Author Topic: விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதா?  (Read 3130 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஒரு ஆணுக்கு திருமணம் செய்யும் போது விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களை காரணமின்றி சில குடும்பங்கள் தவிர்க்கின்றன. காரணம் கேட்டால் விசாகம் கொழுந்தனாருக்கு ஆகாது; ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது; கேட்டை, மூலம் போன்றவை மாமனாருக்கு ஆகாது என சில ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர்.

உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பெண்ணால், புகுந்த வீட்டினருக்கு பாதிப்பு ஏற்படுமா? ஜோதிடத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?

பதில்: ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ எந்தஒரு ஜோதிட நூலிலும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் போன்ற உவமைகள் ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவே இல்லை.

மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதாவது ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு, அரசு தொடர்பானவர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்; மூலம் 4ஆம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதே அதன் பொருள்.

இதேபோல் ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் மிகத் தவறானது. இதுபற்றியும் பண்டைய கால நூல்களில் கூறப்படவில்லை. இது விசாகம், மூலம், கேட்டை ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

இதுமட்டுமின்றி, மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார்; பரணி தரணியை ஆளும் என்பது போன்ற உவமைகளையும் சிலர் காலப்போக்கில் கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் பண்டைய ஜோதிடம் எந்த ஒரு நட்சத்திரத்தையும் தாக்கியோ அல்லது தூக்கியோ கூறவில்லை.

எனவே, நட்சத்திரத்தை மட்டும் பார்த்து ஒரு பெண்ணின் ஜாதகத்தை மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்றும் கூறுவது கூடாது; இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும். மாறாக, சம்பந்தப்பட்ட பெண்/ஆணின் ஜாதகத்தில் மாமனார், மாமியார், இதர உறவுகளைக் குறிக்கும் இடம்/கிரகங்களின் நிலை எப்படி இருக்கிறது என ஜோதிடப்படி ஆராய்ந்த பின்னரே அந்த வரனைத் தவிர்க்க வேண்டும்.

கடந்த 1989இல் என்னிடம் வந்த ஒரு குடும்பத்தினர் தங்களின் மகனுக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணைப் பார்த்துள்ளதாகக் கூறினர். மணமகன் வீட்டார் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர்கள். மணப்பெண் வீட்டாரும் அவர்களின் வசதிக்கு இணையானவர்கள். ஆனால் திருமணம் செய்வதில் ஒரு சிக்கல் நிலவுவதாக மணமகன் வீட்டார் கூறினர்.

என்ன பிரச்சனை என விசாரித்ததில், ஆயில்யம் நட்சத்திரப் பெண், மாமியாருக்கு ஆகாது என்று சில ஜோதிடர்களே கூறுவதாக என்னிடம் அந்தப் பெற்றோர் தெரிவித்தனர். அவர்கள் தேர்வு செய்த பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்ததில், மாமியாருக்கான ஸ்தானம் மிகவும் சிறப்பாக இருப்பது தெரியவந்தது.

மேலும், அவர்களது மகனின் ஜாதகத்தில் சந்திரன், புதன் சேர்க்கை பெற்றிருந்ததும், அந்த பெண் புதனின் நட்சத்திரம் (ஆயில்யம்), சந்திரனின் ராசியில் (கடகம்) பிறந்திருந்ததும் தெரியவந்தது. இந்தப் பெண்ணை நீங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ளலாம். உங்கள் மகனுக்கு மிகப் பொருத்தமான துணையாக இருப்பார்.

அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் ஆண் ஆதிக்க கிரகங்களான குரு, செவ்வாய் ஆகியவையும் சிறப்பாக இருந்ததால், உங்கள் மகனுக்கு ஆண் வாரிசு கிடைக்கும் என்றும் எடுத்துக் கூறினேன். (அவர்கள் பரம்பரையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஆண் வாரிசு இல்லை என்றும் அந்தக் குடும்பத்தினர் என்னிடம் கூறியிருந்தனர்).

பெண் பார்க்கும் படலம் முடிந்த பின்னரும், மாப்பிள்ளையின் பெற்றோர் வழி உறவினர்கள் ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தினர். ஆனால் பெண்ணைப் பிடித்து விட்டதால் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என மாப்பிள்ளை உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி திருமணத்தை பெற்றோர் நடத்தி வைத்தனர்.

கடந்த 1989இல் திருமணம் முடிந்த இந்தத் தம்பதிக்கு தற்போது 4 ஆண் வாரிசுகள் உள்ளனர். அதில் முதல் பையன் 12ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது முதல் பேரனுடன் வந்த அந்த மாமியார், கல்லூரியில் எந்தப் படிப்பை பேரனுக்கு தேர்வு செய்யலாம் எனக் கேட்டுச் சென்றுள்ளார்.

எனவே, நட்சத்திரத்தை மட்டும் காரணம் காட்டி ஒரு வரனைத் தட்டிக் கழிக்காமல், சம்பந்தப்பட்ட கிரகங்களின் அமைப்பையும் அதில் பார்த்துவிட்டு திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் சிறப்பாக வாழ்வார்கள்.