கல்லறை மீதமைந்த உலகம்
மிக சாதாரணமாக ஒரு வன்முறை நிகழ்ந்து முடிகிறது
ஒற்றை நொடியில்
உரசி விழுகிறது சில துப்பாக்கி ரவைகள்
எரிந்தடங்குறது சில தீக்கங்குகள்
வெந்து தணிகிறது சில உடல்கள்
வீழ்ந்தழிகிறது சில மனங்கள்
ஓர் தாயின் ஓலமும்
ஓர் மனைவின் கதறலும்
ஓர் குழந்தையின் அழுகையும்
மிக எளிதாக மறக்கப்படுகிறது
பிறகு
மீண்டும் நிகழ்கிறது சில மரணங்கள்
வேற்று கிரகவாசிகளிலர் இவர்
நம் கருவறையில் வைத்தே வளர்த்திருக்கிறோம்
நம் கைகளே நம் கண்களை குத்தும்
பரிணாமம் எங்கிருந்து தோன்றியது?
அண்ணன் தம்பிகளின் சிதறடிக்கப்பட்ட சதைகளையும்,
பைஞ்சிறு மலர்களின் ரத்தங்களையும்
புசிக்கும்
கொடுவாள்களும், ஷெல்லடிகளும்,
துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும்,
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னுமென ரத்தமும், சதைகளும் கேட்கும்
கூர் நகங்களும், கோரைப் பற்களும்
கொன்றழிப்பதெல்லாம் லட்சிய-கொள்கை எனில்
கடைசி மனிதனின் வீழ்ச்சிக்கு பின் தான்
இத்துப்பாக்கியின் ரவைகளும்
ரசாயன பெருவெடிப்புகளும்
ஓயும்
அப்பொழுது உலகமெனும் இக்கல்லறையின் மீது
மலர்வளையம் வைக்க
பூக்களொன்றும் மிச்சமிருக்காது
உண்மையில்,
பூக்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்
என்ன ஒற்றுமை இருக்கிறது?
உதிர்ந்து விழுவதை தவிர