உலகம் உருவாவதற்கு முன்னே
நீர் என்னை முன்குறித்தீரே...
என் தாயின் கருவில்
என்னை தெரிந்தெடுத்தீரே...
என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே!
என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
அஞ்சத்தகு, வியத்தகு முறையில்
நீர் என்னைப் படைத்த தால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்...
எனக்கு உயிர் கொடுத்த
என் தொப்புள் கொடி உறவே...
உருவம் ...முகம்...வர்ணம்
கூட தெரியாத என்னை
எந்த எதிர்பார்ப்பு இல்லாமலே...
கருவிலே நேசித்த
என் முதல் புனிதமான உறவே ...
அர்த்தம் அறிய முடியாத
உயிர் சித்திரம் நீ அம்மா...
உன் கருவறையில்
உதைத்து...உதைத்து...
உருண்டு...புரண்டு...
நான் உன்னை காணும்
வரையிலும் கொடுத்த
ஒவ்வொரு வலியையும் வேதனையும்...
அழகு பார்த்து ரசித்தவள் நீயம்மா...
என்னை சுமையாக நினைக்காமல்...
பத்து திங்களும் என்னை
காற்று ...வெயில்...இடி...மழை...என
இயற்கை பேரிடர்களிலிருந்து
என்னை கண்ணின் மணியைப் போல்
பாதுகாத்து...சுகமாக சுமந்து பெற்ற
புண்ணியம் செய்த புண்ணியவதியே...
காலமெல்லாம் நீ வாழ்க பல்லாண்டு!
இவ்வுலகில் எனக்கு கிடைத்த
ஒரே ரத்த பந்தமே...
பெற்ற கடனையே அடைக்க முடியாமல்
வழி தேடித் கொண்டிருக்கும் நான்...
எப்படி வளர்த்த கடனை அடைக்க போகிறேனோ
என்று தெரியவில்லையே...
தாய் செய்த தியாகத்தை...
நான் தாயானவளான போது
ஒவ்வொன்றையும் உணர்ந்தவளாக...
கற்றுக் கொண்டவளாக...
நீ செய்தவைகளைப் பின்பற்றி
ஓர் அழகிய வாழ்க்கையை
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்...
உயிர் எழுத்தில் தொடங்கி...
மெய் எழுத்தில் பிறந்து...
உயிர்மை...மெய்மை என்று
என்னுடல் உறுப்பிற்கு...
சொந்தமான அம்மா...என்ற வார்த்தையின்
அர்த்தத்திற்கு தகுதியான
என்னுயிர் தாயே...
சொல்லி முடியா அழகிய கவிதை நீயே...
மீண்டும் வர வேண்டும் நீயே...
என் தாயாக...
என் குழந்தையாக...
ஐ லவ் யூ அம்மா!