உருளைக்கிழங்கு பனீர் ரோல்ஸ்
தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா மாவு – ஒரு கப், சோள மாவு – கால் கப், ரவை – 2 டீஸ்பூன், உப்பு, நெய் – 3 டீஸ்பூன்.
பூரணத்துக்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், துருவிய பனீர் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி, துருவிய சீஸ் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றைக் கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். (கெட்டியாக இருந்தால்தான் ரோல் மொறுமொறுப்பாக இருக்கும்).
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தாளை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், துருவிய சீஸ், பொடியாக அரிந்த கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும். (சீஸிலேயே உப்பு இருப்பதால் உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம்). பூரணம் ரெடி!
பிசைந்து வைத்துள்ள மைதா கலவையில் சிறிது எடுத்து நீளவாக்கில் உருட்டி தேய்த்து அதில் உருளை கலவையை வைத்து இரு முனைகளையும் தண்ணீர் தொட்டு லேசாக ஒட்டிவிடவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.