காதல் - speed Breaker
எந்த வயதில் காதல் முதன் முதலில் மனதில் துளிர்த்தது என்றால், என் பெற்றோரின் முகம் எனக்கு விளங்க ஆரம்பித்த போது என்பது தான் சரியான பதிலாக இருக்கும், நான் உளமார காதலித்தது என் பெற்றோரைத்தான். காதல் என்றாலே பதினாறு வயதில் ஒரு ஆடவனைப் பற்றி வண்ண வண்ண கனவுகளுடன் கிளுகிளுப்பு ஏற்ப்படுத்துவது தான் என்பது மட்டும் காதல் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
முதலில் எப்போது ஒரு ஆடவன் என் மனதில் கிளுகிளுப்பை ஏறப்படுத்தினானோ அதை என் முதல் காதல் என்று என்னால் ஏற்று கொள்ள முடிந்ததில்லை, இன்றைய நிலையிலிருந்து காதலைப் பற்றி எது காதல் எப்போது ஆரம்பித்தது என்று யோசித்தால், மனதை கவர்ந்த காதல் கனிந்து, ஒருவருக்கொருவர் வெளிப்படையாகத் தெரியப் படுத்தி, அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தால் காதல் முழுமை பெற்றது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவது இல்லை.
ஒருவரை பார்க்காமலேயே ஏதோ ஒரு விதத்தில் தன்னை கவர்ந்து விட அதையும் காதல் என்று நினைத்து வருடங்களை விரட்டி பின்னர் எதுதான் காதல் என்று உணரும் போது உண்மையில் காதல் என்பது உடலில் ஏற்ப்படும் பருவ மாற்றங்கள் என்பது தெளிவாகிறது.
ஆனால் காதல் ஏற்ப்படுத்தும் கிளுகிளுப்பு அலாதியானதுதான், இதில் காதல் தோல்வி என்பது என்னை பொறுத்தவரை இன்றைய நிலையிலிருந்து யோசிக்கும் போது speed breaker என்ற உவமைதான் சரியான வார்த்தையாக என்னால் தேர்வு செய்ய முடிகிறது.
காதல் தோல்வியின் வலி என்னவென்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன் ஆனால் இப்போது யோசித்தால் அப்படியொரு speed breaker எனது வாழ்வில் வந்திராவிட்டால் என் வாழ்க்கை பயங்கரமான விபத்தை சந்தித்திருக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
எதையுமே நான் இழந்ததாக நினைப்பதே இல்லை, எது தடை பட்டதோ அது நன்மைக்கே என்பதை வாழ்க்கை புரிய வைத்தது.
முன் குறிக்கப் பட்டது தான் நடக்கும் என்பதை மனம் இன்று ஏற்றுக் கொள்கிறது, இதில் காதலும் விதி விலக்கல்ல.
ஆனால் காதலையும் அது நம்மில் ஏற்ப்படுத்தும் விளைவுகளையும் யோசித்துப் பார்த்தால் சில சமயங்களில் சந்தோஷமாகவும் சில சமயங்களில் வேதனையாகவும் உள்ளது, உண்மையில் சொல்லப் போனால் காதல் என்னும் அந்த காந்தம் நம்மை பற்றிக் கொள்ளும் போது நாம் நாமாகவே இருப்பதில்லை.
ஒவ்வொருவரும் கட்டாயம் கடந்து வர வேண்டிய சிலிர்க்க வைக்கும் வசந்த காலம், ஒரு முறை வாழ்வில் வந்து போகும் அந்த சில வருடங்கள் நம் மனதில் அழியாத நினைவுகளை விட்டுச் செல்கிறது, அந்த நினைவுகளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கின்றோம்.
"கடந்த காலத்தை நினைக்காதே வருங்காலத்தையும் நினைக்காதே நிகழ்காலத்தில் வாழ்ந்து விடு" என்று சொல்வது சுலபம் ஆனால் நினைவுகளை வெல்வது நிகழ் காலம் நமக்கு கொடுக்கும் பல சுமைகளும் கடைமைகளும் கடந்த காலத்தை மறக்க செய்து விடும், இல்லையேல் நிகழ் காலத்தில் வாழ்வது கடினம்.
காதலும் மாயைதானே.....!!