திரும்பி பார்க்காமல்
விடைபெற்றுச் சென்ற அந்நாளின்
துவக்கத்திலேயே உன்னை
உணர்ந்திருப்பாய்..
நானும் அப்படியே.
ஆதிகாலையில்
பற்றிக்கொண்ட பதட்டம்
காரணம் சொல்லவேயில்லை..
பெரும் தவிப்பிற்கு பின்னான
சிறுநடையில் தயக்கம் களைந்து
முன்னமர்ந்தோம்.
முகம் பார்க்கையில் தோன்றும்
கூச்சத்தையும் உதடுகளில் வந்தடைந்த
நடுக்கத்தையும் பதட்டத்திற்கும் பரவசத்திற்க்கும்
இடையான படபடப்பையும்
எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
பேசித்தீராத கதைகளிருந்தும்
எதுவும் பேசாமல் கடந்திருந்தோம்.
பரவச நிலைகள் பேசித்தெளிவதில்லை..
ஆசை பட்டியலில்
உன்னை தவிர ஒற்றொன்றாய்
கைகூடுகையில் உன்னை விட்டு
செல்ல தாளாமல் புலம்பியது மனம்.
ஒரு பழைய காதலின்
பழக்கப்படாத நொடிகள் அவை..
விழிகளில் தெரிகின்ற
நேசத்தின் ஒளிக்கீற்றையும்,
விழிமூடல்களில் பகிர்கின்ற
ஆமோதிப்புகளையும் அறிகையில்
கட்டியெழுப்பிய பெருஞ்சுவர்களில்
தொடர்ச்சியாய் விழுந்தது கீறல்கள்
இடையிருந்த சுவர்கள் தகர்ந்த
இடங்களில் திரைச்சீலைகளேனும்
தொங்கட்டும் தற்காலிகமாய்.
இன்னொரு முறை உன் முகம் பார்ப்பின்
அதுவும் சாத்தியமில்லை.
இருந்துவிடச் சொன்ன மனதை
விடாப்பிடியாக தூக்கிக்கொண்டு
திரும்பி பார்க்காமலே நடந்து சென்றிருந்தேன்...
புறப்பட்டுச் சென்ற
பேருந்தின் வேகத்தில் படப்படத்து
விலகியிருக்கும் திரைச்சீலை.
இறைவா இந்த நாளிற்காகவும் நன்றி...
உன் ஸ்பரிசம் படர்ந்த
இடங்களில் இருந்து வீசிக்கொண்டே
இருந்தது பால்யத்தின் வாசனை...