13. உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ !
(இதன் பொருள்) உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை- கால்கை முதலிய புறத்துறுப்புக்களும் குடர் காற்றுப்பை முதலிய உள்ளுறுப்புக்களும் ஒருசேர ஒருடம்பாக இருந்த இந்தத் தோலாலியின்ற பெரிய பையானது; மறைப்பில்- மேலே தோல் போர்த்துள்ள மறைப்பினாலே; விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல்- நந்தம் அவாவிற்குச் சார்பிடமாகி நம்மை மயக்கு மியல்புடையதென்னின்; உறுப்புக் குறைத்தனபோல- மற்றிவ்வுடம்பே உயிர் பிரிந்துழித் தன்னுறுப்புக்கள் துணிக்கப்பட்டன போல்வனவாக; அழுகிக் குறைந்து குறைந்து சொரிய -அழுகி நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வீழாநிற்ப; வெறுப்பிற் கிடந்த பொழுதின்- கண்டோர் வெறுப்பிற் கிடனாகிக் கிடந்த காலத்து; வேண்டப் படுவதும் உண்டோ- இவ்வுடம்பின்கண் யாம் அவாவுதற்கியன்ற தன்மையும் உண்டாகுமோ? கூறுதிர் என்பதாம்.
(விளக்கம்) உறுப்பு, கண் முதலிய புறுவுறுப்புக்களும் குடர் முதலிய உள்ளுறுப்புக்களும். தோலாற் போர்த்து மறைக்கப்பட்டடிருத்தலால் இது விழைவிற்குச் சார்வாய் மயக்குவது; அங்ஙனம் போர்க்கப் படாவிடின் அருவருக்கத் தக்கதேயாம் என்பாள்; மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவது என்றாள் அங்ஙனம் மயக்குமேனும் இஃது அழுகிக் குறைந்து குறைந்து சொரியக் கிடந்த பொழுதின் இதன்கண் மயக்குவதற்குரிய தன்மை சிறிதும் இல்லையாம் என்றவாறு.
என்புந் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுவின் பிண்டம்
என்றார் மணிமேகலையினும். இன்னும், இவ்வுடம்பியல்பினை
காலி ரண்டுநி றுத்தி மேலிரு கைபி ணைத்தொரு புறவெலும்
பாலி ணக்கிமு கட்கு மேல்வளை யடர்ந்த ரம்பெனு மாக்கையாற்
கோலி யிட்டப ழுக்க ழிக்கொரு குறைவு றாமல் வரிந்துமேற்
றோலி ணக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்பு லால்கொ டியற்றியே
வந்து போகவி ரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரந்
தந்து சாக்கிர மாதி யீரிரு தளமெ டுத்ததன் மேன்மலர்க்
கொந்து லாவிய மாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
முந்து நீள்கொடி மாட நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்
எனவரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும்(அவித்தியா-13-14)
எனபினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான்
எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளும்(1577) அறிவுறுத்துதலையும் ஈண்டு நினைக. (13)
இதுவுமது
14. எனதெனச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னல் ஆமோ!
(இதன் பொருள்) பாவி- தீவினையாளனே!; எனது எனச் சிந்தித்தலால்- என்னுடையது என்று யான் உரிமை கொண்டாடுதற்கிடனாயிருத்தலாலே; இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்-இந்த உடம்பு யான் இன்புறுதற்குரியதாகும் என்பாயாயின்; இஃது உன்னுடையதாதல் தான் எங்ஙனம்? தினைப்பெய்த புன்கத்தைப் போல- தினையரிசி பெய்து சமைக்கப்பட்ட சோறு போன்று; சிறியவும் மூத்தவும் ஆகி-உருவத்தாற் சிறியனவும் பெரியனவுமாய்; நுனைய- கூர்ந்த வாயினையுடையனவாகிய; புழுக்குலந்தம்மால்- புழுக் கூட்டங்களாலே; நுகரவும் வாழவும் பட்ட- தம்முடையதாகவே கொண்டு உண்ணவும் உறையுளாகக் கொண்டு வாழவும் படுகின்ற; இனைய உடம்பினை-இத் தன்மையான இந்த உடம்பினை யான் என்று என்னால் ஆமோ-யான் என்றாதல் என்னுடையது என்றாதல் கூறுதல் கூடுமோ? கூடாதுகாண் என்பதாம்.
(விளக்கம்) தினையரிசியாலாய சோறு உடலிலுண்டாகும் சிறியவும் பெரியவும் ஆகிய புழுக்களுக்குவமை. புன்கம்- சோறு.
இதனை,
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம் புறநானூறு,
எனவரும் செய்யுளினும் காண்க.
இந்த வுடலை யாம் எனதென்று கொள்வேம், இதன்கண் வாழுகின்ற புழுக்குலங்களும் தமதாகவே கொண்டு இதனை உண்டு இதனிடத்தேயே வாழ்கின்றன, ஆதலால் இத்தகைய வுடம்பினை யான் எனது என்று யாம் உரிமை கோடல் பேதைமையேயாம் என்றவாறு.
இன்னும்,
சடமீது கிருமிப்பை தானென்றன் மலமோ
டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே
யுடன்மீதிவ் வுடல்போலு திக்கின்ற புழுவைத்
திடமான மகவென்று சீராட லென்னே
எனவும்,
ஊறுதுய ருஞ்சுகமு முற்றுனுப விக்கும்
பேறுபெறு தன்னுடலு மாவிபிரி யுங்காற்
கூறுசிறு புள்ளெழு குடம்பையென வப்பால்
வேறுபடு மென்னிலினி மெய்யுறவு யாதே
எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும் நியற்னை பாலவாம்.
இறைமாட்சி
15. இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை
அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்
(இதன் பொருள்) மும்மத யானையான்- மூன்று மதங்களையும் பொழிகின்ற களிற்றியானையையுடையவனும்; திங்கள் வெள்குடை- நிறைத்திங்கண் மண்டிலம் போன்ற வெள்ளிய தன்குடையினாலே; அறங்கொள் கோல்- அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட செங்கோன் முறைமையினையுடைய; அண்ணல்- இவ்வேந்தன் இவ்வாற்றால்; இறந்த நற்குணம்-இவ்வுலகத்தை விட்டகன்று போய்விட்ட நல்ல மக்கட் பண்புகள்; எய்தற்கு அரியவாய் மீண்டும் மாந்தர் எய்துதற்கரியனவாகி; உறைந்த தன்மை எல்லாம் இருந்தவற்றை யெல்லாம்; உடன் ஆக்குவான்- மீண்டும் இவ்வுலகத்து மக்களோடே சேர்த்து அவரை யுய்விக்கும்பொருட்டு; பறிந்த மூர்த்தி ஒத்தான்- துடித விமானத்தினின்றும் போந்து இந் நிலவுலகத்திற் றோன்றியருளிய புத்தபெருமானையே ஒத்தவனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.
(விளக்கம்) இச் செய்யுள் தொடங்கிவருகின்ற செய்யுள்கள் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்திற் பேசப்படுகின்ற அரசன் மாண்புகள் இந்த அரசனுடைய பிற மாண்புகள் இச் செய்யுளின்முன் பல செய்யுட்களிற் பேசப்பட்டிருத்தல் வேண்டும் என்று நினைத்தற்கிடனுளது. அவை யெல்லாம் கிடைத்தில. இச் செய்யுளின் முற்போந்த செய்யுட்களில் அந்த அரசனுடைய அறமாண்புகளை வருணித்து இச் செய்யுளில் இவ்வாற்றால் இம் மன்னவன் புத்தபெருமானையும் ஒப்பாவான் என்று கூறுகின்றார் போலும்.
புத்தபெருமான் உலகின்கண் அறங்கள்கெட்டு மக்கட்பண்பு அழிந்த காலத்தே உலகிற்றோன்றி அவ்வறங்களை மீண்டும் உலகில் நிறுவினன் என்பவாகலின் இறந்த நற்குணம் எய்தற்கரியவா யுறைந்த தம்மை யெல்லாம் உடனாக்குவான் பிறந்த மூர்த்தி என்று புத்தரைச் சுட்டினார். மக்கள் மேற்கொள்ளாவிடினும் அறம் அழிந்தொழியாமையின் எய்தற்கரியவாய் உறைந்த தம்மையெல்லாம் என்றார். உறைந்த தம்மையெல்லாம் என்றது உறைந்தவற்றை யெல்லாம் என்றவாறு. புத்தர் உலகின் அறமுதலியன நிலைகுலைந்துழி வந்து தோன்றுவர் என்பதனை,
பூமகனே முதலாகப் புகந்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே
எண்ணிறந்த குணத்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பார நிறைத்தோய்நீ
மெய்ப்பொருளை யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ
அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதனருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ
ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதநீ துறைவனீ யிறைவனீ
அருளுநீ பொருளுநீ அறவனீ யநகனீ
தொருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ
எனவரும் பழம் பாடலானும் (வீரசோழியம்: யாப்புப் படலம் 11 ஆம் கலித்துறையின் உரையிற்கண்டவை) இன்னும்
தரும தலைவன் றலைமையி னுரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி
அறுகையு நெருஞ்சியு மடர்ந்துகண் ணடைத்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்
றுயிர்வழங்கு பெருநெறி யொருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்ல தியாவதுங்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்
உலாநீர்ப் பெருங்கட லோட தாயினு
மாங்கத் துளைவழி யுகுநீர் போல
வீங்கு நல்லற மெய்தலு முண்டெனச்
சொல்லலு முண்டியான் சொல்லுத றோற்றார்
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப
விருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன
......................................
புத்த ஞாயிறு தோன்றுங் காலை
எனவரும் மணிமேகலையானும், (12:58-86)
இன்னும்,
துடித விமானத்தினின்றும் போந்து குயிலாலபுரத்துத் தோன்றி உலும்பினி வனத்துப் பிறந்து கபிலபுரத்துப் புத்ததத்துவம் பெற்றுத் தர்மோப தேசம் பண்ணி மகாபோதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல் புத்தனுக்கு நியதி(மொக்கலவாதச் சருக்கம் 160 ஆம் பாட்டுரை) எனவரும் நீலகேசி யுரையாசிரியர் கூற்றும் ஈண்டு நினைக. (15)
இதுவுமது
16. சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்
தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.
(இதன் பொருள்) சீற்றம் செற்று-அம்மன்னவன் இப்பேருலகத்தின்கண் ஓருயிர் மற்றோருயிரைச் சினந்து வருத்தாதபடி உயிரினங்களின் சினத்தையும் அகற்றி; பொய் நீக்கி- மாந்தர் பொய் பேசாதவண்ணம் செய்து; செங்கோலினால் கூற்றம் காய்ந்து- தனது செங்கோல் முறைமையாலேயே தனது ஆட்சியின்கண் முறைபிறழ்ந்து மறலியும் புகுந்துயிரைக் கவராதபடி அவனையும் தடுத்து; கொடுக்க எனுந்துணை மாற்றமே நவின்றான்-தான் தன் குடிமக்களுக்கு ஆணை பிறப்பிப்பதாயின் உடையோர் எல்லாம் இல்லோர்க்கு வழங்குமின்! என்னும் இந்நல்லறத்தையே ஆணையாகப் பிறப்பிக்குமளவேயன்றி அவர் வருந்தும்படி பிறிதோர் ஆணையும் இடானாயினான். தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான்- இங்ஙனமிருந்தவாற்றால் இவன் ஆட்சியில் இன்புற்றிருந்தோரெல்லாம் வீடு வேண்டாராய்த் தடுமாற்றத்திற்குக் காரணமான பிறப்பினையும் விரும்புவாராகும்படி தோன்றித் திகழ்வானாயினன் என்பதாம்.
(விளக்கம்) செங்கோன் முறை பிறழாத வேந்தர் ஆளும் நாட்டில் உயிரினங்கள் சினந்தவிர்ந்து அரட்குணமுடையவாய் ஒன்றற்கொன்று தீமைசெய்யாவகலின், செங்கோலினால் சீற்றம் செற்றுப் பொய் நீக்கினன் என்றார்.
இதனை,
..........................பரல் வெங்கானத்துக்
கோல்வ லுளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையு மான்கண மறலா
அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடு
எனவரும் இளங்கோவடிகளார் மொழியானும்(13:4)
அல்லது கடித்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையற் படர்குவி ராயின்
கேளவன் நிலையே கெடுகநின் னவலம்
அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யாவேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ இரவல!
எனவரும் பெரும்பாணாற்றுப்படையானும் (36-45) உணர்க.
கருதலரும் பெருங்குணத்தோ ரிவர்முதலோர் கணக்கிறந்தோர்
திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலநின்றோர்
பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்
எனவரும் இராமவதாரத்தினும் (குலமறை. 5) இக்கருத்து வருதலுணர்க
இனிச் செங்கோலரசர் நாட்டில் உயிரினங்கள் தத்தமக்கியன்ற அகவை நாளெல்லாம் வாழ்ந்து இயல்பாக இறத்தலன்றி இளம் பருவ முதலிய காலத்தே இறத்தல் இல்லையாகலின், செங்கோலினாற் கூற்றங் காய்ந்து என்றார். இக் கருத்தினை
கூற்ற மில்லையோர் குற்ற மிலாமையால்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
ஆற்ற னல்லற மல்ல திலாமையால்
ஏற்ற மல்ல திழிதக வில்லையே
எனவரும் இராமவதாரத்தானும் (நாட்டுப், 39)
மன்னவன் செங்கோன் மறுத்தலஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையிற் றிரிந்து எனவரும்(5: 218-20) சிலப்பதிகாரத்தாலும்,
மாறழிந்தோடி மறலியொளிப்ப முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும் எனவரும் விக்கிரம சோழனுலாவாலும்(7-8)
மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்
கூற்றுயிர் கோடலு மாற்றா தாக
வுட்குறு செங்கோ லூறின்று நடப்ப (4.2; 54-6)
எனவரும் பெருங்கதையானும் உணர்க.
இனி, செங்கோன்மை முறையினின்று அருளாட்சி செய்கின்ற வேந்தன் குடை நீழலில் வாழ்பவர் மீண்டும் மீண்டும் அந்நாட்டிற் பிறத்தற் கவாவுதலின் தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் என்றார். இனி இவ்வறவேந்தனைக் கண்டோர் இத்தகைய அறவோனாய்ப் பிறத்தல் வீடுபேற்றினும் சிறப்புடைத்து ஆதலால் மனித்தப் பிறப்பும் வேண்டுவதே என்று தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் எனினுமாம். (16)
குற்றங் கடிதல்
17. மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார்.
(இதன் பொருள்) விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த- வானுலகத்தே வாழுகின்ற தேவர்களும் புகழ்ந்து பாராட்டுதற் கேற்ற; விழுமியோன்- சிறப்பினையுடையவனும்; நெற்றிபோழ்ந்த கண் உளான்- நெற்றியைப் பிளந்து தோன்றிய நெருப்புக் கண்ணை யுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய; கண்டம் தன்மேல் கறையை- மிடற்றின்கண்ணமைந்த களங்கத்தை; யார் கறை அன்று என்பார் யார்தாம் களங்கம் அன்று என்று கூறுவார்? அங்ஙனமே; குற்றம் மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று- குற்றம் என்பது இந்நிலவுலகத்தே வாழும் மக்கள் போல்வாரிடத்து மட்டும் உண்டாவதொன்றன்று குற்றம் வாய்மை நண்ணினார் திறத்தும்- குற்றமானது மெய்யுணர்வு பெற்ற மேலோரிடத்துத் தோன்றினும்; குற்றமே-குற்றமாகவே கொள்ளப்படுவதன்றி; நல்ல ஆகா-அவர் மேலோர் என்பதற்காக நல்லனவாகி விடா; ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புட னிருத்தல் வேண்டும் என்பதாம்.
(விளக்கம்) ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பெச்சம்.
கந்தருவர் அரக்கர் முதலியோரையும் கருதி மண்ணுளார் தம்மைப் போல்வார் என்றார். வாய்மை நண்ணினார் என்றது மெய்யுணர்வு கைவரப் பெற்ற மேலோரை.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வார் பழிநாணு வார் குறள், 433
எனவும்,
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை குறள், 434
எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக. (17)
இடுக்கணழியாமை
18. மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று.
(இதன் பொருள்) மறிப மறியும்- அழியும் பொருளெல்லாம்
அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்த லியலாது) மலிர்ப மலிரும்-அங்ஙனமே வளரும் ஊழுடையன வெல்லாம் வளர்ந்தே தீரும்; (அவற்றை வளராமற் றடுக்கவு மியலாது) பெறுப பெறும்- பயன் பெறுகின்ற ஆகூழுடையன பெற்றே தீரும்; (அப் பயனைப் பெறாவண்ணம் செய்தலு மியலாது); பெற்று இழப்ப இழக்கும்-அங்ஙனமே, பெற்றபயனை இழக்கும் போகூழுடையன அவற்றை இழந்தே தீரும்; (இழவாதபடி செய்ய வியலாது) அறிவது அறிவார்-ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்; அழுங்கார்- தமக்குப் பொருளிழவு நேர்ந்துழி இது பொருளியல் பென்றுணர்ந்து அவ்விழவின்பொருட்டு வருந்துதலிலர். உவவார்-அங்ஙனமே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பது மிலராவர்; உறுவது உறுமென்று உரைப்பது நன்று-ஆதலால் வருவது வந்தே தீரும் என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொண்மின் என்பதாம்.
(விளக்கம்) உறுவதுறும் என்பது ஒரு பழமொழி
மறிப, மலிர்ப, பெறுப, இழப்ப என்பன பலவறிசொல்.
மெய்யுணர்வுடையோர் யாது நிகழ்ந்தாலும் எல்லாம் ஊழின் செயலென்று கருதி அமைதியுடனிருப்பர். செல்வம் வந்துழிக் களிப்பதிலர் வறுமை வந்துழி வருந்துவதுமில்லை என்றவாறு. இக்கருத்தோடு,
யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவன்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
எனவரும் கணியன் பூங்குன்றனார் பொன்மொழியும் (புறநா-192)
மெய்த்தி ருப்பத மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
யொத்தி ருந்த முகத்தினை யுன்னுவாள்
எனவரும் கம்பநாடர் கவின் மொழியும் ஒப்பு நோக்கற் பாலன. (18)
இதுவுமது
19. வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.
(இதன் பொருள்) வேரி கமழ் தார் அரசன்- மணங்கமழ்கின்ற மலர் மாலையணிந்த மன்னவன்; விடுக என்ற போழ்தும்- சிறைவீடு செய்க என்று கட்டளையிட்ட காலத்தும்; தாரித்தல் ஆகா வகையால்-இவன்பால் எழுந்த சீற்றம் பொறுக்கலாகாமையாலே; கொலை சூழ்ந்த பின்னும்- கொலை செய்யும்படி கட்டளையிட்ட பின்னரும்; பூரித்தல் வாடுதல் என்று இவற்றால்- உவகையாலே தோன்றும் பூரிப்பாகிய மெய்ப்பாட்டினாலாதல் அல்லது துன்புற்று வாடுதல் என்னும் மெய்ப்பாட்டினாலாதல்; பொலிவு இன்றி- தன் உடம்பின்கண் யாதொரு தோற்றமும் காணப்படுதலின்றி; நின்றான்- அமைதியாக நின்றனன், அஃதெற்றாலெனின்; பாரித்ததெல்லாம்-தனக்கு நுகர்ச்சியாக விரிந்து வருகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம்; வினையின் பயன் என்ன வல்லான்-தான் முன் செய்த பழவினையின் பயன்களே யன்றிப் பிறவில்லை என்னும் மெய்யுணர்வினால் வன்மையுடையோன் ஆகலின் என்பதாம்.
(விளக்கம்) இதனால் குறிக்கப் படுகின்ற மெய்யுணர்வாளன் யார் என்றும் அவன் சிறைப்படுதற்கும் சிறைவீடு பெறுதற்கும் பின்னர்க் கொலை செய்க என்று மன்னன் கட்டளை யிடுதற்கும் உற்ற வரலாறு சிறிதும் அறிகின்றிலேம் இதனால் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்தில் இன்னோரன்ன வரலாறுகள் இருந்தன என்று மட்டும் அறிகின்றோம்.
இனி இச் செய்யுளால் ஒரு மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்து ஒரு கால் சிறைவீடு செய்க என்றும் பின்னும் (அமைச்சர் முதலியோர் அறிவுரை கேட்டமையாற் போலும்) கொன்று விடுக! என்றும் கட்டளையிட்டான் என்றும்; இதற்கு ஆளாகியவன் தன் மெய்யுணர்வு காரணமாகச் சிறைவீடு செய்க என்றபோது மகிழாமலும் கொலை செய்க என்ற போது வருந்தாமலும் அமைதியுடனிருந்தான் என்றுணருகின்றோம். இச்செய்யுள் இராமகாதையுள் தயரதன் இராமனை அழைத்து இனி நீ இவ்வரசாட்சியை ஏற்றுக் கொள்க என்று வேண்டிய பொழுது,
தாமரைக் கண்ணன்
காதலுற்றிலன் இகழ்ந்திலன் கம்ப- மந்திர-70
எனவரும் கம்பநாடர் மொழியும்; யசோதர காவியத்துள் மாரிதத்தன்
என்னும் மன்னவன் மாரி என்னுந் தெய்வத்திற்குப் பலியிடுதற்குப் படித்து வந்த அபயருசி அபயமதி என்னும் அண்ணனும் தங்கையும் தம்மைப் பலியிடப் போதலறிந்தும் அமைதியுடனிருத்தல் கண்டு அவ்விளந் துறவியை நோக்கி அவ்வேந்தன்:
இடுக்கண் வந்துறவு மெண்ணா
தெரிசுடர் விளக்க னென்கொல்?
நடுக்கமொன்றின்றி நம்பால்
நகுபொருள் கூறகென்ன,
அதுகேட்ட அவ்விளந்துறவி, வேந்தே!
அடுக்குவ தடுக்கு மானால் அஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்
என விடையிறுத்தமையும் நம்நினைவிற்கு வருகின்றன.
இன்னும்,
இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ்
விடுகணை யரிபு மெஃகா மிருந்தழுதி யாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே
எனவரும் சீவகசிந்தாமணியும் (509)
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம
எனவும்
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன் குறள், 319
எனவும் வரும் திருக்குறள்களும் ஈண்டு நினையற் பாலனவாம். (19)
குண்டலகேசி என்னும் பெருங்காப்பித்தின்கண்
பெரும்பாலும் அழிந்தனபோக எஞ்சி நின்று
இற்றைநாள் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பதிற்கும்
பெருமழைப் புலவர். பொ. வே. சோமசுந்தரனார் வகுத்த சொற்பொருள் உரைகளும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதிகளும் முற்றும்.