ஒரு உயிரினம் எப்போது மனிதன் என்னும் வகையில் சேர்க்கப் படுகின்றது? என்ன புரியவில்லையா…? சரி, இந்தக் கேள்வியை வேறு மாதிரி கேட்கின்றேன். மனிதன் மற்ற எல்லா உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? இந்தக் கேள்விக்கு அறிவியல் ரீதியாக இலகுவாக பதில் கூறிவிடலாம். உயிரினங்களின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கும் மரபணுத் தொகையை (genome) வைத்து மனிதனையும் ஏனய உயிரினங்களையும் வித்தியாசம் கூற முடியும். ஆனால், இதில் உள்ள சுவாரசியம் என்ன தெரியுமா…? மனிதனின் மரபணுத் தொகையும், மனித குரங்குகளான chimpanzee இன் மரபணுத் தொகையும் 99 சதவீதத்திற்கு ஒற்றுமையாக இருக்கின்றது. சரி, அதை விடுங்கள், ஒரு வாழைப்பழத்தின் மரபணுத் தொகை, மனிதர்களின் மரபணுத்தொகையுடன் 50 சதவீதத்திற்கு ஒற்றுமையாக இருக்கிறது. எனவே, கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல், உண்மையில் மனிதன் பாதி வாழைப்பழம் பாதி என்று கூட கூறலாம்! கேட்க நகைச்சுவையாகத் தான் இருக்கும், ஆனால் இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.
எனவே, அடுத்த முறை உங்களைப் பார்த்து யாராவது „நீ ஒரு குரங்கு“ என்று திட்டும் போது, அதில் 99 சதவீதம் உண்மை இருக்கின்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும், நண்பர்களே! அதில் ஒன்றுமே பண்ண முடியாது!