நிச்சயதார்த்தம் நடந்தபின் துக்க வீட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்களே? காரணம் கூறவும்.
திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வர். வாழ்வில் வரும் சுப நிகழ்வு என்றாலே அது திருமணம் தான். திருமணச் சடங்குகளை சாஸ்திரம் "விவாக தீட்சை' என்றே குறிப்பிடுகிறது. அக்னி முன் செய்யப்படும் மணச்சடங்கின் மூலம் மணமகன், மணமகள் இருவரும் இணைந்து வாழத் தொடங்குகின்றனர். மந்திரப்பூர்வமாக செய்யப்படும் இவ்வைபவம் தம்பதியரின் முன்னோர்களில் இருபது தலைமுறைகளைக் கரையேற்ற வல்லது. இதேபோல, சந்ததிகளுக்கும் நன்மை தரக்கூடியதாகும். இதனை, ""பூர்வே விம்சதி- பரே விம்சதி'' என்கிறது வேதம். கோயிலில் "அர்ச்சனை செய்கிறேன்' என்று சங்கல்பம் செய்து கொண்டால் அர்ச்சிக்கும்வரை சந்நிதியை விட்டு வெளியேறக் கூடாது. அதுபோல், திருமணம் செய்து கொள்கிறோம் என்று சங்கல்பம் செய்து கொள்வது தான் நிச்சயதார்த்தம். அதனால், திருமணம் முடியும் வரை துக்கவீடுகளில் கலந்து கொள்வதில்லை என்ற விரதத்தைக் கடைபிடிப்பது அவசியம்.