நாம் காலுக்கான பயிற்சியை செய்யும் போது, சிறிது நேரத்தில் காலின் தசைகள் சற்று சோர்வடைந்ததாகத் தோன்றும். அதே போல மூளைக்கும் சோர்வு ஏற்படக் காரணங்கள் ஏதாவது இருக்குமோ?
நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்தும் தெளிவில்லாமல் இருப்பதாகவே உணர்வோம். அப்படி உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டுள்ளதா? ஏற்பட்டிருந்தால், அது தான் மூளைச்சோர்வு! இந்த மூளைச்சோர்வுக்கான சரியான உயிர்வேதியியல் காரணங்கள் விஞ்ஞானிகளால் தெளிவாக வரையறுக்க முடியவில்லை என்றாலும், சில காரணங்களைக் கண்டறிந்துள்ளனர். நாம் மூளையினை எவ்வளவு பயன்படுத்துகிறோம், அதற்கு எவ்வளவு வேலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, இந்த மூளைச்சோர்வு ஏற்படக்கூடும்.
நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ‘லாக்டிக் அமிலம்’ உருவாக்கப்படுகிறது. இது நம்மை சோர்வடையச் செய்யாது, இது வெளியேற்றப்படுவதால் நமது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பினால் நமக்குச் சோர்வு ஏற்படுகிறது. மூளையிலும் நரம்பு செல்கள் வேலை செய்யும்போது இதுபோல் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படும், ஆனால் நரம்பு செல்கள் மீண்டும் அவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டு செயல்படும். அதனால் பெரும்பாலும் நமக்கு மூளைச்சோர்வு ஏற்படுவதில்லை.
உடலுக்கு குளுக்கோஸ் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மூளையின் சுறு சுறுப்பினை அதிகரிக்கிறது. ஆனால் நாம் அதிகப்படியான அளவிற்கு குளுக்கோஸினை உட்கொள்ளும்போது மூளைச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இந்த மூளைச்சோர்வினைப் பற்றிய செய்தி உங்கள் மூளைக்கு வேலை கொடுத்துள்ளதா, நண்பர்களே?