ஒரு கை தட்டினால்
ஓசை வராது
என்றவன் கன்னத்தில்
ஓங்கி அறைந்து
ஓசை வந்ததா
என கேட்டவன் இவன் !
சாஸ்திர கட்டு போட்டு
சம்பிரதாய முடிச்சு இட
செவ்வாய் கிழமை சந்தைகளில்
துண்டு போர்த்திய கரங்களின் சில்மிஷத்தில்
விலைபோகும் காளையில்லை
என சொல்லியவன் இவன்
அப்பா,
வானின் நீளம் அளக்கும்
ஒரு பறவையின் பறத்தலை
போன்றது என் இருத்தல் !
அம்மா,
கன மழையின் ஓய்வில்
ஒரு தாமரை இலை-நீரினை
போன்றது என் இயல்பு !
என கூறியவன் இவன் !!
-------------------------------------
ஸ்ஸ்ஸ்ஸ் !!!
நிகழ்காலத்திற்கு எனை
மீட்டெடுத்து வந்தது
என் தோளில் நீ அளித்த
தேநீர் கோப்பையின்
பக்கவாட்டு சூடு !
மழைச்சாரலுக்கு வழிவிட
ஒரு ஜன்னல்
நாம் அடுக்கடுக்காய் அமர
ஒரு இருக்கை
குளிர் காய வெங்காய பஜ்ஜி !
காற்றில் குப்பைகளை
கூட்டி பெருக்கி
மழைத்துளிகளை தெளித்து
வானவில் கோலம் போட்ட சாலையில்
உன்னுடன் ஒரு பொடிநடை !
அளவான வீடு
அளவில்லா பேச்சு
சாப்பிட ஒரு தட்டு
ஊட்டிவிட இரு கரங்கள்
உப்பில்லா உணவு
தொட்டுக்கொள்ள அலுவலக கதை !
கண்ணை உறுத்தும் நிலவு
போர்த்திகொள்ள மேகம்
அதிகாலை ஒன்பது மணியின்
விழிப்பில்
கன்னத்தில் அறையும்
உன் கூந்தல் !
உன்னை தட்டி கேட்க ஒரு பையன்
எனக்கு வாதாட ஒரு பொண்ணு
அது போதும் நமக்கு… !