Author Topic: ~ புறநானூறு ~  (Read 71294 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #315 on: November 25, 2015, 08:09:32 PM »
புறநானூறு, 318. (பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே!)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க
மயில் அஞ்சாயல் மாஅ யோளொடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே;
மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்

குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்துதன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

அருஞ்சொற்பொருள்:-

கொய்தல் = பறித்தல்
அடகு = கீரை
உணங்கல் = காய்தல்
சாயல் = அழகு
மாயோள் = மாமை நிறமுடையவள் (கரிய நிறமுடையவள்)
பசித்தன்று = பசித்தது
அம்ம – அசைச் சொல்
உறைதல் = வசித்தல்
குரீஇ = குருவி
கறை = கறுப்பு நிறம்
அணல் = கழுத்து
கறைஅணல் = கரிய கழுத்து
சுகிர்தல் = கிழித்தல், வடித்தல், வகிர்தல்
வயமான் = சிங்கம்
குரல் செய்தல் = இறுமாத்தல்
பீலி = மயிர்
குடம்பை = கூடு
செய் = வயல்
ஆர்தல் = உண்ணுதல்
பெடை = பெண்பறவை
வதித்தல் = தங்குதல், வாழ்தல்
யாணர் = புதுவருவாய், செல்வம்
விழுமுறுதல் = துன்புறுதல்

இதன் பொருள்:-

கொய்யடகு=====> வயமான்

வேந்தனுக்குத் துன்பம் வந்தால், இவ்வூர்த் தலைவனின் வீட்டில், பறித்த கீரை சமைக்கப் படாமல் வாடி வதங்கும்; கொண்டு வந்த விறகு உலர்ந்து கெடும்; அவனுடைய மயில் போன்ற சாயலும், கரிய நிறமும் உடைய மனைவி பசியால் வாடுவாள். அவள் மட்டுமல்லாமல், இப்பெருந்தகையின் ஊரே பசியால் வாடும். வேந்தனுக்குத் துன்பம் இல்லையானால், இவ்வூர் புதுவருவாய்உடையதாக இருக்கும். இந்த வளமான ஊரில், வீடுகளின் இறைப்பில் உள்ள பெண்குருவியின் துணையாகிய கரிய கழுத்தையுடைய ஆண்குருவி, பாணர்களுடைய யாழ் நரம்பின் துண்டுகளுடன், வலிமிக்க, இறுமாப்புடைய சிங்கத்தின்

குரல்செய்=====> முறினே

உதிர்ந்த பிடரி மயிரும் சேர்த்துச் செய்த கூட்டில், பெரிய வயலில் விளைந்த நெல்லின் அரிசியைக் கொண்டுவந்து தின்று தன் சிறிய முதுகுடைய பெட்டையோடு வாழும்.

பாடலின் பின்னணி:-

குடக்கோ இளஞ்சேரல், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆகியோரைப் பாடிப் பெருஞ்செல்வம் பெற்ற சிறப்பிற்குரியவர் புலவர் பெருங்குன்றூர் கிழார். வையாவிக் கோப்பெரும் பேகன் அவன் மனைவியைத் துறந்து மற்றொருத்தியோடு வாழ்ந்த பொழுது, இவர்அவனை அவன் மனைவியுடன் வாழுமாறு அறிவுரை கூறியவர். ஒருநாள், தன் வேந்தன் பொருட்டுப் பெரும்போர் புரிந்து அதில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவனை இவர் கண்டார். ’அவ்வேந்தன், போரில் துன்புற்றிருப்பானாயின், இத்தலைவனுக்கு வேந்தனிடம் இருந்து செல்வம் கிடைத்திருக்காது. இத்தலைவனுடைய ஊர் பசியால் வாடும்.’ என்ற கருத்தை இப்பாடலில் புலவர் பெருங்குன்றூர் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

சிங்கம் காட்டில் வாழும் விலங்காகையால், முல்லை நில வளம் குறிப்பிடப்பட்டது. நெல்விளையும் பெரிய வயல்கள் உள்ளதால் அவ்வூரின் மருதநில வளம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்குருவி பாணர்களின் யாழின் நரம்புத் துண்டுகளோடு சிங்கத்தின் பிடரி மயிரையும் சேர்த்துக் கூடுகட்டி, அருகில் உள்ள பெரிய வயலில் விளைந்த நெல்லைத் தின்று தன் பெட்டையோடு வாழும் என்பதிலிருந்து, அவ்வூர் முல்லை நில வளமும், மருதநில வளமும் நிறைந்த ஊர் என்பது புலனாகிறது. வேத்தனுக்குத் துன்பம் இல்லையென்றால், இந்த வளமான ஊரில் ஆண்குருவியும் பெண்குருவியும் இன்பமாக வாழ்வது போல் தலைவனும், அவன் மனைவியும், மற்றவர்களும் இனிது வாழ்வார்கள் என்ற கருத்து இப்பாடலில் தொக்கி நிற்கிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #316 on: November 25, 2015, 08:10:30 PM »
புறநானூறு, 319. (முயல் சுட்டவாயினும் தருவேம்!)
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

பூவற் படுவிற் கூவல் தொடீஇய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாங்கஃடு உண்டென அறிதும்; மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்

புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி

புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்துநின்
பாடினி மாலை யணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

அருஞ்சொற்பொருள்:-

பூவல் = செம்மண்
படு = குளம்
கூவல் = பள்ளம்
தொடீஇ = தோண்டி
செங்கண் = சிவந்த இடம்
சின்னீர் = சிறிதளவு நீர்
சீறில் = சிறிய வீடு
முன்றில் = முற்றம்
முதுமை = பழமை
ஆங்கு – அசை நிலை
அஃடு = அகடு (அடிப்பகுதி)
உணங்கல் = உலர்தல்

புற = புறா
இதல் = காடை, கெளதாரி
அறவும் = முற்றிலும்
பெய்தல் = இடுதல், கொடுத்தல்
எல் = மாலை வெளிச்சம்
புகு தந்து = புகுந்து
முது = பேரறிவு
வாய் = மொழி, வாக்கு
கொடுங்கோடு = வளைந்த கொம்பு
ஆமான் = ஆமா = காட்டுப் பசு
குழவி = கன்று

புந்தலை = இளந்தலை
சீறூர் = சிறிய ஊர்
நெருநை = நெருநல் = நேற்று
ஞாங்கர் = முன்
வாடாத் தாமரை = பொற்றாமரை

இதன் பொருள்:-

பூவற் படு=====> உணங்கல்

செம்மண் நிலத்தில், பள்ளத்திலே இருக்கும் குளத்திலே தோண்டி எடுத்த சிவந்த நிறமுடைய நீர், எங்கள் சிறிய வீட்டின் முற்றத்தில் உள்ள பழைய சாடியின் அடியில் கொஞ்சம் கிடக்கிறது. அது குடிப்பதற்கேற்ற, குற்றமற்ற நல்ல நீர். படல் வேலியோடு கூடிய முற்றத்தில், உலர்ந்த தினையை வீசி,

புறவும்=====> குழவி

அதை உண்ண வரும் புறா, காடை, கெளதாரி போன்ற பறைவைகளைப் பிடித்துச் சமைத்து உங்களுக்கு உணவு அளிக்கலாம் என்றால், இப்போது மாலை நேரம் கழிந்து இரவு வந்துவிட்டது. அதனால், முயலைச் சுட்டுச் சமைத்த கறியைத் தருகிறோம். அறிவிற் சிறந்த பாணரே! எம் இல்லத்திற்குள் வந்து அதை உண்ணுங்கள்; இங்கே தங்குக. எங்கள் ஊரில், வளைந்த கொம்புகளையுடைய காட்டுப் பசுவின், அசையும் தலையையுடைய இளம் கன்றுகளைச்

புன்றலை=====> நினக்கே

சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்களில் பூட்டி விளையாடுவார்கள். என் கணவன் அத்தகைய சிற்றூருக்குத் தலைவன். நேற்றைக்கு முதல்நாள், வேந்தனின் கட்டளைப்படி அவன் போருக்குச் சென்றான். அவன் நாளை வந்துவிடுவான். அவன் வந்ததும், உன் மனைவிக்குப் பொன்மாலை அணிவிப்பான்; உனக்குப் பொற்றாமரைப் பூவைச் சூட்டுவான்.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவன் போருக்குப் போயிருக்கிறான். அவனுடைய மனைவி வீட்டில் தனியாக இருக்கிறாள். ஒருநாள் இரவு நேரத்தில் பாணன் ஒருவன் தன் மனைவியோடு அத்தலைவனின் வீட்டிற்கு வருகிறான். இரவு நேரமாகையால் புறா, காடை, கெளதாரி போன்ற பறவைகளைப் பிடித்துச் சமைப்பதற்கு நேரமில்லை. அதனால், முன்பே சமைத்து வைத்திருந்த முயல்கறியை உண்டு, தங்கியிருந்து, தலைவன் வந்தவுடன் பரிசு பெற்றுச் செல்லுமாறு தலைவனின் மனைவி பாணனிடம் கூறுகிறாள்.

சிறப்புக் குறிப்பு:-

சிறுவர்கள் காட்டுப் பசுக்களின் கன்றுகளைத் தங்கள் தேர்களில் பூட்டி விளையாடுகிறார்கள் என்பது அச்சிறுவர்களின் அச்சமின்மையையும் வீரத்தையும் குறிக்கிறது. தலைவன் வீட்டில் இல்லாத பொழுதும், தலைவனின் மனைவி விருந்தோம்பலில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள் என்பதும், தலைவன் வள்ளல் தன்மையில் சிறந்தவனாக இருந்தான் என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #317 on: November 25, 2015, 08:11:19 PM »
புறநானூறு, 320. (இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்!)
பாடியவர்: வீரை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி

கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ, பாண! தங்காது

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

முன்றில் = முற்றம்
முஞ்ஞை = முன்னைக் கொடி
முசுண்டை = ஒருவகைக் கொடி
பம்புதல் = செறிதல் (அடர்த்தியாக இருத்தல்)
பந்தர் = பந்தல்
தூங்கல் = தாழ்தல், தணிதல்
கைம்மான் = யானை
கனை = மிகுதி
மடிதல் = தலைசாய்தல், வாடுதல்
பார்வை = கவனம், மயக்கு
மடம் = இளமை
பிணை = பெண்மான்
மடப்பிணை = இளம் பெண்மான்
தழீஇ = தழுவி
தீர்தல் = ஒழிதல், நீங்கல்
கலை = ஆண்மான்
திளைத்தல் = மகிழ்தல், அனுபவித்தல்
தீர்தல் = விலகி ஓடிவிடல்
கல் – ஒலிக் குறிப்பு
அதள் = தோல்
உணங்க = உலர்ந்த
வல்சி = அரிசி
கானம் = காடு
இதல் = காடை, கெளதாரி
ஆரம் = சந்தன மரம்
ஆரல் = ஒருவகை மீன்
தடி = வெட்டு
வள்ளூரம் = தசை
இரு = பெரிய
ஒக்கல் = சுற்றம்
தங்காது = குறையாது
விழு = சிறந்த
கூழ் = பொன்
அருகாது = குறையாது
உரை = புகழ்
சால் = நிறைவு
ஓம்புதல் = பாதுகாத்தல்

இதன் பொருள்:-

முன்றில்=====> திளைத்துவிளை யாட

யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால் அங்குப் பந்தல் தேவையில்லாமல் நிழல் மிகுதியாக இருந்தது. பலாமரத்திலிருந்து பலாப்பழங்கள் அங்கே தொங்கிக்கொண்டிருந்தன. அந்த முற்றத்தில், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட இளம்பெண்மான் (பார்வை மான்) ஒன்றை, வேறு தொழில் எதுவும் இல்லாத ஆண்மான் ஒன்று தழுவிப் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தது.

இன்புறு=====> வல்சி

கணவனைக் காண வந்த வேட்டுவனின் மனைவி, மான்கள் புணர்ச்சி இன்பத்தை அனுபவிப்பதையும், கணவன் மெய்மறந்து உறங்குவதையும் கண்டாள். தான் ஏதாவது ஒலியெழுப்பினால், கணவன் விழித்துக்கொள்வான் என்றும் மான்களின் புணர்ச்சி இன்பம் தடைப்பட்டு ஆண்மான் பெண்மானை விட்டு விலகி ஓடிவிடும் என்றும் எண்ணி அஞ்சி, வீட்டில் நடமாடாமல் ஒரு பக்கமாக, ஒலி யாதும் எழுப்பாமல் ஒதுங்கி இருந்தாள். அங்கு, பாணன் ஒருவன் தன் சுற்றத்துடன் வந்தான். முற்றத்தில் மான்தோலில் உலர்ந்துகொண்டிருந்த தினை அரிசியை

கானக் கோழியொடு=====> ஊரே

காட்டுக் கோழி, காடை, கெளதாரி போன்ற பறவைகள் ஆரவாரத்துடன், கவர்ந்து தின்று கொண்டிருந்தன. அவ்வேட்டுவனின் மனைவி, அவற்றைப் பிடித்து, சந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்டுத், துண்டு துண்டாக்கி, அறுத்த இறைச்சியை ஆரல் மீனின் மணம் கமழச் சமைத்தாள். பின்னர், பாணனை நோக்கி, “இவ்வூரைப் பாதுக்காக்கும் எம் தலைவன், வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும் வள்ளல் தன்மையையும் புகழையும் உடையவன். பாணனே! தாங்கள் இங்கே உங்கள் பெரிய சுற்றத்துடன் நான் சமைத்த உணவை இனிதே உண்டு, தங்கிச் செல்க” என்று கூறுகிறாள்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், ஒரு வேட்டுவனின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றையும், அவ்வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பும் திறத்தையும் புலவர் வீரை வெளியனார் வெகு அழகாகச் சித்திரிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பலையும், வேந்தனின் வள்ளல் தன்மையையும், அவ்வூர்த் தலைவனின் வள்ளல் தன்மையையும் மிகவும் நயம்படப் புலவர் வீரை வெளியனார் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #318 on: December 11, 2015, 05:49:13 PM »
புறநானூறு, 321. (வன்புல வைப்பினது!)
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டுஉடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,

வன்புல வைப்பி னதுவே சென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

பொறி = புள்ளி
பூழ் = ஒருவகைக் கோழி
சேவல் = ஆண்கோழி
தீ = இனிமை
சுளகு = முறம்
உணங்கல் = உலர்தல்
செவ்வி = தக்க சமயம்
உடன் = உடனே
கோங்கு = ஒரு மரம்
பொகுட்டு = கொட்டை
குடந்தை = வளைவு
அம் = அழகு
கோடு = வரம்பு
ஆட்டல் = அலைத்தல்
கலித்தல் = தழைத்தல்
ஆர் = நிறைவு
பிறங்குதல் = விளங்குதல்
பீள் = கதிர்
ஓளிக்கும் = மறையும்
வன்புலம் = வலிய நிலம் (குறிஞ்சி நிலம், முல்லை நிலம்)
வைப்பு = ஊர்
சென்னி = தலை
வெம்பல் = விரும்புதல்
குருசில் = தலைவன்
ஓம்பும் = பாதுகாக்கும்

இதன் பொருள்:-

பொறிப்புறப்=====> ஒளிக்கும்

புறத்தே புள்ளிகளையுடைய பெண்பறவையின் சேவல் சிறப்பாகப் போர்புரியும் ஆற்றலுடையது. அச்சேவல், முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட, மேலுள்ள தோல் நீக்கிய, இனிமை பொருந்திய வெண்ணிறமான எள்ளைத் தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து உண்டு, வேனிற்காலத்தில் பூத்த கோங்குப் பூவின் கொட்டை போன்ற வளைந்த காதுகளையுடைய, வரப்பில் வாழும் எலியை அலைப்பதால், அவ்வெலி தழைத்து விளங்கும் வரகின் கதிர்களில் மறைந்துகொள்கிறது.

வன்புல=====> ஊரே

பாணனே! அத்தகைய புன்செய் வளமுடைய இவ்வூர், வாளால் வெட்டப்பட்டு வடுவுடன் விளங்கும் தலையையுடைய, போரை விரும்பும் தலைவனால் பாதுகாக்கப்படுகிறது.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவனின் புன்செய் நிலவளம் மிக்க ஊர் ஒன்றை இப்பாடலில் புலவர் உறையூர் மருத்துவன் தாமோதரனார் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

‘போர்வல் சேவல்’ என்பது போரில் வெற்றிபெறும் வல்லமை பெற்ற சேவல் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது. இக்காலத்தில், சேவற்கோழிகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்து, அவை போர் செய்வதைக் கண்டு களிக்கும் வழக்கம் இருப்பதுபோல், சங்க காலத்திலும் சேவல், காடை, கெளதாரி (குறும்பூழ்) ஆகிய பறவைகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்து அவற்றைப் போரில் ஈடுபடுத்துவது வழக்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #319 on: September 12, 2020, 08:08:27 PM »



புறநானூறு, 322. (கண்படை ஈயான்!)
பாடியவர்: ஆவூர்கிழார். (ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் மரபினராக இருந்ததால், இவர் ஆவூர் கிழார் என்று அழைக்கப்பட்டார். ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாவட்டத்திலும், வட ஆர்க்காடு மாவட்டத்திலும் இருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். புறநானூற்றில் உள்ள 322- ஆம் பாடலைத் தவிர, சங்க இலக்கியத்தில் இவருடைய பாடல்கள் வேறு எதுவும் காணப்படவில்லை.)
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய

மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

ஊர்தல் = ஓய்ந்து நடத்தல்
ஊழ்த்தல் = தோன்றுதல் (மலர்தல்)
கோடு = கொம்பு
கவை = பிளவு
பொரித்தல் = தீய்தல், வெடித்தல்
அரை = அடிப்பாகம்
அரிகால் = அரிந்துவிட்ட தாள்
கருப்பை = எலி
புன்தலை = இளந்தலை
ஆர்ப்பு = ஆரவாரம்
மன்று = வாயில் முற்றம்
எந்திரம் = கரும்பு ஆலை
சிலைத்தல் = ஒலித்தல்
சுவல் = பிடர் (கழுத்து)
வாளை = ஒரு வகை மீன்
பிறழ்தல் = துள்ளுதல்
தண்பணை = மருத நிலம்
கண்படை = உறக்கம், மனிதர்களின் படுக்கை

இதன் பொருள்:-

உழுதூர்=====> கருங்கலன் உடைய

நிலத்தை உழுது களைப்படைந்து ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்பு போல், பிளவுபட்டு, முட்களும் வெடிப்புகளும் உடைய கள்ளிச் செடியின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு, புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும் சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்வர். அந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், அடுப்பில் ஏற்றிக் கரிபிடித்த பாத்திரங்கள் உடையுமாறு உருட்டித் தள்ளிவிட்டு

மன்றிற் பாயும்=====> வேலோன் ஊரே

வீட்டு முற்றத்தில் பாயும். எங்கள் தலைவனுடைய ஊர் அத்தகைய வலிய நிலம். இவ்வூரில் உள்ள எங்கள் தலைவன், கரும்பை ஆட்டும் ஆலைகளின் ஒலியால் அருகே உள்ள நீர்நிலைகளில், பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் வளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக் கண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவன்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவன் போர்புரிவதில் மிகவும் ஆற்றலுடையவனாக இருக்கிறான். அவனை நினைக்குந் தோறும், பகைவேந்தர்கள் அச்சம் மிகுந்து உறக்கமின்றி உள்ளனர். அவ்வீரன் வாழும் ஊர் முல்லை நிலத்தில் உள்ள ஒருசிற்றூர். அவ்வூரில் நடைபெறும் ஒருநிகழ்வை இப்பாடலில் புலவர் ஆவூர் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கூறப்படும் தலைவன் வாழும் ஊர் வலிய நிலத்தில் உள்ள ஒருசிற்றூர் என்ற கருத்தும், அவன் வலிய நிலத்திலுள்ள சிற்றூருக்குத் தலைவனாக இருந்தாலும் வளமான மருதநிலங்களையுடைய வேந்தர்கள் அவனுடைய போர்புரியும் ஆற்றலை எண்ணி அஞ்சி உறக்கமின்றி வருந்துகின்றனர் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.