தொட்டு விலகிச் செல்லும்
தென்றலாய் நாட்களும்
சுழன்றோடுகின்றன...
புதிதாய் வந்த மாற்றத்தில்
கொஞ்சம்
புரியாமல்தான் போனேன்...
நான் பேசும் வார்த்தைகளின்
மொழியை நானே
அறியாமல் அரண்டுதான் போனேன்..
பாலைவனமாய் கிடந்த இதயம்
நந்தவனமாய் மாறியதில்
கிறங்கித்தான் போனேன்....
உன் இதயத்தின் வெளிப்பாடு
எனக்குள் ஈரமாய் நனைய
நனைந்த நினைவுகளை
நித்தம் நித்தம் சேகரிக்கின்றேன்...
மனம் செய்த மாயத்தோற்றம்
இப்பொழுது புரிகிறது
உன் நினைவை மறக்க
முயற்சித்தும் மனம்
உன்னிடமே சரணடைவது
ஏன்?
உலர்ந்த விறகுடன் சேர்ந்து
ஈரவிறகும் எரிவதுபோல்
உன் உலர்ந்த நினைவுடன் சேர்ந்து
என் ஈரநினைவும் எரிகிறது!
நினைவுகளின் சங்கமத்தில்
நித்தமும் முத்துக்குளிக்க
உன் மென்முத்தத்தால்
எனை கலவரப்படுத்து!
இது போதும் எப்போதும்!
அன்பின் மழையில்
ஆறுதலின் ஸ்பரிசத்தில்
ஆயுளின் அந்தமம் வரை
ஆயுட்கைதியாய் உன்னோடு
தொடர்கின்றேன் தண்டிப்பது
நீயானால்...