𝕯𝖊𝖆𝖗 𝕷𝖔𝖛𝖊 : 🍂🦋
எவரிடமும் உடையாத
என் பலகீனங்கள்
உன்னிடம் உடைந்த நாளொன்றில்!
என் காதல் அசலாய்
உன்னோடு ஒட்டிக் கிடந்தது.
அதற்கீடான பரிபூரணமாய்,
காலம் உன்னை எனக்களித்தது.
எனக்கு ஏற்புடையதாய் இல்லையென
நான் நினைத்தவற்றை,
துணை நின்று அணுகச் செய்தாய்!
அக்கணத்தில்...!
நான் முதல் ரசித்த பட்டாம்பூச்சியின் மேனியில் இருந்த வர்ணங்களை எல்லாம்,
உன்னில் கண்ட மிதப்பெனக்கு.
என் அகங்காரம் தளர்த்தி,
அபயம் தேடி,
கைப் பிடித்து,
மடி சாய்ந்து கொள்ள
நான் நாடும் போதெல்லாம்,
வாரி அணைத்துக் கொண்டுள்ளாய்!
அளவற்ற காருண்யம் காட்டுவதில் உனக்கீடாக எவரையும்,
முன்னிருத்தி பார்க்கத் தெரியவில்லை.
தோளில் ஊன்றினாலும்
வலி தெரியாத,
புறாக்களின் பாதம் போல
அத்துனை ஸ்பரிசம் ஏற்படுத்தும் மென்மையான காதல் பட்சி நீ!
எப்போதும் மிகச் செளகரியமாய்
உன்னிடம் மட்டுமே,
சரணாகதி ஆகலாம் என்றாகிவிட்டது..
என் மனம் உனக்காக
இயங்க ஆரம்பித்து
வெகுநாட்களாகின்றன.
மெல்ல மெல்ல நான் என்னை
இழந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால்...!
நான் நானாகத்தான் இருக்கிறேன் என்று கர்வம் கொண்டு திரிகிறேன்.
பரவாயில்லை!
நான் உன்னிடம் மட்டும்
அறுதியாகித் தொலைய வேண்டும்.
ரசிக்கும்படியான
மழைக்கால,
மின்சாரமில்லா பிந்தைய சில இரவுகளில் திடுக்கிட்டு எழும் போது கூட,
உன் மீதான காதலை
உணர்ந்திருக்கிறேன்.
நடுநிசிகளில் விழித்தெழச் செய்யும்
கனவு சிலதில்,
நீ வந்துவிட்டுச் செல்வது
அத்துனை ஒன்றும்
இயல்பானதாயில்லை.
அதன்பிறகான இரவுதனில்
நித்திரை தொலைக்கிறேன்.
இப்போதும் கூட...!
என் அமைதியில்,
என் வலிகளில்,
என் ஆழ்ந்த அழுகையில்,
அயர்ச்சி நிறைந்த என் கண்களில்,
இப்பிரபஞ்சம் பிரசவித்த
மொத்தக் காதலிலுமாய்,
நீதான் இருக்கிறாய்.......