FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 04, 2021, 11:48:23 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: Forum on December 04, 2021, 11:48:23 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 286

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/286.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: Orchids on December 05, 2021, 07:46:23 AM
உன்னை கண்ட அந்த நிமிடம் நான் நினைக்கவில்லை!
நீயும் நானும் நாமாவோம் என..
வாழ்க்கை பயணம் உன்னோடு தான் என..
இன்னாருக்கு இன்னாரென..
எனக்கு நீ உனக்கு நான் என..

காதலில் விழுவதென்னவோ சுலபம்
காதலித்தவரையே மணப்பதல்லவோ கடினம்

உன்னோடு நான் கொண்ட சிறுசிறு ஊடல்களிலும்
என் காதல் உனக்கு புரிந்ததம் ரகசியம்
உன் அளவில்லா காதலின் அதிசயம்

நட்பில் காதல் வளர்த்தோம்
அன்பில் உறவு வளர்த்தோம்
இன்று திருமண பந்தத்தில் இணைகிறோம்

அன்று தனிமையில் இருந்த எனக்கு துணையாக வந்தாய்
இன்று ஒரு குடும்பத்தையே பரிசளிக்கிறாய்

உள்ளம் ஈடில்லா சந்தோசத்தில் தத்தளிக்கிறது..
கண்கள் ஆனந்த மழை பொழிகிறது..
வாழ்வின் இந்த உன்னத நொடியை..
வார்த்தைகள் கொண்டு வருனிப்பது..
என்னால் முடியாததொன்று..🥺🥺

எவ்வளவோ தடைகளை தாண்டி உன் கரம் பிடிக்கும் இத்தருணம்
என் வாழ்வின் வரம்💜

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: DuskY on December 05, 2021, 02:03:48 PM
சின்னஞ்சறு பறவை போல் கனவு வளர்த்த நாள்..
விவரம் புரியா மனதில்
 சிறு விதை நீ என ஆசைகள் வளர்த்த நாள்...
தனக்கென ஒருவன் தனக்கான‌ கனவுகளுடன் நம்மிடம் எப்போது வருவான்
 என்று எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாள்...
கண்கள் கண்ட நொடிகளில்
எதிர் காலம்‌ அவர் எனப் புரியும் நாள்...
உலகமே சொர்க்கமாய் நந்த வனம் போல் ஆக
நீயும் நானும் பூக்கள் நிறைந்த இடத்தில்
 பலவண்ண  பூக்களின் அழகை
 மிஞ்சி விடுமோ என்பதை போல்
கைகோர்த்து வீற்றிருக்க ..
ஒன்றாக அனைவர் ஆசி பெற்று  இனிய வாழ்வு
இணையும் நாள் இதுவா என்று
கனவிற்கும் நினைவிற்கும் இடையில் சிக்கி தவிக்கிறேன்.
மனிதற்கே உரியது காதல் உணர்வு வெளிப்பாடு
பொய்கள் எனத் தெரிந்தும் அந்த உணர்வுகளை ரசிக்க
நமக்கு மட்டுமே இறைவன் கற்றுக் கொடுக்கிறானே..
அவ்வாறு இருந்தும் சிலர் திருமண பந்தத்தை துண்டித்து உணர்வு இல்லாத மனிதரைத் தேடித்தான் செல்கின்றனர்.
நமக்கானவர்களை அவர்கள் குறைகளோடு ரசித்து திருமண
வாழ்வை கசந்து விடாமல் இனிதாகவே நாம் துவங்கி
 சிறு சண்டைகளோடு ,சிறு ஊடல்களோடு ,
சிறு கோபங்களோடு இறுதியாக காதலோடு வாழலாமே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: Dear COMRADE on December 05, 2021, 02:13:09 PM
பட்டுடை வேஷ்டி அணிந்து
தலைப்பாகை தனை பூண்டு
மங்கல வாத்தியம் இசைக்க
புரோகிதர் மந்திரம் உரைக்க
மணமேடைதனில் அமர்ந்து
வழி மீது விழி வைத்து - உன்
வருகைக்காய் காத்திருக்கின்றேன்
எந்தன் காதலியே - உந்தன்
கரம் பற்றும் நொடிப்பொழுதை நோக்கி....

வளையோசைகள் வண்டாய்
ரீங்காரம் இடவே - உன் பாதக்
கொலுசுகள் தரை தீண்டி
மத்தளங்கள் இசைக்கவே
வெண்மேகம் கம்பளம் விரிக்க
பாவையர்கள் படை சூழ
நெற்றிச்சுட்டி முன்னாட
கார் கூந்தல் பின்னாட
மெல்லிடை வளைவினிலே
ஒட்டியாணம் இசைந்தாட
செவ்வானம் நெய்து தந்த
சேலைப்பட்டு அணிந்து - எந்தன்
இதயவாசலில் கோலமிட்டவள்
அன்னநடையாய் மெல்ல நடந்து
அருகில் வந்து அமர்ந்தாளே....

அக்கினி சாட்சியாக
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
ஆன்றோர் சான்றோர் புடைசூழ
மன்னவள் உன் சங்குக் கழுத்தினிலே
திரு மாங்கல்யம் இட்டேனே
முந்தானை முடிச்சிட்டு - உன்கரம் பற்றி
மூன்று முறை வலம் வந்தேனே....
புருவ இடைவெளியில்- நான் வைத்த
மஞ்சள் குங்குமம் மண மணக்க
மாற்றிய ஆரமும் மணக்குதே - உன்
புன்னகையில் மலரும் பூவோடு....

" யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே "

"காதலின் இரண்டாம் அத்தியாயம்
துணைவன் துணைவியாய் - உம்மிருவர்
தூரபயணத்தின் துவக்கப் புள்ளி..."
வாழ்த்தும் நெஞ்சமொன்று
வளைந்து தோள்பற்றி தூக்கிட
நன்றி பயக்கும் நோக்கோடு
கட்டியணைக்க முனைந்தேன்....

ஹாஹா
கட்டிலில் இருந்து விழுந்தேன்
காண்பது கனவென்று அறியாமலே....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: TiNu on December 05, 2021, 06:22:03 PM


நான் பிறந்த கணம் அழுதேனா? தெரியவில்லை...
நான் விழுந்து எழுந்து நடந்த தருணங்களில் 
என்  கண்கள் கலங்கி அழுதேனா? தெரியவில்லை...

வாழ்க்கையே வளைந்து கேள்வி குறியாகி..
என் முன்னே நின்று கூத்தாடிய தருணங்களில்
என் கண்கள் கலங்கி  அழுதேனா? தெரியவில்லை..

சமூக கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாது..
தினம் தினம் திக்கி திணறிய தருணங்களில்.
என் கண்கள் கலங்கி  அழுதேனா? தெரியவில்லை..

நாம் முதன் முறையாக சந்தித்து கொண்ட
பொழுதில் நடந்த.. .மோதல் தருணங்களில்
என் கண்கள் கலங்கி  அழுதேனா? தெரியவில்லை..

நான் பிழையெதுவும் இழைக்கவில்லை என்று....
நீ என்னை புரிந்து கொண்ட தருணங்களில்
என் கண்கள் கலங்கி  அழுதேனா? தெரியவில்லை..

நம் மோதலுக்கு பின்னே... வந்த புரிதலில்...
நீயும் நானும்.... நாம் என மாறிய தருணங்களில்.
என் கண்கள் கலங்கி  அழுதேனா? தெரியவில்லை..

உயிருள்ளவரை..  உன்னுடனே நான் இருப்பேன்... என
பஞ்ச பூதங்கள் முன்னே... என் கரம் நீ பற்றிய தருணத்தில்... 
என் கண்கள் கலங்கி  அழுதேனா?.. அழுதேனா?..

விழிகளில் நீர் பெருகி... என் கன்னங்களில் வழிந்தோடிய
சூடான நீர் துளிகளை.. உன் பூ விரல் துடைத்த தருணத்தில்...
என் கண்கள் கலங்கி அழுதேனா? அழுதேனா?

உன் இரு விழிகளிலும் ... என் மலர் முகம் நிழலாட.
என் கண்ணீர் திவலைகளில்.. உன் முகம் பிரதிபலிக்க...
அழுதேன். நான் அழுதேன்.  முதல் முறையாக..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: Sun FloweR on December 05, 2021, 06:50:59 PM
ஆயிரம் கனவுகளை சுமந்து
லட்சம் கற்பனைகள் வளர்த்து
காத்துக் கிடந்த மனங்கள்
இரண்டும் கைகோர்க்கும்
திருமண விழா...

கணமும் விட்டுப் பிரியாத
அன்றில்கள் இரண்டும் இணையும்
மாபெரும் மணவிழா...

இணைதலில் இல்லை வெற்றி
சேர்ந்து வாழ்தலிலே வெற்றி
எனும் இல்லற கடமையாற்ற துவங்கும்
இரு மனங்களின் பெருவிழா...

எவர் விட்டுச்சென்றாலும்
தாம் விட்டுச் செல்லாத
தாம் விட்டுக் கொடுக்காத
இரு கைகள் பிணையும்
மாபெரும் மங்கள விழா....

கடவுள் அமைத்த மேடையில்
மணமக்களாய் இணையும் 
இந்தக் கரங்களுக்கு சொந்தமான
உள்ளங்கள்
இன்பத்தில் மட்டுமல்ல
துன்பத்திலும் காலமெல்லாம்
சேர்ந்தே பயணிக்கட்டும்...

இன்று ஒன்றுகூடும் இந்தக் கைகள்
காதலிலும் வாழ்தலிலும்
இணைந்த கைகளாய்
என்றும் பல்லாண்டு
வாழிய வாழியவே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: MoGiNi on December 06, 2021, 03:07:45 AM
சில கற்பனைகள்
களைந்து
உன் கைகள் நீவி
ஸ்பரிசம் நுகர்ந்து விட
துடிக்கும் விரல் நகர்வுகளில்
கலந்து நிறைகிறாய்

ஆத்மார்த்தமான
பார்வை ஆலாபனைகள்
கடந்து
நீண்டு கிடக்கிறது
கைகளின் ஸ்பரிசம்

காத்திருந்து களைத்திருக்குமா
எத்தனை கண்கள்
உற்றுப் பார்த்தாலும்
வெட்கங்களற்று
தழுவிக் கிடக்கிறதே ...

காலம் கடந்து
காவல் கிடந்தனவோ
பிரிய மறந்து
ப்ரியமாக ...

எண்ணற்ற கனவுகளின்
சந்திப்புகள் ...
சம்மதங்கள்
காத்திருத்தலின் 
நீண்ட தாள் உடைத்து
கைகலந்து
ப்ரியங்களை
சம்மதங்களை
பகிர்ந்து கிடக்கிறது

மென்மையான
உன் அழுத்தத்தில்
வாழ்க்கையின் ரேகைகள்
பிணைந்து கிடக்கிறது
அடர்ந்த காட்டின்
அமானுஷயங்களை கடந்து
ஆறுதல் அடைத்தலை போல
ஒரு நிறைவான தேடலின்
ஒரு பயணத்தின்
தொடர்ச்சியாக
துணையாக இணையாக நீ

ஒரு தேடலின்
பரிசாக
ஒரு பயணத்தின்
துணையாக
ஒரு ஆழ்ந்த தூக்கத்தின்
அழகான சாரமாக
அமைந்துவிட
வேண்டுகிறேன் அன்பே ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: AgNi on December 06, 2021, 12:12:05 PM


கல்யாண ரேகைகள் கூடி வந்து
காதல்தூறல் பாடிய நேரம்...
கைப்பிடிக்கும் தூரங்கள் யாவும்
பை பிடிக்கும் பணம்தானே
சொந்தங்களை நிர்ணயிக்கும்....

உறவுகளை துறந்து பறவையாய்
தாரமாய் வந்தவளை மனம்
தூரமாய் தள்ளிவைத்து துன்புறுத்தி
துரத்தி நாளும் துலாபாரத்தில்
நிறுத்தி இம்சிக்கும் கூட்டமுண்டு..

அன்பில் ஆட்கொள்ள வேண்டியவளை..
ஆட்சி அதிகாரத்தை வீட்டில் காட்டி
அண்டத்தில் வாரிசு சுமப்பவளை...
கண்ணில் வைத்து காப்பதை விட்டு
கணக்கு பார்த்து வேலைகாரியாய்
அடிமைப்படுத்தும் சுயநலமக்கள்...

பெண்ணவளை அடிமைபடுத்தி பேடிதனமாய் வீழ்த்தி....
தலைநிமிர நிற்க வேண்டிய சிங்கத்தை..
தடவிகொடுத்தே சிறுபூனையாக்கும்
சில குள்ளநரி தந்திரத்தை..
ராஜதந்திரம் என தம்பட்டமடிக்கும்
காட்டுமிராண்டிகள் சிலர்...

திருமணங்கள் இங்கு ..இன்று...
வியாபாரமாகி ஆயிற்று பலகாலம்
காத்துவாக்குல இரண்டு காதல்கள்...இல்லை எத்தனையோ?
மரபுமீறிய உறவுகளும்..
மனம்போனபடி வாழ்வதும்..
பந்தமில்லாமல் ஒன்று சேர்வதும்..
பிடிக்காமல் விலகுவதும் தான்
இன்றைய கால கட்ட...
வெற்றுமன திருமணங்களோ??


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: இளஞ்செழியன் on December 06, 2021, 09:36:06 PM
உயிர்த்தெழச் செய்யும்
ஒரு உன்னத காதல் இது!!!
காலங்கள் கடந்த போதும்
பற்றிய கையை
விடாது இறுக்கிப்பிடித்து
இன்மையை உணர்த்திக்கொண்டே
இருக்கின்றது!

சேர்ந்து நடந்த கால்கள் சோர்வைடையாமல்
பல பொழுதுகளில் வாரியணைத்து சுமந்து கொள்கின்றது!
இறுகப் பிடித்தால் வலிக்குமோ என்றும்
விட்டு விட்டால் தொலைந்து விடுமோ என்றும்
பயம்கலந்த பற்றுதல்களோடு
தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

கொஞ்சம் கலங்கிவிடும் போதும்
துடித்தணைத்து துணையாய் இருக்கின்றது!
கோபித்து கொண்டு சமாதானத்திற்கு
முத்தங்கள் கேட்கின்றது!

நொடிக்கொரு காரணம் தேடி
எதற்காக வேணும்
பேசிக்கொண்டிரேன் என
சந்நிதியில் சரணடைந்தே வாழ்கின்றது!
இந்நேரம் நீயும் இருந்திருக்கலாம் என்று
ஒவ்வோர் நாளும் ஏதோ ஒரு தடவை
தேடச்சொல்கின்றது!

சுற்றியோர் உலகம் உள்ளதை மறக்கச்செய்து
தனியாய் ஓர் உலகினுள்
லயிக்கச் செய்கின்றது!

சேட்டைகளும் குறும்புகளும் சேர்ந்து,
தினம் ஒரு புதுவடிவம் பெறுகின்றது!
முரட்டுப் பிடிவாதங்கள் பிடித்து
கோபங்களை உடைத்து விடுகின்றது!

ஆரம்பமும்
அது தொடரும் விதமும்
அதே பிரம்மிப்பையும் பூரிப்பையும் குதூகலத்தையும்
தந்துகொண்டிருப்பதாக
நம்பச்செய்திருக்கின்றது!

தினமும் அந்த குறுஞ்செய்திகள்
குதூகலிப்பை தருவதை
மறுக்க முடியாத வண்ணம்
மனதின் முழு பரப்பிலும் ஆதிக்கம் செய்கின்றது!

அனைத்து கர்வங்களையும்
கலைந்துவிட்டு
ஒவ்வோர் முறையும்
மண்டியிடவும் மன்னிக்கவும் செய்கின்றது!

பேரன்பை பொழிந்து
புது நேசம் தருகின்றது!
யாரும் காணாத
வாழாத பெருவாழ்வொன்றை
மனதோடு சுமந்து
வாழச்செய்கின்றது!

உலகின் அனைத்து சந்தோஷங்களும்
ஒற்றை முத்தம் வழி கிடைப்பதாய்
நம்ப வைத்திருக்கின்றது!

இதே நாளில் அன்றும்
இதே போலவே காதலிசைத்தேன்,
இன்றும் இசைத்திருக்கின்றேன்!
இனியும் இசைத்திருப்பேன்!!!
என் ஆன்மாவை இசைக்கும்
உன்னத காதலிது!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 286
Post by: Mirror on December 10, 2021, 08:31:13 PM
கண்களின் காட்சியை சாட்சிகளின் நடுவே வாழ்வின் மீட்சியாய் அடையும் நாள் இன்று---

கடவுள்  அமைத்த மேடையில் நாம் கடவுளாய் மாற போகும் படைப்பின் நாள் இன்று---

உணர்சிகளின் உச்சத்தை உடையவரிடம் உணர்த்த போகும் உண்ணத நாள் இன்று---

நான் என்ற வார்த்தை நாம் என்று மாற போகும் மாற்றத்திற்கான நாள் இன்று---

சிந்தனைகளின் பாதியை சில்லறைக்காக சிந்திக்க துவங்கும் சிரிபிற்கான நாள் இன்று---

விண்ணுலகம் செல்லும் வரை விடியலின் மீதியை பகிற துவங்கும் நாள் இன்று---

உற்றாரின் உதவிகளுக்கும் பெற்றோரின் பேறுகளுக்கும் பரிசு பெறும் நாள் இன்று---

தலைமுறையின் சந்ததியை தழைத்தோங்க உரிமை பெறும் உண்ணத நாள் இன்று ---

அவன் அவள்  என்ற  வார்த்தையை அவர்கள் என்று அழைக்க தோன்றும் உரிமையின் நாள் இன்று---

ஊடல்களின் துவக்கத்தை ஊற்றுகளின் இறுதியாக மாற்ற போகும் மகிழ்வின் துவக்கம் இன்று---