அக்கா மவள் இந்து(மயூரிக்கு)
சரிகைத்தாள் சுற்றிய பூங்கொத்து போல்
பேரழகின் எழிலாய் நிற்பவள்
வீழ்ந்தோடும் அருவியின் பாங்கில்
தோளோரம் வழிந்தோடும்
காற்குழல்
பிறை பார்த்து கவிதை எழுதும் கவிஞன்
இவளின் நெற்றிக்கு ஈடாகாத பிறையை பற்றி பிதற்றி வைக்கிறான்
வில்லாய் வளைந்த புருவங்களின் கீழ்
நதியோரம் துள்ளி விளையாடும் இரு மீன்களா?
மலரென வண்டுகள் விரைந்தோடும் இரு மலர்களா?
இல்லை,
மான்விழியும் அல்ல மலர்விழியும் அல்ல
மீன்விழியும் அல்ல
அவை
மைவிழியிட்ட மயில்விழிகள்
கூர் அலகு நாசி கொண்ட சிறு பறவையவள்
அலகா? அழகா?
இரண்டுமே தான்!
விலைமதிப்பில்லா
இரு பவழங்கள் விரியும் நொடி
சிப்பிகள் மட்டுமல்ல
பவழங்களும் முத்துகள் பொரிக்கும்
என உலக அதிசயத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்
அப்பவழ இதழோரம் நெளியும் சிறு புன்னைகையில்
காலடியில் நழுவும் பூமியில்
தினம் தினம்
புது பூகம்பம் முளைக்கும்
சிலை வடித்த பிரம்மனவன்
சிறு கறைகள் கொண்ட நிலவொத்த முகம் வேண்டாமென்று
பரிசுத்தமான
மலரொத்த முகம் படைத்தான்
ஓயாமல் மலர்ந்து நிற்கும் மலருக்கு
சரக்கொன்றை சாயல்
உலகில் உள்ள சங்குகளெல்லாம்
லஜ்ஜை கொண்டு சுருண்டுகொள்ளும்
இவளின் கழுத்தின் நெளிவுகளில்
படர்கொடியை வென்றிடும் இவளின்
பொற்கொடியிடை
சதிராடும் கைவளைகளும் கால் சலங்கைகளும்
கானக்குயில் குரலும் குழைத்து
நடனமிடும்
இப்
பேரழகு மயிலாய்
நின்றிடும் இவள் எழிலில்
பெண்களும் பித்தம் கொண்டு நின்றிடும்
இக்கவிதைக்கு மயிலென்றே பெயரிடுங்கள்
[மயூரி* - பெண் மயில்]