ராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு கேது என்றால் அஞ்சாதவர்களே இல்லை. எந்தக் கிரகத்தோடு சேர்கின்றார்களோ. எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் ராகு கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான்.
பங்குவர்த்தகம், பந்தயம், லாட்டரி மூலம் பிச்சாதிபதியை லட்சாதிபதியாக்குவது ராகுவின் வேலையென்றால், பணத்தைப் பறித்து பரதேசியாக்கி மெய்ஞானத்தைத் தருவது, கேதுவின் செயலாகும். அரைகுறையாகப் படித்திருந்தும் அனுபவ அறிவால் மெத்தப் படித்த மேதாவிகளைத் தோற்கடிப்பவர் ராகு என்றால் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என ஆர்ப்பாட்டாம் இல்லாமல் அமைதியாக கருத்துகளை வெளிப்படுத்துபவர் கேது.
ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
சிம்மத்திலிருந்து தன் கதிர்வீச்சுகளால் உலகை ஆளவிருக்கிறார். மருத்துவத்துறை நவீனமாகும். மருந்துகளின் விலை குறையும். மரபணு ஆய்வுத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் அதிகமாகும். தேர்வில் புதிய முறை அமலாகும். பாடத்திட்டங்கள் மாறும். அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெற்றாலும் வேலைச்சுமையை அதிகம் சந்திக்க நேரிடும். புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமலாகும். ஓய்வு பெறும் வயதுவரம்பு குறைக்கப்படும். சூரியன் வீட்டில் ராகு அமர்வதால் புற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர்.
அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும். உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். இன, மத அடிப்படையில் போர் மூளும். 08.01.2016 முதல் 10.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மூட்டு வலி, எலும்புத் தேய்வு வந்து நீங்கும். 11.03.2016முதல் 15.11.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஒவ்வாமை, விபத்துகள், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். 16.11.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அறுவை சிகிச்சை, திருமணப் பிரச்சினை, வழக்குகள், நிம்மதியற்ற போக்கு வந்து நீங்கும்.
கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
கும்பத்தில் அமர்ந்து ஆட்சி செய்வார். சனி வீட்டில் கேது அமர்வதால் பரம்பரைப் பணக்காரர்களும், பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்படைவார்கள். மதமாற்றம் அதிகரிக்கும். மக்களிடையே உழைக்கும் குணம் குறையும். பழைய தொழிற்சாலைகள் நலிவடையும். வழிபாட்டுத்தலங்கள் வன்முறையால் சேதமடையும். தேர்த் திருவிழா கொண்டாட்டங்கள் குறைந்து யோகா, தியானம், கூட்டுப்பிரார்த்தனைகள் அதிகரிக்கும்.
பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காய்ச்சல், குடும்பப் பிரச்சினைகளால் மனநிம்மதியின்மை, பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை உள்ள காலகட்டத்தில் சதயம் நட்சத்திரக்காரர்கள் விபத்துகள், வழக்குகள் மற்றும் மரியாதைக்குறைவான சம்பவங்களைச் சந்திக்க நேரிடும். 21.03.2017 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சினைகள், பசியின்மை, முன்கோபத்தால் கணவன் மனைவி பிரிவு வந்து நீங்கும்.