உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
பகலெல்லாம் அயராமல் உழைத்து உண்டு பசி தீர்த்தால் போதும் உறக்கம் கண்களை தானே இழுத்து சென்றிடும், பொழுதுபோக்கு வேறேதும் இல்லாமல் இப்படி உழைப்பை மட்டும் நம்பி வாழ்த்த மனித இனம் அறிவியலால் வளர்ச்சியடைந்த காலமிது, எதற்க்கெடுத்தாலும் இயந்திரங்கள், மனிதன் செய்த வேலையெல்லாம் இயந்திரங்கள் செய்துவிடும், வயிறு முட்ட உண்ட பின் உறக்கத்தை மறக்கச் செய்யும் எலக்ட்ரானிக் உலகமிது. கல்லூரி படிக்கும் மாணவியர் கண்ணும் காதும் கையும் வாயும் கைப்பேசியின் ஆக்கிரமிப்பு, வீட்டிலிருக்கும் வயோதிகப் பெண்களுக்கோ பெட்டிக்குள்ளே நடமாடும் ஊர்வம்பு, திண்ணை பேச்சு மாறிப் போச்சு, வாய் பேச மறந்து போச்சு.
மாவரைக்க, சட்டினியரைக்க, துணிதுவைக்க இயந்திரங்கள், போதாக்குறைக்கு காசு கொடுத்தால் போதும் இரும்பு பானைக்குள்ளே வீடு வரும் எரிபொருளும், பட்டன் தட்டி விட்டால் போதும் சுழன்றடிக்கும் குளிர்க் காற்று, காலுக்கும் கையுக்கும் உடலுக்கும் உழைப்பு ரொம்ப குறைஞ்சு போச்சு, மிதி வண்டி மாறி இப்போ நாலு சக்கரம் இரண்டு சக்கரம், வானூர்தி, எலிகாப்டர் என்றெல்லாம் இறக்கையின்றி மனிதன் பறக்கின்ற காலமாச்சு, மனித உடலுக்கு வேலை குறைஞ்சு போச்சு மூளைக்கு வேலை அதிகம் ஆகிப் போச்சு. உடலுழைப்பை நம்பிய காலம் போய் இப்போ இயந்திரத்தை நம்பும் காலமாச்சு, மனித மூளையின் வெற்றியெல்லாம் கட்டு கட்டு பண நோட்டாக மாறிப் போச்சு, அதனால் உழைப்பிற்கு கூலி சிருத்துப் போச்சு. இனி மனிதப் பேச்சு கேட்க ஆளில்லை ரோபோ மனிதன் தான் கதி என்று மாறிப்போனாலும் அசந்து போக அவசியமில்லை.
அதனால் தூக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு, உணவு முறை கெட்டுப் போச்சு, மனிதர்க்கிங்கே மதிப்பும் போச்சு, மனிதரெல்லாம் இயந்திரமாய் மாறித்தான் போனாரே, பணமீட்டும் இயந்திரமாய் மாறித்தான் போனாரோ. மரம் எதற்கு செடி எதற்கு விலங்கெதற்க்கு என்றெண்ணி அவை கொன்று பணமாய் மாற்றத் துணிந்துத் தான் அழித்தாரே. பணம் படைத்த மனிதரையும் விட்டு ஒன்றும் வைக்கவில்லை, மனிதனுயிர் கொன்று அவர் உடமைதனை பறித்துத்தான் சென்றாரே. இது கொடுமை என்றவரை சும்மா அவர் விடவில்லை கொன்றேதான் குவித்தாரே. அவர் குழுவிற்கும் புகழுண்டாம், அவர் பின்னே பலருண்டாம், மனிதஉயிரழிக்கும் குழுவிற்கும் பெரிய பெயரிட்டு இறுமாப்பு அடைந்தாரே.