32 கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு.
(ப-ரை) கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்புகின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படாமகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள்; கானம் - காட்டின்கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை - பெருந்தகை யாளிடத்து, நன்கு - நன்றாக, பாண் முரலும் - இசைப்பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக்கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ-று.
இப் பாட்டு நன்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாடமோதுவாரு முளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு. ‘கொடுஞ்செலவெழிலி' என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாண்மக்கள் பரிசில் கருதிப் பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின வென்றுரைக்கப்பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது நற்கு : வலித்தல் விகாரம்