ஆத்திசூடி மூலமும் உரையும்
முகவுரை
ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப்பற்றியேயாகும். மிக்க இளம்பருவத்தினராயிருக்கும்பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற்பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.
ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
1. அறஞ்செய விரும்பு.
(பதவுரை) அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு.
(பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு.
---------------------------------------------------------------------------------------------------------
2. ஆறுவது சினம்.
(பதவுரை) ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம்.
(பொழிப்புரை) கோபம் தணியத் தகுவதாம்.
-------------------------------------------------------------------------------------------------------
3. இயல்வது கரவேல்.
(பதவுரை) இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே,
(பொழிப்புரை) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.
-----------------------------------------------------------------------------------------------------------
4. ஈவது விலக்கேல்.
(பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.
(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
---------------------------------------------------------------------------------------------------
5. உடையது விளம்பேல்.
(பதவுரை) உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே.
(பொழிப்புரை) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.
---------------------------------------------------------------------------------------------------------
6. ஊக்கமது கைவிடேல்.
(பதவுரை) ஊக்கம் - (செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல் - கைவிடாதே.
(பொழிப்புரை) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)
---------------------------------------------------------------------------------------------------
7. எண்ணெழுத் திகழேல்.
(பதவுரை) எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழ்ந்து தள்ளாதே.
(பொழிப்புரை) கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)
-------------------------------------------------------------------------------------------------
8. ஏற்ப திகழ்ச்சி.
(பதவுரை) ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்.
(பொழிப்புரை) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.
--------------------------------------------------------------------------------------------------------
9. ஐய மிட்டுண்.
(பதவுரை) ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து, உண் - நீ உண்ணு.
(பொழிப்புரை) இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------
10. ஒப்புர வொழுகு.
(பதவுரை) ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு- (அந்த வழியிலே) நட.
(பொழிப்புரை) உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
-----------------------------------------------------------------------------------------------------
11. ஓதுவ தொழியேல்
(பதவுரை) ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் - விடாதே.
(பொழிப்புரை) அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
--------------------------------------------------------------------------------------------------
12. ஒளவியம் பேசேல்.
(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.
(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
---------------------------------------------------------------------------------------------------
13. அஃகஞ் சுருக்கேல்.
(பதவுரை) அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைத்து விற்காதே.
(பொழிப்புரை) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.
---------------------------------------------------------------------------------------------------
14. கண்டொன்று சொல்லேல்.
(பதவுரை) கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே.
(பொழிப்புரை) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)
------------------------------------------------------------------------------------------------------
15. ஙப்போல் வளை.
(பதவுரை) ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு.
(பொழிப்புரை) ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
[ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]
-----------------------------------------------------------------------------------------------------------
16. சனிநீ ராடு.
(பதவுரை) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு
(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)
------------------------------------------------------------------------------------------------------
17. ஞயம்பட வுரை.
(பதவுரை) ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.
(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
-----------------------------------------------------------------------------------------------------
18. இடம்பட வீடெடேல
(பதவுரை) இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதே
(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
------------------------------------------------------------------------------------------------------
19. இணக்கமறிந் திணங்கு
(பதவுரை) இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நண்பு கொள்.
(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.
-----------------------------------------------------------------------------------------------------
20. தந்தைதாய்ப் பேண
(பதவுரை) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று
(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.