உனக்கென்ன மேலே நின்றாய்......
ஊருல அவனவன் மிருகம் மாதிரி ஒருத்தர் மீது ஒருத்தர் பாய்ந்து கடித்து குதரக் காரணமான மிக முக்கியமாகக் கருதப்படும் 'கடவுள்', மனிதர்களின் ஆக்ரோஷங்களுக்கெல்லாம் காரணம் கடவுள் இல்லை என்பதும் இருக்கு என்பதும், இன்னும் அதிலும் கொஞ்சம் கொடூரமாக என் கடவுள்தான் நிஜம், உன் கடவுள் பொய் என்ற ஓலம், கடவுளே நேராக கீழே வந்து 'நான்தான் உண்மைக்கடவுள் என்னால் செய்ய முடிந்த அதிசயங்கள் இதுதான்' என்று சொன்னால் நிச்சயம் யாரும் நம்பப்போவதில்லை, அவரவர்கு தோன்றிய உருவத்தில் கடவுள்களை உருவாக்கி அதன் வேலைகள் இப்படித்தான் இருக்க முடியும் என்று ஒரு முடிவு கட்டிவிட்டு, வணங்கியும் வருகின்றர்.
கடவுள் அல்லது இறைவன் என்று மக்களால் நம்பப்படுகிறவர், மனிதர்கள் உருவாக்கிய உருவில் வந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வார்கள் என்பதனால் கடவுளும் தனது உருவத்தை இவர்கள் உருவாக்கியவிதத்தில் மாற்றியமைத்துக் கொண்டு வந்து நின்றால் மட்டுமே நம்பப்படுவார் போலிருக்கிறது, கடவுளுக்கு சோதனை(?). எது எப்படியோ நிஜமானக் கடவுள் என்பவரை உருவகப்படுத்தி அதற்காக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நடைமுறைகளை 'அவர்(?)' கவனித்துக் கொண்டிருந்தால் மிகவும் குழம்பி இருப்பார், ' நான்தான் கடவுள் உங்களையெல்லாம் உண்டாக்கியவர்' என்று எப்படி நிரூபித்தால் ஏற்றுகொள்வார்கள் என்று ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கவும் கூடும்.
ஒருசமயம் செத்துப் போனவங்க கடவுளைப் பார்த்திருந்தா, அவங்கள்ள யாரேனும் திரும்பி பூமிக்கு வந்து சண்ட போடறவங்க கிட்ட சொன்னா நம்புவாங்களோ என்னமோத் தெரியல, கடவுளே நேரில் வந்து 'போதும்பா நான் இருந்தாலும் இல்லாட்டாலும் என் வேலைய நான் பார்க்கிற மாதிரி நீங்களும் சண்ட போடாம அவரவர் வேலைய மட்டும் பாத்துகிட்டு அமைதியா இருந்தா அதுவே திருப்தி' என்று கதறி கால பிடிச்சிகிட்டு கெஞ்சி அழ வேண்டிய நிலை ஏற்ப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. கடவுள் தான் செய்துவிட்ட தப்ப நெனைச்சி ரொம்பவே வருந்திக்கிட்டுதான் இருப்பார் (மனுஷங்கள எதுக்கு உருவாக்கினோம்ன்னு) !! யாரை நிம்மதியா இருக்கவிட்டோம், கடவுள மட்டும் விட்டு வைக்க !!
இதில ஒண்ணு மட்டும் விளங்குது, மனிதர்கள் தங்களே தங்களை அழித்துக் கொள்வது மட்டும் நிச்சயம், இயற்கையால வருகிற அழிவுகளை விட மனிதர்களால் மனிதர்களுக்கு அழிவு நேருவதற்காகவே பிரிவினையைத் தூண்டும் எண்ணங்கள் தோன்றி அதன் வாயிலாக மனித இனம் அழிந்து வருகிறது என்பதற்கு தற்காலத்தில் நடந்துவரும் இனவெறி படுகொலைகள், மத போராட்டங்கள், மனிதர்களை வெறியூட்டும் கட்சிகளின் புதுவரவு. சுனாமி பேரலையோ பூமியதிற்சியோ வெடிகுண்டோ அதெல்லாம் அழிக்கறதுக்கு முன்னாடியே ஒருத்தர ஒருத்தர் அழிச்சிக்கிட்டு பூமி மொத்தமும் காலியாகிடும்.
மனிதர்களுக்கு அழிக்கும் எண்ணம் மட்டுமே மேலோங்கி அதற்க்கு கட்சி சாயம் பூசப்பட்டு, மனிதமனங்களை தன்வயப்படுத்தி இயந்திர கொலைகாரக் கூட்டமாக்கி எதையோ சாதிக்க ரத்த ஆற்றில் மனிதர்களை மிதக்கவிடும் அவலங்களுக்கு மக்கள் துணை போகின்ற சீரழிவை பார்க்கும் போது கடவுள் என்பவருக்குத் தெரிந்து போயிருக்கும் இனி இவர்களை காப்பாற்றவே இயலாது, அழிந்தொழியட்டும் என்று அமைதியாக மனிதர்களின் ஆக்ரோஷங்களை கவனித்துக் கொண்டுருப்பாரோ என்னவோ.