சரி! இந்தத் தத்துவ ஞானிகளை ஒரு புறம் வைத்து விட்டு, நவீன கால அறிஞர்களிடத்தில் செல்வோமா? இவர்களில் நவீன கால சிந்தனையாளர்கள் (Modern Thinkers), அறிஞர்கள் (Scholars), விஞ்ஞானிகள் (Scientists) – போன்றோர் அடங்குவர்.
இவர்கள் – முன்னோர்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளை, தங்களது பகுத்தறிவின் திறமை கொண்டு, கேள்விகளை எழுப்பி, மக்களை சிந்திக்க வைத்து, மக்களின் அறியாமைகளை, மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் தான்! ஆனால் அத்தோடு நில்லாமல்…. மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற இறை நம்பிக்கையையும் தூக்கி வீசி எறிந்து விட்டார்கள்! அத்துடன் மனித வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ‘அவர்களின் அறிவு’ பலத்தைக் கொண்டு பல கொள்கைகளை வகுத்துத் தந்து விட்டார்கள்.
இவர்கள் கற்றுத் தருகின்ற பாடங்களை இப்போது பார்ப்போம். கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறுவோமா?
இறைவன் இருக்கின்றானா?
இல்லை! இல்லவே இல்லை!
அப்படியானால் இந்த உலகம் தோன்றியது எப்படி?
ஒரு மிக மிகப் பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தானாகத் தோன்றியது
தான் இவ்வுலகமும் இன்ன பிற கோள்களும்!
அப்படியானால் இறைவன் மனிதனைப் படைக்கவில்லை என்கிறீர்களா?
இல்லை! இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம்
பழங்காலத்து மக்களின் கட்டுக் கதைகள்! முதலில் ஒரு செல் உயிர்
தானாகத் தோன்றி பின்பு பரிணாம வளர்ச்சி பெற்று -
குரங்கு, மனிதக் குரங்கு, இறுதியில் மனிதன் என்று
உயிரினங்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன என்பது தான் உண்மை!
அப்படியானால் – நமது வாழ்க்கைக்கு என்ன பொருள்?
வாழ்க்கை என்பது – இயற்கை நமக்குத் தற்செயலாகத் தந்து விட்ட ஒரு வாய்ப்பு!
இந்த வாய்ப்பு நமது மரணம் வரை மட்டுமே! மரணம் வருவதற்குள் நமக்குக் கிடைத்திட்ட இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு இயன்றவற்றையெல்லாம் அனுபவித்து விட வேண்டும்! குறிக்கோள், இலட்சியம், ஒழுக்கம், மார்க்கம் – என்றெல்லாம் பேசிக் கொண்டு நமது சுதந்திரத்துக்கு குறுக்கே யாரும் வந்திடுவதை – நாம் ஒரு போதும் அனுமதித்து விடக் கூடாது.
தங்களது அறிவு பலத்தைக் கொண்டு நவீன கால அறிஞர்கள் எப்படிப் பட்ட ஒரு வாழ்க்கையை மக்களுக்கு முன் சமர்ப்பித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ஆம்! தற்செயலாகக் கிடைத்து விட்ட வாழ்க்கை என்ற வாய்ப்பை முழுவதும் அனுபவித்து விடு – என்பது தான் நவீன உலகின் சித்தாந்தம்.
ஆனால் – எல்லாம் தானாகவே தோன்றியது, தற்செயலாகத் தான் நமக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதை மனித அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. எனவே – இந்த நவீன சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுப்பப் படும் சமூக அமைப்பிலும் கொள்கைக் குழப்பங்கள்! அமைதியின்மை! மனோ வியாதி! தற்கொலைகள்!
ஒழுக்கம் என்ற பேச்சுக்கே இத்தகைய சமூகத்தில் இடம் இருக்காது. எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்ற மோகம் மனிதனை மிருகமாக்கி விடும். ஆண்-பெண் உறவு என்பது எல்லா வரையறைகளையும் தாண்டி முறை கெட்ட உறவு முறைகளுக்கு வழி வகுத்திடும். கட்டுப்பாடுகளை விரும்பாத ஒரு சமூக அமைப்பு திருமணம்-குடும்பம் என்ற கட்டுப்ப்பாட்டுக்குள் வந்து நிற்பது மிகக் கடினம். ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி – அங்குள்ள வானொலி நிலையம் ஒன்றுக்கு இவ்வாறு எழுதி ஆலோசனை கேட்டாளாம்:
‘சில ஆண்டுகளாக நான் ஒரு இளைஞனுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கின்றேன். அவன் எனக்கு அலுத்துப் போய் விட்டதால் இப்போது – இன்னொரு பையனை சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். இருவரையும் நான் வைத்துக் கொள்ளலாமா? ( Can I keep them both?) அல்லது – இரண்டாவது பையனை விட்டு விட்டு முதல் இளைஞனை மட்டும் தான் நான் வைத்துக் கொள்ள வேண்டுமா?
வானொலி ஆலோசகர் – அந்தப் பெண்ணுக்கு இவ்வாறு வழி காட்டுகிறார்: ‘உங்களுக்கு இருபத்தெட்டு வயது ஆகும் வரை எந்த நிபந்தனையோ, கட்டுப்பாடோ இன்றி ஒருவருடனோ – பலருடனோ தொடர்பு கொள்ளவும் உறவு வைத்துக் கொள்ளவும் உங்களுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு! எனவே தயங்க வேண்டாம். கவலைப் பட வேண்டாம். விரும்பியதைச் செயல்படுத்துங்கள்!
மது, போதைப் பொருட்கள், சூதாட்டம், இரவு நடனக் கேளிக்கைகள் – இதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகப் (Way of life) போய்விடும்! இத்தகைய வாழ்க்கை முறையைத் தான் இங்கே – நமது இளந்தலைமுறையும் காப்பியடிக்கத் துடிக்கின்றது!
எனினும், இறைக் கோட்பாட்டை மறுத்து நிற்பவர்களில் ஒரு சிலர் ஒழுக்கமுடையவர்களாகத் திகழ்வதும் உண்மை தான்! ஆனால் ஒரு அறிஞர் குரிப்பிடுவதைப் போல “There are moral atheists; but there is no moral atheism”. அதாவது ஒழுக்கமுள்ள நாத்திகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒழுக்கமுள்ள நாத்திகம் என்று ஒன்று கிடையாது!
சற்று சிந்தியுங்கள்! அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைப் படைத்த அறிஞர்களால், கம்ப்யூட்டர் என்றும் இன்டர்நெட் என்றும் அணுகுண்டு என்றும் ஏவுகணைகள் என்றும் அறிவியல் முன்னேற்றத்தில் புகுந்து விளையாடும் விஞ்ஞானிகளால் மனித வாழ்க்கைக்கு சரியானதொரு வழியை ஏன் காட்டிட இயலவில்லை?
இயற்கையின் அளப்பரிய ஆற்றல்களை மனித் வாழ்வுக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதில் வெற்றி பெற்ற அவர்கள் மனித வாழ்க்கையையே கோட்டை விட்டு விட்டார்களே – இது ஏன்?
காரணத்தைக் கண்டுபிடிப்போம்!