ராசைய்யா நெனவிருக்கா!
சேவல் கூவியதும்
வயக்காட்டில் கண்முழிச்சி
கம்மாக் கரையோரோ
கைக் கால் முகங் கழுவி..
கோமனத் துணியோட
மண்வெட்டிக் கை புடிச்சி
சேத்துக் குழிகுள்ள சோத்துக்கு
கால வச்சோம்.
ராசைய்யா நெனவிருக்கா!
கொம்புக்கு கலர் தீட்டி
திமிளுக்கு மண்பூசி
கருப்பன ஏர்பூட்டி
வயலுழுதோம் நெனவிருக்கா!
அர அடி நெலத்துக்கு
ஜென்மத்து பகை போல
அறியாமல் நான் போட்ட
வாய்க்கால் சண்ட நெனவிருக்கா!
பெத்தது ஒவ்வொன்னும்
ஒத்துமையா ஓடையில
நாம போட்ட சண்டை எல்லாம்
மறந்த கத நெனவிருக்கா!
பொஞ்சாதிப் பொங்கிதந்த
புளியன் சோத்துருண்ட
தொண்டைக்குழி போனப்போ
இளஞ்சூடு நெனவிருக்கா!
அப்படி நெனவிருந்தா இனி
மறந்துரு,
எல்லாத்தையும் மறந்துறு..
வயக்காடு இன்னைக்கு
கோங்க்ரீட்டா மாறிடுச்சி
நம்ம ஊரு நெலத்தடிதண்ணி
எவனுக்கோ போயிருச்சு.
வாக்கு கேட்ட வாய்க் கெல்லாம்
எங்க சனம் தென்படல
ஈரேழு லோகத்து சாமிக்கும்
கண்ணில்ல!
போதும்யா போதும்...
அந்தி சமஞ்சிருச்சி
அடி வானம் செவந்துருச்சி
ஊர் மேஞ்ச பொட்டக் கோழி
கூட்டுக்குள் அடஞ்சிருக்கும்.
ராத்திரி சோத்துக்கு வழியென்ன
தெரியாது
இப்படியே போனதுன்னா எங்க உயிர் தங்காது..!
~ !! ச.மனோ !! ~