தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்

<< < (2/3) > >>

Global Angel:
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 6

                                                     

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி!

இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், எகிப்தில் முன்னர் நடந்த ஒரு சம்பவத்தையும் பால் ப்ரண்டனுக்கு நினைவூட்டியது.

இங்கிலாந்தில் ஒரு பாதிரியார் ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபட்டு சர்ச்சால் பதவி விலக்கப்பட்டார். ஆனால் ஹிப்னாடிசமும், சில சித்து வித்தைகளும் தெரிந்த அந்தப் பாதிரியார் தனியாக இயங்க ஆரம்பித்தார். அவர் சக்திகளைக் கண்ட சிலர் அவரைப் பற்றி அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் தன் சக்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களிடம் பணம் பறிக்கவும், தரக்குறைவாக நடந்து கொள்ளவும் செய்தார். இதை பால் ப்ரண்டன் போன்ற பலரும் அறிந்திருந்தாலும் அவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஒரு முறை பால் ப்ரண்டன் அவருக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண்மணி ஒரு இரவில் தூக்கத்தில் நடப்பது போல் தெருவில் நடந்து வரக்கண்டார். அவரை நிறுத்தி விசாரித்த போது அந்தப் பாதிரியார் வரச்சொன்னதாகவும், அவரை சந்திக்கச் செல்வதாகவும் சொன்னார். அந்தப் பெண்மணி பேசிய போது அவர் சுயநினைவில் இல்லை ஏதோ வசியத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது பால் ப்ரண்டனுக்குப் புரிந்தது. அந்த இரவு வேளையில் அந்த நபரிடம் செல்வது நல்லதல்ல என்று பால் ப்ரண்டன் சொல்லியும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. அந்தப் பக்கம் வந்த வேறொரு நண்பரின் உதவியுடன் அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட்டார்.

மறுநாள் யோகிகளைப் பற்றிச் சொல்லி தன்னை இந்தியாவுக்கு அனுப்பிய இந்திய நண்பரைக் கண்டு வருத்தத்துடன் இந்தத் தகவலைச் சொன்னார். (சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல் 1 ல் சொல்லப்பட்ட இந்தியர் அவர்.  )அவரே ஒரு யோகி என்பதைப் பின்னாளில் பால் ப்ரண்டன் உணர்ந்திருந்தார். பால் ப்ரண்டன் சொன்ன தகவல் அந்த இந்திய யோகியை ஆத்திரப்பட வைத்தது. இது போன்ற ஆசாமிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்று சொன்ன அவர் உடனடியாக ஏதோ மந்திரங்கள் சொல்லி அந்த போலி பாதிரியாரை சபித்தார். இந்தியா வந்து யோகிகளின் சக்திகளைக் கண்கூடாகக் கண்டிருந்த பால் ப்ரண்டன் இது அந்தப் பாதிரிக்கு அபாயமே என்றுணர்ந்தார். பெரியதாக ஒன்றும் செய்யாமல் அந்த பாதிரியாருக்கு புத்திமதி கூறி மிரட்டி ஊரை விட்டே போகும்படி செய்து திருந்த சந்தர்ப்பம் தரலாமே என்று சொன்னார். நீங்கள் உங்கள் வழிப்படி முயற்சி செய்யுங்கள் நான் வழிப்படி முயற்சி செய்திருக்கிறேன் என்று அந்த இந்திய யோகி கூறினார்.

இந்திய யோகிகளின் சக்தியைக் கண்கூடாக இந்தியா வந்திருந்த போது கண்டிருந்த பால் ப்ரண்டன் அந்தப் போலிப் பாதிரியாருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து விரைவாக அந்தப் பாதிரியாரை சந்தித்து புத்தி சொல்லி எச்சரிக்கச் சென்றார். அந்தப் பாதிரியார் தங்கியிருந்த இடத்திற்குப் போன போது உள்ளே இருட்டாக இருந்தது. அந்த இடமே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அங்கு விசாரித்த போது அந்தப் பாதிரியார் தன் சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டு இருந்த போது மின்விளக்குகள் திடீரென்று படாரென்று வெடித்தன என்றும் ஏதோ ஒருசக்தி அந்தப் பாதிரியாரை ஆக்கிரமித்தது போல் இருந்தது என்றும் பயத்தில் அந்தப் பாதிரியார் ஏதேதோ பிதற்றிக் கொண்டு ஏதோ சைத்தான் வந்து விட்டதாகவும், இதெல்லாம் சைத்தானின் வேலை என்றும் கத்திக் கொண்டு கீழே மயங்கி விழுந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். பின் அந்த பாதிரியாரை மருத்துவமனைக்கு விரைவாக அவருடைய சீடர்கள் அழைத்துச் சென்றார்கள்.

பால் ப்ரண்டனுக்கு இது அந்த இந்திய யோகியின் சாபம் செய்த வேலையே என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. அந்த சீடர்களிடம் இது நடந்த நேரத்தைக் கேட்டார். அவர்கள் சொன்ன நேரம் அந்த இந்திய யோகி மந்திரங்களை உச்சரித்து சபித்த அதே நேரம்!. அந்த முட்டாள் சீடர்களில் ஒருவனிடம் அவர்களது குருவின் மயக்கம் தெளிந்தவுடன் தரச் சொல்லி பால் ப்ரண்டன் ஒரு கடிதத்தைத் தந்தார். உடனடியாக அந்த ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்றும் இல்லா விட்டால் போலீசில் புகாரும் தரப்படும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். அந்தப் பாதிரியார் பின் அந்த ஊரை விட்டே போய் ஒரு வருடத்திற்குள் ஒரு கிராமத்தில் இறந்து போனார்.

அதே போல் இங்கிலாந்தைச் சேர்ந்த கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) என்பவர் டுடன்காமென் (Tutankhamen) என்ற கிமு பதினான்காம் நூற்றாண்டின் எகிப்திய சக்கரவர்த்தியின் கல்லறையைத் தோண்டிப் பார்க்கும் பணியை 1923ல் மேற்கொண்டார். அந்தக் கல்லறைக்குள் நிறைய செல்வங்கள் உள்ளன என்றும் அந்த செல்வங்கள் மந்திரங்களால் சபிக்கப்பட்ட சாபங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் எகிப்தில் பெருத்த நம்பிக்கை பரவலாக இருந்து வந்தது. பலரும் கார்னர்வான் பிரபுவை அந்தக் கல்லறையை திறக்கப்போவது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்கள். ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கல்லறையைத் திறந்து பார்க்கும் பணியை மேற்கொண்டார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர் இரண்டே மாதங்களில் ஏதோ விஷக் கொசுக்கடியால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது. அன்றும் அவர் கெய்ரோவில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் தெரியக்கூடிய காரணமே இல்லாமல் எல்லா விளக்குகளும் அணைந்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து மின்சாரம் திரும்பக் கிடைத்த போது அவருடைய நர்சு அவர் பிணத்தைக் காண நேர்ந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இங்கிலாந்தில் கார்னர்வான் பிரபுவின் செல்ல நாய் விசித்திரமாய் குலைத்து விட்டு செத்து விழுந்தது.

(அந்தக் கல்லறையைத் திறக்கும் வேலையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் பல்வேறு கால கட்டங்களில் துர்மரணத்தையே சந்திக்க நேர்ந்தது அல்லது பெரிய இழப்புகளை சந்திக்க நேரிட்டது என்று கூறுகிறார்கள்.அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி வந்த இது போன்ற மரணச் செய்திகள் பத்திரிக்கைகளாலும் மக்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது)

தன் நேரடி அனுபவம் மூலமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கல்லறை தோண்டப்பட்டதன் விளைவுகளின் பதிவுகளைப் படித்திருந்ததன் மூலமாகவும் அறிந்ததை இந்த சமயத்தில் பால் ப்ரண்டன் நினைவு கூர்ந்தார்.

(தொடரும்)

Global Angel:
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்- 7

                                           

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்


பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்புத சக்தி படைத்த ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிகளை. அந்தத் தம்பதிகள் கெய்ரோ நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் பெயர் எட்வர்டு அடெஸ் மற்றும் மேடம் மார்கரைட். எட்வர்டு அடெஸ் தன் மனைவியை ஹிப்னாடிசம் செய்து பல அற்புத செயல்களை நிகழ்த்த வல்லவராக இருந்தார்.

அவர்களை சந்திக்கச் செல்லும் முன் பால் ப்ரண்டன் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரிய அதிகாரியின் மனைவியையும் தன்னுடன் வரச் சொன்னார். அந்தப் பெண்மணி மனைவி இது போன்ற செயல்களை எப்போதும் சந்தேகக் கண்ணால் பார்ப்பவராக இருந்ததால் தாங்கள் காணப்போகும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஏமாற்று வேலை இருந்தால் அவருடைய கூர்மையான பார்வைக்குத் தப்பாது என்று பால் ப்ரண்டன் எண்ணினார்.

எட்வர்டு அடெஸ் அவர்களை வரவேற்று நிறைய நேரம் தங்கள் இருவரைப் பற்றியும் சொன்னார். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதைத் தங்கள் வாழ்வில் கண்டறிந்ததாகச் சொன்னார். மனிதன் தனக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை பகுத்தறிவு என்ற பெயரால் கண்டறியத் தவறுவதாகச் சொன்னார். அவருடைய மனைவி மார்கரைட் அதிகம் பேசாத அமைதியான நபராக இருந்தார்.

எட்வர்டு அடெஸ் ஆரம்பத்தில் தன் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த தனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டதாகவும், தொடர்ந்த பயிற்சியால் இப்போது ஓரிரு நிமிடங்களே தேவைப்படுவதாகவும் சொன்னார்.

அவர் தன் வலது கட்டை விரலை தன் மனைவியின் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவர் சொன்னபடியே மார்கரைட் கண்கள் சொருகி உடனடியாக ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்தார். பால் ப்ரண்டன் எழுந்து சென்று மார்கரைட்டின் கண்ணிமைகளை சற்று விலக்கிப் பார்த்தார். கண்மணிகள் நிஜமாகவே மேலே சென்றிருந்தன. இது அவர் முழு பிரக்ஞையில் இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கவே திருப்தியுற்ற பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிடம் தொடரச் சொன்னார்.

ஆரம்பத்தில் ஓரிரு எளிய ஹிப்னாடிச பயிற்சியாளர்கள் செய்யும் நிகழ்வுகளை செய்து காட்டிய எட்வர்டு அடெஸ் அடுத்தபடியாக பால் ப்ரண்டனிடம் மார்கரைட்டின் கண்களைக் கட்டச் சொன்னார்.

பால் ப்ரண்டன் மார்கரைட்டின் கண்களை டேப் போட்டு ஒட்டி வேறு ஒரு சிவந்த துணியால் நன்றாகக் கட்டியும் விட்டார். என்ன முயன்றாலும் கண்களைத் திறந்து பார்க்க இப்போது வழியில்லை. எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “என்னிடம் ஏதாவது செய்யுமாறு என் காதில் ரகசியமாகச் சொல்லுங்கள். நான் செய்கிறபடியே அவளையும் செய்யச் சொல்கிறேன்.”

பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிற்கு மட்டும் கேட்கும்படி காதில் சொன்னார். “வலது கையை உயர்த்துங்கள்”

வலது கையை உயர்த்தியபடியே எட்வர்டு அடெஸ் மனைவியிடம் சொன்னார். “நான் என்ன செய்கிறேனோ அப்படியே நீயும் செய்”

கண்கள் கட்டப்பட்டிருந்த மார்கரைட்டும் அப்படியே தன் வலது கையை உயர்த்தினார். பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் அந்த அதிசயத்தைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.

அந்த அதிகாரியின் மனைவியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “இப்போது நீங்கள் எதாவது என் காதில் சொல்லுங்கள்”

அந்தப் பெண்மணி அவரிடம் ரகசியமாகச் சொன்னார். “இரண்டு கைகளின் விரல்களையும் பின்னி இணைத்துக் கொள்ளுங்கள்”

எட்வர்டு அடெஸ் அப்படியே விரல்களைப் பின்னி இணைத்துக் கொள்ள மார்கரைட் ஏதோ நேரில் பார்த்துச் செய்வது போல அப்படியே தன் இரு கைவிரல்களையும் பின்னிக் கொண்டார்.

வியப்பில் ஆழ்ந்த பால் ப்ரண்டன் மற்றும் அந்தப் பெண்மணியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “நீங்கள் இது வரை பார்த்தது ஹிப்னாடிசத்தின் முதல் நிலை. இரண்டாவது நிலையில் ஆழ்மனம் இன்னும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் வேலை செய்யும்.”

எட்வர்டு அடெஸ் தன் மனைவியை இரண்டாம் நிலை ஹிப்னாடிசத்திற்குக் கொண்டு செல்லவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மார்கரைட்டின் நெற்றியைத் தொட்டுக் கட்டளையிட்டார். பின் அவரை எழுந்து நாற்காலியில் அமரச் சொல்ல மார்கரைட்டும் அமர்ந்தார்.

அங்கு அலமாரியில் வைத்திருந்த பல புத்தகங்களில் ஒன்றை எடுத்துத் தரும்படி எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொல்ல பால் ப்ரண்டன் எழுந்து அந்த அலமாரியில் இருந்து ஒரு பிரெஞ்சு அறிவியல் புத்தகத்தை எடுத்தார். எட்வர்டு அடெஸ் “அதில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏதாவது ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்” என்று சொல்ல பால் ப்ரண்டன் 53ஆம் பக்கத்தில் ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

அடெஸ் மனைவியிடம் “அவர் தேர்ந்தெடுத்த பத்தியை அப்படியே பார்த்து எழுது” என்று சொல்லி ஒரு வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் தர மார்கரைட் மூடிய கண்களுடன் அந்தப் புத்தகத்தைப் பார்த்து பின் அந்தத் தாளில் எழுத ஆரம்பிக்க பால் ப்ரண்டனும், அந்தப் பெண்மணியும் பிரமித்துப் போனார்கள். பால் ப்ரண்டன் சென்று மீண்டும் மார்கரைட்டின் கண்கள் முழுமையாகத் தெரியாதபடி கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொண்டார். இரண்டிரண்டு திரைகளால் அந்தக் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது உண்மை தான். ஆனாலும் மார்கரைட் இரண்டு மூன்று சொற்களை எழுதி விட்டு மறுபடியும் அந்தப் பக்கத்தைப் பார்த்து மறுபடி திரும்பி தாளில் எழுதுவது என்று பார்த்து எழுதுபவர்களைப் போலவே நடந்து கொண்டார்.


மார்கரைட் எழுதியதில் ஒரே ஒரு சொல்லில் வந்த ஒரு சிறிய எழுத்துப் பிழை தவிர மீதி எல்லாம் அப்படியே எழுதப்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அந்தப் பத்தியில் இரண்டாவது வரியில் இரண்டாவது சொல்லையும், மூன்றாவது வரியில் மூன்றாவது சொல்லையும் கோடிடச் சொன்னார். கண்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் மார்கரைட் அப்படியே அந்த சொற்களைக் கோடிட்டுக் காட்டினார்.

எட்வர்டு அடெஸ் அந்தப் பத்தியை இடது கையால் எழுதிக் காட்டச் சொன்னார். இயல்பில் வலது கையால் எழுதும் பழக்கம் உடைய மார்கரைட் சிறிதும் தயக்கமில்லாமல் இடது கையால் எழுத ஆரம்பிக்க, வலது கையில் எழுதுபவர்களுக்கு இடது கையால் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்த பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.

(தொடரும்)

Global Angel:
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 8



ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும் முடியாததும் ...

ஹிப்னாடிசம் செய்யப்பட்ட மார்கரைட்டின் சக்திகள் அத்துடன் முடிந்து விடவில்லை. பால் ப்ரண்டனுடன் வந்திருந்த பெண்மணியிடம் மார்கரைட்டின் கையைப் பிடித்துக் கொள்ள எட்வர்டு அடெஸ் சொல்ல அவரும் அப்படியே செய்தார்.

எட்வர்டு அடெஸ் சொன்னார். “யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள். அவர் உருவத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள்”

அந்தப் பெண்மணி தன் கணவரின் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மார்கரைட் அந்தப் பெண்மணியின் கணவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய உருவம், குணங்கள், திறமைகள் பற்றியெல்லாம் விவரித்தார். அந்த மனிதர் ஒரு அரசாங்க அதிகாரி என்பதையும் சொன்னார். (அந்தப் பெண்மணியைக் கூட்டி வந்த போது அவர் என் நண்பர் என்று சொன்னாரே ஒழிய வேறு விவரங்கள் சொல்லி இருக்கவில்லை).

(ஆனால் மார்கரைட் இன்னொரு சந்தர்ப்பத்தில் பால் ப்ரண்டனுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்ட போது அவை முற்றிலும் தவறாக இருந்ததாக பால் ப்ரண்டன் கூறுகிறார். ஆனால் பால் ப்ரண்டனுடைய எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள் பற்றி எல்லாம் கூற முற்பட்ட போது அவை மிகச் சரியாகவே இருந்தன. இது போன்ற ஹிப்னாடிச நிலைக்குக் கூட எதிர்காலம் புரியாத புதிராகவே இருக்கிறது என்று பால் ப்ரண்டன் நினைத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஹிப்னாடிசம் மூலம் மனதில் உள்ளதையும், ஆழ்மனதிற்குத் தெளிவாகத் தெரிந்ததையும் சொல்லலாமே ஒழிய ஆழ்மனமே அறியாத இரகசியங்களை அறிந்து கொள்ளுதல் இந்த நிலைக்கு சாத்தியமல்ல. உதாரணத்திற்கு தன் கணவர் குணாதிசயங்கள் அந்தப் பெண்மணிக்கு நன்றாகத் தெரிந்து இருந்ததால் அந்தப் பெண்மணியின் கணவரின் முழு விவரங்களை மார்கரைட்டால் சொல்ல முடிந்தது. அதே போல் பால் ப்ரண்டனின் இலட்சியம் மற்றும் எண்ணங்கள் அவர் அறிந்திருந்ததால் அதையும் அவர் மனம் மூலம் மார்கரைட் அறிய முடிந்தது. பால் ப்ரண்டனின் எதிர்காலம் பால் ப்ரண்டனே அறியாத ஒரு இரகசியமாக இருந்ததால் மார்கரைட்டிற்கு அவர் மனம் மூலம் அதை அறிய முடியவில்லை. ஆனாலும் அவர் ஏதோ முயற்சி செய்து அது பொய்யாய் போயிருக்கிறது. எதிர்காலத்தை அறிய ஹிப்னாடிசத்தை விட உயரிய யோக நிலைக்குப் போனால் ஒழிய அது சாத்தியமில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்)

அடுத்ததாக ஹிப்னாடிசத்தின் மூன்றாம் நிலைக்குத் தன் மனைவியை எட்வர்டு அரெஸ் அழைத்துச் சென்றார். அந்த நிலையில் ஒரு கூர்மையான ஊசியை எடுத்து மார்கரைட்டின் கையில் குத்தினார். ஊசி அரையங்குலம் உள்ளே சென்றாலும் மார்கரைட் வலியை உணரவில்லை. மாறாக எட்வர்டு கேஸ் ஒரு கோமாளி எதிரே நின்று கொண்டு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மார்க்கரைட் விழுந்து விழுந்து சிரித்தார்.

அந்த ஊசியை வெளியே எடுத்த போது குத்திய இடத்தில் இருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளி வரவில்லை என்பது தான் ஆச்சரியம். குத்திய இடத்தில் அடையாளமாக ஒரு கரும்புள்ளி மட்டுமே தெரிந்தது.

பின்னர் எட்வர்டு அடெஸிடம் பேசும் போது இந்த அற்புதமான சக்திகளைப் பற்றி பால் ப்ரண்டன் கேட்டார். ஒரு காலத்தில் ஒரு கல்லூரியில் மனோதத்துவ விரிவுரையாளராக இருந்த எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “உண்மையை சொல்லப் போனால் இந்த சக்திகளைப் பற்றி முழுவதும் எனக்குத் தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஏன் ஆகிறது, எதனால் ஆகிறது, எப்படி ஆகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த சக்தி புதைந்து கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில பயிற்சிகள் மூலம், சில முறைகள் மூலம் அந்த சக்திகளை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்பது மட்டும் உண்மை”

”இதை உணர்ந்த போது நான் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். நான் முன்பே சொன்னது போல ஆரம்பத்தில் என் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த நிறைய நேரம் தேவைப்பட்டது. அந்த நிறைய நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் அவளை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த முடிந்தது முறையான, தொடர்ந்த பயிற்சியால் தான். ஹிப்னாடிசத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலை உள்ளவர்களை மட்டுமே அதில் ஆழ்த்த முடியும். மேலும் ஹிப்னாடிசம் செய்பவர்களுக்கும் தங்கள் சக்தி மேல் முழு நம்பிக்கை இருந்தால் ஒழிய மற்றவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது..”

பால் ப்ரண்டன் கேட்டார். “கண்களைக் கட்டிய பின்பும் அவரால் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்ததும், உங்கள் செயல்களைக் காண முடிந்ததும் எப்படி?”

எட்வர்டு அடெஸ் சொன்னார். “நம் ஐம்புலன்களும் வேலை செய்வது அந்தந்த உறுப்புகளால் தான் என்று நாம் எண்ணினாலும் நம்முடைய ஆழ்மனம் அந்த உறுப்புகளின் உதவியில்லாமலேயே அதை செய்ய முடிகிறது என்பதும் உண்மை தான். அதைத் தான் நீங்களே நேரில் பார்த்தீர்களே. ஆனால் நம் மேலோட்டமான மனதிற்கு அது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் நம் மேல்மனம் எத்தனையோ தவறான நம்மை மட்டுப்படுத்துகிற நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. ஆழ்மனதின் ஆதிக்கத்திற்குச் செல்லும் போது அந்த நம்பிக்கைகள் அறுபட்டுப் போகின்றன.”

பால் ப்ரண்டன் கேட்டார். “சிலர் ஹிப்னாடிசம் செய்யும் போது ஏதாவது சொல்லிக் கொண்டே கைகளை அசைத்து ஹிப்னாடிசம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதெல்லாம் செய்யவில்லையே. அப்படி எல்லாம் செய்யத் தேவையில்லையா?”

”அது அந்தந்த நபர்களைப் பொறுத்தது. நான் என் உள்ளே உள்ள சக்தியை நம்புகிறேன். பயிற்சி பெற்றுத் தேர்ந்த பின் அவை அவசியமானதல்ல என்று நான் நினைக்கிறேன்”

எட்வர்டு அடெஸும், மார்கரைட்டும் சித்தர்கள் அல்ல என்றாலும் மனோவசியம் என்ற ஹிப்னாடிச அறிவியல் முறையில் பால் ப்ரண்டனுக்குச் செய்து காட்டிய பல சித்திகள் வியப்பளிக்க வைக்கின்றன அல்லவா?

அடுத்ததாக பால் ப்ரண்டன் சந்தித்த நபர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பக்கிரி. உடலெல்லாம் ஆணியாலும், கத்தியாலும் பல முறை குத்திக் கொண்டும் பாதிக்கப்படாமல் இருந்தவர். தண்ணீரினுள்ளும், மணலின் உள்ளும் மணிக்கணக்காய் ஒரு நாளுக்கும் மேல் புதைந்து கிடந்து பின் பாதிக்கப்படாமல் மேல் எழுந்தவர். பல சர்ச்சைகளில் பேசப்பட்டவர். ஆனால் அலட்சியமாக ஒதுக்க முடியாத மனிதராக அந்தக் காலத்தில் பலர் கவனத்தையும் கவர்ந்தவர். பால் ப்ரண்டன் அந்த பக்கிரியைக் காண ஆவலுடன் சென்றார்.

அந்த பக்கிரி யார் தெரியுமா?

Global Angel:
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் – 9



28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்
அந்தப் பக்கிரி டெஹ்ரா பே.

ருமேனியா, இத்தாலி போன்ற நாடுகளின் அரசர்களும், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளும் பல முறை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துப் பேசிய பெருமையுடைவர் அந்தப் பக்கிரி. பலருடைய விமரிசனக்களுக்கு ஆளான போதும் தன் அபூர்வ சக்திகளின் வெளிப்பாடுகளை ஆராய விரும்பியவர்களைத் தட்டிக் கழிக்காதவர் அவர். இந்தியாவில் பல யோகிகளின் சக்திகளையும் ஆப்பிரிக்காவில் சில மனிதர்களின் சக்தியையும் நேரடியாகக் கண்டிருந்த பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே செய்து காட்டியதாகக் கேள்விப்பட்ட தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. முறையாக யோக சக்திகளைப் பயின்றவர்களுக்கு முடியாதது தான் என்ன?

பால் ப்ரண்டன் நேரில் சென்று பார்த்த அந்த பக்கிரி வித்தியாசமானாராகத் தெரிந்தார். தாடியுடன் இருந்த அவர் சராசரிக்கும் குறைவான உயரமானவராகவே இருந்தார். சில சமயம் அரபுகளின் பாரம்பரியமான உடை மற்றும் தலைக் கவசம் அணியும் அந்தப் பக்கிரி சில சமயம் ஐரோப்பியர்களின் உடை மற்றும் தொப்பியுடன் காணப்பட்டார். விடாமல் சிகரெட் பிடிப்பவராகவும் இருந்தார். ஒரு மனிதரை முழுமையாக அறிய அவர் வாழ்க்கையை ஆராய்ந்தால் போதும் என்று நினைத்த பால் ப்ரண்டன் கூர்மையான பார்வை, அமைதியான தன்மை கொண்டிருந்த அந்தப் பக்கிரியிடம் அவரைப் பற்றிச் சொல்லும்படி கேட்க அவர் சொன்னார்.

“நான் 1897ல் நைல் நதிக்கரையோரம் இருந்த டேண்டா என்ற சிறிய நகரத்தில் பிறந்தேன். என்னைப் பிரசவித்த உடனேயே என் தாய் இறந்து விட்டாள். என் தந்தையும் சக்தி வாய்ந்த பக்கிரிகளிடம் தொடர்பு கொண்டிருந்ததால் இளமையிலேயே நான் இந்த அற்புத சக்திகளுக்கு இணக்கமான சூழ்நிலையிலேயே வளர்ந்தேன். என் தந்தையும் சில பக்கிரிகளும் தான் என் ஆசிரியர்களாக இருந்தார்கள். நான் தேவையான பயிற்சிகளையும், ஞானத்தையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். அப்போது உள்நாட்டு அமைதியில்லாத சூழ்நிலை காரணமாக நான், என் தந்தை, ஒரு ஆசிரியர் மூவருமாக துருக்கிக்கு சென்று கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தில் வசித்தோம்.”

“அங்கு நான் நவீன கல்வி கற்றேன். மருத்துவம் படித்து டாக்டரானேன். அந்தக் கல்வி எனக்கு மிக உபயோகமாக இருந்தது. என்னுடைய அபூர்வ சக்திகளை நானே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ள எனக்கு மருத்துவக் கல்வி பெரும் உதவியாக இருந்தது. நான் கிரீசில் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து என் சுய ஆராய்ச்சிகளை அங்கே தொடர்ந்தேன்”

“மிகக் குறுகிய காலத்தில் அங்கு நான் செய்து காட்ட முடிந்த அற்புதம் நான் பெற்ற சக்திக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக இருந்தது. 28 நாட்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்க தீர்மானித்த போது அங்குள்ள பாதிரியார்கள் கடுமையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கத்திடம் சொல்லி தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுவது போல் நான் செய்து காட்ட நினைப்பது என்று எண்ணினார்கள் போல இருந்தது. ஆனால் அரசாங்கம் டாக்டரான எனக்கு செய்யப் போவதன் அபாயத் தன்மையை விளக்க வேண்டியதில்லை என்று சொல்லி என்னைத் தடுத்து நிறுத்த முற்படவில்லை. நான் டாக்டராக இருந்தது அங்கு மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் நான் இது போன்ற நிகழ்வுகளைச் செய்து காட்ட உதவியது. நான் 28 நாட்கள் மண்ணில் புதைந்து கிடந்து பின் வெற்றிகரமாக வெளியே வந்தேன்.”

“நான் பல்கேரியா, செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று சில நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினேன். இத்தாலியில் பல விஞ்ஞானிகள் முன்னிலையில் அவர்கள் பரிசோதனை செய்யவும் சம்மதித்து ஒரு நிகழ்ச்சியை செய்து காட்டினேன். காரீயத்தால் ஆன சவப்பட்டியில் படுத்துக் கொண்டு என் உடல் எல்லாம் மண்ணால் மூடி, அந்த சவப்பெட்டியை ஆணிகளால் அடித்து மூடி ஒரு நீச்சல் குளத்தின் அடியில் அந்த சவப்பெட்டியை இறக்கினார்கள். ஆனால் அரை மணி நேரத்தில் போலீசார் வந்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்து என்ன வெளியே எடுத்து விட்டார்கள். ஆனால் அரை மணி நேரம் நான் அந்த சவப்பெட்டியில் பாதிக்கப்படாமல் இருந்தேன்”

“பின் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அதே நிகழ்ச்சியைத் தொடரத் தீர்மானித்தேன். அங்குள்ள போலீசாரிடம் முன்பே நான் டாக்டர் என்ற ஆதாரத்தைக் காண்பித்து அனுமதி பெற்றேன். அவர்கள் அனுமதி தந்ததோடு நான் பொது மக்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக தண்ணீருக்குள் இருந்த என் சவப்பெட்டியை 24 மணி நேரமும் வெளியே இருந்து காவல் காத்தார்கள். 24 மணி நேரம் கழித்து அவர்கள் சவப்பெட்டியைத் திறந்த போது நான் உயிருடன் வெளியே வந்தேன்” என்ற டெஹ்ரா பே அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பால் ப்ரண்டனிடம் காட்டினார்.

டெஹ்ரா பே தொடர்ந்தார். “நீங்கள் இந்தியாவிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளதாக உங்கள் நூலில் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகளில் ஏமாற்று வேலை நடைபெறுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். சில போலி யோகிகளும் பக்கிரிகளும் மண்ணில் புதைக்கப்படும் போது மூச்சு விட உதவுகிற ரகசிய சுரங்கப் பாதைகளை உருவாக்கி ஏமாற்றுகிறார்கள் என்ற விமரிசனம் பல இடங்களில் வருவதை நான் கேள்விப்பட்டுள்ளேன். பிரான்சில் நடந்த அந்த நிகழ்ச்சியில் தண்ணீருக்குள் அப்படி எந்த ரகசியப் பாதையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்பதாலும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்திருந்தனர் என்பதாலும் பல விமரிசகர்களும், சந்தேகத்தோடு ஆரம்பத்தில் என்னைப் பார்த்தவர்களும் என்னை முழுமையாக நம்பியதோடு பாராட்டவும் செய்தார்கள்”

"இந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் வெளி வந்த ஸ்பெயின் நாட்டின் அரசி எனக்கு அவர்கள் நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தார். நான் இதையெல்லாம் பெருமைக்குச் சொல்லவில்லை உண்மையான சித்தர்களும், யோகிகளும், பக்கிரிகளும் இது போன்ற வெளிப்பகட்டுகளில் ஆர்வம் கொள்வதில்லை. விருப்பு வெறுப்பில்லாமல் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது தான் அவர்கள் குறிக்கோள். ஐரோப்பிய சொகுசு வாழ்க்கையில் நான் வாழ்ந்தாலும் உள்ளூர இந்த உண்மையை நான் உணர்ந்தே இருந்தேன். மேலும் பல பக்கிரிகள் மற்றவர்களின் பரிசோதனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள். தங்கள் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். அவர்கள் மேலை நாடுகளின் கல்வியையும் ஏற்றுக் கொள்வதில்லை. நான் இந்த நிலையில் இருந்து மாறுபட நினைத்தே இந்த மேற்படிப்புகளைப் படித்து, இந்த அதீத சக்திகளையும் வெளிப்படுத்தி பலர் என்னைப் பரிசோதனை செய்ய சம்மதித்தேன். நான் செய்து காட்டியதெல்லாம் இயற்கையின் விதிக்கு உட்பட்டவையே. அதில் எனக்கு ஆழ்ந்த ஞானம் இருந்ததால் எனக்குப் பயமும் சந்தேகமும் இருக்கவில்லை. முக்கியமாக பல டாக்டர்கள் நான் செய்து காட்டிய நிகழ்ச்சிகளில் பின் அதிக ஆர்வம் காட்டினார்கள்”

அந்தப் பக்கிரி சொன்னதை எல்லாம் பால் ப்ரண்டன் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதீத சக்திகளை இந்தியாவில் பார்த்தும் கேள்விப்பட்டும் இருந்த பால் ப்ரண்டனுக்கு இது போன்ற அதீத சக்திகள் எல்லாம் நடக்க முடியாத அதிசயங்கள் அல்ல என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மேலை நாடுகளின் படிப்புடன் சித்தர்களின் சக்தியையும் பெற்றிருந்த ஒரு மனிதரை பால் ப்ரண்டன் சந்திப்பது அது தான் முதல் முறை. அது தான் அவருக்கு பெரும் சுவாரசியத்தை அந்த மனிதர் மேல் ஏற்படுத்தி இருந்தது.

பால் ப்ரண்டன் டெஹ்ரா பேயிடம் கேட்டார். “நானும் இந்த சக்திகளில் ஆர்வம் காட்டும் அறிஞர்களையும் டாக்டர்களையும் அழைத்து வருகிறேன். எங்கள் முன் நீங்கள் உங்கள் சக்திகளை வெளிப்படுத்திக் காட்டுவீர்களா?”

ஆர்வத்துடன் கேட்ட பால் ப்ரண்டனிடம் டெஹ்ரா பே சம்மதித்தார்.

Global Angel:
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-10



மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.


அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.


முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.


முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.


ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.


அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.


டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.


அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.


மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.


அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.


ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்”


அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.


பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.


முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.


ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.


தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.


பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருந்ததுடன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்றும் தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். ”உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.”


ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version