பருவத்தின் முதல் மழை நாளில்
உன் கைப்பற்றி அமர்ந்திருந்த
நெடுமரத்தின் நிழலின் கீழ்
சிதறியிருந்த நினைவுகளை
சேகரித்து நின்றிருந்தேன்.
முதல் முறை உன் கைகளை பற்றியபொழுது
உன் உள்ளங்கையின் வியர்வை
பிசுபிசுப்பின் மணம்
இன்னமும் மிச்சமிருக்கிறதா
என கைகளை விரித்து முகர்ந்து பார்க்கின்றேன்
எனக்கொன்றும் சாலையை கடக்கத்
தெரியாமலில்லை.
எத்தனையோ சாலைகளை
நீ இல்லாமல் கடந்திருக்கிறேன்,
கடந்துகொண்டும் இருக்கின்றேன்
உன் கரம் பற்றி கடந்த சாலை மட்டும்
மிக மிக நீளமானதொரு சாலையாக
இருந்திருந்தது
ஒரு முறை என்னிடம் வினவினாய்
உன்னிடம் பிடித்தது எதுவென்று
உன் இரு கைகளையும் பற்றி
என் முகத்தை உன் கைகளில் பொதிந்து கொண்டு
உன் கைகள் தான் எனக்கு பிடித்தவை
என கூறினேன்,
எவ்வளவு தொலைவிலிருந்தாலும்
உன் கைகள் அளித்த ஆதூரத்தை
எதிலும் நான் காணவில்லை இன்னமும்.
அனிச்சையாய் கோர்த்து கொள்ளும் விரல்கள் பேசாத நொடிகளின்
மௌனத்தை நிரப்பியபடியே இருந்திருக்கிறது தானே.
விடைபெறும் நோக்கத்தில் என் விரல்கள் பிரிய பிரிய
இன்னும் இன்னுமென கைகளை இறுக்கி வலிமை காட்டுவது உனக்கொரு விளையாட்டு.
விடுபடுவது போல் கைகளை விலக்கி
மீண்டும் இறுக கோர்த்துக் கொண்டு
பிரியும் நிர்பந்தத்தை
நான் சபித்துக் கொள்வேன்.
ஏன் உன்னுடன் கைகளை கோர்த்துக் கொண்டு
நடப்பது போன்ற கனவுகள் வருகின்றன?
எவ்வளவு தூரங்களுக்கு அப்பால் நீயிருக்கிறாய்?
நீ இருக்கிறாய் என்பதை கூட
அறிய முடியாத தூரத்தில்
நான் இருக்கிறேன்.
அத்தனை கனவுகளும் ஒன்று சேர்ந்து
மீப்பெரும் சித்திரமாய் நிற்கிறது.
சித்திரத்தின் ஒளியென உன் கண்கள் மிளிர்கிறது.
முடியாமல் நீளும் அக்கனவில்
மீண்டுமொரு முறை
ஆதூரமாய்
உன் கரங்களை பற்றிக் கொள்கிறேன்
இனியொரு முறை உன் கரம் கோர்க்க போவதில்லை என்று தெரிந்தே தான்
கைகளை கோர்த்திருந்தபடி அந்த புகைப்படத்தை எடுத்து கொண்டோமோ?
தெரிந்திருந்தால் அந்த
கடைசி சந்திப்பில்
உன் கைகளைப் பற்றி,
கடக்க முடியாத எல்லா சாலைகளையும்
மீண்டும் ஒரு முறை கடந்திருப்பேன்.