வர்ணங்களால் ஆனதே
இந்த உலகம்
இயற்கைக்கு என்றும்
ஹோலிப்பண்டிகை தான்
அது இரவு பகல்
வர்ணங்களால் விளையாடுகிறது
பூமி சுழன்றுகொண்டேயிருக்கும்
பிரமாண்டமான கலைடாஸ்கோப்
அதன் ஒவ்வொரு வர்ணகோலத்தையும்
நான் பருவம் என்கிறோம்
வானவில் வானத்தின்
காதல் கடிதம்
பூமியின் மேல் அதற்கு
காதல் வரும் போதெல்லாம்
ஏழு வர்ணங்களில் காதல் கடிதம் வரைகிறது
சூரியன் வண்ணஜானி
அதனால் தான் அவன்
ஓவியம் வரைவதில்லை
வர்ணங்களை அவன்
வானவீதியில் கொட்டி விடுகிறான்
அவை வானமெங்கும்
கூடி கும்மாளமடிக்கின்றன
பெண் வண்ணமாகவும் தூரிகையாகவும்
இருப்பவள்
வண்ணங்களால் வரையப்பட்டவள்
வண்ணங்களை அணிபவள்
செல்லும் வழியெல்லாம்
வண்ணங்களை தூவிச் செல்பவள்
வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்குபவள்
அவள் மட்டும் இல்லாதிருந்தால்
உலகம் கருப்பு வெளுப்பாகவே
இருந்திருக்கும்
மனிதன்
வண்ணங்களால் வாழ்கிறான்
வண்ணங்களுக்காகவே வாழ்கிறான்
தோலில் கருப்பு என்றால்
அழகில்லை என்பான்
கருவிழியையோ கவிதை என்பான்
கருமை என்றால்
துக்கத்தின் குறியீடு என்பான்
பள்ளியறை கருமையை
இனிமை என்பான்
சிவப்பு என்றால்
அபாயத்தின் அறிகுறி என்பான்
கன்னத்தின் சிவப்பை
காதல் என்பான்
மஞ்சள் என்றால்
மங்கலம் என்பான்
மஞ்சக்காமலை வந்தால்
மருத்துவரை தேடி ஓடுவான்
மணப்பத்திரிகைக்கு
மஞ்சள் தடவுவான்
ஆபாச பத்திரிகைக்கு
மஞ்சள் பத்திரிகை என திட்டுவான்
புல்லை பூமியின்
பச்சை ஆடை என வர்ணிப்பான்
ஆபாச எழுத்தை
பச்சை என அருவருப்பான்
மனிதர்களில் சிலர் பொம்மைகள்
பூசப்படும் வர்ணத்தை பேசாமல்
ஏற்றுக் கொள்வார்கள்
சிலர் தங்கள் உண்மையான
வண்ணத்தை மறைத்துக்கொண்டு
உலகை ஏமாற்ற
வேறு வண்ணத்தை பூசிக்கொள்கிறார்கள்
சிலர் பச்சோந்திகள்
அடிக்கடி வண்ணம் மாறுவார்கள்