மா சே துங் சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் அவர் ஒரு ராஜதந்திரி !!
இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை (Kuomintang) எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.
மாவோ 1893 ஆம் ஆண்டில்சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். மா சே துங்கின் தந்தை பெயர் மா ஷென் செங், தாயாரின் பெயர் வென் குய்மெய்.
1893 ஆம் ஆண்டில்சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆறு வயதான போது அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் விவசாய வேலைகளுக்கு அனுப்பப்பட்டார். எட்டு வயதானபோது கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதிகாலையிலும் இரவிலும் நிலத்தில் வேலை செய்ய வேண்டும். பகலில் படிக்க வேண்டும். பள்ளி ஆசிரியரின் கண்டிப்பின் காரணமாக மாவோ தனது பத்து வயதில் கிராமத்தை விட்டு ஓடி விட்டார். அவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து கிராமத்துக்கு கொண்டு வந்தனர். அடி கிடைக்கும் என்று பயந்து கொண்டிருந்த மாவோவிடம் அவருடைய தந்தையார் இதமாக நடந்து கொண்டார். ஆசிரியரும் சற்று நிதானமாக நடந்து கொண்டார்.
மாவோவிற்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் வீட்டுக் கணக்கு வழக்குகளையும் அவர் பார்க்க வேண்டியிருந்தது. கணக்கெழுதும் வேலையை இரவில் செய்ய வேண்டியிருந்தது. வயது அதிகரிக்கத் தந்தையுடன் வாக்குவாதங்கள் அதிகரித்தன. ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்பு தந்தையுடன் வாக்குவாதம் வலுத்து, மாவோ வீட்டை விட்டு ஓடினார். குளத்தில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அவரை சமாதானப்படுத்தி தந்தை சில சலுகைகள் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
மாவோ 13ம் வயதிலேயே தனது பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு நாள் முழுவதும் வயல் வேலைகளில் ஈடுபட்டார். இரவில் கணக்கு வழக்குகளை பார்த்தார். மாவோவிற்கு 14 வயது ஆன பொழுது அவருடைய தந்தையார் 20 வயதுடைய ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தார். அந்தப் பெண்ணுடன் மாவோ ஒரு நாள் கூட வாழ்ந்ததில்லை.
அரசியல் ஆரம்பம்
எச்சரிக்கை தரும் வார்த்தைகள் (Words of Warning) என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்களையும் மேற்கத்திய நாடுகளின் வலிமையையும் தெரிந்து கொண்டார். அந்த நூலைப் படித்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டும் என்று ஆவல் மாவோவுக்கு ஏற்பட்டது. இதனால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் உதவியால் படித்தார்.
இந்த நேரத்தில் சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார்.
ஆட்சி
ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1974 ஆம் ஆண்டில் அப்போது சியாங்-கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
சவால்கள்
முப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலை விரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு 56 வயது. புதிய சீனாவை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது.
'வலிமையும் வளமும் மிகுந்த சீனா' என்ற இலட்சிய இலக்கை பின்பற்றிய மாவ், நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். எனினும், இவருடைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக-அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூக கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர்.
மாவ், தன் இறுதிக் காலம் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதற்கு அவரது அரசியல் சாதுரியமும் ஆளுமையும் உதவியது.