ஜோதிட சாஸ்திரத்திற்கு உரிய கிரகமாக புதன் கருதப்படுகிறது. வானவியல் (Astronomy), இயற்பியல் ஆகிய துறைகளுக்கும் உரியவராக புதன் இருக்கிறார். புதனுடன், சனி சேர்ந்திருந்தாலும் அல்லது சனியின் நட்சத்திரக் காலில் புதன் அமர்ந்திருந்தாலும் அவருக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படும்.
எனினும், குருவின் அருள் இருந்தால் மட்டுமே ஒருவரால் ஜோதிடத் துறையில் பிரகாசிக்கவும், சாதிக்கவும் முடியும். உதாரணமாக புதன் வலுவாக இருந்து சனியுடன் சேர்ந்து அல்லது அதன் நட்சத்திரக் காலில் அமர்ந்து குருவால் பார்க்கப்பட்டால் நந்திவாக்கியம், சுக்கிர நீதி, ஜாதக அலங்காரம், காக்கையர் நாடி என பல அரிதான ஜோதிட நூல்களைப் படித்து பண்டிதத்துவம் பெற்று சிறப்பாக பலன் சொல்லும் ஆற்றலைப் பெறுவார்.
ஜோதிட ஞானத்திற்கு புதன் பிரதானமாக கருதப்படுகிறார். ஜோதிடர் படித்து அறிய வேண்டிய நூல்கள் அனைத்தையும் ஒரு சிலர் படித்திருப்பார்கள். அவர்களது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருக்கும். ஆனால் குரு மறைந்திருந்தால் ஒரு ஜாதகத்திற்கு உரிய பலனைக் கூறுவதில் அவரிடம் தடுமாற்றம் இருக்கும். வாக்குப் பலிதமாகும் வகையில் பலன் சொல்வதற்கு ஜாதகத்தில் குரு சிறப்பாக இருக்க வேண்டும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், மீனம் ஆகிய லக்னம், ராசி உடையவர்களுக்கு இயல்பாகவே ஜோதிட சாஸ்திரத்தில் ஞானமும், அதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் பக்குவமும் இருக்கும். லக்னத்திற்கு 10இல் அல்லது ராசிக்கு 10இல் புதன் இருந்தாலும் அவர்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும்.