ஒரு பெரிய குருகுலத்தில் அனைத்திலும் மிகவும் திறமை வாய்ந்த ஒரு ஜென் குருவிடம் சகாதேவன், மகாதேவன் என்னும் இரு மாணவர்கள் நீண்ட நாட்களாக கல்வி பயின்று வந்தனர். அந்த குருவிற்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று சொல்லலாம். அத்தகைய அவரிடம் பயிலும் அந்த இரு மாணவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
அதில் மகாதேவன் நேர்மையானவன், எதையுமே மனதில் வைத்து பேசத் தெரியாதவன். எப்போதுமே வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவன். அவனுக்கு தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. மேலும் தன்னைப் போலவே அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.
ஆனால் சகாதேவன் சற்று வித்தியாசமானவன். எதையும் வெளிப்படையாக பேச மாட்டான். மிகவும் பொறுமை சாலி, எந்த பிரச்சனைக்கும் செல்லாதவன். யார் என்ன சொல்லி, திட்டினாலும், ஏமாற்றினாலும், அதை தன் மனதிலே வைத்து, கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவன். ஒரு முறை விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் அவனிடம் வம்பு இழுத்து, அடித்து திட்டிவிட்டான். அப்போது சகாதேவனுடன் அவனது நண்பன் மகாதேவன் இல்லை.
இதனால் சகாதேவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்த அவனுடைய நண்பன் மகாதேவன், அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், அவனது குருவிடம் அழைத்துச் சென்றான். நீண்ட நாட்கள் அவர்களுடன் இருந்த அந்த குருவிற்கு சகாதேவனுக்கு எதனால் உடல் நிலை சரியில்லை என்று புரிந்துவிட்டது. அதனால் அவர் சகாதேவனிடம் "இது உடலில் வந்த நோய் அல்ல. உன் மனதில் வந்த நோய். அதை நீ தான் சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
அந்த குரு, அவ்வாறு சொல்வதற்கு காரணம், அந்த சகாதேவனின் மனதில் தைரியம் குறைவாகவும், அளவுக்கு அதிகமான பொறுமை, சகிப்புத் தன்மை அளவுக்கு அதிகமாக இருப்பது போன்றவை இருக்கின்றன. இவையும் ஒரு வகையான நோய் தான். ஆகவே அந்த நோயை அவன் சரிசெய்து விட்டால், அவன் சரியாகிவிடுவான், என்பதற்காகவே சொன்னார்.