வணக்கம்
சோதிடம் என்பது உண்மையா பொய்யா என்ற விவாதம் நடக்கின்ற வேளையில் இங்கே சோதிடம் பற்றி சில தகவல்கள் தந்துள்ளேன். இங்கே காணப்படும் தகவல்கள் பல தமிழ் இணைய தளங்களில் இருந்து பெறப்பட்டவை ஆகும். என்னைப் பொறுத்தவரையில் சோதிடம் என்பது ஒரு வழிகாட்டி மட்டுமே. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அது அவனாலும் அவனைச் சார்ந்தவர்களாலும் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே இருக்கின்றது. எடுத்த முடிவு தவறாக இருப்பின் வாழ்வும் தவறாகவே போய் விடும். எடுக்கும் முடிவுகள் சரியாக இருப்பின் வாழ்க்கையும் சிறப்பாகவே அமையும். உங்களின் வழி எது என்று தெரிந்ததும் வழிகாட்டியை எப்படி ஓரங்கட்டி விடுவீர்களோ அதேபோல் சோதிடத்தையும் ஓரம் வைப்பது நல்லது இல்லையேல் அது வாழ்க்கையையே சீர்குலைத்து விடும். தவிர அதில் கூறப்படும் பரிகாரங்கள் என்னும் பக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தவறு செய்தவன் பரிகாரம் செய்தால் சரியாகி விடுமா? என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு முட்டாள் தனம். என் குடும்ப நண்பர் ஒருவருடன் கலந்துரையாடிய போது சோதிடத்தில் சில விடயங்கள் தெரிய வந்தது. அதாவது, சோதிடங்களில் இலைமறை காயாக சில விசயங்களை இப்படி இருந்தால் சரி இப்படி இருந்தால் தவறு என்று கூறுகின்றனர். ஆனால் ஏன் அப்படி கூறுகின்றனர் என்று கூர்ந்து கவனித்தால் அது நம் உடல் அல்லது மன அமைப்பை வைத்தே கூறுகின்றனர். ஆனால் அதை புதன் சுக்கிரன்,கேது, ராகு, சனி என்று கூறி ஒரு விளக்கம் கொடுக்கின்றனர் அதுதான் புரியவில்லை. இந்த புதன் சுக்கிரன் ராகு கேதுவை வைத்து எப்படி கணிக்கின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி