என்றாவது ஓர் நாள் என் மனம் ஏற்காத அளவுக்கு
எனக்கு நானே
ஓர் பொய்ச் சமாதானம் சொல்லி, ஆற்றுப்படுத்திக் கொள்வேன்!
நீ இப்போது என்னோடும்,
எனக்காகவும் இல்லையென்று...
வாழ்க்கை அனுபவிக்கச் செய்த,
அதியுயர் அழகான விஷயமும் நீ தான்!
அத்துமீறி அழுத்தம் தந்து சென்ற,
நிலையாமையும் நீ தான்!
இந்த இடைப்பட்ட காலத்தில்
நமக்குள் நிகழ்ந்த அத்தனைக்கும்
எந்தப் பெயரும் சூட்டி அழைக்கத் தோன்றவில்லை....
என்னில் நீயொரு நிகழ்வு!
உன்னில் நானொரு நிகழ்வு!
ஏனோ!
காலம் நம்மில் ஊன்றிக் கடத்திச் செல்கின்ற, ஏராளமான தவிப்புக்கள் தற்செயல
நிகழ்வாய் தான் மாறிப் போகிறது. ...
நிஜமாகவே நான் எதை காதலிக்கிறேன்?
உன்னையா? உன் காதலையா?
என் நியாயமான இந்தக் கேள்விக்கு
எனக்கு இன்னும் பதில் அகப்படவில்லை..
எனக்குப் புலப்படாத ஓர் புதிர் வரி நீ!
தெளிவின்மையோடு வீற்றிருக்கும்
ஓர் வாசகன் நான்!
உன்னைச் சந்திக்கும் முன்
என்னிடமிருந்த...!
என் பழைய வாசனையும்,
ஈரம் அப்பிய
என் பழைய மழை நாட்களும்,
என் திமிர் நிறைந்த
பழைய கர்வங்களும்,
மிக அழகான பழைய நானும்
இப்போது இங்கில்லை.
எனக்குப் பிடித்த
என் வெறிச்சோடிய அறையின்
நாலு சுவர்களுக்குள்ளும்...!
என்னைப் போலவே
ஆதரவற்றுத் தவிக்கிறது
என் காதலின் அசரீரி!
காதலைப் பயிலும்
வரம் தந்தாய்!
காட்சிகள் யாவற்றிலும்
காதலை நிரப்பிச் சென்றாய்!
ஏகாந்தமாய் நானிருக்குமொரு
நிலை தந்தாய்!
அது போலவே...!
ஆத்திரப்படவும்
நீ பலம் கொடுத்திருக்கலாம்!
அழுவதற்கும்
நீ பலம் கொடுத்திருக்கலாம்!
நீயற்ற இந்நாளிகையில்
நான் நிர்க்கதியாய் நிற்கையில்...!
மனதின் ஓரத்தில் கசியும்
ரணமான அழுகையை அடக்கிச் சாக,
நீ என்னை பக்குவப்படுத்தியிருக்கலாம்