கருவிழிகள் சோக சித்திரம் வரைய,
நாசியில் தூய சுவாசம் குறைய,
பிஞ்சு இதழ்கள் ஏக்கத்தால் நிறைய,
மறைந்திருந்து பார்க்கும்
சிறுவனே நீ யாரடா...?
தலை கால் புரியாத பணத்தின்,
தாங்கமுடியா சொல்லடிக்கும்
வதைக்கும் கல்லடிக்கும் அஞ்சி,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!
வறுமையால் கொண்ட
யானைப் பசிக்காய்
சோளப்பொரி தூவும்
மானிடரின் கருமித்தனம் கண்டு,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!
பாசாங்கு பகட்டு காட்டும்
அத்தர் மணங்களும்
வாசனை திரவியங்களும்
உன் வியர்வை வாடையை
ஒதுக்கி தள்ளுமென நடுங்கி,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!
வாழ்வின் பெரும் அங்கமான
பாடசாலை வாசமும்
ஏட்டுப் புத்தகங்களும்
பேனை வாங்க வழியற்ற உன்னை
ஏளனம் செய்யுமென குறுகி,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!
வேதனை களைந்து
சாதனை நாடு சிறுவனே...!
வாய்க்காலாய் ஓடும் நீ,
நீர்வீழ்ச்சியாய் மாறலாம்...
பாகலாய் கசக்கும் நீ,
தேனமிர்தமாய் மாறலாம்...
காடு மேடு வலயம் தாண்டி சென்றால்
அழகுவெளி காணலாம்...
உன் வாழ்வின் பிரளயம் தாண்டி வந்தால்
இன்ப வருங்காலம் வாழலாம்...
உன்னுள் மறைவாய் இருக்கும்
முயற்சி நரம்பினை தட்டியெழுப்பு...
உன்னை மறைத்து நிற்கும்
தடை பாறைகளை வெட்டியகற்று...
முயற்சி எனும் ஆயுதம் ஏந்தி,
உனக்கான பாதையில் அடிகள் பதித்து,
வறுமை எனும் அகோரனுக்கு
நீ ஓர் மகாவீரன் எனக் காட்டு...!
"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" எனும் கூற்று,
அது உன் சோதனைகளை
கழுவும் ஊற்று...
இன்றே தொடங்கு உன் பயணம்...!
ஏழ்மைக்கு உன்னாலும் ஏற்படலாம் மரணம்...
காய்ந்து கருகி கிடக்கும்
உன் அமைதி காட்டிலும்
அடைமழை ஒருநாள் நிச்சயம் பொழியும்...
அன்று உன்னாலே
பல ஏழை மனங்களின்
கருமை வாழ்வுகள் நிச்சயம் விடியும்...!!!