Author Topic: யுக முடிவு நாளின் மாபெரும் 10 அடையாளங்கள்...!!!  (Read 2726 times)

Offline Yousuf

(1)புகை மூட்டம்

வானம் தெளிவான புகைகளை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.. (அல் குர்ஆன் 44:10-11).

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம், இது ஒரு (இறை விசுவாசியை) ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். (இறை மறுப்பாளரை) பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ மாலிக் (ரலி) நூல் - தப்ரானி.

மறுமை நாள் வரப்போகிறது என்பதை எடுத்துக் கூறும் பெரும் அடையாளங்களில் ஒன்று. வானிலிருந்து புகை வருவதாகும். அந்தப் புகை பூமியில் வசிப்போரைத் தாக்கும். இதில் இறைவனை நம்பி வாழும் முஸ்லிமையும்(இறைவனுக்கு முற்றிலும் அடிபனிந்தவரை) அந்தப் புகை தாக்கும். ஆனால், அதன் மூலம் ஜலதோஷம் அடைந்தால் ஏற்படும் சிரம அளவுக்கே மூஃமின் இருப்பான். ஆனால் இறைவனைப் புறக்கணித்து வாழ்ந்தவர்களை அந்தப் புகை நெருங்கும்போது அதை அவர்கள் சுவாசித்ததும் வயிறு ஊதி உடலும் பெருத்து காது வழியாக புகை வருவது தெரியும். கடுமையான சோதனையாக அது அமையும். இந்த புகை மூட்டச் சோதனை வருமாயின் மறுமை நாள் நெருங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது தான்.

(2)அதிசயப் பிராணி

அவர்களுக்கு எதிரான தீர்ப்பு உறுதியாகும் போது இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்டுத்துவோம். அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நம் வசனங்களை நம்பாமல் இருந்தது தான் (அல் குர்ஆன் 527:82).

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப்பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைக் தொடர்ந்து அடுத்ததும் தோன்றி விடும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - முஸ்லிம்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக அதிசயப்பிராணி ஒன்று வரும் என்று அல்லாஹ்;வும், நபி (ஸல்) அவர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள். அந்தப் பிராணி பூமியிலிருந்து தான் வரும் என திருக்குர்ஆன் கூறுகிறது. வானிலிருந்து அல்ல, என்ற உண்மையோடு அந்தப் பிராணி திடீரென வரும் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகின்றார்கள்.

மனிதர்கள் இதுவரை கண்டு கொண்டிருக்கக்கூடிய பிராணிகளில் சேர்ந்தது அல்ல என்பது மட்டும் விளங்க முடிகிறது. அதன் வடிவம் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக நமக்குத் தெரிவிக்கப்படாவிட்டாலும், அது பேசும் பிராணியாக இருக்கும் என்பதை மட்டும் விளங்க முடிகிறது. பேசும் பிராணியாக அது இருப்பதால்தான் அது அதிசயப் பிராணியாகவும் ஆகிறது.

அந்த அதிசயப் பிராணி வந்து விட்டால், மறுமையின் அடுத்த அடையாளமும் உடனே வந்து விடும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதிசயப் பிராணி பற்றி நாம் நம்ப வேண்டுமே தவிர, அதன் வடிவம் அது பேசும் மொழி பற்றி கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அது பகல் வேளையில் வரும் என்பதால் அதை அந்த நேரத்தில் இருப்போர் காணலாம், பேசலாம். அப்பிராணி வரும் நேரத்தில் மக்களில் இறை நம்பிக்கையற்றவர்களே அதிகம் இருப்பார்கள்.

(3)மேற்கில் சூரியன் உதிப்பது:

அதிசயத்தக்க அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். மனிதன் இயலாத ஒன்றைக் குறிப்பிடும் போது சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் அது நடக்காது என்பார்கள். அந்த அளவுக்கு சூரியன் மேற்கே உதிப்பது என்பது இயலாத காரியம், ஆனால்...

'சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆனால் அதற்கும் முன்பே நம்பிக்கை கொள்ளாமல் இருந்தோருக்கு அப்போது கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6506.

மறுமை நாளின் நெருக்கத்தில் மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும். சூரியன் கிழக்கில் இருந்து உதித்தால் என்ன நடக்குமோ, அதுதான் மேற்கிலிருந்து உதித்தாலும் நடக்கும் என்று கருதிவிட முடியாது. இந்த மாற்றமான நிகழ்வு, பெரும் பயங்கரத்தை நிகழ்த்தி விடும்.

பூமி, சூரியனைச் சுற்றி வருகிறது. இதனால் இரவு பகல் ஏற்படுகிறது எனப் புரிந்து வைத்துள்ளோம் மணிக்கு ஆயிரம் மைல் வேத்தில் இந்த பூமி சுழன்று வருகின்றது. இந்த அதி தீவிர சுழற்சியின் போதுதான் சூரியன் கிழக்கில் உதிக்கிறது. திடீரென அந்த வேகச் சுழற்சியை நிறுத்தி எதிர் திசையில் சுற்ற வைத்தால் தான் சூரியன் மேற்கில் உதயமாக முடியும்.

நம் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய கார் 80 கிலோ மீட்டர் வேத்தில் செல்கிறது. அப்பொது நம் டிரைவர் திடீரென பிரேக் போட்டால் நாம் காரிலிருந்து தூக்கி எறியப்படுவோம், அல்லது காரே தலைகீழாகக் கவிழும் அதே கார் அதே வேகத்தில் திடீரென பின்னோக்கி ஓடினால் என்னவாகும்? விபத்து ஏற்படும் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா? மோசமான விளைவு ஏற்படும் அல்லவா?

இது மாதிரியே பூமியின் சுழற்சி திடீரென எதிர் திசையை நோக்கிச் சுழன்று, சூரியன் மேற்கே உதிக்குமானால், நாம் வாழும் கட்டிடங்கள் நொறுங்கி விழும். மலைகள் கூட தூள் தூளாகி விடும். அனைத்தின் செயல்பாடுகளும் இதரக் கோள்களும் தலைகீழ் மாற்றத்திற்குள்ளாகி உலகமே பேராபத்திலும், பேரழிவிலும் சிக்கிச் சீரழியும்.

இப்படி ஓர் அதிர்வை – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சூரியன் மேற்கில் உதயமாகின்ற நிலையும், மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

(4)தஜ்ஜாலின் வருகை:

'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.

'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - முஸ்லிம்.

'தஜ்ஜால்' எனும் கொடியவனின் வருகையும் நாளை மறுமை நாள் வருவதற்கு முன் அடையாளமாகும். இந்த தஜ்ஜாலின் வருகை, பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இவனது வருகையை பெரிய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.


அறிமுகம்:


'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வலது கண் திராட்சை போன்று சுருங்கி இருக்கும்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இன்னு மஸ்ஊத் (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

'இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட எந்த ஒரு இறைத்தூதரும் தம் சமுதாயத்தவரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணனை எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணன், அவனது இரு கண்களுக்குமிடையே 'இறை மறுப்பாளன்' என எழுதப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் - புகாரீ 7131.

ஊனமடைந்த கண், மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமாக சதைக் கட்டி ஒன்று தொன்படும் என்றும் நபி (ஸல்) கூறி உள்ளனர் : நூல்கள் - முஸ்லிம், அஹ்மத்.

'ஊனமடையாத கண், பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போல் அமைந்திருக்கம்' ( அஹ்மத்).

'அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான், அவனின் உடலமைப்பு கவர்ச்சியாக அமைந்திருக்கும்' (அஹ்மத்).

'சற்று குண்டான உடலுடையவனாக இருப்பான்' (முஸ்லிம்).

'பின்புறத்திலிருந்து பார்த்தால் அவனின் தலைமுடி அலை அலையாய் இருப்பதாகத் தெரியும் (அஹ்மத்).

'பரந்த நெற்றியுடையவனாக இருப்பான்' (பஸ்ஸார்)


'குள்ளமாகவும் கால்கள் இடைவெளி அதிகம் உள்ளவனாகவும் இருப்பான்' (அபூதாவூத்).

தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் இது. இது அல்லாத எந்த அறிமுகமும் சிலரால் கற்பனை செய்யப்பட்டதே என்பதை கருத்தில் கொள்க! 'அவனின் ஒரு கண் ஊனம், மறுகண் பச்சை நிறக்கல் போல் இருக்கும்' என்பதுதான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும்.

தஜ்ஜால் எங்கு உள்ளான்:

தஜ்ஜால் இனிமேல் பிறப்பவன் அல்ல. ஏற்கனவே பிறந்தவன் ஆவான். அவன் தற்போதும் இருந்து வருகிறான். இவனை, கிருத்துவராக இருந்து பின்பு இஸ்லாத்தில் இணைந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் நேரில் ஏதேச்சையாக கண்டுள்ளார்கள். அவனை தான் கண்ட விபரத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளனர். தஜ்ஜால் பற்றிய இதர விபரம் அந்த ஹதீஸ் மூலம் நமக்குப் புரிகிறது.

நபி (ஸல்) அவர்களின் (தொழுகைக்கான) அழைப்பாளர் 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' (தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது) என்ற அறிவித்தார். இதைக் கேட்ட நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே மிம்பரில் அமர்ந்தார்கள். 'அனைவரும் தொழுத இடத்திலேயே அமருங்கள்' என்று கூறிவிட்டு 'நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள், 'அல்லாஹ்வும் அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களை அச்சுறுத்தவோ ஆர்வமூட்டவோ உங்களை நான் ஒன்று கூட்டவில்லi. தமீமுத்தாரி முன்பு கிருத்தவராக இருந்தார். அவர் வந்து இஸ்லாத்தில் இணைந்து விட்டார். தஜ்ஜால் பற்றி உங்களுக்குச் கூற வந்ததுக்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியதை நீங்களும் கேளுங்கள்).

லக்ம், ஜுகாம் ஆகிய சமூகத்தில் முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன் (புயல் காரணமாக) ஒரு மாதகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் சமயம் ஒரு தீவில் ஒதுங்கினோம். கப்பலில் வைத்திருந்த சிறு தோணிகள் மூலம் அந்த தீவில் நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் மயிர்கள் நிறைந்த ஒரு பிராணி எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாதைகளை (உறுப்புக்களைக்) கூட அவர்களால் அறிய இயலவில்லை.

அந்தப் பிராணியிடம் அவர்கள், 'உனக்கு ஏற்பட்ட கேடே நீ என்ன பிராணி?' என்று கேட்டனர். 'ஜஸ்ஸாஸா' என்று அது கூறிவிட்டு, 'நீங்கள் இதோ இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் செல்லுங்கள், அவர் உங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டுவார்' என்றும் அப்பிராணி கூறியது. அந்த மனிதனின் பெயரையும் கூறியது. அந்தப் பிராணி ஒரு பெண் ஷைத்தானாக இருக்குமோ என்று பயந்தோம்.

நாங்கள் அந்த மடத்தை நோக்கி விரைந்தோம். அங்கு சென்றதும் ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை இதுவைர நாங்கள் பார்த்ததே இல்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும் முட்டுக்கால்களுக்கும் இடையே தலையைச் சேர்த்து கழுத்தில் இரும்பால் கட்டப்பட்டிருந்தான், 'உனக்கு ஏற்பட்ட கேடே! ஏனிந்த நிலை' என்று கேட்டோம்.

அதற்கு அந்த மனிதன் '(எப்படியோ) என்னைப் பற்றி அறிந்து விட்டீர்களே! நீங்கள் யார்? எனக் கூறுங்கள்' என்றான். 'நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் நாங்கள் பயணம் செய்தபோது, ஒரு மாதம் கடல் அலையால் அலைகழிக்கப்பட்டோம். இப்போது தான் இந்த தீவிற்கு வந்தோம். அடர்ந்த மயிர்கள் நிறைந்த ஒரு பிராணியைக் கண்டோம். அது, நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதரைப் பாருங்கள்' என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம்' என்று கூறினோம்.

'பைஸான் என்ற இடத்தில் உள்ள பேரீத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என்று கூறுங்கள்' என அந்த மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதற்கு அம்மனிதன் 'விரைவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் போகலாம்' என்றான். 'சூகர் எனும் நீருற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்துகிறார்களா? என்று கேட்டான். அதற்கு நாங்கள் ' ஆம், தண்ணீர் அதிகமாகவே உள்ளது. அங்குள்ளோர் அத்தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர்' என்று கூறினோம்.

'உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக்கூறுங்கள்' என அம்மனிதன் கேட்டான். 'அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு, தற்போது மதீனாவில் உள்ளார்' என்று கூறினோம். 'அரபியர்கள் அவருடன் போர் புரிந்தார்களா?' என்று அம்மனிதன் கேட்டான். ஆம் என்றோம். 'போரின் முடிவு எப்படி இருந்தது?' என்று கேட்டான். 'அவர் தன் அருகில் வசித்த அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்' என்று கூறினோம். 'அவருக்கு அவர்கள் கட்டுப்படுவதே சிறந்தது' என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கிருந்து) வெளிறே வெகு சீக்கிரம் எனக்கு அனுமதி தரப்படலாம். அப்பேது நான் வெளியே வருவேன். பூமி முழுதும் பயணம் செய்வேன். நாற்பது நாட்களில் எந்த ஊரையும் நான் அடையாமல் விட மாட்டேன். மக்கா, மதீனா இரு ஊர்களைத் தவிர. அந்த இரு ஊர்களும் எனக்கு தடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு வானவர் என்னை எதிர் கொண்டு தடுப்பார். அதன் வழிகள் அனைத்திலும் அதைக் காண்கானிக்கின்ற வானவர்கள் இருப்பர்' என்று அம்மனிதன் கூறினான்.

இவ்வாறு தமீமுத்தாரீ (ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம் கைத்தடியை மிம்பரில் தட்டிவிட்டு, 'இது (மதீனா) தூய்மையான நகரம், தூய்மையான நகரம்' என்று கூறினார்கள். 'இதே செய்தியை நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் தானே' என்று மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதும், மக்கள் 'ஆம்' என்று பதில் கூறினர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் சிரியா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்லை, இல்லை! அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜால் என்பவனை பார்த்தோரில் முக்கியமானவர், தமீமத்தாரி (ரலி) அவர்கள் ஆவார். அவர்களும் கூட கடல் பயணத்தின் போது, புயலால் திசை மாறி, ஒரு தீவுக்கு ஒதுங்கியதால் அது எந்தப் பகுதி என்பதை சரிவர புரிந்து கொள்ள இயலாததால் குறிப்பிட்ட இடம் பற்றி அவர்களால் கூற இயலவில்லை. இதனால் தான் நபி (ஸல்) அவர்களும் கூட தமீமுத்தரி (ரலி) அவர்களின் தகவல் அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கிறார்கள். அவன் இருக்கும் இடம் இதுதான் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், ஒரு கடல்கரைத் தீவில் அவன் இருக்கிறான் என்பது மட்டும் உறுதியாகிறது.


தஜ்ஜால் ஒரு காஃபிர்:

தங்களை நபி என்று வாதிடுவோர் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, அவர்களை 'தஜ்ஜால்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த தஜ்ஜாலை அவர்களில் ஒருவனாக கருதிவிடக் கூடாது.

பொதுவாக முஸ்லிம்களை(இறைவனுக்கு முற்றிலும் அடிபனிந்தவரை) வழிகெடுக்கும் பணியில் ஈடுபடுவோரில் ஒரு சாரார் தங்களையும் முஸ்லிம்(இறைவனுக்கு முற்றிலும் அடிபனிந்தவரை) என்று கூறிக் கொண்டே வழிகெடுப்பர். மற்றொரு சாராரோ தங்களை முஸ்லிம்(இறைவனுக்கு முற்றிலும் அடிபனிந்தவரை) எனக் கூறாமல் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். நபி என்று கூறி வழிகெடுத்த தஜ்ஜால்கள் (பொய்யர்கள்) முதல் வகையினர். இந்த தஜ்ஜாலோ இதில் இரண்டாம் வகையினரைச் சேர்ந்தவன்.

'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே 'காஃபிர்'(இறை நிராகரிப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து மூஃமின்களும்(இறை நம்பிக்கையாளர்களும்) அதைப் படிப்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்-முஸ்லிம்.

'இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் - அஹ்மத்.

தஜ்ஜால் இயற்கையிலேயே காஃபிர்(இறை நிராகரிப்பாளன்). யூதன் என்பதே சரி! தங்களை நபி என்று வாதிடுவோரை 'தஜ்ஜால்' எனக்குறிப்பிடுவது, அவனைப் போல் இவர்கள் குழப்பவாதிகளாகவும், பொய்யர்களாகவும் இருந்ததுதான். எனவே அவர்களில் ஒருவனாக இவனைக் கருதக் கூடாது.

தஜ்ஜால் தன்னைக் கடவுள் எனக் கூறுவான்:

'தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே கடவுள்' என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இறைவன்' என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.

தன்னை கடவுள் எனக்கூறியும், கடவுளாக ஏற்க வேண்டும் என்று கூறியும் தஜ்ஜாலின் குழப்ப நிலைத் தொடரும்.

தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்:

'வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'

'ஒரு மனிதனைக் கொன்று அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர் நூல்-அஹ்மத்.

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். 'இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.

இப்படி பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும்(இறைவனுக்கு முற்றிலும் அடிபனிந்தவரை) வீழ்வர். சாதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை(இறை நம்பிக்கையை) இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள் செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.

தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை:

'...பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜாலை ஏற்க மறுத்துப் புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.

தஜ்ஜாலிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை:

'தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

தஜ்ஜால் வாழும் காலம்:

தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் இருப்பான்? என்று நாங்கள் கேட்போது, 'நாற்பது நாட்கள் இருப்பான். ஒரு நாள், ஒரு வருடம் போன்றும், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள் போன்றும் இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

தஜ்ஜால் போக இயலாத ஊர்கள்:

'மதினா நகருக்கு தஜ்ஜால் பற்றிய பயம் தேவை இல்லை. அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவு வாயில் (பாதைகள்) இருக்கும். ஓவ்வொரு பாதையின் நுழைவாயிலிலும் இரண்டு (வானவர்கள்) இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ பக்ரா (ரலி) நூல் - புகாரீ.

'அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களுக்கும் அவன் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளிவாசல், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்களையும் அவனால் நெருங்க இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள் (அஹ்மத்).

தஜ்ஜாலிடமிருந்து தப்பிக்க...

தஜ்ஜால் ஏற்படுத்தும் குழப்ப நிலைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றி, ஈமானையும், பாதுகாத்திட இரண்டு வழிகளை நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் காணும் மக்களுக்காக கற்றுத் தருகிறார்கள்.

(1) அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கை விட்டும் பாதுகாப்புத் தேட நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

'அல்லாஹூம்ம இன்னீ அஊதுபிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இறைவனா! தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). தொழுகையில் இதைத் தொடர்ந்து ஓதிப் பிராத்திக்கும் எவரும் தஜ்ஜால் பின்னே போக மாட்டார்கள். தொழாதவர்களும், தங்களின் பிரார்த்தனையில் இதைக் கேட்காதவர்களும் தஜ்ஜாலின் மாயா ஜாலங்களில் மயங்கி ஈமானை இழப்பார்கள். அவன் பின்னே அவனை ஏற்றுக் செல்வார்கள்.

(2) உங்களில் ஒருவர் தஜ்ஜாலை அடைந்தால், 'கஹ்பு' அத்தியாயத்தின் ஆரம்ப பகுதியை ஓதிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.


இந்த இரண்டு வழிகள் மூலமே தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இருந்து தப்பிக்க இயலும்.

தஜ்ஜால் கொல்லப்படும் இடம்:

தஜ்ஜால் கீழ் திசையிலிருந்து மதீனாவை குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை 'ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் 'லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

ஒற்றைக் கண்ணனான, காஃபிர் என நெற்றில் எழுதப்பட்டுள்ள தஜ்ஜால் மக்களிடையே வந்து, சில மாயாஜாலச் செயல்களில் ஈடுபட்டு, நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை வழிகெடுக்கும் படியான செயலில் ஈடுபடுவான் என்பது, மறுமை நாள்வரும் முன் நடக்கக்கூடிய செயலாகும்.

தஜ்ஜாலின் வருகை மூலம் மறுமை நாள் மிக மிக ... அருகில் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மறுமை நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் பல நடந்து முடிந்து விட்டது போல், இதுவும் நடக்கும் என்ற உண்மையை நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றும் எவரும் தங்கள் பிரச்சாரத்தை பெண்களிடமிருந்தே துவங்குகின்றனர். தங்கள் மீது பெண்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சில போலி விளம்பரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் கூறிப் பெண்களை நம்ப வைக்கின்றனர். இதே வழிமுறையைத் தான் தஜ்ஜாலும் கையாளுவான். அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். ஒரு குடும்பத்தில் மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொண்ட ஆண்கள் பலர் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், தர்ஹாக்களுக்குச் செல்வதையோ, அனாச்சாரங்கள் புரிவதையோ பிரச்சாரம் செய்தாலும் கூட தடுத்து நிறுத்த முடிவதில்லை. இதே நிலைதான் தஜ்ஜால் வரும்போதும் நிகழும்.

'பமிரிகனாத் என்னும் இந்த உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்போது அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவுக்கெனில், (அன்று) ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம் சென்று அவர்கள் தஜ்ஜாலைப் பின்பற்றிச் சென்றுவிடக் கூடாது என அஞ்சி, அவர்களைக் கயிற்றினால் கட்டி வைப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் - அஹ்மத்.

அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் நயவஞ்சகர்கள் அனைவரும் தஜ்ஜாலின் அற்புதங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமானை இழந்து அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எனினும், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தஜ்ஜாலைப் பின் பற்றுவார்கள் என்று இந்த நபி மொழி கூறுவதால், பெண்கள் கூடுதலான எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். தஜ்ஜாலின் சோதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடிய வண்ணம் இருக்க வேண்டும்.

தஜ்ஜாலை பெண்களே அதிகம் பின்பற்றுவர். கிறித்தவ வேதமான பைபிள் மற்றும் இந்து வேதங்களிலும் தஜ்ஜால் பற்றி குறிப்பு காணப்படுகிறது.

(5) ஈஸா(JESUS) நபியின் வருகை:

நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்... (அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன் கையில்  வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

மறுமை நாள் வரும் முன், 'வர உள்ளது' என்பதை தெரிவிக்கும் அடையாளமாக ஈஸா நபி (அலை) அவர்களின் வருகையும் இருக்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் வருவாரா? இது சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் எழவே செய்யும்.

'ஈஸா (அலை) அவர்கள் மறுமைநாளின் அடையாளமாவார்' என்ற இறைவனின் அறிவிப்பை பலமுறை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாசகம், ஈஸா நபியின் வருகைக்கு முன் வந்த 'தவ்ராத்'(பழைய ஏற்ப்பாடு) வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அல்லது அவர்களுக்கே வழங்கப்பட்ட 'இன்ஜீல்'(BIBLE) வேதத்தில் கூறப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் வந்து சென்றபின் இனியும் வருவார் என்றே குர்ஆன் கூறுகிறது. எனவே, ஏதோ ஒரு ஈஸா அல்ல முன்பு வந்த நபியான ஈஸாதான் மீண்டும் வருவார் என்பதே உண்மை. இதனால் தான் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின் வருகையும் அமைந்துள்ளது.

இன்னும் மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன். மிக ஞானமுடையவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158).

'அவரை அவர்கள் கொல்லவில்லை' என அல்லாஹ் அறிவிப்பதின் மூலம் அவர்கள் கொல்லப்படவில்லை என்பதோடு 'உயிருடன் உள்ளார்' என்பதும் விளங்கும். 'உயிருடன் எங்கே உள்ளர்கள்?' என்ற கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக தன்னிடம் உயர்த்திக் கொண்டான் என்றும் அல்லாஹ் கூறி விட்டான், அதாவது, ஈஸா நபி (அல) அவர்கள் 'உயிருடன் வானில் உள்ளார்' என்பது மேற்கண்ட வசனம் மூலம் உறுதியாகிறது.
« Last Edit: July 25, 2011, 07:54:19 PM by Yousuf »

Offline Yousuf

எப்போது வருவார்கள்?

டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா (கோபுரம்)வுக்கு அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்கனின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும், தலையை உயர்த்தினால் முத்துப்போல் தண்ணீர் சிதறும். அவரது மூச்சுக் காற்று படும் எந்த இறை மறுப்பாளரும் இறந்தே போவார். பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' எனும் ஊர்வாசலில் அவனைப் பிடித்துக் கொல்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்-திர்மிதீ.

தஜ்ஜால் வந்து, பூமியில் பெரும் குழப்பம் விளைவிக்கும் காலகட்டத்தில் ஈஸா நபி (அலை) இறங்கி வந்து, அவனைத் தேடிக் கொல்வார்கள். தஜ்ஜாலின் வருகையை வைத்தே ஈஸா (அலை) அவர்களின் வருகையும் இருக்கும்.

(6) யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை

'இறுதியில் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள், உடனே அவர்கள் (வெள்ளம் போல்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள்'... (அல் குர்ஆன் 21:96).

மறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும் கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும் ஒன்றாகும். இந்த வசனத்தில் 'அவர்கள் திறந்து விடப்படுவார்கள்' என்று உள்ளது. இதிலிருந்து அவர்கள் அடைத்து வைக்கபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.

மேலும், அவர்கள் இனி படைக்கப்பட்டு வருபவர்கள் இல்லை. எற்கனவே உள்ள படைப்பினம் தான் என்பதையும் புரிய முடிகிறது.

'அவர்கள் மேடான பகுதியிலிருந்து விரைந்து வருவார்கள்' என்ற வாசகத்தின் மூலம் அவர்கள் மலைப் பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் விளங்க முடிகிறது.

இரும்பு சுவருக்கு பின்னே...!

(துல்கர்ணைன் எனும் மன்னர்) இரண்டு மலைகளுக்கும் முன்னே ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள். இவர்கள் பேசுவதை அவர்கள் விளங்கிக் கொள்பவர்களாக இல்லை. துல்கர்ணைன் அவர்களே! யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இந்த பூமியல் குழப்பம் விளைவித்து வருகின்றனர் எனவே, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே நீங்கள் தடுப்பு (ச் சுவர்) ஏற்படுத்துதுவதற்காக உங்களுக்கு நாங்கள் வரி செலுத்தட்டுமா, என்று கேட்டனர்.

'என் இறைவன் எனக்களித்துள்ள வசதி எனக்குச் சிறந்ததாகும் எனவே, (உடல்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவுங்கள். அவர்களுக்கும் உங்களுக்குமிடையே ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துகிறேன்' என்று துல்கர்ணைன் கூறினார்.

'என்னிடம் இரும்புக் பாளங்களைக் கொண்டு வாருங்கள்' (என்றும் கூறினார்), இரு மலைகளுக்கிடையே (உள்ள இடைவெளி) மட்டமானதும் 'ஊதுங்கள்' என்றார். அது நெருப்பாக ஆனதும் (செம்பை) என்னிடம் கொண்டு வாருங்கள் இதன் மீது அதை நான் ஊற்றுகிறேன் என்று கூறினார்.

இதில் ஏறவும் அவர்கள் சக்தி பெற மாட்டர்கள். அதில் துவாரமிடவும் சக்தி பெற மாட்டார்கள்.

இது என் இறைவனின் அருட்கொடையாகும். (எனினும்) என் இறைவனின் வாக்கு வரும்போது அதை அவன் தூள்தூளாக்குவான். என் இறைவனின் வாக்கு உண்மையானதாகும்' என்றும் அவர் கூறினார்.

அந்நாளில், அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோதவிடுவோம். மேலும் 'சூர்' ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம்... (அல்குர்ஆன் 18:94-99).


மலைப்பகுதியில் வாழ்ந்த யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பெரும் துன்பங்களை அளித்து வந்துள்ளனர். இதைக் கண்டு செய்வதறியாது நின்ற மக்கள். அப்போது உலகின் அனைத்துப் பகுதியையும் ஆட்சி செய்த மன்னர் துல்கர்ணைன் அவர்களிடம் முறையிட்டனர், அவர் இரும்பைக் காய்ச்சி, அதன் மீது செம்பை ஊற்றியதும், கெட்டியான சுவராக ஆகிpட்டது. கெட்டியான அந்த இரும்புச்சுவருக்குப் பின்புறம் தான் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் உள்ளது என்பது தெரிய வருகிறது. திறந்துவிட்டால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு அலைகள் போல் வருவார்கள் என்பதிலிருந்து அவர்கள் எண்ணிலடங்கா கூட்டம் என்பதும் புரிய வருகிறது.

இவ்வாறு அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதி எங்குள்ளது என்ற விபரம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கூறப்படவில்லை.


தெரியாமல் இருப்பது ஏன்?

நவீனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ள காலம் இது. ஆகாய விமானங்களும். ராடார் கருவிகளும், தொலை நோக்குக் கருவிகளும் என அதி நவீனக் கருவிகள் உள்ள இந்தக் காலத்தில், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வாழும் மலைப் பகுதியயைக் கண்டு பிடிக்கப்படாமல் இருக்க முடியுமா? செம்பை உருக்கி ஊற்றப்பட்டு இரும்புச் சுவர் அமைத்திருக்கும் போது அதன் பளபளப்பைக் கண்டே அவர்களின் இருப்பிடம் அறியலாம் தானே? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. மனிதனிடம் நவீனச் சாதனங்கள் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது அதைவிட உண்மையாகும்.

பூமிக்கு அப்பாற்பட்டு நின்று பூமியைப்படம் பிடித்து இருக்கிறார்கள், பூமியின் பரப்பளவைத்தான் கண்டு பிடித்துள்ளார்கள் தவிர, பூமியை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு கருவிகள் பயன்படவில்லை. சில பகுதிகள் இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது என்றுதான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மண்ணில் இன்றும் மனிதக்கால்களோ, பார்வையோ படியாத இடங்கள் ஏராளமாக உள்ளன.

சுக்கிவாய்ந்த கருவிகள் மூலம் பூமி முழுதும் ஆராயப்பட்டாலும் கூட, காடுகளை மேலோட்டமாகத்தான் பார்க்கலாமே தவிர, துல்லியமாக காணமுடியாது. மரமும், செடிகளும் நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, குகைகளிலோ யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்த கருவிகள் மூலமும் அவர்களைக் காண முடியாது. செம்பு எனும் உலோகம் பாசிபடிந்து பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் அந்த பளபளப்பை கண்டுபிடிக்க முடியாமல் அதை அருகில் இருந்து பார்த்தாலும், தூரத்தில் இருந்து பார்த்தாலும் மலைமேல் புல் வளர்ந்துள்ளது போல் பசுமையாகவே தெரியும்.

எனவே, எவரது கண்களுக்கு புலப்படாத பகுதியில் அந்தக் கூட்டத்தினர் வாழ்கின்றனர். இனி வருங்காலத்தில் மனிதர்கள் அவர்கள் வாழும் பகுதியை அடைய நேரிடலாம். அந்த நேரமும், மறுமை நாளின் அடையாளமாக, அவர்கள் வெளியேறும் காலமாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் விட மறுமையின் அடையாளமாக அவர்களின் வருகை இருக்கும் என்பதாலேயே அல்லாஹ் மனிதர்களின் பார்வையை விட்டு மறைத்து வைத்திருக்கலாம்.


யஹ்ஜுஜ் - மஹஜுஜ் மனித இனமே!

அவர்கள் மனித இனத்தை விட்டும் அப்புறப்படுத்தி, மறைக்கப்பட்டிருப்பதால் அவர்களை ஏதோ ஒரு புது இனம் என்று விளங்கிவிடக்கூடாது, அவர்களும் மனித இனமே!.

யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - அஹ்மத், தப்ரானி.

அவர்களின் உருவம்

'யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள் - அஹ்மத், தப்ரானி.

18:99 வது வசனத்தில் உள்ள 'அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோத விடுவோம்' என்ற வாசகப்படி நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டமாக இருப்பர் என்பது புரிந்தாலும், அவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் புரிகிறது.

இதே போல் புகாரீ ஹதீஸ் (எண் 3348) 'நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்' என்று கூறுகிறது. இந்த வாசகம் மூலமும் அவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. அதே வேளையில் உயரமும் குறைவானது என்பதைப்புரியலாம்.

இது போல் ஒரு நபர் ஆயிரம் குழந்தைகளை வாரிசாகப் பெறுவார்' என்ற வாசகம் மூலம், அவர்களின் பிறப்பின் போதே உயரம் மிகச்சிறியதாக இருக்கும் என்றும் புரியலாம். இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 21:96 வது வசனத்தில் உள்ள 'விரைந்து வருவார்கள்' என்ற வாசகம் மூலம், அவர்கள் அதிவேகமாக இயங்குவார்கள் என்பதும் விளங்குகிறது.


ஈஸா நபியின் பிரார்த்தனையால் அழிவர்!

'யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) 'அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது' என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.

'பூமியில் உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம்' என்று கூறுவார்கள், தங்கள் அம்புகனை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.

பின்னர், ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யுஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கடும் அமளி – துமளியில் ஈடுபடும் யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டம், இறுதியில் ஈஸா நபியிடமும் போருக்கு நிற்பார்கள். அவர்களை முற்றுகையிடும் வேளையில் அவர்களின் பிரார்த்தனை காரணமாக அழிவார்கள். இந்தக் கூட்டத்தினர் வெளியேறிய நாட்களில் கடும் பஞ்சமும் ஏற்படும் என்பதையம் இந்த ஹதீஸில் புரிய முடிகிறது.


யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ்களின் அழிவுக்குப் பின்...

(யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய) அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, 'உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்பக்கொடு' என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல் அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும். பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின் இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர். கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள் நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - திர்மிதீ.

இந்த ஹதீஸ் மூலம், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தாரின் மறைவுக்குப் பின், மக்களிடையே செல்வம் பெருகி, வளமாக வாழ்வு ஏற்படும் என்பதைப் புரிய முடிகிறது. வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் காலத்தில் முஸ்லிம்களின் உயிர்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுவிடும் என்பதும், அதன்பின்னர் இறைமறுப்பாளர்களும் தீய நடத்தை உள்ளவர்களும் வாழும் போதே உலகம் அழியும் என்பதும் தெரிகிறது. தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதும் நமக்குத் தெரிகிறது.

(7) கிழக்கே ஒரு பூகம்பம்,
(8) மேற்கே ஒரு பூகம்பம்,
(9) அரபு நாட்டில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள்


(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள் - நில நடுக்கம் ஏற்படும் அதை நீங்கள் காணும் வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல் - முஸ்லிம்.

பூகம்பங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன இதுவும் மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று. நாம் முன்னரே கண்டோம், இங்கே குறிப்பிடப்படும் பூகம்பங்கள் மூன்றும் பெரிய அளவில் இருக்கும் என்பதையே நமக்கு விளக்குகிறது.

மூன்று பூகம்ப நிகழ்வுகளையும் மூன்று அடையாளங்களாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதால், ஒரே நேரத்தில் இந்த மூன்று பூகம்பங்களும் நிகழாது என்பதையும், அடுத்தடுத்து இந்த பூகம்பங்கள் ஏற்படும் என்பதையும் நாம் விளங்கலாம்.


(10) பெரும் நெருப்பு


'யமனிலிருந்து நெருப்புத் தோன்றி மக்களை அவர்களின் மஹ்ஷரின் பால் விரட்டிச்செல்லும். அது நிகழும் வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுihபா (ரலி) நூல் - முஸ்லிம்.

யமனில் தோன்றும் இந்த நெருப்பு மக்களை நாலா திசைகளிலும் சூழ்ந்து கொள்ளும். இந்த நெருப்பின் வளையத்திற்குள் மக்கள் சிக்கிக்கொள்வர். மக்கள் ஓவ்வெடுக்க எண்ணும் போது, அந்த தீயும் ஓய்வெடுக்கும், உண்ணும் வரைக்காத்திருக்கும், பிறகு துரத்தும்.

அவர்களில் மீதாமான (மூன்றாம் பிரிவி)னர்களை (பூமியில் ஏற்படும் பெரும்) தீ நெருப்பு ஒன்று திரட்டும். அவர்கள் மதியம் ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அவர்கள் அடையும் போதும், மாலை நேரத்தை அவர்கள் அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்கின் போதும்) அந்த நெருப்பு அவர்களுடனேயே இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6522.

மறுமை நாளின் அடையாளமாக மக்களை நாலா திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டும் வகையில் உள்ள பெரும் நெருப்பும் ஒன்றாகும்.

'ஹிஜாஸ் பகுதியலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, ஷாம் நாட்டின் புஸ்ரா (ஹவ்ரா) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7118.

இந்த ஹதீஸல் கூறப்படும் தீவிபத்து என்பது வேறு. பெரும் அடையாளங்களில் ஒன்றாகக் கூறப்படும் 'பெரும் நெருப்பு' என்பது வேறு.

'இந்த நெருப்பு ஹிஜ்ரி 654 நடந்து முடிந்து விட்டது. ஹிஜாஸ் பகுதியில் இந்த தீவிபத்து ஏற்படும் முன் பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்திற்குப் பின் 'அல்ஹர்ராப்' பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, எரிமலை ஒன்றும் வெடித்தது. இந்த நெருப்பு, புஸ்ரா நகரின் எல்லை வரைத் தெரிந்தது' என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, சிறிய அளவில் அணைக்க இயலாத அளவுக்கு ஏற்படும் நெருப்பை மறுமை நாளின் அடையாளம் எனக்கருதத் தேவை இல்லை. இதே வேளையில் மறுமை நாளின் அடையாளமாக பெரும் தீவிபத்து ஏற்படும். அது அணைக்க இயலாத அளவுக்கு இருக்கும். இந்த நெருப்பின் வேகம் கூடுதலாக இருக்கும் என்பதோடு, அது மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும். மக்கள் உண்ண, உறங்க விரும்பினால் அதற்காக சிறிது அவகாசம் தரும். அதன்பின் மீண்டும் துரத்தும். எனவே, மறுமை நாளின் அடையாளமாக 'பெரும் நெருப்பு' ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வோமாக!

 

வேண்டுகோள்!

இதுவரை மறுமை நாள் ஏற்பட உள்ளது என்பதை உணர்ந்திட சில அடையாளங்கள் உண்டு என்று நமக்கு நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள அடையாளங்களைக் கண்டோம். அவற்றில் பல முடிந்துவிட்டன, நிகழ்ந்து விட்டன, கண்கூடாக நாமும் கண்டுள்ளோம்.

பெரும் அடையாளங்களாக உள்ள 'புகை மூட்டம், சூரியன் மேற்கே உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ் மறறும் மஹ்ஜுஜ் கூட்டம் வருகை, கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபுப் புகுதியில் ஒரு பூகம்பம், பெரும் நெருப்பு' ஆகிய பத்து அடையாளங்கள் பற்றியும் அறிந்து கொண்டோம். இவை வெகு விரைவில் நிகழும் என்பதையும் அறிந்து கொண்டோம்.

மறுமை நாள் வெகுவிரைவில் வர உள்ளது. மறுமை வாழ்வே நிலையானது என்பதால் மறுமை நாள் சிறப்புற அமைய முயற்சிப்பதே சரியான அணுகுமுறையாகும்.

'உலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமேயன்றி வேறில்லை. இறையச்சமுடையோருக்கு மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் அதை சிந்திக்க வேண்டாமா?... (அல்குர்ஆன் 6:32)

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும் ஒரு (வானவர்) அனைவரையும் அழைத்து, 'சொர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும் வாழ்வீர்கள். ஒரு போதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு போதும் நோயாளியாக ஆக மாட்டீர்கள், மேலும் நீங்கள் இங்கு இளமையிலே இருப்பீர்கள். ஒரு போதும் முதுமையடையமாட்டீர்கள். மேலும் நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிப்பீர்கள். ஒரு போதும் கஷ்டப்பட மாட்டீர்கள்' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்கள் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.

எனவே மறுமையும், அதில் கிடைக்கும் சொர்க்க வாழ்க்கையுமே நிரந்தரமானது என்பதை உணர்ந்து, இந்த உலகில் வாழும்போதே நற்செயல் புரிந்து , நல்லடியார்களில் ஒருவராக நாமும் மறுமைநாளில் சேர்ந்திருக்க முயற்சிப்போமாக!

அல்லாஹ் போதுமானவன்!!!
« Last Edit: July 25, 2011, 07:57:59 PM by Yousuf »