11 புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு.
(ப-ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய், கூந்தலையுடையாய், அணர்த்துஎழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர்கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூக்கொத்துக்களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமையின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டு வர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் கூறாநிற்கின்றன, எ-று.
தருபாக்கு : வினையெச்சம் வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க.