தவளைச் சத்தம்
மழைகாலத்தில் மழையைப் பற்றி பேசுவதும் எழுதுவதும், வெயல்காலத்தில் வெயலைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் ஒருவிதம், ஆனால் வெயல்காலத்தில் மழையைப் பற்றியும் மழைக்காலத்திலும் கடும்குளிர்காலத்திலும் வெயலைப் பற்றி பேசுவதும் வேறு விதம். நான் பேசப்போவது மழைக்காலத்தைப்பற்றி வெயல்காலத்தில், என் சிறுவயது முதலே எனக்கு மழைகாலத்தின் மீது தீராத காதல், மழைப்புயல் வெள்ளம் என்று ஊரே அல்லோகலமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் மழையை, வெள்ளத்தை, கடும்குளிரை ரசித்துகொண்டிருப்பேன், மற்றவர் துணிகளை துவைத்து வெயலில் உலர்த்த இயலவில்லையே என்று நொந்து கொண்டிருக்கும் போது நான் மட்டும் அவற்றை ரசித்துக் கொண்டிருப்பேன்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் மழைக்காலம் எப்போதுமே மக்களை ஒரு வாரத்திற்கு அதிகமாக அலைகழிப்பதில்லை. தமிழ்நாட்டை சூறையாட வேண்டிய புயல் தெலுங்கானாவை நோக்கி கரையை கடந்தது, நாகபட்டினத்தில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் வலுவிழந்து கரையை கடந்தது என்று வானிலை அறிக்கையில் பெரும்பாலும் கேட்க்க முடியும். குறைந்த காற்றழுத்தத்தினால் ஏற்ப்படும் ஒரு வாரத்திற்கும் குறைவான மழையை கூட நம்ம ஊர் மக்கள் பொறுத்துக் கொள்வதில்லை, ஆனால் போதிய மழையின்றி பயிர்கள் நாசமடைந்தன, குடிநீர் பற்றாகுறையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் என்ற குறைகளையும் தவறாமல் நம்மால் கேட்க முடிகிறது.
தமிழ்நாட்டிற்கு வருகின்ற மழையை ஆட்ச்சியிலிருப்பவர்கள்தான் நிறுத்தி வைத்திருப்பது போல, குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறியது, விவசாயிகளின் பயிர்சாகுபடிக்கு காவிரிநீர் திறந்து விடபடாததை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, போன்ற பலவித குற்ற சாட்டுகள் கிளம்பும்.
மழைகாலங்களில் இரவில் தவளைகளின் ஓயாத கீதம் என்னை உறங்கவிடாது, நான் சிறுமியாக இருக்கும் போது என் அம்மாவிடம் இந்த தவளைகள் ஏன் ஓயாமல் பாடிக்கொண்டே இருக்கின்றன என்று கேட்பேன், அதற்க்கு என் அம்மா 'தவளைகளுக்கு மழை என்றால் கொள்ளைப்பிரியம், அதனால் மகிழ்ச்சியில் அவை ஓயாமல் பாடிக்கொண்டே இருக்கின்றன, அப்படி பாடி மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போதே அவற்றின் வயிற்றில் அளவிற்கு அதிகமான காற்று உட்புகுந்து விடுவதால் வயிறு வெடித்து அவை இறந்து விடும்' என்று சொல்லுவார்.
மழைகாலத்தில் வெள்ளம் எங்கிருந்தெல்லாமோ அடித்துக்கொண்டு வருவதால் நீர் பாம்புகளின் வருகையும் அதிகமாகிவிடும், ஆனால் அடித்துக்கொண்டு வரும் நீரில் உள்ள பாம்புகள் அத்தனையுமே நீர் பாம்புகள் இல்லை, வெள்ளம் விஷபாம்புகளின் புற்றிலிருக்கும் பாம்புகளையும் இடமாற்றம் செய்து விடுவதால் விஷபாம்புகளும் வெள்ளத்தில் வந்துவிடும், ஒருமுறை எங்கள் வீட்டின் கதவின் அருகில் வெள்ளம் மிக வேகமாக ஓடிகொண்டிருந்தது, திறந்து பார்த்த போது ஒரு நூறு பாம்புக்குட்டிகள் ஒன்றாக ஒதுங்கி இருந்தது, நாங்கள் கதவை திறக்கவே இல்லை, வெள்ளத்தின் வேகத்தில் அவை மீண்டும் அடித்து செல்லப்பட்டது.
வினோதமான பொருட்க்களை வெள்ளம் இழுத்து வருவதும் உண்டு, கன்றுகுட்டிகள் ஆட்டுக்குட்டிகள், ஏன் சிறிய குழந்தைகளைக் கூட இழுத்துக்கொண்டு வருவதுண்டு, எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டில் அந்த ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையை அதன் தாய் தனியே விட்டுவிட்டு சமையலறையின் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்த சமயத்தில் வாசலிலிருந்த கால்வாயில் மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தில் விழுந்து எங்கோ அடித்துச் செல்லப்பட்டது, கிடைக்கவே இல்லை.
சிலர் 'மழையை வரச்சொல்லி தவளைகள் கத்தும், ஆனால் மழை வருவது தவளைகள் கத்துவதினால் இல்லை' என்று குதர்க்கம் பேசுகின்றனர், மழையைக் காணும் ஆவல் மிகுந்தே தவளைகள் சத்தமிடுவதுண்டு, தான் கத்துவதினால் தான் மழை வருமென்று தவளைகள் ஒரு போதும் சொன்னது கிடையாது. மனிதர்களின் பார்வையில் தவறு இருந்தால் பாவம் தவளைகளும் மழையும் என்ன செய்ய முடியும்.