Author Topic: சத்தான வாழைப்பூ வடை  (Read 586 times)

Offline RemO

சத்தான வாழைப்பூ வடை
« on: February 11, 2012, 01:03:13 AM »
வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டாலும் மருத்துவ குணம் மாறுவதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.

தேவையானப்பொருட்கள்:


வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்தமிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும்.

வடை செய்முறை:

கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் அந்த பூவை தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். பின்னர் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை வழித்தெடுக்கும் முன்னர், வேகவைத்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சூடான சத்தான வாழைப்பூ வடை தயார். மாலை நேரத்தில் தேங்காய் சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும்.