிக்கிறாள். என்னென்ன பாவம்...திரும்பவும் பார்ப்போமே! பொன் மான் மீது ஆசை...கொழுந்தன் மீது சந்தேகம்..அதன் விளைவாக கடிய சொற்களை உதிர்த்தது...போதாதா...இன்று அவள் இலங்கையிலே ராவணனின் பிடியில் வாடுகிறாள். அவளே சீதாப்பிராட்டி என ஆஞ்சநேயர் நிச்சயித்தார்.
-
சுந்தரகாண்டம் பகுதி-11
அவளைப் பார்த்தவுடன் ஆஞ்சநேயரின் முகத்தில் மிகுந்த சோகம் தென்பட்டது. ஜனகரின் அரண்மனையில் செல்வமகளாக பிறந்து, தசரதரின் வீட்டில் மகாராணி போல் குடிபுகுந்து, ஆடம்பரமான வாழ்வை மட்டுமே தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட அவள் இப்போது கம்மல், கர்ணப்பூ, சங்கிலி, மோதிரம் ஆகிய சாதாரண நகைகள் கூட இல்லாமல் சோகமே வடிவாக அமர்ந்திருந்தாள். ராமபிரான் ஆஞ்சநேயரிடம் சொல்லி அனுப்பியிருந்த பிற நகைகள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. எதையுமே விரும்பாமல் ராமனை மட்டுமே மனதில் நினைத்தவளாய் அவள் அமர்ந்திருக்கிறாள் என்று ஆஞ்சநேயர் உறுதிப்படுத்திக் கொண்டார். இதே நிலைமையைத்தான் ராமனும் அங்கே அனுபவித்துக் கொண்டிருந்தார். என் சீதையைப் பிரிந்த பிறகும் இந்த பாழும் உயிர் என் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறதே, என்று அவர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த இரண்டையும் ஆஞ்சநேயர் ஒப்பிட்டுப் பார்த்தார். சுந்தரகாண்டம் படிப்பதன் நோக்கமே பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வதற்குத்தான். பிரிந்தாலும், சேர்ந்திருந்தாலும் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே இந்தக்காட்சி நமக்கு வலியுறுத்துகிறது. ராமனும், சீதையும் பிரிந்திருந்த நிலையிலும் கூட மனதாலும், நினைவாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, மிகவும் பிரியமாக இருப்பது கண்டு ஆஞ்சநேயர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார். உம்மையே மனதில் நினைத்து உம்மை விரைவில் திரும்பி அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிரதா தர்மத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த உத்தமி மனைவியை அடைந்த நீர்தான் இந்த உலகிலேயே பாக்கியசாலி, என்று ராமனை நினைத்து பிரார்த்தனை செய்தார். இந்த சமயத்தில் எங்கோ ஒரு இடத்தில் வேத கோஷம் கேட்டது. ராட்சஷர்கள் சிலர் வேதம் ஓதியபடியே மங்கள வாத்தியம் இசைக்க, ராவணனை எழுப்பினர்.
எந்த நேரமும் அவன் சீதையின் நினைவுடனேயே இருந்ததால் விழித்த உடனேயே அசோகவனத்தை நோக்கி கிளம்பினான். அவனுடைய மனைவியர் அவன் பின்னால் வந்தனர். ஒரு பெண்ணின் கையில் இருந்த தங்க பாத்திரத்தில் சுவைமிக்க பானம் இருந்தது. மற்றொரு பெண் மதுபானம் ஏந்தியிருந்தாள். ஆயுதங்கள் புடைசூழ வீரர்கள் சிலர் வந்தனர். ராவணன் தனது கால்களில் சலங்கை அணிந்திருந்தான். அந்த சலங்கைகள் ஒலிக்க அவன் அசோகவனத்தில் மிகுந்த தோரணையுடன் நுழைந்தான். ஆஞ்சநேயர் அவனை கவனித்தார். அவனது நடையை வைத்தே அவன் மாபெரும் வீரன் என்பதை கணித்தார்.சீதையின் அருகில் ராவணன் வந்ததும் அவளது உடல் காற்றில் மாட்டிக்கொண்ட வாழையைப் போல நடுங்கியது. கைகளை உடலின் குறுக்காக கட்டிக்கொண்டு என்ன நடக்குமோ என பயந்த கண்களுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளது மனம் ராமபிரானை தியானித்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ராமனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே அவள் மனதில் இல்லை. வற்றிய நதியைப் போல அவளது முகம் காணப்பட்டது. அவளை கேச பாரம் மிக்கவள் என்பார்கள். அடர்த்தியான கூந்தலை உடைய அவளது பேரழகை ராவணன் ரசித்தான். ஆசையுடன் அவளுடன் பேச ஆரம்பித்தான்.அகலமான கண்களை உடையவளே! எல்லாரது உள்ளங்களையும் அபகரிப்பவளே! உன்மீது நான் கொண்டுள்ள ஆசையை இன்னும் ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்? என்னைக் கண்டு நீ நடுங்க வேண்டாம். இங்கேஎந்த ராட்சஷனும் அல்லது எந்த ஒரு மனிதனும் உனக்கு பயத்தை உருவாக்க முடியாது. நீயே மகாராணி! பிற பெண்களை பலாத்காரமாக கொண்டுவந்து மணமுடிக்க துடிப்பது நியாயம்தானா என்று நீ நினைக்கலாம்.
ராட்சஷர் இனத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு இது தர்மமே. இதில் சந்தேகமே கிடையாது. உன் மீது எனக்கு அளவற்ற ஆசை இருந்தாலும் உனக்கு என்மீது பிரியம் ஏற்படும் வரையில் உன்னைத் தொடமாட்டேன். அழகுசுந்தரியே! என்னை நீ நம்பலாம். உனக்கு இருக்கும் பேரழகிற்கு வெறும் தரையில் படுப்பதும், அழுக்கடைந்த ஆடையை அணிந்திருப்பதும் எந்தவித காரணமுமே இல்லாமல் உபவாசம் இருப்பதும் தகாத செயல்களாகும். உனது கூந்தலைக்கூட பின்னிக் கொள்ள மறுக்கிறாய். நீ என்னோடு அரண்மனைக்கு வந்துவிட்டால் அங்கே விதவிதமான ஆசனங்கள் இருக்கின்றன. ஆட்டம், பாட்டம், இசை என எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கலாம். என் தேசத்தில் இருப்பது போல் உயர்ந்த உணவு வகைகளும் பான வகைகளும் பிற இடங்களில் இல்லை, என்று ஆசை வார்த்தைகளைக் கொட்டினான்.தொடர்ந்து அவன் சீதையிடம் கெஞ்சாக் குறையாக பேசினான்.அழகு மிக்கவளே! உன்னைப் படைத்த பிறகு பிரம்மா இப்படிப்பட்ட உத்தமமான ரூபத்தை இனி என்னால் படைக்க முடியாது என்று நினைத்து படைக்கும் தொழிலையே விட்டுவிட்டான் என நினைக்கிறேன். உனக்கு முன்போ அல்லது உனக்குப் பிறகோ இந்த பூமியில் அழகியர் யாருமே பிறக்கவில்லை. பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தை உடையவளே! உன் தேகத்தில் என் கண்கள் எந்த இடத்தில் படுகிறதோ அங்கிருந்து என் பார்வையை திருப்ப முடியவில்லை. என்னைக் கணவனாக அடைந்தால் நீ பல நலன்களையும் அடையலாம். ஆனால் நீ அறிவின்மை காரணமாக அந்த ராமனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். என்னை மணந்துகொண்டு நீ பட்டத்தரசியாக இரு. இந்த உலகத்தில் உள்ள அற்புதமான பல பொருட்களை எனது அரண்மனையில் வைத்திருக்கிறேன். இந்த லங்காபுரியையே உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன். வேண்டுமானால் இந்த பூமி முழுவதையும் ஜெயித்து உனது தந்தையான ஜனக மகாராஜாவிற்கும் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லத்தகாத பல வார்த்தைகளை பேசினான்.இதைக் கேட்டுக்கேட்டு சீதையின் மனம் துடித்தது.
-
சுந்தரகாண்டம் பகுதி-12
இப்படியும் ஒரு கொடியவனா? கேவலம், பெண்ணின்பத்திற்காக உலகையே ஜெயித்து தருவதாகக் கூறுகிறானே? இப்படிப்பட்ட மனநிலையில், சீதாதேவி ஒரு துரும்பை எடுத்து தனக்கும், ராவணனுக்கும் நடுவில் போட்டாள். அவளுக்கு அவனைக் கண்டு நடுக்கம் ஒருபுறம் இருந்தாலும், ராமனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள், அவரையே சரணடைந்தவள் என்ற முறையில் அவனது அறிவின்மையைக் கண்டு சற்றே நகைத்து அவனுக்கு பதிலளித்தாள். பெண்ணின்பத்திற்காக அலைந்து திரியும் மனித ஜென்மங்களுக்கு அவளது வார்த்தைகள் பெரும் பாடம்.ஏ ராவணனே! என்னிடத்தில் என்ன உனக்கு ஆசை...ஏன் உன் மீது உயிரையே வைத்திருக்கும் பல மனைவியர் இருக்கின்றனரே! அவர்களிடம் நீ சுகத்தை தேட வேண்டியது தானே! நான் நற்குலத்தில் பிறந்தவள். விதேகராஜர்களின் வம்சத்தை பற்றி நீ அறிவாயா? புகுந்த இடமோ சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்களின் இல்லம். என் கணவர் சர்வலோகநாதனான ராமமூர்த்தி. அடேய்! என் பிற ஆண்களை கனவில் கூட நினையாதவள், என்று சொல்லித் தொடர்ந்தாள். இந்த இடத்தில் ஸ்ரீராமனும், சீதையும் எந்தளவுக்கு மனமொத்திருந்தனர் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக காட்டலாம். கோதாவரி நதிக்கரையில் ராமனும், சீதையும் உலவிக் கொண்டிருந்தனர். அப்போது ராமன் திடீரென சிரித்தாராம். சீதைக்கு அவரது சிரிப்பின் காரணம் புரியவில்லை. இக்காலப் பெண்கள் என்றால், ஏன் சிரித்தீர்! யாரை நினைத்து சிரித்தீர்! பைத்தியமா? என்று தங்கள் சந்தேகங்களை வாரி இறைத்து வதைத்து எடுத்து விடுவார்கள்.சீதாதேவி அப்படியில்லையே! கணவர் என்ன செய்தாலும் அவள் எதிர்த்துப் பேசமாட்டாள். அக்காலத்து பெற்றோர் பெண்களை அந்தளவுக்கு அடக்கத்துடன் வளர்த்திருந்தனர். அதே நேரம் அவரது சிரிப்புக்கான காரணம் எப்படியும் தெரிந்தாக வேண்டும் என்ற ஆவலும் உந்தித் தள்ளியது.
சற்றுதூரம் சென்றாயிற்று. இப்போது, சீதாதேவி சிரித்தாள்.ராமபிரான் அவளிடம், ஏன் சீதா சிரித்தாய்? என்றார். அதோ! அந்த யானைக்கூட்டங்கள் செல்கிறதே! அவை உங்கள் நடையழகைக் கண்டு வெட்கப்பட்டு தலை குனிந்து செல்கின்றன. அதைப் பார்த்து சிரித்தேன், என்றாள்.இப்போது தைரியம் வந்து விட்டது. கேள்வி கேட்டாலும் தப்பில்லை என்ற உணர்வுடன், ஆமாம்...சற்று முன் தாங்களும் சிரித்தீர்களே! என்ன காரணம்? என்றாள்.வேறொன்றுமில்லை! உன் முன்னால் சென்றதே அன்னப்பறவை கூட்டம். அவை, உன் நடையழகைக் கண்டு வெட்கத்துடன் தலை குனிந்தன. அதனால் சிரித்தேன், என்றார். ஆக, இருவருமே நடையழகைக் கண்டு தான் சிரித்திருக்கிறார்கள். இதைத்தான் கருத்தொற்றுமை என்பது. தம்பதிகளின் மன ஓட்டம் ஒன்றாக இருக்கும்போது, அங்கே இன்பத்திற்கு குறைவே கிடையாது. சீதாதேவி தொடர்ந்தாள்.ராவணா! ஒருவன் தன் மனைவியிடம் திருப்தியடையாமல், பிற பெண்கள் மீது இச்சை கொள்வான் என்றால், அது தற்காலிக சுகத்தைத் தரலாமே தவிர, அவனது ஆயுளையும், செல்வத்தையும், உடலழகையும், மனைவி, மக்களையும், நீ மன்னன் என்ற முறையில் உன்னையே நம்பி வாழும் சக ராட்சஷர்களையும் அழித்து விடுமே! இதை உணரும் புத்தி உனக்கு இல்லையா? அல்லது உன் நாட்டிலுள்ள சாதுக்கள் உனக்கு புத்தி சொல்ல முன்வரவில்லையா? இங்கே விபீஷணன் போன்ற உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியும் நீ கேட்கவில்லையா? என்றவள் இன்னும் தொடர்ந்தாள். ராவணா! உன்னிடமிருக்கும் செல்வத்தைக் கொண்டு என்னை மயக்கப் பார்க்கிறாயே! நான் அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியல்லவா? அவர் எங்கே பிறக்கிறாரோ அங்கே மகாலட்சுமியான நானும் பிறக்கிறேன்.
சூரியனை விட்டு எப்படி பிரகாசத்தை பிரிக்க முடியாதோ, அதுபோல், என்னை விட்டு ஸ்ரீராமனைப் பிரிக்க இயலாது. ஆண்யானையை விட்டு பிரிந்து தவிக்கும் பெண் யானையை அதனுடன் சேர்த்து வைப்பது போல், நீயும் ராமனிடம் சென்று அவரை வணங்கி, என்னை அவரிடத்தில் சேர்த்து விடு. நானும், உன் உயிரைப் பறிக்காமல் இருக்க அவரிடத்தில் சிபாரிசு செய்கிறேன். அவர் மகாபுருஷர். தன்னைச் சரணடைந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் அவரிடம் இருக்கிறது. அதனால், உன் உயிராவது பிழைக்கும், என்றாள்.இப்படி ஒரு பெண் ஏளனமாகப் பேசினால், சாதாரண மனிதனுக்கே கோபம் வரும். ராவணன் அசுரன், சர்வ அதிகாரமும் படைத்தவன். மனிதர்களை தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றவன்...அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வராதா என்ன?ஏ சீதா! இதோ பார்! நான் உன் மீது ஆசை வைத்திருக்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காகத் தான், நீ இவ்வளவு பேசியும் உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன். உலகத்தில் எந்தப் பொருள் மீது ஒருவனுக்கு பிரியம் ஏற்படுகிறதோ, அந்தப் பொருளால் அவனுக்கு கெடுதியே நேர்ந்தாலும் கூட அதன் மீதான ஆசை அதிகரிக்கத்தான் செய்கிறது. நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் உன்னை சித்ரவதை செய்ய என் கைகள் துடிக்கின்றன. உன் புருஷன் ஒரு கபட வேடதாரி. அவனிடம் பிரியம் வைத்திருப்பதாக சொல்கிறாயே! இதற்காக உன்னைக் கொன்றிருக்க வேண்டும். இதோ பார்! எனக்கு இசைய உனக்கு பன்னிரெண்டு மாதம் கெடு வைத்தேன். அதில் பத்து மாதங்கள் ஓடிவிட்டன. இதோ பார்! இன்னும் இரண்டே மாதம், அதற்குள் சம்மதிக்காவிட்டால், உன்னை என் சமையல்காரர்கள் காலை உணவுக்கு கறியாக்கி விடுவார்கள், ஜாக்கிரதை, என மிரட்டினான்.அப்போது தேவ கன்னியரும், கந்தர்வக்கன்னிகளும் சீதையின் முன்பு ரகசியமாகத் தோன்றினர்.
-
சுந்தரகாண்டம் பகுதி-13
அவர்கள் சீதையிடம், சீதா! நீ இவனைக் கண்டு கலங்க வேண்டாம். இவன் ஒரு அற்பன், என்றனர். இதனால், தைரியமடைந்த சீதா, ராவணனிடம் வீரத்துடன் பேசினாள். பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டத்தின் இந்த வரிகள் எடுத்துச் சொல்லப் போகின்றன.ராவணா! என் கணவர் மதயானைக்கு சமமானவர், நீயோ சாதாரண முயல். இந்த இரண்டும் சண்டை போட்டால் முயலின் கதி என்னவாகும் என்பதை யோசி. நீ ஒரு கணம் அவர் கண்ணில் பட்டால் போதும். உன் விதி முடிந்து போகும். உன் பார்வை என் மீது கொடிய நோக்கத்துடன் படும்போதே குருடாகியிருக்க வேண்டுமே! என்னை உன் இஷ்டத்துக்கு அழைக்கும் போதே உன் நாக்கு அறுந்து விழுந்திருக்க வேண்டுமே! இந்திராணிக்கு சமமான என்னுடன் பேசுவதற்கு கூட உனக்கு தகுதி கிடையாதே. கொடியவனே! நான் நினைத்தால் உன்னை ஒரு நொடியில் சாம்பலாக்கி விடுவேன். அத்தகைய சக்தி எனக்கு இருக்கிறது. ஆனால், உன்னைக் கொல்ல வேண்டும் என்ற ஆணை இதுவரை என் கணவரால் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை. நான் கணவனுக்கு கட்டுப்பட்டவள். பதியையே தெய்வமெனக் கருதுபவள். அவரது உத்தரவை என்றும் மீறாதவள். பாவம்! நீ என்ன செய்வாய்! உன் விதி என்னால் தான் முடிய வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கும் போது, அதை மாற்ற யாரால் இயலும்? நீயெல்லாம் ஒரு வீரனா? கேவலமானவனே! நீ குபேரனுக்கு சகோதரன், அளவற்ற படைபலம் உடையவன். பல யுத்தங்கள் புரிந்து தேவலோகத்தையே கைப்பற்றியவன். அப்படிப்பட்ட சூராதி சூரனான நீ, என் கணவருக்கும், என் மைத்துனன் லட்சுமணனுக்கும் பயந்து தானே என்னை அவர்கள் அறியாமல் தூக்கி வந்தாய்?
இப்போது சொல்...நீ சுத்தமான வீரனா? என்றாள்.பார்த்தீர்களா! ஒரு பெண்மணிக்கு இருக்கும் தைரியத்தை! உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையிலும், தன் கற்பைப் பாதுகாக்கவும், கணவன் மீது கொண்ட பக்தியின் மீது கொண்ட நம்பிக்கையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. தன்னை ஆண்மகனா என்று கேட்டுவிட்டாளே இந்தப் பெண் என்று வெட்கிப் போன ராவணன் அதிபயங்கர கோபத்துடன் பாம்பைப் போல் சீறினான். ராமனாம் ராமன்...நீதிநெறி என்பது அவனிடம் உண்டா? எல்லாவற்றையும் இழந்து திரியும் அவன் எனக்கு ஈடா? அவன் மீது உனக்கு இன்னுமா பிரியம்? அவனைக் கொன்று விட்டு தான் எனக்கு மறுவேலை, என்று கர்ஜித்தான்.பின்னர் சீதையைச் சுற்றியிருந்த காதில்லாத, மூக்கில்லாத, ஒற்றைக் கண்ணுடைய குரூர ரூபம் கொண்ட அரக்கிகளிடம், இவள் மனதை மாற்றப் பாருங்கள். அப்படியும் மாறாவிட்டால் சித்ரவதை செய்யுங்கள், என்று ஆணையிட்டான். அப்போது, ராவணனின் இஷ்ட நாயகியான தான்யமாலினி என்பவள், பேரரசரே! இந்த மானிட ஜென்மத்திடம் தங்களுடைய தாபத்தை தீர்த்துக் கொள்ள இயலுமோ? மேலும், இவளுக்கு உங்களது செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மா எழுதி வைக்கவில்லை. வாருங்கள்! தங்களை நான் மகிழ்விக்கிறேன், என்று சொல்லி, அவனது கரம் பற்றி இழுத்தாள். ராவணனும் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் ராட்சஷிகள் சீதையிடம் பலவாறாக ராவணனின் பெருமையை உரைத்தனர். ஒரு அரக்கி சீதையிடம், ஏ சீதா! எங்கள் ராவணன் சாமான்யமானவனா? புலஸ்திய முனிவரின் பேரனல்லவா அவன், அவருக்கு மனைவியாவது உனக்கு கிடைக்கும் பெரும் பேறல்லவா? என்றாள். ஏகஜடை என்ற அரக்கி கோபத்துடன், மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகிய ஆறு பிரஜாபதிகளை நீ அறிவாய். அவர்களில் நான்காவதான புலஸ்தியர் பிரம்மாவின் புத்திரர்.
அவரது புத்திரர் விச்வரஸ். அந்த விச்வரஸ் ரிஷியின் மகனே எங்கள் ராவணேஸ்வரன். இப்படிப்பட்ட புகழுடையவனுக்கு வாழ்க்கைப்பட என்ன தயக்கம்? என்றாள்.பிரகஸை என்ற அரக்கி, உன் மீது கொண்ட காதலால், எங்கள் குல திலகம் மண்டோதரியை விட்டே விலகிவிட்டான் ராவணன். பிற பெண்களாலும் அவன் மனதைக் கவர முடியவில்லை. எனவே, நீ அவனுக்கு மனைவியாகி விட்டால், உனக்கு சக்களத்திகளே இருக்கமாட்டார்கள். சகல போகத்துடனும் நீ வாழலாம், என ஆசை காட்டினாள். இப்படியாக ஹரிஜடை, விகடை போன்ற அரக்கிகளெல்லாம் அவளுக்கு பல வழிகளிலும் ராவணனின் பெருமையைச் சொன்னார்கள். உன் புருஷன் ராஜ்யத்தை இழந்து பஞ்சப்பராரியாய் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறான். மனைவியைக் காப்பாற்ற தெரியாத அவனுடன் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்? என்றார்கள். எதற்கும் மசியாத சீதையைத் தின்று விடுவோம் என பயமுறுத்தவும் செய்தார்கள்.இல்லானை இல்லாளும் வேண்டாள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கணவனிடம் செல்வம் இல்லாத பட்சத்தில், அவனுக்கு கிடைக்கும் மரியாதையை இந்த கலியுகத்தில் காணத்தான் செய்கிறோம்! ஏன் பெற்றவள் கூட வேலை இல்லாத பிள்ளையை வெறுக்கத்தான் செய்கிறாள். சீதையும் இவ்வாறே நினைத்திருந்தால், அவளும் ராவணனின் அரண்மனையில் சுகவாழ்வை அனுபவித்திருக்கலாம். ஆனால், அவள் என்ன சொன்னாள் தெரியுமா?என் கணவர் தரித்திரராக இருக்கலாம்; ராஜ்யம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் எனக்கு மாங்கல்யம் தந்தவர். அவரே எனக்கு தலைவர். கஷ்டப்படும் அவர் பின்னாலேயே நான் செல்வேன். அதிலேயே ஆனந்தத்தைக் காண்கிறேன். சூரியனை சுவர்ச்சலாதேவியும், இந்திரனை இந்திராணியும், வசிஷ்டரை அருந்ததியும், சந்திரனை ரோகிணியும், அகத்தியரை லோபாமுத்திரையும், ச்யவனரை சுகன்யாவும், சத்யவானை சாவித்திரியும், சவுதாசனை மதயந்தியும், கபிலரை ஸ்ரீமதியும், சகரனை கேசினியும், நளனை தமயந்தியும், அஜனை இந்துமதியும் பின்தொடர்வது போலவும், மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன், என்றாள்.எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்! இவர்களது பெயரைச் சொன்னாலே மகா புண்ணியம்! குடும்ப ஒற்றுமைக்கு சுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை. ஆஞ்சநேயர் இதையெல்லாம் மரத்தில் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
-
சுந்தரகாண்டம் பகுதி-14
அப்போது, சில அரக்கிகள் கோடலிகளை தூக்கினர். சீதையை வெட்டுவதற்காகப் பாய்ந்தனர்.நாங்கள் உனக்கு ராவணனைப் பர்த்தாவாக அடையும் நன்மையைப் போதித்தால், நீ என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறாயே, என்று அதட்டினர். சில அரக்கிகளின் உதடுகள் சிவந்து தொங்கியதைப் பார்க்க கோர மாக இருந்தது. சீதாதேவி பயந்து போய் ஓடினாள். ஆஞ்சநேயர் ஒளிந்திருந்த சிம்சுபா மரத்தின் கீழ் வந்து நின்றாள். அப்போது சண்டோதரி என்பவள் ஒரு சூலத்தை அவள் முன் நீட்டி குத்திவிடுவது பாவனை செய்து, ஏ சீதா! இவளது கண்களையும், பயத்தால் நடுங்கும் மார்பையும் பார்க்கும்போது எனக்கு ஆசை மிக அதிகமாகிறது. அவற்றை இந்த சூலத்தால் தோண்டி தின்றால் என்ன? என்றாள். பிரகஸை என்பவள், இவள் என்ன சொன்னாலும் மசியமாட்டேன் என்கிறாள். எனவே, நாம் இவளை அடித்துக் கொன்று விடுவோம், பின்னர் ராவணனிடம் போய், நீ கொண்டு வந்த பெண் துக்கத்தால் இறந்துவிட்டாள் என சொல்லி விடுவோம். அவர் வேறு வழியின்றி இவளைத் தின்னச் சொல்லி விடுவார், என்று படுபயங்கரமான யோசனை ஒன்றைச் சொன்னாள். அஜாமுகி என்பவள், அதை ஆமோதித்து, சரி..சரி...நேரமாகிறது. இவளைச் சும்மா தின்ன முடியுமா? குடிக்க மதுபானங்கள், தொட்டுக்கொள்ள ஊறுகாய் முதலியவற்றைக் கொண்டு வாருங்கள். மதுவைக் குடித்து சகல துக்கங்களையும் மறப்போம். இவளைத் தின்னும் முன்பு, நம் நகர தேவதையான நிகும்பிலை (பத்ரகாளி) முன்னால் நடனமாடுவோம், என்றாள். சீதாதேவி கண்ணீர் விட்டாள். பெண்களே! மனுஷ்ய ஸ்தீரி ஒருத்தி, ராட்சஷனுக்கு மனைவியாவது என்பது எப்படி முடியும்? உங்கள் இஷ்டம் என்னைக் கொன்று தின்பது தானே! அதையே செய்யுங்கள்.
என் உயிருக்குப் பயந்து எக்காரணம் கொண்டும் ராவணனின் ஆசைக்கு இணங்க மாட்டேன், என்று தெளிவுபடச் சொன்னாள். பின்னர் ஸ்ரீராமனை மனதில் நினைத்து, தங்களை இனி நான் பார்ப்பது நடக்கிற காரியமல்ல, என்று சொல்லி அழுதாள். உயிர் பிரியப் போகும் நிலையில், ஸ்ரீராமா, ஹா லட்சுமணா! என் மாமியான கவுசல்யா தேவியே! சுமித்திராவே! என்று உறவையெல்லாம் நினைத்து கதறினாள். என் கணவனைப் பிரிந்த பிறகும், இந்த ராட்சஷிகள் இவ்வளவு தூரம் என்னை உபத்திரவம் செய்தும், தகாத வார்த்தைகள் பேசியும் கூட என் உயிர் பிரியமாட்டேன் என்கிறது. ஒரு பெண்ணோ, ஆணோ அவரவர் செய்த செயல்களுக்கேற்ற பாவத்தை அனுபவிக்காமல் அதற்கு முந்தியோ, பிந்தியோ இறப்பது என்பது நடக்காத காரியம் என்று பண்டிதர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அது நிஜம் என்பது இப்போது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல! பூர்வஜன்மத்தில் நான் புண்ணியமே செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் தான், காற்றில் சிக்கிய கப்பல் பாரம் தாங்காமல் கடலுக்குள் மூழ்குவது போல நான் துன்பத்தால் அலைக்கழிக்கப்பட்டு உயிரை விடப்போகிறேன். ஒரு பெண் தன் உயிரை விடும்போது, அவள் அருகில் அவளது கணவன் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவாள். அந்த இன்பத்தைக் கூட பெறாத நான் எவ்வளவு பெரிய துர்பாக்கியசாலி! என்று புலம்பினாள். பார்த்தீர்களா! அந்த நாராயணனின் அவதாரமான ராமனின் பத்தினியாகும் அளவுக்கு புண்ணியம் செய்த சீதாதேவி தனக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கே, பூர்வ ஜென்ம வினையைக் காரணம் காட்டுகிறாள் என்றால், இந்த உலகத்தில் இப்போது நடக்கும் அட்டூழியங்களுக்கு அடுத்த பிறவியில் நாம் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறோமோ, நினைத்தாலே குலை நடுங்குகிறது. சுந்தரகாண்டம் இந்த இடத்தில் நமக்குச் சொல்லும் பாடம், கொஞ்சமாவது நாம் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைத்தான்! நெஞ்சமே உடைந்து போகும் வகையில் சீதாதேவி, தன் துக்கத்தை மனம் உருக்கும் வார்த்தைகளால் மேலும் வெளிப்படுத்தினாள்.
ராமா! தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா? இவள் காணாமல் போய் வெகுகால மாயிற்றே! இவள் எங்கே உயிருடன் இருக்கப்போகிறாள் என்று நினைத்தீர்களா? உங்கள் பாணம் சகல லோகங்களையும் கடந்து செல்லக்கூடியதாயிற்றே! அப்படியிருக்க, இருந்த இடத்திலிருந்தே ஒரு பாணத்தைத் தொடுத்தாலே இந்த ராவணன் அழிந்திருப்பானே! ஒருவேளை மாரீசன் என்னை மாயைக்கு உட்படுத்தி, ராவணனிடம் சிக்க வைத்தது போல, ராமனையும் கொன்றிருப்பானோ? நீங்கள் உயிருடன் இல்லையோ? அப்படியானால், இந்த ராவணனின் கையில் சிக்கி மாள்வதை விட, நானே எனக்கு மரணத்தை வருவித்துக் கொள்கிறேன், என்றாள். உடனே அரக்கிகள் அவளை, அடியே சீதா! தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறாயா? அதற்குள், உன்னை நாங்களே தின்று விடுகிறோம், என சொல்லியவாறே அருகில் வந்தனர். சில அரக்கிகள் சீதா தற்கொலை செய்துவிட்டால் ராவணன் தங்களைக் கொன்று விடுவானே என்ற பயத்தில் அவனிடம் தகவல் சொல்ல ஓடினர். அப்போது ராவணனின் சகோதரன் விபீஷணனின் புத்திரியாகிய திரிஜடை என்ற அரக்கி அங்கே வந்தாள். அவளும் சீதையை மிரட்ட அனுப்பப்பட்டவள் தான்! ஆனால், சேற்றிலும் செந்தாமரை முளைப்பதுண்டு. எங்காவது ஓரிடத்தில் கலவரம் நடக்கிறதென்றால், நாம் ஓடி ஒளிய இடம் தேடி அலையும் போது, பல வீட்டுக்கதவுகளும் திறக்காது. ஆனால், எங்கோ ஒரு மூலையில், அந்த கலவரத்தில் பங்கேற்கும் ஒருவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே நமக்கு அடைக்கலம் தருவர். இப்படிப்பட்டவள் தான் திரிஜடை. அவள் அவ்வளவு நேரமும் உறங்கிக் கொண்டிருந்தாள். அரக்கிகளின் கொடூர சத்தம் கேட்டு விழித்தவள், சீதையை அவர்கள் துன்புறுத்திக் கொண்டிருந்ததைக் கண்டாள்.நிறுத்துங்கள்! இந்தப் பெண்ணை துன்புறுத்தாதீர்கள் இவளைத் துன்புறுத்தினால் வீணாக அழிந்து போவீர்கள்! என்று அரக்கிகளை எச்சரித்தாள்.
-
சுந்தரகாண்டம் பகுதி-15
திரிஜடை! என்ன சொல்கிறாய்? இவள் மானிடப்பிறவி. இவளுக்கு துன்பமிழைப்பதால் நமக்கு என்ன கேடு நேர்ந்து விடும்? என ராட்சஷிகள் கேட்டனர். நீங்கள் நினைப்பது போல் இவள் சாதாரணமானவள் இல்லை. நான் அதிகாலை வேளையில் கண்ட கனவு இதை உறுதிப்படுத்துகிறது. அந்தக் கனவின்படி, ராட்சஷர்களுக்கு அழிவும், இவளது கணவனுக்கு வெற்றியும் கிடைக்கப்போகிறது, என்றாள் திரிஜடை. இதையடுத்து, அரக்கிகள் தீயில் பட்ட கையை பட்டென எடுப்பது போல் சட்டென விலகி நின்றனர். ஏனெனில், அதிகாலை கனவு என்றால் அரக்கிகளுக்கு கடும் பயம். அந்தக்கனவு பலித்து விடும் என்பது அவர்களது நம்பிக்கை.திரிஜடை! எங்களுக்கு பயமாக இருக்கிறது. நீ கண்ட கனவை எங்களுக்கு விபரமாகச் சொல், என்று கேட்டு திகிலுடன் நின்றனர். திரிஜடை அவர்களிடம்,இந்த பெண்ணின் பர்த்தாவான ராமன், தன் தம்பியுடன் வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை மலர்மாலை சூடி ஆகாயவழியில் இங்கு வந்தார். இந்த சீதையும் வெண்ணிற ஆடை அணிந்து க்ஷீர சமுத்திரத்தின் (தயிர்க்கடல்) மத்தியில் இருந்த வெள்ளை மலை ஒன்றில் அமர்ந்திருந்தாள். அப்போது நான்கு தந்தங்களை உடைய ஒரு பெரிய யானையின் மேல் ராமலட்சுமணர் இவளருகே வந்தனர் (யானை மீது வருவது போல கனவு கண்டால் கனவு காண்பவருக்கு சகல மங்களமும் உண்டாகும் என்கிறது ஸ்வப்னாத்தியாயம் என்னும் நூல்).ராமன் சீதையை தூக்கி அந்த யானையில் அமர வைத்தார். அவள் அங்கிருந்தபடியே சூரிய சந்திரரைத் தொட்டாள் (சூரிய சந்திரரை தொடுவது போல் கனவு காண்பவர் நாடாள்வார் என்பது நம்பிக்கை). பின்னர் ராமன் எட்டுக்காளைகள் பூட்டிய ரதத்தில் ஏறினார். பின்னர் சீதை மற்றும் லட்சுமணருடன் புஷ்பக விமானம் ஒன்றில் ஏறிச்சென்றார். நான் ராமனையும், அழகே வடிவான சீதையையும், லட்சுமணனையும் கனவில் கண்டது என் பாக்கியம். ஏனெனில், அவர் நாராயணனின் வடிவம். முட்டாள் அரக்கிகளே! நாராயணனை வெல்ல யாரால் முடியும்? நீங்கள் இவளை விட்டுவிடுங்கள், என்றாள்.
அரக்கிகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர்.திரிஜடை தொடர்ந்தாள். இன்னும் கேளுங்கள்! ராவணன் சிவப்பு ஆடை அணிந்து ஒரு புஷ்பக விமானத்தில் இருந்து கீழே விழுந்தான். பின்னர், ஒரு தைலத்தை குடித்து சித்தப்பிரமை பிடித்து திரிந்தான். பின்னர் மொட்டைத்தலையுடன் கருப்பு ஆடை அணிந்து கழுதைகள் பூட்டிய தேரில் தானாக சிரித்தபடியே சென்றான். பின்னர் வஸ்திரமே இல்லாமல் சேற்றில் விழுந்து மூழ்கி விட்டான். கும்பகர்ணன், ராவணனின் பிள்ளை இந்திரஜித் முதலை மீதும், கும்பகர்ணன் ஒட்டகத்தின் மீதும் தெற்கு நோக்கி பயணம் செய்தனர். (தெற்கு எமதிசை). ராவணன் ஒரு பன்றியின் மேல் திடீரென வந்தான். ஆனால், விபீஷணன் (திரிஜடையின் தந்தை) யானையின் மீதேறி ஆகாயமார்க்கத்தில் சென்றான்.இந்த அறிகுறிகளால் நிச்சயமாக ராமன் இங்கு வந்துவிடுவார். நீங்கள் இவளை விட்டுவிட்டு ஓடி விடுங்கள். அல்லது இவளிடம் சமாதானமாகப் பேசி மன்னிப்பு கேட்டு பிரார்த்தியுங்கள், என்றாள். அப்போது ஒரு பறவை இடமிருந்து வலமாக பறந்து வந்து இறக்கைகளை விரித்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தது. அதை சுட்டிக்காட்டிய திரிஜடை, இதோ! பாருங்கள். இந்த பறவை காட்டிய அறிகுறியால் இவளுக்கு நன்மை நடக்கப்போகிறது. ராட்சஷ இனத்துக்கு ஏற்படப்போகும் அழிவை தடுத்து நிறுத்த நீங்களும் உங்களால் ஆனதைச் செய்யுங்கள், என்றாள். பின்னர் சீதையின் அருகில் வந்து, சீதா! வருத்தம் வேண்டாம். நான் கண்ட கனவு பிரகாரம், உன் நாயகன் உன்னை மீட்பது உறுதி. நீ அலங்காரம் செய்து கொண்டு, உன் நாயகனின் வரவிற்காக காத்திரு, என்றாள். ஆனாலும், சீதை உயிரை விடவே முயற்சித்தாள். அந்த சமயத்தில் பல சுப சகுனங்கள் தோன்றின. மகாலட்சுமியான சீதை உயிர் விடுவதா என்று எண்ணிய சகுனங்கள், அந்த இக்கட்டான சமயத்தில் தங்களால் ஆன உபகாரத்தை அவளுக்குச் செய்து பெரும் பேறு பெற்றன. அவற்றால் அவளுக்குள் நம்பிக்கை பிறந்தது.
கிரகண நேரத்தில், ராகுவிடம் இருந்து விடுபட்ட சந்திரனைப் போல் அவளது முகம் பிரகாசித்தது. மரத்தில் மறைந்திருந்த ஆஞ்சநேயர் அவளை சந்திரமுகி என மனதுக்குள் வர்ணித்தார். சந்திரனைப் போன்ற பிரகாசமான முகமுடையவளே சந்திரமுகி. அவளுடன் பேசி, அவளைச் சமாதானம் செய்து, ராமனின் நிலையை எடுத்துச்சொல்ல எத்தனித்தார். ராட்சஷிகள் விலகட்டுமே எனக் காத்திருந்தார்.அப்போது அவரது மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.இவளுடன் நாம் சாதாரண மனிதனைப் போல் வார்த்தைகள் பேசுவதா? அல்லது சமஸ்கிருதத்தில் உரையாற்றுவதா? குரங்கு ரூபத்தில் சமஸ்கிருதம் பேசினால், ராவணன் தான் மாறுவேடத்தில் வந்துள்ளானோ என இவள் நம்மைச் சந்தேகிப்பாள். எனவே நம் உருவத்தைச் சுருக்கி, மானிடர் போல் பேசுவதே சிறந்ததென தீர்மானித்தார். வார்த்தைகள் மனிதனின் வாழ்வில் முக்கிய இடம் பிடிப்பவை. அதனால் திருவள்ளுவர், தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்றார். நாக்கு பேசும் வார்த்தை ஒருவனைக் காப்பாற்றவும் செய்யும், அவனைக் கொன்றும் விடும். தெய்வத்தின் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வரும். மனிதனின் வாயில் இருந்து இரண்டும் கலந்து வரும். நல்லதை மட்டும் பேசினால் உயிர்கள் பிழைக்கும். அதனால் தான் குரங்காகப் பிறந்தாலும், ஆஞ்சநேயர் மனிதனைப் போல் பேச நினைத்தார். மானிடப்பிறவி மிகவும் உயர்ந்தது. இந்தப் பிறவியில் இருந்தே தெய்வநிலைக்கு உயர முடியும். ஆஞ்சநேயர் குரங்காய் பிறந்தாலும் சொல்லின் செல்வராக நன்மையையே பேசினார். அதிலும் மானிடனைப் போல் பேசினார். அதனால் இன்று தெய்வமாய் நம் முன்னால் நிற்கிறார். இதற்குள் ராட்சஷிகள் விலகி விட, சீதையின் காதில் மட்டும் கேட்பது போல், ராமனின் சரிதத்தை சொல்ல ஆரம்பித்தார். ராமனின் பெயரைக் கேட்டதும் சீதாதேவியின் உடல் பரவசத்தால் ஆடியது.
-
சுந்தரகாண்டம் பகுதி-16
தசரதர் என்ற மாமன்னரின் புத்திரனாய் அவதரித்தவர் ஸ்ரீராமன். அவர் பவுர்ணமி நிலா முகம் போன்ற முகமுடையவர். வில்வித்தையில் உலகிலேயே உயர்ந்தவர். பல ராட்சஷர்களை அழித்து வெற்றி வாகை சூடியவர். தந்தையின் ஒரு சொல்லுக்காக, தன் அன்பு மனைவி மற்றும் சகோதரனுடன் கானகம் சென்றவர். அவரது மனைவியை ராவணன் வஞ்சகமாக அபகரித்துச் சென்றான். ராமபிரான் அவளைக் காட்டில் தேடியலைந்த போது, சுக்ரீவன் என்ற வானர மன்னரின் நட்பைப் பெற்றார். நினைத்த ரூபத்தை எடுக்கக்கூடிய தனது வீரர்களிடம் சீதாதேவி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து வர அவர் ஆணையிட்டார். அவள் இங்கே இருக்கிறாள் என்ற செய்தியை ஸம்பாதி என்ற கழுகு அரசனின் மூலமாக அறிந்து நூறு யோஜனை தூரமுள்ள இந்தக் கடலைத் தாண்டி இங்கே வந்தான். நான் செய்த பாக்கியத்தால் அவளைப் பார்த்தும் விட்டேன், என்றார் ஆஞ்சநேயர்.தன்னைப் பற்றியும், தன் பர்த்தா பற்றியும் யாரோ ஒருவர் மங்களகரமான வார்த்தைகளால் பேசுகிறாரே என்று சீதாதேவிக்கு ஆச்சரியம். அவள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தாள் தெரியுமா? திரிஜடையின் கனவு பயமுறுத்தலால் பயந்து போன அரக்கிகள் உறங்கிக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தாள். தற்கொலை செய்ய அவள் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்ன தெரியுமா? தன்னுடைய நீண்ட ஜடையை! ஜானகிதேவியான சீதைக்கு கருத்து சுருண்ட நீண்ட கூந்தல் இருந்தது. நீண்டநாளாக எண்ணெய் கூட தேய்க்காவிட்டாலும் கூட அதன் தேஜஸ் மட்டும் குறையவில்லை. அந்தக் கூந்தலை கழுத்தைச் சுற்றி இறுக்கி, தன்னை பலி கொடுக்க முடிவு செய்திருந்த நேரத்தில் இப்படி மதுரமான வார்த்தைகள் கேட்டு, யார் பேசுவது? எங்கிருந்து சத்தம் வருகிறது? என சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் குரல் வந்த திசை நோக்கி பார்த்தபோது, ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. அது மிகுந்த பிரகாசமுடையதாகக் காணப்பட்டது. இப்போது பேசியவர் என் நாதனின் பெயரை உச்சரித்ததால், என் பிராணன் தப்பியது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்து அவரது குரலே என்னை மீட்டது என்று எண்ணிக்கொண்டாள் சீதா.
ஆஞ்சநேயர், வாயுவின் மைந்தனாக ஏன் பிறந்தார் தெரியுமா?காற்றிலுள்ள ஒரு வாயு தான் உலக உயிர்கள் பிராணனுடன் திகழ காரணமாக இருக்கிறது. அதனால் தான் அதை பிராணவாயு என்கிறார்கள். சீதாதேவி பிராணனை விட இருந்தாள். அந்த சமயத்தில் வாயுமைந்தன் அருகில் வந்தார். பிராணவாயு கிடைத்தால் எப்படி உயிர்கள் வாழுமோ, அதுபோல் வாயுவின் மைந்தன் மரணத்துக்கு தயாரான அவளை வாழ வைத்தான். சீதாவை வாழ வைத்ததால் ராமனை அவர் வாழ வைத்திருக்கிறார். ராமன் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. ஆக, சகல ஜீவராசிகளையும் அவர் பாதுகாத்திருக்கிறார். தெய்வம் உலக உயிர்களை வாழ வைக்கும். அந்த தெய்வத்தையே வாழ வைத்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் அவர் வாயுமைந்தனாகப் பிறந்தார். உயிரே போகுமளவுக்கு இடைஞ்சல் வந்தாலும், அதைப்போக்கி நம்மை வாழ வைப்பார் அந்த சிரஞ்சீவி!என் பர்த்தா இங்கே வரப்போகிறார் என நினைக்கிறேன். அதற்கு முன்னதாக நானிருக்கும் இடத்தை அறிய இவர் தூதுவனாக வந்திருக்கிறார் என மகிழ்ச்சி பொங்கப் பார்த்தாள். அதே நேரம் சந்தேகமும் அவளைப் பிடித்துக் கொண்டது.நிஜத்திலேயே இவன் ராமதூதன் தானா? ஒருவேளை மாயக்காரனோ? ஒருவேளை நான் கனவு காண்கிறேனோ? கனவில் குரங்கைக் கண்டால் நம் சொந்தங்களுக்கு தீங்கு வருமென்று சாஸ்திரம் சொல்கிறதே! என் தந்தைக்கோ, ராமலட்சுமணர்களுக்கோ கேடு வந்துவிடக் கூடாதே! ஆனால், நிச்சயமாக இது கனவல்ல. நிம்மதியில்லாதவர்களுக்கு எப்படி உறக்கம் வரும்? நான் தூங்கி தான் பலநாளாகிறதே. எனவே, நிச்சயம் இது கனவல்ல. ஒருவேளை நாமாகவே கற்பனை செய்து கொள்கிறோமோ! கற்பனைக்கு உருவம் கிடையாது. ஆனால், இங்கே குரங்கு முகத்துடன் ஒருவன் அமர்ந்திருக்கிறானே! இவனது உருவஅமைப்பு, பேச்சு இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், நிச்சயமாக இவன் நமக்கு சகாயம் செய்யவே வந்திருக்கிறான். பிரகஸ்பதி, இந்திரன், பிரம்மா, அக்னி ஆகிய தெய்வங்கள் நான் நினைப்பதை உறுதியாக்கட்டும் என்று அவர்களைப் பிரார்த்தனை செய்தாள்.
இன்று குரு பெயர்ச்சி. ஆனானப்பட்ட சீதாதேவியே, பிரகஸ்பதியான குருவிடம் தனது கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்திருக்கிறாள். சாதாரண ஜென்மங் களான நாம் எம்மாத்திரம்? இந்த இனியநாளில், இந்த அத்தியா யத்தைப் படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். நாம் ராசிபலன்களைப் படித்து மனம் குழம்பிப் போயிருப்போம். சீதாதேவி குருவிடம் வேண்டிக்கொண்டது போல, நாமும் நம் கஷ்டம் நீங்க அவரிடம் மனதார வேண்டிக்கொண்டால், கெடுபலன்களெல்லாம் தீர்ந்து போகும். ஆஞ்சநேயர் இப்போது மரத்தில் இருந்து கீழே இறங்கினார். சீதாவின் முன்னால் வந்து நின்றார். தலைமேல் கை கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். தாயே! தாமரைக் கண்களும் பிரகாசமான முகமும் கொண்ட தாங்கள் யார்? தாங்கள் சோகமே உருவாக கண்ணீர் வடிக்க காரணம் என்ன? நீங்கள் கிழிந்த ஆடையுடன் இருப்பது சற்றும் பொருத்தமாக இல்லையே! வசிஷ்டரைப் பிரிந்து சென்ற அருந்ததி போலவும், கணவரையோ, குழந்தைகளையோ, உடன்பிறந்தவர்களையோ இழந்து வருந்துபவர்களைப் போலவும் தெரிகிறதே! தங்கள் கதையை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவரது பணிவான வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்த சீதா, ராமருக்கு வாழ்க்கைப்பட்டது முதல் அன்று வரை நடந்த சகலத்தையும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தாள்.பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் பெருமை பற்றி தம்பட்டம் அடிக்க வேண்டுமென்றால், சாப்பாடு, தூக்கம், துக்கம் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். தன் பர்த்தாவைப் பற்றி பேசுவார்கள்...பேசுவார்கள்.....பேசிக் கொண்டே இருப்பார்கள். இப்போது, நம் சீதாவுக்கு ஒரு ஆஞ்சநேயர் கிடைத்துவிட்டார். விடுவாளா அவள்...தன் நாயகனின் பெருமையை ஒரு இடத்தில் மிகமிக உச்சமாக வர்ணித்தாள். அது என்ன?
-
சுந்தரகாண்டம் பகுதி-17
வானரனே! மக்களுக்கு ஏதாவது கஷ்டமும், பிரச்னையும் ஏற்படும் சமயத்தில் ராமனுக்கு உற்சாகமும், சந்தோஷமும் அதிகரிக்கும், என்பதே அந்த வார்த்தை.இதைப் படித்தவுடன் சற்று அதிரத்தோன்றும். ஏனெனில், இன்றைய உலகத்தின் மனநிலை அப்படிப்பட்டது. பக்கத்து வீட்டில் நன்றாக இருந்த ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால் அடுத்த வீட்டுக்காரனுக்கு சந்தோஷம் வந்துவிடுகிறது. மாட்டிக்கிட்டானா, இவ்வளவுநாளும் என்ன கர்வமா இருந்தான்! இப்போ என்ன செய்யப்போறான் என்று கைகொட்டி சிரிப்பவர்களே ஏராளம். பிறர் துன்பத்தில் இவர்கள் சந்தோஷம் காண்கிறார்கள். ஆனால், ராமபிரான் பிறருக்கு துன்பம் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்ய சரியான சந்தர்ப்பம் வந்துவிட்டதே என்று சந்தோஷப்படுவாராம். தன் தந்தைக்கு கைகேயியால் கஷ்டம் வந்தபோது, இவர் ராஜ்யமே வேண் டாம் என்று தம்பியிடம் அரசாங்கத்தைக் கொடுத்து விட்டு காட்டிற்கும் போய்விட்டார். எவ்வளவு பெரிய மனம் இதற்கு வேண்டும்! தந்தையின் கஷ்டத்தைப் போக்க தன் சுகவாழ்வையே இழந்தவர் அவர். இந்த நிகழ்ச்சியை ஆஞ்சநேயரிடம் வெளிப்படுத்தி தன் கணவரைப் பற்றி உயர்த்திச் சொன்னாள் அன்னை சீதா.பெண்கள் எக்காரணம் கொண்டும் தன் கணவரை உதாசீனப்படுத்தக் கூடாது. அது பெரிய பாவம். ராமன் சீதாவுக்கு சுகமான வாழ்வைத் தந்தார். ஒரு கட்டத்தில் அது பறிபோனது. ஆனால், சீதா தன் கணவனே பெரிதெனக் கருதி அவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று காட்டையே தன் வீடாகக் கொண்டாள் அந்த மகாதேவி.கணவனும், மனைவியும் ஒற்றுமை பேண வேண்டும். இருவரும் ஈருடல் ஓருயிர் என வாழ வேண்டும். சுந்தரகாண்டம் உணர்த்தும் மிகப்பெரிய தத்துவம் இது. பிரிந்திருக்கும் தம்பதியர் இதைப்படித்த பிறகாவது தங்கள் பிணக்குகளை கைவிட வேண்டும். இருதரப்புக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நிறையவே வேண்டும்.சீதாதேவி தங்கள் வரலாற்றைச் சொல்லச் சொல்ல ஆஞ்சநேயரும் அவள் அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தார். சீதாவுக்கு இப்போது சந்தேகம்.
இவன் அருகில் நெருங்கி வருவதைப் பார்த்தால் ஒருவேளை ராவணன் அனுப்பிய ஆளாக இருப்பானோ என்று. சற்று விலகி நின்று, இவனிடம் போய் நம்முடைய கதையைச் சொல்லிவிட்டோமே! முன்பின் தெரியாதவர்களிடம் வீட்டுப்பிரச்னையை சொல்லியிருக்கக் கூடாதே என்ற மனோபாவம் வேறு அவளை வருத்தியது. அவளது முகக்குறிப்பை உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், அன்னையே! கலக்கம் வேண்டாம், என்றவர் ஸ்ரீராமனின் நற்குணங்களையெல்லாம் பட்டியலிட்டார். அதைக் கேட்டு உருகிப்போனாள் சீதா. பின்னர் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.தாயே! என் பெயர் அனுமான். நீங்கள் சந்தேகப்படுவது போல் ராவணன் அல்ல. நான் ராமதூதன் என்பதை நம்புங்கள், என்று பணிவாகவும், கனிவாகவும் சொன்னார்.பின்னர் சீதா அனுமானிடம், அனுமானே! உனக்கும் என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கேட்க அவர் அந்த வரலாற்றைச் சொன்னார். பின்னர் சீதையைப் பிரிந்த ராமனின் நிலை பற்றி உருக்கமாக எடுத்துச் சொன்னார்.அம்மா! ராவணன் தங்களை அபகரித்த பிறகு, ஸ்ரீராமன் துக்கத்தால் வாடுகிறார். தாங்கள் ராவணனால் கடத்தப்பட்ட போது கழற்றி எறிந்த ஆபரணங்களைக் கண்டெடுத்து சுக்ரீவ னிடம் ஒப்படைத்தேன். அவர் அவற்றை ராமனிடம் கொடுத்தார். அதைப் பார்த்து அவர் புலம்பியதை நினைத்தால் சோகம் நெஞ்சை அடைக்கிறது. தங்களை பார்க்காமல் வேதனை யால் தவிக்கிறார். நித்திரையின்றி புலம்புகிறார். மரங்களையும், செடிகளையும் பார்த்து நீங்கள் அவளைக் கண்டீர்களா என்று கேட்கும்போது ஏற்படும் துக்கத்தை என்ன வார்த்தைகளால் வடிப்பேன்! ஆயினும், இனி உங்களுக்கு கவலை வேண்டாம். இந்த ராவணனை அழித்து உங்களை அவர் மீட்டுச்செல்வார், என்றார்.இத்தனையும் கேட்டபிறகு அனுமான் ராமனின் தூதர் என்பதை உறுதியாக நம்பினாள் சீதா.
இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், தாயே! ஸ்ரீராமபிரான் தங்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் ஒரு மோதிரத்தை என்னிடம் தந்தார். இதோ! அந்தக் கணையாழி, என்று அவளிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் கிரகணத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல் அவளது முகம் பிரகாசித்தது. இவன் உயிர்களை வாழ வைப்பவன் என்று முன்னர் கருதினோமோ அது நூற்றுக்கு நூறு உண்மை என்று வாய்விட்டுச் சொன்னாள். அந்த சந்தோஷத்துடன், வானரனே! இந்த இலங்கைக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். ஆனால், மகாபுத்திமானான நீ இங்கே நுழைந்ததில் இருந்தே உன் புத்தியும், சக்தியும், பலமும் அளவிடற்கரியது என்று சொல்வேன். அது மட்டுமா? நூறு யோஜனை தூரமுள்ள கடலை பசுவின் குளம்படியைப் போல மிகச்சாதாரணமாக தாண்டி வந்தாயே! அந்த பராக்கிரமத்தை என்ன சொல்வது? என்று ஆஞ்சநேயரைப் புகழ்ந்தவள், ராம லட்சுமணர் நலம் பற்றி விசாரித்தாள்.என் ராமன் எப்படியிருக்கிறார்? என் கொழுந்தன் லட்சுமணன் எப்படியிருக்கிறான்? ராகவன் நலமாயிருந்தால் என்னைக் கடத்திய குற்றத்திற்காக இதற்குள் இந்த பூமியை எரித்திருப்பாரே? அவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி விட்டதா? என்னைப் பிரிந்த வருத்தத்தில் இளைத்து விட்டாரா? சக்தியிழந்து போனாரா? இப்போதும் நல்ல நண்பர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாரா? என்று நிறுத்தினாள். மனைவி போய்விட்டாள். அதிலும் இன்னொருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவள் சுத்தமாக இருப்பாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்பா என்று தானே சாதாரண உலகம் தன் நண்பர்களுக்கு கற்றுத்தரும்!அப்படிப்பட்ட கெட்ட போதனை தரும் நண்பர்களாக இல்லாமல், ராமனுக்கு உத்தம நண்பர்கள் கிடைத்துள்ளார்களா என்பதே சீதாவின் கவலை.
-
சுந்தரகாண்டம் பகுதி-18
நட்பு என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. மகளை ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பவர், வேலை, குடும்பப் பின்னணி இவையெல்லாம் நன்றாக இருந் தாலும் கூட, மிக முக்கியமாக விசாரிப்பது அவனது நண்பர்களைப் பற்றித்தான். யாருடன் சேர்கிறானோ, அவனைப் பொறுத்தே ஒருவனது குணநலன் அமைகிறது. அதனால், ராமனின் நட்பைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தாள் சீதா.அடுத்து, அவளே சொன்னாள்.என் ராமனைப் பற்றி எனக்குத் தெரியும். அவரிடம் அவரது அன்னை கவுசல்யா மிகுந்த பற்று வைத்திருந்தார். தந்தை தசரதர் அவரைப் பிரிந்த துக்கத்தில் உயிரையே விட்டார். மற்ற உறவினர்களும் அவர் மீது கொண்ட அன்பிற்கு குறைவில்லை. ஆனாலும், இவர்களையெல்லாம் விட அவர் என் மீதே அதிக பாசம் வைத்திருந்தார், என்கிறாள்.மகனுக்கு திருமணம் முடித்ததும், மருமகளும், மகனும் சந்தோஷமாக இருக்கப் பொறுக்காத மாமியார்கள் இந்த வரிகளை அவசியம் படிக்க வேண்டும். ஒரு பெண் தன் பெற்றவர்களை விட்டுவிட்டு புதிய இடத்துக்கு வருகிறாள். கணவனையே நண்பனாக, உறவினனாக, தாயாக, தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். அவனைச் சார்ந்தவர்களை தன் பந்துக்களாக உரிமை கொண்டாடுகிறாள். இப்படி எல்லார் மீதும் பிரியமாக இருக்கும் மருமகள், தன் மகனோடு ஐக்கியமாகி தங்களை குடும்பத்தை விட்டு விரட்டி விடுவாளோ என பயந்தே பல மாமியார்கள் கொடுமைகளை அரங்கேற்றி விடுகிறார்கள். சீதாதேவியே தன் மாமியார், மாமனார், புகுந்த வீட்டு உறவை விட தன் மீது தன் கணவன் பாசம் வைக்க வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாள்! சுந்தரகாண்டத்தை மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்த உள்ளர்த்தத்தோடு படிக்க வேண்டும். அதிலுள்ள கருத்துக்களை சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். என்றும் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்க்கை கழியும்.ஆஞ்சநேயர், இப்போது சீதாதேவியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அம்மா! தங்கள் கணவர் தாங்கள் இருக்குமிடத்தை அறியவில்லை. இனி, நான் போய் சொன்னதும், அவர் வானரப்படைகளுடன் வந்து தங்களை மீட்டுச் செல்வார். அவரால் இந்தக் கடலைத் தாண்டி வர முடியுமா என்ற சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். அவர் பராக்கிரமசாலி. அவர் நல்ல உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. பழம், கிழங்கு முதலானவையே அவரது உணவு. காட்டிலே வசிக்கும் பூச்சிகள் அவரைக் கடிக்கும் உணர்வு கூட இல்லாமல் சோகமே வடிவாக இருக்கிறார். தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. தூங்கினாலும் வாய் சீதா என்றே கூறுகிறது. இதுகேட்ட சீதா மிகவும் வருத்தப்பட்டாள்.ஆஞ்சநேயா! விதி மிகவும் சக்தி வாய்ந்தது. அயோத்திக்கு மன்னனாக வேண்டிய சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய ராமனாக இருந்தால் என்ன! அவரது மனைவியான நானாக இருந்தால் என்ன! சாதாரண பிரஜையாக இருந்தால் என்ன! விதிக்கு தப்புபவர் யாரும் கிடையாது. அதையே நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம், என்றாள்.பாருங்களேன்! ராமனாக பூமிக்கு வந்தவர் சாட்சாத் மகாவிஷ்ணு. அவரைச் சுமந்த ஆதிசேஷன் லட்சுமணன். லட்சுமி தாயாரே சீதா. தெய்வங்களாக இருந்தாலும் கூட, மானிடப் பிறப்பெடுத்து அவஸ்தைப்பட வேண்டும் என்ற விதியிருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பது இதன் உட்பொருள். அதனால், நமக்கு கஷ்டம் வரும்போது கலங்கக்கூடாது. அது என்ன செய்து விடும் என்று மோதிப்பார்க்க வேண்டும். கலியுகம் என்றாலும் கூட, இங்கும் கூட ஒரு சில நல்லவர்கள் உண்டு. அவர்கள் ஆஞ்சநேயரைப் போல் நமக்கு துணை வருவார்கள். என்ன நடந்தால் என்ன! ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு நம் வழியில் போய்க்கொண்டிருக்க வேண்டும்.சீதா தொடர்ந்தாள்.ஆஞ்சநேயா! நீ ராமனிடம் செல். ராவணன் என்னை அவனது மனைவியாக்கிக் கொள்ள ஒரு வருடம் அவகாசம் தந்திருக்கிறான்.
பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதத்திற்குள் என் கணவர் இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லா விட்டால், நான் உயிரை விடுவேன் என அவரிடம் சொல்லிவிடு. ராவணனின் சகோதரன் விபீஷணன், என்னை விடுவிக்கும்படி அண்ணனுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறான். அதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. விபீஷணனின் மனைவி சுரஸை, இந்தத் தகவலை தன் மூத்தமகள் அனலை மூலமாக எனக்கு சொல்லியனுப்பினாள். எனவே, நான் ராவணனால் சிரமப்படப் போவது நிச்சயம். அதற்குள் அவர் வந்து என்னை மீட்டுவிடுவார் என்றே கருதுகிறேன், எனச்சொல்லி கண்ணீர் வடித்தாள். ஆஞ்சநேயரும் மனம் கலங்கி, தாயே! கவலையை விடுங்கள். தங்களை மீட்டுச் செல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான் வரவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என் முதுகில் அமர்ந்து கொண்டால் கணநேரத்தில், நான் தங்களை அவரிடம் கொண்டு சேர்த்து விட மாட்டேனா? என்றார்.இதைக் கேட்டு சீதைக்கு கோபம் வந்துவிட்டது. நீ குரங்கு என்பதையும், உன் குரங்கு புத்தியையும் காட்டிவிட்டாய் அல்லவா? என்னை நீ கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவது நகைப்பையே வரவழைக்கிறது. மிகச்சிறியவனான நீ என்னை எப்படி அங்கே கொண்டு சேர்க்க முடியும், என்று கேட்டாள். ஆஞ்சநேயருக்கு அவமானமாகப் போய்விட்டது.என்னை ஒருவர் கூட இப்படி அவமானமாகப் பேசியதும் இல்லை, என் சக்தியை சந்தேகப்பட்டவரும் இல்லை என்று மனதில் நினைத்தபடியே, பொறுமையுடன், தாயே! என்னை நீங்கள் சாதாரண குள்ளக்குரங்கு என்று நினைக்கிறீர்கள். இதோ பாருங்கள்! என்றார். அப்போது அவரது உருவம் வானத்தையும், பூமியையும் அடைத்த வகையில் மிக உயரமானது. ஆஞ்சநேயரின் அந்த விஸ்வரூபம் கண்டு சீதா ஆச்சரியப்பட்ட போது, அன்னையே! உங்களை இந்த இலங்கை மண்ணோடு பெயர்த்துக் கொண்டு செல்லும் ஆற்றல் கூட என்னிடம் உண்டு. என்னை சந்தேகிக்காதீர்கள், என்றார். சீதா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனாள். அவசரப்பட்டு ஆஞ்சநேயனை திட்டிவிட்டோமே என்று மனதுக்குள் சலித்தாள்.
-
சுந்தரகாண்டம் பகுதி-19
பின்னர் அவனுக்கு ஆறுதல் வரும் வகையில் பேசினாள்.ஆஞ்சநேயா! உன் தேஜஸ், பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். உன்னோடு நான் வந்தேன் என்றால், நீ வேகமாக பறந்து செல்லும் போது, காற்றின் வேகத்தால் நான் கடலுக்குள் விழுந்து விடுவேன். அது மட்டுமல்ல! நீ என்னைக் கொண்டு சென்றதும், ராவணன் நிச்சயமாக ராட்சஷர்களை ஏவி விடுவான். அப்போது, நீ அவர்களுடன் போரிடுவாயா? உன்னைக் காப்பாற்ற முயற்சிப்பாயா? என்னைக் காப்பாற்ற முயற்சிப்பாயா? அந்த முயற்சியில் உன் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடும். இந்த ராட்சஷர்களையெல்லாம் கூட ஒருவேளை நீ ஜெயித்தும் விடலாம். என்னையும் காப்பாற்றி விடலாம். ஆனால், ராவணனை எதிர்க்க தைரியமில்லாத ராமன், ஒரு குரங்கை அனுப்பி அவளை மீட்டு வரச் செய்தார் என்ற பழிச்சொல் என் பர்த்தாவுக்கு ஏற்படுமே! அது மட்டுமல்ல! என் கணவரைத் தவிர பிற யாரையும் தொடுவது சரியல்ல. ராவணன் உன்னைத் தொட்டு தூக்கி வரவில்லையா என நீ கேட்கலாம். பலமற்ற பெண்களை பலமுள்ள ஆண்கள் தூக்கிச் செல்லும், பெண்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் தடுத்துப் பார்க்கலாம். முடியாத பட்சத்தில் என்ன செய்வது? அவர்களின் பிடிக்குள் மாட்டத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, அவனால் கடத்தப்பட்ட என்னை என் கணவர் வந்து மீட்டுச்செல்வதே சிறந்தது. அதற்கு ஏற்பாடு செய். அவர் லட்சுமணனுடன் இங்கு வந்துவிட்டால் அரக்க குலத்தை நிச்சயம் வேரறுத்து விடுவார். ராவணன் மாள்வான். இதில் சந்தேகமென்ன! என்று பெருமிதம் பொங்கச் சொன்னாள். ஆனாலும், அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.தொடர்ந்து,மாருதி! இந்த உலகத்தில் தாய்மார்கள் தங்களைக் காப்பதற்காக ஆண் மக்களைப் பெறுகிறார்கள். ஆனால், என் மாமியார் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் ஸ்ரீராமனை உலக ÷க்ஷமம் கருதி பெற்றாள். அதனால் தான் அவர் ராஜ்யம் கிடைத்தும் ஆள மறுத்து வெளியேறினார். அவரை நான் எப்போதும் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அவரை சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் சொல். உலகத்தில் சிரமங்களை அனுபவிப்போர் அவரை சாஷ்டாங்கமாக பணிந்து சரணடைந்து விட்டால், அவர்களை அவர் காப்பாற்றியே தீருவார், என்றாள். அடுத்து தன் கொழுந்தன் லட்சுமணன் பற்றி பேச ஆரம்பித்தாள்.
அவன் வல்லவன், நல்லவன். என் கணவர் இட்ட கட்டளையை சற்றும் மறுக்காமல் செய்யக்கூடியவன். என் ஆசிர்வாதம் அவனுக்கு என்றும் உண்டு. ஆஞ்சநேயா! நான் குறிப்பிட்ட காலத்துக்குள் ராம லட்சுமணர் இங்கு வராவிட்டால், நான் பிழைத்திருக்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லி விடு, என்று சொல்லி, தனது புடவையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்துக் கொடுத்தாள்.அதைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அவளுக்கு மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறி, ரகுநாதன் ராமனுடன் விரைவில் வருவேன் என்று உறுதியளித்தார். கிஷ்கிந்தைக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டார். அவளுக்கோ அவருக்கு அனுமதியளிக்க மனம் வரவில்லை.ஆஞ்சநேயா! உனக்கு களைப்பாக இருந்தால் ஒன்றிரண்டு நாள் இங்கேயே தங்கிப் போயேன். நீ இங்கிருந்தால் எனக்கும் ஆறுதலாக இருக்கும். நீ வரும் முன்பு மிகுந்த சோகத்தில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும் என் துக்கத்தை மறந்து விட்டேன். நீ போய் விட்டால், முன்பை விட என்னைத் துக்கம் வாட்டுமே! சரி போகட்டும்! ஒரு சந்தேகம்! இந்தக் கடலைத் தாண்ட வாயுவும், நீயும், கருடனும் மட்டுமே தகுதியுள்ளவர்கள். என் நாதனும், லட்சுமணனும் எப்படி இங்கு வருவார்கள்? ஆனால், உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும். அவர்களை இங்கே கூட்டி வர வேண்டியது உன் பொறுப்பு, என்றாள். உடனே தன்னடக்கத்துடன் ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அதைப் படிப்பதற்கு முன் உங்களுடைய அலுவலகம், வீடு ஆகியவற்றை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். சிலர் அலுவலகங்களில், தங்களால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என பெருமையடித்துக் கொள்வார்கள். அனைத்தும் அறிந்த மேதாவி களாகக் காட்டிக் கொள்வார்கள். மற்றவர்களை மட்டம் தட்டுவதில் சிலருக்கு அலாதி இன்பம்.
வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு குடும்பத்தலைவர், தன் சம்பாத்தியம் இல்லாவிட்டால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் என பெருமையடித்துக் கொள்வார். ஆனால், எந்த சாதனையையும் படைக்கத் தகுதியுள்ள ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அம்மா! எங்கள் தலைவர் சுக்ரீவன் அளவற்ற பராக்கிரமம் கொண்டவர். அவரைச் சார்ந்துள்ள வீரர்கள் எல்லோருமே என்னை மிஞ்சிய பலசாலிகள். எனக்கு குறைந்தவர்கள் அங்கு யாருமில்லை. அதனால், அங்கிருந்து இங்கே வந்து சேர்வதில் எந்த தடையும் இராது. இதில் சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். நிச்சயம் ராமன் எங்களுடன் வருவார். ராவணனைக் கொல்வார். நாங்கள் இலங்கை சமுத்திரத்தை தாண்டுவோம். நீங்கள் துக்க சமுத்திரத்தை தாண்டுவீர்கள், என்றார்.சீதா மிகவும் சந்தோஷப்பட்டாள்.ஆஞ்சநேயனே! பயிர் பாதி விளைந்து பலனைக் கொடுக்கும் சமயத்தில், மழையில்லாமல் போனால் பயிர் வாடும். அப்போது தெய்வ அனுக்கிரஹத்தால் மழை பெய்தால் பயிர் எப்படி தழைக்குமோ அந்த நிலைமையில் நான் இருக்கிறேன். நான் ராமபிரானுடன் சுகவாழ்வு நடத்தினேன். பின்னர் அவரைப்பிரிந்து உயிரை விட இருந்த சமயத்தில் நீ வந்து காப்பாற்றினாய். இப்போது என்னிடம் இருப்பது என் நாதன் எனக்களித்த சூடாமணி மட்டும் தான். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் அதில் தெரியும். இப்போது, அதையும், என்னை நீ பார்த்த அடையாளத்திற்காக கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. என் ராமன் இங்கு வரும் நாள் மட்டுமே எனக்கு நம்பிக்கையூட்டும் நாள், என்று சொல்லி அழுதாள்.மாருதி அவளை மீண்டும் தேற்றி புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் வெற்றியைக் குறிக்கும் விதத்தில் ஜெயலட்சுமி குடி கொண்டாள்.
-
சுந்தரகாண்டம் பகுதி-20
சுந்தரகாண்டம் என்றால் என்ன? ஆஞ்சநேயர் கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பி, இலங்கை சென்று, சீதையைச் சந்தித்து, அசோகவனத்தை அழித்து, ராவணன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசி, இலங்கையின் பெரும்பகுதியை எரித்து, ராமனிடம் சீதை உயிருடன் இருக்கிறாள் என்ற நல்ல செய்தி சொல்லி அவருக்கு உயிரூட்டினார் என்ற அளவிலான பகுதி என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால் போதாது. இந்த காண்டத்தைப் படித்தால், இறக்கும் நிலையில் உள்ளவர்களே பிழைத்துக் கொள்வார்களாமே, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்களாமே, என்னவெல்லாமோ அதிசயங்கள் நிகழுமாமே என்று பிறர் சொல்லக் கேட்கிறோம். மேலோட்டமாக கடமைக்கு படித்தால், அந்தப் பயன்கள் நமக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. சுந்தரகாண்டத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வரிக்கும் நமக்கு நாமே வியாக்கியானம் செய்து கொள்ள வேண்டும். சுந்தரகாண்டத்தை முழுமையாகப் படித்து, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ன என்று சிந்தனையைப் படரவிட்டால், குறைந்தபட்சம் ஒரு ஆண்டைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு அதில் வாழ்க்கைக்கு ஒளியூட்டும், நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.ஆஞ்சநேயர் கிளம்பிவிட்டார். அப்போது, அவரது மனதில் ஒரு எண்ணம்.சுக்ரீவன் கொடுத்த வேலையைச் செய்தாயிற்று. சீதையைக் கண்டுபிடித்தாயிற்று. அடையாளத்துக்கு சூடாமணியை வாங்கியாயிற்று. இலங்கையைச் சுற்றிப்பார்த்து நகர அமைப்பைத் தெரிந்தாயிற்று. ஆனால், இந்த ராட்சஷப் பதர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்களே. இவர்களது பலத்தை சோதித்து பார்க்க வேண்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக ராவணனின் இருப்பிடத்தை பார்த்த நான், அவனது பராக்கிரமத்தை அறிந்து போக வேண்டுமே. சரி..அவனுடைய பராக்கிரமத்தை அறிய வேண்டுமானால், அவனுடன் இப்போதே போரிட்டாக வேண்டும். அவன் ஒன்றும் சாதாரணமாக வெளியே வருபவனல்ல. தன் கைத்தடிகளைத் தான் என் மீது ஏவுவான்.
அவர்கள் என்னுடன் போர் செய்வார்கள். போர் என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி யாருக்கு என்பது உறுதியில்லை என்று பெரியவர்களெல்லாம் சொல்கிறார்கள். அது நிஜமும் கூட. ஒருவேளை அவர்கள் என்னை விட வீரமுள்ளவர்களாக இருந்தால் நான் தோற்றுப்போவேன். பின்னர், இங்கே சீதை இருக்கும் விஷயம் ராமனுக்கு தெரியாமலே போய்விடும். என்ன செய்யலாம்? என்று தீவிரமாக யோசித்தார்.முடிவில், போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பலசாலிக்கு எப்போதுமே வெற்றி உறுதி என்பதும் போர் சாஸ்திரம் சொல்வது தானே! நான் ஒப்பற்ற வீரமுள்ளவன் என்று நம்புகிறேன். அதனால் எனக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே, இந்த ராட்சஷர்களுடன் போரிடுவதில் தப்பே இல்லை என்று முடிவெடுத்தார். ஆஞ்சநேயர் இப்படி எண்ணியதை, ஆணவம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நம்பிக்கை. ஒரே பாடத்தை பல மாணவர்கள் படிக்கிறார்கள். சிலர் அதைக் கடினமாகக் கருதி திண்டாடி குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள். வேறு சிலர் அதை எளிதாக எடுத்துக் கொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆஞ்சநேயர் இதில் இரண்டாவது ரகமாக இருந்தார். நான் நிச்சயம் ஜெயிப்பேன், மகாராஜா சுக்ரீவனுக்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்பினார். இப்போது புரிந்ததா? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். தன்னை நம்புபவன் எதிலும் வெற்றிவாகை சூடுவான். எவ்வளவு பெரிய தத்துவத்தை சுந்தரகாண்டம் நமக்குச் சொல்கிறது பாருங்களேன்! இப்படி அணுஅணுவாக ஆய்வு செய்து சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களே வெற்றி வாகை சூட முடியும். சரி.. வம்புக்குத்தான் போகக்கூடாது. ஆனால், வந்த சண்டையை எப்படி விடுவது? ராவணன் தான் இந்த சண்டைக்கு மூலகர்த்தா. அவன் இப்போது மாளிகையில் இருக்கிறான். அவனது கவனத்தை ஈர்ப்பது எப்படி? என்று சிந்தித்தார்.
தன் கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்த அசோகவனத்தைப் பார்த்தார். இதை அழித்து விட வேண்டும். இதை அழித்தால் சீதை இருக்குமிடத்தை யாரோ அழிப்பதாக ராவணனின் கவனத்துக்குச் செல்லும். அவனுடைய ஆட்களை அனுப்புவான். அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். பின்னர் ராவணனே வருவான், என்று சிந்தித்தார். தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தி விட்டார். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல என்பார்களே...அதுபோல், அந்த அழகிய அசோகவனம் களையிழந்து போய்விட்டது. மரங்களைச் சாய்த்து, அங்கிருந்த தடாகக்கரைகளை நொறுக்கி அடையாளமே தெரியாமல் செய்துவிட்டார். சீதாதேவி அமர்ந்திருந்த சிம்சுபா மரத்தின் பக்கம் மட்டும் அவர் செல்லவில்லை. ராட்சஷிகள் இந்த சப்தம் கேட்டு எழுந்தனர். தாங்கள் இருப்பது அசோகவனத்தில் தானா அல்லது வேறு ஊரிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சீதை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, யார் இவன்? உனக்குத் தெரிந்தவனா? என்று கேட்டார்கள்.எனக்கு அவனை யாரென்றே தெரியாதே. இது ராட்சஷர்கள் வாழும் நாடு. யாரோ ஒரு சக்திவாய்ந்த ராட்சஷன் தான் இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயமா? பாம்பின் பால் பாம்பறியுமே, என்று சொல்லிவிட்டாள்.ஒருவருக்கு நன்மை விளைகிறதென்றால் அப்போது பொய் பேசுவதில் தவறில்லை. சாட்சாத் மகாலட்சுமியே பூமிக்கு வந்து விட்டாலும், சில நன்மைகள் கருதி பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்லவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி அவள் சொல்லிவிட்டாள்.ராட்சஷிகள் ராவணனிடம் ஓடினார்கள்.மகாராஜா! நம் அசோகவனத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு வனத்தை பாழ்படுத்தி விட்டது. அது நீர் விரும்பும் சீதையிடம் பேசியதாக நாங்கள் அறிகிறோம். உமக்கு சொந்தமாக உள்ள ஒருத்தியிடம் பிறர் பேச நீர் அனுமதிக்கலாமா? அதை உடனே பிடித்து விசாரிக்க வேண்டும். அது ராமனால் அனுப்பப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம், என்றனர். ராவணனின் கண்கள் சிவந்தன.
-
சுந்தரகாண்டம் பகுதி-21
யாரடா அங்கே! உடனே செல்லுங்கள், அந்த வானரனைக் கொல்லுங்கள், என்று கட்டளை பிறந்தது ராவணனுடைய வாயில் இருந்து!பலத்தில் ராவணனுக்கு இணையான எண்பதாயிரம் அசுர வீரர்கள் பெரிய ஆயுதங்களுடன் புறப்பட்டார்கள். மாருதி அமர்ந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவரை அடித்தார்கள். கத்திகளை வீசினார்கள். இதுவரை ஆஞ்சநேயர் என்ற சொல் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டது. இப்போது மாருதி என்று மாறக் காரணம் ஏதும் உண்டா? என நீங்கள் யோசிக்கலாம்.மாருதி என்ற சொல், மாருதம் என்ற சொல்லில் இருந்து உருவானது. மாருதம் என்றால் காற்று. காற்றின் மைந்தனல்லவா ஆஞ்சநேயர். அதனால் அவரை மாருதி என்பர். காற்றடைக்கப்பட்ட பந்தை நீருக்குள் அமிழ்த்தினால் என்னாகும்? அது மேலே மேலே தான் வரும். அதுபோல், இங்கே மாருதிக்கு அசுரர்கள் கோபத்தை ஊட்ட ஊட்ட சிறு குரங்காக இருந்த அவர் உயர்ந்தார்...உயர்ந்தார்...உயர்ந்து கொண்டே இருந்தார். விஸ்வரூபம் தரித்தார்.எவ்வளவோ பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் நாம் மாருதியின் தரிசனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா! குடிகெடுக்கும் ராட்சஷர்கள் கண்களுக்கு அவர் தெரிகிறார். அதிலும் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். ஏன் தெரியுமா? அவர்களுடைய தலைவன் கெட்டவனே ஆயினும் சிவபக்தன். அந்த சிவனே ராமனுக்கு சேவை செய்ய வானரமாய் அவதரித்துள்ளார். ஒருவன் செய்த பிரார்த்தனையால், அவனது நாட்டிலுள்ள எல்லோருக்கும் இறை தரிசனம் கிடைக்கிறது. ஒருவேளை கலியுகத்தில் இருப்பதால், நம் பிரார்த்தனைக்கு அவர் செவி கொடுக்க மறுக்கிறாரோ என்னவோ?அவர்கள் வீசிய ஆயுதங்களை நொறுக்கித் தள்ளினார். இலங்கையே நடுங்கும்படி சிங்கம் போல் கர்ஜித்தார். அந்த ஓசை கேட்டு பறவைகள் எல்லாம் மயங்கி தரையில் விழுந்து விட்டன.
அடேய் ராட்சஷப் பதர்களே! ராமன், அவர் தம்பி லட்சுமணன், என் மகாராஜா சுக்ரீவன் ஆகியோருக்கு நிகரான பலசாலிகள் இவ்வுலகில் இல்லை. நான் ராமதூதன். அவரது பக்தன். வாயுவின் புத்திரன். எதிரிகளுக்கு எமன். நீங்கள் என் காலுக்கு தூசு. உங்கள் அரசன் ராவணனைப் போல் ஆயிரம் அசுரர்கள் வந்தாலும் அவர்களைப் பந்தாடி விடுவேன். சீதையைக் கண்டேன். அவளிடம் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இனி, உங்களையெல்லாம் கொன்று இலங்கையை சர்வநாசமாக்கி விட்டு, சுகமாக என் இருப்பிடம் திரும்புவேன், என சவால் விட்டார். நம் ஊரில் ஜெயிப்பது முக்கியமல்ல. பக்கத்து ஊரில் போய் ஜெயிக்க வேண்டும். அப்படி செய்யாமல், நம்மை நம்பர் ஒன்று என சொல்லிக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ, அது போல் இல்லாமல், மாருதி பக்கத்து நாட்டில் போய் சவால் விட்டார்.ராட்சஷர்கள் அந்தக் குரல் கேட்டே நடுங்கி விட்டார்கள். மாருதியின் பார்வையில் ஒரு இரும்பு உலக்கை பட்டது. அதை உருவி எடுத்தார். களத்தின் நடுவில் அவர் நிற்க சுற்றிலும் ராட்சஷர்கள் நின்றார்கள். அவர்களை எல்லாம் அந்த உலக்கையை சுழற்றி நாசம் செய்தார். சிலருக்கு பயம் வந்து விட்டது. அவர்கள் ராவணனிடம் ஓடினார்கள்.நாங்கள் மட்டும் தான் மிச்சம். மற்றவர்களை அந்தக் குரங்கு நாசம் செய்து விட்டது. விண்முட்ட உயர்ந்து நின்ற குரங்கிடம் இருந்து தப்பி வந்ததே பெரிய காரியம் என்றார்கள்.ராவணன், தன் முதலமைச்சர் பிரஹஸ்தனுடைய புத்திரன் ஜம்புமாலியை அழைத்து, நீ போய் அந்த குரங்கைக் கொன்று வா, என்றான். இதற்குள் மாருதி, அசுரர்களைக் கொன்றால் போதுமா? அசோகவனம் அழிந்தால் போதுமா? அதோ! அங்கே தெரியும் ராவணனின் அரண்மனை மாடத்தை இடித்து தள்ள வேண்டும், என முடிவு செய்தார். அந்த உப்பரிகை நவரத்தினங்களால் ஜொலித்தது.
மாருதி அதன் எதிரே ஒளி பொங்க நின்றார். அதைக் காவல் காத்த அசுரர்களை நோக்கி, அடேய்! இந்த அரண்மனையை அழிக்க வந்திருக்கிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என சவால்விட்டார். அசுர காவலர்கள் மாருதியை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள்.அந்த பலவான்களில் பலர் ஓகம் எனப்படும் பலமுடையவர்கள். நூறு யானை பலம், ஆயிரம் யானை பலம் என்பது போல ஓகம் என்பது இதையெல்லாம் விட அதிக எண்ணிக்கையுள்ள யானைகளின் பலமுடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள மாருதி தயாரான போது, ஜம்புமாலி கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வந்து சேர்ந்தான். அவனது கோரைப் பற்களைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். அவ்வளவு பெரியது. அந்த பற்களைக் காட்டியபடி கடும் கோபத்துடன் இருந்தான்.வீரர்கள் உடனே யாரையும் கொல்லமாட்டார்கள். தன் சக வீரனோடு சண்டை போடுவதில் அவர்களுக்கு அலாதி இன்பம். பலவானான ஜம்புமாலியுடன் யுத்தம் செய்ய மாருதிக்கு ஆசை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல், ஜம்புமாலி தன் பாணங்களை மாருதி மேல் தொடுத்தான். மாருதி ஒரு பெரிய பாறையைப் பிடுங்கி அவன் மேல் எறிந்தார். அவன் அதை தன் அம்புகளால் தகர்த்து விட்டான். பார்த்தார் மாருதி. ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி வீசினார். அதையும் அவன் தடுத்து விட்டான். பின்னர் ஒரு மிகப்பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அவன் மீது வீசினார். அவ்வளவு தான்! ஜம்புமாலியைக் காணவில்லை. அவன் தலை ஓரிடத்தில் சிதைந்து கிடக்க, கை, கால்கள் கழன்று கிடக்க மண்ணோடு மண்ணாகி விட்டான்.இதைக் கேள்விப்பட்ட ராவணன், கோபத்தில் மீசை துடிக்க, தன் மந்திரி பிரதானிகளின் குமாரர்கள் அனைவரையும் அனுப்பி, அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள், என ஆணை பிறப்பித்தான். மின்னலென வந்த அவர்களும் மாருதியின் ஆவேசத்துக்கு பலியானார்கள்.ராவணனுக்கு பயம் வந்து விட்டது.
-
சுந்தரகாண்டம் பகுதி-22
விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன் என்ற தனது ஐந்து சேனாதிபதிகளை அவன் அழைத்தான். அவர்கள் போர் செய்வதில் மிகுந்த திறமைசாலிகள்.அவர்களிடம்,சேனாதிபதிகளே! அந்தக் குரங்கு சாதாரணமானதாகத் தெரியவில்லை. அது குரங்கின் வேடத்தில் வந்துள்ள ஏதோ ஒரு சக்தி. இல்லாவிட்டால், நம் வீரர்கள் 80 ஆயிரம் பேரை அது சாய்த்திருக்குமா? இந்திரன் முதலான தேவர்கள் கடும் தவம் செய்து அனுப்பிய மாயசக்தி என்றே அந்தக்குரங்கை நினைக்கிறேன். நீங்கள் மிக கவனமாக அதனருகில் சென்று அதைப் பிடியுங்கள். எனக்கு ஏற்கனவே வாலி, சுக்ரீவன், நீலன், த்விவிதன் ஆகிய பராக்கிரமம் மிக்க வானர வீரர்களைப் பார்த்த அனுபவமுண்டு. ஆனால், அவர்களையெல்லாம் விட இந்தக் குரங்கு அதிக வலிமையுடையதாக இருக்கிறது. நீங்கள் போரில் வல்லவர்கள். அதை பிடித்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், போரில் வெற்றி பெற நினைப்பவர்கள் சிறுவிஷயத்தில் கூட கவனக்குறைவாக இருக்கக்கூடாது. போர் வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும், என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தான்.ஆனால், அந்த சேனாதிபதிகளை மட்டுமல்ல, அவரது தேர்கள், உடன் சென்ற கணக்கற்ற வீரர்களை தூள்தூளாக்கி விட்டார் மாருதி.ராவணன் இதை எதிர்பார்த்தவன் போல, அடுத்து யாரை அனுப்பலாம் என ஆலோசிக்கையில் ராவணனின் மகன், அட்சயகுமாரன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான். அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ராவணன் அவனையே அனுப்ப முடிவெடுத்து ஜாடையாலேயே புறப்படும்படி உத்தரவிட்டான். அவன் வானில் பறந்து சண்டையிடும் திறமையுள்ளவன். மாருதியும் வாயு புதல்வரல்லவா! தனக்கு சரியான ஜோடி சண்டையிட கிடைத்ததென்று மகிழ்ந்து அட்சயகுமாரனை எதிர்கொண்டார்.அட்சயனின் தேரை அடித்து நொறுக்கினார்.
அவன் வானில் பறந்து அவருடன் சண்டையிட்டான். ஆனால், வாயுமைந்தன் அவனது கால்களை இறுகப்பிடித்தார். அவன் கிறங்கும் வகையில் சுழற்றினார். சுழற்றியே கொன்று விட்டார்.பெற்ற மகனை இழந்த துக்கம் ராவணனை வருத்தியது. அவன், வேறு வழியின்றி தன் மகன் இந்திரஜித்தை அழைத்தார். தேவர், அசுரர் போரில் இந்திரனையே வென்றவன் என்பதால் இவன் இந்திரஜித் என்று பெயர் பெற்றவன். கடும் தவமிருந்து பிரம்மாவிடம் இருந்து அஸ்திரம் பெற்றவன். அந்த பிரம்மாஸ்திரம் உலகிலுள்ள எப்பேர்ப்பட்ட சக்தியையும் கட்டும் சக்தி பெற்றது. அவனிடம், அன்பு மகனே! நான் ஏற்கனவே அனுப்பிய வீரர்களிடம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், நீ மகாவீரன். தேவர்களையே வென்றவன். ஆனாலும், அந்தக் குரங்கை குறைத்து மதிப்பிடாதே. அந்த வானரனின் திறமை பற்றி சொல்கிறேன், கேள், என்று ஆரம்பித்தான்.நீ பல வீரர்களை அழைத்துச் சென்று பலனில்லை. ஏனெனில், அது கணநேரத்தில் அவர்களை ஒழித்துக் கட்டி விடுகிறது. ஆயுதங்களாலும் அவனைக் கொல்ல முடியாது. ஏனெனில், அவன் காற்றை விட வேகமாக இருப்பவன். எந்தத்திசையில் இருந்து தாக்குவான் என்றே தெரியாது. அப்படிப்பட்டவனிடம் ஆயுதம் எடுத்து பலனில்லை. எனவே, உன்னிடமுள்ள முக்கிய அஸ்திரங்களுடன், அவற்றிற்குரிய மந்திரங்களை ஜபித்துக்கொண்டே செல். இவ்வளவு சக்தி வாய்ந்த குரங்கை அழிக்க நானே போயிருப்பேன். ஆனால், நாளைய உலகம், ஒரு சாதாரணக் குரங்கை அழிக்க ராவணனே நேரில் சென்றான் என்று இந்த ராவணனைக் கேலி செய்யும். மேலும், வீரர்கள் இருக்கும் நிலையில் மன்னனே முதலில் நேரில் செல்வதென்பது அரசியல் தர்மமல்ல, என்றான்.இந்திரஜித்துக்கு இப்படிப்பட்ட வீரனை எதிர்கொள்ளப் போவதில் பெரிய மகிழ்ச்சி.
தனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்தமைக்காகவும், பெற்றவருக்கு மரியாதை செய்து வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தன் தந்தையை வலம் வந்து நமஸ்கரித்தான். உற்சாகமாக மாருதி இருக்குமிடம் சென்றான். மாருதிக்கோ இன்னும் சந்தோஷம். மாருதிக்கு மட்டுமா! இலங்கையில் வசித்த பறவைகளுக்கு கூட சந்தோஷமாம். யார் இறந்தாலும் வலிய உடல் ஒன்று கீழே சாயும். அவர்களின் பிணம் தங்களுக்கு பலநாள் இரையாகும் என்பது அவற்றின் கணிப்பு. இந்தக் காட்சியைக் காண வானலோகத்தில் இருந்தவர்களெல்லாம் கூடி விட்டார்கள். பிரம்மாஸ்திரம் மாருதியைக் கட்டிப்போடும் என்பது உறுதி. அதில் இருந்து அவர் எப்படி விடுபடப்போகிறார் என்பதைப் பார்த்தாக வேண்டுமே! அது மட்டுமல்ல! அழியப்போவது இந்திரஜித்தா, மாருதியா? ஒருவேளை மாருதியின் கதை முடியுமானால் சீதாராமரின் நிலை என்னாகும்? நெஞ்சம் படபடக்க அவர்கள் உயரத்தில் நின்றார்கள்.இந்திரஜித் களத்திற்குள் புகுந்தான். மாருதி தன் உருவத்தைப் பெரிதாக்கினார். இந்திரஜித் தன் வில் நாணை இழுத்து விட்ட போது எழுந்த ஒலி பேரிடியையும் மிஞ்சியது. பல பாணங்களை அவன் மாருதியின் மேல் பிரயோகித்தான். மாருதி பறந்தபடியே அவற்றை விலக்கித் தள்ளினார். இதுகண்டு இந்திரஜித்தே ஆச்சரியப்பட்டான்.தன் தந்தை சொன்னது போல, இவன் பராக்கிரமசாலி தான் என்பதைப் புரிந்துகொண்ட புத்திமானான இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தை ஏவி இவனைப் பிடித்து கட்டி இழுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான்.பிரம்மாஸ்திரம் பறந்து வந்தது. மாருதி அந்த அஸ்திரத்துக்கு தானாகவே கட்டுப்பட்டு விட்டார். சகல அஸ்திரங்களுக்கும் கட்டுப்படாத அந்த மாவீரன் இதற்கு மட்டும் ஏன் கட்டுப்பட வேண்டும்? அது ஒரு ரகசியம்!
-
சுந்தரகாண்டம் பகுதி-23
பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைப்பவர். இன்னாருக்கு இன்னாரென எழுதி வைப்பவர். அதற்கு எல்லாரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். படைத்தவருக்குரிய மரியாதையை நாம் தரவேண்டாமா அதனால், அவருக்குரிய அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டார் ஆஞ்சநேயர். ஏற்கனவே, ஒரு சந்தர்ப்பத்தில் பிரம்மாவிடம் ஒரு வரத்தையும் வாங்கியிருந்தார் மாருதி.அதாவது, பிரம்மாஸ்திரத்துக்கு நீ கட்டுப்படும் காலம் வரும். அதனால் உனக்கு ஆபத்து எதுவும் நேராது. ஆனால், ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணிநேரம்) வரை நீ அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். அப்போது ஏற்படும் கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டும், என்பது தான். கடவுளை வணங்காதவனை விட வணங்குபவனுக்கு தான் அதிக சோதனை வரும். இது வாழ்க்கை நடைமுறை. அதாவது, நம் வினைகளின் பலனை இங்கேயே முடித்துவிட்டு, இறைவனின் லோகத்தை அடைந்ததும் சுகவாழ்வு அடைய வேண்டும் என்ற காரணமே இதற்கு இருக்க முடியும். இவ்வளவு நேரம் வெற்றிக்களியாட்டம் போட்ட மாருதி, இப்போது கஷ்டப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர் கட்டப்பட்டார்.ஆனால், ராட்சஷ முட்டாள்கள் என்ன செய்தனர் தெரியுமா அந்த அஸ்திரத்தின் ரகசியம் தெரியாமல், அவசரப்பட்டு அவரைக் கயிறுகளாலும், விழுதுகளாலும் கட்டிவிட்டனர். இப்படி பிற பொருட்களால் கட்டினால், அந்த அஸ்திரத்தின் கட்டு அவிழ்ந்து விடும். அது மட்டுமல்ல! அதை மீண்டும் எய்யவும் முடியாது. இந்திரஜித் இந்த அவசர செயலைக் கண்டு அதிர்ந்து விட்டான்.இனி இந்தக் குரங்கைப் பிடிப்பது கஷ்டமாயிற்றே! இது இப்போது கட்டுக்களை அவிழ்த்து இங்கே நிற்பவர்களை எல்லாம் வேட்டையாடி விடுமே! நமக்கும் அதோகதிதானோ என்று சிந்தித்த வேளையில், மாருதியோ கட்டில் இருந்து அவிழாதது போல நடித்தார்.இப்போது, இந்திரஜித்துக்கு இன்னும் குழப்பம்.
இந்தக் குரங்கு தன் கட்டுகள் அவிழாதது போல நாடகமாட வேண்டிய அவசியம் என்ன! அசுரர்கள் இது கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அடிக்கிறார்கள், குத்துகிறார்கள், ஆயுதங்களால் தாக்குகிறார்கள். அத்தனையையும் இது தாங்குகிறது என்றால், இது இன்னும் என்ன செய்யப்போகிறதோ!என்பதே குழப்பத்துக்கு காரணம்.மாருதி மிகுந்த பொறுமை காத்தார்.இவர்களை அடிப்பதை விட, இந்த கட்டிலேயே இருப்பதைப் போல் நடித்தால், நிச்சயம் இவர்கள் நம்மை ராவணனிடம் கொண்டு செல்வார்கள். அவனுடைய பராக்கிரமத்தை நாம் எடை போட்டு விடலாம். இது எதிர்வரும் போருக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணக்குப் போட்டார்.எதிரிகளின் பலம் தெரியாமல், அவர்களை எதிர்த்து யாரும் களத்தில் இறங்கக்கூடாது என்பது இதன்மூலம் தெரிய வரும் பாடம். அவர் நினைத்தது போலவே ராவணனின் முன்னால் அதைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணனை மிகவும் அருகில் பார்த்து மாருதி உண்மையிலேயே அதிசயித்தார். எப்படிப்பட்ட மகாபுருஷன் இவன்! இவன் மட்டும் தன் மனதை தர்மத்தின் வழியில் செலுத்தினால், இந்திரனையும், பிற தேவர்களையும் நிரந்தரமாக ஆளும் பாக்கியத்தைப் பெற்றிருப்பானே! என்று மனதுக்குள் பாராட்டினார். எதிரியை பாராட்டும் இந்த தன்மை மட்டும் அரசியலில் இருந்துவிட்டால், சண்டைகளுக்கு இடமில்லை. தேசமும் விருத்தியாகும் என்பது சுந்தரகாண்டம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து.இதே போன்ற யோசனை தான் ராவணனுக்கும் தோன்றியது.யார் இவன் ஒரு காலத்தில் நான் கைலாயத்தை அசைத்த போது எனக்கு சாபமிட்ட நந்தி பகவானா அல்லது யாரேனும் அசுரனா இப்போது, குரங்கு ரூபத்தில் வந்திருக்கிறானோ என்னுடைய அரண்மனைக்குள் தகுதியானவர்கள் மட்டுமே நுழைய முடியும். இவன் எப்படியோ இங்கே வந்துவிட்டான் என்றால் இவன் தகுதியுடையவர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்ற யோசனையுடன், தனது மந்திரி பிரஹஸ்தனிடம் கண்ஜாடை காட்டினான்.அவனது கருத்தைப் புரிந்து கொண்ட பிரஹஸ்தன், குரங்கே! எனது கேள்விகளுக்கு பயப்படாமல் பதில் சொல்.
உனக்கு நன்மை உண்டாகட்டும். உன்னை யார் இங்கே அனுப்பினார்கள் இந்திரனா வாயுவா விஷ்ணுவா குபேரனா எமனா பார்ப்பதற்கு குரங்கு போல் தோன்றினாலும், உன் சக்தியை மதிப்பிடும் போது அவ்வாறு நினைக்க எங்களால் முடியவில்லை. உண்மையைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவோம். பொய் சொன்னால் உன் உயிர் போய் விடும். எதற்காக இலங்கைக்கு வந்தாய்? சொல், என்று கேட்டான்.மாருதி அவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை. தைரியசாலியல்லவா அவர்! நேராக ராவணனை நேருக்கு நேர் பார்த்தார். அவனிடமே பதில் சொன்னார்.எந்த தேவரும் என்னை அனுப்பவில்லை. நான் வானரன் தான். ராட்சஷர்களின் மகாராஜாவான உன்னைப் பார்க்கவே இங்கு வந்தேன். உன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே அசோகவனத்தை அழித்தேன். நீ அனுப்பிய ஆட்கள் என்னை துன்புறுத்தினார்கள். அவர்களிடம் இருந்து என் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர்களிடம் பலப்பரீட்சை செய்து கொன்றேன். எந்த அஸ்திரமும் என்னைக் கட்டுப்படுத்தாது என்ற வரத்தை நான் பிரம்மாவிடம் பெற்றுள்ளேன். ஆனாலும், ராட்சஷர்கள் என்னை உபத்திரவம் செய்ததையும் பொறுத்துக் கொண்டு, பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் நடித்ததன் காரணம், உன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேள், என்று ஆரம்பித்தார்.கிஷ்கிந்தையின் அரசன் சுக்ரீவன் என்னை இங்கே அனுப்பினார். தசரத புத்திரரான ராமனின் மனைவி சீதையை நீ கடத்தி வந்துள்ளாய். ராமபிரானும், சுக்ரீவனும் இப்போது நண்பர்கள். ராமனின் மனைவியை மீட்டுத்தருவதாக சுக்ரீவனும், சுக்ரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று வானர ராஜ்யத்திற்கு சுக்ரீவனை அதிபதியாக்குவதாக ராமனும் உடன்பாடு செய்து கொண்டனர். ராமன் தான் சொன்னதை நிறைவேற்றி விட்டார். சுக்ரீவன் தன் பங்கை நிறைவேற்றும் நடவடிக்கை எடுத்துள்ளார். நீயாகவே, சீதையைக் கொண்டு போய் ராமனிடம் ஒப்படைத்து விட்டால் உன் பத்து தலைகளும் பிழைக்கும். இங்கிருக்கும் சீதாபிராட்டி சாதாரணமானவள் அல்ல. அவள் இலங்கையை அழிக்க வந்திருக்கும் காளராத்ரி என்ற சக்தி. கவனம், என்றவர் மேலும் தொடர்ந்தார்.
-
சுந்தரகாண்டம் பகுதி-24
ராவணா! எங்கள் ராமனைப் பற்றி நீ தெரிந்து கொள். நான் அவருடைய தொண்டன். அவரே எனக்கு உயிர் என்பதால், இப்போது நான் சொல்லும் அனைத்தும் நிஜம். அவர் சத்தியத்தின் வடிவம். தர்மத்தின் சொரூபம். அவரை வெல்வதற்கு உலகில் யாரும் பிறக்கவில்லை. எனவே, அவருக்கு துரோகம் செய்துவிட்டு, நீ பிழைத்திருக்கலாம் என கருதாதே. நீ சிவபக்தன் என்பதால், அந்த சிவன் மூலம் அவரை வென்று விடலாம் என நினைத்தால் அதுவும் நடக்காது. மன்மதனையும், திரிபுர அசுரர்களையும் சிவன் கொன்றிருக்கிறாரே என நீ கேட்கலாம். அவர்கள் தவறு செய்தவர்கள், அதனால், அவரது நெற்றிக்கண்ணால் அவர்களை எரித்து விட்டார். எங்கள் ராமனோ நற்குணமுள்ளவர். நற்குணமுள்ளவர்களாகிய சத்தியசீலர்களை சிவனின் நெற்றிக்கண்ணால் ஏதும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள். படைக்கும் கடவுளான பிரம்மாவால் அவரை அழிக்க முடியாதா என நீ கேட்டால், அதற்கும் என்னிடம் பதில் உள்ளது. அந்த பிரம்மனும் நல்லவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து வந்தாலும் அவரை அழிக்க முடியாது. அதனால், எங்கள் ராமனைச் சரணடைந்து உன்னைக் காப்பாற்றிக்கொள், என்றார். மாருதியின் இந்தச் சொற்கள் ராவணனை மிகுந்த ஆத்திரமடையச் செய்தன. கோபத்தில் அந்த அசுரன், இந்தக் குரங்கைக் கொன்று விடுங்கள், என்று ஒரேயடியாக உத்தரவு போட்டுவிட்டான்.அப்போது விபீஷணன் எழுந்தான்.அண்ணா! இது முறையல்ல. தனது எஜமானன் சொல்லியனுப்பியதை தூதனாகிய இவன் வந்து சொன்னான். அது ஒன்றும் தவறல்ல, அதற்காக, இவனைக் கொல்வது என்பது தங்களது புகழுக்கு இழுக்கைத் தரும். நியாயத்தைக் கடைபிடிக்கும் எந்த அரசனும் தூதர்களைக் கொல்வதில்லை. தங்களை வெல்வதற்கு இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். எனவே, இந்தக் குரங்கு இப்படி சொல்லிவிட்டதே என்பதற்காக கலங்க வேண்டாம். தாங்கள் இந்த தூதனை விடுவித்து விடுங்கள், என்றான்.
ராவணனோ ஆத்திரம் அடங்காமல், விபீஷணா! இவன் பாவி. பாவிகளைக் கொல்வது தவறல்ல, என்றதும், இடைமறித்த விபீஷணன், அண்ணா! வேண்டாம்! இவன் நமது படையினரைக் கொன்றிருக்கிறான் என்பது நிஜமே. இருப்பினும், தூதன் என்ற நிலையில் வந்திருப்பதால், தூதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதற்கு பெரியோர்கள் வகுத்து வைத்துள்ள விதிகளின்படி, அங்கஹீனம் செய்தல், சாட்டையடி கொடுத்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகளைக் கொடுக்கலாம். இது எதிரிகளை அவமானப்படுத்தியதற்கு சமம். நம் பராக்கிரமத்தை அவர்கள் உணர்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அமையும். இதில் எந்த தண்டனையைக் கொடுப்பது என்ற முடிவைத் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம், என்று யோசனை சொன்னான். ராவணன் இதை ஏற்றுக்கொண்டான்.விபீஷணா! தக்க சமயத்தில் சரியான யோசனை சொன்னாய். இந்த தூதனுக்கு மறக்க முடியாத தண்டனை ஒன்றைக் கொடுக்க வேண்டும். குரங்குகளுக்கு அழகும் ஆபரணமுமாக இருப்பது வால் தான். இந்தக் குரங்கின் வாலில் நெருப்பு வைத்து இந்த பட்டணம் முழுவதும் இழுத்துச் செல்லுங்கள், என்றான். வால் என்றதும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ராவணனிடம் இருந்து சீதை மீட்கப்பட்டதும், கிஷ்கிந்தையில் அவர்கள் இறங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த வானரப் பெண்களுக்கு, இந்த யுத்தத்துக்கு காரணமான சீதையைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சுக்ரீவனின் வேண்டுகோளுக்கு இணங்க, புஷ்பக விமானத்தில் வந்த ராமனும், சீதையும் தரையிறங்கினர். அப்போது, ஒரு வானரப் பெண், இந்த சீதாவின் அழகில் மயங்கி தான் ராவணேஸ்வரன் இவளைக் கடத்திப் போனான் என்றார்கள். இவள் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால், அதிலும் ஒரு குறை. இவளுக்கு நம்மைப் போல் வால் இல்லையே! என்றாளாம். அவரவருக்கு அவரவர் இயல்பு அழகு. அதிலும் குரங்குகளுக்கு நீண்ட வால்தான் அழகு. அதனால் தான் வாலுக்கு தீ வைக்கச் சொன்னான் ராவணன்.நாம் கூட குழந்தைகள் சேஷ்டை செய்தால், இவன் சரியான வாலு என்போம். காரணம், அந்த வால் எத்தகைய சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பதை இனிமேல் தானே பார்க்கப் போகிறோம்.அசுரர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.
அடேய்! சரியான சந்தர்ப்பம். இந்தக் குரங்கு நம் உறவினர்களில் பலரைக் கொன்று விட்டது. அதற்கு பழிவாங்க சரியான சந்தர்ப்பம். இதன் வாலில் துணிகளைச் சுற்றுங்கள். எண்ணெய்யை ஊற்றுங்கள். நெருப்பு வையுங்கள், என்று கூச்சலிட்டனர்.அப்போது மாருதி தன் மனதில், இவர்களை மட்டுமல்ல! இங்கிருக்கும் ராவணனையும் என்னால் கொல்ல முடியும். ஆனால், ராவணனைக் கொல்வதாக ராமபிரான் சபதம் எடுத்திருப்பதால், நான் அவரை மீறியதாக ஆகிவிடும். எனவே, இவர்களுக்கு உயிர் பிராணன் தருவது என் கடமையாகிறது.இப்போது, இவர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதும் நன்மைக்குத் தான்! இலங்கையை அணுஅணுவாகப் பார்த்து விடலாம். போருக்கு வரும் போது, எந்த இடத்திற்குச் செல்வது என்று முடிவு செய்ய வசதியாயிருக்கும், என்று நினைத்தார். ராட்சஷர்கள் அவரது வாலுக்கு தீ வைத்தனர். அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு அவர்களுடன் நகர்வலம் வந்தார்.இந்த விஷயத்தை ராட்சஷிகள் சிலர் சீதாவிடம் சென்று தெரிவித்தார்கள். அவள் உயிரே போனது போல துடித்துப் போனாள்.சீதாதேவி போன்ற தாயை உலகில் பார்க்க முடியாது. நமக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அவளிடம் உடனடியாக மானசீகமாக முறையிட்டு விட்டால் போதும். அவள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வந்து விடுவாள். நமக்காக கண்ணீர் வடிக்கும் கருணை தெய்வம் அவள். எனக்காக இங்கு வந்தவனுக்கு இந்தக் கதியா! என்றவள், அக்னி பகவானிடம், பகவானே! நான் என் கணவருக்கு செய்த பணிவிடைகள் அனைத்தும் உண்மையானால், நான் கற்புக்கரசி என்பது நிஜமானால், மாருதிக்கு நீ எந்த துன்பத்தையும் தரக்கூடாது. வெம்மைக்கு பதிலாக குளிர்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்தித்தாள்.மாருதிக்கு ஆச்சரியம்.வாலில் நெருப்பு எரிகிறது. ஆனால், உஷ்ணமே இல்லை. இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியப்பட்டார்.
-
சுந்தரகாண்டம் பகுதி-25
அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.அக்னி சுடவில்லை என்றால் அது ராமனின் கிருபையினாலேயே நடக்கிறது. சீதாதேவியின் பிரார்த்தனையால் இது நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் அக்னியும், என் தந்தை வாயுவும் நண்பர்கள். அந்த அடிப்படையிலும் இது நிகழலாம் என பல்வேறு விதமாக சிந்தித்தபடி, அவர் திடீரென சீறிப்பாய்ந்தார். தன் உடலை பெரியதும் சிறியதுமாகச் செய்து கட்டுக்களை அவிழ்த்தார். உலக்கை போன்ற கைகளை குச்சி போல மாற்றி விட்டால், கட்டுகள் அவிழ்ந்து விடும் தானே! அந்த முறையில் கட்டுக்களை உதறிவிட்டு, உயரமான ஒரு இடத்தில் ஏறி நின்றார். சீதையைக் கண்டுபிடித்தாயிற்று, ராமன் கொடுத்தனுப்பிய கணையாழியைக் கொடுத்து அவரது நிலையைச் சொல்லியாயிற்று, ராட்சஷர்களின் பலத்தை பரிசோதித்து பார்த்தாயிற்று, ராவணனையும் சந்தித்து அவனது மனநிலையையும் தெரிந்தாயிற்று, இலங்கையை சுற்றிப்பார்த்து நகர அமைப்பை தெரிந்து கொண்டாயிற்று... இனி வேலை ஏதுமில்லை. போருக்கு வரும் முன் இங்குள்ள கோட்டையையும், தடுப்பு அரண்களையும் அழித்து விட்டால் பின்னால் வசதியாக இருக்கும் என்று எண்ணியவராய், அக்னி தனக்குச் செய்த சகாயத்தைப் பயன்படுத்தி கோட்டையில் தீ வைத்தார். ராட்சஷர்களின் வீடுகளிலும், மாளிகை, தோட்டங்கள் எல்லாவற்றிலும் நெருப்பை பற்ற வைக்க இலங்கையே எரிய ஆரம்பித்தது. கும்பகர்ணன், இந்திரஜித் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தார். விபீஷணனின் வீட்டை மட்டும் விட்டுவிட்டார். எல்லாவற்றிற்கும் உச்சமாக ராவணனின் மாளிகைக்கே தீ வைத்து விட்டார். தேவர்களையெல்லாம் அவமானப்படுத்தி வந்த ராவணனின் வீட்டில் தீ வைக்கப்பட்டதோ இல்லையோ, தேவனான அக்னி பகவானுக்கு மிகுந்த கொண்டாட்டமாகி விட்டது. தன் பணியை மிகச்சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டார். அதிபயங்கரமாக கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தார்.ராட்சஷர்கள் தங்களுக்கு ஏதோ கேடு காலம் இந்த குரங்கின் ரூபத்தில் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். வீடுகளில் இருந்த ராட்சஷக்குழந்தைகள் அலறின.
அவர்களை தூக்கிக் கொண்டு, ராட்சஷ தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல ராட்சஷர்கள் தீயில் சிக்கி மரணமடைந்தனர். ஆனாலும், மாருதிக்கு திருப்தி ஏற்படவில்லை. இந்த சேதம் போதாதென்றே நினைத்தார். இலங்கை முழுவதையும் எரித்தாக வேண்டும் என்பது அவரது எண்ணம்.எனவே பர்வதசிகரம் எனப்படும் திரிகூடமலையில் ஏறி தீ வைத்தார். அங்கிருந்த ராட்சஷர்களின் வீடுகள் பற்றி எரிந்தன. ராட்சஷர்கள் மிகப்பெரிய உடலை உடையவர்கள் என்பதால் அவர்களது உடல் வெடித்துச் சிதறி நெருப்புத்துண்டங்களாகி தீயை மேலும் பெருக்கியது.இந்த நேரத்தில் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி பிரிவினை ஏற்படுவது சகஜம். இதை குடும்பத்திலுள்ள பெரியவர்கள் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். பதிலாக, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினால், அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல், இலங்கையைப் போல, துன்பம் செய்தவர்களின் குடும்பத்தையே அழித்து விடும். பொன்மான் மீது கொண்ட ஆசையால், இரண்டு கொழுந்தன்மாரை சந்தேகப்பட்டாள் சீதா. ஒன்று லட்சுமணன். இன்னொருவன் பரதன்.ஓஹோ! அந்த பரதன் ஒருவேளை என் மீது ஆசைப்பட்டு, உன் மூலமாக என்னை அபகரிக்க திட்டம் போட்டிருக்கிறானோ! அதனால் தான் உன் சகோதரர் காட்டில் ராட்சஷர்களிடையே மாட்டி, சீதா...லட்சுமணா என்று அபயக்குரல் கொடுத்தும் நீ செல்ல மறுக்கிறாயோ, என்று லட்சுமணனிடம் கேட்டாள் சீதா. இந்த சொல் நெருப்பாய் அவன் உள்ளத்தைச் சுட்டது. அம்புகளாய் பாய்ந்தது. ஆனாலும், பொறுமையுடன், தாயே! எனது சகோதரர் சாதாரணமான வீரர் அல்ல. எந்தச் சூழலிலும், அவருக்கு என்ன துன்பம் வந்தாலும், பிறர் உதவியை அவர் நாடவே மாட்டார். தன் பிரச்னையை தானே தீர்த்துக் கொள்ளும் சூராதி சூரர் அவர். அவருக்காவது ஆபத்தாவது... எல்லாம் அந்த மாரீசனின் மாயச்செயல், தாங்கள் கலங்காதீர்கள், நான் அண்ணனின் கட்டளையை மீறி இங்கிருந்து செல்லவே மாட்டேன், என்றான். ஆனாலும், மேற்கண்ட சொல்லம்பு அவனை அங்கிருந்து அகலும்படி செய்தது.
அவள் துன்பப்பட்டாள்.ஆனால், இந்த செய்கைகளுக்கெல்லாம் மூலகாரணம் யார்? ராவணன். அவன் ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்தான்.பெண்களின் சாபம், அவளைப் பாதிப்புக்குள்ளாக்கியவரின் குடும்பத்தை மட்டுமல்ல! அவளைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களையும் அழித்து விடும். ராவணன் செய்த பாவம், அவன் தேசத்திலுள்ள மக்களையும் சேர்த்து எரிப்பதைப் போல! சுந்தரகாண்டம் படிக்கும் அன்பர்கள் தங்கள் மனைவியை எந்தக் காரணத்தால் பிரிந்திருந்தாலும் சரி...அதையெல்லாம் மறந்து விட்டு, ஒன்று சேர வேண்டும்.எப்படியோ, ஒட்டுமொத்தமாக இலங்கையை நாசமாக்கி விட்டார் மாருதி.தேவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நம்மால் ஏறெடுத்தும் பார்க்க முடியாத லங்காபுரியை இவன் ஒருவனே நாசமாக்கி விட்டானே என்று! நாம் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றால், வாலில் வெண்ணெய் பூசி வழிபடுகிறோம். அவரது வாலில் சூடுபட்டதால் வலிக்கும் என்ற அன்பின் காரணத்தால் செய்யப்படும் வழிபாடு அது. நிஜத்தில், அவருக்கு வலிக்கவில்லை. எந்த வால், சீதாபிராட்டியைக் காத்ததோ, அந்த வால் தங்களையும் காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் வழிபாடே அது. அதனால் தான் வாலில் மணியைக் கட்டி அதை தெய்வாம்சமானதாகவும் கருதுகிறோம்.இலங்கை பற்றி எரிந்த பிறகு தான், மாருதிக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. பகீர் என மனதை வாட்டியது அந்த நினைவு. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், ராமபிரானுக்கு என்ன பதில் சொல்வது! அவசரப்பட்டு விட்டோமே என கலங்கினார் அவர். அந்தக் கலக்கத்துக்கு என்ன காரணம்?
-
சுந்தரகாண்டம் பகுதி-26
ஆஞ்சநேயர் மிக மிக வருத்தப்பட்டார். ஐயோ! கோபத்தின் காரணமாக தகாத காரியம் செய்துவிட்டேனே! இலங்கைக்கு தீ வைக்க வேண்டும் என்று எண்ணிய என் வானர புத்திக்கு, சீதாதேவியும் இங்கே தான் இருக்கிறாள் என்று தெரியாமல் போய்விட்டதே! பல இடங்களில் பற்றிய தீ அசோகவனத்திலும் பற்றி, சீதாதேவியை அழித்திருந்தால் நிலைமை என்னாகும்? ஸ்ரீராமபிரானிடம் என்ன பதில் சொல்வேன்? அது மட்டுமல்ல! ஒரு உத்தம பத்தினியைக் கொன்ற தீராத பாவத்துக்கு ஆளாவேனே! ஒருவனுடைய உள்ளத்தில் கோபத்திற்கு மட்டும் இடம் கொடுத்து விட்டால், அவன் எத்தகைய பாவம் செய்யவும் அஞ்சமாட்டான், ஏன்...அவன் கற்றுத் தந்த ஆசிரியரையே கூட கொன்று விடுவான். கோபம் ஒருவனுடைய மனதில் எழுந்தால், நெருப்பை தண்ணீரால் அணைப்பது போல அப்படியே விட்டு விட வேண்டும். கோபக்காரன் துறவிகளையும், முனிவர்களையும், பெரியோர்களையும் உபத்திரவம் செய்ய தயங்கமாட்டான். பாம்பு சட்டையை உரிப்பது போல, கோபக்காரன் கோபத்தை புத்தியால் அடக்க வேண்டும். நான் கொடிய பாவி, என் புத்தியை தீயால் சுட வேண்டும், ஒருவேளை சீதாதேவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமானால், நானும் இந்த அக்னியில் விழுந்து இறப்பேன். கோபக்காரனான என்னை அது குரங்கு தானே! அதற்கென்ன புத்தியிருக்கும் என்று பலரும் என்னைப் பழிப்பதற்கு முன் மரணத்தை ஏற்பேன், என புலம்பினார். பார்த்தீர்களா! ஒரு நிமிட கோபம் பிறரை மட்டுமின்றி, தன்னையே அழித்து விடும் தன்மையுடையது. கோபம் காரணமாக பெற்றவர்களை பிரிந்திருக்கும் பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் பெற்றோர், வாழ்க்கைத் துணையைப் பிரிந்திருப்பவர்கள் எல்லாம் இதைப் படித்த பிறகாவது, அந்தக் கோபத்தால் இதுவரை தங்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்த்து சேர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தான் சுந்தரகாண்டம் ஆயுள் முழுவதும் படிக்க வேண்டிய அருமருந்தாக திகழ்கிறது. ஆனால், மாருதி நினைத்தது போல் ஏதும் நடக்கவில்லை.
இலங்கையில் நெருப்பில் அகப்பட்டு இறக்கும் நிலையில் முனகிய ராட்சஷர்களில் சிலர், நாம் அழிகிறோம், ஆனால், ராமனின் துணைவியான அந்த சீதாவை மட்டும் இந்த நெருப்பு ஏதும் செய்யவில்லையே, என்று சொல்லி உயிர்விட்டார்கள். இதைக் கேட்ட ஆஞ்சநேயருக்கு போன உயிர் திரும்பியது போல் இருந்தது. சீதாதேவி தன் மகிமையால் பிழைத்தாள் என்று எண்ணியவராய், பாக்கியிருந்த அசுரர் வீடுகளையும் அழித்தார். பின்னர் சீதாதேவியை சந்தித்தார்.மாருதி! நீயே இங்கிருக்கும் மிச்சம் மீதி ராட்சஷர்களையும்...ஏன், ராவணனையே அழித்து என்னை மீட்டுச் சென்று விடுவாய் என்பதை பரிபூரணமாக நம்புகிறேன். நீ மகாதீரன். ஆனால், என் பர்த்தாவே என்னை மீட்டுச் செல்ல வேண்டும். அதுவே அவரது புகழுக்கும், ராவணன் செய்த தீங்கிற்கு பதிலடி கொடுப்பதாகவும் அமையும், என்றாள். அவளைப் பணிந்து வணங்கிய மாருதி, அரிஷ்டம் என்று பெயர் கொண்ட மலையில் ஏறி கிஷ்கிந்தை கிளம்பினார். அந்த மலையை அவர் அழுத்திய வேகத்தில் பூமிக்குள் புதைந்து போனது. பின்னர் மின்னல் வேகத்தில் பறந்து கடலின் அடுத்த கரையை அடைந்தார். அவர் வரும் வேகத்தைப் பார்த்தவுடனேயே, ஜெயத்துடன் திரும்பி வருகிறார் என்பதை வானர வீரர்கள் புரிந்து கொண்டனர். அவர் வந்து இறங்கியதும், அவருக்கு கிழங்கு, பழங்களை சாப்பிடக் கொடுத்தார்கள்.அவசர வேலையாக சென்றிருக்கும் நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டுக்குள் நுழைகிறார். அவர் மகிழ்ச்சியான சூழலில் வந்தாலும் கூட, அவரிடம் உடனே என்ன நடந்தது என்று கேட்கக்கூடாது. வந்தவருக்கு ஒரு டம்ளர் தண்ணீராவது கொடுக்க வேண்டும். அவர் ஆசுவாசமானவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். அதே போல வீட்டுக்குள் நுழைபவரும் அவசர அவசரமாக பேச்சைத் துவங்கக்கூடாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும். மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலும் கூட நிதானம் இழக்காமல் இருப்பது நமது உடல்நிலைக்கு நல்லது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பின்னர் மாருதி, தான் சென்று வந்த விபரத்தை வானர வீரர்களிடம் சொன்னார். அவர்கள் மகிழ்ச்சியுடன், அங்கதனின் அனுமதியுடன் சுக்ரீவனுக்குச் சொந்தமான மதுவனத்தில் தேன் குடித்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுக்ரீவனின் அனுமதியின்றி யாரும் அங்கு செல்லக்கூடாது என்பதால், வனத்தின் பாதுகாவலனான ததிமுகன் சுக்ரீவனிடம் சென்று முறையிட்டான். அவனது சொல்லில் இருந்தே, மாருதி சென்ற காரியம் ஜெயமாயிற்று என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டான்.
பின்னர், வானரர்களும் வந்து சேர்ந்தனர். மாருதி அடைந்த வெற்றியின் காரணமாக, அனுமதியின்றி மதுவனத்தை அழித்து தேன்குடித்த வானரர்களை சுக்ரீவன் மன்னித்து விட்டான். அவர்கள் செய்த வேலைக்கு என்ன கூலி கொடுத்தாலும் தகும் என்பதே அவனது இந்த பெருந்தன்மைக்கு காரணம். பின்னர் மாருதி, சீதையைக் கண்டு வந்த வரலாற்றை ராமனை நமஸ்கரித்து சொல்ல ஆரம்பித்தார்.கண்டனென் கற்பினுக்கு அணியை என் கண்களால் என்றார். சொல்லின் செல்வர் அல்லவா? சீதையைப் பார்த்தேன் என்று சொல்ல ஆரம்பித்தால், சீதையை என்றவுடனேயே பார்க்கவில்லை என்று அடுத்த வார்த்தை வந்துவிடுமோ என்ற பயத்தில், ராமனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அதனால் பார்த்தேன் சீதையை என பவ்யமாக உரைத்தார். அங்கு நடந்த எல்லா விபரங்களையும், சீதாபிராட்டி அசுரர்களிடம் படும் வேதனையையும் விவரித்து, அவள் தந்த சூடாமணியை வணக்கத்துடன் சமர்ப்பித்தார். அதைப் பார்த்து ராமன் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை.லட்சுமணா! இந்த ஆபரணத்தை என் சீதையின் சிரசில் பார்த்துள்ளேன். ஆனால், இப்போது தனியாகப் பார்க்கிறேன், என்று சொல்லி வருந்தினார். ஏன் லட்சுமணன் இதைப் பார்த்திருக்க மாட்டானா என்றால், பார்த்ததே இல்லை. அவனுக்கு அண்ணியின் முகம் இப்போது வரை தெரியாது. அவளது திருவடி மட்டுமே அவனுக்குத் தெரியும். தமையன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலனாக அவன் விளங்கினான்.பின்னர், ஸ்ரீராமா! நான் ஜனகபுத்திரியிடம் நீங்கள் உடனடியாக வந்து மீட்டுச் செல்வீர்கள் என தைரியமூட்டி, ஜீவனை விட இருந்த அவர்களுக்கு நம்பிக்கையூட்டினேன். தாங்கள் இட்ட கட்டளையை என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகச் செய்தேன், என அடக்கத்துடன் சொன்னார். நிஜ வீரன் ஆர்ப்பரிப்பதில்லை அல்லவா? ஆஞ்சநேயரின் இந்த இலங்கைப் பயணம் பல பாடங்களை நமக்கு தந்திருக்கிறது. யார் ஒருவருக்கு உயிர்க்கண்டம் இருக்கிறதோ, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. நாமும், பிறர் நலம் கருதி வாழ்ந்து ஆஞ்சநேயரின் திருவருள் பெறுவோம்.
ஸ்ரீராம ஜெயம்.