Author Topic: பகவத்கீதை  (Read 17096 times)

Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #15 on: April 20, 2012, 12:25:04 PM »
40. நாந்தோऽஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப
ஏஷ தூத்தேஸத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா   

பரந்தப-எதிரிகளை சுடுபவனே! மம திவ்யாநாம் விபூதீநாம்-என் திவ்ய மகிமைகளுக்கு, ந அந்த: அஸ்தி-முடிவில்லை, விபூதே:-பெருமைகளில், ஏஷ: விஸ்தர: து-இந்த விரிவும் கூட,
உத்தேஸத: மயா ப்ரோக்த:-ஓரளவுதான் என்னால் கூறப்பட்டது.

பொருள் : பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

கோழி ஒன்று தன் குஞ்சுக்கு உணவு தேடும் விதத்தைச் சிறிது காட்டித் தருகிறது. அவ்வழியைப் பின்பற்றிப் பின்பு தனக்குத் தேவையாயுள்ள உணவை யெல்லாம் அக்குஞ்சே தேடிக்கொள்கிறது. அங்ஙனம் ஈசுவர மஹிமையைக் காண்பதற்கான வழியை பகவான் புகட்டியருள்கிறார். அதன்படி அனுஷ்டிக்கும் சாதகன் தன் அறிவுக்கு எட்டிய அளவு ஈசுவரனை அறிகிறான்.

ஈசுவரனை யாரால் முற்றிலும் அறிய முடியும்? அந்தப் பாக்கியம் நமக்கு இல்லை. நாம் அவனைப் பூரணமாக அறிய வேண்டுமென்பதுமில்லை. அவனைக் கண்டு, அவன் ஒருவனே உண்மைப் பொருள் என்று உணர்ந்தால் போதுமானது. ஒருவன் புண்ணிய நதியாகிய கங்கைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். அதைக் கங்கோத்திரியிலிருந்து கங்கா சாகரம் வரையில் தரிசிக்கவும் ஸ்பர்சிக்கவும் வேண்டியதில்லை. ஓர் இடத்தில் அதைத் தொட்டு நீராடினாலே அவன் கிருதார்த்தனாகிறான்.

ஈசுவரனுடைய மகிமையைச் சிறிதாவது சுவானுபவத்தில் அறிந்துகொண்டவன் பிறகு உலகை எங்ஙனம் பொருள்படுத்துகிறான்? விடை பகவானுடைய வாக்கியத்திலிருந்தே வருகிறது :

41. யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ऽஸஸம்பவம்   

யத் யத் விபூதிமத்-எதெது பெருமையுடையது, ஸத்த்வம்-உண்மையுடையது, ஸ்ரீமத் -அழகுடையது, ஊர்ஜிதம் வா-வலிமையுடையது, தத் தத்-அது எல்லாம், மம தேஜோம்ऽஸ ஸம்பவம் ஏவ-எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது, த்வம் அவகச்ச-நீ புரிந்து கொள்.

பொருள் : எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.

சூரிய கிரணம் எங்கும் வியாபித்து, எல்லாப் பொருள்களையும் விளக்குகிறது. ஈசுவரனோ எல்லாப் பொருளுமாய் அதனதன் வாயிலாகத் தன் பெருமையையும், சிறப்பையும், அழகையும், வல்லமையையும் விளக்குகிறான். ஏதேனும் ஒரு பொருள் அல்லது உயிர் ஏதேனும் ஒரு விதத்தில் மனதைக் கவர வல்லதாயின், அத்தகைய மாண்பு ஈசுவரனுடையதே என்றும், அது அவ்வடிவத்தின் வாயிலாக மிளிர்கிறது என்றும் அறிந்து கொள்க.

பகவானது சாகாரநிலை அதாவது ரூபத்தோடு கூடிய நிலையென்றால் என்ன என்பது உனக்குத் தெரியுமா? நீர்ப்பரப்பின் மேல் தோன்றும் குமிழிகள் போன்றது அந்நிலை. சிதாகாசத்தில் பலவித ரூபங்கள் எழுவதை உண்மையாகக் காணலாம். பகவத் அவதாரமும் அவ்வித ரூபங்களில் ஒன்று.

அப்படியாயின் அகிலாண்டங்களிலுமுள்ள உருவத் தொகுதி தானே கடவுள்? இக்கேள்விக்கு விடை வருகிறது :

42. அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்திதோ ஜகத்   

அதவா-அன்றி, அர்ஜுன-அர்ஜுனா, ஏதேந பஹுநா ஜ்ஞாதேந தவ கிம்-இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது? அஹம் இதம் க்ருத்ஸ்நம் ஜகத்-நான் இந்த உலகனைத்தும், ஏகாம்ஸேந-எனது சக்தியின் ஓர் அம்சத்தால், விஷ்டப்ய ஸ்தித:-தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

பொருள் : அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

வல்லவன் ஒருவனை ஒரு கோணிப்பையில் கட்டி ஓடவிட்டால் அவன் தனது முழு ஆற்றலையும் அப்பொழுது காட்ட முடியாது. பல வடிவங்கள் வாயிலாக பகவான் தமது மகிமையை விளக்குகிறார் எனினும், அவ்விளக்கம் அரைகுறையானதே. இனி அலையாகப் பரிணமித்திருப்பது சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதியே. அங்ஙனம் அகிலாண்டமாய்ப் பரிணமித்திருப்பது ஈசுவரனுடைய ஒரு சிறு கலை மட்டுமே. அவனுடைய சொரூபத்தின் பெரும் பகுதி தோற்றத்துக்கு அப்பால் பரம்பொருளாய் உள்ளது.

கடவுள் உருவமற்றவரும், உருவமுள்ளவரும் ஆவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவரும் ஆகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரேதான் முற்றிலும் அறிவார்.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
விபூதியோகோ நாம தசமோऽத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின் கண் விபூதி யோகம் என்ற பத்தாம் அத்தியாயம்.


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #16 on: April 20, 2012, 12:28:04 PM »
 பதினோன்றாம் அத்தியாயம்
 
விச்வரூபதர்சன யோகம்

இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.

பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். அர்ஜுனனது வேண்டுதல் 1-4 -ஞானக்கண்ணை வழங்குதல் 5-8 -அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14 -தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31 -கால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34 -அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44 -அர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46 -அர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49 -மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51- வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55.

அர்ஜுந உவாச

1. மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விகதோ மம   

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மத் அநுக்ரஹாய-என் மீது அருள் பூண்டு, த்வயா அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம்-உன்னால் ஆத்ம ஞானம் என்னும், பரமம் குஹ்யம்-மிக உயர்ந்ததும் மறைத்துக் காப்பாற்றத் தக்கதுமான, யத் வச: உக்தம்-எந்த உபதேசம் கூறப் பட்டதோ,
தேந மம-அதனால் என்னுடைய, அயம் மோஹ: விகத:-இந்த மோகம்/மயக்கம் தீர்ந்து போயிற்று.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.

தம்முடைய ஒரு சிறு அம்சம் இவ்வுலகனைத்தும் ஆனது என்றும், தாம் அகிலாண்டத்தையும் தாங்கிக் கொண்டு அதற்கப்பாலும் இருப்பதாக பகவான் சொன்னார். அதைக் கேட்ட அர்ஜுனன் தான் அந்த சொரூபத்தை நேரே சாக்ஷõத்கரிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டான்.

அவன் பகர்ந்ததன் உட்கருத்தாவது :
என்னைப்பற்றியும், உலகைப்பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இது பரியந்தம் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமேயாம். தாம் உபதேசித்தருளிய பரதத்துவ போதத்தால் அந்த மோஹம் அகன்று போயிற்று. மேலும் :

2. பவாப்யயௌ ஹி பூதாநாம் ஸ்ருதௌ விஸ்தரஸோ மயா
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்   

ஹி-ஏனெனில், கமலபத்ராக்ஷ-தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், மயா த்வத்த:-என்னால் உங்களிடமிருந்து, பூதாநாம் பவ அப்யயௌ-உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும், விஸ்தரஸ: ஸ்ருதௌ-விரிவாகக் கேட்டேன், ச அவ்யயம் மாஹாத்ம்யம் அபி-அவ்வாறே அழிவற்ற பெருமையும் (கேட்கப் பட்டது).

பொருள் : உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.

பகவான் சுருக்கமாகச் சொன்னேன் என்றதை அர்ஜுனன் விரிவாகச் சொல்லப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறான். இருவர் கருத்தும் அவரவர் நிலைமையில் உண்மையே.

அனைத்துக்கும் பகவான் முதற் காரணமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒன்றிலும் கட்டுப்படுவதில்லை. நடைமுறைகளனைத்துக்கும் விளக்கம் அவரிடத்திருந்து பெறலாம். இத்தனையும் உண்டு பண்ணியும் அவரிடத்துத் தேய்வு ஒன்றுமில்லை. இவை யாவும் அவருடைய மஹிமையாம்.

3. ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புரு÷ஷாத்தம   

பரமேஸ்வர-பரமேசுவரா, புரு÷ஷாத்தம-மனிதர்களில் உயர்ந்தவனே, த்வம் ஆத்மாநம் யதா ஆத்த-நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ, ஏதத் ஏவம்-அது அவ்வாறே, தே ஐஸ்வரம் ரூபம்-உன்னுடைய ஈசுவர ரூபத்தை, த்ரஷ்டும் இச்சாமி-காண விரும்புகிறேன்.

பொருள் : பரமேசுவரா, புரு÷ஷாத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.

எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவாகிய அவரிடம் ஞானம், ஐசுவரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்திருக்கின்றன. பகவான் என்னும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். ஆறுவித தெய்வ சம்பத்துக்கள் அவரிடம் இருக்கின்றன. அத்தனை மஹிமைகளோடு கூடிய அவரைக் காண அர்ஜுனன் விரும்பியது இயல்பே.

4. மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ
யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ஸயாத்மாநமவ்யயம்   

ப்ரபோ-பிரபுவே, மயா தத் த்ரஷ்டும் ஸக்யம் இதி-என்னால் அதை பார்க்க முடியும் என்று, யதி மந்யஸே-நீ கருதுவாயெனில், யோகேஸ்வர:-யோகேசுவரா, தத:-அப்போது, த்வம் ஆத்மாநம் அவ்யயம்-நீ உன்னுடைய அழிவற்ற ஆத்மாவை, மே தர்ஸய-எனக்குக் காட்டுக.

பொருள் : இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.

யோகத்துக்கும் யோகிகளுக்கும் தலைவன் யோகேசுவரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்ச கிருத்தியங்கட்கும் தலைவன் இறைவன். காட்சியளித்தல் அல்லது அருளல் வேண்டுமென்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான். ஈசுவரனது விசுவரூபத்தைக் காணவேண்டுமென்பது அவன் விருப்பம். ஞான தர்சனம் கொடுத்தருள யோகேசுவரனுக்கு இயலும்.

தன்னுடைய தீர்மானத்துக்கு முக்கிய ஸ்தானம் தராது, ஈசுவரனுடைய அனுக்கிரகத்துக்கு முதன்மை கொடுப்பது பக்தனுடைய இயல்பு. மனிதன் எதற்குத் தகுதியுடையவன் அல்லது தகுதியற்றவன் என்று தான் அறிந்துகொள்வதைவிட பகவானே அதை உள்ளபடி அறிகிறார்.

இங்ஙனம் அர்ஜுனனால் விண்ணப்பிக்கப் பெற்றதும் :

ஸ்ரீ பகவாநுவாச

5. பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோऽத ஸஹஸ்ரஸ:
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸதஸ: ஸஹஸ்ரஸ:-பல நூறாகவும், பல்லாயிரமாகவும், நாநாவிதாநி ச-பல வகை, நாநாவர்ண ஆக்ருதீநி ச-பல நிறம் அளவு பலவாக, அத-இப்போது, திவ்யாநி ரூபாணி பஸ்ய பார்த-திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா!

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பல நூறாகவும், பல்லாயிரமாகவும், வகை பல, நிறம் பல, அளவு பலவாகும் என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.

தெய்வத்தோடு சம்பந்தப்படாதவைகள் போல் தென்படுபவைகள் உண்மையில் தெய்வப் பெற்றியுடைத்திருக்கின்றன. ஆகையால் அவைகள் திவ்வியமானவைகள் எனப்படுகின்றன. வடிவத்திலும் நிறத்திலும் தன்மையிலும் வேறுபட்டு, எண்ணிக்கையில் அடங்காதிருப்பவைகளெல்லாம் ஒரு பொருளின் எண்ணிறந்த தோற்றங்கள் என்பது இனி விளங்கும்.

ஒவ்வொரு வஸ்துவும் நாராயணன். மனிதன் நாராயணன்; ஜீவப் பிராணி நாராயணன். ரிஷியும் நாராயணன்; போக்கிரியும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணன் பல விதமான திருவிளையாடல்களைச் செய்தருள்கின்றான். எல்லாப்பொருள்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும் அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன.

6. பஸ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஸ்விநௌ மருதஸ்ததா
பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி பாரத   

பாரத-அர்ஜுனா! ஆதித்யாந் வஸூந் ருத்ராந்-ஆதித்யர்களை, வசுக்களை, உருத்திரர்களை,
அஸ்விநௌ மருத:-அசுவினி தேவரை, மருத்துக்களை, பஸ்ய-பார், ததா-அவ்வாறே, அத்ருஷ்ட பூர்வாணி-இதற்கு முன் கண்டிராத, பஹூநி ஆஸ்சர்யாணி பஸ்ய-பல ஆச்சரியங்களைப் பார்.

பொருள் : ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.

நீ இதுவரையில் கண்டிருந்தது மிகமிகக் குறைந்தது. மேலும் காணக்கிடப்பது கணக்கில் அடங்காதது என்பதை நீ இப்பொழுது உணர்வாய். அதுமட்டுமல்ல :

7. இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஸ்யாத்ய ஸசராசரம்
மம தேஹே குடாகேஸ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி   

குடாகேஸ-அர்ஜுனா, அத்ய இஹ மம தேஹே-இன்று, இங்கே என்னுடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், க்ருத்ஸ்நம் ஜகத்-உலகம் முழுவதும், அந்யத் ச-அவ்வாறே மேற்கொண்டு, யத் த்ரஷ்டும் இச்சஸி-நீ எதைக்காண விரும்பினும், பஸ்ய-காண்.

பொருள் : அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப்பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.

பாண்டவர்கள் கௌரவர்களை ஜயிப்பதா அல்லது கௌரவர்கள் பாண்டவர்களை ஜயிப்பதா? இதில் எது உசிதம் என்று தனக்குத் தெரியவில்லையென்று அர்ஜுனன் இரண்டாம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் சொன்னான். அதுபோன்ற மர்மங்களைத் தெரிந்துகொள்ள விருப்ப மிருந்தாலும் அவைகளைத் தெரிந்துகொள்க. விசுவரூபதர்சனத்தில் அண்டங்களின் அமைப்பும், நடைமுறையும் மற்றும் யாவும் உள்ளபடி விளங்கும்.

ஆனால் அக்காட்சி ஊனக்கண்ணால் காணக் கூடியதா? இதற்கு விடை வருகிறது :

8. ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா
திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம்   

து அநேந ஸ்வசக்ஷúஷா-ஆனால் இயற்கையான இக்கண்களால், மாம் த்ரஷ்டும் ஏவ ந ஸக்யஸே-என்னை பார்க்க முடியாது, தே திவ்யம் சக்ஷú: ததாமி-உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன், மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.

பொருள் : உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.

பிராகிருத கண்கொண்டு பிரகிருதியைத்தான் காணமுடியும். அதிலேயும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூர திருஷ்டிக் கண்ணாடியின் உதவிவேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைகொண்டே காணலாம். அங்ஙனம் ஈசுவரனது விசுவரூபத்தைக் காண்பதற்கு ஞானக்கண் தேவை. நெறியான வாழ்க்கை யுடையவர்க்கு அது இறைவனது அருளால் உண்டாகிறது. பஞ்சேந்திரியங்களின் துணையின்றியே ஞானக் கண்ணானது அவ் இந்திரியங்களின் தொழில்களைச் செய்கிறது. அதற்குமேல் ஈசுவர மஹிமையை வேண்டியவாறு தெரிந்து கொள்ளவும் ஞானக் கண்ணுக்கு இயலும். தெளிந்த மனமே ஞானக் கண்ணாகிறது.

பெரியோர்கள் பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். ஸ்ரீமதி ராதை ஒரு சமயம் ஸகிகாள், நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கிறேன் என்றான். அதற்குக் கோப ஸ்திரீகள், தோழி, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்களில் இட்டுக்கொண்டிருக்கிறாய். ஆதலால்தான் அப்படித் தெரிகின்றது என்றார்கள்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போன்று அந்த விசுவரூபக் காட்சியை ஸஞ்ஜயனும் வியாசபகவானும் அதே சமயத்தில் காண்கிறார்கள். தான் கண்டபடி ஸஞ்ஜயன் அதை திருதராஷ்டிரருக்கு விளக்குகிறான்.

ஸஞ்ஜய உவாச

9. ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஸ்வரோ ஹரி:
தர்ஸயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஸ்வரம்   

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், ராஜந்-அரசே, மஹாயோகேஸ்வர: ஹரி:-யோகத்தலைவனாகிய ஹரி, ஏவம் உக்த்வா தத:-இவ்வாறு உரைத்துவிட்டு அப்பால், பார்தாய-பார்த்தனுக்கு, பரமம் ஐஸ்வரம் ரூபம்-மிக உயர்ந்த தன் கடவுள் வடிவை, தர்ஸயாமாஸ-காட்டினான்.

பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.

10. அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஸநம்
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்   

அநேக வக்த்ர நயநம்-(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது, அநேக அத்புத தர்ஸநம்-பல அற்புதக் காட்சிகளுடையது, அநேக திவ்ய ஆபரணம்-பல திவ்ய ஆபரணங்கள் பூண்டது, திவ்ய அநேக உத்யத ஆயுதம்-பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது.

பொருள் : (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.

உலகெலாம் அவன் சொரூபமாதலால் அவனுக்கு முகங்களும் கண்களும் கணக்கில் அடங்காதவைகள். மனிதனது சிற்றறிவுக்கு எட்டாத அரும்பெரும் செயல்கள் அவனால் நடைபெறுகின்றன. வாதலால் அவனிடத்து அற்புத தர்சனங்கள் நிறைந்துள்ளன. அழகுக்குப் பிறப்பிடம் அவன். பிரகிருதியிலும் அதற்கப்பாலும் உள்ள செந்தரியம் யாவும் அவனுடையவைகள். அதை முன்னிட்டு அவன் தெய்விக ஆபரணங்களை அணிந்தவன் எனப்படுகிறான். தேவகாரியம் எவ்விதத்திலும் நடைபெற்று விடுகிறது. யாரும் அதற்கு இடைஞ்சல் செய்ய முடியாது. அவன் ஏந்தியிருக்கும் திவ்விய ஆயுதங்கள் பல அத்திறனை விளக்குகின்றன.

11. திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்
ஸர்வாஸ்சர்யமயம் தேவமநந்தம் விஸ்வதோமுகம்   

திவ்ய மால்ய அம்பரதரம்-திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது, திவ்ய கந்த அநுலேபநம்-திவ்ய கந்தங்கள் பூசியது, ஸர்வ ஆஸ்சர்ய மயம்-எல்லா வியப்புக்களும் சான்றது, அநந்தம்-எல்லையற்றது, விஸ்வதோமுகம் தேவம்-எங்கும் முகங்களுடைய தேவரூபம்.

பொருள் : திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.

இயற்கையை உடலாய் ஏற்றுக்கொண்டு அதனுள் இறைவன் உயிராய் ஒளிருமிடத்து இவ்வருணனைகளெல்லாம் ஊனக்கண்ணால் காண்பவர்களுக்கே பொருத்த முடையவைகளாகின்றன. பின்பு, ஞானக்கண் கொண்டு காணுமிடத்து தெய்வப் பெற்றியே யாண்டும் பொலியும்.

12. திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா
யதி பா: ஸத்ருஸீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:   

திவி-வானத்தில், ஸூர்யஸஹஸ்ரஸ்ய-ஆயிரம் சூரியன்கள், யுகபத்-ஒரே நேரத்தில், உத்திதா-உதயமானால், பா: யதி பவேத்-பிரகாசம் எப்படி இருக்குமோ, ஸா-அந்த பிரகாசம்,
தஸ்ய மஹாத்மந:-அந்த மகாத்மாவின், பாஸ-ஒளிக்கு, ஸத்ருஸீ-நிகராக, ஸ்யாத்-இருக்கலாம்.

பொருள் : வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.

தெரிந்த ஒன்றை உபமானமாகக் கொண்டுதான் தெரியாத ஒன்றை ஏகதேசம் அறிந்துகொள்ளலாம். காணாதவர்க்கு ஈசனது காந்தி ஒன்றும் விளங்காது. உண்மையில் அவன் அவனுக்கே ஒப்பாவான். ஒருமிக்க உதயமான ஆயிரம் ஞாயிறுகளோடு ஒப்பிடுவதே அவன் ஒப்பில்லான் என்பதை விளக்குகிறது. ஆதலால் அவன் ஒருவனே மஹாத்மா என்னும் சொல்லுக்கு இலக்காகிறான்.

13. தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா
அபஸ்யத்தேவதேவஸ்ய ஸரீரே பாண்டவஸ்ததா   

பாண்டவ: ததா-பாண்டவன் (அர்ஜுனன்) அப்போது, அநேகதா ப்ரவிபக்தம்-பல பகுதிப்பட்டதாய், க்ருத்ஸ்நம் ஜகத்-வையகம் முழுவதும், தேவதேவஸ்ய-அந்தத் தேவ தேவனுடைய, தத்ர ஸரீரே-அந்த உடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், அபஸ்யத்-கண்டான்.

பொருள் : அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.

வேற்றுமையில் ஒற்றுமை குடி கொள்வது இயற்கையின் அமைப்பு. வானவர், மக்கள், விலங்கு, பறவை, நிலைத்திணை ஆகிய எண்ணிறந்த இனங்களாக உயிர்கள் வடிவெடுக்கின்றன. இவையாவும் சேதனத்தின் பல்வேறு தோற்றங்கள். மண், உலகு, கீழ் உலகு, மேல் உலகு ஆகிய இவையாவும் போகத்துக்குரிய இடங்களாகின்றன. போகப் பொருள்கள் பல இவ்வுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. இவை யாவும் உயிர்க்குயிராய், அறிவுக் கறிவாய் உள்ள இறைவனில் அடங்கியிருப்பது ஒற்றுமையைக் காட்டுகிறது.

14. தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநஞ்ஜய:
ப்ரணம்ய ஸிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத   

தத: ஸ: தநஞ்ஜய:-அப்போது அந்த தனஞ்ஜயன், விஸ்மய ஆவிஷ்ட:-பெரு வியப்பு அடைந்து, ஹ்ருஷ்ட ரோமா:-மயிர் சிலிர்த்து, தேவம்-அக்கடவுளை, ஸிரஸா ப்ரணம்ய-தலை குனிந்து வணங்கி, க்ருத அஞ்ஜலி:-கைகளைக் கூப்பிக் கொண்டு, அபாஷத-கூறினார்.

பொருள் : அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.

தேவதர்சனம் மனதின்கண் பெரிய மாறுதலை உண்டுபண்ணுகிறது. அது அகத்தும் புறத்தும் சில அறிகுறிகளுடன் பரிணமிக்கிறது. வியப்படைதல் உள்ளத்தின் இயல்பு. உரோமம் சிலிர்த்தல், தலைவணங்குதல், கைகூப்புதல் முதலியன உடலின் கண் தோன்றும் பரவசச் செயல்களாம். இனி, மன நிறைவு நிறைவுமொழியாய்ப் பொங்கி வழிகிறது. அது வருமாறு :

அர்ஜுந உவாச

15. பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந்
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம்
ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந்   

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், தேவ! தவ தேஹே-தேவனே, உன் உடலில், ஸர்வாந் தேவாந்-எல்லாத் தேவர்களையும், ததா பூதவிஸேஷஸங்காந்-அவ்வாறே அநேகப் பிராணி வர்க்கங்களையும், கமல ஆஸநஸ்தம்-தாமரை மலரில் வீற்றிருக்கும், ஈஸம் ப்ரஹ்மாணம்-ஈசனாகிய பிரமனையும், ஸர்வாந் ருஷீந்-எல்லா ரிஷிகளையும், திவ்யாந் உரகாந் ச-தெய்வீக சர்ப்பங்களையும், பஸ்யாமி-காண்கிறேன்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.

உயிர்களுக்கெல்லாம் தலைவனாயிருப்பதால் நான்முக பிரம்மா ஈசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் மஹாவிஷ்ணுவின் உந்திக் கமலத்தில் வீற்றிருப்பவர். சரம் அசரம் ஆகிய உயிர்த் தொகுதிகள் யாவும் விசுவ ரூபத்தில் அடங்கப்பெற்றிருக்கின்றன. வாஸுகி முதலிய ஸர்ப்பங்களும் வசிஷ்டர் முதலிய ரிஷிகளும் அங்குத் தென்படுகின்றனர்.

16. அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம்
பஸ்யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம்
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம்
பஸ்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப   

விஸ்வேஸ்வர-எல்லாவற்றுக்கும் ஈசனே, அநேகபாஹூ உதர வக்த்ர நேத்ரம்-பல தோளும், வயிறும், வாயும், விழிகளுமுடைய, அநந்த ரூபம்-எல்லையற்ற வடிவாக, த்வாம் பஸ்யாமி-உன்னைக் காண்கிறேன், விஸ்வரூப!-எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே, தவ அந்தம் ந பஸ்யாமி-உன்னுடைய முடிவேனும் நான் பார்க்கவில்லை, மத்யம் ந-இடையும் காணவில்லை, புந: ஆதிம் ந-மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை.

பொருள் : பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.

தோன்றிய யாவும் அவனேயாகி அவைகளுக்கு அப்பாலும் அவனே இருக்கிறான் என்பது பொருள்.

17. கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச
தேஜோராஸிம் ஸர்வதோ தீப்திமந்தம்
பஸ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத்
தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்   

கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச-மகுடமும், கதையும், சக்கரத்தோடு, ஸர்வத: தீப்திமந்தம் தேஜோராஸிம்-எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும், தீப்த அநல அர்க த்யுதிம்-தழல்படு தீயும் ஞாயிறும் போல, துர்நிரீக்ஷ்யம்-பார்க்கக் கூசுகின்ற, ஸமந்தாத்-எங்கும் நிறைந்ததுமாக,
அப்ரமேயம் த்வாம் பஸ்யாமி-அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன்.

மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.

சொப்பனத்தில் காணும் ஜோதி ஊனக் கண்ணுக்குத் தட்டுப்படுதல் இல்லையெனினும் அதில் கண் கூசுவது போன்றிருக்கிறது. அதிலும் பரந்த பாங்கில் ஞானக் கண்ணுக்கும் கூசுதல் உண்டாகிறது. அவ்வொளி உள்ளத்தை உறுதிப்படுத்தும் தன்மையது. ஞானக்கண் மற்ற இந்திரியங்களைவிடப் பன்மடங்கு தெளிவுடையது எனினும், அதைக்கொண்டும் விசுவ ரூபத்தை முழுதும் அளக்க முடியாது. ஆகையால் அது அப்ரமேயம் எனப்படுகிறது.

சத்வ குணத்தின் நிறம் தூவெண்மை. ஆத்ம பிரகாசம் அதன்கண் தோயுமிடத்து அது சுடர்விட்டெரியும் சூரியாக்கினி போன்று மிளிர்வது இயல்பு.

இத்தகைய காட்சியை அடையப்பெற்ற அர்ஜுனன் சித்தாந்தப்படுத்துவது யாது என்றால்:

18. த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்
த்வமவ்யய: ஸாஸ்வததர்மகோப்தா
ஸநாதநஸ்த்வம் புரு÷ஷா மதோ மே   

அவ்யயம்-அழிவிலாய், பரமம் வேதிதவ்யம்-அறியத்தக்கதில் சிறந்தது, த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம், அக்ஷரம்-கேடிலாய், த்வம் ஸாஸ்வத தர்ம கோப்தா-நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய், த்வம் ஸநாதந: புருஷ:-சநாதன புருஷன் நீயே, மே மத:-எனக் கொண்டேன்.

பொருள் : அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; சநாதன புருஷன் நீயெனக் கொண்டேன்.

பகவானை அறிந்தவன் பரத்துக்கு உரியவன் ஆகின்றான். ஆதலால் பகவான் ஒருவரே சாதகன் ஒருவனால் அறியத்தகுந்தவர். சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று உலகம் யாவுக்கும் இருப்பிடம் பரமாத்மா. உலகம் அழியும் பொழுது அவர் மாறாதிருக்கிறார். அவருடைய சந்நிதான விஷேத்தால் தர்மம் - இயற்கையின் நடைமுறை-கோணாது நிகழ்கிறது. இவை யாவும் இப்பொழுது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷமாகின்றன. மேலும் அவன் அறிவதாவது :

19. அநாதிமத்யாந்தமநந்தவீர்ய
மநந்தபாஹும் ஸஸிஸூர்யநேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்தஹுதாஸவக்த்ரம்
ஸ்வதேஜஸா விஸ்வமிதம் தபந்தம்   

த்வம் அநாதி மத்ய அந்த-ஆதியும் நடுவும் அந்தமுமில்லாதவனாகவும், அநந்தவீர்யம்-வரம்பில்லாத வீரனாகவும், அநந்தபாஹும்-கணக்கிலாத் தோளுடையவனாகவும், ஸஸி ஸூர்ய நேத்ரம்-ஞாயிறுந் திங்களும் கண்களாகவும், தீப்த ஹுதாஸ வக்த்ரம்-கொழுந்து விட்டெறியும் தீ போன்ற வாயுடன் கூடியவனாகவும், ஸ்வதேஜஸா-தம்முடைய வெப்பத்தினால், இதம் விஸ்வம் தபந்தம் பஸ்யாமி-இந்த உலகத்தை எரிப்பவனாகவும் காண்கிறேன்.

பொருள் : ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.

காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்படாமையினால் அவருக்கு ஆதி நடு அந்தமில்லை. உலகத்தைப் படைத்துக் காத்துத் துடைப்பது அவருக்கு விளையாட்டாக நடைபெறுவதாதலால் அவர் அனந்த வீரியமுடையவர். உலகத்திலுள்ள கைகளையெல்லாம் கொண்டு அவர் தமது காரியத்தைச் செய்துமுடிப்பதால் அவர் கணக்கற்ற கைளையுடையவர் என்று சொல்லப்படுகிறார். இந்திரியங்களுக்குப் பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்மா. சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகள் பெற்றுள்ள ஒளி பரமாத்மாவினிடத்திருந்து பிரதிபலிக்கின்ற ஒளிகளாம். அகிலாண்டத்திலும் ஆத்ம பிரகாசம் ஜ்வலிப்பதால் உபசாரமாக ஞாயிறு திங்கள் கண்களென்றும், தீ வாயென்றும் வர்ணிக்கப்படுகின்றன. விறகுக் கட்டையில் தீ வியக்தமாவது போன்று விசுவத்தின் வாயிலாகப் பரம்பொருள் வியக்தமாகிறது.

20. த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேந திஸஸ்ச ஸர்வா:
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்
லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்   

மஹாத்மந்-மகாத்மாவே! த்யாவா ப்ருதிவ்யோ:-வானத்துக்கும் பூமிக்கும், இதம் அந்தரம் - இந்த இடைவெளியும், ஸர்வா: திஸ: ச-எல்லாத் திசைகளும், த்வயா ஏகேந ஹி வ்யாப், தம்-உன் ஒருவனாலேயே நிறைந்திருக்கிறது, தவ இதம் அத்புதம் உக்ரம் ரூபம்-உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தை, த்ருஷ்ட்வா-கண்டு, லோகத்ரயம் ப்ரவ்யதிதம்-மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.

பொருள் : வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளான் என்பது இப்பொழுது அர்ஜுனனுக்கு பிரத்யக்ஷமாக விளங்குகிறது. இனிமையும் பயங்கரமும் ஆகிய இரண்டும் இறைவன்பால் உள. அவைகளுள் ஈண்டு பயங்கரக் காட்சியை பார்த்தன் பார்க்கிறான். அவனது மனப்பான்மையே அதற்குக் காரணம். பயங்கரமான யுத்தக்காட்சி தன்னுடைய சிருஷ்டியென்று முதலில் எண்ணினான். உலகைத் திருத்தியமைக்கத் தெய்வமே அத்தகைய உக்கிர வடிவெடுக்க வல்லவனென்று இப்பொழுது உணர்கிறான்.

வெற்றி யாருடையது என்ற ஐயம் அர்ஜுனனுக்கு இருந்தது (அத். 2; சு.6) அதை அகற்றுதற்கான காட்சியை பகவான் தருகிறார். பாண்டவர்களுக்கே வெற்றி என்பது விளங்குகிறது. அதைக் காணலுற்ற குந்தி மைந்தன் கூறுகிறான் :

21. அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஸந்தி
கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:   

அமீ ஸுரஸங்கா: ஹி-இந்த வானவர் கூட்டமெல்லாம், த்வாம் விஸந்தி-நின்னுள்ளே புகுகின்றது, கேசித் பீதா: ப்ராஞ்ஜலய: க்ருணந்தி-சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர், மஹர்ஷி ஸித்தஸங்கா:-மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார், ஸ்வஸ்தி இதி உக்த்வா-மங்களம் உண்டாகட்டும் என்று கூறி, புஷ்கலாபி: ஸ்துதிபி:-வண்மையுடைய புகழுரைகள் சொல்லி, த்வாம் ஸ்துவந்தி-உன்னை புகழ்கின்றார்.

பொருள் : இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.

நர வடிவெடுத்து வந்துள்ள வசுக்கள் முதலிய தேவகணங்கள் தங்கள் பூலோக லீலையை முடித்துக்கொண்டு பகவானிடத்து ஒடுங்குகின்றனர். பூ பாரம் ஒழிகிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் அவர்கள் மௌனமாக மறைகிறார்கள். பகவானுடைய உக்கிர விளையாட்டை ஒருவாறு அறிந்துகொண்ட சிலர் சிரசின்மீது கைகூப்பி நடுங்கி வணங்குகின்றனர். அச்சத்தால் நிறைமொழி யொன்றும் இயம்ப அவர்களுக்கு இயலவில்லை. உலகுக்குக் கேடுகள் பல வரப்போகின்றனவென்று குறிப்பால் அறிந்த நாரதர் போன்ற மஹரிஷிகளும் கபிலர் போன்ற சித்தர்களும் சம்பூரண ஸ்தோத்திரங்களால், சொற்சுவையும் பொருட் சுவையும் நிறைந்த புகழ்களால் உலகுக்கு மங்களம் உண்டாகுக என்று போற்றினார்கள். உடலில் உள்ள கேடுகளை நீக்குதற் பொருட்டு நோய் வருவது போன்று உலகில் உள்ள கேடுகளை நீக்குதற்பொருட்டு இறைவன் இத்தகைய ஸம்ஹாரச் செயலைச் செய்க. அதினின்று நன்மை விளைக என்ற கருத்தடங்கிய பாசுரங்களைப் பேரறிஞர் பாடிப் போற்றினார்கள். இறைவனது ஆணையால் நடைபெறும் உலகச் செயல்களில் பொருள் படாதவை ஒன்றுமில்லையென்பது பேரறிஞருக்கு விளங்குகிறது.

22. ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விஸ்வேऽஸ்விநௌ மருதஸ்சோஷ்மபாஸ்ச
கந்தர்வயக்ஷõஸுரஸித்தஸங்கா
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்சைவ ஸர்வே   

யே ருத்ராதித்யா-எந்த ருத்திரர்கள் ஆதித்தியர்கள், வஸவ: ச-வசுக்களும், ஸாத்யா:-ஸாத்யர்,
விஸ்வே-விசுவேதேவர், அஸ்விநௌ ச-அசுவினி தேவரும், மருத: ச-மருத்துக்கள், உஷ்மபா: ச-உஷ்மபர், கந்தர்வ யக்ஷ அஸுர ஸித்த ஸங்கா-கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும், ஸர்வே ஏவ விஸ்மிதா: ச-எல்லோரும் வியப்புடன், த்வாம் வீக்ஷந்தே-உன்னைப் பார்க்கிறார்கள்.

பொருள் : ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.

ஊஷ்மபர் என்பது உஷ்ணமாயிருப்பதைப் பானம் செய்பவர்கள் என்று பொருள்படுகிறது. பித்ரு தேவர்கள் அங்ஙனம் அருந்துதலில் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய தேவகணங்களும் பகவானுடைய விசுவ ரூபத்தை முழுதும் தெரிந்துகொள்ள இயலாதவர்களாயிருக்கிறார்கள். தங்கள் அறிவுக்கு எட்டியவளவு அவர்கள் அந்த ரூபத்தைக் கண்டு வியந்து நிற்கிறார்கள்.

23. ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம்
மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்
பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம்
த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்   

மஹாபாஹோ-பெருந்தோளாய், பஹு வக்த்ர நேத்ரம்-பல வாய்களும், விழிகளும், பஹு பாஹூ ஊரு பாதம் பஹூதரம்-பல கைகளும், பல கால்களும் பல வயிறுகளும், பஹுதம்ஷ்ட்ராகராலம்-பல பயங்கரமான பற்களுமுடைய, தே மஹத் ரூபம் த்ருஷ்ட்வா-உன் பெரு வடிவைக் கண்டு, லோகா: ப்ரவ்யதிதா:-உலகங்கள் நடுங்குகின்றன, ததா அஹம்-யானும் அங்ஙனமே.

பொருள் :  பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.

தன் மனநிலையையே ஒருவன் உலகின்கண் காண்கிறான். பகவானது விசுவரூபத்தையும் அவரது பயங்கரச் செயலையும் முன்பு அர்ஜுனன் கண்டு அறிந்தவன் அல்லன். அதை அவன் இப்பொழுது முதல் கண்டு கலங்குகிறான். உலகிலுள்ள மற்ற உயிர்களும் கலங்குவதாக அவன் காட்சியில் படுகிறது. அவனது நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் கலக்கமேயாம். ஏன் அவனுக்கு அச்சம் ஏற்பட்டதெனின் அதற்கு விடை அவனது வாயினின்று வருகிறது :

24. நப:ஸ்ப்ருஸம் தீப்தமநேகவர்ணம்
வ்யாத்தாநநம் தீப்தவிஸாலநேத்ரம்
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா
த்ருதிம் ந விந்தாமி ஸமம் ச விஷ்ணோ   

ஹி விஷ்ணோ-ஏனெனில் விஷ்ணுவே! நப:ஸ்ப்ருஸம்-வானைத் தீண்டுவது, தீப்தம் அநேகவர்ணம்-பல வர்ணங்களுடையது, வ்யாத்தாநநம்-திறந்த வாய்களும், தீப்தவிஸாலநேத்ரம்-கனல்கின்ற விழிகளுமுடைய, த்வாம் த்ருஷ்ட்வா-உன்னைக் கண்டு, ப்ரவ்யதிதா அந்தராத்மா-பயத்தினால் நிலைகொள்ளாமல், த்ருதிம் ஸமம் ச ந விந்தாமி-தைரியத்தையும் அமைதியையும் நான் அடையவில்லை.

பொருள் : வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.

காணாத ஒன்றைக் காணுமிடத்து ஒருவனுக்குக் கலக்கம் உண்டாவது இயல்பு. கோர சொரூபத்தை சாந்த சொரூபத்தோடு சேர்த்துணரும் பரியந்தம் மனக் கலக்கத்தை மாற்றலரிது.

அம் மனக்கலக்கத்தால் மேலும் விளைந்தது யாது? விடை வருகிறது :

25. தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி
த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி
திஸோ ந ஜாநே ந லபே ச ஸர்ம
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ   

தம்ஷ்ட்ராகராலாநி ச-கோரைப் பற்களால் பயங்கரமானவையும், காலாநலஸந்நிபாநி-பிரளய கால தீ போன்ற, தே முகாநி த்ருஷ்ட்வா-உன் முகங்களை, திஸோ ந ஜாநே-திசைகள் தெரியவில்லை, ச ஸர்ம ந லபே-சாந்தி தோன்றவில்லை, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடமே, ப்ரஸீத-அருள் செய்க.

பொருள் : அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.

ஒரு சூரியனை அல்லது சந்திரனை இலக்காக வைத்துக் கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. பார்க்குமிடமெங்கும் பரஞ்சோதியாயிருப்பதால் திக்குகள் தென்படாமற் போய்விட்டன. ஊழித்தீயானது பொருள்களையெல்லாம் விழுங்குவது மீண்டும் நாள் அமைதியடைதற் பொருட்டு சாந்த சொரூபத்தைக் காட்டியருள்வீராக.



Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #17 on: April 20, 2012, 12:29:41 PM »
26. அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ
ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:   

27. வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி
தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி
கேசித்விலக்நா தஸநாந்தரேஷு
ஸந்த்ருஸ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:

அமீ த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஏவ-இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும்
அவநிபாலஸங்கை: ஸஹ த்வாம்-மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் உன்னுள்ளே (புகுகின்றனர்), பீஷ்ம: த்ரோண: ச-பீஷ்மனும், துரோணனும், ததா அஸௌ ஸூதபுத்ர: - அவ்விதமே சூதன் மகனாகிய இந்த கர்ணனும், அஸ்மதீயை: அபி யோதமுக்யை: ஸஹ-நம்மைச் சார்ந்த முக்கியப் போர்வீரர்களுடன் கூட.

தே தம்ஷ்ட்ராகராலாநி-உன்னுடைய கொடிய பற்களுடைய, பயாநகாநி-பயங்கரமான க்த்ராணி-வாய்களில், த்வரமாணா விஸந்தி-விரைவுற்று வீழ்கின்றனர், கேசித் தஸந அந்தரேஷு விலக்நா:-சிலர் உன் பல்லிடுக்குகளில் அகப்பட்டு, சூர்ணிதை உத்தமாங்கை: - பொடிபட்ட தலையினராக, ஸந்த்ருஸ்யந்தே-காணப்படுகின்றனர்.

பொருள் : இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்.

பொருள் : கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர். (26-27)

சூதபுத்திரன் என்றால் தேர் ஓட்டியின் மகன் என்று பொருள் இங்கு இச்சொல் கர்ணனைக் குறிக்கிறது.

அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் பெரும்பகை. அத்தகைய பகைவனே அழிவதை முற்கூட்டி அர்ஜுனன் அறிகிறான் அதற்குமேல் பகைவர் எல்லாரும் அழிவதையும் அவன் அறிகின்றான். தன் பக்கத்திலும் பெரிய வீரர்கள் பலர் மடிவது திண்ணம். போரின்போக்கு பொதுப்பட பூபாரத்தைக் குறையிருப்பதாயிருக்கிறது. யாருக்காவது தனி நன்மை வந்தமையும் அறிகுறிகள் தென்படவில்லை.

28. யதா நதீநாம் பஹவோऽம்புவேகா:
ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி
ததா தவாமீ நரலோகவீரா
விஸந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி   

நதீநாம் பஹவ: அம்புவேகா:-பல ஆறுகளின் வெள்ளங்கள், ஸமுத்ரம் ஏவ அபிமுகா :-கடலையே நோக்கி, யதா த்ரவந்தி-எவ்வாறு பாய்கின்றனவோ, ததா-அவ்வாறே, அமீ நரலோகவீரா-இந்த மண்ணுலக வீரர்கள், அபிவிஜ்வலந்தி தவ வக்த்ராணி-சுடர்கின்ற உன் வாய்களில்விஸந்தி-புகுகிறார்கள்.

பொருள் : பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.

மலையினின்று வெளிவந்ததும் நதிகள் கடலைநோக்கி ஓடியாக வேண்டும். அதைத்தவிர அவைகளுக்குப் புகலிடம் வேறு ஏதுமில்லை இந்த மண்ணுலக வீரர்கள் என்னென்னவோ மனக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் உமது விராட் வடிவத்தில் மறைவது திண்ணம். அவர்கள் இன்னும் உண்மையை அறியவில்லை யெனினும் நீர் அவர்களை எடுத்து விழுங்க ஆரம்பித்துவிட்டீர்.

29. யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா
விஸந்தி நாஸாய ஸம்ருத்தவேகா:
ததைவ நாஸாய விஸந்தி லோகா
ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:   

பதங்கா-விளக்குப் பூச்சிகள், ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், ப்ரதீப்தம் ஜ்வலநம் - எரிகின்ற விளக்கில், நாஸாய யதா விஸந்தி-அழிவதற்காக எவ்வாறு புகுகின்றனவோ, ததா ஏவ-அவ்விதமே, லோகா: அபி நாஸாய-உலகங்களும் அழிவதற்காக, ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், தவ வக்த்ராணி விஸந்தி-உன் வாய்களில் புகுகின்றன.

பொருள் : விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.

சமுத்திரத்தில் சங்கமமான நதிகள் தமது நாமரூபங்களை இழக்கின்றன. ஆயினும் நதியின் நீருக்கு அழிவில்லை. தீயில் வீழும் விட்டில் பூச்சிகள் உடலையே இழக்கின்றன. போர்முனையில் கூடிய வீரர்கள் தங்கள் சுபாவத்தால் தூண்டப்பெற்று, அறிவை இழந்து உடலையும் இழக்க முந்துகின்றனர். அவர்களை அழித்துப் புதிய வடிவில் அமைப்பதன் மூலம் அவர்களைத் திருத்துதற்குப் பகவான் துணைபுரிகிறார்.

30. லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால்
லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்
பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ   

ஸமக்ராந் லோகாந்-அனைத்து உலகங்களும், ஜ்வலத்பி: வதநை: க்ரஸமாந:-கனல்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு, ஸமந்தாத்-எப்புறத்தும், லேலிஹ்யஸே-(நாக்குகளால்) தீண்டுகிறாய், விஷ்ணோ-விஷ்ணுவே, தவ உக்ரா: பாஸ-நின் உக்கிரமான சுடர்கள், ஸமக்ரம் ஜகத்-வையம் முழுவதையும், தேஜோபி: ஆபூர்ய ப்ரதபந்தி-வெப்பத்தினால் நிரப்பி சுடுகின்றன.

பொருள் : கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.

எங்கும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. அவர் மங்கள சொரூபமாக எங்கும் வியாபித்திருப்பது போன்று ஊழித்தீயாக உக்கிர சொரூபம் எடுத்து வியாபகமாவதும் உண்டு. உலகைச் சீர்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் அங்ஙனம் செய்கிறார். ஆனால் அவர் போக்கை அறியாத அர்ஜுனன் விண்ணப்பித்ததாவது :

31. ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ
நமோऽஸ்து தே தேவவர ப்ரஸீத
விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம்
ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்   

தேவவர-தேவர்களில் சிறந்தவனே, உக்ரரூப:-உக்கிர ரூபந் தரித்த, பவாந்-நீ க:-யார்? நமோऽஸ்து-உன்னை வணங்குகிறேன், ப்ரஸீத-அருள் புரி, ஆத்யம் பவந்தம்-ஆதியாகிய உன்னை, விஜ்ஞாதும் இச்சாமி-அறிய விரும்புகிறேன், ஹி-ஏனெனில், தவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமி-உன்னுடைய செயலை அறிகிலேன் (புரிந்து கொள்ள முடியவில்லை).

பொருள் : உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.

அழகுத்தெய்வம் மனதைக் கவர்கிறது. அக் கவர்ச்சியே வணக்கமென்று சொல்லப்படுகிறது. பின்பு, பயங்கர சொரூபம் இன்னொரு போக்கில் உள்ளதைக் கவர்கிறது. அச்சமூட்டுகிற உக்கிர மூர்த்தியின் அருள் பிரசாதத்தை எப்படியாவது பெறவேண்டுமென்று மனது நடுநடுங்கி விண்ணப்பிக்கிறது. அப்படி அச்சமூட்டும் தெய்வத்தின் அருளாலேயே அச்சம் வெல்லப்படுகிறது. பயங்கர மூர்த்தியோடு அங்ஙனம் பயந்து செய்யும் இணக்கமும் வணக்கமெனக் கருதப்படுகிறது. ஜீவர்களின் இயல்பு உக்கிர மூர்த்தியை விரும்பி வணங்குவது அல்ல என்பதை ஈண்டு அர்ஜுனனது செயல் விளக்குகிறது. தேவர்கள் உட்பட அகிலத்துக்கும் முழுமுதற் பொருள் ஈசன் என்பது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷம். ஆனால் அதனாலேயே அவன் அவரை முழுதும் அறிந்துகொண்டவன் அல்லன். ஒரு மனிதனும் அவனது செயலும் தொடர்ந்து சம்பந்தப்பட்டவைகள். செயலைக் கொண்டு மனிதனை அறியலாம். செயலைக்கொண்டு கடவுளையும் ஒருவாறு அறியலாம். அர்ஜுனன் விரும்புவதும் அதுவே. பகவானது கிருத்தியங்களைக்கொண்டு பகவானது மகிமைகளை அறிய அவன் அவாவுறுகின்றான். அவ்விருப்பத்தை அவன் அஞ்சி வெளியிடுவானாயினன். அதற்கு பகவானது விடையும் வருகிறது :

ஸ்ரீபகவாநுவாச

32. காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ
லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:
ருதேऽபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே
யேऽவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்த:-உலகத்தை அழிக்க பெருகி வளர்ந்துள்ள, கால: அஸ்மி-காலனாக இருக்கிறேன், இஹ லோகாந் ஸமாஹர்தும்-இப்போது உலகனைத்தையும் அழிப்பதற்காக, ப்ரவ்ருத்த:-தொடங்கி இருக்கிறேன், யே யோதா: ப்ரத்யநீகேஷு அவஸ்திதா:-எந்த போர் வீரர்கள் எதிரில் இருக்கின்றார்களோ, ஸர்வே த்வாம் ருதே அபி-அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும்,  ந பவிஷ்யந்தி-இருக்க மாட்டார்கள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்

நீ யார்? என்ற கேள்விக்கு நான் வல்லமை வாய்ந்த காலம் என்று பகவான் விடை விடுக்கிறார். பகவானுக்கு அமைந்த பல விளக்கங்களுள் அவர் மஹா காலம் என்பதும் ஒன்று. காலம் முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது. செயல்களுக்கு இடையில் உள்ள இடையீடாக அது நமக்குத் தோன்றுகிறது. பிறகு செயல்களுக்கே அது அளவையாகிறது. பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தன்பால் அடக்கி வைத்திருப்பது போன்று காலமானது செயல்கள் யாவையும் தன்பால் அடக்கிவைத்திருக்கிறது; ஆதலால் அது எல்லாம் வல்லது. மலையுச்சிக்குப் போகப்போக சமவெளியில் உள்ள மேடுபள்ளங்களெல்லாம் ஒரே வெளியாய்த் தென்படுகின்றன. காலத்தை அகண்டாகாரக் காட்சியில் காணுமிடத்து அண்டங்களின் கிருத்தியங்களெல்லாம் அதில் வீழ்ந்து மறைகின்றன. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே பகவத் சொரூபமாகிறது.

உம் செயல் யாது? என்ற கேள்விக்கு உலகங்களையும் உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் பிரவிருத்தி என்று பகவான் சொல்லுகிறார். தோன்றியவைகளைச் சிறிது சிறிதாக அவர் சதா விழுங்கிக்கொண்டிருப்பது போன்று பெருவாரியாக சில வேளைகளில் விழுங்கவேண்டிய அவசியம் வருகிறது. மகாபாரத யுத்தம் அத்தகைய தொன்று. சிறிது சிறிதாக அழிவதை இயற்கையின் போக்கு என்கிறோம். பெருமிதமாக அழிவது யாருடைய செயல்; ஏன் அப்படி நடைபெறுகிறது என்று வியப்படைகிறோம். அவையாவும் ஈசன் செயல். எந்த வேளையில் உலகை எப்படி அழிக்க வேண்டுமோ அப்படி அவர் அழிக்கிறார். சிறியது பெரியது ஆகிய எல்லாம் அவர் செயல் என்று அறிபவன் அவரை உண்மையில் போற்றுகிறான். பின்பு, பயங்கரமான எச்செயலைக் கண்டும் அவன் நடுங்குவதில்லை.

பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய போர் வீரர்கள் அழிவது திண்ணம் என்று அர்ஜுனனுக்கு இப்பொழுது காட்டப்படுகிறது. பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் தகுமோ என்று தயங்கிய தனஞ்ஜயனுக்கு அச்செயல் தன்னுடையதல்ல என்ற தேற்றம் இப்பொழுது பகவானால் ஏற்படுகிறது. கர்ணன் மடிவதும் தன்னைப் பொருத்ததன்று என்று அர்ஜுனன் அறிவிக்கப்படுகிறான். அர்ஜுனன் யுத்தத்தில் இறங்காவிட்டாலும் அவர்கள் அழியப்போகிறார்கள். அப்படியானால் அர்ஜுனன் யுத்தத்தில் தலையிடுவானேன்? இக்கேள்விக்கு விடைவருகிறது.

33. தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஸோ லபஸ்வ
ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்
மயைவைதே நிஹதா: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்   

தஸ்மாத் த்வம் உத்திஷ்ட-ஆதலால் நீ எழுந்து நில், யஸ: லபஸ்வ-புகழெய்து, ஸத்ரூந் ஜித்வா-பகைவரை வென்று, ராஜ்யம் ஸம்ருத்தம் புங்க்ஷ்வ-செழிப்பான ராஜ்யத்தை ஆள்வாயாக, ஏதே பூர்வம் ஏவ மயா நிஹதா:-இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், ஸவ்யஸாசிந்-இடது கையாளும் அம்பு எய்யும் வீரனே! நிமித்தமாத்ரம் பவ-நீ வெளிக் காரணமாக மட்டுமே இருப்பாயாக!

பொருள் : ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.

ஜீவர்கள் செயல் புரிதலை அல்லது புரியாதிருத்தலை முன்னிட்டு பகவானுடைய காரியம் எவ்விதத்திலும் மாறுதல் அடையாது. அவனது திட்டத்தில் யாண்டும் ஒழுங்கும் உறுதியும் உண்டு. அதில் கலந்துகொள்ளுகிறவளவு ஜீவனுக்கு எல்லா நன்மையும் உண்டு. அதன் பொருட்டு அவன் எழுந்திருப்பது அவனது முதற் கடமையாகும். ஆத்ம போதம் பெற்று எழுந்திருக்கிறவளவு அவன் செயலுக்குத் தகுதியுடையவனாகிறான். நற்செயல் புகழைத் தருகிறது. நன்மைக்கு இடைஞ்சலாயிருப்பவனே பகைவன். அவனை வெல்லுவது நன்மைக்காகப் பாடுபடுவதாகும். தான் மட்டும் நன்மை செய்தால் போதாது. நன்மைக்கு இடையூறு உண்டு பண்ணுபவனை எதிர்ப்பது ராஜதர்மம். தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பவர்க்கு இம்மையுமுண்டு, மறுமையுமுண்டு, முக்தியுமுண்டு. அதில் முதலாவது இகலோக வாழ்க்கையில் சிறப்பு. ஆக, செல்வம் நிறைந்த ராஜ்யத்தோடு கூடிய இகலோக வாழ்க்கை வாய்ப்பது தர்மத்தின் பலனாம். அது படிப்படியாக முக்திக்கும் எடுத்துச் செல்லவல்லது.

அதர்மத்தில் மூழ்கிய எதிரிகளை மாய்க்க பகவான் திட்டம் போட்டுள்ளார். அர்ஜுனன் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்புக்குப் போர் புரிந்தாலும் போதுமானது. ஆயினும் அவனைப்பற்றிய உண்மை யென்ன? இடது கையாலும் நன்கு அம்பு எய்ய அவன் வல்லவன். துணிந்து சண்டை செய்வானானால் யாரையும் தோற்கடிக்க வல்லவன். அத்தகையவன் இந்தச் சிறந்த சந்தர்ப்பத்தைக் கைவிடலாகாது. தேவர்களையும் வெல்லவல்ல துரோணர், பீஷ்மர் முதலியவர்களை வென்றான் என்ற கீர்த்தி பகவான் கையில் கருவியாயிருப்பதால் எளிதில் வந்தமையும். தக்க வேளையில் தக்க கடமையைச் செய்கின்றவனுக்கு எல்லா மேன்மைகளும் எளிதில் வாய்க்கின்றன.

தான் கண்காட்சி மனோகற்பிதமோ என்ற ஐயமும் யாரெல்லாம் உண்மையாகவே மடியப்போகின்றார்கள் என்ற ஐயமும் அர்ஜுனனுக்கு வருகிறது. அவைகளை நீக்குதற்கு பகவான் மேலும் பகர்கிறார்:

34. த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்   

த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம்-துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும், ததா அந்யாந் அபி யோதவீராந்-அவ்வாறே மற்ற யுத்த வீரர்களையும், த்வம் ஜஹி-நீ கொல், மா வ்யதிஷ்டா-அஞ்சாதே, யுத்யஸ்வ-போர் செய்,
ரணே ஸபத்நாந் ஜேதாஸி-போர் களத்தில் பகைவரை வெல்வாய்.

பொருள் : துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.

துரோணரையும் பீஷ்மரையும் கொல்லுவது தர்மத்துக்கு முரண்பட்டதன்று என்பது ஏற்கனவே புகட்டப்பட்டது. இனி, அவர்களைக் கொல்லமுடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் துரோணர் தெய்வீக அஸ்திர சஸ்திரங்களை யுடையவர்; மேலும் குரு பீஷ்மருக்கோ அவர் விரும்பினாலொழிய மரணம் வராது. இதுவரையில் அவரை யாரும் வென்றது கிடையாது. ஜயத்ரதனுடைய தலையை யார் பூமியில் வீழ்த்துகிறானோ அவனுடைய தலை வெடித்துப் பூமியில் விழும்படி ஜயத்ரதனுடைய தந்தை கடுந்தவம் புரிகிறார். ஆக, அதுவும் கஷ்டத்துக்கு ஏதுவான யுத்தம். இனி, கர்ணன் விஷயமும் அப்படியே இருக்கிறது. அவன் இந்திரனிடத்திருந்து சக்தி என்னும் ஆயுதத்தைப் பெற்றிருக்கிறான். கர்ணன் அதை யார்மீது பிரயோகித்தாலும் அது வீண் போகாது. அர்ஜுனனைக் கொல்லுதற்கென்றே அவன் அதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த நெருக்கடிகளை நினைத்து அர்ஜுனன் அஞ்சி வருந்துவது இயல்பு.

ஆனால் பகவானே அவர்களைத் திருவுளங் கொண்டுள்ளார். அவர்களுடைய வல்லமையை ஏற்கனவே கரந்தாயிற்று. சித்திரத்தில் வரைந்த சிங்கங்களைத் துடைப்பது போன்று அவர்களை ஒடுக்குவது எளிதாகும். வேடன் கையில் உள்ள அம்புபோன்று பகவானுடைய திட்டத்துக்குக் கருவியாயிருப்பது அர்ஜுனன் கடமையாகும். ஆனால் வெல்ல முடியாதவர்களை அவன்தான் வென்றான் என்ற கீர்த்தி அவனுக்கு வரும். இக்கருத்துகளை பகவான் பார்த்தனுக்குத் தெளிவுறுத்துகிறார். இதைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான்? அது ஸஞ்ஜயரால் விளக்கப்படுகிறது :

ஸஞ்ஜய உவாச

35. ஏதச்ச்ருத்வா வசநம் கேஸவஸ்ய
க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம்
ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய   

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், கேஸவஸ்ய ஏதத் வசநம் ஸ்ருத்வா-கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டு, கிரீடீ வேபமாந: க்ருதாஞ்ஜலி: நமஸ்க்ருத்வ-பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி செய்து, பூய: ஏவ க்ருஷ்ணம் ப்ரணம்ய-மீண்டும் கண்ணனை வணங்கி, பீதபீத: ஸகத்கதம் ஆஹ-அச்சத்துடன் வாய் குழறி சொல்லுகிறான்.

பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.

கிரீடம் தரித்துள்ள கோமகன் யாருக்கும் தலை வணங்கலாகாது. அச்சம் தவிர்ப்பது அவனது தர்மம். பிறர் வணங்க அவ்வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் அரசனுக்கு முறை. திட்பத்துடன் உறுதிமொழி கூறுதல் அவனது இயல்பு. இங்கு ஈசுவரனது முன்னிலையில் அம் முறைமைகளெல்லாம் பறந்தோடுகின்றன. கடவுள் முன்னிலையில் குறுகுதல் உயிர்களது முடிவான செயல் என்பது வெளியாகிறது.

அப்படிக் குறுகிய அர்ஜுனன் யாது மொழிந்தான் ? விடை வருகிறது:

அர்ஜுந உவாச

36. ஸ்தாநே ஹ்ருஷீகேஸ தவ ப்ரகீர்த்யா
ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச
ரக்ஷõம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:   

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஹ்ருஷீகேஸ-இருஷீகேசா, தவ ப்ரகீர்த்யா-உன் பெரும் பெயரில் (புகழில்), ஜகத் ப்ரஹ்ருஷ்யதி-உலகம் மகிழ்கிறது, அநுரஜ்யதே ஸ்தாநே ச-இன்புறுவதும் பொருந்தும், பீதாநி ரக்ஷõம்ஸி திஸ: த்ரவந்தி-ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், ச ஸர்வே ஸித்தஸங்கா:-மேலும் சித்தர் கூட்டத்தினர், நமஸ்யந்தி-வணங்குகிறார்கள்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.

முன்பு காணாத மோட்டார் வண்டி முதலியவற்றை நாட்டுப் புறத்தார் பார்த்தால் உடனே அச்சம் கொள்ளுதல் இயல்பு. காணாத அற்புதச்செயலை முதன் முதல் கண்டதும் அதனிடத்துப் பீதி கொள்ளுதல் அறிவிலிகளின் இயல்பு. ராக்ஷஸர்கள் இறைவனைப் பற்றிய ஞான மில்லாதவர்கள்; அகங்கரித்து அடாத செயலில் ஈடுபடுபவர்கள். அத்தகையவர் இறைவனது உலக நடை முறையைத் தொகுத்துக் காணுமிடத்து நடுங்கி நாலா பக்கமும் ஓடுவார்கள். மோட்டார் வண்டி ஒன்றன் அமைப்பையும் பயனையும் அறியுமளவு மக்கள் அதை மெச்சுவார்கள். அங்ஙனம் பகவானது மகிமைகளைத் தெரிந்துகொள்ளுமளவு பக்தர்கள் அவனைப் போற்றிப் புகழ்வார்கள். அப்படிச் செய்வதில் அவர்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. இனி, மோட்டார்வண்டியைப் பயன்படுத்துபவரோ ஒரு சிறு கூட்டத்தார். பகவானை வணங்கி அவனிடத்து யோகம் செய்து அவனுக்கு உரியவர் ஆகின்றவர்கள் சித்தர்கள். அங்ஙனம் நிறை நிலைகள் யாவையும் அவர்கள் எய்துகின்றனர். உலகை அறிகின்றவளவு ஒருவன் உலகைப் பயன்படுத்துகிறான். பகவானை அறிகின்றவளவு ஒருவன் பண்பும் பயனும் அடைகிறான். இது அர்ஜுனனுக்கு அனுபவ பூர்வமாக இப்பொழுது விளங்குகிறது. ஆக. ராக்ஷசர் முதல் சித்தர் ஈறாக அவரவர் அறிவுக்கு எட்டியவாறு கடவுளோடு இணக்கம் வைப்பது யுக்தமானதே என்று பார்த்தன் பகர்கிறான்.

தெய்விகம் வாய்ந்த ரிஷிகள் ஈசுவரனுடைய நெருங்கிய உறவினரைப் போன்றவர்கள். அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலவும், ஸகாக்கள் போலவும், உறவினர்கள் போலவும் இருக்கின்றனர். சாதாரண மனிதர்கள் எல்லாரும் எட்டிய உறவினர் போன்றவர்கள். அவர்கள் கேவலம் ஈசுவர சிருஷ்டிகள் மாத்திரமே.

37. கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
கரீயஸே ப்ரஹ்மணோऽப்யாதிகர்த்ரே
அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ
த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்   

மஹாத்மந்-மகாத்மாவே! ப்ரஹ்மண: அபி ஆதிகர்த்ரே-பிரம்ம தேவனையும் ஆதியில் படைத்தவனாகவும், கரீயஸே-மூத்தவராகவும் உள்ள, தே கஸ்மாத் ந நமரேந்-உனக்கு ஏன் வணங்கமாட்டார்? அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ-அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, யத் ஸத் அஸத்-எது சத்தாகவும் அசத்தாகவும், தத்பரம்-அவற்றைக் கடந்ததாகவும் உள்ள, அக்ஷரம்-அழிவற்ற பரம்பொருள் த்வம்-நீ.

பொருள் : மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.

பகவானைப் போற்றி வணங்கும் எண்ணம் இயல்பாகவே சித்தர்களது உள்ளத்தில் எழுகின்றது. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் பெரியவர், மஹாத்மா, காலதேச நிமித்தத்தில் கட்டுப்படாதவராதலால் அவர் அனந்தர். தேவர்களுக்கெல்லாம் அவரே அதிபதி. ஜகத்துக்கு இருப்பிடமாக அவர் இருக்கிறார். உலகைப் படைத்த ஹிரண்யகர்பன் அல்லது நான்முக பிரம்மாவுக்கும் அவர் முதற்காரணம். உலகாகத் தோன்றியுள்ளது ஸத்; தோன்றாத மூலப்பிரகிருதி அஸத் எனப்படுகிறது. தோன்றிய உலகம் அதனிடத்திருந்து வருவதால் அது சிறிதும் தேய்வடைவதில்லை. ஆகையால் அது அக்ஷரம். ஸத் அஸத் இரண்டையும் அது கடந்திருப்பதால் அது பரம். பகவான் இத்தனையுமாயிருப்பதால் அவரை வாழ்த்தி வணங்காது வேறு என்ன செய்ய முடியும்? பெரியதைப் போற்றுவதால் ஒருவன் பெரியவனாகிறான்.

38. த்வமாதிதேவ: புருஷ: புராண:
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விஸ்வமநந்தரூப   

த்வம் ஆதிதேவ:-நீ ஆதிதேவன், புராண: புருஷ:-பழமையான புருஷன், த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீ இந்த அகிலத்தின் பரம நிலையம், வேத்தா ச வேத்யம் ச-நீ அறிவோன், நீ அறிபடு பொருள், பரம் தாம: அஸி-பரமபதம், அநந்தரூப-அநந்தரூபனே,
த்வயா விஸ்வம் ததம்-உன்னால் உலகனைத்தும் நிறைந்துள்ளது.

பொருள் : நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.

யாவும் அவரிடத்திருந்து உதயமாவதால் அவர் ஆதிதேவன். பிரபஞ்சம் என்னும் புரியிலே அவர் வாசம் செய்வதால் அவர் புருஷன். அவருக்கு மூத்தவர் ஒருவருமில்லை. ஆகையால் அவர் புராணன் அல்லது தொல்லோன். மஹா பிரளயத்தில் அனைத்துக்கும் அவர் ஒடுங்குமிடமாதலால் அவர் நிதானமாகிறார். அறியும் தன்மை அவரிடத்திருந்து வருகிறது. ஆதலால் அவர் வேத்தா. அறியப்படு பொருள்களெல்லாம் அவரிடத்திருந்து வந்தனவாதலால் அவர் வேத்யம். கடலில் அலை தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் அது ஒடுங்குவது போன்று உலகம் அவரிடத்துத் தோன்றி, இருந்து, மறைகிறது. ஆதலால் அவர் யாண்டும் அதற்குப் பெருநிலம் அல்லது பரம்தாமம் ஆகிறார். அதுவே மஹா விஷ்ணுவுடைய பரமபதம் எனப்படுவது. அவர் இன்னும் என்னவாகிறார் எனில் :

39. வாயுர்யமோऽக்நிர்வருண: ஸஸாங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஸ்ச
நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:
புநஸ்ச பூயோऽபி நமோ நமஸ்தே   

வாயு: யம: அக்நி: வருண: ஸஸாங்க:-வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், த்வம் ப்ரஜாபதி-நீ பிரம்மன், ப்ரபிதாமஹ: ச-பிரமனுக்கும் தந்தை (பிதாமகன்-பிரம்மன்), ஸஹஸ்ரக்ருத்வ: நமோ நமஸ்தே அஸ்து-ஆயிரமுறை கும்பிடுகிறேன், பூய: அபி-மீண்டும், தே நம: - உனக்கு நமஸ்காரம், புந: ச நம:-திரும்ப திரும்ப நமஸ்காரம்.

பொருள் : நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம!

காச்யபர் முதலிய லோகபிதாக்களுக்கு பிரஜாபதி என்று பெயர். பிரம்மா உலகுக்குப் பாட்டனார் ஆகிறார். அவருக்கு தந்தை விஷ்ணு. ஆகையால் முப்பாட்டனார் என்பது பகவானையே குறிக்கிறது. நமஸ்கரிப்பதற்கு முடிவின்மையானது பக்திப் பெருக்கை விளக்குகிறது.

40. நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே
நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ:   

தே புரஸ்தாத் அத ப்ருஷ்டத நம:-உன்னை முன் புறத்தேயும் பின்புறத்தேயும் கும்பிடுகிறேன்
ஸர்வ-எல்லாமாவாய், தே ஸர்வத ஏவ நமோऽஸ்து-உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன்,
அமிதவிக்ரம:-எல்லையற்ற வீரியமுடையாய், அநந்தவீர்ய:-அளவற்ற வலிமையுடையாய், ஸமாப்நோஷி-சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய், தத: ஸர்வ: அஸி-எனவே நீ அனைத்துமாக இருக்கிறாய்.

பொருள் : உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.

எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய சொரூபம். ஆகையால் நாலா பக்கங்களிலும் அவனுக்கு நமஸ்காரம் செய்வது பொருத்தமாகும். வீரியம் என்பது வல்லமை. அளவற்ற வல்லமையை ஒருவன் உடைத்திருந்தும் அதைக் கையாளாது விட்டுவிடலாம் அதனால் அது வீணாகிறது. பகவான் அத்தகையவரல்லர். தமது முடிவற்ற வல்லமையை எண்ணிறந்த விதங்களில் அவர் செயலுக்குக் கொண்டு வருகிறார். இந்த ஜகத் நடைமுறையே அதற்குச் சான்று. ஆதலால் அவர் பரந்த பராக் கிரமத்தையுடையவர் எனப்படுகிறார். பழம் என்று சொல்லுமிடத்து அதன் சதை, மேல் தோல், கொட்டை ஆகிய எல்லாம் அதில் அடங்கப் பெறுகின்றன. அங்ஙனம் பகவான் என்று சொல்லுமிடத்து, ஜகத் ஜீவகோடியனைத்தும் அவரிடத்து அடங்கப்பெறுகின்றன. அவரைப் போற்றுதலில் எல்லாம் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றுதலில் அவர் போற்றப்படுகிறார்.

பகவானைப்பற்றிய உண்மையை அறிந்த அர்ஜுனனுக்கு மனப்பான்மை மாறுகிறதா? விடை வருகிறது :

41. ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி
அஜாநதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி

42. யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி
விஹாரஸய்யாஸநபோஜநேஷு
ஏகோऽதவாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷõமயே த்வாமஹமப்ரமேயம்   
   
தவ இதம் மஹிமாநம் அஜாநதா-இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், ஸகா இதி மத்வா-தோழன் என்று கருதி, ப்ரமாதாத் அபி வா ப்ரணயேந-தவறுதலாலேனும் அன்பாலேனும், ஹே க்ருஷ்ண! ஹே யாதவ! ஹே ஸகே! இதி-ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா என்று யத் ப்ரஸபம் உக்தம் ச-எது துடிப்புற்று சொல்லி யிருப்பதையும்

விஹார ஸய்யாஸந போஜநேஷு-விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், ஏக:-தனியிடத்தேனும், அதவா-அன்றி, தத்ஸமக்ஷம் அபி-மற்றவர் முன்னேயெனினும்,
அவஹாஸார்தம்-வேடிக்கையாக, யத் அஸத்க்ருத: அஸி-எந்தவிதமாக அவமதிக்கப் பட்டாயோ, தத் அப்ரமேயம் த்வாம் அஹம் க்ஷõயே-அவற்றையெல்லாம் அளவற்ற பெருமையுடைய உன்னை நான் பொறுக்கும்படி வேண்டுகிறேன்.

பொருள் : இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ஏ கண்ணா, ஏ யாதவா ஏ தோழா என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்.

பொருள் : விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!

பகவானைப்பற்றிய மெய்யறிவு வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறுகிறது. கிருஷ்ணனாகத் தோன்றிய தோற்றம் ஒன்றுமட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈசுவரனுடையவகளே. அறியாமையினால் நாம் அவைகளை அலட்சியப் படுத்துகிறோம். அவைகளைப் பாராட்டுமளவு நமக்கு நல்லறிவு வருகிறது. நல்லறிவுக்கு மற்றோர் அறிகுறியுண்டு. நம் அறிவு எவ்வளவு தெளிந்தது எனினும் நம் அறிவால் அவனை முழுதும் அளந்துவிட முடியாது. வணக்கம் நிறைந்த இணக்கம் இறைவனிடத்தும் இறைவனது சிருஷ்டியின் கண்ணும் வைக்கக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதுவே தெளிவுபட்ட மனமாறுதல் ஆகிறது.

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதற்குக் காரணம் யாது? விடை வருகிறது : (41-42)

43. பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர்கரீயாந்
ந த்வத்ஸமோऽஸ்த்யப்யதிக: குதோऽந்யோ
லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபாவ   

த்வம்-நீ, அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு, பிதா-தந்தை ஆவாய், ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன், கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை, அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்? லோகத்ரயே அப்ரதிமப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

பொருள் : சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

சிருஷ்டி முழுதுக்கும் ஈசுவரன் முதற்காரணமாதலால் அவர் நகர்வன, நிலைத்திருப்பன அனைத்துக்கும் பிதா என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் பெருமை யனைத்தும் அமையப் பெற்றிருப்பதால் அவர் எல்லாராலும் போற்றுதற்கு உரியவராயிருக்கிறார். ஈசன் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு ஒப்பானவரே இல்லை யென்றால் அவரினும் உயர்ந்தவரைக் காண்பது எங்ஙனம்? ஆக, உலக நடைமுறைக்கு அதிபதியாக இருப்பவர் ஈசுவரன் ஒருவரே எனலாம். ஒருவருக்கு மேற்பட்ட ஈசுவரர்கள் இருப்பார்களானால் உலக நடைமுறையில் ஒழுங்கின்மை உண்டாகும். ஒருவர் சிருஷ்டிக்க எண்ணுகையில் மற்றொருவர் ஸம்ஹாரம் செய்ய நினைப்பாரானால் ஒரு செயல் மற்றொரு செயலோடு முரண்பட்டுக் குழப்பம் வந்து அமையும். மற்று ஒழுங்கான உலக நடைமுறைக்குத் தலைவனாக ஈசன் ஒருவரே இருக்கிறார். அவர் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு மிக்கார் யாருமல்லாததால் மனிதன் என்ன செய்ய வேண்டும்?

44. தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஸமீட்யம்
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்   

தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி, ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன், ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே! பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும், ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும், ப்ரிய: ப்ரியாயா:-அன்பனையன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்), த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்

பொருள் : ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.

பகவானது மகிமையை அறியும்போது அவன் போற்றுதற்குரிய பொருள் என்பது புலப்படுகிறது. ஆதலால் அர்ஜுனன் காயத்தால் வீழ்ந்து வணங்குகிறான். போற்றுதற்கு உரிய பொருள் அவன் என்று அறிவதால் பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள இணக்கம் தடைப்படுவதில்லை. அது படிப்படியாக நெருங்கி ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் பிரிக்கமுடியாத தொடர்வுண்டு. ஆனால் பயபக்தியால் பிள்ளை பிதாவிடத்துச் சம உரிமை கொண்டாடுவதில்லை. தொடர்வு இருப்பது மட்டும் அல்ல, உயர்வு தாழ்வு பாராட்டாத தோழமையும் உண்டு என்பது அடுத்தபடியாகச் சொல்லப்படுகிறது. அத் தோழமையில் இனிமையும் உண்டு என்று காதல் நிலையில் வைத்து அது மேலும் விளக்கப்படுகிறது. அத்தகைய பேரிணக்கத்தில் குற்றங்காணாது குணமே காணும் பண்பு நன்கு அமையப் பெறுகிறது.

பராபக்தியில் பக்தன் ஈசுவரனைத் தனக்கு அத்யந்தம் நெருங்கிய அன்பனாகக் கருதுகிறான். அது கிருஷ்ண பரமாத்மாவிடம் கோபஸ்திரீகளுக்கு இருந்த பக்தி போன்றது. அவர்கள் அவரை எப்பொழுதும் கோபிகாநாதன் என்று கருதி யழைத்தனரே தவிர ஜகந்நாதன் என்று கருதி அழைத்ததில்லை.

அர்ஜுனன் எத்தகைய வடிவத்தைத் தொடர்ந்து காண விரும்பினான் என்பது மேலும் அவனது வாயினின்று வெளியாகிறது : 

45. அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்ருஷ்ட்வா
பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே
ததேவ மே தர்ஸய தேவ ரூபம்
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ   

அத்ருஷ்டபூர்வம்-இதற்கு முன் காணாததை, த்ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மி-கண்டு மகிழ்சியுறுகிறேன், மே மந: பயேந ப்ரவ்யதிதம் ச-என் மனம் அச்சத்தால் சோர்கிறது, தத் தேவரூபம் ஏவ மே தர்ஸய-அந்த தேவ வடிவத்தையே எனக்கு காட்டுக, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவேசா, ஜகத்தின் நிலையமே, ப்ரஸீத-அருள் செய்க.

பொருள் : இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால்சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.

விசுவரூபத்தைக் காட்டியருள வேண்டுமென்று அர்ஜுனன் பிரார்த்தித்தான். அதற்கு இரங்கிய பகவான் யுத்த நெருக்கடிக்குப் பொருத்தமாயிருந்த ஸம்ஹார சொரூபத்தை விசேஷமாகக் காட்டியருளினார். அதனால் அர்ஜுனனுக்கு யுத்தத்தைப் பற்றிய மயக்கம் ஒழிந்தது. எனினும் எப்பொழுதும் அதிலேயே திளைத்திருக்க தனஞ்ஜயனுக்குப் பிடிக்கவில்லை. கொந்தளிப்புள்ள கடலில் மீன் மருளுவது போன்று அவன் மயங்கினான். யாண்டும் இன்பம் தருகிற சாந்த சொரூபத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பித்தான். உக்கிரரூபம் எடுப்பதும் பகவானது லீலை என்பதைத் தெரிந்து கொண்டால் போதுமானது. அக் காட்சியிலேயே நிலைபெற்றிருக்க பக்தன் விரும்புவதில்லை.

சிங்கம் போலப் பொய்க்கோலம் பூண்டுகொண்ட ஹரி, பார்க்க வெகு பயங்கரமாகத்தான் இருக்கிறான். அவன் தன் தங்கை விளையாடுமிடத்துக்குச் சென்று பயங்கரமாகக் கூச்சலிடுகிறான். அதைக்கேட்டு நடுநடுங்கிய அவள், இந்த குரூரப் பிராணியிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமே யென்று துக்கத்தோடு உரக்கக் கூச்சலிட்டு அழுகிறாள். ஆனால் ஹரி தன் வேஷத்தைக் கலைத்து விட்டதும், பயந்து போயிருந்த சிறுமி தனது பிரிய சகோதரனைக் கண்டு, ஓ அண்ணாதானா இது என்று சொல்லிக் கொண்டு அவனிடம் ஓடுகிறாள். மாயையாகிற கோலத்தில் பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்கிறது. அப்பொழுது அது இரக்க மற்ற மூர்த்தியாகவும் தோன்றுகிறது. மாயையை அகற்றிவிட்டால் பிரம்மம் அன்புருவான அந்தர்யாமியாகவே தோன்றும்.

தான் விரும்பும் வடிவம் இன்னதென்று இனி அர்ஜுனன் தெளிவுபடுத்துகிறான்:

46. கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த
மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ
தேநைவ ரூபேண சதுர்புஜேந
ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்தே   

கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம்-கிரீடமும் கதையும் கையில் சக்கரமுமாக, ததா ஏவ த்வாம் த்ரஷ்டும் அஹம் இச்சாமி-அந்த விதமாகவே உன்னைக் காண நான் விரும்புகிறேன், விஸ்வமூர்தே-அகில மூர்த்தியே, ஸஹஸ்ரபாஹோ-ஆயிரத் தோளாய், தேந ஏவ சதுர்புஜேந ரூபேண-அதே நான்கு தோலுடன் கூடிய வடிவினை, பவ-எய்துக.

பொருள் : முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.

இரண்டு கைகளையுடைத்திருப்பவர் மக்கள். நான்கு கரங்கள் கடவுள்பால் வைத்து அறிவது அவருடைய அமானுஷிய சக்திக்கு அறிகுறியாகும். கெட்டிக்காரன் ஒருவன் பல கைகளை யுடையவனாகக் கருதப்படுகிறான். இனி, கடவுள் விசுவ வடிவத்துடன் இருப்பவர்; ஆதலால் கைகளெல்லாம் அவருடையவைகளேயாம். ஒரு தொழிற்சாலையில் இருப்பவர்கள் அத்தனை பேரும் தொழில் புரிகிறார்கள்; எனினும் தொழில் வல்லமையைக் காட்டுதற்கு அதில் திறமை வாய்ந்த ஒருவனது வேலைப்பாடு மற்றவர்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. கிருஷ்ணனது மானுட வடிவத்தின் மூலம் தெய்வச் செயல் யாவும் அறியப்படுகின்றன. ஆதலால் தான் எப்பொழுதும் கண்டுவந்த மானுட வடிவத்தையே மீண்டும் காட்டும்படி குந்தியின் மகன் வேண்டுகிறான்.

சில வேளைகளில் சிலருக்குத் தன் வடிவத்தை நான்கு கரங்களுடன் கிருஷ்ணன் காட்சி கொடுத்ததாகப் பாகவதப் புராணம் கூறுகிறது.

தமது காட்சியை பகவான் மாற்றியருள்கிறார். மேலும் அர்ஜுனனுக்கு ஆறுதல் அளிக்கின்றார்.

47. ஸ்ரீ பகவாநுவாச

மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம்
ரூபம் பரம் தர்ஸிதமாத்மயோகாத்
தேஜோமயம் விஸ்வமநந்தமாத்யம்
யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்   

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அர்ஜுந-அர்ஜுனா, ப்ரஸந்நேந-அருள் கொண்டு, மயா ஆத்மயோகாத்-என்னுடைய யோக சக்தியினால், பரம் தேஜோமயம்-மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும், ஆத்யம் அநந்தம்-முதல் ஆனதும் முடிவற்றதுமான, யத் மே விஸ்வம் ரூபம்-எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை, தவ தர்ஸிதம்-உனக்குக் காட்டப் பட்டதோ, இதம் த்வத் அந்யேந-இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்), ந த்ருஷ்டபூர்வம்-பார்க்கப் படவில்லை.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.

ஈசுவர சாக்ஷõத்காரம் பண்ணினது அர்ஜுனனுடைய தனி யுரிமை யென்று பொருள்படுத்தலாகாது. மெய்ப்பொருள் காட்சிக்குத் தனியுரிமையிருக்குமானால் அது எல்லார்க்கும் பொது, எங்கும் வியாபகம், எல்லார்க்கும் அந்தராத்மா என்ற பேருண்மை அடிபட்டுப்போம். அதனுடைய பரிபூரணத்துக்குக் குறையும் வந்துவிடும். கருத்து யாது எனின் சகுணப் பிரம்மம், நிர்க்குண பிரம்மம்-அதன் இத்தனைவிதப் படித்தரங்கள் ஆகிய இவை யாவையும் தொகுத்து ஒருங்கே காட்சி காண்பவர் மிகச் சிலர். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது.

48. ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர்
ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:
ஏவம்ரூப: ஸக்ய அஹம் ந்ருலோகே
த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர   

வேத யஜ்ஞ அத்யயநை: தாநை:-வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், க்ரியாபி-கிரியைகளாலேனும், உக்ரை: தப: அபி ச-உக்ரமான தவங்களாலும் கூட,
ந்ருலோகே-மனித உலகில், த்வத் அந்யேந-உன்னையன்றி, ஏவம் ரூப:-இந்த உருவத்தில், அஹம் த்ரஷ்டும் ஸக்ய-நான் காண இயலாதவன், குருப்ரவீர-குருகுலத்தில் சிறந்த வீரா!

பொருள் : வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!

வேதத்தை அத்யயனம் செய்வது என்பதைச் சிலர் நெட்டுருப் போட்டு ஓதுதல் என்று பொருள்படுத்துகின்றனர். அதுவெறும் ஞாபகசக்தியையும் மனப்பாடம் பண்ணும் திறமையையும் உண்டுபண்ணுகிறது. அதற்குமேல் அதை அர்த்தம் பண்ணவும் அதில் சொல்லியுள்ள யாகங்களைச் செய்யவும் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி நான்கு வேதங்களை அறிந்து எல்லா யாகங்களையும் அனுஷ்டிக்கத் தெரிந்துகொண்டால் வேதாத்யயனம் பூர்த்தியாகிறது. தனக்குப் பயன்படும் பொன், பசு முதலியவைகளைப் பிறர்க்கு வழங்குவது தானமாகும். பலவந்தத்தால் பொருளை ஏராளமாகச் சிரமப்பட்டுச் சேகரித்து அபிஷேகம் அலங்காரம் முதலியவைகளில் பெருமிதமாகச் செலவிடுவது கர்மமாகும். சாந்திராயண விரதம் போன்றவைகள் உக்கிர தபசு ஆகின்றன. இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறவர்கள் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் அன்னம் உண்கின்றனர். பிறகு நாள் ஒரு கவளம் கிருஷ்ணபக்ஷத்தில் குறைத்துக்கொண்டுவந்து அமாவாசையன்று ஒரு கவளம் உண்கின்றனர். திரும்பவும் சுக்கிலபக்ஷத்தில் நாள் ஒரு கவளம் அதிகப்படுத்திக்கொண்டு போகின்றனர். இவ் விரதத்தால் பெரிதும் சித்த சுத்தி உண்டாகிறது.

விலைகொடுத்து ஒரு பொருளை வாங்குவது போன்று இத்தகைய யக்ஞ, தான, தப கர்மங்களால் ஈசுவரப் பிராப்தி யடைந்துவிடலாம் என்பதில்லை. அவனை அடைதற்கு அவன் அருளையே நாடி நிற்கவேண்டும். அவனை அடைந்தவர்களும் அவனை முழுதும் அறிந்துகொண்டவர்கள் அல்லர்.

கொஞ்சம் சாராயத்தைக் குடித்ததும் சிலர்க்குப் போதையுண்டாகிறது. இன்னும் சிலர்க்குப் போதையுண்டாக இரண்டு மூன்று புட்டிகள் வேண்டியிருக்கிறது. ஆயினும் இருவகையினரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். அதுபோல, ஈசுவர மகிமையில் தினையளவைக் கண்டதும் சிலருக்கு ஆனந்தம் உண்டாகிறது. வேறு சிலருக்கு ஈசுவர ஸந்நிதானத்தில் நேருக்கு நேராக வந்த பிறகு தான் ஆனந்தமுண்டாகிறது. ஆயினும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றே.

49. மா தே வ்யதா மா ச விமூடபாவோ
த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம்
ததேவ மே ரூபமிதம் ப்ரபஸ்ய   

ஈத்ருக் மம கோரம் ரூபம் த்ருஷ்ட்வா-இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு, தே வ்யதா மா-உனக்கு கலக்கம் வேண்டாம், மா விமூடபாவ: ச-மதி மயக்கமும் வேண்டாம், த்வம் வ்யபேதபீ:-நீ அச்சம் நீங்கி, ப்ரீதமநா:-இன்புற்ற மனத்துடன், தத் ஏவ மே இதம் ரூபம் புந: ப்ரபஸ்ய-எனது இந்த வடிவத்தை மறுபடி பார்!

பொருள் : இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்!

கொந்தளிப்புள்ள கடல் தேங்கியிருக்கும்போது மனமகிழ்வுண்டாவது போன்று ஹம்ஹார மூர்த்தியின் காட்சி சாந்த மூர்த்தியின் காட்சியாக மாறுகையில் அதைப் பார்க்கும் ஜீவனுக்கு மனவமைதி ஏற்படுவது இயல்பு.

ஸஞ்ஜய உவாச

50. இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஸயாமாஸ பூய:
ஆஸ்வாஸயாமாஸ ச பீதமேநம்
பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா   

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், வாஸுதேவ: இதி அர்ஜுநம் உக்த்வா-இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி, பூய: ததா ஸ்வகம் ரூபம் ச-மறுபடியும் அதே விதமான தன்னுடைய உருவத்தையும், தர்ஸயாமாஸ-காட்டினான், புந: மஹாத்மா ஸௌம்யவபு: பூத்வா-அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி, ஏநம் பீதம் ஆஸ்வாஸயாமாஸ-இந்த அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.

பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.

வசுதேவர் வீட்டில் எப்படிப் பிறந்தாரோ அப்படிப்பட்ட வடிவத்தை இப்பொழுது காட்டியருளினார். உயிர்களுக்குப் பாடம் புகட்டுதற்கு வேண்டியவளவே அவர் அச்சமூட்டுகிறார். பின்பு இனிய வடிவங்காட்டி அவர்களை மகிழ்விக்கிறார். அவர் இத்தகைய தன்மையுடையவராயிருப்பதால் அவர் மஹாத்மா வாகிறார்.

அர்ஜுந உவாச

51. த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந
இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:   

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜனார்த்தனா, தவ இதம் ஸௌம்யம் மாநுஷம் ரூபம்-நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தை, த்ருஷ்ட்வா இதாநீம்-கண்டு இப்போது, ஸசேதா: ஸம்வ்ருத்த: அஸ்மி-நிலையான மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன், ப்ரக்ருதிம் கத:-இயற்கை நிலையெய்தினேன்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.

எல்லாம் ஈசன் வடிவெனினும் சிங்கத்தின் வடிவெடுத்துள்ள ஈசனிடத்திருந்து சிறிது எட்ட நிற்க ஜீவன் விரும்புகிறான். அவனிடத்து ஜீவபோதம் இருக்குமளவு இத்தகைய மனப்பான்மையும் இருக்கும்.

ஸ்ரீ பகவாநுவாச

52. ஸுதுர்தர்ஸமிதம் ரூபம் த்ருஷ்டவாநஸி யந்மம
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஸநகாங்க்ஷிண:   

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மம யத் ரூபம் த்ருஷ்டவாந் அஸி - என்னுடைய எந்த வடிவம் இப்போது பார்த்தாயோ, இதம் ஸுதுர்தர்ஸம்-இது காண்பதற்கு அரிதானது, தேவா அபி-தேவர்கள் கூட, நித்யம் அஸ்ய ரூபஸ்ய-எப்போதும் இந்த உருவத்தை, தர்ஸந காங்க்ஷிண:-காண விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.

தேவர்கள் இச்சித்துக்கொண்டிருக்கிறார்களாதலால் அவர்கள் இன்னும் இறைவனை முழுதும் கண்டதில்லை. ஒரு நதியில் நீராடப் போகின்றவன் அதை ஓர் இடத்தில் ஸ்பரிசித்து மூழ்கி நீராடினால் அந்நதியைக் கண்டவன் ஆகிறான். ஆனால் அது உற்பத்தியாகுமிடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமமாகும் பரியந்தம் அதைப் பார்த்தவர்கள் மிக மிகச் சிலர். அங்ஙனம் அர்ஜுனன் இறைவனைக் கண்டதுபோன்று அவரைப் பெரிதும் அறிந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

கடவுளைக் காண்பதற்கு சாதகர்கள் கையாண்ட உபாயங்கள் எவை? விடை வருகிறது :

53. நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
ஸக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா   

யதா மாம் த்ருஷ்டவாந் அஸி-எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ, ஏவம்வித: அஹம் - இவ்விதமாக நான், வேதை: த்ரஷ்டும் ந ஸக்ய-வேதங்களாலும் காணப் பட முடியாதவன், தபஸா ந-தவத்தாலும் இல்லை, தாநேந ந-தானத்தாலும் இல்லை, இஜ்யயா ச ந-வேள்வியாலும் இல்லை.

பொருள் : என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.

பொற்காசு ஒன்றை இழந்தவன் அதன்மீது நின்றுகொண்டே அதை எவ்வளவு தேடினாலும் அதை அடையமாட்டான். வேதம், வேள்வி, தானம், தபசு முதலியன மனிதனைப் பண்படுத்துதற்குப் பயன்படலாம். ஆனால் கடவுளைக் காண இவையாவும் உதவமாட்டா.

கடவுளைக் காண வேறு என் செய்வது? விடை வருகிறது:

54. பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப   

து பரந்தப-ஆனால், எதிரிகளை எரிப்பவனே! அர்ஜுந-அர்ஜுனா, ஏவம் வித: அஹம் - இவ்விதமாக நான், அநந்யயா: பக்த்யா-வேறெதுவும் வேண்டாத பக்தியால், த்ரஷ்டும் ஸக்ய-காணுதல் இயலும், தத்த்வேந ஜ்ஞாதும் ப்ரவேஷ்டும் ச-உள்ளபடி அறியவும் ஒன்றவும் (முடியும்).

பொருள் : பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.

அனன்ய பக்தி-கடவுளைத்தவிர வேறு ஒன்றையும் நாடாத பக்தி. அது கடவுளுக்குப் புறம்பாக எதையும் பொருள்படுத்துவதில்லை. எல்லாம் அவன் மயம், எல்லாம் அவன் செயல் என்ற மனநிலை அனன்ய பக்தியினின்று வருகிறது.

ஒரு ராஜ மாளிகையில் சிப்பந்திகள் நடந்துகொள்ளும் முறையினின்று அரசன் அதில் வீற்றிருக்கின்றான் என்று யூகித்து உணரலாம். அந்த உணர்ச்சி மட்டும் போதாது. அரசனைக் கண்கூடாகக் காண்பது அதிலும் மேல். இனி, அவனைக் காண்பதிலும் பெரிய நிலையொன்று உண்டு. அரசனோ ஒட்டி உறவாடுதலே சாலச்சிறந்தது. அங்ஙனம் அனன்ய பக்தியால் ஒருவன் கடவுளின் சாந்நித்தியத்தை முதலில் உணர்கிறான். அதன்மேல் தர்சனம் உண்டாகிறது. பிறகு தானே அதில் ஒடுங்குகிறான். இத்தனையும் செய்ய வல்லது பக்தி.

பலர் பாலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பாலைப் பருகினவர்கள் அதிலும் சிலரே.

ஊனக்கண் கொண்டு கடவுளைக் காணமுடியுமா என்ற பேச் செழுந்தது. இல்லை; ஊனக் கண்களால் காணமுடியாது. பக்தி பண்ணும்போது அன்பு மயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகிறது. அச்சரீரத்துக்கு அன்பு மயமான கண்களும் காதுகளும் உண்டு. அவற்றால் நீ இறைவனைக் காணவும் கேட்கவும் முடியும்.

பக்தியைப் பெருக்கி இறைவனை அடைதற்கு என்ன செய்ய வேண்டும்? விடை வருகிறது :

55. மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ   

பாண்டவ-பாண்டவா! ய: மத்கர்மக்ருத்-எவன் செய்ய வேண்டிய கடமைகளை என் பொருட்டே செய்வானோ, மத்பரம:-என்னையே அடையவேண்டும் என்று குறிக்கோள் கொள்வானோ, மத்பக்த:-என்னிடம் பக்தி கொண்டவனோ, ஸங்கவர்ஜித:-பற்றற்றவனோ, ஸர்வபூதேஷு நிர்வைர:-எவ்வுயிரிடத்தும் பகை இல்லாதவனோ, ஸ:-அவன் மாம் ஏதி-என்னையே அடைகிறான்.

பொருள் : என்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,என்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான், எவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன், பாண்டவா! அவனென்னை எய்துவான்.

எல்லா ஜீவர்களும் கர்ம சொரூபம். ஒருவன் எத்தகையவன் என்பதை அவன் செய்யும் கர்மம் விளக்குகிறது. மக்களுள் கடவுளுக்கென்றே கர்மம் செய்பவன் சிறந்தவன். அரசாங்கத்துக் கென்றே கர்மம் செய்கிறவர்கள் உளர். அதன் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வது அவர்களிற் சிலரது குறிக்கோள். ஆனால் பக்தனோ கடவுளை அடைதலையே ஒப்பற்ற குறிக்கோளாகக் கொள்கிறான்.

ஆயுளெல்லாம் ஒருவன் சிறைவாசம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதில் விருப்பமில்லாது அவன் அவ்வாழ்வை நடத்துகிறான். ஆனால் கடவுள் வழிபாடு அத்தகையதன்று. நாள்தோறும் புதிய இனிமை அதினின்று பிறக்கிறது. இறைவன்பால் அளவில்லா அன்பு ஊற்றெடுக்கிறது.

இறைவனிடம் அன்பு அதிகரிக்கின்றவளவு உலகப் பொருள்களிடத்துப் பற்று அகலுகிறது. ஒருவன் மற்றொருவனை வெறுப்பதற்குக் காரணம் தான் அடையவிரும்பும் பொருளை மற்றொருவன் கைக்கொள்ள முயலுவதால் வருகிறது. பக்தனுக்கோ ஒரு பொருளிலும் பற்றில்லை யாதலால் அதை முன்னிட்டு யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. மனிதன் எதன்பால் தன்னை ஒப்படைக்கின்றானோ அதை அவன் அடைகிறான். கடவுள்பால் தன்னை ஒப்படைப்பவன் கடவுளை அடைகின்றான்.

ஈசுவரனிடம் நமக்கு எவ்வளவு தீவிரமான பக்தி இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா? தனது கணவனிடம் ஒரு கற்புடைய மாதுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்தினிடம் ஒரு லோபிக்கு இருக்கும் ஆசை, உலகப் பொருள்களைப் பெறவேண்டுமென்று பற்றுள்ளவர்கள் கொள்ளும் ஆவல் இந்த மூன்றும் ஒன்று கூடினாற்போன்ற தீவிர பக்தியானது ஈசுவரனைக் காணவேண்டியதற்காக உன் மனதில் உதித்திருக்குமானால் அப்போது அவனை நீ நிச்சயமாக அடைவாய்.


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #18 on: April 20, 2012, 12:31:41 PM »
பன்னிரண்டாம் அத்தியாயம் 

 பக்தி யோகம்

ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில் தான் கடவுளுக்கு அதிக பிரீதி. சகுண நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5 -சகுண பிரம்ம உபாஸனை முறைகள் 6-12 -பக்தனது பேரியல்புகள் 13-20.

அர்ஜுந உவாச

1. ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:   

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், யே பக்தா: ஏவம் ஸததயுக்தா:-எந்த பக்தர்கள் இவ்வாறு யோகத்தமர்ந்து, த்வாம் பர்யுபாஸதே-நின்னை வழிபடுகிறார்களோ, யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி-மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ,
தேஷாம் யோகவித்தமா: கே-இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?

முன் அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் சொல்லியபடி சகுண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா அல்லது நிருபாதி, நிர்விஷய, நிர்க்குண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா என்பது கேள்வி.

ஸ்ரீபகவாநுவாச

2. மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே மனத்தைச் செலுத்தி, நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய், யே-எந்த பக்தர்கள், பரயா ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக, மாம் உபாஸதே-என்னை வழிபடுகிறார்களோ, தே யுக்ததமா-அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று, மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.

பகவான் விசுவரூபத்தை யுடையவர்; பரமேசுவரன். அவர் சகுண பிரம்மம். உலகுக்கு அந்தர்யாமியாயிருந்து அதை ஆளுகிறார். யோகிகளுக்கெல்லாம் அவரே மேலான ஈசுவரன். சர்வக்ஞன் என்று அவரைத்தான் சொல்ல வேண்டும். முழுமனதையும் ஒழுங்குப்படுத்தி அவர்மீது செலுத்துகிறவர்கள் பக்தர்கள். அவர்களுக்கு விருப்பு, வெருப்பு, மனக்கிலேசம் முதலியன கிடையா. இரவும் பகலும் இறைவனைப் பற்றிய சிந்தனை யொன்றே அவர்களின் உள்ளத்தில் குடிகொள்கிறது. அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பதும் இறைவன் பொருட்டேயாம். ஆதலால் அவர்கள் சிறந்த யோகிகள் ஆகிறார்கள்.

கடவுளை அரூபியெனத் தியானிப்பது முற்றிலும் சரியானதே. ஆனால் அதுதான் உண்மை, மற்றக் கொள்கைகளெல்லாம் பொய் என்று எண்ணிவிடாதே. அவன் ரூபி எனத் தியானிப்பதும் சரியானதே. ஆனால் அவனை நீ காணும் வரையில் உனது பிரத்தியேகமான கொள்கையைக் கைவிடாதே. அப்பால் எல்லாம் தெளிவாகும்.

மற்று, நிர்க்குண நிராகார பிரம்மத்தை உபாசிப்பவர்கள் சிறந்த யோகிகள் ஆகமாட்டார்களா? அதற்கு விடை வருகிறது :

3. யே த்வக்ஷரமநிர்தேஸ்யமவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம்   

4. ஸந்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:   

து யே அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம்-எவர், அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), ஸர்வத்ரகம் அசிந்த்யம்-எங்கும் நிறைந்ததும், மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும், கூடஸ்தம் அசலம் த்ருவம்-நிலையற்றதும், அசைவற்றதும் , உறுதி கொண்டதுமாகிய பொருளை, பர்யுபாஸதே-வழிபடுகின்றனரோ.

இந்த்ரியக்ராமம் ஸந்நியம்ய-புலன்களின் கூட்டத்தை நன்கு அடக்கி, ஸர்வத்ர ஸமபுத்த, :-எங்கும் சமபுத்தியுடையோராய், ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய, தே மாம் ஏவ ப்ராப்நுவந்தி-அவர்களும் என்னையே அடைகிறார்கள்.

பொருள் : இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ

பொருள் : இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்

நிர்க்குண பிரம்மம் எத்தகையது என்பது விளக்கப்படுகிறது. அது அநிர்தேச்யம்-உலகப்பொருள் எதனோடும் சீர்தூக்க இடந்தருகிறதில்லை யாதலால் அது எத்தகையது என்ற சொல்லால் விளக்க முடியாது. உலகமோ தோன்றவும் மறையவும் செய்கிறது. தோன்றியபொழுது வியக்தமாகவும் மறைந்தபொழுது அவ்யக்தமாகவும் உலகம் இருக்கிறது. ஆனால் பரபிரம்மத்தின் கண் இத்தகைய விகாரம் ஒன்றும் கிடையாது. அதீதத்தில் அது இருந்தபடி இருக்கிறது. ஆதலால் அது அவ்யக்தம். கடலின் கீழ் உள்ள பனிக்கட்டி தோன்றாது இருந்தபடி இருப்பது போன்றதா பிரம்மம் என்ற கேள்வி எழுகிறது. அப்படியல்ல, இது ஸர்வத்ரகம்-அங்கு இங்கு என்று சொல்ல இடந்தராது நீக்கமற எங்கும் நிறைபொருள். இடமே அதனுள் ஒடுங்கியது எனலாம். சொப்பனத்தில் பார்த்த ஒரு பெரிய இடம் மனதில் ஒடுங்குகிறது. அதே மனதானது நன்மை தீமை, இன்ப துன்பம் ஆகியவைகளை எண்ணவும் உணரவும் செய்கிறது. ஆனால் அம்மனது பிரம்மத்தை உணரவல்லதன்று. பிரம்மம் அசிந்த்யம்-சிந்தனைக் கெட்டாதது. கூட என்ற சொல் மாறுபடும் தன்மையுடையது என்று பொருள்படுகிறது. பிரபஞ்சம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. மாறுபடும் பிரபஞ்சத்துக்கு பிரம்மம் இருப்பிடமாகிறது. நிலையற்றதை இது நிலைத்திருந்து தாங்குவதால் இதற்கு கூடஸ்தன் என்று பெயர். ஓயாது மாறுபடுகிற மேகத்தைத் தூக்கிக்கொண்டு காற்று நகர்ந்தோடுகிறது. சலிப்பது காற்றின் இயல்பு. பிரம்மத்திலோ சலனம் இல்லை. அது அசலம்-நகராதது. இனி, ஆகாசம் அசைவதில்லை. இருந்தபடி அது தோன்றுகிறது. பிரளயத்தில் இருந்தபடி அது அழிகிறது. பிரம்மம் அத்தகையதோ? அல்ல, அது த்ருவம்-நிலைபேறு உடையது. சுத்த சைதன்யமாகிய அது கால தேச வர்த்தமானத்தால் அடிபடாதிருப்பதால் அது அக்ஷரம், அதாவது அழியாதது.

இனி, நிர்க்குண பிரம்ம உபாசனைக்குத் தகுதியுடையவர் யார் எனின், அவர்களிடத்து சமபுத்தி யிருக்க வேண்டும். இன்பம் தருபவைகள், துன்பம் தருபவைகள் ஆகிய இரண்டையும் ஒரே பான்மையுடன் கருதுதல் சமபுத்தியாகும். இந்திரியக் கூட்டங்களை யெல்லாம் யார் நன்கு கட்டியாளுகிறார்களோ அவர்களுக்கே மனதின் நடுநிலை வந்தமைகிறது. மனதின் நடுநிலை என்பது உலகுக்குப் பயன்படாது பிணம்போன்று கிடப்பதல்ல. எல்லா உயிர்களையும் பிரம்ம சொரூபமாகக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவர்களின் நன்மையில் நாட்டம் வைத்திருப்பதற்குச் சேவை செய்வதே அறிகுறியாகும். ஒரு சிலர் பிரம்ம சொரூபத்தில் லயித்துக் கர்மமற்றிருப்பார்கள். அங்ஙனம் ஜீவர்களை யெல்லாம் பிரம்ம சொரூபமாகக் காண்பதும் அந்த ஜீவர்களுக்கு பரம நன்மையை விளைவிக்கிறது. தைலதாரை போன்று இடையறாது மனது பிரம்ம சொரூபத்தில் போவது உபாஸனையாகும்.

மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு ஓசையும் தனித்தனி உருவத்தையுடையதுபோலத் தோன்றும்; ஆனால் அடிப்பதை நிறுத்தினால் ஓசை சிறிது நேரம் வரையில் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும். தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத் தோன்றுகிறது. மணியின் ஓசையைப் போலக் கடவுள் உருவமுள்ளவனாயும் உருவமில்லாதவனாயுமிருக்கிறான்.

இரண்டு உபாஸனையும் ஒன்று எனில் எதை வேண்டுமானாலும் ஒருவன் உபாஸிக்கலாமா? உபாஸிக்கலாகாது. ஏனென்றால் : (3-4)

5. க்லேஸோऽதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே   

அவ்யக்த ஆஸக்த சேதஸாம்-உருவற்ற (அவ்யக்த) பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும், தேஷாம் க்லேஸ: அதிகதர:-அந்த மனிதர்களுக்கு சாதனையில் உழைப்பு அதிகம், ஹி தேஹவத்பி-ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால், அவ்யக்தா கதி-உருவற்ற பிரம்ம விஷயமான மார்க்கம், து:கம் அவாப்யதே-மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.

பொருள் : ஆனால், அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் அவ்யக்த நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

இருதர உபாஸகர்களும் அடையும் குறி ஒன்றே. ஆனால் தேகாபிமானம் உடைய ஒருவனுக்கு நிர்க்குண பிரம்ம உபாஸனையைவிட சகுண பிரம்ம உபாஸனை எளிது. நிர்க்குண பிரம்ம உபாஸகன் துவக்கத்திலேயே உடல் பற்றை அறவே நீக்க வேண்டும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகின்றவிடத்து மேலோடு பழத்தினின்று தானாகப் பிரிந்து போகிறது. அங்ஙனம் ஞான முதிர்ச்சி யடைபவனுக்கு தேகாபிமானம் போய்ஒழிகிறது. தேகப்பற்றுடையவனுக்கு எளிதாயிருப்பது சகுண பிரம்ம உபாஸனை. அதில் துவக்கி மேல் நோக்கிப் போகின்றவனுக்கு சாதனத்தில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை.

ஞானயோகி நானே பிரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன் என்று கருதும் வரையில் அவ்வித பாவனை கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில் முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான்.

இனி, ஈசுவர உபாஸனை எப்படிச் செய்யவேண்டும்? விடை வருகிறது :

6. யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே   

7. தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம் 

து மத்பரா:-ஆனால் என்னையே கதியாகக் கொண்ட, யே ஸர்வாணி கர்மாணி-எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும், மயி ஸந்ந்யஸ்ய-என்னிடம் சமர்ப்பணம் செய்து, மாம் ஏவ - என்னையே, அநந்யேந யோகேந-பிறழாத யோகத்தால், த்யாயந்த உபாஸதே-இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,

பார்த-பார்த்தா! மயி ஆவேஸித சேதஸாம்-என்பால் அறிவைப் புகுத்திய, தேஷாம் நசிராத்-அவர்களை சீக்கிரமாகவே, அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்-நான் மரணவடிவான சம்சாரக் கடலிலிருந்து, ஸமுத்தர்தா பவாமி-கரையேற்றுபவனாக ஆகிறேன்.

பொருள் :  எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?

பொருள் : என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்

விசுவ ரூபத்தையுடைய ஈசுவரனைத் தவிர வேறு ஒன்றையும் பற்றுக்கோடாகக் கொள்ளாது அவனையே சார்ந்து யார் அவனுக்கென்றே பணி செய்யும் பான்மை யுடையவர்களாயிருக்கிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பு மயமாயுள்ள சம்சாரப் பெருங் கடலினின்று விரைவில் கரையேற்றப்படுகிறார்கள்.

ஈசுவரானுபவத்துக்கும் அடையாளங்கள் உள்ளன. பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகின்றதோ அவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஈசுவர தரிசனம் கிடைக்குமென்று தெரிந்துகொள்.

அதற்காக ஜீவன் செய்யவேண்டியதென்ன? விடை வருகிறது : (6-7)

8. மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஸய
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸய:   

மயி ஏவ மந: ஆதத்ஸ்வ-என்னிடமே மனதை நிலைநிறுத்து, மயி புத்திம் நிவேஸய -என்னிடமே புத்தியை ஈடுபடுத்து, அத: ஊர்த்வம்-அதற்கு மேல், மய்யேவ நிவஸிஷ்யஸி-என்னிடமே வாழ்வாய், ந ஸம்ஸய:-ஐயமில்லை.

பொருள் : மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.

உணர்ச்சி மயமாயிருப்பது மனது. தீர்மானிக்கும் தன்மையது புத்தி. இவ்விரண்டும் அந்தக் கரணத்தின் பிரிவுகள். ஒருவனது உடல் எங்கே இருக்கிறது என்பதிலிருந்து அவனது வாசஸ்தானத்தை அறிய வொண்ணாது. உள்ளம் எங்கிருக்கிறதோ மனிதன் அக்கணமே அங்கிருக்கிறான். இப் பூவுலகிலேயே சிலர் நரக வாசம் செய்கின்றனர்; வேறு சிலர் விண்ணுலகு நண்ணியவர் போன்று இன்பமடைகின்றனர். இங்கு இருந்தபடியே சித்தத்தைச் சிவத்தின்பால் வைத்து அவனது சந்நிதி சேருவார் உளர். அகம் எப்படியோ புறம் அப்படி. உள்ளத்தை இறைவனிடம் வைத்தது முதற்கொண்டு ஒருவன் இறைவனிடத்தே வசிக்கிறான் என்பதற்கு அவனது மனநிலையே சான்று. ஆதலால் அதைப் பற்றி ஐயமில்லை என்கிறார் பகவான்.

உலகத்தில் மனிதன் பிறக்கும்போது, வித்தியாகுணம் அவித்யா குணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். வித்தியா குணம் முக்தியை அடையச் செய்யும். அவித்யா குணமோ மனிதனை உலகப் பற்றுக்குள்ளாக்கும். பிறக்கும்போது இவ்விரு குணங்களும் தராசின் தட்டுகளைப் போலச் சரிசமமாக இருக்கும். சீக்கிரமத்தில் உலக இன்பங்கள் ஒரு தட்டிலும் ஆத்ம விஷயங்கள் மற்றொரு தட்டிலும் ஏற்றப்படுகின்றன. மனம் உலக சுகங்களை விரும்புமானால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டு கனத்துக் கீழே செல்லும். அவ்வாறன்றி ஆத்ம விஷயத்தை மனம் பற்றுமானால் அவ்வாத்ம விஷயங்களடங்கிய தட்டு ஈசுவரனை நோக்கித் தாழும்.

உள்ளத்தை உறுதியாக இறைவன்பால் வைக்க இயலாதவர் என்ன செய்வது? விடை வருகிறது:

9. அத சித்தம் ஸமாதாதும் ந ஸக்நோஷி மயி ஸ்திரம்
அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய   

அத சித்தம்-ஒரு வேளை சித்தத்தை, மயி ஸமாதாதும்-என்னிடம் நிறுத்தி வைப்பதற்கு, ந ஸக்நோஷி-முடியாவிட்டால், தத: அப்யாஸ யோகேந-அப்போது (இறைவன் திருநாமம் ஓதுதல் போன்ற) பயிற்சியினால், மாம் ஆப்தும் இச்ச தநஞ்ஜய-என்னை அடைய விரும்பு அர்ஜுனா!

பொருள் : என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.

மனது உறுதியாக இறைவன்பால் நிலைத்து நின்றுவிடுமானால் அது முதிர்ந்த பக்தியாகிறது. அப்படியல்லாது அது விஷயாதிகளில் சலித்து ஓடும் தன்மையதானால் பழக்கத்தால் அதை ஒழுங்குப்படுத்தவேண்டும். விஷயங்களிலிருந்து அதை மீட்டெடுத்து பகவானிடம் வைப்பதற்கு அப்பியாச யோகம் என்று பெயர். நல்லியல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும் அப்பியாசமே காரணமாகிறது. பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம்.

ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்; விளையாடுவான். அதைக் கைகளில் தூக்கிக்கொண்டு போவான்; அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தைக் கவனித்த ஓர் அறிஞர் நாயுடன் அப்படிப் பழகலாகாது என்றார். நாயின் சொந்தக்காரன் அதைக் கேட்டதும் நாயைத் தூர எறிந்துவிட்டான். இனி, அதனோடு கொஞ்சிக் குலாவுவதில்லை என்றும் தீர்மானித்தான். தன் எஜமானனது மாறிய மனதை நாய் அறியவில்லை. அது அடிக்கடி அவனிடம் ஓடிவந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனதில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த ஆசை என்னும் நாயை நீ விடவேண்டுமென்றாலும் அது உன்னை எளிதில் விடாது; இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிரமத்தில் அதனுடைய தொந்தரைகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.

மனது அப்பியாசம் என்ற கட்டுக்கு அடங்குவது இல்லவே இல்லை. அப்பொழுது என் செய்வது? விடை வருகிறது :

10. அப்யாஸேऽப்யஸமர்தோऽஸி மத்கர்மபரமோ பவ
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி 

அப்யாஸே அபி அஸமர்த அஸி= (இவ்விதமான) பயிற்சியில் கூட திறமை அற்றவனாக இருந்தால், மத் கர்ம பரம: பவ-எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டிரு, மதர்தம் கர்மாணி குர்வந் அபி-என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும், மாம் அவாப்ஸ்யஸி-என்னை அடைவாய்.

பொருள் : பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.

அப்பியாசம் செய்ய மனது ஒருப்படாதவிடத்து அது நெடு நாளாக வழக்கமாகச் செய்துவந்த வினையில் ஈடுபடுகிறது. பற்றுதலால் வந்த வினையைத் தனக்கென்று செய்யாது ஈசுவரனுக்காக வென்று செய்யுங்கால் சாதகன் இறைவன் கையில் கருவி போல ஆகிறான். கருவிக்குத் தனிச் சுதந்திரம் கிடையாது. சாதகன் தன்னைக் கருவியாக எண்ணி வினையாற்றுவதால் சித்த சுத்தி உண்டாகி ஞானத்தைப் பெற்றுப் பக்குவமடைகிறான். இறைவனுக்குக் கைங்கரியம் செய்வதால் ஜீவபோதம் போய்ப் பரபோதம் வருகிறது.

எல்லாம் ஈசுவரனுடைய ஆக்ஞையால் நடக்கின்றனவென்றும் தான் ஈசுவரன் கையில் வெறும் கருவியென்றும் எவனுடைய மனதில் பதிகின்றதோ அவன் ஜீவன் முக்தனாவான். ஈசுவரா, உனது காரியத்தை நீயே செய்தருள்கிறாய். ஆனால் நான் செய்கிறேன் என்று ஜனங்கள் சொல்கின்றனர்.

கர்மத்தைத் தனக்காகவென்றே செய்யும் தன்மை யுடையவனுக்குக் கர்மபந்தம் ஒழிய வழியில்லையா? விடை வருகிறது :

11. அதைததப்யஸக்தோऽஸி கர்தும் மத்யோகமாஸ்ரித:
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்   

மத்யோகம் ஆஸ்ரித:-என்னை அடைவது என்ற யோகத்தை சார்ந்து நின்று, தத் அபி-இதைக் கூட, கர்தும் அத: அஸக்த: அஸி-செய்யத் திறமையற்றவனாக இருந்தால், தத: யதாத்மவாந்-அப்போது தன்னைத்தான் கட்டுப்படுத்தி, ஸர்வகர்மபலத்யாகம் குரு-எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.

பொருள் : இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.

முழு மனதை இறைவனுக்கென்றே ஒப்படைத்து விடுவது சிறந்தது. அதில் சாதனம் பூர்த்தியடைகிறது. அப்பெருநிலையில் நிலைத்திருக்க இயலாதவர்கள் பழக்கத்தால் மனதை இறைவன்பால் திருப்பவேண்டும். மனம் வெளிஉலகப் பிரவிருத்தியில் நாட்டம் கொள்ளும் தன்மையதானால் அப்பியாசம் செய்வதும் கடினமாகும். அப்பொழுது பகவானுக்கென்றே பணிவிடை  செய்வது சிலாக்கியம். கர்மத்தில் வைத்த பற்றுதலாலும், தன் கர்மத்துக்குத் தானே கர்த்தாவென்று எண்ணுவதாலும் கர்மபலத் தியாகம் உண்டாவதில்லை. பெரும்பற்றுடையவன் குறிப்பிட்ட சில வேளையிலாவது தன் கர்மமெல்லாம் ஈசனுடைய கர்மம் என்று தனக்கு ஞாபகமூட்டி வருவானாகில் அந்த எண்ணம் நாளடைவில் அவனைப் பக்குவப்படுத்தும்.

உன்னால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஸ்வபாவம் ஒவ்வொருவனையும் கர்மம் செய்யும்படி ஏவுகின்றது. ஆகையால் கர்மங்கள் முறையாகச் செய்யப்படட்டும். கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் பாவ புண்ணியங்களில் வெறுப்பு விருப்புக் கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் பற்றுதலற்றதாகும். இவ்வித மனோபாவத்துடன் செய்யப்படும் கர்மம் முடிவில் கடவுளிடம் கொண்டுபோகும் மார்க்கமாக அமைகிறது.

பக்குவமடைதலின் அறிகுறி யாது? அதன் விளக்கம் வருகிறது :

12. ஸ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஸிஷ்யதே
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம்   

அப்யாஸாத் ஜ்ஞாநம் ஸ்ரேய:-பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது, ஜ்ஞாநாத் த்யாநம் விஸிஷ்யதே-ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது, த்யாநாத் கர்மபல த்யாக:-தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது, த்யாகாத் அநந்தரம் ஸாந்தி-அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது (தியாகத்தின் மூலம் அமைதி கிடைக்கிறது).

பொருள் : பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.

ஒருவன் ஆலயத்தை வலம் வந்து சர்வ திக்கிலும் திரும்பி நமஸ்காரம் செய்கிறான். தான் ஏன் அப்படிச் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. எல்லாரும் செய்வதைப் பார்த்துக் குருட்டுப் போக்காக அவனும் அப்பழக்கத்தில் ஈடுபடுகிறான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுதற்கே அத்தகைய வழிபாடு ஏற்பட்டுள்ளது என்பது அவனுக்குத் தெரியாது. விவேகமில்லாத அந்த அப்பியாசத்தைக் காட்டிலும் கடவுள் எங்கும் நிறைபொருள் என்ற வாசா ஞானம் சிறந்தது. அந்த வாசா ஞானத்தோடு நின்று விடுவதை விட சாதகன் காண்கின்ற அனைத்தும் பரமன் மயம் என்று தியானிப்பது மேலானது. அனைத்தையும் கடவுள் மயமாகத் தியானித்து அவைகளைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணலாகாது. தான் வாழ்ந்திருப்பது கடவுளுக்காக வென்று கருதித் தனது கர்மத்தின் பயன் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும். தான் செய்கின்ற கர்மம் தனக்காகவல்ல, கடவுளுக்காகவே செய்யப்படுகிறது என்ற நினைவு தோன்றுகிற அதே வேளையில் சாந்தியும் வருகிறது. தனக்கென்று தொழில் புரிபவன் அசாந்தியடைகிறான். இறைவனுக்கென்று தொழில் புரிபவன் இன்பமடைகிறான்.

ஒரு பருந்து அலகில் ஒரு மீனைக் கௌவிக் கொண்டிருந்தது. அதைப் பிடுங்குதற்காகச் சில காக்கைகளும் பருந்துகளும் அப் பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரித்தன. அது எத்திக்கில் சென்றாலும் காகங்களும் பருந்துகளும் கூடவே பறந்து சென்றன. தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அப்பருந்து மீனை அப்பால் போட்டுவிட்டது. உடனே அதை வேறொரு பருந்து கௌவிக்கொள்ள காகங்களும் மற்ற பருந்துகளும் இந்தப் புசிய பருந்தைத் தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால் உபத்திரவத்தினின்று தப்பித்த முதல் பருந்து சாந்தமாய் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. இப்படி சாந்தமாய் விருக்கும் பக்ஷியைப் பார்த்து வணங்கி, ஓர் அவதூதர், பருந்தே, நீ எனக்கு குரு. உலகப்பற்றுக்களாகிய சுமையை மனிதன் கீழே போடாத வரையில் அவனால் உலக சஞ்சலங்களினின்றும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவனுக்குச் சமாதானம் ஏற்படாது. இதை நீ எனக்குக் கற்பித்தாய் என்றார்.

எத்தகையவன் கடவுளுக்கு உவந்த பக்தனாகிறான்? விடை வருகிறது :

13. அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ   

14. ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:   

ய: ஸர்வபூதாநாம் அத்வேஷ்டா-எவர் எவ்வுயிரையும் பகைத்தலின்றி, மைத்ர: கருண ஏவ -அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், நிர்மம நிரஹங்கார:-யானென்பதும் எனதென்பதும் நீங்கி, ஸமது:கஸுக: க்ஷமீ-இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்.

ஸததம் ஸந்துஷ்ட:-எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், யதாத்மா த்ருடநிஸ்சய:-தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், மயி அர்பித மந: புத்தி:-என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து, மத்பக்த: ஸ: யோகீ-என் தொண்டனாகிய யோகி, மே ப்ரிய:-எனக் கினியவன்.

பொருள் : எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,

பொருள் : எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.

வெறுப்பானது வேற்றுமையை வளர்க்கிறது; உடலெங்கும் விஷத்தை உண்டுபண்ணுகிறது. ஆதலால் வெறுப்பு நல்வாழ்க்கைக்கு உதவாது. வெறுப்பு அற்றிருந்தால் மட்டும் போதாது. ஜடப்பொருள்கள் வெறுப்பதில்லை. உயிர் வாழ்பவன் எல்லா உயிர்களிடத்தும் நட்புக்கொள்ளவேண்டும். அன்பின் வழியது உயிர் நிலை; அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. ஆக, நட்பே உயிர்களை இணைக்கின்றது. பிறரைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதற்கு ஒருவன் உறவாடலாம். அது பொருந்தாது. தன் வாழ்க்கை பிறருக்குப் பயன்படும்படி செய்யவேண்டும். அப்பொழுதே அது கருணை எனப் பெயர் பெறுகிறது. பிறரிடத்துக் கருணை காட்டுவதால் தன் பொருளுக்கே நஷ்டம் வரலாம். அதைப் பொருள்படுத்தாத நிலை மமகாரம் அற்ற நிலையாம். எனது என்ற எண்ணம் ஒழிந்து பட்டுப்போகிறது. உடல் அபிமானம் அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது. கருணையின் மேலீட்டால் பக்தன் ஒருவனுக்கு அஹங்காரம் அறவே அகன்றுவிடுகிறது. தன் பொருள், தன் உடல்வாழ்க்கை இவைகளை மதியாமையினால் ஒருவனுக்கு இன்பமே வந்தமையலாம் அல்லது துன்பமே வந்தமையலாம். அவைகளை இன்ப துன்பமாக அவன் பாகுபடுத்துவதில்லை. தனக்குற்ற துன்பத்தைச் சகித்துக்கொண்டு துன்பம் செய்தவனிடத்துப் பொறாமை பூணலாம். பக்தன் ஒருவன் அப்படிப் பொறாமை கொள்வதில்லை. தன்னைத்தானே மன்னிப்பது போன்று மற்றவர்களையும் மன்னிக்கிறான். துன்பத்தைச் சகித்தல் ஒருவித எதிர்மறை நிலையாகிறது. பக்தனோ இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற கோட்பாட்டின்படி சந்தோஷமுடையவனாயிருக்கிறான். வாழ்க்கையில் அடக்கமும் ஒழுங்குப்பாடும் நன்கு அமைந்திருப்பதால் அவன் யோகியாகிறான். பாரமார்த்திக விஷயத்தில் அவனுக்குச் சந்தேகம் கிடையவே கிடையாது. அதைப்பற்றி அவனுக்கு உறுதியான நிச்சய புத்தி யிருக்கிறது. யோகத்தால் தான் பெற்ற தெள்ளிய மனதையும் புத்தியையும் அவன் கடவுளுக்கென்றே ஒப்படைக்கிறான். இங்ஙனம் பகவானிடத்து பக்தி பண்ணுபவனே அவனுக்கு முற்றும் உவந்த தோழனாகிறான்.

மனிதன் சமர்ப்பிக்கும் சொத்துக்களையெல்லாம் ஈசுவரன் மதிக்கிறானோ? இல்லவே இல்லை. பக்தியையும் பிரேமையையும் எவனொருவன் ஸமர்ப்பிக்கிறானோ அவனுக்கு மட்டுந்தான் ஈசுவரனுடைய கிருபை உண்டாகும். தன் பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக வைராக்கியங்களையுமே ஈசுவரன் சிலாகித்துக் கொண்டாடுகிறான். (13-14)

இன்னும் யார் அவனுக்கு உவந்தவர்கள்? விடை வருகிறது :

15. யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:   

யஸ்மாத் லோக: ந உத்விஜதே-எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, ச லோகாத் ந உத்விஜதே-எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ, ச ஹர்ஷ அமர்ஷ பய: உத்வேகை-களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும், ய: முக்த: ஸ: மே ப்ரிய:-எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்.

பொருள் : எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்

பக்தன் ஒருவனுடைய வாழ்க்கை உலகுக்கு ஒரு நாளும் இன்னல் விளைவிப்பதில்லை. இன்னல்போன்று தோன்றும் சில செயல்கள் உண்மையில் ஹிதமாகவே முடியும். ஆசிரியர் மாணாக்கனைக் கண்டிப்பது, மருத்துவர் ரணவைத்தியத்தில் நோயாளிக்குத் துன்பம் விளைவிப்பது, அறப்போரில் வீரன் எதிரியைத் தாக்குவது இவையாவும் வெளித்தோற்றத்திற்கு இடர் போன்று இருப்பினும் உண்மையில் உலகுக்குச் செய்த நன்மைகளாகும். இனி, தனது உடல் வாழ்க்கையில் தனக்கு என்ன தான் கேடுவந்தாலும் அதனால் அவன் கிலேசமடைவதில்லை. துன்பப்படாத உயர்ந்த மன நிலையையுடைய ஒருவனைப் புற உலகம் எவ்விதத்திலும் வருத்தப்படுத்த முடியாது. அப்பர், பிரஹ்லாதன் போன்றவர்கள் இதற்குச் சான்றாகிறார்கள்.

எத்தகைய பயிற்சியால் இத்தகைய மனநிலை வருகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை இதே சுலோகத்தில் வருகிறது. இன்பந்தரும் பொருள்களைப் பெற்று ஒருவன் களிப்புறலாகாது. களிப்புக்கு வசப்படும் மனது துன்பத்துக்கும் வசப்படக் கூடியது என்பதாகிறது. உறுதியான மனதே இன்பதுன்பம் இரண்டையும் சமனாகப் பாராட்டுகிறது. அமர்ஷம் என்பது சினம். ஒருவனுக்குக் கோபம் வருகின்றவளவு மனவலிவு குறைகின்றது. வலிவுடைய மரம் காற்றில் அசைவதில்லை. வலிவில்லாத கொடி காற்றில் அசைகிறது. கோபத்துக்கு உட்படாத மனது வலிவு பெற்று இன்பதுன்பங்களை நிகராகக் கருதுகிறது. பயம் மரணத்துக்கு ஒப்பானது. அஞ்சும் போதெல்லாம் ஒருவன் அழிந்துபட்டுப் போகிறான். அஞ்சாதிருப்பவனே உயிர் வாழ்கிறான். அச்சம் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. கலங்கிய நீரில் பிம்பம் தெரிவதில்லை. தெளிந்த நீரில் பிம்பம் தெரிகிறது. அங்ஙனம் கலங்கிய மனதில் ஆத்ம சொரூபம் விளங்குவதில்லை. கலங்கா நெஞ்சம் படைத்தவனே இறைவனைக் காண்கிறான் இறைவனைக் கண்டதும் அவனுக்கு உவந்த பக்தனாகிறான்.

பிறருடைய குணதோஷங்களைப் பற்றிப் பேசுவதில் காலத்தைச் செலவிடுபவன் தன் காலத்தை வீணிலே கழிப்பவனாகிறான். ஏனெனில் அப்படிச் செலவிடப்பட்ட காலம் தன்னையாவது ஈசுவரனையாவது பற்றிச் சிந்திக்கப்படாமல் பிறரைப்பற்றி யாதொரு பிரயோஜனமுமில்லாமல் சிந்திக்கப்பட்ட காலமாகிறது.

16. அநபேக்ஷ: ஸுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:   

அநபேக்ஷ: ஸுசி:-எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், தக்ஷ உதாஸீந:-திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கதவ்யத:-கவலை நீங்கியவனாய், ஸர்வ ஆரம்ப பரித்யாகீ-எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து, ஸ: மத்பக்த: மே ப்ரிய:-என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்.

பொருள் : எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்

இந்திரியங்கள் வாயிலாக வரும் இன்பங்களில் ஆசையற்றவன் அனபேக்ஷனாகிறான். அங்ஙனம் ஆசைகளை யகற்றுமளவு அவன் (சுசி:) தூயவனாகிறான். மனம், மொழி, மெய் மூன்றும் மாசற்றிருப்பது தூய்மை. அதனால் செயலில் சாமர்த்தியமுண்டாகிறது. எதிர்பாராது ஒரு கணப்பொழுதில் வந்தமையும் கருமத்தை உள்ளபடி அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப நடந்து கொள்ளவும் அவனுக்கு இயலுகிறது. அதை முன்னிட்டே அவனை தக்ஷ: என்று அழைக்கவேண்டும். செயலாற்றும் வல்லமையைத் தனக்கு ஒத்தவர்களுக்கு ஒருவிதமாகச் செய்தலும் ஒவ்வாதவர்களுக்கு வேறு விதமாகச் செய்தலும் அவனிடத்தில்லை. நிறைகோல் போன்று ஓரம் சாராது எல்லார்க்கும் பொதுவாக நடந்து கொள்வதனால் அவன் உதாஸீனன் ஆகிறான். அப்படி நேர்மையாக நடந்து கொள்பவனுக்கு மனத்துயரம் ஒரு நாளும் உண்டாவதில்லை. அவனுக்குக் கவலை கிடையாதெனினும் கர்ம பலனில் பற்றுவைத்திருக்கலாம் என்று நினைத்தல் கூடும். ஆனால் உண்மையில் அவன் பற்று அற்றவன். தனக்கென்று கருமம் செய்வதையெல்லாம் அவன் அறவே துறந்தவன் ஆகிறான். இறைவனிடத்திருந்து அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை யாதலால் அவன் உண்மையான பக்தனாகிறான். ஆகையினாலே அவன் பகவானுக்கு மிக இனியவன் ஆகிறான்.

தன் மனதை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் உண்மையான அன்பும் பரமனை அடைய உற்ற பாதைகளாகும்.

17. யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸுபாஸுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:   

ய: ந ஹ்ருஷ்யதி-எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ, ந த்வேஷ்டி-எதையும் வெறுப்பதில்லையோ, ந ஸோசதி-எதற்காகவும் துயரப் படுவதில்லையோ, ந காங்க்ஷதி-எதற்காகவும் ஆசைப் படுவதில்லையோ, ஸுப அஸுப பரித்யாகீ-நன்மையையுந் தீமையையுந் துறந்த,
ஸ: பக்திமாந் மே ப்ரிய:-தொண்டனே எனக் கினியவன்.

பொருள் : களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.

இன்பமூட்டுகிற பொருளைப் பெற்றால் உலக மக்கள் மகிழ்கின்றனர். பக்தனுக்கோ அத்தகைய பொருள் வருவதால் மகிழ்ச்சி உண்டாவதில்லை. வேண்டாதவை வந்து வாய்க்குமிடத்து அவர்கள் வெறுக்கின்றனர். பக்தனுக்கு அது கிடையாது. விரும்பிய பொருள் கிடைக்கவில்லை அல்லது கைவிட்டுப் போய்விட்டது என்ற துன்பம் அவனுக்கில்லை. கடவுள் பக்தியிலேயே அவனுக்குத் திருப்தியுண்டாகிறபடியால் ஆசைப்பட வேண்டிய அவசியம் பக்தனுக்கில்லை. அன்புருவாய் இருக்கும் குழந்தைக்குப் பாபபுண்ணியம் இரண்டும் தெரியாது. பக்தியின் மேலீட்டால் பக்தனும் நன்மை தீமை யிரண்டையும் மறந்துவிடுகிறான். இத்தகைய பாங்குள்ளவனே பகவானுக்கு உவந்த பக்தனாகிறான்.

விருப்பு, வெறுப்பு, அச்சம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு ஈசுவரன் வருவதில்லை.

18. ஸம: ஸத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:
ஸீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:   

19. துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித்
அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:

ஸத்ரௌ ச மித்ரே ச-எவன் பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மாந அபமாநயோ: ஸம: - மானத்திலும், அவமானத்திலும் சம பாவனையுடன் எவன் இருக்கிறானோ, ததா ஸீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம:-குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டவன்,
ஸங்கவிவர்ஜித:-பற்றறுத்தவனோ.

துல்ய நிந்தா ஸ்துதி மௌநீ-புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யேந கேநசித் ஸந்துஷ்ட:-யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், அநிகேத:-குறியற்றான் (வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று அற்றவன்), ஸ்திரமதி:-திடமான புத்தி உடையவன், பக்திமாந் நர: மே ப்ரிய:-இத்தகைய பக்தன் எனக் கினியவன்.

பொருள் : பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.

பொருள் : புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்

எல்லாரும் ஈசனுடைய குழந்தைகள். ஈசனுடைய வடிவங்களைப் பகையென்றும் நட்பென்றும் பிரிப்பது பொருந்தாது. புதிதாக ஏற்படும் களவுக் காதலர் அவமானத்துக்கு அஞ்சுகின்றனர்; மானத்தைக் காப்பாற்ற முயலுகின்றனர். முதிர்ந்த காதலோ அஃதொன்றையும் பொருள்படுத்துவதில்லை. முதிர்ந்த பக்தியின் போக்கும் அத்தகையது. உடலில் அபிமானம் உடையவனுக்குக் குளிர் உண்டு; வெப்பம் உண்டு. அவைகளின் காரியமாக வரும் இன்ப துன்பம் முதலியனவுண்டு. உழைப்பாளி உடலைப் பொருள்படுத்தாது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பது போன்று பக்தன் பகவத் சேவையிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறான். வெயில், மழை, உணவு, ஓய்வு இவைகளைப் பற்றி அதிகம் நினைக்க அவனுக்கு நேரமில்லை. உடல் அபிமானம் நீங்குமளவு அவன் இயல்பாகவே பற்றற்றவன் ஆகிறான் நடு வீதியில் நின்றுகொண்டு அழுகின்ற ஆள் ஒருவனைப் பார்த்து உலகம் இகழ்கிறது. அவன் உற்றானை இழந்த துயரத்தால் அழுவானாயின் உலகத்தவர் இகழ்ச்சியைப் பொருள்படுத்தான். பக்தன் கடவுளைக் காண விரும்பி அழுகிறான். அவனைப் பித்தன் என்று உலகம் இகழ்தலைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. மேடையில் நன்றாகப் பாடும் ஒருவனை உலகம் புகழ்கிறது. அது பாடகனுக்கு உற்சாக மூட்டுகிறது. பக்தனோ பரம்பொருளைப் போற்றிப் பாடுகிறான். பரம்பொருளின் பெருமையே அவனைப் பாடச் செய்கிறது. உலகத்தவர் புகழ்ச்சியில் அவனுக்குப் பொருள் ஒன்றுமில்லை. இறைவனது புகழைத் தவிர வேறு எதையும் அவன் பேசாதிருப்பதால் அவன் மௌனியாகிறான். சொந்த ஊருக்கு மகிழ்வுடன் திரும்பிப்போகிறவனுக்கு வழிப் பயணத்தில் வசதிகள் அதிகம் அமையாவிட்டால் அவன் அவைகளைக் குறித்து மனக்கிலேசமடைவதில்லை. ஊருக்குப் போகும் உற்சாகம் முன்னணியில் நிற்கிறது. பக்தனோ தனது தாய் தந்தையாகிய தெய்வத்தைக் குறித்துப் பயணம் போகிறான். உலக வாழ்க்கை என்ற வழியில் கிடைக்கின்ற எதைக்கொண்டும் அவன் திருப்தியடைகிறான். நன்றே வரினும் தீதே வரினும் அவனுக்குத் தொல்லை யொன்றுமில்லை. மேலும் தனக்கென்று வசிக்குமிட மொன்றை அவன் உரிமைப்படுத்துவதும் கிடையாது. அகப்பட்ட வளையில் ஸர்ப்பம் சிறிது காலம் சுருண்டிருப்பது போன்று தற்செயலாய் நேர்ந்த இடத்தைப் பக்தன் தங்குமிடமாக்குகிறான். ரயில் வண்டியில் எவ்விடத்தில் இருக்க இடம் கிடைத்தாலும் பிரயாணிக்கு ஒன்றே. பக்தனது நிலையும் அத்தகையதே. மாறுபடுகிற உலகில் மாறுபடாத கடவுள் நாட்டத்திலேயே பக்தன் கண்ணுங்கருத்துமாயிருப்பதால் அவன் ஸ்திர புத்தியுள்ளவனாகிறான். நாட்டமெல்லாம் கடவுளிடத்திலேயே இருப்பதால் அவனே பக்தனாகிறான். ஆக, அவன் கடவுளுக்கு இனியவன் ஆவது இயல்பு.

உலகத்தைப்பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனத்தைச் சஞ்சலப்படுத்தும்படி செய்துகொள்ளாதே. செய்யவேண்டிய காரியம் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் ஈசுவரனிடம் நிலைத்திருக்கட்டும். (18-19)

20. யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஸ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேऽதீவ மே ப்ரியா:   

தர்ம்யாம்ருதமிதம்-இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை, யதா உக்தம் பர்யுபாஸதே-யான் சொல்லியபடி வழிபடுவோர், ஸ்ரத்ததாநா-நம்பிக்கையுடையோர், மத்பரமா-என்னை முதலாகக் கொண்டோர், தே பக்தா: மே அதீவ ப்ரியா:-அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.

பொருள் : இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.

எல்லாவிதமான சாதனங்களுக்கும் சிரத்தை இன்றியமையாததாதலால் அது ஈண்டு பக்தியோடு இணைத்து இயம்பப்படுகிறது. பகவானைக் கதியாகக்கொள்வது பக்தனுடைய இயல்பு. அதனால் அவன் செயலற்றவன் ஆய்விடுகிறானல்லன். தர்மத்தை உறுதியாக அனுஷ்டிக்கிறான். அருளோடு முக்தி என்னும் பெருநிலம் தர்மத்தினின்று வருவதால் தர்மமே அமிர்தத்துக்கு (மூவா மருந்துக்கு) ஒப்பாகிறது. தர்மத்தைக் கையாளுபவன் யாரும் அழிந்துபட்டுப் போகமாட்டான். அன்பும் அறநெறியும் யாரிடத்திருக்கிறதோ அவன் இறைவனுக்கு உவந்தவன் ஆகிறான்.

பக்தியில் வைதிக பக்தி என்பது ஒன்று. அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந் நாமத்தைப் பலதடவை உச்சாரணம் பண்ணுதல், உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல், வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல் முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை. இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈசுவர பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகிய ராக பக்தி யைக் பெறக்கூடும். எல்லாவற்றிற்கும் பிரேமைதான் முக்கியம். உலகப்பற்று முற்றிலும் அகல வேண்டும். முழுமனதும் ஈசுவரனிடம் பொருந்தவேண்டும். அப்போதுதான் அவனை அடையமுடியும். ராக பக்தியில்லாமல் அவனை அடையமுடியாது.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
பக்தி யோகோ நாம த்வாதசோऽத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் பக்தியோகம் என்ற பன்னிரண்டாம் அத்தியாயம்.
 


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #19 on: April 20, 2012, 12:34:14 PM »
பதின்மூன்றாம் அத்தியாயம்
 
ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம்

இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது. இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.

ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.

இருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3 -இவைகளைப்பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4 -ஷேத்ரதிரத்தின் பாகுபாடுகள் 5-6 -ஞானத்துக்கு ஏதுவாயிருப்பவைகள் 7-11 -பிரம்மம் எத்தகையது 12 -ஞானபரிபாகத்தின் விளைவு 13-15 -ஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17 -பக்தியினின்று ஞானம் வருகிறது 18 -புருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள 19-20 -பிறவிக்கு வித்து 21 -பிரம்மஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23 -நான்கு யோகங்கள் 24-25 -ஒன்று என்று அறிவது முக்தி 26-28 -கர்மம் பிரகிருதிக்கு உரியது 29-30 -பிரம்மம் தன் மயம் 31-34.

அர்ஜுந உவாச

ப்ரக்ருதிம் புருஷம் சைவ ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞமேவ ச
ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸவ

அர்ஜுந உவாச கேஸவ-அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா, ப்ரக்ருதிம் புருஷம் ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞ ச-பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச - ஞானம், ஞேயம் என்னும், ஏதத் வேதிதும்-இவற்றை அறிய, இச்சாமி-விரும்புகிறேன்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகின்றான் பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஞானம், ஞேயம் என்னும் இவற்றை அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீ பகவாநுவாச

1. இதம் ஸரீரம் கௌந்தேய ஷேத்ரமித்யபிதீயதே
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், கௌந்தேய-குந்தி மகனே, இதம் ஸரீரம் ஷேத்ரம் இதி-இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று, அபிதீயதே-சொல்லப்படுகிறது, ஏதத் ய: வேத்தி-இதனை எவன் அறிகிறானோ, தம் ஷேத்ரஜ்ஞ இதி-அவனை ஷேத்ரதிரக்ஞன் என்று
தத்வித: ப்ராஹு:-ஞானிகள் கூறுகிறார்கள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை ஷேத்ரதிரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.

எது கெட்டுப் போகாது காப்பாற்றப்படுகிறதோ அது ஷேத்ரதிரம். உடலானது அங்ஙனம் காப்பாற்றப்படுகிறது. இனி, ஷேத்ரதிரம் என்பதற்கு மற்றொரு பொருள் வயல் என்பதாம். வேலை செய்வதற்கு ஏற்றவளவு அது விளைவு தரக்கூடியது. நல்லது கெட்டது ஆகிய இரண்டும் பூமியில் விளையும். நமது தேகம் ஷேத்ரதிரம் எனப்படுகிறது. இதில் அவரவர் கர்மபலனை அனுபவிக்கின்றனர். ஆக, ஜீவனுக்கு தர்ம ஷேத்ரதிரமாவது அவனது உடல். உள்ளே இருந்து உடலை அறிகிற பொருள் எதுவோ அது ஷேத்ரதிரக்ஞன்.

மானிட சரீரம் ஒரு பானையைப்போன்றுள்ளது. மனம், புத்தி, இந்திரியங்கள் அப்பானையில் இடப்பட்ட ஜலம், உருளைக்கிழங்கு, அரிசி இவைகளுக்குச் சமானம். இவையெல்லாம் அடங்கிய பானை யொன்றை அடுப்பின்மீது வைத்தால், அடுப்பின் நெருப்பு அவைகளை வேகச் செய்யும். அவைகளை ஒருவன் தொட்டால் அவனது விரல்களைச் சுட்டுவிடும். என்றாலும் அவ்வுஷ்ணம் வாஸ்தவத்தில் பானையினுடையதன்று. ஜலம், அரிசி, உருளைக்கிழங்கு இவைகளினுடையதுமன்று. அதுபோலவே, மனிதனிடம் உள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி, இந்திரியங்கள் எல்லாம் தத்தம் வேலைகளைச் செய்கின்றன.

அண்டத்திலுள்ள ஷேத்ரதிரங்களுக்கிடையில் தொடர்வு ஏதேனுமுண்டா? விடை வருகிறது :

2. ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வஷேத்ரேஷு பாரத
ஷேத்ரஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம   

பாரத-பாரதா, ஸர்வஷேத்ரேஷு-எல்லா ஷேத்ரதிரங்களிலும், ஷேத்ரஜ்ஞம் அபி-ஷேத்ரதிரக்ஞனும், மாம் வித்தி-நானே என்றுணர், ச ஷேத்ரஷேத்ரஜ்ஞயோ:-ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் (பற்றி அறியும்), யத் ஜ்ஞாநம்-எது ஞானம், தத் ஜ்ஞாநம் மம மதம்-அதுவே ஞானமென்பது என் கொள்கை.

பொருள் : பாரதா, எல்லா ஷேத்ரதிரங்களிலும் ஷேத்ரதிரக்ஞன் நானே என்றுணர். ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.

ஷேத்ரதிரம் என்பது பிரகிருதி; ஷேத்ரக்ஞன் என்பது புருஷன். பிரகிருதியின் சேர்க்கையால் அதன் கூறுபாடுகளைப் புருஷன் தன்னுடையது என்று கருதுகிற பொழுது அவன் ஜீவாத்மாவாகிறான். ஸ்படிகத்துக்குப் பக்கத்தில் வைத்த புஷ்பத்தின் நிறத்தை ஸ்படிகத்தினுடையது என்று எண்ணுவது போன்றது அது. பிரகிருதி பேதம் அனந்தம். ஆதலால் ஜீவாத்மாக்களும் அனந்தம்.

பிரகிருதியின் சேர்க்கையால் உபாதியோடு கூடியதாகத் தென்படுகிற ஆத்மா உண்மையில் பிரகிருதியின் தன்மையை வாங்கிக்கொள்கிறதில்லை; வாங்கிக் கொண்டது போன்றது அது தென்படுகிறது. பிரகிருதியை உடைத்திருந்தும் அதில் கட்டுப்படாது இருக்கிற ஆத்மாவுக்கு ஈசுவரனென்று பெயர். அவர் ஒருவரே இத்தனை ஜீவர்களுக்கும் அந்தர்யாமியாயிருக்கிறார். அவருக்கு அன்னியமாக இந்த ஜீவர்களும் ஜகத்தும் இல்லை. ஆகையால் அவர் எல்லா ஷேத்ரதிரங்களுக்கும் ஷேத்ரதிரக்ஞனாக இருக்கிறார்.

இனி, ஞானம் என்பது ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞன் பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டு தத்துவங்களையும் முறையாக அறிவதேயாம். ஷேத்ரதிரத்தைப்பற்றிய வித்தை அபரவித்தை யென்றும், ஷேத்ரதிரக்ஞனைப்பற்றிய வித்தை பரவித்தை யென்றும் பகரப்படுகின்றன. வேதங்கள், வியாகரணம், கலைஞானங்கள், பூத பௌதிக சாஸ்திரங்கள் இவையாவும் அபரவித்தை. பிரம்ம ஞானமோ பரவித்தை. அபரவித்தையில் துவக்கிப் பரவித்தையில் ஆராய்ச்சி முற்றுப்பெறுவதே ஞானமாகும். தனியாக ஷேத்ரதிரத்தை ஆராய்ந்து அதை மட்டும் கையாளுவது உலோகாயதம். அதை ஷேத்ரதிரக்ஞனோடு இணைத்து ஆராய்வது சிறந்ததும் பாராட்டத்தக்கதுமாகிய அபரவித்தையாம்.

ஒரு புராண வரலாறு இக்கோட்பாட்டை நன்கு விளக்குகிறது. கார்த்திகேயனும் கணபதியும் பரமசிவனுக்குப் பிள்ளைகள். உள்ளதை எல்லாம் துருவி ஆராய்ந்துவிட்டு முதலில் வருபவனுக்குக் கனியொன்று தருவதாகக் கடவுள் தம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னார். குமரக் கடவுள் உலகம் யாவையும் அளந்தறிய விரைந்து ஓட்டம் பிடித்தார். நடக்கமுடியாத கணபதியோ கடவுளையே சுற்றிவந்து கனியைக் கேட்டார். அதற்குள் சுப்ரமண்யமும் உலகம் யாவையும் அறிந்து விட்டுக் கடவுள் அருகில் வந்துசேர்ந்தார். இருவரும் வல்லவர் ஆயினர். கணபதி அறிந்தது ஷேத்ரதிரக்ஞனாகிய ஈசுவரனை. சுப்ரமண்யம் அறிந்தது ஷேத்ரதிரமாகிய பிரபஞ்சம் முழுதையும். இவ்விருவர் ஆராய்ச்சியின் தொகுதியே முழு ஞானமாகிறது.

இக்காலத்து அறிஞர் கையாளுகிற பௌதிக ஆராய்ச்சி ஷேத்ரதிரத்தைப்பற்றிய ஞானத்துக்குப் பெருந்துணையாகும். சுப்ரமண்யக் கடவுள் உலகெல்லாம் ஆராய்ந்துவிட்டுப் பரமனுடைய சன்னதி வந்தது போன்று இக்காலத்திய பௌதிக ஆராய்ச்சியும் பரமனுடைய அடியை நோக்கிப் போவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. கடவுளுக்கு அன்னியமாக உலகம் இல்லை. கடவுளோடு இணைத்தே உலகத்தை அறிந்துகொள்ளும்போது அது மெய்ஞ்ஞானமாகிறது.

பணத்தை வைத்திருப்பதாலேயே ஒருவன் பணக்காரனாகி விடமாட்டான். பணக்காரனுடைய வீட்டிற்கு அடையாளம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் எரிவதாகும். ஏழைக்கு எண்ணெய் கிடைக்காதாகையால் அத்தனை விளக்குகளை ஏற்றமாட்டான்.

பகவானது ஆலயமாகிய இச்சரீரத்தை அந்தகாரத்தில் வைத்திருக்கக்கூடாது. அதில் ஞான விளக்கு ஏற்றப்படவேண்டும். உன் ஹிருதயமாகிய அறையில் ஞானவிளக்கை ஏற்றித் தெய்வத்தின் திவ்விய முகத்தைக் காண்பாய். ஒவ்வொருவரும் ஞானத்தை அடையமுடியும். நான் என்கிற குறுகிய ஆன்மா என்றும், விசாலமான பரமான்மா வென்றும் இரண்டுவகையுண்டு. ஒவ்வொரு சிறு ஆன்மாவும் அதாவது ஜீவான்மாவும் பரமான்மாவோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரசக்தி இருக்கிறது. இந்த மின்சாரம் கம்பெனியிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் செலுத்தப்படுகிறது. தகுந்த அதிகாரிகளிடம் மனுச் செய்ய வேண்டியதுதான். அப்போது உன் வீட்டில் மின்சார விளக்கைப் பெறுவாய். பரஞானம் உனது உடல் வாழ்க்கையையும், உன்னையும், உனது தெய்வத்தையும் விளக்கும்.

3. தத்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஸ்ச யத்
ஸ ச யோ யத்ப்ரபாவஸ்ச தத்ஸமாஸேந மே ஸ்ருணு   

தத் ஷேத்ரம் யத்-அந்த ஷேத்ரதிரமென்பது யாது? ச யாத்ருக்-எவ்வகைப்பட்டது? ச யத்விகாரி-என்ன மாறுதல்களுடையது? யத: யத் ச-எங்கிருந்து வந்தது? ஸ: ய: ச-அவன் (ஷேத்ரதிரக்ஞன்) யார்? யத்ப்ரபாவ ச-அவன் பெருமை எப்படிப்பட்டது? தத் ஸமாஸேந மே ஸ்ருணு-இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.

பொருள் : அந்த ஷேத்ரதிரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? ஷேத்ரதிரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.

வேத வேதாந்தம் புகட்டுவதெல்லாம் இவ்விரண்டு தத்துவங்களையே யாம். இவ்விரண்டின் நிலைகளை விளக்குதற்கென்று அமைந்தவைகளெல்லாம் கலைகளாகின்றன.

அது எப்படி யென்று அடுத்த சுலோகத்தில் பகவான் விளக்குகிறார்.

4. ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்
ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர்விநிஸ்சிதை:   

ருஷிபி: பஹுதா கீதம்-ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது, விவிதை: சந்தோபி: ப்ருதக்-பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது,
ச விநிஸ்சிதை: ஹேதுமத்பி-நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும்,
ப்ரஹ்மஸூத்ரபதை: ஏவ-பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது.

பொருள் : அது (ஷேத்ரதிரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.

முடிந்த நிலையை விளக்குதற்குக் கலையைக் கவிகள் நன்கு கையாண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் எக்காலத்துக்கும் உண்மையாதலால் அது நிலையெனப்படுகிறது. தெளிவற்ற சொற்களைக்கொண்டு விளக்கினாலும் மெய்ப்பொருளுக்குள்ள மதிப்புக் குறைவதில்லை. ஆனால் ரிஷிகளோ அதை விளக்குதற்கு இயல் இசை இரண்டையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இயல் என்பது தெளிந்த மொழி. உலகில் உள்ள எம்மொழியும் தெளிந்ததாகுங்கால் அது உள்ளத்தைக் கவரவல்லது. இசை அல்லது பாட்டுக்கு மற்றொரு வன்மையுண்டு. எல்லா உயிர்களையும் அது வசப்படுத்த வல்லது. துஷ்ட ஜந்துக்களும் இசைக்கு இணங்கி நல்லியல்பு பெறுகின்றன. உணர்ச்சியைக் கிளப்பவும் அதைச் செப்பனிடவும் வல்லது கீதம். இனிமையும் ஆனந்தமும் அதனால் வளர்க்கப்படுகின்றன. ஆக, மெய்ப்பொருள் விளக்கத்தில் ரிஷிகள் இயல் இசை ஆகிய இரண்டையும் நன்கு கையாளுதல் மூலம் அதில் விருப்பத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துள்ளார்கள். தனியாக உணர்ச்சியை மட்டும் வளர்த்தால் போதாது. பகுத்தறிவைக்கொண்டும் மெய்ப்பொருளை ஆராய்தல் வேண்டும். யுக்திக்கு ஒத்திருப்பது உண்மை. ஆகையால் யுக்தி அல்லது பகுத்தறிவை முறையாகக் கையாளுமளவு உண்மை நிரூபிக்கப்படுகிறது.

ஆக, வேத வேதாந்தத்தை நிறுவிய மேலோர் மக்களிடத்து உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டையும் நன்கு வளர்த்தல் பொருட்டு இயல், இசை, யுக்தி இவைகளைச் செவ்வையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

யுக்திக்கு ஒவ்வாத உணர்ச்சியோ பாங்கற்ற மனக்குழைவு ஆகும். பக்தியின் பெயரால் சிலர் வெறும் மனக்கசிவு உடையவர்களாய் இருக்கிறார்கள். திண்மை அல்லது உறுதிப்பாட்டை அவர்கள்பால் காணமுடியாது. மற்று, வெறும் விசாரத்தில் ஈடுபடுகிறவர்களது நுண்ணறிவு உலர்ந்த அறிவாய்ப் போய்விடுகிறது. எண்ணெயில்லா யந்திரம் போன்றது அவர்களுடைய வாழ்க்கை. அறிவு பெருகியிருந்தாலும், நெஞ்சத்தில் ஈரமின்மை பாராட்டத்தக்கதன்று. நிறை மனிதன் என்பவன் நெஞ்சக் குழைவும் அறிவு வளர்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றவனாம். அதாவது ஒவ்வொருவனிடத்தும் அன்பும் அறிவும் சேர்ந்திருக்க வேண்டும்.

நாரத மஹரிஷியினிடத்திருந்தது போன்று ஞானமிச்ர பக்தி, அதாவது ஞானத்தோடு கலந்துள்ள பக்தி சாதகர்களுக்கு முற்றிலும் வேண்டப்படுகிறது.

5. மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச
இந்த்ரியாணி தஸைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா:   

6. இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதஸ்சேதநா த்ருதி:
ஏதத்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்   

மஹாபூதாநி அஹங்கார: புத்தி: ச-மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி, அவ்யக்தம் ஏவ-அவ்யக்தம், தஸ இந்த்ரியாணி ச-பத்து இந்திரியங்கள் (புலன்கள்), ஏகம் ச - மனதுடன் சேர்த்து (பதினொன்று), பஞ்ச இந்த்ரியகோசரா:-இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்).

இச்சா த்வேஷ:-வேட்கை, பகைமை, ஸுகம் து:கம்-இன்பம், துன்பம், ஸங்காத: சேதநா - உடம்பு, சைதன்ய சக்தி, த்ருதி:-உள்ளத்துறுதி, ஸவிகாரம்-ஆகிய மாறுபாடுகள் உடைய, ஏதத் ஷேத்ரம்-இந்த ஷேத்ரதிரம், ஸமாஸேந உதாஹ்ருதம்-சுருக்கி சொல்லப் பட்டது.

பொருள் : மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,

பொருள் : வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே ஷேத்ரதிரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.

ஆகாசம், வாயு, அக்கினி, அப்பு, பிருத்துவி ஆகிய ஐந்து பூதங்களும் சூக்ஷ்மமாக எங்கும் நிறைந்திருக்கிறபடியால் அவைகள் மஹாபூதங்கள் என்று சொல்லப்படுகின்றன.

அகங்காரம் - இது மஹாபூதங்களுக்குக் காரணமாகிறது. பூதங்கள் மூலமாக எழும் இருக்கிறேன் என்ற உணர்ச்சி அஹங்காரம் என்ற பெயர் பெறுகிறது.

புத்தி - இது நிச்சயவடிவு அல்லது தீர்மானம் செய்யும் தன்மையது. மஹத் என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது. இது அஹங்காரத்துக்குக் காரணமாயுள்ளது.

அவ்யக்தம் என்பது மூலப்பிரகிருதி என்று பொருள்படுகிறது. தோன்றா நிலையில் இருப்பதால் இதன்கண் விகாரம் அல்லது வேறுபாட்டைக் காணமுடியாது. இது புத்திக்குக் காரணமாகும். இவையாவும் ஈசுவர சக்தி.

தெய்விகம பொருந்திய என் மாயை கடத்தற்கு அரிது என்று ஏழாவது அத்தியாயம் பதினான்காம் சுலோகத்தில் பகவான் பகர்கிறார். இவைகளைத் தம்முடைய எட்டுவிதப்பிரகிருதி என்றும் பகவான் ஏழாவது அத்தியாயம் நான்காவது சுலோகத்தில் சொல்லுகிறார்.

பத்து இந்திரியங்கள் : கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.

மனம் - இது சங்கல்ப விகல்ப மயமானது. எண்ணமும் ஐயமும் இதைச் சேர்ந்தவைகள். மனமானது பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. பத்துத் தலைகளையுடைய ராவணன் பத்து இந்திரியங்களையுடைய மனதின் புறத்தோற்றமாக வந்தவன்.

இந்திரியார்த்தங்கள் - சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த - வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்களாம்.

இவைகளையெல்லாம் தொகுத்து இருபத்து நான்கு தத்துவங்கள் என்று சொல்லுகிறது சாங்கிய தர்சனம்.

இச்சை, துவேஷம் முதலியன ஆத்மாவின் குணங்களென்று வைசேஷிகர் சொல்லுவார்கள். ஆனால் இவையாவும் அறியப்படும் தன்மையுடையனவாதலாலும், இவைகள் மூலமாக ஷேத்ரதிரத்தைப் பற்றிய போதமே வளர்க்கப்படுகிறதாதலாலும் இவைகளை பகவான் ஷேத்ரதிரம் என்று பகர்கின்றார்.

இச்சை என்பது விருப்பு. இன்பம் கொடுக்கும் ஒரு பொருளைத் திரும்பவும் பெற எண்ணங்கொள்வது இச்சை. இது அந்தக்கரணத்தின் தர்மமாகும்.

துவேஷம் என்றால் வெறுப்பு. துன்பம் கொடுக்கும் ஒரு பொருளை அல்லது அவ்வினத்தைச் சேர்ந்த ஒன்றைக் காணுமிடத்து அதை விலக்க நினைப்பது வெறுப்பு.

ஸுகம் இன்பமென்று பொருள்படுகிறது. அனுகூலமாகத் தோன்றி அமைதி தந்து ஸத்வகுணத்தை வளர்ப்பது எதுவோ அது ஸுகம். காணப்படு பொருளாதலால் இது ஷேத்ரதிரம் என்று அழைக்கப்படுகிறது. துக்கம் அல்லது துன்பம் பிரதிகூலமாகத் தோன்றி அமைதியின்மையை வளர்க்கிறது.

ஸங்காதம் என்பது உடலமைப்பு. உடலையும் இந்திரியங்களையும் ஒன்றாகப் பொருத்தி வைப்பதற்கு ஸங்காதம் என்று பெயர். பல பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்பெற்று ஒரு யந்திரம் ஆகிறது. அங்ஙனம் வெவ்வேறு அங்கங்கள், அவயவங்கள், இந்திரியங்கள் முறையாக அமையப்பெற்று உடல் அல்லது ஷேத்ரதிரம் உருவெடுக்கிறது.

சேதனம் என்னும் சொல்லுக்குப் பொருள் உணர்வு. தீயோடு தொடர்வுள்ள இரும்பு தீயை விளக்குவது போன்று, இந்திரியங்கள் ஆத்ம சைதன்யத்தை உணர்வாக விளக்குகின்றன. இந்திரியங்கள் வாயிலாக சேதனம் அறியப்படுகிறது. அது தேகாத்ம புத்தியை வளர்க்கிறது. ஆகவே அது ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது.

திருதி என்றால் உறுதி. உடலும் இந்திரியங்களும் சோர்வடையும் தன்மையுடையவைகள். அவைகளைத் தளரவொட்டாது பொருத்தமாகத் தாங்கிப் பிடிப்பது எதுவோ அது திருதி. இதன் வலிவால் உடல் வாழ்க்கை நெடிது நிலைபெறுகிறது. காணப்படு பொருள் ஆதலால் இதுவும் ஷேத்ரதிரத்தோடு சேர்க்கப்படுகிறது. இச்சை முதல் திருதி பரியந்தம் இவையாவும் அந்தக் கரணத்தின் விகாரங்களாம்.

ஷேத்ரதிரம் என்று உடலை முதல் சுலோகத்தில் சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரண்டு சுலோகங்களில் வந்து அமைகிறது.

இந்தச் சரீரம் உபயோகமற்றதும், அழிந்துபோகக்கூடியதுமானால் ஆத்மசாதகர்கள் ஏன் இதை ஜாக்கிரதையுடன் காப்பாற்றுகிறார்கள்? உள்ளே ஒன்றுமில்லாத வெறும் பெட்டியை ஒருவரும் ஜாக்கிரதையாகப் பாதுகாப்பதில்லை. விலையுயர்ந்த நகைகளும், பணமும், பொருள்களும் உள்ள பெட்டியை எல்லாரும் பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல, பக்தர்கள் ஈசுவரன் வாசம் செய்கிற இந்தச் சரீரத்தைப் பாங்குடன் காப்பாற்றுகிறார்கள். இதைப் பராமுகமாக விட்டுவிட மாட்டார்கள். நமது சரீரங்களெல்லாம் ஈசுவரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும்.

சாதகன் எத்தகைய பாங்குடன் இருந்தால் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனை அறிகிற ஞானம் வருகிறது? இதற்கு விடை வருகிறது: (5-6)

7. அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷõந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:   

அமாநித்வம்-கர்வமின்மை, அதம்பித்வம்-டம்பமின்மை, அஹிம்ஸா-ஹிம்சை செய்யாமை,
க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆசார்ய உபாஸநம்-ஆசாரியனை வழிபடுதல், ஸௌசம்-தூய்மை, ஸ்தைர்யம்-ஸ்திரத்தன்மை, ஆத்மவிநிக்ரஹ:-தன்னைக் கட்டுதல்.

பொருள் : கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.

ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞனைப் பற்றிய ஞானம் வெறும் ஏட்டுக் கல்வியால் வருவதன்று. வாழ்க்கையின்மூலம் தன்னைப் பண்படுத்துவதாலேயே ஞானம் வளர்கிறது. மற்றவர்களைவிட மேலோனாகத் தன்னை நினைத்துக்கொள்ளாதிருத்தல் அமானித்வம் என்னும் பெயர் பெறுகிறது. தற்பெருமை ஜீவபோதத்தை வளர்க்கிறது. தற்பெருமையின்மை பரபோதத்தை வளர்க்கிறது. அடுத்தபடியாகத் தன் செயலைச் சிலாகித்துப் பேசலாகாது. ஏனென்றால் செயலெல்லாம் உண்மையில் ஈசனுடையவைகள். அவைகளைத் தனது என்று தருக்கிப்பதால் அக்ஞானமே வளர்கிறது. உயிர்களுக்கு ஹிம்சை செய்யும் எண்ணம் அவைகளை ஈசுவரனுக்குப் புறம்பாக கருதுவதால் வருகிறது. அவைகளுக்குத் தீங்கு செய்யாதிருப்பதால் ஞானம் வளர்கிறது. இனி, மற்ற உயிர்களிடத்திருந்து தனக்குத் துன்பம் வரும்பொழுது அதைப் பொறுத்திருத்தல் வேண்டும். ஓர் உதாரணத்தால் இதை விளக்குவோம். பேசும்பொழுது தன் பல் தன் உதட்டைக் கடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் பல்லைப் பகைப்பதில்லை. ஏனென்றால் பல்லும் உதடும் தன் சொரூபம். உயிர்கள் தனக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்திருக்குமளவு அவைகளைத் தன்மயமாயுணரும் தன்மை வருகிறது. ஆர்ஜவம் அல்லது நேர்மையென்பது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையாகும். எண்ணியபடியே இயம்புவது கள்ளங்கபடமற்ற மனதுக்கே இயலும். அது ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது. ஆசாரியருக்குப் பணிவிடை செய்வதால் தன்னை ஆசாரியருக்கு உரியவனாகச் சாதகன் செய்து கொள்கிறான். மனிதன் யாருக்குப் பணிவிடை செய்கின்றானோ, யாரை உபாசிக்கின்றானோ அவருடைய பான்மையெல்லாம் தனக்கே வந்தமைகின்றன. ஆதலால் குரு சேவை முற்றிலும் வேண்டப்படுகிறது. உடலையும் உள்ளத்தையும் தூயதாக வைத்துக் கொள்ளுதல் சௌசம் எனப்படுகிறது. நீராடுதல் போன்ற செயலால் உடல் தூயதாகிறது. இந்திரியார்த்தங்களிலுள்ள கேடுகளை ஓர்ந்து அவைகள்பால் பற்றுவைக்காதிருப்பது உள்ளத்தின் தூய்மையாகும். ஆத்ம சாதனம் எத்தனை காலம் நடைபெறுவதாயிருந்தாலும் அதனால் மனத் தளர்ச்சியுண்டாகாது. இடைவிடாது முயற்சியிருக்குமானால் அது ஸ்தைர்யம் எனப்படுகிறது. உடலும் இந்திரியங்ளும் வெளியுலகில் விஷயாதிகளில் செல்லும் தன்மையுடையவைகள். அவைகளை அப்படிச் செல்லவொட்டாது தடுத்து சன்மார்க்கத்தில் ஈடுபடும்படி செய்வது தன்னடக்கமாகும்.

8. இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஸநம்   

இந்த்ரிய அர்தேஷு வைராக்யம் ச-இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அநஹங்கார: ஏவ-அகங்காரம் இல்லாமை, ஜந்ம ம்ருத்யு-பிறப்பு, இறப்பு, ஜராவ்யாதி-நரை, நோய், து:க தோஷ-துக்கம், தோஷம், அநுதர்ஸநம்-இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.

பொருள் : இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.

ஐந்து இந்திரியங்களுக்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து விஷயங்களிருக்கின்றன. தூண்டிலில் உள்ளதைச் சுவைக்க முயன்று மீன் மாய்கிறது. தீயின் ஒளியை விரும்பி விட்டில் பூச்சி வதையுண்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நாடிக் காட்டானை பழகிய பெண் யானையின் மூலம் மக்களிடம் பிடிபடுகிறது. ஓசையைக் கேட்டு மூச்சடக்கி மானானது வேடர் வசப்படுகிறது. நாற்றத்தை நாடி மலரில் வண்டு மாட்டிக்கொள்கிறது. இனி, இந்திரிய போக விஷயங்கள் ஐந்திலுமே ஈடுபடும் மனிதன் கதி என்னாவது? இதை எண்ணிப்பார்த்து அவைகளிடத்துப் பற்று வைக்காதிருக்கவேண்டும்.

சரீரத்தைத் தான் என்று அபிமானிப்பது அஹங்காரம். அப்படி அபிமானம் கொள்ளாதிருப்பது அகங்காரமின்மையாகும்.

நன்றாக விசாரித்துப் பார்க்குமிடத்து பிறப்பு முதலிய யாவும் துன்பத்தை உண்டுபண்ணுபவைகளாய் இருக்கின்றன. அப்படி வரும் துன்பங்களைத் தானே உண்டுபண்ணியிருக்கலாம், அல்லது இயற்கையில் அவை வந்து அமைந்திருக்கலாம், அல்லது தெய்வா தீனமாக அவைகள் ஏற்பட்டிருக்கலாம். இப்படி விசாரிப்பதால் விஷயங்களில் விரக்தி வருகிறது. மனது அந்தர்முகமாக ஆத்மாவிடம் திரும்புகிறது. அங்ஙனம் ஞானத்துக்கு அது தகுதியுடையதாகிறது.

இந்திரிய விஷயங்களின் மீதுள்ள பற்று எவ்வளவுக்குக் குறைந்து வருமோ அவ்வளவுக்குக் கடவுளிடத்து பக்தி அதிகரித்து வரும்.

9. அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு   

புத்ர தார க்ருஹாதிஷு-மகனையும் மனைவியையும், வீட்டையும், அஸக்தி-பற்றின்மை, அநபிஷ்வங்க:-தன்னுடைமையெனக் கருதாமை, ச-மேலும், இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு - விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே, நித்யம் ஸமசித்தத்வம்-எப்போதுமே சமசித்தமுடைமை.

பொருள் : பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை

பொருள்களை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமலிருந்தாலும் அவைகளிடத்துப் பற்றுதல் உண்டாகலாம். அப்படிப் பற்று வர இடந்தரலாகாது. மனைவி, மக்கள், வீட்டினிடத்து வைக்கும் அளவுக்கு மிஞ்சிய பற்றுதலால் தன்னை அவர்கள் மயமாய் உணரும் தன்மை வந்தமைகிறது. உற்றாருக்கு வந்த நோய் தனக்கே வந்ததாகவும், உற்றார் மடியத் தானே செத்துப்போனதாகவும் உணர்தல் அபிமானத்தால் வருகிறது. அதற்குப் பதிலாகத் தன்னையும் மற்ற எல்லா உயிர்களையும் இறைவனது குழந்தைகளாகக் கருதவேண்டும். உலக நிகழ்ச்சிகளில் வேண்டப்படுவனவாகவும், வேண்டப்படாதவைகளாகவும் பிரிவுபடுவது பற்றுடையார்க்கேயாம். மற்று, மனதை நடுநிலையில் வைப்போர்க்கு நலம் கேடு இரண்டும் ஒரே பாங்குடன் புலனாகும். இத்தகைய மன நிலையினின்றே ஞானம் உதிக்கிறது.

தன் உறவினர் ஒருவர்மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்ததால் பகவானிடம் மனம் குவியப் பெறாத ஒரு பக்தரிடம் பகவான் அவர் நேசிக்கும் உறவினரைக் கடவுள் சொரூபமாகப் பாவித்து அன்பு வைக்கும்படி உபதேசித்தார். இவ்விஷயமாக உபதேசிக்கும்போது பகவான் கூறியதாவது - உன் ஆசைக்குப் பாத்திரமானவரிடம் உன் இஷ்ட தெய்வத்தைக் காண்பாயாகில், சுலபமாக மனம் பகவானை நாடிச் செல்வதை உணர்வாய்.

10. மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஸஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி   

மயி அநந்யயோகேந-என்னிடம் பிறழ்ச்சியற்ற யோகத்துடன், அவ்யபிசாரிணீ பக்தி: ச - தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, விவிக்த தேஸ ஸேவித்வம்-தனியிடங்களை மேவுதல்,
ஜநஸம்ஸதி அரதி-ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை.

பொருள் : பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை

பகவானுக்கு ஒப்பான பொருள் வேறு ஒன்றுமில்லை யென்று உறுதிகொண்டு முழுமனதையும் அவனிடத்தே திருப்புதல்வேண்டும். தன் மனதை பக்தன் பங்குபோடுவதில்லை. அது முழுதையும் இறைவனுக்கென்றே கொடுத்துவைக்கிறான்.

துஷ்ட ஜந்துக்களால் இடைஞ்சல் உண்டாகாததும், ஆரோக்கியமானதும், இயற்கை வனப்பு வாய்ந்ததும், தூயதும், மனதுக்கு இனியதுமான இடத்தில் வசிப்பது ஆத்ம சாதனத்துக்குப் பொருத்தமானது. நல்லாரோடு கூடியிருத்தல், பிறகு அவர்களிடத்திருந்தும் பிரிந்து தனித்திருத்தல் தவத்துக்கும் ஞான வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன.

தீபத்தைக் கண்டதும் பூச்சி இருட்டிலிருந்து ஓடி வருகின்றது. சர்க்கரைப் பாகிலேயே எறும்பு பிராணனை விடுமன்றி அதினின்றும் திரும்பிப் போகிறதில்லை. அதுபோல பக்தனும் ஈசுவரனையே எப்போதும் பற்றி நிற்பானாகையால் மற்ற பொருள்களையெல்லாம் அவன் கைவிட்டுவிடுகிறான்.

11. அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஸநம்
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோऽந்யதா   

அத்யாத்ம ஜ்ஞாந நித்யத்வம்-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்த்வஜ்ஞாந அர்த தர்ஸநம்-தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு, ஏதத் ஜ்ஞாநம்-இவை ஞான மெனப்படும், யத் அத: அந்யதா அஜ்ஞாநம்-இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம், இதி ப்ரோக்தம்-என்று சொல்லப் பட்டது.

பொருள் : ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.

ஏழாவது சுலோகத்தில் அமானித்வம்-தற்பெருமை யின்மை என்பதில் துவக்கி இந்த சுலோகத்தில் தத்துவ ஞானார்த்த தர்சனம் என்பது முடிய இவை யாவும் ஞானம் எனப்படுகின்றன. இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பதால் இம்மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகின்றன. இவைகளுக்கு எதிரிடையான மனநிலைகளாகிய தற்பெருமை, தருக்கு, ஹிம்சை, பொறாமை, மனக்கோணல், குருபராமுகம், மாசு, தளர்ச்சி, அடங்காமை, ஆசை, அஹங்காரம், கேடறியாமை, பற்று, உற்றாரைச் சார்தல், ஓரம் சார்தல், காமியபக்தி, சகவாச தோஷம், ஆத்மஞான விசாரமின்மை-ஆகிய இவையாவும் அக்ஞானத்தை வளர்க்கின்றன.

ஈசுவரன் எங்கும் நிறைந்திருப்பவரானால் நம்மால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை? பாசியும் நாணலும் மிகுந்திருக்கும் குளத்தின் கரையில் நின்றுகொண்டால் அக்குளத்தில் ஜலமே இல்லையென்றுதான் நீ சொல்வாய். ஜலத்தைக் காணவேண்டுமானால் குளத்தின் மேற்பரப்பிலிருந்து பாசியை அகற்றவேண்டும். மாயையாகிற திரையால் மூடப்பட்ட கண்களையுடைய நீ ஈசுவரனைக் காணமுடியவில்லையென்று குறை கூறுகிறாய். அவரைக் காணவேண்டுமானால் உனது கண்களினின்றும் மாயையாகிய திரையை அகற்று.

ஞானத்தால் வரும் பயன் யாது? விடை வருகிறது :

12. ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்நுதே
அநாதி மத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே   

யத் ஜ்ஞேயம்-எது அறியப் படவேண்டியதோ, யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்தால், அம்ருதம் அஸ்நுதே-சாகாமல் இருப்பானோ, தத் ப்ரவக்ஷ்யாமி-அதை விளக்கிக் கூறுவேன், அநாதி மத்-அநாதியாகிய, பரம் ப்ரஹ்ம-பரப்பிரம்மம், ஸத் ந உச்யதே-“சத்” என்பதுமில்லை, அஸத் ந-“அசத்” என்பதுமில்லை.

பொருள் : ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத் என்பதுமில்லை, அசத் என்பதுமில்லை.

ஒன்பதாவது அத்தியாயம் பத்தொன்பதாவது சுலோகத்தில் பகவான் தம்மை (ம்ருத்யு:) சாவு என்றும் (அம்ருதம்) சாகாமையென்றும் சொன்னார். மேலும் தம்மை (ஸத்) உளதென்றும் (அஸத்) இலதென்றும் சொன்னார். ஸகுணப் பிரம்மம் பிரபஞ்ச சொரூபமாக இருக்கும்போது எல்லா முரண்பாடுகளும் அவரிடத்துச் சந்திக்கின்றன. வியாவகாரிக நிலையில் வைத்து விரைவில் மறையும் மக்கள் சாகின்றவர்கள் என்றும், நெடிது நிலைத்திருக்கும் தேவர்கள் சாகாதவர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அங்ஙனமே குணத்தோடு சம்பந்தப்பட்டுத் தோன்றியுள்ள காரியப் பிரம்மம் ஸத் என்று சொல்லப்பட்டது. அதனுடைய தோன்றா நிலை அஸத் என்று சொல்லப்பட்டது.

இத்தகைய விவகாரங்கள் யாவும் நிர்க்குண பிரம்மத்திடத்துக் கிடையா. அதைத் தோன்றியுளதென்றும் இலதென்றும் சொல்லலாகாது; அது தோற்றம் மறைவு அற்றது. அதனாலே தான் பரப்பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது. அது ஆதி அந்தம் அற்றது. மாறுபாடே அதனிடத்து இல்லை. அம்ருதம் என்பது அதற்கே முற்றிலும் ஒவ்வும். அபரோக்ஷõனுபூதியில் அறியத் தக்கது அதுவே. அதை அறிந்தபின் ஜீவனுக்குத் தான் வேறு, அது வேறு என்ற பேதமில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகிறான். ஆகையால் சாகாத்தன்மை பிரம்மஞானியினுடையதாகிறது. பிரம்ம நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்பது அதுவே. அது மனம் மொழியைக் கடந்த பெருநிலை.

அகண்ட பரம்பிரம்மத்தை ஸமாதியில் மட்டும்தான் அறியலாகும். அப்பால் ஒரே மௌனம்; ஜீவன் ஜகத் இவைகளைப்பற்றிய ஆராய்ச்சி, ஞானம் அக்ஞானம் என்ற விவாதம் இவைகளெல்லாம் அடங்கிவிடுகின்றன. ஸ்வரூபத்தைத் தவிர வேறொன்றும் ஆங்கில்லை. உண்மையில் உப்புப் பிரதிமை பிரம்மாண்ட ஸமுத்திரத்தில் மூழ்கிய பிறகு தன்னுடைய கதையைச் சொல்ல வெளிவருவதில்லை. இதுதான் பிரம்ம ஞானம்.

இந்த அமிர்த சாகரத்தில் கலப்பதற்கு முன்பு சாதகன் காணும் காட்சி யாது? விடை வருகிறது :

13. ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோऽக்ஷிஸிரோமுகம்
ஸர்வத: ஸ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி   

தத் ஸர்வத: பாணிபாதம்-அது எங்கும் கைகால்களுடையது, ஸர்வதோ அக்ஷி ஸிர; முகம் - எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது, ஸர்வத: ஸ்ருதிமத்-எங்கும் செவியுடையது,
லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.

பொருள் : அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.

கடலையணுகும் நதி கடலின் தன்மையைப் பெறுகிறது. நிர்க்குண பிரம்மத்தில் லயமாதற்கு முன்பு ஞானி ஜகத்திலுள்ள வடிவங்களை யெல்லாம் ஈசுவரசொரூபமாகப் பார்க்கிறான். அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை என்பது அவனுக்குப் பிரத்தியக்ஷமாகிறது.

அஹங்காரம் என்னிடம் இருக்கும் வரையில் ஜீவனாயும், ஜகத்தாயும் வேறு வேறு ஐசுவரியங்களுடன் தம்மைத் தோற்றுவிக்கும் ஈசுவரன் என் முன்னால் இருக்கின்றார்.

14. ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச   

ஸர்வ இந்த்ரிய குண ஆபாஸம்-எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது, ஸர்வ இந்த்ரிய விவர்ஜிதம்-எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது, ச அஸக்தம் ஏவ - பற்றில்லாதது, ஸர்வப்ருத் ச-அனைத்தையும் பொறுப்பது, நிர்குணம் குணபோக்த்ரு-குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.

பொருள் : எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.

பல வடிவங்களைக் காணுதற்குப் பகல் வேளை உதவுகிறது. ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருள்களை விளக்குகிறது. பல பொருள்களின் விளக்கமாகச் சூரியப் பிரகாசம் ஒளிர்கிறது எனலாம். மேலும் சூரிய வெளிச்சம் இவ் வடிவங்கள் யாவையும் அற்றது. அவ் வடிவங்களில் அது பற்றற்றிருக்கிறது. ஆத்ம சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாயிருக்கிறது. சினிமாத் திரையானது படங்களை யெல்லாம் தாங்குவது போன்று சிதாகாசம் ஜகத்திலுள்ள அனைத்தையும் தாங்குகிறது. படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திரையினுடைய வர்ணங்களல்ல. ஆனால் அத்தனை வர்ணங்களையும் திரை உள்ளபடி விளக்குகிறது. அங்ஙனம் முக்குணங்களும் பரமாத்மாவினிடத்து இல்லை. ஆயினும் குணங்களையெல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.

ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான். ஒன்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும். எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும், நெருப்பைத் தவிர்த்து எரிக்கிற சக்தியையும் சிந்திக்க வொண்ணாது. இன்னும் சூரிய கிரணங்களைத் தவிர்த்துச் சூரியனையும், சூரியனைத் தவிர்த்துச் சூரிய கிரணங்களையும் நினைக்க முடியாது; பாலைத் தவிர்த்து அதன் வெண்மையையும், வெண்மையைத் தவிர்த்துப் பாலையும் கருதவொண்ணாது. அது போல குணஸ்வரூபமான ஈசுவரனைத் தவிர்த்து நிர்க்குண ஸ்வரூபனையும், நிர்க்குண ஸ்வரூபனைத் தவிர்த்து குணஸ்வரூபனையும் சிந்திக்க முடியாது.

15. பஹிரந்தஸ்ச பூதாநாமசரம் சரமேவ ச
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்   

பூதாநாம் அந்த: பஹி: ச-பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது, சரம் அசரம் ஏவ ச-அசரமும் சரமுமாவது, தத் ஸூக்ஷ்மத்வாத்-நுண்மையால், அவிஜ்ஞேயம்-அறிய முடியாதது, அந்திகே ச-அருகில் இருப்பது, தூரஸ்தம் ச தத்-தூரமானது.

பொருள் : பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.

கடலுக்குள் மிதக்கிற பனிக்கட்டிக்கு உள்ளும் புறமும் இருப்பது நீர். அங்ஙனம் பரமாத்மா நீக்கமற எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கிறார். கடலின் மேல்பாகம் அலைவீசி அசைகிறது; அடிபாகம் அசையாதிருக்கிறது. பரமாத்மா குணங்களோடு கூடிப் பிரகிருதியாக இயங்குகிறார். குணம் போனவிடத்து அவர் அசையாதிருக்கிறார். கடல் நீர் ஆவியாக மாறி சூக்ஷ்மமாகும் பொழுது கண்ணுக்குத் தென்படுவதில்லை. அங்ஙனம் சுத்த சைதன்யமாகிய நிர்க்குண பிரம்மம் பேரறிவு சொரூபம் எனினும் மன பரிபாகமாகாத மந்த அதிகாரிகளுக்கு அப்பொருள் அறியவொண்ணாதது.

தன் சொந்த பூமியில் தன் பாதத்துக்குக் கீழ் பொன் இருப்பதை அறியாதவனுக்கும் பொன்னுக்கும் வெகுதூரம். தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவனுக்கு அவர் மறுமையில் எங்கேயோ இருப்பதாக எண்ணம். தன் அந்தராத்மா அவர் என்று அறிகிறவனுக்கு அவரைவிட அருகில் உள்ள பொருள் வேறொன்றுமில்லை.

ஸமாதி நிலையிலிருந்து இந்திரிய நிலைக்கு வருபவனுக்கு இலேசான அஹங்காரம் இருக்கும். இதனால் அவன் ஒரே கடவுளின் பல்வேறு தோற்றங்களாகத் தன்னையும் ஜீவர்களையும் ஜகத்தையும் காண்கிறான். உனக்கென்று தனி வியக்தி இருக்கும் வரையில், அதாவது உன்னிடம் அஹங்காரம் இருக்கும் வரையில் ஈசுவரன் உருவம் உள்ளவன் என்பதைத் தவிர வேறுவிதத்தில் அவனை உன்னால் தியானிக்கவோ, நினைக்கவோ, காணவோ முடியாது. அதுவரையில் அகண்ட நிர்க்குணப் பிரம்மத்தை நீ உள்ளும் புறமும் சகுணக் கடவுளாகத்தான் காணுவாய். சகுணக் கடவுளின் இந்தத் தோற்றங்கள் பொய்யானவையல்ல. சரீரம், மனம், உலகம் இவைகளைக் காட்டிலும் அவை பன்மடங்கு மெய்யானவை.

16. அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச   

ஜ்ஞேயம் தத்-அறியத் தக்க அது (பிரம்மம்), பூதேஷு அவிபக்தம் ச-உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல், விபக்தம் இவ ச ஸ்திதம்-பிரிவுபட்டதுபோல் நிற்பது. பூதபர்த்ரு-பூதங்களைத் தாங்குவது, ச க்ரஸிஷ்ணு-அவற்றை உண்பது, ச ப்ரபவிஷ்ணு-பிறப்பிப்பது.

பொருள் : உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.

ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு வடிவத்துக்குள்ளும் பிரிவுபட்டது போன்று தென்படுகிறது. பிரிவுபடுத்துகிற வடிவத்துக்குள்ளும் அது இடையீடின்றி வியாபித்திருக்கிறது. பரமாத்மா அத்தகையவர். பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தாங்குவது போன்று ஜகத், ஜீவன் ஆகிய அனைத்தும் ஆத்ம சைதன்யத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அவைகள் பிரளய காலத்தில் ஒடுங்குவது ஆத்மாவில்; சிருஷ்டி காலத்தில் தோன்றுவது ஆத்மாவில். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய மூன்று நிலைகளிலும் அவைகள் ஆத்மாவுக்குப் புறம்பாயில்லை. அலைகள் கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் ஒடுங்குவது போன்று இவையாவும் பரமாத்மாவிடம் தோன்றி, இருந்து, இறக்கின்றன.

மாசு மறுவற்று விளங்கிய ஆகாசத்தில் திடீரென்று மேகங்கள் தோன்றுவதையும் அடுத்த நிமிஷத்தில் அவை காற்றினால் அப்பால் போக்கப்படுவதையும் ஒருக்கால் கண்ட பரமஹம்ஸர் ஒருவர், மிகுந்த குதூகலத்துடன் குதிக்கத் தொடங்கி, இதைப் போன்றதுதான் ஜகத்தும்; முதலில் அது இருந்ததில்லை. பிரம்ம மாகிற நிர்மல ஆகாயத்தில் திடீரென்று தோன்றி இத்தனை பொருள்களையும் உண்டாக்கியது. பிறகு அதே பிரம்மத்தின் காற்றினால் அகற்றப்படுகிறது, என்றார்.

பிரளய காலத்தில் காரிருள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அது விழுங்கவும் செய்கிறது எனலாம். பரபிரம்மம் அத்தகையதோ என்ற ஐயம் ஏற்படலாம். அதற்கு விடை வருகிறது.

17. ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்   

தத் ஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி:-ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி, தமஸ:-இருளிலும், பரம் ஜ்ஞாநம்-உயர்ந்த ஞானம், ஜ்ஞேயம்-அறியத் தக்கது, ஜ்ஞாநகம்யம்-ஞானத்தால் எய்தப்படுபொருள், ஸர்வஸ்ய ஹ்ருதி விஷ்டிதம்-எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது, உச்யதே-என்று கூறப் படுகிறது.

பொருள் : ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.

சுயம் ஜோதியாகத் தென்படும் சூரியன் நக்ஷத்திரம் முதலியவைகள் பிரளய காலத்தில் தங்கள் ஒளியை இழந்து மறைகின்றன. புத்தியானது ஆத்மாவிடத்து வாங்கிய உணர்ச்சியை இழக்கலாகிறது. ஆத்மாவோ தன் ஒளியை ஒருக்காலும் இழப்பதில்லை. ஜடப் பொருள்களுக்கு உண்டாகிற இருளும் வெளிச்சமும் ஆத்ம சைதன்யத்தை அணுகமாட்டா. நள்ளிருளில் ஒருவனுக்குத் தன் உடலும் உடையும் தென்படுவதில்லை. ஆயினும் நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி இருளில் மறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் அவ்வுணர்ச்சி அதிகமாகத் தோன்றுவதுமில்லை. ஆத்ம சைதன்யத்தின் அறிவைக் கொண்டே சூரியனையும் அறிகிறோம், இருளையும் அறிகிறோம். அந்த ஆத்மா ஞானவடிவு. அது தன்னைத்தானே அறிகிறது. அது தன்னைத்தானே சார்ந்திருக்கும்பொழுது தன்னை நிறைபொருளாக உணர்கிறது. ஆக, ஆத்மாவால் அடைதற்கு உரியது ஆத்மாவே. அது ஹிருதய கமலத்தில் யாண்டும் நிலைத்திருக்கிறது.

உள்ளே (ஹிருதயத்தில்) ஈசுவரனை உணர்பவன் புறம்பேயும் அவனைக் காண்பான். தன்னுள்ளே ஈசுவரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான். ஆகவே தேகாலயத்தில் தெய்வத்தைக் காண்பவன் அகிலாண்டத்திலேயும் அவனைக் காண்பான்.

18. இதி ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத:
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே   

இதி ஷேத்ரம்-இங்ஙனம் ஷேத்ரதிரம், ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச-அவ்வாறே அறிவு (ஞானம்), அறியப் படு பொருள் (ஞேயம்), ஸமாஸத: உக்தம்-சுருக்கமாகச் சொல்லப் பட்டது, மத்பக்த: ஏதத் விஜ்ஞாய-என் பக்தன் இதையறிந்து, மத்பாவாய உபபத்யதே-எனது தன்மையை அடைகிறான்.

பொருள் : இங்ஙனம் ஷேத்ரதிரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.

மனிதன் எதனிடத்துத் தன் முழுமனதைச் செலுத்துகிறானோ அதை அறிய வல்லவனாகிறான். ஈசுவரனை உபாசிக்கிறவன் ஈசுவரனை அறிகிறான். இத்தனையுமாய் இலங்குவது ஈசனே என்ற ஞானம் வந்த பிறகு யாண்டும் அவன் ஈசனுடைய சான்னித்தியத்திலேயே இருந்து ஈசனை அடையத் தகுந்தவனாகிறான்.

ஈசுவரனைக் கண்டவனே ஞானி. அவன் அப்போது குழந்தையின் சுபாவமுடையவனாகின்றான். குழந்தைக்குத் தனி வியக்தித்வம் ஒன்று இருக்கிறதென்றாலும் அது வாஸ்தவமானதல்ல; வெளித் தோற்றம் மட்டுமே. குழந்தையின் இயல்பு வயது வந்தவனுடையதைப் போன்றதன்று.

19. ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி
விகாராந்ஸ்ச குணாந்ஸ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்   

ப்ரக்ருதிம் புருஷம் ச உபௌ ஏவ-பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும், அநாதீ வித்தி ச-அநாதி , (ஆரம்பம் இல்லாதது) என்றுணர், விகாராந் ச-வேறுபாடுகளும், குணாந் அபி-குணங்களும்,
ப்ரக்ருதிஸம்பவாந் ஏவ-பிரகிருதியிலேயே பிறப்பன என்று, வித்தி- அறிந்து கொள்.

பொருள் : பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.

காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டதாகத் தென்படும் போது அது பிரகிருதி என்றும், மாயை யென்றும், இயற்கை யென்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் பரியந்தம் வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரகிருதியினிடமுண்டு. முக்குணங்களாகப் பரிணமிப்பதும் அதுவே. அது நிர்விகாரியாய் நிர்க்குணமாய்ப் பேரறிவாய்த் தன்மயமாயிருக்கும் போது புருஷன் என்ற பெயர் பெறுகிறது. ஆயினும் பொருள் ஒன்று ஆதலால் இவை இரண்டும் அத்வைதம். உண்டாக்கப்பட்டதல்லவாதலால் அது அனாதி.

ஸமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாயும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதுபோல பிரம்மமும் மாயையும் இருக்கின்றன. சலிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் பிரம்மம்.

20. கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே   

கார்ய கரண கர்த்ருத்வே-கார்யங்களையும் கரணங்களையும் ஆக்கும் விஷயத்தில், ப்ரக்ருதி ஹேது: உச்யதே-பிரகிருதியே காரணம் என்பர், ஸுக து:காநாம் போக்த்ருத்வே-சுக துக்கங்களை அனுபவிப்பதில், புருஷ: ஹேது உச்யதே-புருஷன் (ஜீவாத்மா) காரணம் என்பர்.

பொருள் : கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.

தந்தையே மைந்தன் ஆகின்றான். மைந்தனுடைய செயல்களில் சில தந்தைக்கு இன்பமூட்டுகின்றன; வேறு சில துன்பமூட்டுகின்றன. புருஷனே பிரகிருதி ஆகின்றான். பிரகிருதியின் வெவ்வேறு விகாரங்களே உடலாகவும், இந்திரியங்களாகவும் பரிணமிக்கின்றன. அவ்விந்திரியங்கள் ஞானேந்திரியங்களாகவும் கர்மேந்திரியங்களாகவும் பாகுபடுகின்றன. ஜீவாத்மாவானது பிரகிருதியோடு மேலும் சம்பந்தப்படுதற்கு இந்திரியங்கள் பயன்படுகின்றன. அத்தகைய சம்பந்தம் இன்ப துன்பமாக வடிவெடுக்கிறது. இங்ஙனம் புருஷன் பிரகிருதியோடு சேர்வதால் புருஷன் பாடம் கற்று வருகிறான். இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துவதே பிரகிருதியின் தொழில்.

பிரம்ம ஞானப் பிராப்தி. பரமானந்த போகம் முதலியவைகளெல்லாம் மாயையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் இவையெல்லாம் நமக்கு லபிக்குமெனக் கனவிலும் கண்டவர் எவர்? மாயையிலிருந்துதான் துவைதமும் மற்ற வியவகாரமும் உண்டாகின்றன. மாயைக்கு அப்பால் போகம், போகி என்பவை கிடையா.

ஜீவன் என்னபோக்கில் பாடம் கற்கின்றான் என்பது அடுத்து எழும் வினாவாகின்றது. அதற்கு விடை வருகிறது :

21. புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்‌க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்
காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு   

ப்ரக்ருதிஸ்த: ஹி-பிரகிருதியில் நின்றுகொண்டு, புருஷ:-புருஷன் (ஜீவாத்மா), ப்ரக்ருதிஜாந் குணாந் புங்‌க்தே-பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான், குணஸங்க:-குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே, அஸ்ய ஸத் அஸத் யோநி ஜந்மஸு-இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக், காரணம்-காரணமாகிறது.

பொருள் : புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.

வெயிலில் நிற்பவன் வெயிலை அனுபவிக்கிறான். பனியில் நிற்பவன் பனியை அனுபவிக்கிறான். அங்ஙனம் ஜீவாத்மா பிரகிருதியோடு பொருந்தியிருக்கையில் பிரகிருதியின் தன்மைகளையெல்லாம் தன்னுடையவைகளெனக் கருதி அனுபவிக்கிறான். நான் இன்பம் துய்க்கிறேன், நான் துன்பம் துய்க்கிறேன், நான் மயங்கிப்போனேன், நான் அறிவுடையவனாயிருக்கிறேன்-இவை போன்ற உணர்ச்சிகள் குணத்தோடு பற்று வைப்பதால் வருகின்றன. இனி, பிறப்புக்குக் காரணமாயிருப்பதும் பற்றுதலே. மேலான குணத்தோடு பற்று வைப்பவன் தேவன் போன்ற மேலானவனாகப் பிறக்கின்றான். கீழான குணத்தில் பற்று வைப்பவன் விலங்கு போன்ற கீழானவனாகப் பிறக்கிறான். மேலானதும் கீழானதும் கலந்த குணத்தில் பற்று வைப்பவன் சாதாரண மனிதனாகப் பிறக்கிறான்.

இப்படித் தொடர்ந்து வருகிற ஜனன மரண சம்சாரத்தினின்று விடுதலையடைதற்கு வழியொன்றுமில்லையா? விடை வருகிறது :

22. உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஸ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேऽஸ்மிந்புருஷ: பர:   

உபத்ரஷ்டா அநுமந்தா ச-மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், பர்தா போக்தா மஹேஸ்வர: -சுமப்பான், உண்பான், மகேசுவரன், இதி அஸ்மிந் தேஹே பர புருஷ:-இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன், பரமாத்மா அபி ச உக்த:-பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.

பொருள் : மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.

உடலிலே இத்தனை செயல்கள் நடைபெறுகையில் அக்ஞானத்தில் உழலும் ஜீவனானவன் தன்னை இத்தனைக்கும் கர்த்தாவாக எண்ணுகிறான். அந்த ஜீவ சைதன்யமே பரமாத்மாவின் தோற்றமாகும். உள்ளே இருக்கும் உத்தமன் எத்தகையவன் என்று கேட்குமிடத்து, அவன் :

உபத்ரஷ்டா - அருகிலிருந்து காண்போன் அல்லது சாக்ஷியாக இருக்கிறான். சொக்கட்டான் ஆடுபவர்களை விட அதைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு யார் எங்கே எக்குற்றம் செய்கிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. மனத்தகத்து சாக்ஷியாயிருக்கும் பரமாத்மா உடலிலும் உள்ளத்திலும் நிகழ்வனவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அனுமந்தா - அனுமதி அல்லது சம்மதம் கொடுப்பவர். ஒன்றும் தெரியாத அவிவேகி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். பார்த்ததை நல்லதென்று ஆமோதிக்கவோ, அல்லது கெட்டதென்று நிராகரிக்கவோ அவனுக்குத் தெரியாது. அறிஞனுக்கோ அது சாலும். ஜகத்தின் நடைமுறைக்குப் பரமாத்மா அங்ஙனம் அனுமந்தாவாயிருக்கிறார்.

பர்த்தா - விளையாட்டைப் பார்க்கவும் அனுமதிக்கவும் ஒருவனுக்கு இயலலாம். ஆனால் அதற்கு ஆகிற செலவு கொடுத்து அதை ஆதரிக்க இயலுகிறவன் அதிலும் மிக்கான் ஆகிறான். அவனைப் பர்த்தா என்று சொல்லவேண்டும். தாங்குபவன் என்பது அதன் பொருள். சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குவது போன்று பரமாத்மா பிரகிருதியைத் தாங்குகிறார்.

போக்தா - சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குகிறது எனினும் அப்படத்தை ரசிக்க அதனால் இயலாது. திரை ஜடப்பொருளாயிருப்பதே அதற்குக் காரணம். மனைவிக்குக் கணவன் பர்த்தா. அதற்குமேல் அவளுடன் கூடின இல்வாழ்க்கைக்கு போக்தாவாக, அதாவது இல்வாழ்க்கையை அனுபவிப்பவனாக அவன் இருக்கிறான். அங்ஙனம் சித் சொரூபியாகிய, ஆனந்த சொரூபியாகிய பரம புருஷன் பிரகிருதிக்கு போக்தாவாக இருக்கிறார்.

மகேச்வரன் - கணவன் மனைவியை ஆதரித்து அவளுடன் கூடிய இல்வாழ்க்கையை அனுபவிக்கலாம். ஆனால் மனைவி அவன் கட்டுப்பாட்டில் அடங்காதவளாயிருக்கலாம். பின்பு, பரம புருஷனோ அரசன் போன்றவர். ராஜாவுக்கு அவனுடைய பிரகிருதிகளெல்லாம் உட்பட்டவைகள். மகேச்வரனது ஆளுகைக்குப் பிரகிருதி அல்லது ஷேத்ரதிரம் முற்றிலும் கட்டுப்பட்டது. அவருடைய ஆணையை மீறுதற்கு அதற்கு இயலாது.

இத்தனை விதங்களில் அவர் இயற்கையோடு தொடர்வு வைத்திருந்தும் அவர் இயற்கையில் கட்டுப்பட்டவரல்லர். ஆகையால் அவர் பரமாத்மன், அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டவர். இங்ஙனம் இத்தேகத்தினுள்ளேயே பிரகிருதியின் செயல் ஒன்றிலும் கட்டுப்படாதவராக, ஆனால் அதற்கு ஆதரவும், ஒழுங்குப்பாடும் தருபவராகப் பரம புருஷன் வீற்றிருக்கிறார்.

புருஷ பிரகிருதியின் மூலமாகவே உலகம் உண்டாயிற்று. அது எப்படி யென்று தெரியுமா? வீட்டு எஜமானன் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். வீட்டு எஜமானி இப்பக்கமும் அப்பக்கமும் ஓடி அலைந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பாக வேலைபார்த்து, வீட்டுக்கு வருபவர்களையும் வரவேற்றுக் கவனித்துக்கொள்கிறாள். அடிக்கடி தன் கணவனிடம் சென்று அலுவல்கள் எவ்வாறு நடந்து வருகின்றன வென்பதை அறிவிப்பதோடு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாள். தலைவனும் குறிப்பறிந்து தன் சம்மதத்தைத் தலையசைப்பின் மூலமாகத் தெரிவிக்கிறான். பிரகிருதி புருஷன் இவர்களது காரியமும் இப்படித்தான் நடைபெற்று வருகிறது.

பிரகிருதி புருஷனைப்பற்றிய ஞானத்தினின்று வரும் நலன் ஏதாவது உண்டா? விடை வருகிறது :

23. ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ
ஸர்வதா வர்தமாநோऽபி ந ஸ பூயோऽபிஜாயதே   

ஏவம் புருஷம் ப்ரக்ருதிம் ச-இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், குணை: ஸஹ-அதன் குணங்களையும், ய: வேத்தி-எவன் அறிகிறானோ, ஸ: ஸர்வதா வர்தமாந: அபி-அவன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், பூய: ந அபிஜாயதே-மறு பிறப்பில்லை.

பொருள் : இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.

கண்ணாடியின் எதிரே தோன்றும் வடிவங்களின் பிம்பத்தை அப்படியே காட்டவல்லது கண்ணாடி. ஆனால் கண்ணாடி அதனால் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரகிருதியின் விகாரங்களால் பிரம்மமும் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மாகிறான். பிராரப்த கர்மத்தால் உடலில் ஏற்படும் இன்ப துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. கானல் நீர் போன்றுள்ள பிரகிருதியின் தோற்றத்தைப் போற்றிப் பாராட்டுவதால் அவனுக்குப் பிரகிருதியில் பற்று ஒன்றும் உண்டாவதில்லை. ஜகத் என்பது வெறும் தோற்றம் என்று அவன் அதைப் புறக்கணிப்பதால் அவனுக்கு நஷ்டம் வருவதுமில்லை. இவ்வுடலம் இருக்கும்வரை அதில் வாழ்க்கை பிராரப்தத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானி ஜீவன்முக்தனாய் வாழ்கிறான். உடல் வீழ்ந்த பிறகு அவன் இன்னொரு பிறவி எடுப்பதில்லை. தீயில் வெந்த கயிறு கட்டுதற்கு உதவாது. அங்ஙனம் ஞானாக்கினியில் வெந்த சஞ்சித ஆகாமிய கர்மம் இன்னொரு பிறவியை உண்டுபண்ண மாட்டா.

சூளையில் வேகாத மண்பாண்டம் உடைந்தால் அம்மண்ணை வேறு புதிய பாண்டம் உண்டாக்கக் குயவன் உபயோகிப்பான். ஆனால் சூளையில் வெந்த மண்பாண்டம் உடைந்தாலோ அதன் துண்டுகளை அப்பால் அவன் உபயோகிக்க முடியாது. அதுபோல ஒருவன் அக்ஞானத்துடன் மரணமடைந்தால் மறு ஜன்மம் அடைவான். ஆனால் உண்மை ஞானமாகிய அக்கினியால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறு ஜன்மம் கிடையாது.

ஞானத்தை அடைதற்கான வழிகள் எவை? விடை வருகிறது :

24. த்யாநேநாத்மநி பஸ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே   

கேசித் ஆத்மாநம் ஆத்மநா-சிலர் ஆத்மாவில், ஆத்மாவால், த்யாநேந ஆத்மநி பஸ்யந்தி-தியானத்தின் மூலமாக ஆத்மாவை அறிகிறார்கள், அந்யே ஸாங்க்யேந யோகேந-பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள், அபரே கர்மயோகேந ச-பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.

பொருள் : சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.

ராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம் ஆகிய மூன்றும் இங்குச் சொல்லப்பட்டுள்ளன. பக்தியோகம் அடுத்த சுலோகத்தில் வருகிறது.

25. அந்யே த்வேவமஜாநந்த: ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதிபராயணா:   

து அந்யே ஏவம் அஜாநந்த:-வேறு சிலர் இவ்வாறு அறியாமல், அந்யேப்ய ஸ்ருத்வா-அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை, உபாஸதே ச-வழிபடுகிறார்கள், தே ஸ்ருதிபராயணா: அபி-அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின், ம்ருத்யும் அதிதரந்தி ஏவ-மரணத்தை வெல்வார்.

பொருள் : இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.

பக்தியோகம் மற்ற மூன்று யோகங்களைவிட மிக எளியது. சாஸ்திர ஞானமும் விவேகமும் இதற்கு ஏராளமாய் வேண்டியதில்லை. ஆயர் குலத்து தித்த பெண்களே கல்வியறிவின்றி, நூல் ஆராய்ச்சியின்றி, சுத்த பக்தியால் கண்ணனை அடைந்தார்கள் என்றால் விவேகமும் வைராக்கியமும் உடைய மேலோர்க்கு அது இன்னும் எவ்வளவு எளிதாகாது?

பகவத் பக்தியை ஒரு புலியோடு ஒப்பிடலாம். புலியானது மிருகங்களை விழுங்குவதுபோல், பக்தியானது காமாதிகளான பெரும் பகைவர்களை விழுங்குகிறது. பகவத் பக்தி ஒருதரம் நன்றாக உண்டாகிவிட்டால், காமம் குரோதம் முதலிய கெட்ட பாசங்கள் முற்றிலும் நசிந்துவிடும். பிருந்தாவனத்து கோபஸ்திரீகள் கிருஷ்ணனிடம் வைத்த தீவிரபக்தியால் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்திருந்தனர்.

கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய நான்கும் ஸ்ரீமத் பகவத்கீதையில் சம அந்தஸ்துப் பெறுகின்றன. ஒன்றைக் குறைபடுத்துதலும் மற்றொன்றை மிகைப்படுத்துதலும் கீதையில் இல்லை. இந்த நான்கு யோகங்களில் ஏதேனும் ஒன்றே போதுமானது. ஏதேனும் ஒரு யோகத்தின் மூலமாக மனிதன் பரிபூரணத் தன்மையடையலாம். பின்பு நான்கு யோகங்களும் சமரசம் அடைதலே சாலச்சிறந்தது. கர்மயோகம் ஆற்றலைத் தருகிறது. ராஜயோகம் மனோவலிவை வளர்க்கிறது. பக்தி அன்பைப் பெருக்குகிறது. ஞானம் அறிவை வளர்க்கிறது. நிறை மனிதனிடத்து இவையாவும் பூரண வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

இனி, நான்கு யோகங்களையும் முறையாகக் கையாளுவதால் வரும் நிறை ஞானம் விளக்கப்படுகிறது.

26. யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்
ஷேத்ரஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப   

பரதர்ஷப:-பரதக்காளையே, யாவத் கிஞ்சித் ஸ்தாவர ஜங்கமம்-எத்தனை எத்தனை ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும், ஸத்த்வம் ஸஞ்ஜாயதே-பிராணிவர்க்கம் உண்டாகின்றதோ, தத் ஷேத்ர ஷேத்ரஜ்ஞ ஸம்யோகாந்-அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்தது, வித்தி-என்று அறி.

பொருள் : பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.

சினிமாத் திரையும் அதன்மீது படுகிற நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் சேர்க்கையும் படக் காட்சிக்குக் காரணங்களாகின்றன. அசையாத திரையின் துணையால் அசையும் மனிதன் ஒருவனது தோற்றம் அங்கே தென்படுகிறது. நிறத்தின் அமைப்பு விசேஷத்தால் அவ்விடத்தில் தீப்பற்றி எரிவது போன்று காட்சி உண்டாகிறது. நிழல், நிறம் இவைகளின் தன்மை திரையின் மீது ஏற்றப்படுகிறது. பின்பு திரையின் தன்மையானது நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் மீது ஏற்றப்படுகிறது. படத்தோற்றத்துக்கு இதுவே காரணம். சித் ஆகாசம் என்கிற திரையின் மீது முக்குண மயமான ஷேத்ரதிரம் அரோபிக்கப்படுகிறது - அதாவது ஏற்றுவிக்கப்படுகிறது. இங்ஙனம் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனுடைய சேர்க்கையால் ஜடமாகிய ஷேத்ரதிரம் அறிவுடையதுபோல் தென்படுகிறது. உண்மையில் அறியும் தன்மை ஆத்மாவினுடையது. பிறவாத, இறவாத ஆத்மாவானது பிறந்து இறப்பதுபோன்று தென்படுகிறது. பிறப்பும் இறப்பும் - அதாவது தோன்றுவதும் மறைவதும் ஷேத்ரதிரத்தினுடைய இயல்பு. இது ஆத்மாவினிடத்து நிகழ்கிறது என்ற மித்தியா ஞானம் அக்ஞானிக்கு உண்டாகிறது. தீப்பற்றி எரிகிற சினிமாக் காட்சி தென்பட்டாலும் திரையில் தீப்பற்றிவிடாது என்ற ஞானம் அதன் தத்துவத்தை அறிகிறவர்களுக்குண்டு. உலகம் உண்டாவது, நிலைபெறுவது , மறைவது என்பதெல்லாம் இத்தகையது என்று ஞானி உள்ளபடி அறிகிறான். ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனைப் பாகுபடுத்தி உள்ளபடி அறிவதே ஞானம்.

நீ வியக்தி ஸ்வரூபனாக இருக்கும் வரையில், அதாவது நீ ஜீவனாய் இருக்கும் வரையில், வெண்ணெய், மோர் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும்; அதாவது ஈசுவரன் ஜகத் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும். உவமையை விளக்கிச் சொல்வோமானால் முதன் முதலில் இருந்த பாலானது ஸமாதி மூலமாய் அறியப்படும் பிரம்மமாகும்; வெண்ணெய் ஈசுவரனாகும்; மோர் இருபத்துநான்கு தத்துவங்களாலான உலகமாகும்.

ஞானம் அடைந்தவன் பரமாத்மாவை எப்படிக் காண்கிறான்? விடை வருகிறது ?

27. ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்
விநஸ்யத்ஸ்வவிநஸ்யந்தம் ய: பஸ்யதி ஸ பஸ்யதி   

ய: விநஸ்யத்ஸு ஸர்வேஷு பூதேஷு-எந்த மனிதன் அழியக் கூடிய எல்லா பூதங்களிலும், அவிநஸ்யந்தம் ஸமம் திஷ்டந்தம்-அழியாதவனாகவும் சமமாக நிற்பவனாகவும், பரமேஸ்வரம்-பரமேச்வரனை, பஸ்யதி-பார்க்கிறானோ, ஸ: பஸ்யதி-அவனே காட்சி உடையவன்.

பொருள் : எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.

படங்கள் அனைத்துக்கும் சினிமாத் திரை சமமாயிருக்கிறது. படத்தின் அமைப்பில் இதன் இடத்தில் அது இருக்கிறது, இன்ன இடத்தில் இல்லை என்பது கிடையாது. இனி, படங்களெல்லாம் ஓயாது தோன்றி மறைகின்றன. திரையோ மாறுதல் அடையாது நிலைத்திருக்கிறது. சித் ஆகாசம் என்னும் திரையின் மீது ஜகத் என்னும் படம் உண்டாகி அழிந்துகொண்டிருக்கிறது. சினிமா என்னும் படம் உயிரற்ற ஓவியம். ஜகத் என்னும் படமோ உயிர் ஓவியம். ஏனென்றால் அதற்கு ஆதாரமாயுள்ள சித் ஆகாசம் அல்லது பரமாத்மாவிடமிருந்து அது சைதன்யத்தை, அதாவது உணரும் தன்மையைப் பெறுகிறது. ஜகத்து அல்லது ஷேத்ரதிரத்துக்கு உயிர் வழங்குவதால் அது பரமேசுவரன் எனப்படுகிறது. திரையின்றிப் படமில்லை. பரமேசுவரனின்றி உலகம் ஒன்றுமில்லை. அப்பரமேசுவரனையும் அவன் மயமாக உலகத்தையும் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆகிறான். மற்றவர்கள் படத்தை மெய்யென நினைக்கும் குழந்தைகள் போன்றவர்களாய் இருக்கின்றனர்.

சூரியன் உலக முழுதிலும் சமனாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்ணுக்குத் தெரியாது மறைத்து வைக்கிறது. அங்ஙனம் மாயையாகிய திரை எங்கும் நிறைபொருளை - கடவுளை, நம் கண்ணுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த சொரூபமாகத் தோன்றும்.

ஈசுவரக் காட்சி காண்பவனது வாழ்க்கையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? விடை வருகிறது :

28. ஸமம் பஸ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஸ்வரம்
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்   

ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதம் ஈஸ்வரம்-எங்கும் சமமாக ஈசன் நிற்பதை, ஸமம் பஸ்யந் - சமமாகவே பார்த்துக் கொண்டு இருப்பவன், ஆத்மாநம் ஆத்மநா ந ஹிநஸ்தி-தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.

பொருள் : எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.

மனிதன் செய்கிற எல்லாக் கேடுகளுக்கும் காரணமாயிருப்பது அக்ஞானம். கேடுகளிலெல்லாம் பெரிய கேடு தன்னை ஷேத்ரதிரம் அல்லது பிரகிருதியாக நினைத்துக்கொள்வது. சரீரத்தைத் தான் என்று நினைப்பவன் பல பிறவிகளை எடுக்கிறான். ஒவ்வொரு தடவையும் தன் உடல் கூற்றை அழித்துக்கொண்டு புதிய பிறவியெடுக்கிறான். அழியாத ஆத்மா அக்ஞானத்தால் பலதடவை அழிக்கப்பட்டது போன்று ஆகிறது. மற்ற உயிர்களை மனிதன் தனக்கு வேறானவைகளாக நினைப்பதால் அவைகளுக்குத் தீங்கு செய்கிறான். இது மித்தியா ஞானம் அல்லது மயக்கத்தின் பயனாகும். பிரம்மஞானி பிரம்மத்துக்கு அன்னியமாக எதையும் காண்பதில்லை. அவனுக்கு உலகமெல்லாம் ஒரே பிரம்ம சொரூபமாகக் காட்சி கொடுக்கிறது. அதுவே அவன் அடைகிற பரகதியாம்.

குருவியின் கூண்டு அழிந்துபோனால், அக்குருவி ஆகாயத்தில் பறந்துபோய்விடுகிறது. அதுபோல, சரீர உணர்ச்சியும் உலக உணர்ச்சியும் மனத்தைவிட்டு நீங்கினால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய ஆகாயத்தில் பறந்து சென்று சமாதிநிலையில் ஐக்கியமாகிறது.

பூவுலகில் நடைபெறுகிற கிருத்தியங்களுக்கும் பிரம்மஞானிக்கும் ஒருவிதமான தொடர்வும் இல்லையா? இக்கேள்விக்கு விடை வருகிறது :

29. ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ:
ய: பஸ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஸ்யதி   

ச ய:-மேலும் எவன், ஸர்வஸ: கர்மாணி-எங்கும் தொழில்கள், ப்ரக்ருத்யா ஏவ க்ரியமாணா,நி-இயற்கையாலேயே செய்யப்படுகின்றன, ததா ஆத்மாநம் அகர்தாரம் பஸ்யதி-ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பானே, ஸ: பஸ்யதி =காட்சியுடையான்.

பொருள் : எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்

சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. அக்கினி இருக்குமிடத்தில் வெப்பம் உண்டு. அங்ஙனம் பிரம்மத்தின் சன்னிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் கிருத்தியங்கள் வேண்டிவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிர கிருதியாகிய உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் சம்பூரண நிலை சிறிதும் கலைந்து விடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.

பரம்பொருளை சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யாத நிஷ்கிரியர் என்ற கோட்பாட்டில் பிரம்மம் அல்லது புருஷன் என்று சொல்லுகிறேன். ஆனால் அத்தொழில்களைச் செய்தருளுகின்றார் என்ற கோட்பாட்டில் சக்தி, மாயை, பிரகிருதி என்ற பெயர்களுள் ஒன்றால் அழைக்கிறேன்.

ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞனுக்கிடையில் உள்ள தொடர்வு அடுத்த சுலோகத்தில் இன்னும் நன்கு விளக்கப்படுகிறது :

30. யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஸ்யதி
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா   

யதா பூத ப்ருதக் பாவம்-எப்போது பலவகைப்பட்ட பூதங்களின் தன்மை, ஏகஸ்தம்-ஒரே ஆதாரமுடையன, தத: ஏவ விஸ்தாரம் ச-அந்த ஆதாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் இருந்து) விரிவடைந்தனவாகவும், அநுபஸ்யதி-காண்கிறானோ, ததா ப்ரஹ்ம ஸம்பத்யதே-அப்போது பிரம்மத்தை அடைகிறான்.

பொருள் : பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.

அலை, திவலை, நுரை முதலிய தனித்தனி வடிவங்களெல்லாம் கடலுக்குப் புறம்பாயில்லை. எல்லாம் கடல் என்ற ஒரு பொருளிலே நிலைத்திருக்கின்றன. மேலும் அவைகளெல்லாம் கடலிருந்தே உண்டானவைகள். கடலே தனது சக்தியால் அத்தனைவித வடிவெடுத்திருக்கிறது. அது போன்று மாயா சக்தியின் வல்லமையால் பல்லுயிர்களாகத் தோன்றியிருப்பவைகளெல்லாம் பரபிரம்மத்திடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அந்த மாயா சக்தியே பிரம்மத்துக்கு அன்னியமானதல்ல. யார் ஒருவன் சுவானுபூதியில் இதை அறிகின்றானோ அத்தகைய பிரம்மஞானி பிரம்மமாகிறான்.

இயங்காப் பரபிரம்மமும் இயங்கும் சக்தியும் உண்மையில் ஒன்றேயாம். அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபி எவனோ அவனே ஸர்வசக்தி, ஸர்வ ஞானம், ஸர்வானந்தம் இவைகளையுடைய ஜகன் மாதாவாகவுமாகிறான். நெருப்பும் அதன் வெப்பமும் ஒன்றானவை. அக்கினியின்றி உஷ்ணத்தையும் உஷ்ணமின்றி அக்கினியையும் மனத்தினால் சிந்திக்க முடியாது. சக்தியும் பிரம்மமும் ஒன்று. சக்தி கர்மம் செய்கிறது. அந்த கர்மம் பிரம்மத்தைச் சார்கிறதா? இதற்கு விடை வருகிறது :

31. அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:
ஸரீரஸ்தோऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே   

கௌந்தேய-குந்தியின் மகனே, அநாதித்வாத்-ஆதியின்மையால், நிர்குணத்வாத் - குணமின்மையால், அயம் பரமாத்மா அவ்யய:-இந்தப் பரமாத்மா கேடற்றான், ஸரீரஸ்த: அபி-இவன் உடம்பிலிருந்தாலும், ந கரோதி-செயலற்றான்; ந லிப்யதே-பற்றற்றான்.

பொருள் : ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.

மாயா காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டவைகள் ஆதலால் அவைகளுக்குத் துவக்கமுண்டு. பரபிரம்மம் சிருஷ்டிக்கப்பட்ட தல்ல; எனவே அது ஆதியில்லாதது. மாயா காரியங்கள் குண சம்பந்தப்பட்டவைகள். எதற்குக் குணம் மாறுகிறதோ அது கேடடைகிறது. பரமாத்மா குணமில்லாதது; ஆதலால் அதனிடத்து மாறுதல் ஒன்றுமில்லை. அது கேடு அடைவதில்லை. நிறை பொருள் அசையாதது; ஆகையால் அதனிடத்துக் கர்மம் கிடையாது. அசையாத ஒன்று, கர்மம் செய்யாத ஒன்று எதையும் போய்ப் பற்றுவதில்லை.

பிரம்ம ஞானியினுடைய சரீரத்துக்கு ஏற்படும் அழிவு அவனுக்குரியதன்று. சரீரம் செய்கிற வேலை அவனுடைய தன்று. கடலின் மேற் பரப்பு ஆடுகிறது, அலையாக மோதுகிறது, பற்றுகிறது; அதன் உட்புறம் சலனமற்றுத் தன்மயமாயிருக்கிறது. நிறை ஞானியினுடைய தன்மையும் அத்தகையது.

பிரம்மம் எப்படிப்பட்டது? பிரம்மத்துக்குக் குணங்கள் இல்லை, சலனமில்லை, அது போக்கு வரவற்றது; மகாமேரு பர்வதத்தைப் போல் நிலைத்திருப்பது.

எதுபோன்று பரமாத்மா செயலற்றுப் பற்றற்று இருக்கிறது? அது மேலும் விளக்கப்படுகிறது :

32. யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஸம் நோபலிப்யதே
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே   

யதா ஸர்வகதம் ஆகாஸம்-எங்குமிருந்தாலும் ஆகாசம், ஸௌக்ஷ்ம்யாத் ந உபலிப்யதே-தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், ததா தேஹே-அவ்வாறே உடம்பில், ஆத்மா ஸர்வத்ர அவஸ்தித:-ஆத்மா எங்கணுமிருந்தாலும், ந உபலிப்யதே-பற்றுறுவதிலன்.

பொருள் : எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.

ஜலமானது உறைந்த பனிக்கட்டியாக, இளகிய நீராக, நுண்ணிய ஆவியாக மூன்று நிலைகளில் இருக்கிறது. நுண்ணிய நிலையில் அதை அழுக்குப்படுத்த முடியாது. பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மிக நுண்ணியது. ஆகையால் அதை மற்றவைகள் அழுக்காக்குவதில்லை. இனி ஆத்மாவைவிட நுண்ணியது ஒன்றுமில்லை. ஆதலால் அது எதுனாலும் தோய்வுறாதிருக்கிறது. ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பூமி முதலியவைகளில் உள்ள வடிவங்கள் ஆகாசத்தைப் பிளவுபடுத்துவதில்லை. எண்ணிறந்த உடல்களில் பிளவுபடாது நிறைந்துள்ள சிதாகாசம் அல்லது பரமாத்மா எதிலும் பிளவுபடாது, தோய்வுறாது, களங்கமடையாக இருக்கிறது.

ஞானம் அக்ஞானம், நன்மை தீமை, தர்மம் அதர்மம் இப்படிப்பட்ட துவந்தங்களுக்கு அப்பாலும் மேற்பட்டும் பிரம்மம் இருக்கிறது.

இன்னும் அது அத்தகையது?

33. யதா ப்ரகாஸயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:
ஷேத்ரம் ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஸயதி பாரத   

பாரத-பாரதா, யதா ஏக: ரவி-எப்படி சூரியன் ஒருவனாய், இமம் க்ருத்ஸ்நம் லோகம் - இவ்வுலக முழுவதையும், ப்ரகாஸயதி-ஒளியுறச்செய்கிறானோ, ததா ஷேத்ரீ-அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், க்ருத்ஸ்நம் ஷேத்ரம் ப்ரகாஸயதி-ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.

பொருள் : சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.

பூமி முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறான். ஆனால் பூமியிலுள்ள நன்மை கேடுகளால் சூரியன் பாதிக்கப்படுவதில்லை. இங்ஙனம் உலக முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுப்பதுபோன்று பரமாத்மா அகிலாண்டத்துக்கும், சரம் அசரம் அனைத்துக்கும் சைதன்யத்தை அல்லது அறிவை வழங்குகிறார். அந்தந்த ஜீவனது அறிவில் ஏற்படும் நலம் கேடு முதலியன பரமாத்மாவைப் பந்தப்படுத்துவதில்லை.

பிரம்மம் ஒரு விளக்கின் ஒளிப்பிழம்பைப் போன்றது. விளக்கின் வெளிச்சத்தில் நீ பாகவதத்தைப் படித்தாலும் படிக்கலாம்; அவ்வெளிச்சத்தின் உதவியைக்கொண்டே பிறரைக் கெடுக்க வேண்டி ஒரு பொய்ப் பத்திரத்தை எழுதினாலும் எழுதலாம். எல்லார்க்கும் அறிவு என்னும் வெளிச்சத்தைத் தருவது பிரம்மம். ஆனால் அது நன்மை தீமைகளோடு சம்பந்தப்படுவதில்லை.

முடிவான கருத்து யாதுவெனின்:

34. ஷேத்ரஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷúஷா
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்   

ஏவம் ஷேத்ர ஷேத்ரஜ்ஞயோ:-இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள,
அந்தரம்-வேற்றுமையையும், பூதப்ரக்ருதிமோக்ஷம் ச-ப்ரக்ருதி, பிரக்ருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும், யே ஜ்ஞாநசக்ஷúஷா விது-எவர்கள் ஞானக் கண்ணால்
தே பரம் யாந்தி-அவர்கள் பரம்பொருளை அடைகின்றனர்.

பொருள் : ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.

நோயையும் நோயாளியையும் நன்கு அறிகின்றவளவு மருத்துவன் நோயை நீக்க வல்லவன் ஆகிறான். இரண்டில் ஒன்றைத் தெரியாது போனாலும் சிகிச்சை சிலாக்கியப்படாது. அங்ஙனம் புருஷன் பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிதல் வேண்டும். எது புருஷன், எது பிரகிருதி என்று பாகுபடுத்துதலும் அவசியமானது. இதற்கெல்லாம் மேலாக ஞானவாழ்க்கையின் வாயிலாக ஞானக்கண்ணைப் பெறுதல் மிக முக்கியமானது. வெறும் சாஸ்திர ஞானம் போதாது. ஞானக்கண் திறக்கப்பெறுமிடத்து ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு கிடப்பதெல்லாம் அக்ஞானத்தால் என்பது விளங்கும். அதற்கெல்லாம் மேலாகப் பிரகிருதியானது புருஷனைச் சார்ந்திருக்கிறதென்றும், புருஷன் பிரகிருதியைச் சார்ந்திருப்பதில்லையென்றும், பிரகிருதி புருஷனுக்கு அன்னியமானதல்லவென்றும் சுவானுபூதியில் தோன்றும். அத்தகைய அபரோக்ஷ அனுபூதியைப் பெறுபவன் பிரம்ம ஞானியாகிறான். அவனே முக்தன் ஆகிறான்.

உலகம் மாயை யென்று சொல்லுவது எளிது. ஆனால் அதன் பொருள் இன்னதென்று உனக்குத் தெரியுமா? அது மிகுதி ஒன்றையும் வைக்காத கற்பூரத்தைக் கொளுத்துவது போலாம். சாம்பலை மிகுதியாக்கும் விறகுக் கட்டைகளைக் கொளுத்துவது போன்றதன்று. விசாரணை முடியும் நிலையில், உயர்ந்த சமாதி நிலை கிட்டும். அப்போது நான், நீ, உலகம் என்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இராது.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகோ நாம
த்ரயோதசோத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற பதின்மூன்றாம் அத்தியாயம்.


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #20 on: April 20, 2012, 12:36:38 PM »
 பதினான்காம் அத்தியாயம் 

குணத்ரய விபாக யோகம்

தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.

ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான். பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2 -பிறவிக்கு மூலகாரணம் 3-4 -குணங்களின் செயல் 5-10 -குணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18 -குணாதீதம் முக்தி நிலை 19-20 -குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.

ஸ்ரீபகவாநுவாச

1. பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய:-எதை அறிந்து எல்லா முனிவர்களும், இத: பராம் ஸித்திம் கதா:-இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ, ஜ்ஞாநாநாம் உத்தமம்-அந்த ஞானங்களிலேயே உயர்ந்த, பரம் ஜ்ஞாநம்-பரம ஞானத்தை, பூய: ப்ரவக்ஷ்யாமி-மறுபடி உரைக்கிறேன்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.

முன்னமே பகரப்பட்ட இந்த ஞானத்தை இன்னொரு போக்கில் பகவான் பகர்கிறார். பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் மேலும் அடையவேண்டியது ஒன்றுமில்லை. மனது பரிபக்குவம் அடைந்தவர்களுக்கு ஞான சாதனம் மிக எளியது எனினும், பக்குவம் அடையாதவர்களுக்கு அது மிகக் கடினமானது. ஆதலால் வெவ்வேறு பாங்குகளிலே வைத்து அது விளக்கப்படுகிறது. ஞான பராயணர்களாயிருந்தவர்கள் முனிவர் என்ற பெயர் பெற்றனர். ஞான முதிர்ச்சிக்கு ஏற்ப அவர்களிடத்து சித்தி அல்லது பரிபூரண நிலை அமைவதாயிற்று. பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் நிறைநிலை எய்துகின்றனர் எனினும், அவர்களது உடல் வாழ்க்கை குறைபாடுடையது போன்று தென்படுகிறது. உடலில் குற்றத்தைப் புருஷனது குற்றம் என்றெண்ணி மயங்கி விடலாகாது. அவ்வுடலத்தைத் துடைத்தான பிறகு முனிவர்கள் பரிபூரணமாகிய பரவெளியில் கலக்கின்றனர். அதற்கேற்ற ஞானம் வேறு ஒரு முறையில் இங்கு விளக்கப்படுகிறது.

ஈசுவரனை அறியும் வித்தை பரவித்தை எனப்படும். சாஸ்திரங்கள், தத்துவம், தர்க்கம், இலக்கணம் முதலியன வெல்லாம் மனத்தில் பெருங்குழப்பத்தையுண்டாக்கும். கிரந்தங்கள் எல்லாம் கிரந்தி (முடிச்சு)களைப் போன்றுள்ளன. பரவித்தையைக் கற்பிக்குமானால்தான் அவைகள் பயன்படுவனவாகும்.

பிரம்ம வித்தையின் பயன் யாது?

2. இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச   

இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து, மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர், ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார், ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.

பொருள் : இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

கடலைச் சார்ந்த உப்புப் பொம்மை கடலில் தன் வியக்தியை இழக்கிறது; அதே வேளையில் கடலின் சொரூபத்தைப் பெறுகிறது. ஞானியின் நிலை அத்தகையது. பிரம்ம சொரூபத்தில் அவன் ஒன்றாகிறான். அது பிரகிருதி மயமான தோற்றம் ஒடுக்கம் எல்லாம் கடந்திருப்பதால், அதை அடைகின்றவனுக்குப் பிறப்பு, இறப்பு, பிணி முதலியன கிடையா.

வேகவைத்த நெல்லைப் பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது. வேகவைக்காத நெல்தான் முளைவிடும். அதுபோல ஸித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறுஜன்மம் அடைவதில்லை. அஸித்தனோ தான் ஸித்தனாகும் வரையில் திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க வேண்டும்.

பிறவி எப்படி உண்டாகிறது? விடை வருகிறது :

3. மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத   

பாரத-பாரதா, மம மஹத்ப்ரஹ்ம யோநி-பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம், அஹம் தஸ்மிந் கர்பம் ததாமி-அதில் நான் கருத்தரிக்கிறேன், தத: ஸர்வபூதாநாம் ஸம்பவ: பவதி - எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.

பொருள் : பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.

பிரகிருதிக்கு பிரம்மா என்பது மற்றொரு பெயர். சதுர்முக பிரம்மா என்பதும் அதுவே. முக்குணமாயுள்ளது அது; சராசரம் அனைத்துக்கும் அது உபாதான காரணம். காரியமாகப் பரிணமித்துள்ள அனைத்துமாய் அவைகளுக்கு அப்பால் இன்னும் தோன்றா நிலையிலும் அது இருக்கிறது. ஆதலால் அது மஹத்பிரம்மா எனப்படுகிறது. எங்கும் வியாபிக்கும் தன்மை அதனிடத்துள்ளது.

பூமியில் விதையை நடுகிறோம். பூமி யோனியாயிருக்கிறது. விதை கர்ப்பமாகப் பரிணமிக்கிறது. சிசு உண்டாவதில் பெண் பால் பிரகிருதி தத்துவமாகவும் ஆண்பால் புருஷ தத்துவமாகவும் காரியப்படுகிறார்கள். அங்ஙனம் மூலப்பிரகிருதி என்ற யோனியில் ஆத்ம சைதன்யம் என்ற கர்ப்பம் வைக்கப்படுகிறபொழுது ÷க்ஷத்திர-÷க்ஷத்திரக்ஞனுடைய சம்யோகம் ஏற்படுகிறது. பிரகிருதியில் பிரகாசிக்கும் புருஷன் ஹிரண்யகர்ப்பன் என்று பெயர் பெறுகிறான். அவனுடைய எண்ணிறந்த கிரணங்களே உயிர்கள் அனைத்துமாய் இருக்கின்றன. ஜீவர்களும் ÷க்ஷத்திரக்ஞன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அறியுந்தன்மை அவர்களுக்கும் உண்டு. அவித்தையால் ஏற்பட்ட உபாதிக்கும், காமத்துக்கும், கர்மத்துக்கும் ஏற்ப எண்ணிறந்த ஜீவாத்மாக்கள் உண்டாகின்றன. அவைகளின் பாங்குகளும் எண்ணிறந்தவைகளாம்.

அடுத்த சுலோகத்தில் இக்கருத்து இன்னும் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது.

4. ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா   

கௌந்தேய-குந்தியின் மகனே, ஸர்வயோநிஷு-பல விதமான பிறப்பிடங்களிலும், யா: மூர்தய: ஸம்பவந்தி-எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ,
தாஸாம் மஹத் ப்ரஹ்ம: யோநி:-அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்), அஹம் பீஜப்ரத: பிதா-நான் விதை அளிக்கும் தந்தை.

பொருள் : எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.

கர்ப்பாசயங்கள் அல்லது யோனிகள் கணக்கற்றவை. தேவர்களாக, நரர்களாக, விலங்குகளாக, பறவைகளாக, பூச்சிகளாக, புழுக்களாக, ஸ்தாவரங்களாக அவ்வவைகளுக்கேற்ற யோனிகளிடத்திருந்தே உயிர்களெல்லாம் உண்டாகின்றன. இவைகளுக்கெல்லாம் தாயாயிருப்பவன் மூலப்பிரகிருதி. அவள் பெரிய நாயகி என்று அழைக்கப்படுகிறாள். தந்தையாயிருப்பவர் பரமாத்மா.

பிரகிருதி எங்ஙனம் உயிர்களை பந்தப்படுத்துகிறது? விடை வருகிறது :

5. ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்   

மஹாபாஹோ-பெருந்தோளாய், ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள், ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன, தேஹே-இவை உடம்பில், அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப், நிபத்நந்தி-பிணைக்கின்றன.

பொருள் : சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

பிரகிருதி முக்குணமயமாயிருக்கிறது. உருவம் முதலிய பண்புகள் ஒரு பொருளைச் சார்ந்திருப்பது போன்று குணம் என்ற பண்பு பிரகிருதி சொரூபமாகிய குணியைச் சார்ந்திருக்கிறது என்று எண்ணலாகாது. அக்கினியும் அதன் உஷ்ணமும் வேறானவைகளல்ல, ஒன்றே. அங்ஙனம் பிரகிருதியும் குணமும் ஒன்றேயாம். உலகத்தில் உள்ள நிறங்களை யெல்லாம் மூன்று அச்சில் தொகுத்துப் படங்கள் தீட்டிவிடலாம். அதே பாங்கில் பிரகிருதி முழுதும் முக்குணங்களில் அடங்கியிருக்கிறது. முக்குணங்கள் என்பனவும் பிரகிருதி என்பதும் சொரூபத்தில் ஒன்றேயாம். முக்குணங்களை முப்பாழ் என்று சொல்லுவதும் உண்டு.

பிரகிருதி அல்லது ÷க்ஷத்திரம் ÷க்ஷத்திரக்ஞனைச் சார்ந்திருக்கிறது. குணசொரூபம் அல்லாத அவனை குணம் எப்படிப் பிணிக்க முடியும்? பிணிக்கப்படாத ஆத்மா அக்ஞானத்தால் பிணிக்கப்பட்டது போன்று தென்படுகிறது. நீர் அசைவதால் நீரிலுள்ள சூரிய பிம்பம் அசைகிறது. சூரியனே அசைவது போன்று பிம்பத்தினின்று தென்படுகிறது. உண்மையில் சூரியன் அசைவதில்லை. அங்ஙனம் கட்டுப்படாத ஆத்மா கட்டுப்பட்டது போன்று தென்படுகிறது.

இனி, முக்குணங்களின் தன்மை விளக்கப்படுகிறது :

6. தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக   

அநக-பாவமற்றவனே, தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது, அநாமயம்-நோவற்றது, ஸுகஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும், ஜ்ஞாநஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும், பத்நாதி-கட்டுப்படுத்துவது.

பொருள் : அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.

கண்ணாடி ஒன்று தூயதாய் இருப்பதோடு சத்துவகுணத்தை ஒப்பிடலாம். அழுக்குப்படியாததும் ஸ்படிகம் போன்று அமைந்ததுமான கண்ணாடியின் வாயிலாக வெளிச்சம் நன்கு வெளியாகும். சத்துவகுணம் அங்ஙனம் ஆத்மப் பிரகாசத்தை விளக்கவல்லது. ஒப்பமான கண்ணாடியின் மூலம் அப்புறம் பார்த்தால் அது காட்சியை இடர்ப்படுத்துவதில்லை. பொருள்கள் உள்ளபடி அதன் வாயிலாக விளங்குகின்றன. அவைகளை உள்ளபடி கண்டறிவது ஞானம். புறப்பொருள்களைப் பார்த்தறியும்போது அவைகள் தரும் இன்பத்தில் நாட்டம் வருகிறது. சுகத்தை அனுபவிப்பதற்கு ஏற்றவாறு அதில் பற்றுதல் உண்டாகிறது. இன்னும் அதிக சுகத்தைப் புறப்பொருள்கள் எப்படித் தரும் என்ற ஆராய்ச்சி மேலும் ஞானப்பற்றை வளர்க்கிறது. புற உலகத்தைப்பற்றிய ஞானமும் அதனிடத்திருந்து பெறும் சுகமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகளாயிருக்கின்றன. ஆதலால் சத்துவகுணம் ஓங்கப்பெற்றுள்ள ஒருவன் மனதைப் பிரவிருத்தியிலே திருப்புவானாகில் அவனுக்கு சுகப்பற்றும் பிரகிருதி ஞானப்பற்றும் ஏராளமாயுண்டாகின்றன. மற்ற பந்தங்களை யெல்லாம்விட ஸத்துவகுணம் உண்டுபண்ணுகிற பந்தம் மிக வலிவு வாய்ந்தது. அந்த பந்தத்தை உடைத்தெறிவது மிகக் கஷ்டமானது. ஏனென்றால் ஆத்மானந்தத்துக்கு ஒப்பான சுகத்தை அது கொடுக்கிறது; நுண்ணறிவையும் அது வளர்க்கிறது. சுகத்துக்கும் அறிவுக்கும் அப்பால் செல்ல மனிதனுக்கு விருப்பம் வருவதில்லை.

7. ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்   

கௌந்தேய-குந்தி மகனே, ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம், த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள், தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால், நிபத்நாதி-கட்டுகிறது.

பொருள் : ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

ரஜோகுணம் ஆசை வடிவெடுத்து முடிவில்லாத பிரவிருத்தியை உண்டுபண்ணுகிறது. காவிக்கல் வெள்ளை வஸ்திரத்தைச் சிவப்பாக்குவது போன்று ரஜோகுணம் ஆத்மாவுக்கு வர்ணம் கொடுக்கிறது. திருஷ்ணா அல்லது வேட்கை யென்பது அடையாத பொருளின்மீது அடையவேண்டுமென்று கொண்டுள்ள விருப்பம். ஆஸங்கம் அல்லது பற்றுதல் என்பது பெற்றுள்ள பொருளை விட்டுப் பிரியலாகாது என்ற மனப்பான்மை. தோற்றத்திலுள்ள இவ்வுலகப் பொருள்களில் பற்றும், தோன்றாதுள்ள மறுமையில் பற்றுதலும் ரஜோகுணத்தால் ஆத்மாவுக்கு வருகின்றன. விறகுக் கட்டையானது எரிகின்ற தீயை வளர்ப்பது போன்று ரஜோ குணம் வினைப்பற்றை வளர்க்கிறது. கர்மம் செய்யாத ஆத்மாவைக் கர்த்தாவாகப் பண்ணிவைப்பது இக்குணம். ரஜோகுணம் இருக்கும் வரையில் கர்மத்தில் பற்றும் தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிற எண்ணமும் ஆத்மாவுக்குண்டு.

8. தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத   

பாரத-பாரதா! ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ, அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள், தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப்படுத்துகிறது.

பொருள் : தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!

அக்ஞான இருளினின்று வருவது தமோகுணம். இது விவேகத்தை மறைக்கும் தன்மையுடையது. சத்வகுணத்தைக் கெடுப்பது ரஜோகுணம். தமோகுணமோ சத்துவம், ரஜஸ் ஆகிய இரண்டையும் கெடுக்கிறது. அதனால் அறிவற்று, உணர்ச்சியற்று, செயலற்று மனிதன் ஜடம்போன்று ஆய்விடுகிறான்.

மூன்று குணங்களும் தொகுத்து மீண்டும் பகரப்படுகின்றன:

9. ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத   

பாரத-பாரதா, ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி-சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது,
ரஜ: கர்மணி-ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது, தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய-தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை), ப்ரமாதே உத ஸஞ்ஜயதி-மயக்கத்தில் பிணிக்கிறது.

பொருள் : சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.

ஒரு மனிதன் எதில் பற்று வைத்திருக்கிறானோ அதிலிருந்து அவனிடத்து எக்குணம் தலையெடுத்திருக்கிறது என்பது விளங்கும். விதவிதமான இன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புபவனிடத்து சத்துவகுணம் முன்னணியில் இருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாகப் பலவிதமான அலுவல்களில் ஈடுபட ஆசைப்படுபவனிடத்து ரஜோகுணம் ஓங்கியிருக்கிறது. மேகம் சூரியனை மறைப்பது போன்று தமோகுணம் ஞானத்தை மறைக்கிறது. தனக்கு ஏற்பட்டுள்ள கடமைகளைச் செய்யாது விட்டு விடுவதால் தமோகுண விருத்தியுடையவனுக்குக் கவலை யொன்றும் உண்டாவதில்லை. காலத்தை வீணாகக் கழிப்பது, பொருள் விரயமாவது ஆகியவைகளைக் குறித்து அவன் வருந்துவதில்லை. ஜடம்போன்று அவன் செயலற்றுக் கிடப்பான்.

இக்குணங்களின் ஆதிக்கம் எப்படி நடைபெறுகிறது? அதற்கு விடை வருகிறது :

10. ரஜஸ்தமஸ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா   

பாரத-பாரதா, ரஜ: தம: ச அபிபூய ஸத்த்வம் பவதி-ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது, ஸத்த்வம் தம: ச ரஜ:-சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி, ரஜோ குணம் நிற்கிறது, ததா ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம:-அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.

பொருள் : பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.

தேகம் எடுத்துள்ள ஒருவனிடத்து மூன்று குணங்களும் இருக்கின்றன. அவைகளுள் ஒரு குணம் முன்னணிக்கு வரும்பொழுது மற்ற இரண்டும் பின்னணிக்குப் போய்விடுகின்றன. விழித்திருந்து அமைதியே வடிவெடுத்தவனாக மனிதன் ஆகும்போது சத்துவகுணம் ஓங்கிநிற்கிறது. அப்பொழுது இன்பமும் ஞானமும் விரிவடைகின்றன. ரஜோகுணம் தலையெடுக்கின்றபொழுது விதவிதமான கர்மத்தில் மனிதன் ஈடுபடுகின்றான். பின்பு தமோ குணம் ஓங்குமிடத்து, மனிதன் கற்கவும் முடியாது, கர்மம் செய்யவும் முடியாது; சோம்பலும் தூக்கமும் வருகின்றன. நாள்தோறும் மூன்று குணங்களும் மாறி மாறி முன்னணிக்கு வருகின்றன. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.

அந்தந்த குணத்தின் செயல் மேலும் விளக்கப்படுகிறது :

11. ஸர்வத்வாரேஷு தேஹேऽஸ்மிந்ப்ரகாஸ உபஜாயதே
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத   

யதா அஸ்மிந் தேஹே ஸர்வத்வாரேஷு-எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும், ப்ரகாஸ ஜ்ஞாநம் உபஜாயதே-ஞான ஒளி பிறக்கிறதோ, ததா ஸத்த்வம் உத-அப்போது சத்வ குணம், விவ்ருத்தம் இதி வித்யாத்-வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.

பொருள் : இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.

பல வர்ணங்கள் தீட்டிய கண்ணாடிகள் அமைக்கப்பெற்றுள்ள பெட்டி ஒன்றனுள் தீபம் வைத்தால் எல்லாக் கண்ணாடிகள் வாயிலாகவும் அதன் வெளிச்சம் வெளியாகும். தீபத்தின் பிரகாசத்திற்கேற்ப வெளிச்சமும் அதிகரிக்கும். மனிதனுடைய உடல் அத்தகைய பெட்டி போன்றது. கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய இந்திரியங்கள் வாயில்களாகின்றன. குண வேறுபாட்டுக்கு ஏற்ற ஆத்மப் பிரகாசம் இந்திரியங்கள் வாயிலாக ஒளிர்கின்றது. சத்துவகுணம் ஓங்குமிடத்து ஆத்மப் பிரகாசம் நன்கு மிளிர்கிறது. பார்ப்பதில், கேட்பதில், ஒவ்வொரு இந்திரியத்தையும் கையாளுதலில் எழிலும் தெளிவும் திகழ்கின்றன. இந்நிலையில் மெய்யறிவு ஓங்குகிறது.

12. லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸம: ஸ்ப்ருஹா
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப   

பரதர்ஷப-பாரதக்காளையே! ரஜஸி விவ்ருத்தே-ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து, லோப: ப்ரவ்ருத்தி-அவா, முயற்சி, கர்மணாம் ஆரம்ப:-தொழிலெடுப்பு, அஸம: ஸ்ப்ருஹா - அமைதியின்மை, விருப்பம், ஏதாநி ஜாயந்தே-இவை தோன்றுகின்றன.

பொருள் : அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!

பிறர் பொருள்களையெல்லாம் தன்னுடையவையாக்கிக் கொள்ள விரும்புதல் பேராசை அல்லது லோபமாகிறது. இந்திரியங்கள் வாயிலாக வெளியுலக வியவகாரங்களில் முனைந்து போதல் பிரவிருத்தியெனப்படுகிறது. அப்படிச் செல்வதால் புதிய புதிய கர்மங்களைத் துவக்குவதில் ஊக்கம் உண்டாகிறது. அங்ஙனம் துவக்கிய கர்மங்களில் வெற்றியடையும்பொழுது மகிழ்வும், தோல்வியடையும்பொழுது மனச்சோர்வும் உண்டாகி, அமைதியின்மையை வருவித்துவிடுகிறது. தொடுத்த கர்மங்களைச் செப்பனிட விருப்பம் ஏற்படுவதால் வினைவேட்கை அல்லது தொழில் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவை யாவும் ரஜோகுணத்தின் அறிகுறிகளாம்.

13. அப்ரகாஸோऽப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந   

குருநந்தந-குருகுலச்செல்வமே! தமஸி விவ்ருத்தே- தமோ குணம் ஓங்குமிடத்தே, அப்ரகாஸ: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத: மோஹ ஏவ ச-ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்,
ஏதாநி ஜாயந்தே-இவை பிறக்கின்றன.

பொருள் : ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!

தமோகுணத்தின் ஆதிக்கத்தால் மனத்தகத்து இருள் சூழ்கிறது; அதனால் விவேகம் மறைந்துபட்டுப்போகிறது. ஒரு செயலையும் செய்யாது சோம்பித் திரியும் தன்மை தலையெடுக்கிறது. அஜாக்கிரதையே வடிவெடுத்தவனாக மனிதன் மாறியமைகிறபடியால் அவன் தவறுதல் செய்தற்கு இடம் ஏற்படுகிறது. மதி மயக்கம் அல்லது திரிவுபட்ட அறிவும் அதன் பயனாக வருகிறது.

குணம் மேலோங்குதற்கும் மறுபிறப்புக்கும் தொடர்வு உண்டா? இதற்கு விடை வருகிறது :

14. யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே   

யதா தேஹப்ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்தே- எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே, ப்ரலயம் யாதி-இறக்கிறானோ, ததா து உத்தமவிதாம்-அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின், அமலாந் லோகாந்-களங்கமற்ற உலகங்களை, ப்ரதிபத்யதே -அடைகிறான்.

பொருள் : சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.

உடலை விடும்பொழுது உள்ளத்தில் என்ன எண்ணம் நிலைத்திருக்கிறதோ அதற்கு ஏற்ப மறுபிறப்பு அமைகிறது. சத்துவ குணம் ஓங்கியிருக்கும்பொழுது தெய்விக சிந்தனையிருப்பது உறுதி. பிரம்மலோகம் முதலிய இடங்களில் சத்துவகுணமே நிறைந்திருப்பதால் அம்மனிதன் அந்த லோகத்தை அடைகிறான். உத்தமத்தை அறிந்தவர்கள் என்று ஈண்டு இயம்பப்படுவது பிரம்மா அல்லது ஹிரண்யகர்ப்பனை அறிந்தவர்களாம். ஆனால் அவர்களுடைய அந்த ஞானம் இன்னும் பரஞானம் ஆகவில்லை.

15. ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே   

ரஜஸி ப்ரலயம் கத்வா-ரஜோ குணத்தில் இறப்போன், கர்மஸங்கிஷு ஜாயதே-கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான், ததா தமஸி ப்ரலீந:-அவ்வாறே, தமஸில் இறப்போன், மூடயோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.

பொருள் : ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.

முன்பு சொன்ன சத்துவகுணத்தில் உடலை வகுப்பவன் முழு அறிவோடு அமைதியாகச் சாகிறான். ரஜோகுணத்தில் மரணமடைபவன் பதைபதைப்போடும், பேராவலோடும், துன்பத்தோடும் உயிர் துறக்கிறான். இடையறாது கர்மம் செய்யும் பாங்குடையவனாக அவன் பிறக்கிறான். தமோகுணத்தில் தேகத்தை விடுபவன் பிரக்ஞையின்றி ஜடநிலையில் சாகிறான். அவன் மிருகமாக அல்லது அறிவிலியாகப் பிறக்கிறான்.

தமோகுணத்தில் இருப்பவன் ரஜோகுணத்துக்கு வரமுயல வேண்டும். ரஜோகுணத்தில் இருப்பவன் சத்துவகுணத்திற்கு மேலேறுதல் முறை. ஏனென்றால் :

16. கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்   

ஸுக்ருதஸ்ய கர்மண:-நற்செய்கையின், பலம் து ஸாத்த்விகம்-பயனே சத்வ இயல்புடைய, நிர்மலம் ஆஹு:-நிர்மலத் தன்மை என்று கூறுவர், ரஜஸ: பலம் து:கம்-ரஜோ குணத்தின் பயன் துன்பம், தமஸ: பலம் அஜ்ஞாநம்-தமோ குணத்தின் பயன் அறிவின்மை.

பொருள் : சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.

தமோகுணத்தினின்று தொழிலின்மையும் தீவினையும் தோன்றுகின்றன. அதனால் மனிதனுக்கு முன்னேற்றம் இல்லை. ஆழ்ந்து செயலில் ஈடுபடும்போது அது துன்பத்தை விளைவிக்கும். ஆனால் அத்துன்பம் வேண்டப்படாததல்ல. துன்பப்படுபவனே தன்னைத் திருத்தியமைக்கிறான். மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துன்பம் பயன்படுவதுபோன்று வேறு எதுவும் பயன்படுவதில்லை. துயரத்தால் தன்னைத் தூயவனாக்குகின்றவன் நற்செயலுக்கு வருகிறான். அப்பொழுது தர்மம் அவன் மூலம் திகழ்கிறது. அதனால் அவன் சத்துவகுணம் எய்துகிறான்; தூயவன் ஆகிறான்.

குணங்களின் பயன் இன்னும் எவ்விதமாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :

17. ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச   

ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

பொருள் : சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

இதனால்தான் மனிதன் படிப்படியாகக் கீழான குணங்களினின்று மேலான குணங்களுக்குப்போக ஓயாது முயலவேண்டும். மேலும் :

18. ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:   

ஸத்த்வஸ்தா : ஊர்த்வம் கச்சந்தி-சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள், ராஜஸா: மத்யே திஷ்டந்தி-ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள், ஜகந்ய குண வ்ருத்திஸ்தா:-மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க், தாமஸா: அத: கச்சந்தி-தாமஸர் கீழே செல்வர்.

பொருள் : சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.

ஜீவர்கள் மேலான அல்லது கீழான பிறப்பெடுப்பதற்கும் குணவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. சத்துவகுணம் ஓங்கப்பெற்ற ஒருவன் தெய்வப் பிறப்பும், விவேகம் வைராக்கியம் வாய்க்கப்பெற்ற மானுடப் பிறப்பும் எடுக்கிறான். அவைகளின் வாயிலாக அவன் படிப்படியாகப் பரத்தை நோக்கிச் செல்லுகிறான். ரஜோகுணம் நிறைந்துள்ளவன் கர்மங்கள் பல செய்கின்றானெனினும் விவேகமின்மையால் முன்னேற்றமடைவதில்லை. பிற்போக்கில் போவதுமில்லை. தனக்கு விவேகம் வரும் வரையில் அவன் நெடுங்காலம் வினையாற்றுவதிலேயே கருத்துடையவனாயிருக்கிறான். ஆனால் தமோகுணத்தில் ஆழ்ந்தவனோ படிப்படியாகக் கீழ்மையையே அடைகிறான். கீழ்மையகற்றி மேன்மையடைந்தால் மட்டும் போதுமா? விடை வருகிறது :

19. நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஸ்யதி
குணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோऽதிகச்சதி   

யதா த்ரஷ்டா குணேப்ய:-எப்போது பார்ப்பவன் குணங்களை, அந்யம் கர்தாரம் ந அநுபஸ், யதி-தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ, குணேப்ய: ச பரம் வேத்தி-குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ,
ஸ: மத்பாவம் அதிகச்சதி-அவன் என் இயல்பை அறிவான்.

பொருள் : குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.

மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபமாதலால் இக்குணங்களுக்குப் புறம்பாகக் கர்மத்துக்குக் கர்த்தா யாருமில்லை. முக்குணங்களே கர்த்தாக்களாகின்றன. இந்திரியங்கள், இந்திரியார்த்தங்கள் எல்லாம் குணத்தினின்று உண்டானவைகள். கீழான குணத்தைக் கடந்து மேலான குணத்துக்கு வருவது ஜீவிதத்தின் லட்சியமாகும். பின்பு சுத்த சத்துவகுணத்தை யடைந்தால் போதுமா? அதற்குமேல் ஒன்றுமில்லையா? உண்டு. முக்குணங்களையும் கடந்து அப்பால் செல்லுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறது பரமாத்மா. அது ஒரு செயலுக்கும் கர்த்தா அல்ல. அது வெறும் சாக்ஷி மாத்திரம். அப்பரமாத்மாவை அறிகிறவன் பரமாத்மாவுக்கு உரியவன் ஆகிறான். இன்னும் பரமாத்மாவின் சொரூபமும் அவனுக்குரியது ஆகிறது.

மனிதனுடைய ஹிருதயத்தில் ஈசுவரன் தோற்றமடைவதன் அடையாளங்கள் யாவை? அருணோதயத்தின் போது தோன்றும் பிரகாசம் சூரியனுடைய உதயத்தைத் தெரிவிக்கின்றது. அது போல, ஈசுவரன் உள்ளத்தில் உதயமாவதற்கு முன்னால், சுயநலம் கருதாத்தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் ஆகிய குணங்கள் உண்டாகின்றன.

பிரம்ம சாக்ஷõத்காரத்தால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :

20. குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோऽம்ருதமஸ்நுதே   

தேஹீ தேஹஸமுத்பவாந்-உடம்பிலே பிறக்கும், ஏதாந் த்ரீந் குணாந் அதீத்ய-இந்த மூன்று குணங்களையும் கடந்து, ஜந்ம ம்ருத்யு ஜரா து:கை:-பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும், விமுக்த: அம்ருதம் அஸ்நுதே-விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.

பொருள் : உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.

பிரம்ம சொரூபத்தை அடைதல் என்பதன் பொருள் இங்கு விளக்கப்படுகிறது. குணங்களால் ஆகிய உடலில் ஜீவன் வசிக்கிறான். ஆனால் அவன் உடலோடு சம்பந்தப்பட்டவனல்லன். தேகத்துக்குரிய பிறப்பு, இறப்பு, மூப்பு இவைகளால் வரும் துன்பம் ஜீவன் முக்தனுக்குக் கிடையாது. இவ்வுடலில் இருக்கும் பொழுதே அவன் தங்கு தடையற்ற பிரம்மானந்தத்தில் இருக்கிறான். குணாதீதத்தில் அவன் பேரானந்தம் துய்க்கிறான்.

சரீரம் தோன்றியிருக்கிறது. அது மறுபடியும் நசித்துப் போகும். ஆனால் ஆத்மாவுக்கு மட்டும் நாசமே இல்லை.கொட்டைப் பாக்கைப்போல் ஆத்மாவும் உடலும் இருக்கின்றன. பாக்கு முற்றினால் கொட்டை வேறு, மேல்தோல் வேறாகிவிடும்; முற்றாமல் காயாக இருக்கும்போது அப்படிப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஈசுவர தரிசனம் உண்டான பிறகு ஆத்மா வேறு, சரீரம் வேறு என்ற ஞானம் உதிக்கும்.

இப்பொழுது கேள்வி ஒன்று கேட்பதற்கான சந்தர்ப்பம் உண்டாகிறது. அர்ஜுனன் அதைப் பயன்படுத்துகிறான்.

அர்ஜுந உவாச

21. கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே   

அர்ஜுந உவாச ப்ரபோ!-அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, ஏதாந் த்ரீந் குணாந் அதீத:-மூன்று குணங்களையும் கடந்தோன், கை: லிங்கை: பவதி-என்ன அடையாள ங்களுடையவன்? ச கிமாசார:-எங்ஙனம் ஒழுகுவான்? கதம் ஏதாந் த்ரீந் குணாந் அதிவர்ததே-இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?

மூன்று குணங்களையும் கடந்திருப்பதன் அறிகுறிகள் எவை? கடந்தவன் பிறகு உடல் வாழ்க்கையை எப்படி நடாத்துகிறான்? ஒருவன் முக்குணங்களைக் கடக்க ஆரம்பித்துவிட்டான் என்று எப்படித் தெரிந்துகொள்வது ?

இதுதான் அர்ஜுனனுடைய கேள்வி. இதற்கு விடை வருகிறது :

ஸ்ரீபகவாநுவாச

22. ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி   

ஸ்ரீபகவாந் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பாண்டவ-பாண்டவா, ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ-ஒளி, தொழில், மயக்கம் – இவை, ஸம்ப்ரவ்ருத்தாநி-தோன்றும்போது,
ந த்வேஷ்டி-இவற்றைப் பகைத்திடான், நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி-நீங்கியபோது இவற்றை விரும்பான்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.

சத்துவ குணத்தில் கட்டுண்டிருப்பவன் அறிவையும் இன்பத்தையும் வேண்டுகிறான். சாஸ்திர ஞானப்பற்று மிக வல்லமை வாய்ந்தது. எளிதில் அது மனதைவிட்டு அகலாது. கேள்வியறிவும் இன்பமும் வாய்க்காதவிடத்து ஒருவன் பேராவலோடு அவைகளை நாடுகிறான். சத்துவ குணத்தைக் கடந்து அப்பாற் சென்றவனுக்கு இந்த விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லை. ரஜோகுணத்தின் வசப்பட்டவன் சும்மா இருக்கமுடியாது. ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். சில கர்மங்களில் அவனுக்கும் பெருவிருப்பம் உண்டாகிறது. வேறு சில கர்மங்களில் தாங்கவொண்ணா வெறுப்பு உண்டாகிறது. நல்ல கர்மம் என்று தனக்குத் தோன்றுவதை அவன் ஆவலோடு செய்கிறான். கெட்ட கர்மம் என்று தோன்றுவதை அவன் சினந்து வெறுக்கிறான். குணத்தைக் கடந்தவனோ மறந்தும் கேடுடைய கர்மம் செய்ய முடியாது. தோட்டியின் வேலையிலிருந்து தேவாராதனை ஈறாக எத்தொழிலையும் அவன் பற்றற்றுச் செய்கிறான். அப்படிச் செய்யத் தொழிலொன்றும் இல்லாது போய்விட்டால் அதனால் துன்பம் ஒன்றும் அவனுக்கில்லை. தமோகுணப் பற்றுடையானுக்குச் சோம்பலிலும் தூக்கத்திலும் விருப்பம். அதற்குப் பங்கம் வந்தால் வெறுப்பு. குணாதீதத்தில் இருப்பவனுக்கு விழிப்பும் உறக்கமும் ஒன்றே. தூய கண்ணாடியின் முன்னிலையில் எது தோன்றினாலும் அதை அது அப்படியே விளக்குகிறது. அக்கண்ணாடியில் ஒன்றும் தோன்றாதிருக்கும்பொழுது கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. அதன் முன்னிலையில் பொருள்களின் தோற்றத்தாலும் மறைவாலும் கண்ணாடிக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. குணாதீதத்தில் சென்றவனது மனத்தகத்து முக்குணங்களின் தோற்றமும் மறைவும் அத்தகைய இடம் பெறுகின்றன. குணங்களின் செயல்களுக்கிடையில் அவன் குணாதீதனாய் இருக்கிறான். அதாவது அவன் யாண்டும் ஸஹஜ நிஷ்டையில் இருக்கிறான்.

ஜீவன் முக்தர்கள் உலகத்தில் வாழ்வது எங்ஙனம்? மீன் கொத்திப் பறவைகளைப்போன்று அவர்கள் உலகில் வாழ்கின்றார்கள். அப்பறவை நீரில் ஆழ முழுகுகிறது என்றாலும் அதன் சிறகுகள் தண்ணீரால் நனைவதில்லை. இரண்டொரு துளி நீர் ஒட்டிக் கொண்டிருக்குமானால், சரீரத்தை அசைத்துச் சுலபமாக அதனை நீக்கிவிடுகிறது.

இது அர்ஜுனனுடைய முதற்கேள்விக்கு விடை :

23. உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே
குணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்டதி நேங்கதே   

ய: உதாஸீநவத் ஆஸீந:-புறக்கணித்தான் போலே இருப்பான், குணை: ந விசால்யதே-குணங்களால் சலிப்படையான், குணா: ஏவ வர்தந்தே இதி-குணங்கள் சுழல்கின்றன என்று, ய: அவதிஷ்டதி-எவன் எண்ணி இருக்கிறானோ, ந இங்கதே-அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை.

பொருள் : புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். குணங்கள் சுழல்கின்றன என்றெண்ணி அசைவற்று நிற்பான்.

மலையில் உள்ள மரம் செடி கொடிகளெல்லாம் அசைந்தாலும் மலை அசைவதில்லை. அங்ஙனம் ஆத்மாவைச் சார்ந்துள்ள குணங்களெல்லாம் அசைந்தாலும் ஆத்மா அசைவதில்லை. உதாசீனன் அல்லது ஒரு பக்ஷமும் சாராதவனாய் குணாதீதத்தில் சென்ற ஞானி நடுவு நிற்கின்றான். மேலும் :

24. ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந:
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:   

ஸ்வஸ்த: ஸமது:கஸுக:-தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன், ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந:-ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன், ப்ரிய அப்ரிய: துல்ய தீர:-இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், துல்ய நிந்தா ஆத்ம ஸம்ஸ்துதி:-இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.

பொருள் : துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.

தன் உடலாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள்; புறவுலகாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள். இங்ஙனம் குணங்கள் குணங்களோடு விதவிதமாகச் சம்பந்தப்பட்டிருக்கையில் ஆத்ம சொரூபத்தை முற்றும் அறிந்துள்ள ஞானி ஆத்ம திருப்தனாக, குணாதீதனாக இருக்கிறான்.

25. மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே   

மாநாபமாநயோ: துல்ய:-மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், மித்ரா அரிபக்ஷயோ: துல்ய:-நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான், ஸர்வாரம்பபரித்யாகீ-எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், ஸ: குணாதீத: உச்யதே -அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.

பொருள் : மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.

குணங்களில் கட்டுண்டு அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு மானம், அவமானம், நட்பு, பகை முதலியன உண்டு. ஜீவபோதம் இருப்பதால் தனக்கெனத் தொழில் புரிதலும் உண்டு. குணங்களைக் கடந்த நிறை ஞானிக்கு இவையொன்றுமில்லை. இந்த மூன்று சுலோகங்களும் அர்ஜுனனுடைய இரண்டாவது கேள்விக்கு விடையாக வந்துள்ளன.

எந்த உபாயத்தைக் கையாண்டு ஞானி மூன்று குணங்களையும் கடக்கிறான் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது :

26. மாம் ச யோऽவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே   

ச ய: அவ்யபிசாரேண-மேலும் எவன் வேறுபாடில்லாத, பக்தியோகேந மாம் ஸேவதே-பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ, ஸ: ஏதாந் குணாந் ஸமதீத்ய-அவன் இந்த குணங்களைக் கடந்து, ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.

பொருள் : வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.

பரம பிரேமை சொரூபமாயிருக்கிற பக்தி யோகத்தால் யார் ஒருவன் அனைத்தையும் நாராயண சொரூபமாகக் கருதி அந்தர்முக திருஷ்டியில் ஆத்மானு சந்தானம் செய்துகொண்டே இருக்கிறானோ அவன் பிரம்ம சொரூபம் ஆகிறான். வெளிச்சம் வர இருள் இருக்குமிடம் தெரியாது மறைவதுபோன்று பிரம்ம சாக்ஷõத்காரத்தில் திரிகுணத்தைக் கடத்தல் மிக எளிதாகிறது.

பக்தனுக்கு ஈசுவரன் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறான், ஆனால் சமாதியில் பிரம்மஞானத்தை அடைந்தவனுக்கு அவன் அகண்ட நிராகார நிர்க்குணப் பிரம்மமாக இருக்கின்றான். இதில் தான் ஞானமும் பக்தியும் ஸமரஸப்படுகின்றன.

முக்குணங்களைக் கடக்க பக்தியைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லையா? விடை வருகிறது :

27. ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஸாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச   

ஹி அவ்யயஸ்ய ப்ரஹ்மண: ச-ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும், அம்ருதஸ்ய -சாவற நிலைக்கும், ஸாஸ்வதஸ்ய தர்மஸ்ய ச-என்றும் இயலும் அறத்துக்கும், ஐகாந்திகஸ்ய ஸுகஸ்ய-தனிமையின்பத்துக்கும், அஹம் ப்ரதிஷ்டா-நானே உறைவிடம்.

பொருள் : சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.

நான்கு யோகங்களும் இங்கு சமரசம் அடைகின்றன. முன் சுலோகத்தில் பக்தியும் அதன் மூலம் அடையப்படும் சகுண பிரம்மமும் விளக்கப்பட்டன. அழியாத மோக்ஷநிலையாகிய நிர்க்குண பிரம்மம் ஞானத்தின் மூலம் அடையப்படுகிறது. கர்மயோகத்தின் மூலம் பகவத் கைங்கரியம் செய்து சாசுவதமான தர்மம் அடையப்பெறுகிறது. பின்பு ராஜயோகத்தின் மூலம் அமிர்ததாரையினின்று உதிக்கும் ஒப்பற்ற சுகம் அடையப்பெறுகிறது. ஆக, இந்த நான்கு யோகங்களும் குணாதீதத்துக்குச் செல்ல உற்ற உபாயங்களாகின்றன. இந்த நான்கு யோகங்களும் சேர்ந்தே கையாளப்படவேண்டும். அவைகளை அப்படி அனுஷ்டிக்கின்றவன் குணங்களைக் கடந்துகொண்டிருப்பவன் ஆகிறான். இது கடைசிக் கேள்விக்கு விடையாகிறது.

ஒரு மனிதன் ஒரு காட்டு வழியே போய்க்கொண்டிருந்தான். வழியில் மூன்று திருடர்கள் அவனை மடக்கிப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் இருந்த பொருள்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர். அப்பால் முதல் திருடன் இவனை உயிருடன் வைத்திருப்பதில் என்ன லாபம்? என்று சொல்லித் தன் கத்தியை உருவி அவனை வெட்டப் போனான். அப்போது இரண்டாவது திருடன் இவனைக் கொல்வதால் லாபம் என்ன? கை கால்களைக் கட்டி ஒரு பக்கத்தில் போட்டுவிட்டுப்போகலாம், என்றான். உடனே அவர்கள் அப்படியே செய்து சாலையின் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் திரும்பி அவனிடம் வந்து, அப்பா, உனக்கு நோகிறதா? நான் உன் கட்டுகளை அவிழ்த்து, உன்னை விடுதலை செய்கிறேன், இரு என்று சொல்லிக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு என்னுடன் வா; வழியைக் காட்டுகிறேன் என்று வெகுதூரம் அழைத்துக்கொண்டு போனான். அப்பால் அவன், அதோ பார்; உன் வீடு தெரிகிறது, இந்த வழியே போவாயானால் சீக்கிரம் வீடுபோய்ச் சேருவாய் என்றான். இதைக் கேட்டதும் வழிப்போக்கன் நன்றியறிவுடன், அப்பா, நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். என்னுடன் கூட என் வீட்டுக்கு வரக்கூடாதா? என்று கேட்டான். அதற்குத் திருடன், நான் வரக்கூடாது. போலீஸார் வந்து என்னைப்பிடித்துக் கொள்வார்கள், என்று சொல்லிப் போய்விட்டான்.

இந்த உலகந்தான் அந்தக் காடு; ஸத்வ, ரஜஸ், தமோகுணங்கள் மேற்கூறிய மூன்று திருடர்கள். ஜீவன்தான் காட்டுவழியே போன பிரயாணி. ஆத்ம ஞானம் அவனிடம் இருந்த பொருள். தமோகுணமும் ரஜோகுணமும் உலக பந்தங்களாகிய சங்கிலியால் அவனைக் கட்டுகின்றன. உலக பந்தங்களிலிருந்து அவனை ஸத்துவ குணம் காப்பாற்றுகின்றது. ஸத்துவகுணத்தைச் சரணமடையும் ஜீவன் தமோ ரஜோகுணங்களின் பயன்களாகிய காமக்குரோதாதி மாயைகளினின்றும் விடுதலையடைகின்றது. உலக பந்தங்களினின்றும் ஜீவனைக் கரையேற்றுவது அந்த ஸத்துவகுணந்தான் என்றாலும் அந்த ஸத்துவகுணமும் ஒரு திருடனே. பரமபதத்துக்குச் செல்லும் வழிவரையில் ஒருவனை அது அழைத்துவந்து, அதோ உன் வீட்டைப்பார், என்று சொல்லிவிட்டு மறைந்துபோகிறது. ஸத்துவகுணமும் பரம பதத்தினருகே செல்லாது.
 


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #21 on: April 20, 2012, 12:44:39 PM »
 பதினைந்தாம் அத்தியாயம் 

புரு÷ஷாத்தம யோகம்
பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புரு÷ஷாத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.

இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.

ஸம்ஸார விருக்ஷம் 1-2 -மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 -எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 -பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 -ஜீவதத்துவ விளக்கம் 7-9 -ஞானக்கண் 10-11 -பரமாத்மனது சொரூபம் 12-15 -ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

ஸ்ரீபகவாநுவாச

1. ஊர்த்வமூலமத:ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் 

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஊர்த்வமூலம்-மேலே வேர்கள், அத:ஸாகம் - கீழே கிளை, அஸ்வத்தம்-அரச மரம, அவ்யயம்-அழியாதது, ப்ராஹு-என்று கூறுவார்கள், யஸ்ய சந்தாம்ஸி பர்ணாநி-எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ, தம்-சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை, ய: வேத-எவர் அறிகிறாரோ, ஸ: வேதவித்-அவனே வேத மறிவோன்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.

அச்வத்தம் என்பது அரசமரம். ஈண்டு அது ஆலமரம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அரசமரம் ஆலமரம் இவையிரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவைகள்; ஆலமரம் உபமானத்துக்கு முற்றிலும் பொருத்தமுடையதாகிறது. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலைசெய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக்கொண்டு கீழ் நோக்கி வருகிறது. அச்வத்தம் என்னும் சொல்லுக்குப் பொருள் ஒருநாள் இருப்பது போன்று அடுத்தநாள் அது இருப்பதில்லை என்பதாகிறது. ஸம்ஸாரமாகிய ஜகத் அத்தகையது. ஆலம் விழுது மேலே சத்தை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வருவது போன்று மாயப்பிரபஞ்சம் மேலே பரம்பொருளிடத்திருந்து சத்தை வாங்கிக்கொண்டு கீழே பிரகிருதியாகப் பரிணமித்து வருகிறது. தோன்றாநிலையில் சக்தி பிரம்மத்துக்கு அபின்னமாயிருக்கிறது. பிரம்மம் இருக்கும்வரை சக்தியும் இருக்கிறது. ஆகையால் ஸம்ஸாரத்துக்கு அது முடிவற்ற முதற்காரணமாகிறது. அச்சக்தி மூல பிரகிருதியாக, மஹத் தத்துவமாக, அகங்கார தத்துவமாக இப்படியெல்லாம் கிளைகளாகக் கீழே பிரிந்து வருகிறது. கீழே வரவர அது ஸ்தூலமாகப் பரிணமிக்கிறது.

பிரபஞ்சம் முழுதும் அந்த அரசமரத்தோடு ஒப்பிடப்படுகிறது. இலைகள் இல்லாவிட்டால் மரம் உருப்படாது. அங்ஙனம் இயற்கையை உருப்படுத்தி வைத்திருப்பது வேதம். இவ்வுலக சம்பந்தமான அறிவைப் புகட்டுகின்ற நூல்கள் அனைத்தும் சேர்ந்து வேதம் எனப் பொருள்படுகிறது. பண்டை நான்மறை மட்டும் வேதமல்ல. நவீன ரசாயன சாஸ்திரம், இயற்கை நூல் ஆகிய அனைத்தும், எல்லா மொழிகளும் எல்லா மொழிகளிலுள்ள நூல்களும் சேர்ந்து வேதம் எனப்படுகின்றது. நலம், கேடு ஆகிய இரண்டையும் பெறுதற்கான வழிகளை வேதம் விளக்குகிறது. பிரம்ம ஞானம் அடையும் வரையில் இப்பிரபஞ்ச வாழ்க்கைக்கு முடிவில்லை. அது நீடூழி நிலைத்திருக்கிறது. அக் காரணத்தை முன்னிட்டே அது அவ்யயம் அல்லது அழிவற்றது எனப்படுகிறது. எழுதிவைத்த நூலைப் படிப்பவன் வேதவித்து ஆகான்; பிரபஞ்ச நடைமுறையை உள்ளபடி அறிந்துகொள்பவன் வேதத்தை அறிபவன் ஆகின்றான். நல்லறிவு பெற முயலுபவனுக்கு மொழியினுடைய துணையைவிட இயற்கையின் நடைமுறையின் துணை மிகவும் முக்கியமானது.

ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்திலிருக்கும் போது உருத்தெரியாத ஹோ என்ற சப்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்கிழங்குக்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் இம்மாதிரியாக மனிதர்கள் பேரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாகக் கேட்கிறான். ஒருவன் ஈசுவரனிடமிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருக்கும் வரையில் அவன் குழப்பத்திலும் காரண காரிய வாதப்பிரதிவாத அமளியிலுமே இருப்பான். ஆனால் அவன் ஈசுவரனை நெருங்குங்கால் காரண காரிய வாதம், வாதப் பிரதி வாதம் எல்லாம் நின்றொழிகின்றன. தெய்விக ரகஸ்யங்களெல்லாவற்றையும் வெகு தெளிவாயும் ஸ்பஷ்டமாயும் அறிந்துகொள்கிறான்.

முக்குணமயமாகப் பிரகிருதி இருப்பதும் முக்குணத்தைக் கடந்து அப்பால் பரமாத்மா இருப்பதும் பதினான்காவது அத்தியாயம் விளக்கியது. இந்த அத்தியாயம், அந்தப் பரமாத்மாவிடத்திருந்து இப்பிரபஞ்சம் கிளையாகக் கீழே இறங்கிவந்திருக்கிறது என்று விளக்குகிறது. அம்பிகை துர்க்காதேவியின் வடிவு இந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துக்களை நன்கு விளக்குகிறது. தரையின் மீது கன்னங்கரேலென்று நிற்கிற மஹிஷாசுரனை அம்பிகை மர்த்தனம் புரிகின்றாள். அவள் சிங்கத்தின்மீது உயர நின்றுகொண்டிருக்கிறாள். மஞ்சள் மேனியுடைய அவள் சிவப்பு வஸ்திரம் அணிந்திருக்கிறாள். ஆயுதங்கள் பல கையாளுகின்றாள். மஹிஷாசுரன் தமோகுணத்தின் பிரதிநிதியாகவும், துர்க்கை ரஜோகுணத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள். அம்பிகையின் தலைக்குமேல் சதாசிவம் தூவெண் வடிவெடுத்து ஆழ்ந்து ஆத்ம நிஷ்டையிலிருக்கிறார். அவரது வெண்ணிறம் சத்துவகுணத்தைக் காட்டுகிறது. அவர் தன்னில் தானாயிருப்பது பரதத்துவத்தை விளக்குகிறது. உருவமில்லாத அவரிடத்திருந்து சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் மூன்று வடிவெடுத்து ஒன்றன் கீழ் ஒன்றாக வருகின்றன. மேலே போகப் போகக் கர்மத்தின் போராட்டம் குறைகிறது. கீழே எல்லாம் ஒரே அமளி என்பதை அம்பிகையும் மஹிஷாசுரனும் புரியும் போர் விளக்குகிறது. அக்கருத்தை அடுத்த சுலோகம் தெளிவுபடுத்துகிறது.

2. அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸாகா
குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி
கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே 

தஸ்ய குணப்ரவ்ருத்தா-(சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால், விஷயப்ரவாலா:-(புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய,
ஸாகா:-தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள், அத: ஊர்த்வம் ச ப்ரஸ்ருதா:-கீழும் மேலுமாக பரவியுள்ளன, மநுஷ்யலோகே கர்ம அநுபந்தீநி-மனித உலகில் கர்ம பிணைப்புகளாக, மூலாநி-அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும், அத ச-கீழும் (மேலும்) ஆக, அநுஸந்ததாநி-(எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.

பொருள் : அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.

சம்சாரமாகிய இப் பிரபஞ்சத்துக்கு அரசமரமே மேலும் தகுந்த உபமானமாக அமைகிறது. அதன் கிளைகள் மேலும் கீழும் நாலாபக்கமும் பரவியிருக்கின்றன. இப் பிரபஞ்சம் என்ற மரத்துக்கு மிக மேலானதாக இருக்கும் கிளை பிரம்மாவும் பிரம்ம லோகமுமாம். கீழான கிளை மானுடலோகமும் மற்றுமுள்ள அஃறிணை உயிர்களுமாம். ஞானத்துக்கு ஏற்ப மேலான பிறவியும், வெறும் கர்மத்துக்கு ஏற்பக் கீழான பிறவியும், ஞானமும் கர்மமும் கலந்திருப்பதற்கேற்ப நடுத்தரமான மானுடப்பிறவி போன்றவையும் அமைகின்றன. கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவைகள் தளிர்விடும். இந்திரியங்கள் வாயிலாக இந்தியார்த்தங்களில் உழல்வது இந்த சம்சாரத்துக்குத் தளிர்களாகின்றன. இந்தக் குணங்கள் இருக்கும் வரை கிளைகள் தளிர்த்துக்கொண்டேயிருக்கும்.

ஒரு மரத்துக்கு இரண்டுவிதமான வேர்களிருக்கின்றன. ஒன்று ஆணிவேர்; மற்றவைகள் சல்லிவேர்; மாயாஸஹிதனாகிய ஈசுவரனிடத்திருந்து ஜகத் கீழே வந்திருப்பதால் ஈசுவரன் இந்த அசுவத்தத்துக்கு மேலே உள்ள ஆணிவேர். பூவுலகில் விதவிதமான கர்மங்களாகப் பரிணமித்து வருவது சல்லிவேர்கள். சல்லி வேர்களை இடையிடையே களைவதால் மரம் பண்படுகிறது. அங்ஙனம் பூவுலகில் கர்மங்களைச் செப்பனிடுவதால் மனிதன் திருந்தியமைகின்றான். அவனுடைய இயல்பை மாற்றுதற்குக் கர்மம் பயன்படுகிறது. நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி மனிதனைப் பிறப்பு இறப்பு மயமான பூவுலகில் பிடித்து வைத்திருப்பதும் கர்மம் என்கின்ற வேர். இது ஜீவர்கள் எல்லார்க்கும் பொதுவானதால் வேர் எங்கும் பரவியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

3. ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூலம
ஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா 

அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல, இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை, ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை, ஸுவிரூடமூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை, த்ருடேந அஸங்கஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு.

பொருள் : ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப்பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,

இப்படி ஈண்டு இயம்பப்பட்ட பிரபஞ்சம் என்ற அசுவத்த மரத்துக்கு நிலைத்த வடிவம் ஒன்றுமில்லை. அதனிடத்து நாம் ஒரு வடிவத்தைக் காணுமுன்பு அது இன்னொரு வடிவெடுத்துவிடுகிறது. பார்க்கும்பொழுதெல்லாம் அதற்குப் புதியதொரு வடிவம் வருகிறது. நிலைத்த சொந்த வடிவம் ஒன்று அதற்கில்லை. இது எப்பொழுது ஆரம்பித்ததென்று யாருக்கும் தெரியாது. இதற்கு முடிவு ஏதேனும் உண்டா? பிரம்மஞானம் அடைந்தவனுக்கு இது முடிவடைகிறது. மற்றவர்களுக்கு இது முடிவில்லாததாயிருக்கிறது. துவக்கமும் முடிவும் காட்டாத இது இடையில் எப்படி இருக்கிறது? இதன் இருப்பு எத்தகையது? - இதுவும் விளங்குவதில்லை. ஆக, இதை முழுதும் விளக்க யாரே வல்லவர்! மரத்தை வெட்டுதற்குக் கோடரி வேண்டும். அங்ஙனம் மாயா காரியமாகிய பிரபஞ்ச வாழ்க்கை என்ற மரத்தை வெட்டுதற்குப் பற்றின்மை அல்லது வைராக்கியம் என்ற வாள் ஒன்றே தகுந்தது. பற்றின்மை எவ்வளவு வலியதோ அவ்வளவு விரைவில் சம்சார விருக்ஷம் வெட்டப்படும்.

வண்ணாத்திப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. அதுபோல உலகப்பற்றுள்ள ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக்கொள்கிறது. ஆனால் அந்தப் புழு ஓர் அழகிய வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கும்போது, கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தையும் காற்றையும் ஆனந்தமாய் அனுபவிக்கிறது. அதுபோல விவேகம் வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால், உலகப்பற்றில் உழலும் ஆத்மாவானது மாயையாகிய வலையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படக்கூடும்.

4. தத: பதம் தத்பரிமார்கிதவ்யம்
யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ 

தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான, ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ, தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.

பொருள் : அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

உலகப்பற்று அறவே நீங்குவது எதிர்மறைச் செயல். அது மட்டும் போதாது. பிறகு அது உடன்பாட்டுச் செயலாக மாறவேண்டும். பிரம்ம பதத்தை ஆவலோடு தேடுதல் அவசியமாகிறது. பிரபஞ்ச வாழ்க்கைக்கும் பிரம்மபதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒன்று பிறவிப் பெருங்கடலாகப் பரிணமிக்கின்றது. மற்றொன்று பிறப்பு இறப்பைக் கடந்த பெருநிலை. அது முழுமுதற் பொருள் என்றும் ஆதி புருஷன் என்றும் அழைக்கப்படுகிறது. அது அகண்ட சச்சிதானந்த வஸ்து. கடலினின்று மேகம் வருவது போன்று கர்ம சொரூபமாயுள்ள தொல்லுலகம் அப்பரம புருஷனிடத்திருந்து வந்துள்ளது. அத்தொல்லுலகம் தோன்றுவதாலும் பரம புருஷனுக்கு லாப நஷ்டம் ஒன்றுமில்லை. கானலினின்று கானல் நீர் தோன்றுவதுபோன்று அவனிடத்து உலகம் தோன்றி ஒடுங்குகிறது. அந்த ஆதி புருஷனிடத்து அடைக்கலம் புகுதலே சம்சார விருக்ஷம் திரும்பவும் தழையா திருக்கும்படி செய்தற்கு உற்ற உபாயம்.

கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓடிப்போகிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடிக்குமிடத்து, அது உன்னிடமிருந்து ஓடிப்போகிறது.

பற்று நீங்கிப் பரத்தைச் சார்ந்திருப்பது இனித் தெளிவுபட விளக்கப்படுகிறது :

5. நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞைர்
கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் 

நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள், ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர், ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

பொருள் : செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

மனத்தகத்து அமைந்துள்ள மாசுகளெல்லாம் நீங்கப்பெறுதல் ஒரு புறம். தீவிரமாகப் பரமாத்மாவிடத்து நாட்டம் கொள்ளுதல் மற்றொரு புறம். ஒரு சாதகனிடத்து இந்த இரண்டு பாங்குகளும் சேர்ந்து அமைகின்றவளவு அவன் விரைந்து பரிபக்குவமடைகிறான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்தவனுக்குக் கேடு என்பது இல்லை.

பந்தப்பட்ட ஆத்மா மனுஷ்யனாகும்; மாயையாகிய சங்கிலியில் கட்டுப்படாத ஆத்மா ஈசுவரனாகும்.

6. ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம 

யத் கத்வா-எதை அடைந்த பிறகு, ந நிவர்தந்தே-திரும்பி வருவதில்லையோ, தத் ஸூர்யோ ந பாஸயதே-அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை, ந ஸஸாங்க: ந பாவக:-சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை, தத் மம பரமம் தாம-அதுவே என் மேலான வீடு (பரம பதம்).

பொருள் : அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

கடலினுள் பாய்ந்த நதி கடலாகிறது. அங்ஙனம் பரத்தைச் சார்ந்த மனிதன் பரவெளியில் ஒன்றுபடுகிறான். அதுவே சித் ஆகாசம் எனப்படுகிறது. இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்குமா? விளக்காது. அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்கமாட்டா. இருக்கிறேன் என்ற உணர்வை அந்த உணர்வே விளக்குகிறது. அந்த உணர்வு அல்லது பிரக்ஞை யாண்டும் நிலைத்துள்ளது. அது தெளிவடைந்த நிலையே பரமபதம் எனப்படுகிறது. தெளிவடைந்த பிறகு அது அகண்டாகாரமாய் விரிகிறது. அதன்கண் போக்குவரத்து இல்லை; பிறப்பு இறப்பு இல்லை. கால தேச வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன. இப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவபோதத்துக்கு வருகிறதில்லை.

கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு (விவேகம்) ஒழிந்து; மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுது நான் என்பதும் நீ என்பதும் உலகமென்பதும் இரா. ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்தப் பிரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.

ஜீவாத்மாவானது பரமாத்மாவுக்குப் புறம்பானதாயிருந்து பிறகு பிரம்மஞானத்தால் அதற்குரியதாகின்றதா? விடை வருகிறது :

7. மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி 

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா, மம அம்ஸ ஏவ-எனது அம்சமே! ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள, மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும் கர்ஷதி-ஈர்க்கிறது.

பொருள் : எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.

ஸநாதன - எக்காலத்தும் என்று சொல்லுவதன் கருத்து அது ஜீவனாக இருக்கும்பொழுதும் பரமாத்மாவுக்கு உரியதே. பரமாத்மாவுக்கு வேறாக இருந்து பிறகு அதில் கலத்தல் என்பதல்ல. அறியாமையினால் பிரகிருதியில் தன்னைக் கட்டுண்டவனாக நினைத்துக்கொள்பவன் ஜீவாத்மா. பிரகிருதியின் சேர்க்கையாலே அவனுக்கு இந்திரியங்கள் உண்டாகின்றன. அந்நிலையில் ஜீவன் போகியென்று அழைக்கப்படுகிறான். போகியாக போகத்தில் கட்டுண்டிருப்பவர்களெல்லாம் ஜீவலோகத்திலிருப்பவர்களே. இந்திரிய நிக்கிரகம் செய்கின்றபொழுது ஒருவன் யோகியாகின்றான். புலனடக்கத்துக்கு ஏற்றவாறு அவன் பரத்தைச் சார்ந்தவனாகிறான்.

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வுக்குத் தகுந்த உபமானம் ஒன்று சொல்லலாம். பானைக்குள் உள்ள வெளி கடாகாசம் எனப்படுகிறது; பரந்து எங்கும் நிறைந்துள்ள வெளி மஹாகாசம் எனப்படுகிறது. கடாகாசம் எப்பொழுதும் மஹாகாசத்துக்குள்ளேயே இருக்கிறது. பானையை உடைப்பதால் அதற்குள் உள்ள ஆகாசத்துக்கு ஒரு கேடும் வருவதில்லை. கடாகாசம் என்ற பெயர் தரித்திருக்கும்பொழுதும் அது மஹாகாசமே.

பிரகிருதியோடு வைத்த தொடர்வால் ஜீவன் கர்த்தாவென்றும் போக்தாவென்றும் சொல்லப்படுகிறான். கர்த்தா போக்தா வென்ற உபாதியை நீக்கிவிட்டால் ஆத்மாவின் எதார்த்த நிலை வந்தமைகிறது. ஜீவாத்மாவாக இருக்கும்போது அது பரமாத்மாவின் அம்சம். ஜீவபோதம் அற்றுப்போனால் எஞ்சியிருப்பது பரமாத்மாவே.

ஜீவனின் உண்மை ஸ்வபாவம் சச்சிதானந்தமே. இவ்வளவு உபாதிகள் எல்லாம் அகங்காரத்தினால் உண்டாயின. ஆதலால் ஜீவனுக்குத் தன் உண்மை சுபாவமே மறந்துபோயிற்று.

ஜீவன் உபாதியைப் பெறும் விதம் எப்படி? விடை வருகிறது :

8. ஸரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர:
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஸயாத் 

வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல, ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும், யத் உத்க்ராமதி - எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ, ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு, யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.

பொருள் : கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.

உடலை ஆளும் தன்மையுடையவனாதலால் ஜீவன் இங்கு ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறான். காற்று தன்னளவில் ஒரு வித மணமும் இல்லாதது. புஷ்பத்தோடு வைக்கிற சேர்க்கையால் அதற்கு மணம் உண்டாகிறது. அந்த மணத்தைப் பிறகு சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும். ஜீவன் பிரகிருதியோடு வைக்கிற தொடர்வால் உபாதியுடையவனாகிறான். பிரகிருதியினிடத்துப் பற்று நீங்குகிறவளவு ஜீவன் சுத்த சைதன்யமாகிறான். ஆனால் பிரகிருதியில் பற்று வைத்திருக்கிறவளவு ஜாலவித்தைக்காரன் போன்று அவன் நடந்துகொள்கிறான். ஓரிடத்தில் தன்னுடைய சாமான்களையெல்லாம் விரித்துவைத்து வேடிக்கை பண்ணுகிறான். பிறகு அவைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு இன்னோர் ஊருக்குப் போகிறான். அங்ஙனம் ஜீவன் மனதையும் இந்திரியங்களையும் பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான்.

இந்திரியங்களைக்கொண்டு ஜீவன் என்ன செய்கிறான்? விடை வருகிறது :

9. ஸ்ரோத்ரம் சக்ஷú: ஸ்பர்ஸநம் ச ரஸநம் க்ராணமேவ ச
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே 

அயம் ஸ்ரோத்ரம் சக்ஷú: ச-கேட்டல், காண்டல், ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம், அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு, விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

பொருள் : கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

ஐம்பொறிகளும் ஐந்துவித ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல் இல்லாத வீட்டுக்குள் ஒருவனை அடைத்து வைத்துவிட்டால் வெளியுலகோடு அவன் தொடர்வு வைக்க முடியாது. காற்றும் வெளிச்சமும் நீரும் உணவுமில்லாவிடில் அவன் செத்துப் போவான். ஐம்பொறிகள் ஐந்து பூதங்களோடு தொடர்வு வைக்க உதவுகின்றன. ஆகாசத்தின் தன்மாத்திரையாகிய ஓசையைக் கேட்கக் காது உதவுகிறது. அக்னியின் தன்மாத்திரையாகிய வடிவத்தைக் காணக் கண் உதவுகிறது. வாயுவின் தன் மாத்திரையாகிய ஊறு அல்லது ஸ்பரிசத்தை உணர்தற்கு உடல் உதவுகிறது. நீரின் நீர்மையாகிய சுவையை அறிய நாவு உதவுகிறது. நிலத்தின் பாங்காகிய நாற்றத்தைப் பெற நாசி பயன்படுகிறது. மனதோ இவ் ஐந்துக்கும் பொது. உடல் என்னும் கோட்டைக்குள் இருக்கும் ஜீவனானவன் ஐம்பொறிகளின் வகை தெரிந்துகொள்ளுதற்கு மனம் என்னும் கருவியே பாலம்போன்று அமைந்துள்ளது. வெளியுலகினின்று இன்பதுன்ப மயமான செய்திகள் அவனுக்கு இங்ஙனம் எட்டுகின்றன.

10. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷúஷ: 

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும், ஸ்திதம் வா-நிற்கையிலும், புஞ்ஜாநம் வா - உண்ணுகையிலும், குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும், விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை, ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

பொருள் : அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

அறிவிலிகளுக்கு ஸ்தூல உடல் காட்சியும் உடலின் மூலம் வெளியுலகினின்று பெறும் இன்பதுன்பம் மட்டும் விளங்குகின்றன. உடலுக்குள் தங்களது மேலாம் சொரூபமாகவிருக்கும் உத்தமனைக் காண அவர்களுக்கு இயலாது. இந்திரியங்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள். விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர். அறிவுடையவர்க்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும். அங்ஙனம் ஞானக் கண்ணுடையார்க்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.

மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும், வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே. அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாயிருக்கிறான். மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும் ஈசுவரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.

ஞானக்கண்ணைப் பெறுவது எங்ஙனம்? விடை வருகிறது :

11. யதந்தோ யோகிநஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்திதம்
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ: 

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள், ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர், ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள், அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

பொருள் : முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.

யோகி, ஆத்ம. பரிபாகம் அடையாத அறிவிலி ஆகிய இருவர்க்கும் முயற்சி பொதுவானது. முயற்சியின்றி ஒன்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மனபரிபாகமில்லாத மனிதன் வெறும் மாடுபோல் உழைக்கிறான். வெறும் வினைப்பயனே அதன் விளைவு ஆகும். முயலுகின்ற யோகியோ ஆத்ம பரிபாகம் அடைகிறான். உலகக் கிருத்தியங்களைச் செய்து சாதிப்பதற்கிடையில் ஒழுக்கத்தாலும் தவத்தாலும் யோகியானவன் மனதைப் பண்படுத்துகிறான். அந்தர்முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான் அங்ஙனம் சித்தசுத்தி அடையப்பெற்று, அது ஆத்ம சொரூபத்தில் தேங்கியிருப்பது ஆத்ம தரிசனத்துக்கு இன்றியமையாததாகிறது.

நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம். அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.

பரமாத்ம தரிசனம் அடைந்தவர்கள் அதை எப்படிக் காண்கிறார்கள்? விடை வருகிறது :

12. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேऽகிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் 

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி, அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும், யத் அக்நௌ ச - தீயிலுள்ளதும், தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

பொருள் : சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப் பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்ளலாம். நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடத்திருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள். எங்கு வெளிச்சம் இருக்கிறதோ அங்கு சத்துவகுணத்தின் தோற்றமுண்டு. மினுக்கெடுத்த சுவரில் அல்லது கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோன்று சத்வ குணத்திலே ஆத்ம சைதன்யம் ஒளிர்கிறது. ஆத்ம சைதன்யத்தை விளக்குகின்ற சத்வகுணமும் பரமாத்மாவினிடத்திருந்து வந்தது. சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கிறது என்று விளக்குவதுபோன்று ஆத்ம சைதன்யம் நான் இருக்கிறேன் என்ற பிரக்ஞையை விளக்குகிறது. சூரியனிடத்து இருப்பது ஜடப்பிரகாசம். நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியோ ஆத்மப் பிரகாசம். ஜடப்பிரகாசத்துக்கு மூலகாரணமாயிருப்பது ஆத்மப் பிரகாசம். அது எப்படி என்று ஆராய்வோம். இரண்டு அறைகளினுள்ளே சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. ஓர் அறையினுள் ஆள் யாருமில்லை. சூரிய வெளிச்சம் இருக்கிறது என்று பொருள்படுத்துவார் ஆங்கில்லை. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அந்த வெளிச்சத்துக்கும் கிடையாது. அவ் அறையினுள் வெளிச்சம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. மற்ற அறையில் வெளிச்சம் இருக்கிறது. மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அவ்வெளிச்சம் இருப்பதற்கும் அம்மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடத்திருந்து வந்துள்ள ஜடப் பிரகாசத்தை ஈசுவரன் என்னும் ஆத்மப்பிரகாசம் அல்லது ஆத்ம சைதன்யம் அறிகிறது. அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியன அறியப்படு பொருள்களாம்.

மேலும் அந்த ஆத்ம சைதன்யம் உயிருக்கு உயிராய் இருக்கிறது. எப்படியெனின் :

13. காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: 

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து, ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன், ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி, ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

பொருள் : நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.

ஈசுவர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் வியாபித்து அதை உறுதியாய்த் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சராசரங்களெல்லாம் அதனிடத்திருந்து நிலைபேறு பெறுகின்றன. சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடத்திருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம் செழித்து வளர்கின்றன என்பதும், அவ்வவைகளின் இயல்பை நன்கு பெற்று வருகின்றன வென்பதும் கோட்பாடு. இங்ஙனம் உயிர்களைத்துக்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவினிடத்திருந்து வருகிறது.

அவரிடத்திருந்து வரும் மூன்றாவது வல்லமை யாதென்று இனி விளக்கப்படுகிறது :

14. அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித:
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் 

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன், ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி, வைஸ்வாநர: பூவா - வைசுவாநரன் என்கிற அக்னியாகி, சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

பொருள் : நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்கிற பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு உணவு நான்கு விதங்களில் அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல் ஆகிய நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டிபோன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது. இளம் நுங்கு போன்றது உறிஞ்சப்படுகிறது. தேன் நக்கப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது. இவையாவையும் ஜீரணம் செய்வது வைசுவானரன் என்ற அக்கினி.

ஆற்றல் சொரூபமாக இருப்பதுமல்லாமல் மற்றொரு மகிமை பகவானிடத்துண்டு. அதாவது :

15. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம் 

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான், ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன, ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ - எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான், வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

பொருள் : எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

எல்லாருடைய உள்ளத்திலும் பிரக்ஞை அல்லது அறிவு சொரூபமாக அவர் இருக்கிறார். ஆதலால் முன் செய்தவைகளைப் பற்றிய ஞாபகமும், ஓர்ந்து உணரவேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது அவைகளை அழித்துவிடுதலும் ஆகிய இவையாவும் ஆத்ம சைதன்யத்திலிருந்தே வருகின்றன. வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனையுமாயிருப்பது பரம் பொருள். இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனது மஹிமையையே விளக்கிக்கொண்டிருக்கிறது. அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத் தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது. அவன் அறிவாளி என்பதை ஒவ்வொரு ஜடப்பொருளின் அமைப்பும் எடுத்து உணர்த்துகிறது. அவன் இன்ப வடிவினன் என்பதற்கு இயற்கை யாவும் சான்றாகிறது. அவனுடைய ஆற்றலும் இயற்கையினூடு தோன்றிக்கொண்டிருக்கிறது. ஈசன் அழகன் என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் திரிபுரசுந்தரி எனப்படுவதும் இக்காரணத்தை முன்னிட்டேயாம். பிரபஞ்சமே அவனுக்கு விளக்கம். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன். அது அவனுடைய ஒரு சிறு பகுதி. இவையாவையும் அவன் உணர்கிறான். ஆதலால் அவன் வேதவித்-வேதத்தை அறிபவன் அல்லது இயற்கையை அறிபவன் ஆகிறான். பிரபஞ்சத்தைக் கடந்து வேதாந்த சொரூபமாயிருப்பதும் பரமாத்மாவே.

பரமாத்மாவின் சொரூப விளக்கத்தின் படித்தரங்கள் வருமாறு :

16. த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே 

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என, இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர், ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும், கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

பொருள் : உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம் என்று வெவ்வேறு வடிவும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மை யுடையவைகள். நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அங்ஙனம் ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். ஈசுவரன் என்ற புருஷனுக்கு இவைகள் உபாதியாகையால் இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை. மற்று ஈசுவரனை அது சாசுவதமாகச் சார்ந்துள்ளது. கூடஸ்தன் என்பது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும் மாயக்காட்சிகளும் காட்டவல்லது என்று பொருள்படுகிறது. ஈசுவரன் அல்லது சகுண பிரம்மத்தின் வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி, விஷ்ணு முதலியன ஒன்றுசேர்ந்து கூடஸ்தன் ஆகிறது. இதுவும் புருஷனுடைய உபாதியாகையால் புருஷன் என்றே அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச மயமான மாயாசக்தி என்றென்றைக்கும் இருக்கிறது. அதன் வடிவங்கள் மட்டும் புதியன புதியனவாக மாறியமைகின்றன.

பழத்தின் மேல்தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையினின்றும் உண்டாகின்றன. அதுபோல ஒரே ஈசுவரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.

இனி, பரமாத்மா எப்படி இருக்கிறார் என்றால் :

17. உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: 

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து, பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ, அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும், உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ, உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன், அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

பொருள் : இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாசஹிதன். உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம். நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புரு÷ஷாத்தமன். அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்தசைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன. அவரே முழுமுதற்பொருளாகிய பரபிரம்மம். நிர்க்குண பிரம்மம் என்றும், நாராயணன் என்றும், சதாசிவம் என்றும் அவர் சமயங்களால் அழைக்கப்படுகிறார்.

சரீரத்தில் ஈசுவரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான். அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறானென்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனவல்லன்.

18. யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம: 

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும், அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ, அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும், புரு÷ஷாத்தம: ப்ரதித: அஸ்மி-புரு÷ஷாத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

பொருள் : நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புரு÷ஷாத்தம னென்று கூறப்படுகிறேன்.

க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். இது அரசமரத்தோடு ஒப்பிட்டு ஏற்கனவே விளக்கப்பட்டது. அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈசுவரன். சித் சக்தியாக இப் பொருளைக் கருதுமிடத்து பரமேசுவரி என்று அவள் பெயர் பெறுகிறாள். ஜீவாத்மாக்களெல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர் விகாரமாயிருப்பவர் பரபிரம்மம். பக்தர்களும் கவிகளும் அவரைப் புரு÷ஷாத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது.

இத்தகைய புரு÷ஷாத்தமனை அறிந்தவன் எத்தகைய பாங்குடையவனாகிறான்? விடை வருகிறது :

19. யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புரு÷ஷாத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத 

பாரத:-பாரதா! ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை, ஏவம் புரு÷ஷாத்தமம் ஜாநாதி - இவ்வாறு புரு÷ஷாத்தமன் என்று அறிகிறானோ, ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும், மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

பொருள் : மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புரு÷ஷாத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

பொருள் ஒன்று. மதிமயக்கம் உள்ளவனுக்கு அது உலகாகக் காட்சி கொடுக்கிறது; மயக்கம் நீங்கப்பெற்றவனுக்கு அது கடவுள் காட்சி கொடுக்கிறது. கடவுள் காட்சியில் சில படித்தரங்கள் இருக்கின்றன. அனைத்தையும் ஆதரிப்பவராக அவர் முதலில் தோன்றுகிறார். அனைத்தும் அவரிடத்து அடங்கியிருக்கின்றன. பின்பு அவரே அனைத்தும் ஆகியிருக்கிறார். அடுத்தபடி தோற்றத்தளவில் அனைத்தும் இருக்கின்றன; உண்மையில் அவர்தான் இருக்கிறார். அவர் யாண்டும் உள்ளது உள்ளபடி இருக்கிறார். பூரணப் பொருளாகிய அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாகிறதில்லை. இது ஞானத்தின் முடிவான நிலை. கடவுள் காட்சி பெற்றவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான். ஏனென்றால் அதற்குமேல் அவன் அறியவேண்டியது ஒன்றுமில்லை. கடவுள் காட்சி பெற்றவுடனே மனப்பான்மையும் மாறியமைகிறது. மனது எந்த அவஸ்தையிலிருந்தாலும் அது கடவுளை வழுத்தும் பாங்குடையதாகிறது. தெய்வ வழிபாடே வடிவுடையதாகிறது அது.

ஈசுவர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும். ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது. இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.

கடவுள் காட்சியிலேயே நிலைபெறுவதால் மனிதன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

20. இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிதமுக்தம் மயாநக
ஏதத்‌புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத 

அநக:-குற்றமற்றோய், இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை, மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது, ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்ய, த்தக்கது செய்பவன் ஸ்யாத்-ஆகிறான்.

பொருள் : குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.

பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது. ஏனென்றால் வேதாந்தத்தின் சரீரம் முழுதும் இதில் இருக்கிறது. பரத்தை அறிபவனே ஞானியாகிறான். அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன. பரத்தை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை. பரத்தை அறிந்துகொள்ளுதற்கு நிகரான குறி வேறு எதும் இல்லை. பரத்தை அறிதற்கு மேலான புருஷார்த்தமில்லை. பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான்.

பெறுதற்குரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனேயாவான்.
 


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #22 on: April 20, 2012, 12:46:44 PM »
பதினாறாம் அத்தியாயம் 

தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.

மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.

தெய்வீக இயல்பு 1-3 -அஸுர இயல்பு 4 -இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 -அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 -ஆஸுரனது வீழ்ச்சி 19-21 -அஸுர இயல்பினின்று விடுதலை 22 -சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.

ஸ்ரீபகவாநுவாச

1. அபயம் ஸத்த்வஸம்ஸுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:
தாநம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அபயம் ஸத்த்வஸம்ஸுத்தி-அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி:-ஞான யோகத்தில் உறுதி, தாநம் தம ச-ஈகை, தன்னடக்கம், யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாய:-வேள்வி, கற்றல், தப ஆர்ஜவம்-தவம், நேர்மை.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.

அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான். அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது, அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம். உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.

நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது. இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும். தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.

தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின்மீது, அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம். தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது. தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.

பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறது.  உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம். சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.

2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஸாந்திரபைஸுநம்
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்   

அஹிம்ஸா-கொல்லாமை, ஸத்யம்-வாய்மை, அக்ரோத:-சினவாமை, த்யாக:-துறவு, ஸாந்தி-ஆறுதல், அபைஸுநம்-வண்மை, பூதேஷு தயா-ஜீவதயை, அலோலுப் த்வம் - அவாவின்மை, மார்தவம் ஹ்ரீ:-மென்மை, நாணுடைமை, அசாபலம்-சலியாமை.

பொருள் : கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,

உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது. அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது. கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும். மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக் கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது. உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல். இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு. அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பைப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது. புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும். மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும். மற்றவர்கள் தங்களைப் புகழும்போது நல்லார்க்கு நாணம் வருகிறது. தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.

3. தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசமத்ரோஹோ நாதிமாநிதா
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத   

தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்-ஒளி, பொறை, உறுதி, சுத்தம், அத்ரோஹ:-துரோகமின்மை –
ந அதிமாநிதா-செருக்கு கொள்ளாமை, தைவீம் ஸம்பதம்-தெய்வ சம்பத்தை, அபிஜாதஸ்ய பவந்தி-எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரத-பாரதா.

பொருள் : ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!

கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத் தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது. மனதின்கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது. விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது. மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது. பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது. பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு. அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.

இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :

4. தம்போ தர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்   

பார்த-பார்த்தா, தம்ப: தர்ப: அபிமாந ச-டம்பம், இறுமாப்பு, கர்வம், க்ரோத: பாருஷ்யம் ஏவ ச-சினம், கடுமை, அஜ்ஞாநம் ஏவ-அஞ்ஞானம், ஆஸுரீம் ஸம்பதம்-அசுர சம்பத்தை, அபிஜாதஸ்ய-எய்தியவனிடம் காணப் படுகின்றன.

பொருள் : டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!

ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக்கொண்டு தன்னை மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும், கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது. தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.

பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.

இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :

5. தைவீ ஸம்பத்விமோக்ஷõய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ   

தைவீ ஸம்பத் விமோக்ஷõய-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், ஆஸுரீ நிபந்தாய மதா-அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை, பாண்டவ-பாண்டவா, தைவீம் ஸம்பதம் அபிஜாத: அஸி-தேவ சம்பத்தை எய்தி விட்டாய், மா ஸுச:-துயரப்படாதே.

பொருள் : தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.

முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது. அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன் முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.

ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :

6. த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு   

பார்த-பார்த்தா, அஸ்மிந் லோகே-இவ்வுலகத்தில், பூதஸர்கௌ த்வௌ ஏவ-உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும், தைவ ஆஸுர ச-தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது, தைவ: விஸ்தரஸ: ப்ரோக்த-தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன், ஆஸுரம் மே ஸ்ருணு-அசுர இயல் பற்றி என்னிடம் கேள்.

பொருள் : இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது. கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது. ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம். சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.

7. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:
ந ஸௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே   

ஆஸுரா: ஜநா-அசுரத் தன்மை கொண்டோர், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது-தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார், தேஷு ஸௌசம் ந-அவர்களிடம் தூய்மையேனும் இல்லை, ஆசார: ச ந-ஒழுக்கமேனும் இல்லை, ஸத்யம் அபி ந வித்யதே-வாய்மையேனும் காணப்படுவதில்லை.

பொருள் : அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது. அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்துகொள்கின்றன. அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல, உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல. ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.

ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களிடமிருந்து வரும் விடையாவது :

8. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம்
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்   

ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும், அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள், காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது, அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?

அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.

சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.

இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :

9. ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோऽல்பபுத்தய:
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா:   

ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய-இந்தக் காட்சியில் நிலைபெற்று, அல்பபுத்தய: நஷ்டாத்மாந: - அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள், அஹிதா:-தீமையையே நினைப்பவர்களாக, உக்ரகர்மாண:-கொடிய தொழில் செய்பவர்களாக, ஜகத: க்ஷயாய ப்ரபவந்தி-உலக நாசத்திற்கே முனைகிறார்கள்.

பொருள் : இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.

இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான். தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது. உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.

அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது :

10. காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேऽஸுசிவ்ரதா:   

தம்பமாந மதாந்விதா:- டம்பமும் மதமும் பொருந்தியவராய், துஷ்பூரம்-நிரம்பவொண்ணாத,
காமம் ஆஸ்ரித்ய-காமத்தைச் சார்ந்து, மோஹாத் அஸத்க்ராஹாந் க்ருஹீத்வா-மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு, அஸுசிவ்ரதா: ப்ரவர்தந்தே-அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

பொருள் : நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

11. சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா:
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா:   

ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம்-பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில், உபாஸ்ரிதா:-பொருந்தி, காமோபபோகபரமா: ச-விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ஏதாவத் இதி நிஸ்சிதா:-உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக.

பொருள் : பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,

மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது. கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை. ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.

அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள். ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள். ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது; கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில் அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்! குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச் சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்! பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்; பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன ! இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும் ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !

12. ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்   

ஆஸாபாஸஸதை-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால், பத்தா:-கட்டுண்டு, காம க்ரோதபராயணா:-காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க், காமபோகார்தம்-காம போகத்துக்காக, அந்யாயேந அர்த ஸஞ்சயாந்-அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க,
ஈஹந்தே-விரும்புகிறார்கள்.

பொருள் : நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது. பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது. மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்). ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர். காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.

13. இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்   

மயா அத்ய இதம் லப்தம்-என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இமம் மநோரதம் ப்ராப்ஸ்யே-இன்ன மனோரதத்தை இனி எய்துவேன், மே இதம் தநம் அஸ்தி - என்னிடம் இந்த செல்வம் உள்ளது, புந: அபி இதம் பவிஷ்யதி-இனி இன்ன பொருளை பெறுவேன்.

பொருள் : இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”

14. அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி
ஈஸ்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ   

அஸௌ ஸத்ரு மயா ஹத:-இன்ன பகைவரைக் கொன்று விட்டேன், ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே-இனி மற்றவர்களைக் கொல்வேன், அஹம் ஈஸ்வர: போகீ-நான் ஆள்வோன், நான் போகி, அஹம் ஸித்த:-நான் சித்தன், பலவாந்-பலவான், ஸுகீ-சுகத்தை அனுபவிப்பவன்.

பொருள் : இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”

15. ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ருஸோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:   

ஆட்ய: அபிஜநவாந் அஸ்மி-நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன், மயா ஸத்ருஸ: அந்ய: க: அஸ்தி-எனக்கு நிகர் வேறு யாவருளர்? யக்ஷ்யே-வேள்வி செய்கிறேன், தாஸ்யாமி-கொடுப்பேன்; மோதிஷ்ய-களிப்பேன், இதி அஜ்ஞாநவிமோஹிதா:-என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.

பொருள் : நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

16. அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽஸுசௌ   

அநேகசித்தவிப்ராந்தா-பல சித்தங்களால் மருண்டோர், மோஹ ஜால ஸமாவ்ருதா:-மோகவலையில் அகப்பட்டோர், காமபோகேஷு ப்ரஸக்தா:-காம போகங்களில் பற்றுண்டோர்,
அஸுசௌ நரகே பதந்தி-இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

பொருள் : பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம் சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.

அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :

17. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்   

ஆத்மஸம்பாவிதா:-இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், ஸ்தப்தா:-முரடர், தந மாந மத அந்விதா:-செல்வச் செருக்கும் மதமுமுடையோர், தே நாமயஜ்ஞை-அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி, தம்பேந அவிதி பூர்வகம் யஜந்தே-டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்.

பொருள் : இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும் இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும். கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு. தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.

18. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா:   

அஹங்காரம் பலம் தர்பம்-அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:-விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய, அப்யஸூயகா:-பிறரை இகழ்கின்றவர்களாக, ஆத்மபரதேஹேஷு-மற்றவர் உடல்களிலும் உள்ள, மாம் ப்ரத்விஷந்த-என்னை வெறுக்கிறார்கள்.

பொருள் : அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.

தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.

எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :

19. தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு   

த்விஷத: க்ருராந்-வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும், நராதமாந் தாந் அஸுபாந், -உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, அஹம் அஜஸ்ரம்-நான் எப்போதும், ஸம்ஸாரேஷு-சம்சாரத்தில், ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி -அசுர பிறப்புகளில் எறிகிறேன்.

பொருள் : இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.

வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது. இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:

20. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்   

கௌந்தேய-குந்தியின் மகனே! மூடா: மாம் அப்ராப்ய ஏவ-இம்மூடர் என்னை யெய்தாமலே,
ஜந்மநி ஜந்மநி-பிறப்புத் தோறும், ஆஸுரீம் யோநிம் ஆபந்நா:-அசுரக் கருக்களில் தோன்றி, தத: அதமாம் கதிம் யாந்தி-மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்.

பொருள் : பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!

கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன் மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.

இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :

21. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்   

இதம் ஆத்மந: நாஸநம்-இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான, த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்-இம் மூன்று நரக வாயில்கள், காம: க்ரோத: ததா லோப-காமம், சினம், அவா, தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்-ஆதலால், இம்மூன்றையும் விடுக.

பொருள் : ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.

அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது. லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான். இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில் ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.

பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :

22. ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:
ஆசரத்யாத்மந: ஸ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்   

கௌந்தேய-குந்தியின் மகனே, ஏதை: த்ரிபி: தமோத்வாரை: விமுக்த:-இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன், நர: ஆத்மந: ஸ்ரேய: ஆசரதி-தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.

பொருள் : இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.

துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன. ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான். முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான். ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.

அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :

23. ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்   

ய: ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவன் சாஸ்திர விதியை மீறி, காமகாரத: வர்ததே-விருப்பத்தால் தொழில் புரிவோனோ, ஸ: ஸித்திம் ந அவாப்நோதி-அவன் ஸித்தி பெற மாட்டான், பராம் கதிம் ந-பரகதி அடைய மாட்டான், ஸுகம் ந-அவன் இன்பம் எய்த மாட்டான்.

பொருள் : சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.

சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது. இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது. ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான். சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.

இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :

24. தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்யவ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ரவிதாநோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி   

தஸ்மாத் தே-ஆதலால் உனக்கு, இஹ கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ-எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில், ஸாஸ்த்ரம் ப்ரமாணம்-நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள், ஜ்ஞாத்வா-அதை அறிந்து, ஸாஸ்த்ர விதாந உக்தம்-சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை, கர்தும் அர்ஹஸி-செய்யக் கடவாய்.

பொருள் : ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.

சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது. ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம் சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும். முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள். அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.

நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை; என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகோ நாம
சோடசோத்யாய:


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #23 on: April 20, 2012, 12:48:56 PM »
பதினேழாம் அத்தியாயம் 
சிரத்தாத்ரய விபாக யோகம்

அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.

மூன்றுவித சிரத்தை 1-7 மூன்றுவித உணவு 8-10 -மூன்று வித ஆராதனை 11-13 -மூன்றுவிதத் தபசு 14-19 -மூன்றுவித தானம் 20-22 -குறைகளை நிறையாக்குதல் 23-28.

அர்ஜுந உவாச

1. யே ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:   

அர்ஜுந உவாச, க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, யே ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவர்கள் சாஸ்திர விதியை மீறி, ஸ்ரத்தயா அந்விதா: யஜந்தே-ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ, தேஷாம் நிஷ்டா து கா-அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம:-சத்துவமா அல்லது ரஜசா, தமசா?

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)

ஈண்டுக் கேள்வியொன்று கிளப்ப அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. முன்னேற்றமடைய வேண்டுமென்று யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவனிடத்து சிரத்தையிருக்கிறது. ஆதலால் அவன் காமம், குரோதம், லோபம் இவைகளின் வசப்படமாட்டான். ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி ஒன்றும் நினையாது தேவாராதனை செய்கிற பாங்குடன் கர்மங்களில் ஈடுபடுகிறான். அப்படிச் செய்வதால் அவன் மேன்மையடைகின்றானா இடைநிலையில் ரஜோகுணத்துக்குட்பட்டு நின்றுவிடுகிறானா அல்லது தமோகுணத்துக்கு உரியவனாய்க் கீழ்மையடைகின்றானா? மனித வாழ்க்கையில் சாஸ்திரத்தின் ஆணை முற்றிலும் இன்றியமையாததா, என்பது கேள்வி.

ஸ்ரீபகவாநுவாச

2. த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், தேஹிநாம் ஸ்வபாவஜா-ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான, ஸா ஸ்ரத்தா-அந்த நம்பிக்கை, த்ரிவிதா பவதி-மூன்று வகையாகத் தோன்றுகிறது, ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி-சாத்விகம், ராஜசம், தாமசம் என, தாம் ஸ்ருணு-அதைக் கேள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.

முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது. பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய ஜன்மத்தில் வினையாற்றுகிறான். இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தைக் கண்டுபிடிக்கலாம்.

3. ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத
ஸ்ரத்தாமயோऽயம் புரு÷ஷா யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:   

பாரத-பாரதா, ஸர்வஸ்ய ஸ்ரத்தா ஸத்த்வாநுரூபா பவதி-யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது, அயம் புருஷ: ஸ்ரத்தாமய:-மனிதன் சிரத்தை மயமானவன், ய: யத் ஸ்ரத்த: ஸ:-எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்,
ஸ: ஏவ-அந்தப் பொருளேதான் ஆகிறான்.

பொருள் : பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.

விழிப்பும், மன எழுச்சியும், வகையுடன் விரைந்து வினையாற்றுதலும், வினையாற்றுதலில் உள்ள மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இத்தனையும் சேர்ந்து சிரத்தையெனப் பெயர் பெறுகிறது. இதுவரையில் மனிதன் அடைந்துள்ள பாங்கு, இனி அவன் அடையப்போவது, இவை யாவையும் அவன்பால் உள்ள சிரத்தையைக் கொண்டு அளந்துவிடலாம். வானை நோக்கி வீசிய கல், அதற்குக் கொடுத்த வேகத்துக்கு ஏற்ப உயரப் போகிறது. மரம் தன் உள்வலிவுக்கு ஏற்ப வானுற வளர்கிறது. அங்ஙனம் மனிதனிடத்துள்ள சிரத்தைக்கேற்ப அவன் மேலோன் ஆகிறான். நசிகேதன் என்னும் ரிஷி புத்ரன் சிரத்தையே வடிவெடுத்தவன் ஆனான். அவனுடைய தந்தை ஆற்றிய விச்வஜித் யக்ஞம் குறைபட்ட யக்ஞமாயிருந்தது. மைந்தனுக்கு அக்குறையைக் காணப்பிடிக்கவில்லை. ஆகவே சிரத்தையானது அவனுடைய மனதுதகத்து எழுந்தது. தந்தையின் ஆணைப்படி அவன் யமலோகத்துக்குச் சென்றான். பிதாவின் குறைபிலையை நிறைநிலையாக்கினான். உலக முன்னேற்றத்துக்கு ஏதுவான முயற்சி யாது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் தானே ஆத்ம ஞானத்தை யமனிடமிருந்து கற்றுக் கொண்டான். இத்தனையும் சீரிய சிரத்தையால் அவனுக்கு அமைந்தன. ஒருவனுடைய சிரத்தையை அளப்பது அவனையே அளப்பதற்கு ஒப்பாகிறது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது. அவைகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு. அது வருமாறு :

4. யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷõம்ஸி ராஜஸா:
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:   

ஸாத்த்விகா தேவாந் யஜந்தே-ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர், ராஜஸா: யக்ஷரக்ஷõம்ஸி-ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்), அந்யே தாமஸா ஜநா:-மற்றத் தமோ குணமுடையோர், ப்ரேதாந் பூதகணாந் ச-பிரேத பூத கணங்களுக்கு, யஜந்தே-வேள்வி செய்கிறார்கள்.

பொருள் : ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.

அவரவர் தன்மைக்குத் தகுந்தாற்போன்று மனிதர் மனிதரோடு இணக்கம் வைக்கிறார்கள். நல்லவர் நல்லாரைச் சார்தலும், கெட்டவர்கள் கெட்டவர்களோடு இணக்கம் வைப்பதும் இயல்பு. அதேபோன்று தெய்வ வழிபாட்டிலும் படித்தரங்கள் பல அமைகின்றன. சாத்விக குணமுள்ள நல்லார் பரமாத்மாவைப் பற்றி நிற்கின்றார்கள். பரமாத்மாவின் சொரூபங்களாக சிவம், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமணியம் முதலிய தெய்வங்கள் இலங்குகின்றன. இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியைக் கையாளுபவர்கள் ரஜோகுணத்தினின்று வந்த சிற்றியல்பை உடையவர்களேயாம். அத்தகையவர்கள் வழிபாட்டுக்காகவென்று கற்பித்துக்கொள்ளும் தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கும். சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்ற இயற்கையின் பகுதியைப் பாராட்டுகிறார்கள். தமோகுணம் பொருந்தியவர்கள் கற்பிக்கும் வனதேவதைகள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும். இவர்களுள் சாத்துவிக சுபாவமுடையவர்கள் மிகச் சிலர். பெரும்பான்மையோர் போக்கு எத்தகையது எனின்:

5. அஸாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:   

6. கர்ஷயந்த: ஸரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:
மாம் சைவாந்த:ஸரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஸ்சயாந்   

யே ஜநா:-எந்த மக்கள், அஸாஸ்த்ரவிஹிதம்-நியமத்தை மீறி, தம்ப அஹங்கார ஸம்யுக்தா: - டம்பமும் அகங்காரமுமுடையராய், காமராக பல அந்விதா:-விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரம் தப: தப்யந்தே-கோரமான தவஞ் செய்கிறார்களோ.

ஸரீரஸ்தம் பூதக்ராமம் ச-உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும், அந்த:ஸரீரஸ்தம் மாம் ஏவ - அகத்திலுள்ள என்னையும், கர்ஷயந்த:-வருத்துகிறார்கள், தாந் அசேதஸ:-அந்த அறிவு கெட்டவர்கள், ஆஸுர நிஸ்சயாந் வித்தி= அசுர நிச்சய முடையோரென்றுணர்.

பொருள் : (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.

பொருள் : இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.

அசுர இயல்புடையவர்கள் புரியும் கொடுந்தவம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள்ளின்மீது படுத்துக்கிடக்கின்றனர்; கையைத் தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கின்றனர். பார்க்கின்றவர்களுக்கும் அக்காட்சி துன்பமளிக்கிறது. சூரியனையே உற்று நோக்குதல் போன்ற செயல்களால் இந்திரியங்களை அவர்கள் பாழாக்குகிறார்கள். மனதினுள் மனசாக்ஷியாக சர்வேசுவரன் வீற்றிருக்கிறார். சலனமடைந்த நீரில் சந்திர பிம்பம் நன்றாக விளங்காததுபோன்று பகட்டும், ஆணவமும், ஆசையும் நிறைந்துள்ள அவர்களது மனதில் ஈசுவர சான்னித்தியம் உணரப்படுவதில்லை. இறைவன் புறக்கணிக்கப்படுகிறார். இன்ப துன்பம் கடந்துள்ள அவர் துன்புறுத்தப்படுவர் போன்று காணப்படுகிறார். சான்றோர்கள் செல்லும் நெறி இதுவன்று. ஆதலால் இது சாஸ்திரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. இத்தகைய பாங்குடையவர்களே அசுரர் ஆவர்.

இன்னும் எவைகளைக்கொண்டு மக்களை வகைப்படுத்தலாம் என்று கேட்குமிடத்து அதற்கு விடை வருகிறது : (5-6)

7. ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு   

ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி-ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும், த்ரிவித: பவதி - மூன்று வகைப்படுகிறது, ததா யஜ்ஞ: தப: தாநம்-அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்,
தேஷாம் இமம் பேதம்-அவற்றின் வேற்றுமையைக், ஸ்ருணு-கேள்.

பொருள் : ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்துள்ளது. முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியிருக்கிறது.

8. ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:   

ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி-உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி, விவர்தநா:, ரஸ்யா: ஸ்நிக்தா:-மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, ஸ்திரா: ஹ்ருத்யா: ஆஹாரா:-உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள், ஸாத்த்விகப்ரியா:-சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.

பொருள் : உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.

பிரீதியானது என்பது பசியை உண்டுபண்ணுவது என்றும், ஸ்திரமானது என்பது நெடுநேரம் தாங்குவது என்றும் பொருள்படும். சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது. மற்று, ஜீரணம் பண்ணமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது. அதனால் ஆயுளும் குறைந்துபோம். இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு. காலையில் உண்ணும் உணவு இலேசானதாக இருக்கவேண்டும். இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி தூங்கப்போகும்பொழுது ஜீரணமாயிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்குக் கதகதப்பைத் தரும் உணவை அருந்துதல் அவசியம். வெப்பம் நிறைந்த நாடுகளிலோ குளிர்ச்சி தருகிற உணவு வேண்டப்படுகிறது.

பகல் வேளையில் வேண்டியவாறு உணவு அருந்து, ஆனால் இரவில் அருந்தும் உணவைப் பெரிதும் குறைத்துவிடு.

9. கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஸோகாமயப்ரதா:   

கடு அம்ல லவண தீக்ஷ்ண-கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும், அதிஉஷ்ண-அதிகச் சூடு கொண்டன, ரூக்ஷ விதாஹிந:-உலர்ந்தன, எரிச்சலுடையன, ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: - இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர், து:க ஸோக ஆமயப்ரதா:-இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.

பொருள் : கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.

நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது; வயிறு எரிகிறது-இத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள். ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு.

10. யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்   

யத் போஜநம் யாதயாமம்-எந்த உணவு கெட்டுப் போனது, கதரஸம்-சுவையற்றது பூதி - அழுகியது, பர்யுஷிதம் ச-பழையது, உச்சிஷ்டம் ச-எச்சில் பட்டது, அமேத்யம் அபி-அசுத்தம், தாமஸப்ரியம்-தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

பொருள் : பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைக்கப்பட்ட உணவு யாமம் கழிந்த உணவாகிறது. ஆகையால் அது சுவையிழந்து விடுகிறது. மேலும் அது ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிறது. முந்திய இரவு சமைத்தது பழைய உணவாகிறது. மற்றொருவர் உண்டு எஞ்சியிருக்கும் உணவு எச்சில்பட்டது அல்லது உச்சிஷ்டமானதாகிறது. இன்னும் சில உணவுகள் தீண்டுதற்கும் தகுதியற்றவைகளாகின்றன. தமோகுண இயல்புடையார் இத்தகைய உணவுகளை விருப்புடன் புசிக்கின்றனர்.

இனி, ஈசுவர ஆராதனையிலுள்ள மூன்று படித்தரங்கள் விளக்கப்படுகின்றன:

11. அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:   

ய: விதித்ருஷ்ட:-எவர் விதிகள் சொல்லியபடி, யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ-வேள்வி புரிதல் கடமையென்று, இதி மந: ஸமாதாய-மனம் தேறி, அபலாகாங்க்ஷிபி: இஜ்யதே-பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ, ஸ ஸாத்த்விக:-அந்த வேள்வி சத்துவ குணமுடையது.

பொருள் : பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள். நல்லார் கடவுள் வழிபாடு செய்வது கைம்மாறு கருதியல்ல. கடவுளை வழிபடுவதே அவர்களது இயல்பு. அந்த ஆராதனை சாஸ்திர ஆணைக்கு முற்றும் ஒத்ததாயிருக்கிறது. சத்துவகுண மேலீட்டால் வரும் வேள்வி அத்தகையது. பாண்டவர் ஐவர் திரௌபதியுடன் வனவாசம் செய்தபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள்  எண்ணிக்கையில் அடங்கா. தர்மமே வடிவெடுத்துள்ள தங்களுக்கு இத்தனை துன்பங்கள் ஏன் வரவேண்டும்? என்று திரௌபதியானவள் கணவன் தர்மராஜாவிடம் கேட்டாள். அதற்கு விடையாக தர்மராஜா பகர்ந்ததாவது:- தேவீ, தூரத்தில் தென்படும் ஹிமயமலையைப் பார். மகிமை நிறைந்த அதை நான் வணங்குகிறேன். துன்பம் ஒன்றையும் நான் அறியேன். இங்ஙனம் நல்லதை வணங்குவது அவரது இயல்பு ஆயிற்று.

சாத்விகம் நிறைந்தவர்களுடைய மனப்பான்மைக்கு இது சான்றாகும்.

12. அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்   

து பரதஸ்ரேஷ்ட-பாரதரிற் சிறந்தாய்! தம்பார்தம் ஏவ ச பலம் அபி அபிஸந்தாய- ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு, யத் இஜ்யதே- வேள்வி வேட்கப் படுகிறதோ, தம் ராஜஸம் யஜ்ஞம் வித்தி-அது ராஜச வேள்வி என்று உணர்

பொருள் : பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!

கடையில் பண்டம் மாற்றுவது போன்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது. தற்பெருமைக்காகவென்று பூஜைகள் பல செய்வாரும் உளர். தங்களை விளம்பரப்படுத்திகொள்வதற்காகத் தெய்வ வழிபாடு செய்கிறவர்களும் உண்டு. இவ்விருவித ஆராதனைகள் ரஜோ குணத்தினின்று உதிப்பவைகளாம்.

13. விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே   

விதிஹீநம்-விதி தவறியது, அஸ்ருஷ்டாந்நம்-பிறர்க்குணவு தராததும், மந்த்ரஹீநம்-மந்திர மற்றது, அதக்ஷிணம்-தக்ஷிணையற்றது, ஸ்ரத்தாவிரஹிதம்-நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது, யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே-இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.

பொருள் : விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.

எந்த ஆராதனையில் குற்றமிருக்கிறதோ அது வேதநெறி வழுவியதாகும். அன்னதானம் எல்லா உயிர்களுக்குமிடையிலுள்ள தொடர்வை நிலைநாட்டுகிறது. அன்னம் வழங்காதவிடத்து வேற்றுமை பரவுகிறது. அதனால் கேடு விளைகிறது. நல்லெண்ணமில்லாத செயல் மந்திரமில்லாத செயல் எனப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாகவுள்ள எண்ணமே அதற்குச் சிறப்பளிக்கிறது. ஆழ்ந்த எண்ணமில்லாத வழிபாடு யந்திரம் செய்கிற செயலுக்கு ஒப்பாகிறது. கடவுள் வழிபாடு சம்பந்தமான கிரியைகளைப் பிரதிபலன் எதிர்பாராது செய்துவைப்பவர் புரோகிதர் ஆகிறார். புரோகிதர்க்கும் அறிவு ஒழுக்கமுடைய மற்றவர்க்கும் வழங்கும் பொருள் தக்ஷிணை எனப்படுகிறது. தக்ஷிணை வழங்காத வழிபாடானது பிறரைப் பொருள் படுத்தாதது எனவே அது வழிபாடாகாது. ஊக்கமின்றி, விசுவாசமின்றிக் கடனைக் கட்டுவது போன்று செய்யப்படும் காரியம் சிரத்தையற்றதாகிறது. இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் அந்த ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.

மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணைபுரிகிறது. தவம் யாது என்பது இனி விளக்கப்படுகிறது.

14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே   

தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை, ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித் தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம். அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.

பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள். மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம். நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம் ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது. சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன. போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம். தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால் இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.

15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே   

யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, ப்ரியஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய, வாக்யம் ச-சொல்லுதல், ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி, வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.

பொருள் : சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.

காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல். தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது. ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும். எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.

மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு. இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது. கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.

பரத்தினை சாக்ஷõத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன. இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம். அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது. பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது. இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.

16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே   

மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி, ஸௌம்யத்வம்-அமைதி, மௌநம்-மௌனம், ஆத்மவிநிக்ரஹ: - தன்னைக் கட்டுதல், பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை, இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.

பொருள் : மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.

சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம். சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும், ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச் சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது. வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.

17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே   

அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால், பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன், தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம், ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.

பொருள் : பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.

பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும் அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள். அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை. முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.

18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்   

யத் தப:-எந்த தவம், ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்), தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய, இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும், தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.

பொருள் : மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள். தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்; வீழ்ந்து வணங்க வேண்டும் - இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர். பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும். செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.

19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்   

யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன், ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு, பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய, தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.

பொருள் : மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.

விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள். பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள். அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள். அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.

20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதேऽநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்   

தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம், தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும், அநுபகாரிணே தீயதே - கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ, தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.

பொருள் : கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.

செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது. தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம். கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார். ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது. இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.

21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்   

து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன், ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும், பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ, தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.

பொருள் : கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.

தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு. அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான். அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான். தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான். இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது. ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான். தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம். தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும் அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான். இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.

22. அதேஸகாலே யத்தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்   

யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி, அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன், அதேஸகாலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில், அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.

பொருள் : தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.

புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள் தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள், பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம். முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி, ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.

ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது. ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.

செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம். அதற்கு விடை வருகிறது :

23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா   

ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக, ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர், தேந புரா-அதனால் முன்பு, ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும், விஹிதா:-வகுக்கப்பட்டன.

பொருள் : ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது. மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது. ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது. ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும். கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான். அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள் (தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.

எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம். எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள் ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.

பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும் அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன. உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர். அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும் நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.

இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :

24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்   

தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள், விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி, தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள், ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று, உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.

பொருள் : ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.

குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது. தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது. கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது. அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது. அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும். இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன். செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது. ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும். அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.

25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:   

தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து, பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல், விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும், தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள், மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

பொருள் : தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும், எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள் கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும். உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன் தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது. அதனால் முமுக்ஷúத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.

26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே   

ஸத் இதி-ஸத் என்ற சொல், ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும், ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது, பார்த-பார்த்தா, ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும், ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.

பொருள் : ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.

முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது. பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம். நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில் உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.

சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது. பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது. அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான். சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது. இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.

இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது. பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம். விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம். அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம். மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.

பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும், முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது. ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.

இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :

27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே   

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும், ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

பொருள் : வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம். வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல். அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல் இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா. நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன. முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி. தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான். தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும். பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில் குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது. தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது. கடவுள்பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.

28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ   

பார்த-பார்த்தா, அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும், தப்தம் தப: ச-செய்யும் தவமும், யத் க்ருதம்-கர்மமும், அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.

பொருள் : அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;

யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது. இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது. இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும். பரம்பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும். சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.

சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது. கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன. ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான். யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது, தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம். பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது. தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது. யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன. சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால். அம்மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும். அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #24 on: April 20, 2012, 12:52:47 PM »
பதினெட்டாம் அத்தியாயம்
 
மோஷ சந்நியாச யோகம்

சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும். எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.

அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.

ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 -தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 -ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 -கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 -ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 -முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 -நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 -கர்மயோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57 -அஹங்காரம் கொடியது 58-60 -எல்லாம் ஈசன் செயல் 61-62 -உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 -சரணாகதி தத்துவம் 64-66 -கீதைக்கு அதிகாரி யார்? 67-71 -ஞானோதயம் 72-73 -ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.

அர்ஜுந உவாச

1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந   

அர்ஜுந உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய், ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா, கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே, ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும், த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும், ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

ஏற்கனவே இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது. ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் விளக்கலாம். புதிய வடிவம் பெறுமிடத்து அது புதிய கோட்பாடாகவே தென்படும். சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய கோட்பாடு புதிய போதனை போன்று தென்படுவது இயல்பு. யானையின் அவயவம் ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது. அவைகளையெல்லாம் தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால் அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன. அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம் என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில் பூர்த்தி பெறுகிறது.

கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு வந்தான். கண்ணனோ தன் கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான். ஆதலால் அவனுக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது. கை வலிவை இங்குக் காட்டியதால் அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான். இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால் ஹிருஷீகேசனாகிறான்.

அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப் பகர்ந்தார்.

அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார். இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.

வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும். அவைகளை வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. தீப்பற்றி எரிவது போன்று படம் வரையலாம். ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு சமைக்க உதவாது. உண்மையாக எரிந்துகொண்டிருக்கும் தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும். எரிகின்ற தீ போன்றவை தியாகமும் சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான் அவ் உயர் நிலையை மற்றவர்க்கு வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச் செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற கேள்வி எழுகிறது.

அர்ஜுனனால் அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும் கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார். சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று சொற்களில் அடங்கியிருக்கின்றன. அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும். எல்லா உயிர்களும் தீமையை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு. இயற்கையில் யாண்டும் இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன; மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன் (மகாபாகு) ஆகிறார். உடல் அமைப்பில் பரிபூரணநிலை அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள் மூலம் வெளியாகின்றன. கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன் என்ற பெயர் வந்தது. ஜன்மம் எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ கிருஷ்ணன். யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும் விளக்கவல்லவர். அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.

ஸ்ரீபகவாநுவாச

2. காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:   

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது, ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர், ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல், த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம் முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம். இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம். இது சில ஞானியர்கள் கருத்து. வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர். சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு. இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை. தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும். காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாகவேண்டும். பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது. ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம் பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு. வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர். அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.

சத்வகுணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகிவிடுகின்றன. வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார். கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்! குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள். அதேபோல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றிவிடுகின்றார். ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும். ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க வேண்டும். இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு, பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.

3. த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே   

ஏகே மநீஷிண:-சில அறிஞர், கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம் இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள், யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை, ந த்யாஜ்யம் இதி ச அபரே-விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்.

பொருள் : சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.

கர்மங்கள் அனைத்திலும் காரணம், காரியம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும் வரையில் காரியமும் உண்டு. மழை பெய்கிறது; அது காரணம். பூமி நனைகிறது; புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது. இவ்விரண்டும் காரியங்கள். பூமி நனைதல் என்னும் காரியம் கிருஷிகனுக்கு நல்லது. புதிதாகக் கட்டுகிற வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக் கெட்டது. ஆக, மழைபெய்தல் என்னும் கர்மத்தில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது. அச்செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது. ஆக, தீபம் எரிதலில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம். உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல். சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல். இங்ஙனம் எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில் வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று பகர்கின்றனர். வேள்வி, தானம், தபசு ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது. மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது. அதை முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச் செடியில் முள் உண்டு. முள்செடி என்று எண்ணி அதைப் பயிர் செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது. உடலினுள் சென்றால் அது உயிரை வாங்கிவிடும். பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக மாற்றியமைத்தால், அதை உடலினுள் செலுத்தலாம்; உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம் அத்தகையது. மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால் தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆக, இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது கோட்பாடு.

அப்படியானால் இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு யாது? விடை வருகிறது :

4. நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:   

பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே, புருஷவ்யாக்ர-புருஷப் புலியே, தத்ர த்யாகே மே நிஸ்ச, யம் ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள், ஹி த்யாக: த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.

பொருள் : பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.

சந்நியாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு ஆகிறது. பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன் ஓயாது தியாகம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது. மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது. அப்படி அது மரத்தை விடுதலில் பண்பும் பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. தாய் ஒருத்தி தன் சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து மாசம் ஆனதும் அதை அவள் தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும் கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல். பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான். சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற உபாயம். மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப் பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன் ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும். ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று. கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து அதற்கு அதீதத்தில் போக வேண்டும். கர்மத்தை விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :

5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம்   

யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை, ந த்யாஜ்யம்-விடக் கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும், யஜ்ஞ: தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும், மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

பொருள் : வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

பட்டுப்புழு தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப் போகிறது. சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள் அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது. அப்படித் தன்னை அடைத்து வைப்பதில் பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது. இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும். அதற்காகத் தான் கட்டிய கூட்டை அது தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை. காமிய கர்மத்தின் வாயிலாக உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது; அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது. அதன் பிறகு செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது. ஆத்ம சாதகனிடத்து அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது. ஆகையால் வேள்வி, தானம், தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும். அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது. அதற்குமேல் மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும் வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.

அறிஞர் யார்? விடை வருகிறது :

6. ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச
கர்தவ்யாநீதி மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம்   

து பார்த-ஆனால் பார்த்தா, ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பலாநி ச-பயன்களை வேண்டாமலும், கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும் என்பது, மே உத்தமம் நிஸ்சிதம் மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.

பொருள் : ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

தாய் ஒருத்தி தன் உடலினின்று பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள். குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்; ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள். பசு ஒன்று தன் கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து உண்டுபண்ணிக் கொடுக்கிறது. இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக் காணலாம். தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான தானத்தை வேறு எங்கும் காணமுடியாது. இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை இங்குக் காண்கிறோம். கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும் புனிதமடைகின்றனர். பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர் இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும். உலகம் மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால் இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.

ஈசுவரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.

7. நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:   

து நியதஸ்ய கர்மண:-ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை, ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல் தகாது, மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல், தாமஸ: பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.

பொருள் : நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.

பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும். அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின் தியாகத்தை விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை மரங்களினின்று பிடுங்குகின்றான். அது பலவந்தத்தில் செய்த தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள் கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம். சுவையற்ற கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.

மனிதனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு நித்திய கர்மமாயிருப்பது போன்று விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு முதலியன நித்திய கர்மமாகின்றன. உடல் இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும். ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய கர்மமும் இணைபிரியாதவைகள். மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு விளையும். அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம் செய்ய வேண்டுமென்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் அது போன்றது.

மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும், உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வரவேண்டும்.

8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்   

யத் கர்ம-எது செய்ய வேண்டிய கருமமோ, து:கம் ஏவ இதி-துன்பமாகக் கருதி, காய க்லேஸ பயாத்-உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால், த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால், ஸ:-அவன். ராஜஸம் த்யாகம் க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம் செய்து, த்யாக பலம் ந லபேத் ஏவ-தியாகப் பயனை அடையமாட்டான்.

பொருள் : உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை அடையமாட்டான்.

மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக் கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும், சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர் செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம் செய்யலாமென்றும் தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன் ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப் படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான். அதாவது அவனுக்கு நல்லறிவும் மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது. ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.

போர்க்களத்துக்கு யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது. உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற மனப்பான்மை வருகிறது. வலிய வந்துள்ள அறப்போர் புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது. நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது. அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த தியாகம். ஆகவே பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை.

9. கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:   

அர்ஜுந நியதம் யத் கர்ம-அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை, கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால், ஸங்கம் பலம் ச த்யக்த்வா - ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து, க்ரியதே-செய்தால், ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக: மத:-அதுவே சாத்விக தியாகம் எனப்படும்.

பொருள் : நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.

தாமஸத் தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே செய்யாது விட்டொழிக்கப்படுகிறது. சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது. நித்திய கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ கர்மத்துக்குத் தான் கர்த்தா என்று அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச் செய்து வருகிறான். அத்தகைய மனநிலையே அமைதியையும் அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.

மருத்துவ சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன் அல்லன்; சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும் அல்லன். ஆயினும் அங்குத் தங்கியிருந்து தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை அவன் முறையாகச் செய்கிறான். அவனே உண்மையில் நோயைத் தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு அத்தகையதாகிறது.

ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய தியாகி மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய கர்மமாகிறது. அவ் உயிர் வகைகளுள் ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து சுவாசிக்கிறான். ஆயினும் சுவாசிப்பதற்குத் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை. உண்மையில் உடல் உணர்ச்சியின்றி உடல் வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன் ஆகிறான். கடவுள் வழிபாடு. சமூக சேவை. தியானம் முதலியன நல்ல ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை அவன் ஒழுங்காகச் செய்கிறான். அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதிருக்கிறான். ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.

அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது? விடை வருகிறது :

10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய:   

ஸத்த்வஸமாவிஷ்ட: மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி, அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை, ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை, குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.

பொருள் : சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.

சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும் தெளிந்ததுமாகிய உள்ளத்தில் ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான். அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான். அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம். பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது. அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப்பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.

அர்ஜுனனது ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம். இச்செயல்களைத் துன்பம் நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. அவைகளை வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித் தம் கடமையை அவர்கள் முறையாகச் செய்கின்றனர். உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள் அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது. இன்ப துன்ப வினைகளைச் சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.

பற்றற்றுக் கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு விடலாகாது? விடை வருகிறது :

11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே   

ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால், அஸேஷத: கர்மாணி-முழுதுமே செய்கைகளை, த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட முடியாது, ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, ஸ: து த்யாகீ இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.

பொருள் : (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

ஒருவன் ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள் அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர். அவ் விமானம் அழகான சமவெளிக்கு மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு மேலே பறக்கிறது; மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில் காய்கிறது; கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது; ஆங்கு மேலும் கீழும் ஆக இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு. விமானத்தின் உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும் உட்பட்டாக வேண்டும். அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும் விமானம் செல்லாது இருக்கமுடியாது. பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின் போக்கில் நிகழ்வனவற்றைப்பற்றிக் கவலையற்றவனாகப் பிரயாணி தன் அலுவலைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற உபாயம். உடல் வாழ்வு என்ற பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து பழகவேண்டும்.

தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு. மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது யார் வாழ முடியும்? உண்பது கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல் எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும் பேச்சு. கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும். விவேகி ஒருவனது விவேகத்துக்கு ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது. உடலில் பட்ட காயத்தை நாம் நன்கு கவனிக்கிறோம். அதை ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச் செலவு செய்து மருந்து முதலியன போடுகிறோம். அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல; காயத்தை ஒழித்தல் பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம். அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும் எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான். பற்றற்றவனுக்கு வினைப்பயன் இல்லை.

பின்பு பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :

12. அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித்   

அநிஷ்டம் இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என, த்ரிவிதம் கர்மண: பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள், அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது, ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

பொருள் : வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும் இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது. சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும், மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம். கர்ம பலத்தில் பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும். கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை; பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.

எடுத்த பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்; இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும் நிலையில் இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம். அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும் ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள். நிழல் போன்று உடல் அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம் நடைபெறுகிறது. ஆனால் அதை ஜீவன் முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.

தியாகியல்லாதவர்கள் இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும் இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம். தூங்கி எழுந்திருப்பது போன்றவை ஜனன மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான். செத்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன் தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது. இங்கு இவ்வுலகில் இருக்கும் போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று வாழ்பவர் உண்டு. சுவர்க்க வாழ்வை இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும் உளர். இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது.

கர்மத்துக்குத் தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது. அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான் உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா? இக் கேள்விக்கு விடை வருகிறது :

13. பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்   

மஹாபாஹோ-பெருந்தோளாய், க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில், ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு, ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன, மே நிபோத-(அவற்றை) என்னிடம் கேட்டுணர்.

பொருள் : எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.

சாங்க்ய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம் வேறு. ஆறு சாஸ்திரங்களில் அது நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது விளக்குகிறது. வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில் ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று இருக்கிறது. அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது. ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு வெளியில் வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன் கர்ம மயமான உலகில் இருக்கும்போதே கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது :

14. அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்   

அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும், கர்தா ச-செயலை செய்பவன், ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள், விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).

பொருள் : அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.

ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன் இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள், சக்கரங்கள். இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில் வைத்திருப்பதைக் காணலாம். மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது. மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது. மண்ணின்மேல் நீர் இருக்கிறது. விண்ணில் காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப் பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது. தொழிற்சாலை அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச் சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான். சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும் கருவி முதலியன அதன் இந்திரியங்கள் ஆகின்றன. அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல் எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது. பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம். அதை ஓட்டும் சாரதி அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான் உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.

விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல். ஆகையால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை ஏற்றுக்கொண்டு அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன. பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன. பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது. அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.

15. ஸரீரவாங்‌மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ:   

நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும், யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும், ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும், தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.

பொருள் : மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.

வெவ்வேறு காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார் வண்டியைக் கொலை, களவின் பொருட்டு ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார் அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது. களியாட்டத்தில் வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்குதற்கும் அதே வாகனம் உதவுகிறது.

கிட்டத்தட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம். தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது. செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல் வாழ்வு பயன்படுகிறது. இதே உடலத்தைத் தேவாலயமாகப் பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம் தர்மத்துக்கு உடன்பாடானவைகள். ஆகவே அவைகள் நியாயமானவைகள். அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச் செய்தற்கும் இவை காரணங்களாகின்றன. இவ் ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய எச்செயலும் நடைபெறுவதில்லை.

உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில் திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும் தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.

இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :

16. தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஸ்யதி துர்மதி:   

து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில், ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை, தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய, ஆத்மாவை, கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

பொருள் : இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

இக்கோட்பாட்டை அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம். மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களும் அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன. வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து உதவியது பூமி. பிறகு வண்டி ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார் வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி சம்பந்தப்பட்டதல்ல. அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது. வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக் கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.

எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன. மேலே சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள். ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழுகிறது. எங்கும் வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட ஆகாசம் போன்றது என்றாலும் அது ஆகாசம் ஆகாது. ஆகாசம் அசைவற்றது. வாயு அசையும் தன்மையது. இங்குத் தெய்வம் என்று சொல்லுவது சித் ஆபாசனாகிய ஜீவாத்மா. அது சேதனம் போன்று தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே. ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித் ஆகாசத்தில் அது தோன்றி, நின்று பிறகு நீங்குகிறது. ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது தோன்றிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆத்ம சொரூபத்துக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம். புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை. ஆகையால் அவன் உண்மையைக் காண்கிறானில்லை.

17. யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே   

யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ, யஸ்ய புத்தி ந லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன், ஸ: இமாந் லோகாந்-அவன் இந்த உலகங்கள் அனைத்தையும், ஹத்வா அபி ந ஹந்தி ந நிபத்யதே-கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்.

பொருள் : நான் எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.

தன்னைக் கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான். நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன் போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான். மற்று, இதே செயல் உலகில் உண்மையாக நிகழ்கிறது. பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை. வாஸ்தவத்தில் நிகழ்ந்த கொலைச் செயலானது அதில் சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது. இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின் செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக் கொன்றான். ஆயினும் கொன்றவனாக அவன் தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன. பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த செயல்.

கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல. இனி, அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.

ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதன்று. அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில் உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற செயலிலே கட்டுண்டு போவதில்லை. கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.

புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும் செய்துவருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷிமாத்திரமாகத்தானிருக்கிறானென்றும் சாங்கியதர்சனம் கூறுகின்றது. மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.

18. ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ:   

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன, கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும், கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.

பொருள் : அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.

அறிவு அல்லது ஞானம் என்பது இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது ஞேயம் என்பது பொதுவாயுள்ள உலகப் பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன். இம்மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும். அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால் அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது. அத்தகையவன் எதை அறிகிறான் என்ற கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோன்று திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது. கர்மத்தில் இனியது எது, இன்னாதது எது என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.

கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய இவை அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்தும் புறக்கருவிகளாம். இவைகள் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன. கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம் ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன. ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள். படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய முடியும். அவனது உடலும் உள்ளமும் சேர்ந்தே வளரவேண்டும். ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான். முயன்று வினையாற்றும்பொழுது அது ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது. ஆக, ஞான திரிபுடியும் கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.

ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை வருகிறது :

19. ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி   

குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே, ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச-ஞானம், கர்மம், கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால், த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும் என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன, தாநி அபி யதாவத் ச்ருணு-அவற்றையும் உள்ளபடி கேள்.

பொருள் : குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.

ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர் இயற்றியது. பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம். ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம் சொல்லுவதில்லை. பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது. முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது. அவைகளை உள்ளபடி கேள் என்று பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும் அவைகள் ஒவ்வும் என்பதாம்.

அதிகாரி பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும். உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின் பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது. தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே. உத்தம அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை விளங்குகிறது. அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம் வெவ்வேறு வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக மந்த அதிகாரிக்கும் ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.

20. ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்   

ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான, ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும், அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை, ஈக்ஷதே - காணுகிறானோ, தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்தி-அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி.

பொருள் : பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

பிரகிருதியின் கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா காரியங்களே. அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து. ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது. ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து; கூடுதல் குறைதல் என்பது அதற்கு இல்லை. ஆகையால் அது அழியாதது. ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை. அங்ஙனம் வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக வடிவெடுக்கவில்லை. துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி அறிவது சாத்விக ஞானமாம்.

காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும்கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.

21. ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்   

து யத் ஜ்ஞாநம்-ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக, ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும், ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள், ப்ருதக்த்வேந வேத்தி-பிரித்துக் காணும், தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்தி-அந்த ஞானம் ராஜசம் என்றுணர்.

பொருள் : உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.

ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள் இருக்கின்றன வென்றும் அறிவது ராஜஸ அறிவு. பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம். தாதுவில் படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம். அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை. அழுக்கு நீங்கப்பெற்ற பின் தூய தங்கம் ஒரே பாங்குடையது. இது இன்ன தேசத்துத் தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது. உபாதிபேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு. உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்ம சொரூபம் யாண்டும் ஒன்றே என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை. வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.

22. யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்   

து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை, க்ருத்ஸ்நவத் ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும், அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும், அல்பம் ச-அற்பத் தன்மை உடையதும், தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று கூறப்படும்.

பொருள் : காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.

பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது. கல்லால் அல்லது மரத்தால் செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர். அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும். ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும். தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும், கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறியான். விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர். புல்லறிவாளர்க்கு இது விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால் அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது. உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று விளைவதில்லை. ஆக, அது அற்பமானதென்று இயம்பப்படுகிறது.

23. நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே   

யத் கர்ம-எந்த செய்கை, நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி, அபலப்ரேப்ஸுநா-பயனைக் கருதாமல், அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி, க்ருதம்-செய்யப் படுகிறதோ, தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக மெனப்படும்.

பொருள் : பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.

சுவாசிப்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது. ஒருவனுக்கு நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது. கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய கர்மமாகும். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய கர்மமாகாது. அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி சமுதாயத்தில் எல்லார்க்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய மேலான கடமையுண்டு. அதை முறையாகச் செய்யவேண்டும்; சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும். பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும். பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும் கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான். அது சாத்விகமான கர்மமாகும்.

சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை. கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான். இரவில் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.

24. யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந:
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்   

து யத் கர்ம-ஆனால் எந்த செயல், புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால், வா ஸாஹங்காரேண-அல்லது அகங்காரமுடையவனால், பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை, தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது ராஜசம் எனப்படும்.

பொருள் : விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.

ஆசையில் இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துணைபுரிவது. அருள் தாகம், சீலத்தில் விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும் ஆசைகளாகின்றன. ஆனால் மனிதனை உலக பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான ஆசைகளை அகற்றவேண்டும். முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும். ஆனால் பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும் யந்திரமாய் மாறிவிடலாகாது. அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.

சரீரம் உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது, கொழுக்கச் செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும். கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி அதனால் அனர்த்தமாய்ப் போகிறது. தனக்கு நிகரானவர் யார் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து உண்டானது. சரீரம் ஈசனுடைய ஆலயம் என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.

துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது; என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற அகங்காரந்தான்.

25. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே   

யத் கர்ம அநுபந்தம்-எந்தச் செய்கையின் பின்விளைவையும், க்ஷயம்-அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், ஹிம்ஸாம்-துன்பத்தையும், பௌருஷம் ச-செய்வானது திறமையையும், அநவேக்ஷ்ய-கருதாமல், மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ, தத் தாமஸம் உச்யதே -தாமச மெனப்படும்.

பொருள் : செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.

தமோகுணம் நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று விளைவது நன்மையா, கேடா என்று எண்ணிப்பார்க்கும் நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள் நஷ்டமும் சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது. தான் படைத்துள்ள திறமையானது தான் எடுத்துக்கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான். விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.

மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள். கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும். அவ்வித எளிய மனதை யுடையவர்க்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம். ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு. பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது. எப்பொழுதும் மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக மனதிலே விசாரணை செய்து பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.

ஞானத்தையும் கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.

26. முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே   

முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும், அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும், த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும், ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும், கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.

பொருள் : நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.

எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான். எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான். அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்; அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை. தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.

பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.

கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல, கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.

27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:   

ராகீ-வேட்கையுடையோன், கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன், லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்), ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன், அஸுசி:-தூய்மை யற்றோன், ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன், கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்

பொருள் : வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக்கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான். அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும், பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை. விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான். வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.

ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.

வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச் சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும் மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.

28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோऽலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே   

அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன், ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன், ஸட:-வஞ்சகம் உடையவன், நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன், விஷாதீ-கவலை கொண்டவன், அலஸ:-சோம்பேறியும், தீர்கஸூத்ரீ ச-காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், கர்தா தாமஸ உச்யதே - இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்

பொருள் : யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.

அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன். வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான். பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான். செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும் தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.

ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன. ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையைவிட்டுத் தப்பித்துக்கொண்டு போய்விட்டன. உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர். 1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.

அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:

29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய   

தநஞ்ஜய-தனஞ்ஜயா, குணத: ஏவ-குண வகையால், புத்தே: த்ருதே: ச-புத்திக்கும் மன உறுதிக்கும், த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை, அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும், ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.

பொருள் : குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.

திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால் அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.

செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது. அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது. அதுபோன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.

உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன. அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும். மூன்றாவதில் தண்ணீரே நுழையாது. முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன். இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும். மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.

அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :

30. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ   

பார்த-அர்ஜுனா, யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச-எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம், கார்யாகார்யே பயாபயே ச-செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தம் மோக்ஷம் ச வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும், ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.

பொருள் : தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.

பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது. மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால் மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது. தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம். விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது. தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை. அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது. பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன. அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.

இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க, நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி, மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும், ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது. ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம். எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி, அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது ! குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப் போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது. மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை. வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும் அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?

31. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ   

பார்த-பார்த்தா. யயா தர்மம் அதர்மம் ச-எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும், கார்யம் அகார்யம் ஏவ ச-செய்யத் தக்கது, தகாதது, அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத, ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.

பொருள் : தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.

அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத் தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான். தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல். ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.

ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது. அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான். ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்; அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்; வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான். தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்; ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான். வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது. காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன். முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும் உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான். பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும். பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான். கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும். நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான். ரஜோகுணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.

32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ   

பார்த-பார்த்தா, யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய், அதர்மம் தர்மம் இதி ச-அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும், ஸர்வார்தாந் விபரீதாந் ச-எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக, மந்யதே-நினைக்கிறதோ, ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.

பொருள் : பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன் என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு. அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை; துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது. கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை; சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர். கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது. வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து. விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர். ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும், குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள். சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.

இனி, திருதி விளக்கப்படுகிறது
 


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #25 on: April 20, 2012, 12:56:12 PM »
33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ   

பார்த-பார்த்தா, யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால், யோகேந-யோகத்தின் மூலம், மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை, தாரயதே-நிலை நிறுத்துகிறானோ, ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.

பொருள் : மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.

திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே. நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது. அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது. அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது. அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது. அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது. நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும். இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும். ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது. ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும், கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி நிற்பதுபோன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது. அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.

34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேऽர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ   

து பார்த-ஆனால் பார்த்தா, அர்ஜுந-அர்ஜுனா, பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன், யயா த்ருத்யா-எந்த உறுதியினால், ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு, தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ, ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.

பொருள் : பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.

புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது. தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும் சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம். காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்; இது எவ்வளவு உறுதியாக மனதைப்ற்றிப்பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது. உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான். அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது. சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான். அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது. இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான். மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது. அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன. இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன. அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம். சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன. வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது. உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது. நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம். பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு. ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.

தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும் வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா? அதுபோல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன் ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால் அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.

35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ   

யயா-எந்த (மன உறுதியினால்), ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும், விஷாதம்-ஏக்கத்தையும், மதம்-செருக்கையும், ந விமுஞ்சதி-விடமுடியவில்லையோ, பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

பொருள் : பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது. கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம். அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது. அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.

தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன். தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும். துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது. ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது. தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று. அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான். ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான். ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை. எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.

திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை. அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும். செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும். செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது. பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள். மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று. தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும். இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை. இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்

36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி   

பரதர்ஷப-பாரதக் காளையே! இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை, மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள், யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, து:காந்தம் ச நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.

பொருள் : பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை. அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு. மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது. மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது. இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது. ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது. அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு. அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம் பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம். அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது. அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும். துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.

37. யத்ததக்ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்   

யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய், தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ, தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது, தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.

பொருள் : எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது. பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது. அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.

பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம். ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும் இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும் நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும். யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.

முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர். ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான். அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர். அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து, மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம். அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்! அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது. இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது. வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது. இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.

பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள். ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள். ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா? அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.

இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.

38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேऽம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்   

யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால், அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து, பரிணாமே விஷமிவ - விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ, தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.

பொருள் : விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.

இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது. வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது. வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால் புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது. செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை. அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது. ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.

வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.

39. யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்   

யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச-எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும், ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் - உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும், தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,

பொருள் : தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது. கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது. மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது. வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன. அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும் தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.

ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள்தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டின;õலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.

40. ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:   

ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும், ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும், முக்தம்-விடுபட்ட, யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ, தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ, திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயொ, புந: ந அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.

பொருள் : இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.

புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில் அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு. ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது. பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.

ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.

இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :

41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:   

பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே, ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச-பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய, கர்மாணி-தொழில்கள், ஸ்வபாவப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி, ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.

பொருள் : பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.

ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது. குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது. அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது. ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம். சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது. ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும். பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு. இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.

சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று. ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு. பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது. அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு. அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை. ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும். இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :

42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் க்ஷõந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்   

ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும், ஸௌசம்-தூய்மை, க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆஸ்திக்யம்-ஆத்திகம், ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ - ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும், ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

பொருள் : அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம். மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம். எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம். ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது. வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.

கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில். தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன. புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான். துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான். சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான். ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம். அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான். எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று. எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான். ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.

43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம்   

ஸௌர்யம்-சூரத் தன்மை, தேஜ:-ஒளி, த்ருதி:-உறுதி, தாக்ஷ்யம் ச-திறமை, யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை, தாநம் ஈஸ்வரபாவ: ச-ஈகை, இறைமை (ஆளும் தன்மை), ஸ்வபாவஜம் க்ஷõத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

பொருள் : சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது. நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான். அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான். பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால், அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான். இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை. சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.

கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப்பட்டிருக்கிறான். பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில் அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.

எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும் மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது. சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம். ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான். பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல். குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன் யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது. இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும். இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம். எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும் அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள். ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு. இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான். பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான். பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.

44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்   

க்ருஷி கௌரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம், வைஸ்யகர்ம ஸ்வபாவஜம் - இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம், பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல், ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

பொருள் : உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல் ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப் பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள். இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள். இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம். இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும், அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம் பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும். கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.

பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான். இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள் பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள். அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம். உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும் உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.

இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள் பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம். பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள். மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும் நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன். இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.

கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம். ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில் சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன். சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும். சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன். சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால் அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான். நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.

நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால் இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.

45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு   

ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில், அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான், ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன், யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று, தத் ஸ்ருணு-அதைக் கேள்.

பொருள் : தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.

பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே. ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான். அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று. தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன் தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான். படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம் அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும். வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால் மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:

46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:   

யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ, யேந இதம் ஸர்வம் ததம் - எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ, தம்-அந்த பரமாத்மாவை, ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும், மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.

பொருள் : உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை. ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான். ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.

ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர். கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர். செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம். தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம். இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான். அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான். அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம். அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது. உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.

தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன. தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.

47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்   

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று, ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை, கில்பிஷம் ந ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.

பொருள் : பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.

சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது. அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம். துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது. போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.

வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது. விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது. அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான். உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள். எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது; பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது. தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது. அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.

48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:   

கௌந்தேய-குந்தி மகனே, ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும், ந த்யஜேத்-கைவிடலாகாது, ஹி தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல, ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும், தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.

பொருள் : குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும். அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்; அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்; மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம். பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை. அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ? தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு. எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும் உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம். காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது. வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது. தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில் கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும். ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.

தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :

49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி   

அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன், விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக, ஜிதாத்மா-தன்னை வென்றவன், ஸர்வத்ர-எங்கும், பரமாம் நைஷ்கர்ம்யஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி), அதிகச்சதி-அடைகிறான்.

பொருள் : யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன். அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான். மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்; அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன. அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டுபண்ணவில்லை. பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது. பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர், உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம். கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம். யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும். போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம். அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது. ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான். ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான். நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.

50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா   

ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை, யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன், யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ, ததா-அந்த நிலையை, ஸமாஸேந ஏவ-சுருக்கமாக, மே நிபோத - என்னிடமிருந்து தெரிந்து கொள், கௌந்தேய-குந்தி மைந்தனே!

பொருள் : சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.

சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது. சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன. பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது. பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம். அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது. மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை. வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன. ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.

எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது. மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது. மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை. எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.

யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன். பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன. ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.

51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச   

விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், த்ருத்யா ஆத்மாநம் நியம்ய ச-உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து, ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச-விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.

பொருள் : தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை. பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால் அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும். புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும். சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும். உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான். மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை. உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான். அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :

52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித:   

விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய், லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி, நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து, வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.

பொருள் : தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான். பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான். யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான். மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது. குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான். மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும். அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா. மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும். அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது. உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது. வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.

53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே   

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல், விமுச்ய-விடுத்து, நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.

பொருள் : அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.

மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும் எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும். ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான். பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம். ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று. தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு. அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது. இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர். காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே. உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது. ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது. பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில் அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும். பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான். அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :

54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்   

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன், ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

பொருள் : பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்; இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது. முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது. தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம். இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது; தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.

ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான். அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின. பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் ! விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும். ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு. பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும் ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை; தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை. ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.

55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்   

மாம் ய: ச-என்னை யார் எனவும், யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும், பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான், தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர், ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

பொருள் : யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு. டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில், அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும். அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.

பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது. ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது. உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான். இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.

ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.

56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்   

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன், ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும், ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை, அவாப்நோதி-எய்துகிறான்.

பொருள் : எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன. சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது. தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை. தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது. அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம். ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை. ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம்; நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம். அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம். அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.

கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :

57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ   

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம், சேதஸா-அறிவினால், மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு, புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று, மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு, ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

பொருள் : அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம் அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில் அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில் அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில் அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம். தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.

புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான். காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான். சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது. எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது. ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:

58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி   

மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய், ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், தரிஷ்யஸி-கடந்து செல்வாய், அத அஹங்காராத் த்வம் ந ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.

பொருள் : என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.

உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும் இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம். நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம். வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும். நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது. ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக்கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.

இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும். அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :

நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.

என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.

அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :

59. யதஹங்காரமாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி   

யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு, ந யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ, தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது, ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.

பொருள் : நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை. பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில் தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை. ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :

இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.

தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.

அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :

60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோऽபி தத்   

கௌந்தேய-குந்தியின் மகனே! யத் மோஹாத் கர்தும் ந இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால், நிபத்த:-கட்டப் பட்டு, அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

பொருள் : இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது. அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான். பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது. நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் ! அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான். காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது. பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.

மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை. அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது. உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை. தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும் மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ, தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும். மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.

வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.

« Last Edit: April 20, 2012, 01:02:37 PM by Anu »


Offline Anu

Re: பகவத்கீதை
« Reply #26 on: April 20, 2012, 12:59:37 PM »
வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:

61. ஈஸ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா   

அர்ஜுந-அர்ஜுனா, யந்த்ராரூடாநி ஸர்வபூதாநி-உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும், ஈஸ்வர:-ஈசுவரன், மாயயா ப்ராமயந்-மாயையினால் சுழற்றிக் கொண்டு, ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸே-எல்லா உயிர்களின் உள்ளத்தில், திஷ்டதி-நிற்கிறான்.

பொருள் : அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

கிருஷ்ணனும் அர்ஜுனனும் போர்க்களத்துக்கு வந்த கோலமே இக்கோட்பாட்டை விளக்குகிறது. ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான். அந்த ரதம் உடலுக்குச் சமானம்; அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது. பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை. சண்டை செய்ததைப் பற்றிய உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. நிகழ்ந்தது தன் செயல் என்று எண்ணியிருந்த அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன் செயல் என்று அறிந்து கொள்ளக் கடமைப்பட்டிருந்தான். கிருஷ்ணன் தேர் ட்டினான்; ஆனால் ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை. அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.

அர்ஜுனன் என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்படுகிறது. தூய மனமுள்ளவன் உண்மையைத் தெரிந்துகொள்ள வல்லவனாகிறான். ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது. இயங்குகின்ற மாறை அதன் வசப்பட்டிருக்கிறவர்களையெல்லாம் இயக்குகிறது. சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள். அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று அவிவேகிகள் எண்ணிக்கொண்டு அதைச் செய்வேன் என்றும், இதைச் செய்யமாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள். அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர். ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில் நான் ஆடுகிறேன் என்ற மன நிலை வேண்டும். விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக் கொண்டு ஈசன் தன் செயலைச் செய்து கொள்கிறான் என்ற எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை முறையாகக் கையாளுவதாகும்.

பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை. ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல ஈசுவரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது. ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.

கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது :

62. தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்   

பாரத-பாரதா, ஸர்வபாவேந-எல்லா வடிவங்களிலும், தம் ஏவ ஸரணம் கச்ச-அவனையே சரணெய்து! தத்ப்ரஸாதாத்-அவனருளால், பராம் ஸாந்திம் ஸாஸ்வதம் ஸ்தாநம்-பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை, ப்ராப்ஸ்யஸி-அடைவாய்.

பொருள் : அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது செயற்கரிய செயலாகும். உடலைத் தன்னுடையது என்று கருதுதல், தன் செயலுக்குத் தான் கர்த்தாவென்று நினைத்தல், உலக நடைமுறையில் தனக்குத் தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன. அது தஞ்சமாகாது. கடலில் அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன. அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது. அலைக்கிருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற வடிவமும் அத்தகையது. அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது. ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை. இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.

பாண்டவர், விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்திருந்தனர். உடன் பிறந்த சகோதரர்கள் தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர். குகன், சுக்ரீவன், விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர். அங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே உண்டாயிற்று. கைகேயி, வாலி, ராவணன் முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.

ஈசனுடைய அருள் என்னும் காற்று சதா வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம் ஒப்படைத்தவர்கள் அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள். காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை. அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு அல்லல் இல்லை. அவன் கர்மம் செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது. சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன.

ஸ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங்கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன், அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்? கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.

63. இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா
விம்ருஸ்யைததஸேஷேண யதேச்சஸி ததா குரு   

இதி குஹ்யாத் குஹ்யதரம் ஜ்ஞாநம்-இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை, மயா தே ஆக்யாதம்-என்னால் உனக்கு கூறப்பட்டது, ஏதத் அஸேஷேண விம்ருஸ்ய-இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து, யதா இச்சஸி ததா குரு-எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

பொருள் : இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

விளங்காத ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும் பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும் நமக்கு விளங்குகிறதில்லை. அது ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி இக்காலத்தில் நாம் அறிந்துள்ள பல மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். மின் சக்தியை உண்டு பண்ணும் முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து கிடந்த விசையானது இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை எத்தகையதென்றும், அதை எப்படி உண்டுபண்ணுவது என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்றும் புகட்டுவது சாஸ்திரம். விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த சாஸ்திரங்கள் இருக்கின்றன. மானுட வாழ்க்கையைப் பற்றிய சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும் யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது அது உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது. இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது அது உடன்பாட்டு முறை. இன்னதைச் செய்யாதே என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை முறை. ஏன் ஒரு விதத்தில் ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில் ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும் அது எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை. குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும் ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.

மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார். அவர் புகட்டியவைகளை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு அவர் அன்புடன் அளித்தார். உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது. உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான். உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது. அடிமைத் தனத்தில் அடக்கி வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது. புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான பிறகு, அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன் அனுமதி கொடுக்கிறார். சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.

மனிதனுடைய முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப்பெறுகின்றன என்ற முடிவான உண்மையை இனி மூன்று சுலோகங்களில் பகவான் பகர்கின்றார். 

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்   

ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய, மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை, பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள், மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன், தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

பொருள் : மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும். இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது. சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான். அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது- பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம். வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது. ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது. எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன். உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத் தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன் கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டுபண்ணும் கானமோ மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது. பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான். இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல, பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே   

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக, மத்பக்த:-என் தொண்டனாகுக, மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க, மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக, மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய், ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

பொருள் : உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான் பகர்கிறார். சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் ஆங்கில்லை. பரமாத்மா உடல் தாங்கி வந்து உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது ஜீவிதம் அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது. நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம். ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளும் பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம்.

வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது குறி. கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு அவனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம். அவன் யாண்டும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது நமது பண்படாத மனது. அந்த மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு பல காரியங்களுக்கு உதவிவந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது அநித்தியப் பொருள்களை நாடிநின்றது. ஆனால் அது கடவுளை அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது. உள்ளம் அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாம். அவன் மீது பக்தி பண்ணுமளவு மனது மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான். பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன் இடையறா நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப் பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார்.

ஒன்பதாவது அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை என்பதைப் பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர பகவான் தாமே முன் வந்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.

பகவான் கூறும் அந்த உறுதிமொழிதான் யாது? விடை வருகிறது :

66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:   

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு, மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ - என்னையே சரண் புகு, ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும், அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன், மா ஸுச:-துயரப்படாதே.

பொருள் : எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம். அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள், தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை; ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல. சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி. ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது. தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது. அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல். கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.

பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை. ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள்படுத்துவதில்லை. தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.

அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!

பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால் ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும் அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது. தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.

இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம். எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள். அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா. சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான். பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை. ஞானியடையும் சரணாகதி இதுவே.

யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது. சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.

சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை. எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டுவந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும் மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது. அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.

தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம். நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது. நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால் அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது. ஸ்வதர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்துபோனால் எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.

தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது. ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை நீக்கிவிட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து ஜீவபோதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம். பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம். ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை. சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.

கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன் கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான். இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து, அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும். பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.

பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய்ப் புகைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.

இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது. இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும் பயன் அடைய வல்ல அதிகாரி யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :

67. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி   

தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும், அதபஸ்காய-தவமிலாதோனுக்கும், அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும், அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும், ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும், ந வாச்யம்-சொல்லாதே.

பொருள் : இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.

வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும். ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார். கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கையில்லாதவர்களுக்குக் கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது. வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும். பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது. பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது. ஈசனிடத்தும் உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான். தோன்றாத் துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள் தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன் என்று இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும் தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்ததுபோன்று எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்துகொள்ளமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது. அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு என்றும் பொருள்படுகிறது. தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது.

மழைத்தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது. அதுபோல ஈசுவர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.

ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது:

68. ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:   

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி, இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை), மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ, மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான், அஸம்ஸய:-ஐயமில்லை.

பொருள் : இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.

மனிதன் பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது. தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை முதல் சான்றாக எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும் உயிர்வாழ முடியாது. உணவைத் தனக்கென்று தேடிவைத்துக் கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு. ஒருவன் பிறர்க்கு உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான். மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது தனக்கென்றே தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி நினைப்பவன் அடைகிற உடல் நலனை மற்றவன் அடையமாட்டான். இதை ஒவ்வொருவனும் தன் சொந்த அனுபவத்தில் காணலாம்.

அடுத்தபடியாக அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள் நன்கு கற்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது. தனக்கு என்று கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான். பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.

பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே பகவத் சேவையாகிறது. தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை. பகவத் மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும் அறிவும் வளர்கின்றன. அத்தகைய பேச்சாளன் பணிவுடன் செய்யும் பகவத் கைங்கரியமாக அது கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில் விளையும் பயனாகும்.

பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
சாஸ்திரங்களின் உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்? விடை வருகிறது:

69. ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரியக்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி   

தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம-அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன், மநுஷ்யேஷு கஸ்சித் ச ந-மானிடருள்ளே வேறில்லை, புவி தஸ்மாத் மே-உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு, ப்ரியதர: அந்ய:-எனக்கு உகந்தவன் வேறு எவனும், ந பவிதா-ஆக மாட்டான்.

பொருள் : மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.

எல்லாச் செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையையேயாம். அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம் தனிப்பெருமை பெற்றுள்ளது. இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது. வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது. அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன. அதாவது கடவுளை அடைதற்கான வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன. அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நல்லான் ஆவது திண்ணம். ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை. அப்படிப் புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும் வேறு யாருமில்லை. கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.

வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது, பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது. அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம் மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.

பிறர்க்கு எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால் ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை வருகிறது :

70. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:   

இமம் ஆவயோ: தர்ம்யம் ஸம்வாதம்-நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை, ய: அத்யேஷ்யதே-எவன் கற்றறிகிறானோ, தேந ச அஹம்-அவனாலும் நான், ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம்-ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன், இதி மே மதி:-இஃதென் கொள்கை.

பொருள் : நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.

கேள்வியால் கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும் கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். கீதையை ஓதி அறிவது பகவத் விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான். உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம் வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது. வாழ்க்கையைப்பற்றிய மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான். அக்கோட்பாட்டின்படி வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான். நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர் ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே. கீதையை ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது. ஆக, அது ஞான யக்ஞ ஆராதனை என்னும் பெயர் பெறுகிறது.

தனக்குத் தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை. அப்பொழுது அவன் என் செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :

71. ஸ்ரத்தாவாநநஸூயஸ்ச ஸ்ருணுயாதபி யோ நர:
ஸோऽபி முக்த: ஸுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்   

ய: நர:-எந்த மனிதன், ஸ்ரத்தாவாந்-நம்பிக்கை உடையவனாக, அநஸூய: ச-பொறாமை போக்கியவனாக, ஸ்ருணுயாத் அபி-கேட்பது மட்டுமே செய்வானெனினும், ஸ: அபி முக்த:-அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்யகர்மணாம் ஸுபாந் லோகாந்-புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை, ப்ராப்நுயாத்-எய்துவான்.

பொருள் : நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.

உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை அறிந்து ஒருவன் உணவு உண்கிறான். மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது விருப்புடன் அதைப் புசிக்கிறான். அறிந்தவன் அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று பெறும் நன்மை ஒன்றேயாம். அதே விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மைகளையும் அடைகிறான். பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன் நன்கு பதிகிறது. பக்தி விசுவாசத்துடன் கேட்பதால் இன்னொருவன் மனதில் அது பதிகிறது. இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர் ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். பகவத் விஷயங்களைக் கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது. பக்தி சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.

மாணாக்கனுக்கு எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு. அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது கேட்பதாவது:

72. கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய   

பார்த-பார்த்தா, ஏதத் த்வயா ஏகாக்ரேண சேதஸா-உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு, கச்சித் ஸ்ருதம்-கேட்கப் பட்டதா? தநஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ:-தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம், கச்சித் ப்ரநஷ்ட:-அழிந்து விட்டதா?

பொருள் : பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

ஞானோபதேசம் புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது ஈண்டு விளங்குகிறது. ஒருமை மனது உண்மையைத் தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும் சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத் தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும் குவிந்த மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை உள்ளபடி வாங்கிக்கொள்கிறது. புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும் என்பதே புகட்டுபவரது எண்ணம்.

குவிந்த மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி பெறுகின்றன. ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக்கொண்டிருக்கிறது. அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது. ஞான வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது. அக்ஞான இருளில் அதே பொருள் வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு வடிவத்தைத் திருடன் போலீஸ்காரன் என்று நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன் திருடன் என்று எண்ணினான். அச்சம் கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு என்று பொருள்படுத்தினான். வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த ஒரு விவேகி அத்தகைய மயக்கம் ஒன்றும் கொள்ளவில்லை. அதை ஒரு மரக்கட்டை என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம் பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம் தானே அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.

நல்லாசிரியரை அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :

அர்ஜுந உவாச

73. நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ   

அர்ஜுந உவாச அச்யுத!-அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா, த்வத்ப்ரஸாதாத் மோஹ: நஷ்ட:-நின்னருளாலே மயக்கம் அழிந்தது, மயா ஸ்ம்ருதி: லப்தா-நான் நினைவு அடைந்தேன், கதஸந்தேஹ: ஸ்தித: அஸ்மி-ஐயம் விலகி நிற்கிறேன், தவ வசநம் கரிஷ்யே-நீ செய்யச் சொல்வது செய்வேன்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த் தட்டின் மீது அர்ஜுனன் சும்மா இருந்துவிட்டான். அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம் கேட்ட பிறகு ஒரு சிறந்த செயலைச் செய்தான். மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான். விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும் உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால் அது தானே அக்கினி சொரூபத்தை யடைகிறது. அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான். அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும் தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை; அதைப்பற்றி நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில் குதிக்கின்ற விட்டில் பூச்சி அதன் விளைவைப்பற்றி நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது. செயற்கரிய அச்செயலை தனஞ்ஜயன் செய்தான்.

அத்தகையவனுக்கு கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும் நலம் தரும் அருள் விருந்து. எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே உற்றதுணை. பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில் ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள் ஒன்று வேறு யாருக்கோ உதவுவதாக முடிந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம் கூடி மற்றோர் இடத்தில் போய் அது பொழிவது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை. ஒருவன் பொருட்டு உதித்த அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும் யாண்டும் அருட்பேறு ஆயிற்று. யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ அவன் அதை வாய்மடுத்து உண்டு பெரும் பேறு பெறலானான். அதன் விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில் அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான். அவன் பெற்றபேறு எது என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது. அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும் பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :

அச்யுதா என்று தன்னை ஆட்கொண்டவனை அவன் அழைக்கிறான். அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன் எனப் பொருள்படுகிறது. தீயில் குதித்த வீட்டில் பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது. அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும் பிறவி என்னம் படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன் பெற்ற பேறு அதுவே.

மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது என்பது முதல் வாக்குமூலம். மயக்கம் வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய ஆள் ஈரடியாலே மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத் தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப் பிடித்திருந்தது. இவ்வுலக வாழ்வு அவனுக்கு ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது. அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை; தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது.

ஸ்ம்ருதி: மயா லப்தா - ஞாபகம் என்னால் அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம். மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால், எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது. மயக்கம் தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம் வருகிறது. தான் ஏன் மண்ணில் கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்; எதைப் பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப் பற்றி நினைவு கூர்கிறான். தனது பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால் ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு உறுதியான ஞாபகம் வருகிறது. அது தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய ஞாபகமாம். ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன் என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.

த்வத் ப்ரஸாதாத் - உமது பிரசாதத்தால் அல்லது உமது அருளால் என்பது மூன்றாவது வாக்குமூலம். மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன் கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம். ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும் தன் சுயப் பிரயத்தனத்தாலன்று. அது சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன் செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால் விளைந்தது. குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு உடையவன் ஆனான். முழுமனதோடு அதை எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான். ஜீவாத்மா பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள் என்று இயம்புகிறான். தன் முயற்சியின் சிறுமையும், அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.

ஸ்தித: அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள். இது நான்காவது வாக்குமூலம். புயல் காற்றும் பெருமழையும் சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம் அசைகின்றன, ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை. பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை. அது உறுதியாக நிற்கிறது. ஞானம் அங்ஙனம் உறுதி பெற வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன் ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய் உள்ளான். தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது. பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.

கத ஸந்தேஹ : - சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம். ஆத்ம சொரூபத்தை அனுபூதி வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும் உயிரோடிருக்கும் ஒருவனுக்குத் தன் உயிர் வாழ்க்கையைப் பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி பெற்றவனுக்கு ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.

தவ வசனம் கரிஷ்யே என்பது உமது சொற்படி செய்வேன் என்று பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம். அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில் மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது துணிந்தான். செய்வது இன்னதென்று இப்பொழுது விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று. சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும், சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும் முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

தவளைக்குஞ்சினுடைய வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும் வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து விழுந்துவிட்டால் அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும், அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.

ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது. இனி, இது மற்ற சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும் சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :

ஸஞ்ஜய உவாச

74. இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:
ஸம்வாதமிமமஸ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்   

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், இதி அஹம்-இப்படி நான், வாஸுதேவஸ்ய மஹாத்மந: பார்தஸ்ய ச-வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும், இமம் அத்புதம் ரோமஹர்ஷணம்-இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும், ஸம்வாதம் அஸ்ரௌஷம்-உரையாடலைக் கேட்டேன்.

பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.

உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும். பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன், பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து ஸஞ்ஜயன்பால் புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை. திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.

அர்ஜுனனை மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுபவர்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :

75. வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்
யோகம் யோகேஸ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷõத்கதயத: ஸ்வயம்   

யோகேஸ்வராத் க்ருஷ்ணாத்-யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து, பரம் குஹ்யம்-பரம ரகசியமான, ஏதத் யோகம் ஸ்வயம்-இந்த யோகத்தை தான், ஸாக்ஷõத் கதயத:-நேராகவே சொல்லும்போது, அஹம் வ்யாஸப்ரஸாதாத்-நான் வியாசனருளால், ஸ்ருதவாந்-கேட்டேன்.

பொருள் : யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.

ஸஞ்ஜயனுக்கு ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர். ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும் விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு யாது, அது யாருடைய அனுக்கிரகத்தால் ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.

அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :

76. ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்
கேஸவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:   

ராஜந்-அரசனே, கேஸவார்ஜுநயோ:-கேசவ அர்ஜுனரின், அத்புதம் புண்யம் ச இமம் ஸம்வாதம்-வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, முஹுர்முஹு:-மீண்டும் மீண்டும், ஹ்ருஷ்யாமி-மகிழ்கிறேன்.

பொருள் : அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.

ஸஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார் அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.

77. தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:   

ராஜந்-அரசனே! ஹரே: அதி அத்புதம்-ஹரியின் மிகவும் அற்புதமான, தத் ரூபம் ச-அந்த ரூபத்தை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, மே மஹாந் விஸ்மய:-எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது, ச புந: புந: ஹ்ருஷ்யாமி-மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.

பொருள் : அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.

பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான். சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப தரிசனத்தின் ஒரு சிறு பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டு போகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை. திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது. தனது மனதை உயிர்நிலைக்குக் கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.

78. யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம   

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ண:-எங்கு யோகக் கடவுள் கண்ணனும், யத்ர தநுர்தர: பார்த:-எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ, தத்ர ஸ்ரீ: விஜய: பூதி:-அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும், த்ருவா நீதி-நிலை தவறாத நீதியும் (இருக்கும்),
மம மதி:-என் உறுதியான கருத்து (இது).

பொருள் : கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.

இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன. தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது யோகமாகிறது. அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபைகூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன். முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும். இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான். கிருஷ்ணனுடைய யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும். இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்கவேண்டும் ! அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றியுண்டாகாது; உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது. கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.

தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம் செய்தது போன்று ஈசுவரனது திட்டத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது. யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.

கார் இருளில் கண் தெரியாது. பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை முன்னிட்டுக் கார் இருளையும் பேர் ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து கிடப்பவன் வினையாற்ற மாட்டான். சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒப்பாகமாட்டார்கள். தேகம் எடுத்திருப்பவன் தேகம் இருக்கும் வரையில் நல்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி தானே வந்தமைகிறது. இகம் பரம் ஆகிய இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது. பாரமார்த்திக வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும், சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும் கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே வேதாந்தம் அறிந்தவனாகிறான்.

ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி. எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக இருக்கவேண்டும். அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி நிச்சயமாக வந்தமையும். அதற்குமேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும் சிறப்பும் வளரும். வெற்றியையும் ஆக்கத்தையும் முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறைதவறி நடந்து கொள்ளமாட்டான். நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.

ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும் அவை நல்ல சாதனமாகின்றன. அவைகளின் சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன. ஈசுவர கிருபை சந்ததமும் நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.

சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது; ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும். அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும், ஸாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.

பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார். அவதார புருஷரோடு வருபவர்கள் நித்தியமுக்தர்களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள்.

இதி ஸ்ரீமஹாபாரதே சதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்வையா
ஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன
ஸம்வாதே மோக்ஷஸந்யாஸயோகோ நாம
அஷ்டாதசோऽத்யாய:

வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் மோக்ஷ ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.