வாழ்க்கையின் திசைகள் கலைத்து
இலக்கற்று பயணிக்கிறான்
ஒரு பயணி
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு
தளைகளை களைந்துவிட்டு
நீண்ட நெடிய பாதையை
தேர்ந்தெடுக்கிறான்
சிறிய நிழற்படக் கருவியோடு.
ஒவ்வொரு நிழற்படமும்
அப்பயணிக்கு
வாழ்க்கையின் தாத்பரியங்களை உணர்த்திச் செல்கிறது,
ஒரு கதையை கூறி செல்கிறது,
நிஜங்கள் நிறுவ மறுத்த உண்மைகளை
ஊடுருவிச் சென்று நிழல்களில் பதிக்கிறது.
சில படங்களில் மனிதர்கள்,
மனிதர்களின் புற முகங்கள்
சில படங்களில் மிருகங்கள்,
மிருகங்களின் ஒளி நிறைந்த கண்கள்
சில படங்களில் காடுகள்,
காடுகளின் நிச்சலனம்
சில படங்களில் கடல்கள்,
கடல்களின் பேரமைதி
அந்நிழற்படக் கருவி ஒய்வில்லாமல்
ஒவ்வொரு தடங்களையும்
தன்னுள் அடக்கிக் கொண்டே செல்கிறது
ஒரு நாள், பெரும் வனத்திற்கு மத்தியில் சலசலத்து ஓடும் ஆறும்
இடதும் வலதுமாய் பலநூறு ஆண்டு காட்டோடு பிணைந்திருக்கும் மரங்களும்,
வலுவேறிய முதிய மரமொன்றின் வயிற்றின்
சின்னதொரு குடிசையின்
இருபதடி உயரத்திலிருந்து
கீழே நீர் அள்ளித் தெளிக்கும்
யானையுனுடன் விளையாடி மகிழும்
மனிதர்களை
படம்பிடித்தபடி நின்றிருக்கும் பின்மாலையில்
இலக்கற்ற அப்பயணி
வனத்தின் ஆதிகுடிகளில்
ஒருவனாகிறான்....
ஒரு ஆற்றங்கரையோரத்தில் பிடிக்கப்படும் நிழற்படத்திற்கு
எந்தவொரு சிறப்பம்சமும் தேவையில்லை
ஜீவனோடும் கண்களும்
சின்ன சின்ன அன்புகளும்
அன்புக்கு அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் தூய உள்ளங்களும்
போதும்
கண நேரம் நிழற்படக் கருவியை
விலக்கிவிட்டு பார்க்கிறான்
அப்பயணி
உலகத்தின் அத்தனை துயரங்களையும் மறந்துவிட்டு நீரள்ளி தெளித்து விளையாடும்
யானைக்கும், அச்சிறுவனுக்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை.
ஒரு நொடி வாழ்க்கையின் நிதர்சனத்தை விடுத்து
அக்காட்சியின் அழகியலில் மெய்மறந்த பயணி கூறிக்கொண்டான்,
"நிச்சயமாய்
இந்த வாழ்வு ஆசிர்வாதத்திற்குரியதுதான்"