தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக, தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் அனைத்து நிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவில் ஏழு படி நிலைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
1.அரும்பு (அரும்பும் அல்லது தோன்றும் நிலை).
2.மொட்டு (மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை).
3.முகை (நறுமணத்துடன் மொட்டானது தனது இதழ்களைச் சிறிய அளவில் விரித்திருக்கும் நிலை).
4.மலர் (பூவானது தனக்கென உரிய முழு நறுமணத்துடன் நறுமுகையில் இருந்து முழுவதுமாகத் தனது இதழ்களை விரித்திருக்கும் நிலை).
5.அலர் (இந்நிலை தான் பூவின் முழுமையான நிலை. இந்நிலையில் மலரானது தனது இதழ்களை முற்றிலுமாக விரித்துப் பூவின் மற்ற நிலைகளைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும்).
6.வீ (பூவானது வாடத் தொடங்கும் நிலை).
7.செம்மல் (பூவானது முற்றிலுமாக வாடிச் சருகாகி உதிரும் நிலை).