மண் வாசனை துளிர்த்து
மழை மேகம் சூழும் நாளொன்றில்
வீட்டில் அடைந்திருக்கும் வரமொன்று
வாய்த்திருக்கிறது.
இயல்பு வாழ்க்கையை பாதிக்காத
ஒரு மழை
நச நசவென்று பெய்கிறது என அலுக்க
வைக்காத ஒரு மழை
வகுப்பறைகள் குழந்தைகளுக்கும்,
அலுவலகங்கள் மனிதர்களுக்கும்
காத்திருக்காத ஒரு மழை
சடசடத்து வீசும் காற்றின் ரீங்காரத்தில்
உடல் சிலிர்க்கிறது
சூழ்ந்து வரும் கருமேகங்களை கண்டு
இன்னும் கூடு அடையாத பறவைகள்
இறக்கைகள் படபடக்க பறக்கின்றன
எங்கிருந்தோ சுழன்று வருகிறது
காற்றில் பட்டமாகிப் போன
பாலீதீன் பையொன்று
முதல் தூறலுக்கான அறிகுறியோடு
தீவிரமாகிறது குழந்தைகளின் விளையாட்டுகள்
சொட் சொட் என விழும் தூறல்களில்
ஒவ்வொரு பொருளும்
புதிதாக இசைக்கிறது,
சின்னதொரு இடியும் உடன் சேர்ந்து
தாளமேற்றுகிறது தூறலுக்கு.
சாளரத்தின் கம்பிகளில் ஊஞ்சலாடுகிறது ஒவ்வொரு துளியும்.
வேகமெடுக்கும் சாரலில்
மண்ணின் தாகங்கள் எல்லாம்
தீர்ந்தடங்கி தேங்கி நிற்கிறது
சிறு குட்டைகள்
கைகளை நீட்டி மழையை ஆரத்தழுவிக்கொண்டு,
பளிச்சிடும் மின்னல் ஒளியில்
தேங்கி நிற்கும் நீர்க்குட்டைகளில்
கால்களுக்கு காத்திருக்கிறது சிறுநடனம்
மழை சிறிது ஓயும் இடைவெளியில்
உடல் உரசும் குளிர்ந்த காற்றில்
கைகளில் வெம்மையேற்றுகிறது
சூடான தேநீர் கோப்பைகள்.
ஈரம் பூசிக் கொண்ட சாலைகளும்,
புது பச்சை அணிந்த மரங்களும்,
மரங்களிடையே உடல் உலுக்கி
நீர் உதறுகிற பறவைகளும்,
தெருவெங்கும் உதிர்ந்திருக்கும் மஞ்சள் பூக்களும்,
மனதில்
மழையின் நினைவுகளாய் சேர்கிறது
மழை எழுதும் கவிதைகளை ரசித்தபடி
மழைக்காய் ஒரு கவிதை எழுதிடும்பொழுது,
அதே குளிரும் அதே சாரலுமாய்
மீண்டும் துளிர்க்கும் மழையில்
கைநீட்டி சில்லிடும் விரல்களோடு
நனையும் மனதிற்குள்
மீண்டும் பெய்கிறது ஒரு பெருமழை