FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on October 12, 2011, 07:12:13 PM

Title: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on October 12, 2011, 07:12:13 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! - 1  
                                                                             
                                                                                (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/lifelesson1.jpg)

சீக்கிரமே படியுங்கள்!

வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு உண்மையை நாம் உணர்வதில்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் வரை வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும் தான் திரும்பத் திரும்ப ஒரே வித அனுபவத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.


ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை யார் விரைவாகக் கற்றுத் தேறுகிறானோ அவனே வெற்றிவாகை சூடுகிறான். அவனே வாழ்க்கையில் நிறைவைக் காண்கிறான். அவனே கால மணலில் தன் காலடித் தடத்தை நிரந்தரமாக விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பி வாழ்ந்து மடியும் போது அவன் மட்டுமே வாழ்க்கையை ரசித்து திருப்தியுடன் விடை பெறுகிறான்.


இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வசதி இருக்கிறது. நாம் அடுத்தவர் பாடத்தையும் படித்துத் தேர்ந்து விடலாம். அப்படித் தேர்ந்து விட்டால், ஒழுங்காகக் கற்றுக் கொண்டு விட்டால் நாம் அந்தப் பாடத்தைத் தனியாகப் படித்துப் பாடுபட வேண்டியதில்லை.


உதாரணத்திற்கு ஒரு சாலையில் ஒரு குழி இருக்கிறது. திடீர் என்று பார்த்தால் அது தெரியாது. அந்தக் குழியைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அதில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை. நமக்கு முன்னால் போகும் ஒருவர் அதில் விழுந்ததைப் பார்த்தாலே போதும் பின் எப்போது அந்தப் பாதையில் போகும் போதும் சர்வ ஜாக்கிரதை நமக்குத் தானாக வந்து விடும். இந்தப் பாதையில் இந்த இடத்தில் ஒரு அபாயமான குழி இருக்கிறது. கவனமாகப் போக வேண்டும் என்ற பாடம் தானாக மனதில் பதிந்து விடும். இனி எந்த நாளும் அந்தக் குழி நமக்கு பிரச்னை அல்ல.


ஆனால் ”நான் அடுத்தவர் விழுவதைப் பார்த்தாலும் கற்றுக் கொள்ள மாட்டேன், நானே விழுந்தால் தான் எனக்குப் புரியும்” என்று சொல்லும் நபர் தானாகப் படிக்க விரும்பும் அறிவுக்குறைவானவர். அவர் விழுந்து எழுந்து தான் கஷ்டப்பட வேண்டும். நானே ஒரு தடவை விழுந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன். ஏனோ அப்படியாகி விட்டது. அடுத்த தடவை அப்படியாக வேண்டும் என்பதில்லை” என்று ஒவ்வொரு தடவையும் அதே குழி அருகில் அலட்சியமாக நடந்து விழுந்து எழும் நபர் முட்டாள். அவர் கஷ்டப்படவே பிறந்தவர்.


இந்தக் குழி உதாரணம் படிக்கையில் இப்படியும் முட்டாள்தனமாக யாராவது இருப்பார்களா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் நம்மில் பலரும் அப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எத்தனை பேர் சூதாட்டத்தில் பல முறை தாங்கள் சூடுபட்டும் திருந்தாதவர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் பல பேர் சூதினால் சீரழிவதைப் பார்த்த பின்னும ”எனக்கு அப்படி ஆகாது” என்று நினைத்து திரும்பத் திரும்ப சூதாடி அழிந்து போனவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள் புரியும்.


தீயைத் தொட்டுத் தான் அது சுடும் என்று உணர வேண்டியது இல்லை. அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்களைப் பார்த்தும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி படிப்பது தான் புத்திசாலித்தனம்.


ஒவ்வொன்றையும் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் அனுபவித்தே கற்க வேண்டும் என்றிருந்தால் நம் வாழ்க்கையின் நீளம் சில பாடங்களுக்கே போதாது. அதில் நிறைய சாதிக்கவும் முடியாது. நம் வாழ்க்கையில் கிடைக்கும் பாடங்களை முதல் தடவையிலேயே ஒழுங்காகப் படிப்பது முக்கியம். அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்தும் நிறையவற்றை கூர்மையாகப் பார்த்துக் கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.


வாழ்க்கைப் பள்ளிக்கூடத்திற்குள் ஒரு முறை நுழைந்து விட்ட பின் தப்பிக்க வழியே இல்லை. எனவே எதையும் புத்திசாலித்தனமாக சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதைத் திரும்பத் திரும்ப படிக்க வேண்டி வராது. அந்தப் பாடம் உங்களுக்குப் பாரமாகவும் இருக்காது.


மேலும் படிப்போம்....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on October 21, 2011, 05:03:42 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 2  

                                                                       (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp2.jpg)
முக்கியமானதை முதலில் படியுங்கள்!

வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். ”நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்” என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதே போல “எனக்கு வயதாகி விட்டது. அதனால் நான் இனி படிக்க வேண்டிய அவசியம் இல்லை” எந்த முதியவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. கடைசி மூச்சு வரை நீடிக்கும் இந்த வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கத் தவறினால் தோல்வியின் உரசல்களில் காயப்பட்டு வருந்த நேரிடும்.

வாழ்க்கைப் பள்ளியில் தேர்வு முறை வித்தியாசமானது. சாதாரண பள்ளிகளில் வைப்பது போல தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் வைக்கப்படுவதில்லை. தேர்வுகள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. என்னேரமும் வாழ்க்கை உங்களை பரீட்சித்துப் பார்க்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் தயாராக இருந்து அந்தத் தேர்வில் தேற வேண்டும். எனவே என்னேரமும் பரீட்சிக்கப் படலாம் என்ற உண்மை உணர்ந்து தயார்நிலையில் இருப்பது அறிவுடைமை.

முதலில் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். எதெல்லாம் அவசியத் தேவைகளோ, எதெல்லாம் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு முக்கியமோ அதையெல்லாம் படித்துத் தேறுபவன் எந்தக் காலத்திலும் பாஸ் மார்க் வாங்கி முன்னேறிக் கொண்டே போகலாம். அதைக் கற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டி விடக்கூடாது. அதை விட்டு விட்டு மற்றவற்றை எவ்வளவு அறிந்து வைத்திருந்தாலும் அது யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

ஒரு கர்வம் பிடித்த அறிவாளி ஆற்றில் பயணித்த கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அந்த அறிவாளி ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர். பல விஞ்ஞானக் கோட்பாடுகளை நுணுக்கமாக அவரால் விவாதிக்க முடியும். பல மொழிகளில் அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவன். என்ன தலைப்பை அவருக்குத் தந்தாலும் அவரால் அதைப் பற்றி விரிவாக விளக்க முடியும். அதனால் அவனுக்கு நிறையவே கர்வம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர் அறியாதவற்றைக் கேட்டு அவர் திணறுவதை ரசிப்பார்.

ஒருமுறை அவர் ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆற்றில் பயணித்தார். படகோட்டியைப் பார்த்தாலே படிக்காதவன் என்பது அவருக்குப் புரிந்தது. அவன் தன் படகில் எப்படிப்பட்ட அறிவுஜீவியை அழைத்துக் கொண்டு போகிறான் என்பதை அவனுக்கு அவர் உணர்த்த விரும்பினார். அவனிடம் அவர் அது தெரியுமா, இது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அவனோ பலவற்றின் பெயரைத் தன் வாழ்க்கையில் இது வரை கேட்டறியாதவன். அவன் தெரியாது, தெரியாது என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே வந்தான். இதெல்லாம் தெரியாத உன் வாழ்க்கை வீண் என்பதைப் பல விதங்களில் அந்த அறிவாளி அவனுக்கு உணர்த்திக் கொண்டே வந்தார்.

திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளத்தில் அந்தப் படகு தத்தளித்தது. படகோட்டி அவரைக் கேட்டான். “ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

அந்த அறிவுஜீவிக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. வேறொன்றுமே தெரியா விட்டாலும் நீச்சல் தெரிந்த அந்த படகோட்டி நீந்தி உயிர்பிழைத்தான். ஆனால் அது தவிர எத்தனையோ தெரிந்திருந்த அந்த அறிவாளி வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். எத்தனை தெரியும் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு அந்தந்த காலத்திற்குத் தேவையான முக்கியமானவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்பது முக்கியம். அது தெரியாமல் அதைத் தவிர பாக்கி எல்லாமே தெரிந்து வைத்திருந்தாலும் மற்றவர்கள் உங்களை மேலாக நினைக்க அவை உதவலாமே ஒழிய வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட காலத்தை சமாளிக்க அவை உதவாது.

எனவே வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை முதலில் கற்றுத் தேறுங்கள். எதெல்லாம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ அத்தியாவசியமோ அதைத் தேவையான அளவு பெற்றிருங்கள். எந்த குணாதிசயங்கள் வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்கத் தேவையோ அந்தக் குணாதிசயங்களைக் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்று கேட்க நீங்கள் மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தரும் சோதனைகளைக் கூர்ந்து கவனியுங்கள். எதையெல்லாம் உங்களால் சரியாக சமாளிக்க முடியவில்லையோ அதில் எல்லாம் நீங்கள் கற்றுத் தேற வேண்டியது இருக்கிறது.

எந்தக் குறையால் ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை என்று யோசியுங்கள். உடனடி பதிலாக விதி, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், அரசாங்கம் என்று எடுத்துக் கொண்டு பொறுப்பை அந்தப் பக்கம் தள்ள முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குறையை உணருங்கள். நீங்கள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. முன்பு சொன்னது போல சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதை விட்டு விட்டு கல்வி, செல்வம், பட்டம், பதவி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறதால் அனைத்தும் அடைந்து விட்டதாக ஒரு கற்பனை உலகில் இருந்தால் ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன அறிவுஜீவியைப் போல் வாழ்க்கை ஓட்டத்தில் துரும்பாக அலைக்கழிக்கப் படுவீர்கள்.

மேலும் படிப்போம் .....


Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 02, 2011, 04:42:17 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-3

                                                    (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp3.jpg)

சரியானதைப் படியுங்கள்
மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த ஹரிச்சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய ஹரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்ல வைக்கிறேன் என்று சூளுரைத்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி, மகன் பிணத்தையே மனைவி புதைக்க எடுத்து வந்த போதும் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததை விவரிக்கும் நாடகம் அது. கடைசியில் விசுவாமித்திர முனிவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அனைத்தையும் அவனுக்குத் திருப்பிக் கொடுத்ததில் முடியும் அந்த நாடகம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவன் மனதில் விதைத்த விதை அந்த சிறுவனை மகாத்மா காந்தியாக பிற்காலத்தில் வளர்த்து விட்டது. அதே நாடகத்தைப் பார்த்து விட்டு இத்தனை கஷ்டங்கள் பட வேண்டிய அவசியம் என்ன, ஒரு பொய் சொல்லி விட்டுப் போயிருக்கலாமே, எதையும் இழக்க வேண்டியிருந்திக்கவில்லையே என்ற ஒரு சராசரி மனிதனின் மன ஓட்டம் காந்தி மனதில் ஓடியிருக்குமானால் மகாத்மா காந்தியாக அவர் உருவெடுத்து இருக்க முடியாது.

எனவே ஒரு பாடத்தில் இருந்து சரியான படிப்பினை பெறுவது மிக முக்கியம். ஹரிச்சந்திரன் கதையைப் படித்து விட்டு உண்மை சொன்னால் இத்தனை பிரச்னைகள் வரும் என்று படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சத்தியத்தை கைவிடலாகாது என்ற படிப்பினையைப் பெறவும் முடியும். சரியான படிப்பினையைப் பெறுகிறோமா தவறான படிப்பினையைப் பெறுகிறோமா என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும், உயர்வு தாழ்வுகளும் அமைகின்றன.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்தில் நடத்துகிற ஒரே பாடத்தில் பலரும் பலதரப்பட்ட பாடங்களைப் பெறுகிறார்கள் என்பதற்கு நம் தினசரி வாழ்க்கையிலேயே நாம் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம். ஒரு குடிகாரத் தந்தையின் இரண்டு மகன்கள் பற்றிய செய்தி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்தக் குடிகாரத் தகப்பன் பொறுப்பில்லாதவன். எப்போதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியையும், இரண்டு மகன்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துவான். வீட்டு செலவுக்குச் சரியாகப் பணமும் தர மாட்டான். ஒரு காலகட்டத்தில் ஒரு மதுக்கடை கேஷியரைக் கொன்று விட்டு ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். இந்த சூழ்நிலையில் வளர்ந்த இரண்டு மகன்களும் பெரியவர்களானார்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் தான். ஒருவன் தந்தையைப் போலவே குடிகாரனாகி, பொறுப்பில்லாமல் இருந்தான். திருடியும், மற்றவர்களை மிரட்டியும் வாழ்ந்தான். ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக தற்போது சிறையில் இருக்கிறான். இன்னொருவனோ அவனுக்கு நேர் எதிர்மாறாக இருந்தான். நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருந்த அவனுக்கு எந்த தீய பழக்கங்களும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இருவரையும் அவர்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் கேட்ட போது இருவரும் ஒரே பதில் சொன்னார்கள்-அவர்களுடைய தந்தை தான் காரணம் என்றார்கள்.

குடிகார மகன் சொன்னான். “அவரைப் பார்த்து வளர்ந்த சூழல் என்னை இப்படி ஆக்கி விட்டது”. நல்ல நிலையில் இருந்த மகன் சொன்னான். “சிறு வயதில் இருந்தே அவர் நடவடிக்கைகளால் எத்தனை வேதனை, பிரச்சனை என்று பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அன்றே நான் கற்றுக் கொண்டேன்”. ஒரே குடும்பம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் கற்று கொண்ட பாடங்களைப் பாருங்கள்.

ஒரு அழகான ஆங்கிலக் கவிதையில் வரும் இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை-

Two men looked out from prison bars,

One saw mud, the other saw stars.

(சிறைக்கம்பிகள் வழியே இருவர் வெளியே பார்த்தார்கள். ஒருவன் சகதியைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான்)

இருக்கின்ற இடம் ஒன்றே ஆனாலும் பார்க்கின்ற பார்வைகள் வேறாகின்றன. பார்வைகள் மாறும் போது வாழ்க்கையே மாறுகின்றன. இது மிகப்பெரிய உண்மை.

நாம் சந்திக்கின்ற சூழ்நிலைகளும், மனிதர்களும் நமக்கு பாடங்களே. நாம் சரியான பாடம் கற்கத் தயாராக இருப்போமானால் நமக்கு நிறைய நல்லதைக் கற்க முடியும். மனிதர்களில் சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறார்கள். நாம் மாற்றிப் படித்துக் கொண்டு விடக்கூடாது. அதே போல ஒரே மனிதன் சில விஷயங்களில் இப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தையும், சில விஷயங்களில் இப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் கற்பிக்கக் கூடும். ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் பலம் பலவீனம் கொண்டவர்கள் தானே. சரியானதை மட்டும் கற்க நாம் கற்றுக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள அனைத்துமே நமக்கு ஆசானாக இருக்க முடியும்.

ஒருவர் சிறந்த கலைஞராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்கலாம். அதே நபர் தனிப்பட்ட முறையில் நம்பத்தகாத நபராகவும், மோசக்காரராகவும் கூட இருக்கலாம். அந்த நபரை ஒட்டு மொத்தமாகப் பின் பற்ற முடியுமா? அந்தக் கலையையும், விளையாட்டையும் பொறுத்த வரை அவரை முழுமையாக பின்பற்றலாம். மற்ற விஷயங்களில் எப்படி இருக்கக்கூடாது என்ற பாடத்தையே அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இந்த அறிவு இல்லாமையே இன்றைய காலத்தில் பெரிய சாபக்கேடு. ஒரு துறையில் திறமை படைத்தவன் எல்லா விஷயத்திலும் திறமை படைத்தவன் என்று நம்பும் முட்டாள் தனமான “ஹீரோ வர்ஷிப்” நம்மிடையே நிறைய இருக்கிறது.

இருக்கும் கட்சித் தலைமையானாலும் சரி, கவர்ந்த கதாநாயகனானாலும் சரி, பிடித்த விளையாட்டு வீரனானாலும் சரி அவர்கள் செய்வதெல்லாம் சரி, அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே நம் வழி என்று இருக்காமல் எது நல்லதோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு நல்லதல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளாமல் விலக்குவதே சரியான பாடங்களைப் படிக்கும் முறை. அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும் திறமை கொண்டது என்று சொல்வார்கள். அது போல நாமும் எல்லாவற்றில் இருந்து சரியானதை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமானால் நாம் அடைய முடியாத சிகரங்கள் இல்லை.

மேலும் படிப்போம்....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 06, 2011, 10:57:35 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – 4  

                                                             (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp4.jpg)

சரியாகப் படியுங்கள்!
”கற்க கசடற” என்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும்.

குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். சில முறை முயன்று எனக்கு இதற்கு மேல் முடியாது, எனக்குப் படிப்பே வராது என்று குழந்தை இருந்து விடுவதில்லை. எழுதும் கலையில் தேர்ச்சி பெறும் வரை குழந்தை அப்படித்தான் எழுதும். ஆனால் தொடர்ந்து முயன்று பயிற்சி செய்தால் விரைவில் எழுதக் கற்றுக் கொண்டு விடும். அதன் பிறகு பென்சிலை சரியாகப் பிடிப்பதும் ஒழுங்காக எழுதுவதும் அதற்கு இயல்பான ஒன்றாகி விடும். இனி பென்சிலையும் பேனாவையும் தவறாகப் பிடிப்பதும் எழுத்துக்களைத் தவறாக எழுதுவதும் தான் அந்தக் குழந்தைக்குக் கஷ்டமான காரியம். இதைப் போலத்தான் வாழ்க்கைப் பாடங்களையும் சரியாகப் படிப்பதற்கு ஆரம்ப காலங்களில் புதிய முயற்சிகளும், அதிகப் பயிற்சிகளும் தேவை.

அப்படிச் செய்யாமல் தவறாகவே ஒன்றைப் படித்துக் கொண்டு அதையே சரியென்று நம்பி இருந்து விட்டால் அந்தத் தவறான பாடங்களால் தவறாக எதையும் படிப்பது தான் இயல்பாகி விடும். ஒரு காகிதத்தை நாலாக மடியுங்கள். பின் அந்த காகிதத்தை நாம் அப்படி மடிப்பது தான் சுலபமாக இருக்கும். பல முறை மடித்த பின் அந்தக் காகிதமே அப்படி மடிப்பதற்கு ஏதுவாகத் தான் தானாக மடங்கி நிற்கும். அது போலத் தான் நாம் நம் அனுபவங்களை எடுத்துக் கொள்ளும் விதமும். தவறாகவே எடுத்துக் கொண்டு பழகி விட்டால் பின் தவறாக நம்புவதே இயல்பாகி விடும். அந்த தவறான அஸ்திவாரத்தின் மேல் நாம் எழுப்பும் எல்லாமே தவறுகளாகவே மாறி விடும். நம் வாழ்க்கையையும் அடுத்தவர் வாழ்க்கையையும் நாம் நரகமாக்கி விட முடியும். இன்றைய பெரும்பாலான பிரச்னைகளுக்கு இந்தத் தவறான பாடம் கற்றலே காரணமாக இருக்கிறது என்பது உண்மை.

எதையும் சரியாகப் படிப்பது கஷ்டமான காரியம் இல்லை. உள்ளதை உள்ளபடி பார்த்து, உணர்ந்து முடிவுகளை எட்டுவது முக்கியம். அப்படிப் படிப்பது தான் சரியாகப் படிக்கும் முறை. முதலிலேயே ஒரு அபிப்பிராயத்தை மனதினுள்ளே வைத்துக் கொண்டு பார்த்தால் அதற்குத் தகுந்தது போலத் தான் நாம் படிக்கும் பாடங்கள் இருக்கும். அது தவறாகப் படிக்கும் முறையாகும்.

பெரும்பாலும் இந்தத் தவறான முறையில் தான் மனிதனைப் படிக்கிறோம், சூழ்நிலைகளைப் படிக்கிறோம், மதங்களைப் படிக்கிறோம், ஏன் நம்மையே அப்படித்தான் படிக்கிறோம். அதன் விளைவுகளை நம்மைச் சுற்றியும் பார்த்து குமுறுகிறோம். ஏன் இப்படியெல்லாம் ஆகின்றன? ஏன் இப்படியெல்லாம் இருக்கின்றனர்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் மனிதர்களால் சரியாகப் படித்து புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.

பரிட்சையில் சரியாக மார்க் வாங்க முடியவில்லை என்றால் சரியாகப் படிக்கவில்லை, அந்தப் பரிட்சைக்குத் தேவையான தயார்நிலையில் இருந்திருக்கவில்லை என்று உணர்பவன் அடுத்த பரிட்சைக்கு சரியாகப் படித்துக் கொள்ள முடியும், தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கேள்வித்தாள் கடினமானது, ஆசிரியர் சரியில்லை, படிக்கும் சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் எடுத்துக் கொண்டால் அந்த மாணவன் தன் பாடத்தைத் தவறாகப் படித்தவனாகிறான். ஒவ்வொரு முறை பரிட்சைக்கும் படித்துத் தயாராவதை விட காரணங்களுடன் தயாராக இருக்கக் கற்றுக் கொள்வான்.

இன்றைய மதக்கலவரங்களுக்குக் காரணம் மனிதர்கள் தங்கள் மதத்தைச் சரியாகப் படிக்காதது தான். எதைக் கடவுள் வாக்காக எடுத்துக் கொள்ளலாம், எதை சைத்தான் வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சிந்தனா சக்தி கூட இல்லாதது தான்.

ஒரு பையனுக்கு ஒரு நாள் உடல்நிலை சரியில்லை. அவன் புத்தகத்தை எடுத்து படிக்கப் போகிறான், அல்லது விளையாடப் போகிறான். அவன் தந்தை சொல்கிறார் ”பேசாமல் போய் தூங்கு”. அந்தப் பையன் குணமான பின்னும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று சதா தூங்கிக் கொண்டே இருந்தால் அவனை நல்ல பிள்ளை என்று பாராட்டுவோமா? எதை எதனால் சொல்கிறார் என்றறியாமல் கண்மூடித்தனமாக ஒரு அறிவுரையைப் பின்பற்றுவது முட்டாள்தனம் அல்லவா? அதே போல ஒரு காலகட்டத்தில் ஒரு சூழ்நிலையை மனதில் கொண்டு சொல்லப்படும் அறிவுரை எல்லா கால கட்டங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. இது போலவே ஒரு மதநூலில் ஒரு வாசகத்தை வைத்து கடவுள் சொல்படி நடக்கிறோம் என்று சொல்வதும் கேலிக் கூத்தே. தங்கள் மதத்தினை சரியாகப் படிக்கவில்லை என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நாம் அதற்கு எத்தனை விலை தர வேண்டி இருக்கிறது, எத்தனை அழிவைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய 90 சதவீதப் பிரச்னைகளுக்கு மனிதர்கள் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்க தவறுவதே காரணம். மேலோட்டமாகப் படித்து அதில் முழுமையாக அறிந்து கொண்ட நினைப்புடன் இருந்து விடுவதே காரணம். அந்த ஆரம்பத் தவறு அடுத்த தவறுகளுக்கு வழி ஏற்படுகிறது. பின் ஏற்படுவதெல்லாம் அனர்த்தம் தான். எனவே எதையும் சரியாகப் படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். முன் படித்தவை தவறாக இருந்திருக்கின்றன என்பதை உணரும் பட்சத்தில் உடனடியாகத் திருத்தி சரி செய்து கொள்ளுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதில் கௌரவம் பறி போய் விடும் என்று தவறாக எண்ணாதீர்கள்.

சரியாகப் படிப்பதே சரியாக வழிகாட்டும். சிறப்பாக வழிநடத்தும்.

மேலும் படிப்போம்....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 16, 2011, 05:17:07 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-5

                                               (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp5.jpg)                                                                 
ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்!
ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அறுந்து போகக் கூடிய அந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே அதன் பயன் அமையும். அதே போல ஒரு பலவீனம் ஒரு மனிதன் விதியை நிர்ணயித்து விடுவது உண்டு.

இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட அவன் அறிவின் அளவுக்குச் சொல்வதென்று கூறுவதுண்டு. அதே போல உடல் வலிமையிலும், போரிடும் திறமையிலும் கூட இராமனையே வியக்க வைத்தவன். வேதங்களாகட்டும், கலைகளாகட்டும் அவற்றை எல்லாம் கரைத்துக் குடித்தவன். கடைசியில் காமம் என்ற பலவீனத்தால் அவன் அழிந்து போனான். அவனுக்கு இருந்த அத்தனை பெருமைகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க சிறிய துளை போதும். அது போல சில சமயங்களில் ஒரு மனிதனை அழிக்க அவனது ஒரு பலவீனம் போதும். எத்தனையோ திறமையாளர்கள், நாம் வியந்து போகிற அளவு விஷய ஞானம் உள்ளவர்கள் ஒரு பலவீனத்தால் ஒன்றுமில்லாமல் அழிந்து போவதை நாம் நம்மைச் சுற்றிலும் பார்க்கலாம்.

ஒரு இசைக் கலைஞர் நல்ல குரல் வளமும், கர்னாடக இசை ஞானமும் உள்ளவர். வயலின், கீ போர்டு ஆகிய இசைக்கருவிகளிலும் மிக அருமையாக வாசிக்கக் கூடியவர். கேரளாவைச் சேர்ந்த அவருக்கு இணையான மாணவனை தன் வாழ்நாளில் சந்தித்ததில்லை என்று அவருடைய குருவால் பாராட்டப்பட்டவர். அப்படிப்பட்ட அவர் தன் குடிப்பழக்கம் அத்துமீறிப் போனதால் இன்று வறுமையால் வாடுகிறார். பலர் கச்சேரிகளுக்கு ஆரம்பத்தில் அழைத்துப் பார்த்தனர். முன்பணம் வாங்கிக் கொண்டு அதில் குடித்து கச்சேரி நாளில் எங்காவது விழுந்து கிடப்பாராம். பின் எல்லோரும் அவரைக் கூப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார்கள். இன்று தெரிந்தவர்களிடம் ஐம்பது நூறு என்று வாங்கிக் குடித்துக் கொண்டு இருக்கிறார். அவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பெண் முடிகிற வரை தாக்குப் பிடித்து விட்டு ஒரே குழந்தையை எடுத்துக் கொண்டு அவரை விட்டுப் போய் விட்டாள். ஒரு மாபெரும் இசைக்கலைஞராக உலகிற்கு அறிமுகமாகியிருக்க வேண்டிய ஒரு நபர், புகழோடு பணத்தையும் சேர்த்துக் குவித்து வெற்றியாளராக இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இன்று அடையாளமில்லாமல், ஆதரவில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறார். காரணம் ஒரே ஒரு மிகப்பெரிய பலவீனம் கட்டுப்பாடில்லாத குடிப்பழக்கம்.

அதே நபருடன் சேர்ந்து வயலின் மட்டும் கற்றுத் தேர்ந்த ஒரு கலைஞர் இன்று கச்சேரிகளுக்கும் போகிறார், வீட்டில் குழந்தைகளுக்கும் வயலின் டியூஷன் சொல்லித் தருகிறார். நல்ல வருமானத்துடன் கௌரவமாக தன் குடும்பத்துடன் வாழ்கிறார்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு நபர் மிக நல்லவர். நன்றாகப் படித்தவர். நல்ல புத்திசாலி. அரசாங்க வங்கியில் வேலையில் இருந்தார். சொந்தமாய் வீடு, வாகனம் எல்லாம் இருந்தது. ஒரு சமயம் இரண்டு கம்பெனிகளின் ஷேர்கள் வாங்கி விற்று பெரிய லாபம் சம்பாதித்தார். அந்த லாபம் அவரை ஒரேயடியாக மாற்றி விட்டது. இப்படி ஒரே நாளில் சம்பாதிக்க முடியும் போது மாதாமாதம் உழைத்து சம்பாதிக்கும் இந்த வருமானம் அவருக்குத் துச்சமாகத் தோன்ற ஆரம்பித்தது. வங்கியில் எல்லாக் கடன்களும் வாங்கி ஷேர்களில் போட்டு நஷ்டமடைந்தார். எல்லா வங்கிகளிலும் க்ரெடிட் கார்டுகள் வாங்கி அதில் பணம் எடுத்து ஷேர்களில் போட்டார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிவுரையைக் கேளாமல் அடுத்ததாக தன் பைக்கை விற்று அதில் போட்டார். பிறகு வீட்டையும் விற்று வந்த பணத்தை அதில் போட்டார். எல்லாப் பணத்தையும் இழந்தார். கடைசியில் உடல்நலம் காரணம் சொல்லி வங்கிப்பணியையும் ராஜினாமா செய்தார். வந்த ப்ராவிடண்ட் ஃபண்டு, கிராடியுட்டி எல்லாவற்றையும் கூட அதில் போட்டார். எல்லாம் போய் விட்டது. கடன்காரர்கள் தொல்லை தாளாமல் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடிப்போனார். இன்று தூர ஏதோ ஒரு ஊரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒரு சிறிய வேலையில் இருக்கிறார். மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன். பாதுகாப்பான அரசாங்க உத்தியோகம், நல்ல சம்பளம், வீடு வாசல், வாகனம் என்றிருந்த ஒருவரை ஒரு பலவீனம் எப்படி அழித்து விட்டது பாருங்கள்.

அதே நேரத்தில் இன்னொரு நபரைப் பற்றியும் பார்ப்போம். அவர் எனக்கு உறவினரும் கூட. படிப்பு கிடையாது. பரம சாது. சூட்சுமமான விஷயங்கள் அவர் தலையில் ஏறாது. சமையல்காரர்களுக்கு எடுபிடியாகப் போவார். மாவாட்டுவார், காய்கறி நறுக்குவார், சப்ளை செய்வார். பல வருடங்கள் இதையே செய்து வந்த அவர் தனியாக சமைக்கவெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மனிதர் தன் சம்பாத்தியம் அப்படியே வீட்டுக்குக் கொண்டு போய் மனைவியிடம் கொடுத்து விடுவார். அந்த சம்பாத்தியத்தில் ஒரே மகளை டீச்சருக்குப் படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுத்து, தங்களுக்காக ஒரு சிறிய வீட்டையும் கட்டிக் கொண்டு ஓரளவு சேமிப்பையும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறுபது வயதைத் தாண்டியும் இன்னும் அந்த வேலைக்குப் போய் கொண்டிருக்கிறார். எந்தத் திறமையும் இல்லா விட்டாலும் உழைத்து சம்பாதித்து கௌரவமாக அவர் வாழ்கிறார்.

எத்தனையோ திறமையாளர்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும் ஒரு பலவீனத்திற்கு பலி கொடுத்து அழிந்து போகிற போது பிரத்தியேக திறமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் தங்களை அழிக்கக் கூடிய பலவீனங்கள் இல்லாதவர்கள் உழைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மனிதனுக்கு பலம், பலவீனம் இரண்டும் இருப்பது இயல்பே. பலவீனமே இல்லாதவனாய் இருந்து விடுதல் சுலபமும் அல்ல. ஆனால் அந்த பலவீனம் அவன் வாழ்க்கையையே அழித்து விடும் அளவு வளர்ந்து விடக்கூடாது. அவனுடைய எல்லா நன்மையையும் அழித்து விடக் கூடடிய தீமையாக மாறி விட அவன் அனுமதிக்கக் கூடாது. ஆரம்பத்தில் அந்த பலவீனம் பெரிய விஷயமல்ல என்றும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அதில் ஏமாந்து விடக்கூடாது. மூன்றடி மண் கேட்ட வாமனன் கடைசியில் மூவுலகும் போதவில்லை என்றது போல ஒரு சாதாரணமாகத் தோன்றும் தீய பழக்கமோ, பலவீனமோ விஸ்வரூபம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிப்போம்....


Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 17, 2011, 05:08:19 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 6

                                                                 (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vvp6.jpg)

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.


விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்பதோ எவருக்கும் தேவையில்லாத விவரங்களாக இருக்கின்றன. ஒரு துறையில் ஒருவர் முத்திரை பதித்த பின் அந்த நபரின் மற்ற பலவீனங்கள் அந்தப் பலத்தையே தகர்த்து விடுவதாக இல்லாத வரையில் அலட்சியப் படுத்தத் தக்கவையாகவே இருந்து விடுகின்றன.


எனவே ஒருவனுக்குப் பல பலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவனை அழித்து விடலாம் என்பது போலவே, பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலம் அவனை சிறப்பாக உயர்த்தியும் விடலாம் என்பதும் உண்மை. ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல ஒரு அரசனுக்கே இது பொருந்தும் உண்மை என்பதை ஒரு வரலாற்று உதாரணம் மூலமாகவே விளக்கலாம்.


சத்ரபதி சிவாஜியின் பேரன் ஷாஹூஜி தன் ஏழாம் வயதிலிருந்து இருபத்தைந்தாம் வயது வரை முகலாயர்களின் பிடியில் இருந்தவர். சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியைக் கொன்ற முகலாயர்கள் அவர் மனைவியையும், மகன் ஷாஹூஜியையும் தங்கள் வசமே சிறைப்படுத்தி வைத்திருந்தனர். கிட்டத்தட்ட தன் விளையாட்டுப் பருவத்தையும், இளமைப்பருவத்தையும் எதிரிகளான முகலாயர்கள் வசத்தில் இருந்து தொலைத்து விட்ட ஷாஹூஜி பின் அவர்களால் விடுவிக்கப்பட்டு மராட்டிய மன்னராக ஆனார். அப்போதும் மராட்டிய மண்ணில் ஒரு பகுதி அவர் சித்தப்பா மனைவி தாராபாய் ஆட்சியில் இருந்தது. ஷாஹூஜியின் தாயையோ முகலாயர்கள் இன்னும் தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர். ஷாஹுஜி தங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அவருடைய தாயை அழித்து விடுவதாக பயமுறுத்தியும் வைத்திருந்தனர்.


இப்படி பல்வேறு சிக்கல்களில் ஆட்சியில் அமர்ந்த ஷாஹுஜி பெரிய போர்வீரர் அல்ல. முகலாயர் பிடியிலேயே இளமையைக் கழிக்க வேண்டி இருந்ததால் ஒரு இளவரசனாக வளராததால் போர்வீரனாக அவர் பயிற்சிகளால் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசருக்குத் தேவையான வீரமோ, போர்த்திறமையோ இல்லாத ஷாஹூஜியிற்கு ஒரே ஒரு திறமை இருந்தது. ஒரு மனிதரை எடை போடுவதில் அவர் வல்லவராக இருந்தார். எதிரிகளிடமே வளர்ந்ததால் எவனை எதில் நம்பலாம், எது வரை நம்பலாம், எதில் நம்பக்கூடாது என்கிறதெல்லாம் கணிக்கக் கூடிய திறமையை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். அந்த ஒரு திறமை அவருடைய மற்றெல்லா பலவீனங்களையும் ஒரு பொருட்டல்லாதவையாக ஆக்கி விட்டது.


நம்பிக்கைக்குப் பாத்திரமான திறமையான மனிதர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்த அவர் சிறிது சிறிதாக தன் அரசைப் பலப்படுத்தினார். மராட்டியத்திலேயே தனக்கு எதிராக ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த தாராபாயை அப்புறப்படுத்தி ஒரே மராட்டிய அரசாக்கித் தானே சக்கரவர்த்தியானார். முகலாயர் பிடியிலிருந்த தாயைத் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டார். திறமைசாலிகளை சமூகத்தின் எல்லா பாகங்களில் இருந்து கண்டறிந்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் முக்கிய இடம் கொடுத்து அதிகாரத்தையும் வழங்கி மாபெரும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். அவர் காலத்தில் தான் மராட்டிய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மிகப்பெரிய விஸ்தீரணத்தைக் கண்டது. அவர் காலத்தில் கல்வி, சட்டம், சமூகநிலை போன்ற எல்லாத் துறைகளும் பெரிய சீர்திருத்தம் கண்டன. திறமையானவர்கள் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றனர். அதே சமயத்தில் அவர்கள் சக்கரவர்த்திக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தனர்.


தன்னை விடப் பெரிய திறமைசாலிகளையும், பலசாலிகளையும் உதவியாக வைத்து அரசாண்டதுமல்லாமல் அவர்கள் தன்னிடம் மாறாத விசுவாசத்துடன் எப்போதும் இருக்கும்படி அவர்களைத் தன் இனிய குணத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் வைத்துக் கொண்டது தான் சத்ரபதி ஷாஹுவின் ஒரே பலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு மிகப்பெரிய பலத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்த முடியும் போது ஒரு வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது தானா கஷ்டம்? யோசியுங்கள்.


உங்கள் குறைகளும், பலவீனங்களும் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லாதவரை நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலவற்றில் நீங்கள் பூஜ்ஜியமாகக் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள பலரும் அவற்றில் பெரிய திறமையாளர்களாகக் கூட இருக்கலாம். யாராவது அதுபற்றிக் கேட்டால் சொல்ல தர்மசங்கடமாக இருக்கக் கூடும் என்றாலும் உங்கள் வாழ்க்கை அந்த ஒன்றிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை என்பதை உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் இயல்பிலேயே இல்லாத திறமை, எவ்வளவு முயன்றாலும் புளியங்கொம்பாக இருக்கின்ற திறமை என்றால் அது உங்களுக்கானதல்ல என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு விடுங்கள். அதற்காக நீண்ட காலம் போராடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.


உங்கள் உண்மையான திறமைகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எது உங்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும் இயல்பாகவும் வருகிறதோ எதைச் செய்யும் போது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்களோ அது உங்கள் உண்மையான பலம். அது ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒன்றை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒன்று உங்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.


விஸ்வநாதன் ஆனந்தை செஸ் அடையாளம் காட்டியது போல, சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் அடையாளம் காட்டியது போல, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் இசை அடையாளம் காட்டியது போல, சுஜாதாவை எழுத்து அடையாளம் காட்டியது போல, ராமானுஜத்தை கணிதம் அடையாளம் காட்டியது போல உங்களையும் ஒரு திறமை உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.


அப்படி உலகத்திற்கு அடையாளம் காட்டா விட்டாலும் கூட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்த ஒரு திறமை உங்களுக்கு வழி காட்டலாம். கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகத் திறமையான ஒரு ஆசிரியர் ப்ளஸ் டூ மாணவ மாணவியருக்கு சில மணி நேர டியூஷன் எடுப்பதன் மூலமாக வெற்றிகரமான ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியரை விட அதிகமாக சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமாகவும், கச்சிதமாகவும் தைக்கத் தெரிந்த ஒரு பெண்மணி பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுத்தே கைநிறைய சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதே போல எத்தனையோ தனித் திறமைகளால் வெற்றிகரமாக வாழும் மனிதர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


எனவே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியாது என்று உலகம் கேட்கப் போவதில்லை. அதைப் பற்றி அது கவலைப்படுவதுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும், எந்த அளவு தெரியும், அதில் கூடுதலான உங்கள் தனித்திறமை என்ன என்று தான் உலகம் பார்க்கிறது. அதை வைத்தே உலகம் உங்களை உபயோகப்படுத்துகிறது. எனவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் என்று எல்லாவற்றையும் ஓரளவு தெரிந்து கொள்வதை விட உங்கள் உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் பலம். அப்படி ஒரு பலம் உங்களுக்கு உறுதியாகக் கிடைத்து விட்டால் உலகிற்கு நீங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவீர்கள். அதற்கான விலையாக உங்களுக்கு வேண்டியதை இந்த உலகம் கண்டிப்பாக கொடுத்தே தீரும்.

மேலும் படிப்போம்....


Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 18, 2011, 07:28:52 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7
                                                                (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp7.jpg)
நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!  

எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.


நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.


யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.


இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.


இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.


தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.


ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.


இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.


அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.


பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது” என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.


எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.


எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’ கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.


மேலும் படிப்போம்.....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 26, 2011, 04:41:01 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 8

                                                        (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp8.jpg)

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!


அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.


ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையை அவனுக்குத் தந்தார். வரைய சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை அவனுக்கு ஒதுக்கித் தந்தார் அந்த பாதிரியார். அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொந்திரவு மிக அதிகமாக இருந்தது. வரைய அந்த இடம் சாதகமாக இல்லை. அங்கு ஒரு சுண்டெலியின் அட்டகாசமோ அதிகமாக இருந்தது. அந்த மோசமான சூழ்நிலையிலும் அந்த சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியை ஒரு இறவாத கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான். அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துத் தந்தது அந்த மிக்கி மவுஸ்.


இன்னொரு உதாரணமாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலை போய், சேர்த்த செல்வமும் பெரிதாக எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நின்றார் அவர். சிறிய வயதில் இருந்தே அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தை அவருடைய சிறு வயதிலேயே இறந்து விட அம்மா வேலைக்குப் போக வேண்டி வந்தது. எனவே சிறுவனாக இருக்கும் போதே அம்மா வேலைக்குப் போகும் போது மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் தாயிற்கு உதவும் வேலையும் இருந்தது.


அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார். பின் ஒரு சிறிய நகரத்தில் சிறிய ஓட்டல்கடையை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது. அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.


அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்க அவர் தீர்மானித்தார். நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார். அவருடன் கூட்டு சேர்ந்து "Kentucky Fried Chicken" என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ். 1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல். 1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகத்தின் பிரபலஸ்தர்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.


சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.


வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள். ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள். சோதனைக்காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.


வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பாக வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது. கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த ஓட்டல் கடையை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.


உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு


என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.


விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் ஏற்றவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது. தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.


எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.


மேலும் படிப்போம் ....


Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 27, 2011, 04:41:53 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 9

                                                       (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp9.jpg)

சலிப்படைந்தால் சாதனை இல்லை!

ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது. அந்த ஒரு நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக் கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.



திறமை மிக முக்கியம். அது தான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால் உழைப்பு வீண் தான். ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண் தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம்.  திறமையும் முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு விஞ்ஞானி எடிசன் ”1% திறமையும் 99% உழைப்பும்” வெற்றிக்குத் தேவை என்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க முடியாது என்பதால் அதை வெற்றிக்கான சூத்திரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உலக வரலாற்றில் இரண்டு துறைகளில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இருவர். அதில் முதலாமவர் மேரி கியூரி அம்மையார். இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு துறைகளில் 1903, 1911 ஆம் ஆண்டுகளில் அவர் நோபல் பரிசுகள் பெற்றார். வேதியியலில் நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த ரேடியத்தைக் கண்டுபிடிக்க அவர் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்கு ஆராய்ச்சிக்கேற்ற வசதிகளை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குதிரை லாயமே அவரது ஆராய்ச்சி சாலையாக அமைக்கப்பட்டது. பொருளை அரைப்பது, கழுவுவது, அடுப்பு மூட்டி சூடாக்குவது போன்ற சில்லறை வேலைகளைச் செய்யக்கூட வேலையாட்கள் இல்லை. அந்த வேலைகளை அவரே தான் செய்தார். கனிமத்தை அரைக்கும் எந்திரத்தைச் செக்குமாடுகள் போல அவரே இழுத்து அரைத்தார். இப்படி ஒரு நாள், இரு நாளில்லை பல ஆண்டு காலம் பல துன்பங்களை ஏற்று உழைத்துத் தான் ரேடியத்தை அவர் கண்டுபிடித்தார்.


இப்படி ஒவ்வொரு உண்மையான உயர்ந்த சாதனையின் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது. வெற்றிக்கான முயற்சிகளில் பல சமயங்களில் செய்ததையே தொடர்ந்து பல காலம் செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்பு சுவாரசியமானதாக இருப்பது மிக அபூர்வம். எடிசன் குறிப்பிட்ட 1% திறமை இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்த 99% உழைப்பு என்று வரும் போது தான் பல திறமையுள்ளவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்த ஒரே மாதிரியான  உழைப்பில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருசில முயற்சிகளில் பலன் கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் சாதனை என்பது என்றுமே சாத்தியமில்லை.


தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஆட்கள் சுரங்கத்தைத் தோண்டி வைரத்தை வெட்டி எடுக்கிறார்கள். பல டன் எடையுள்ள மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்தும் போது தான் அதில் சிறிய வைரத்துண்டு கிடைக்கிறது. தோண்டி எடுப்பதில் வைரத்தை விட மண் தான் அதிகமாகக் கிடைக்கிறது என்று சலிப்படைவதில் அர்த்தமில்லை. அப்படிக் கிடைப்பது தான் நியதி.
எனவே நாம் அதை எதிர்பார்த்தே அது போன்ற வேலையில் ஈடுபட வேண்டுமே ஒழிய நமக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்ற பேராசையில் முயற்சிகள் மேற்கொண்டால் பெருத்த ஏமாற்றத்தையே அடைய நேரிடும்.


பரிசு வாங்கும் நிகழ்ச்சி போல பயிற்சி செய்யும் நேரங்களும் சுவாரசியமாக இருப்பதில்லை. ஆனால் பெரிய சாதனை புரிந்த அத்தனை பேரின் பயிற்சி நேரங்கள் சாதாரண மக்களின் கற்பனைக்கெட்டாத அளவில் இருக்கின்றன. பலரும் கேளிக்கைகளிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபட்டிருக்கையிலும், பலரும் உறங்கிக் கொண்டிருக்கையிலும் சாதிக்க நினைப்பவன் தன் சாதனைக்காக விடாமல் உழைக்க வேண்டி இருக்கிறது.


பல நேரங்களில் சாதனையாளர்கள் சாதனைகளைச் செய்வதைப் பார்க்கையில் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல், சிறிதும் கஷ்டப்படாமல், அனாயாசமாகச் செய்கிறது போல் தோன்றலாம். ஆனால் அந்த நிலையை அடைய அவர்கள் எந்த அளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைக் கேட்டால் தான் தெரியும்.


ஃப்ரிட்ஸ் க்ரீஸ்லர் என்ற பிரபல வயலின் மேதை சிறிதும் பிசிறில்லாமல் மிக மிகச் சிறப்பாக ஒரு நிகழ்ச்சியில் வயலின் வாசிப்பதைக் கேட்டு பிரமித்துப் போன ஒரு இளைஞன் சொன்னான். ”இப்படி வாசிக்க வாழ்நாளையே தந்து விடலாம்”.  அந்த இசை மேதை அமைதியாகச் சொன்னார். “அப்படித் தான் தந்திருக்கிறேன் இளைஞனே”. அப்படிப்பட்ட ஒரு இசையைத் தர அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார்.

ஒரு சாதனையைக் காண்கையில் புத்துணர்ச்சி பெற்று அப்படியே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வருகிறது. அந்த ஆரம்பப் புத்துணர்ச்சியைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்வது என்பது வெகுசிலராலேயே முடிகிறது.  அந்த வெகுசிலராலேயே சாதனை புரிய முடிகிறது.

எனவே எந்தத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டாலும் முதலில் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்தத் திறமை இருக்குமானால் அதை மெருகேற்றவும், வெளிக் கொணரவும் முறையான திட்டமிட்ட உழைப்பைத் தர மனதளவில் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். மனம் தயாராகா விட்டால் எந்த முயற்சியும் அரைகுறையாகவே முடியும். சாதனையின் உயரத்திற்கேற்ப பயணிக்கும் தூரமும், நேரமும் அதிகமாகத் தான் இருக்கும். அந்தப் பயணத்தில் சலிப்படைந்து விடாதீர்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள். சாதனைப் பயணத்தில் பாதியில் நிறுத்தியவர்களை யாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. சலிப்பு வரும் போதெல்லாம் முடிவு நிலையின் பெருமையை எண்ணி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து முயன்றால் ஒரு நாள் கண்டிப்பாக சாதித்து முடித்திருப்பீர்கள்!


மேலும் படிப்போம்....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on November 28, 2011, 04:27:10 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 10

                                                     (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp10.jpg)
 
கடவுள் காப்பாற்றுவாரா?

ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான்.


வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.


மேலுலகம் போன போது அவனுக்குக் கடவுள் மீது தீராத கோபம். அவன் கடவுளைக் கேட்டான். “உங்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேனே கடவுளே, இப்படி என்னைக் கை விட்டு விட்டீர்களே இது நியாயமா?”


கடவுள் கேட்டார். “வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததும், ஜீப் வந்ததும், படகு வந்ததும் யாரால் என்று நீ நினைக்கிறாய்?”


இந்த உதாரணக் கதையில் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கிராமவாசி கடவுள் புஷ்பகவிமானத்தை இறக்கி அதில் அவனை அழைத்துப் போவார் என்று நினைத்தானோ என்னவோ? இது கற்பனைக்கதை என்றாலும் நிஜத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இதை விட வேடிக்கையான முட்டாள்தன மனோபாவம் பலரிடம் இருக்கிறது.


கடவுள் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுத்திருக்கிறார். அவன் கண்முன்னால் எத்தனையோ உதாரணங்கள் கொடுத்திருக்கின்றார். உழைக்கின்ற சக்தியைக் கொடுத்திருக்கிறார். எதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும் அதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் ஏற்படுத்திக் கொள்ளார். மனிதன் அத்தனையையும் முதலில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி மனிதன் தன் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்ப அனைத்தையும் செய்து விட்டு பிறகு அதையும் மீறி வரும் பிரச்னைகளில் இருந்து அவனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது தான் சரி.


எனவே கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவை மழுங்கடித்துக் கொள்வதல்ல.  முயற்சியே எடுக்காமல் முடங்கிக் கிடப்பதல்ல. சோம்பித் திரிய கிடைக்கும் அனுமதியும் இல்லை. பொறுப்பற்று அலட்சியமாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு உத்திரவாதமுல்ல. ஆனால் பலரும் கடவுளை வணங்கினால் அது ஒன்று போதும், எல்லாம் தானாக நடந்து விடும், என்று நினைத்து விடுவது தான் வேடிக்கை.


குழந்தை பிறக்கின்ற போது தாயின் மார்பகங்களில் பாலைத் தயாராக வைத்திருக்கும் கருணையுள்ள கடவுள் நம் உண்மையான தேவைகளுக்கு வேண்டியதைக் கண்டிப்பாக மறுக்கப் போவதில்லை. ஆனால் கடவுள் நம் அடியாள் போல இருந்து நம் குறிப்பறிந்து அனைத்தையும் செய்து வந்து நம்மைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், அதற்குக் கூலியாக நாம் சும்மா அவரைக் கும்பிட்டுக் கொண்டு இருப்போம் என்ற அபிப்பிராயத்தில் யாரும் வாழ்ந்து விடக் கூடாது.


முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பிரார்த்தனை இருக்க வேண்டுமே ஒழிய முயற்சிக்குப் பதிலாக பிரார்த்தனையில் ஈடுபடுவது முட்டாள்தனமான செய்கையாகும். கடவுள் அளித்த எத்தனையோ வரப்பிரசாதங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், கடவுளிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே தவிர வேறில்லை.


“கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால் வழியில் புயலே வராது என்ற உத்திரவாதம் தர மாட்டார்” என்று ஒரு பொருள் பொதிந்த பழமொழி உண்டு.
பல நேரங்களில் பிரச்னைகளும், சிக்கல்களும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன. அதை சமாளித்து முடிக்கையில் நாம் அறிவிலும், சக்தியிலும் நாம் மேம்படுகிறோம். வாழ்க்கை என்ன என்பதை அப்போது தான் உண்மையில் பலரும் உணரவே ஆரம்பிக்கிறோம். அதனால் அந்தப் பாடங்களே வேண்டாம் என்று மறுப்பது நம் முன்னேற்றத்தையே மறுப்பது போலத் தான். 


எனவே அறிய வேண்டியதை அறியவோ, செய்ய வேண்டியதைச் செய்யவோ சோம்பி இருக்காமல் அறிந்து, அறிவார்ந்த முயற்சிகள் எடுத்து உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். ஆனால் எல்லாமே நம் அறிவுக்கும் முயற்சிக்கும் உட்பட்டு நடந்து விடுவதில்லை என்பதும் உண்மையே. அப்படிப் பட்ட நிலையில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, நம்மை மீறிய விஷயங்களுக்கு கடவுளைப் பிரார்த்தியுங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.


மேலும் படிப்போம்.
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on December 17, 2011, 08:51:47 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11


                                                 (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp11.png)

ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!

ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க நினைத்தார். மகனை நிறைய படிக்க வைத்திருந்தார். படித்து முடித்து மகன் பெரிய நகரத்தில் வேலையில் இருந்தான்.


அவரது கடை லாபத்தில் பத்து சதவீதத் தொகையைக் கூட சம்பளமாக வாங்காத மகனிடம் அந்த வேலையை விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொள்ள சொன்னார். மகனும் வந்தான். தந்தை வியாபாரம் நடத்தும் முறையைக் கண்ட மகன் சொன்னான். “அப்பா இப்போது உலகமெங்கும் பொருளாதாரம் சரிவடைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு விட்ட நிலையில் நம் நாடெல்லாம் ஒரு பொருட்டல்ல. வரப் போகும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் பிற்காலத்தில் நிறைய கஷ்டப்பட வேண்டியதாகி விடும்”


அவர் பயந்து போனார். இப்போதைய உலகப் பொருளாதார நிலையை அவர் அறியாதவர். அமெரிக்கா பணக்கார நாடென்று கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நாடு கூட பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றதென்றால் நிலைமை பூதாகரமானதாகத் தான் இருக்க வேண்டும். அவரோ தன் சொந்தத் தொழில் தவிர வேறு எந்த பொது அறிவும் இல்லாதவர். அறிவாளிகளோடு அதிக பழக்கமும் இல்லாதவர். வியாபாரம் ஒன்றே கதி என்றிருந்தவர். மகனோ மெத்தப் படித்தவன். பல டிகிரிகள் வாங்கியவன். உலக நடப்புகள் தெரிந்தவன்.


“மகனே என்ன செய்ய வேண்டும் என்று சொல்”


“இப்படி தேவையில்லாமல் கண்ட கண்ட பொருள்கள் எல்லாம் வாங்கி விற்கிற வேலை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் ஆபத்தானது”


”இத்தனை நாட்கள் அப்படி செய்து தானே மகனே இத்தனை சொத்து சேர்த்திருக்கிறேன்”


”அப்பா அந்தக் காலத்தில் எப்படியோ என்னவோ செய்து நிறைய சம்பாதித்து விட்டீர்கள். அந்தக் காலம் போல் அல்ல இந்தக் காலம். இப்போது காலம் மாறி விட்டது. காலத்தை அனுசரித்து நாம் மாறா விட்டால் நாம் நஷ்டப்பட வேண்டி வந்து விடும்”


பயந்து போன அவர், ”சரி மகனே நீ எப்படி குறைக்க வேண்டுமோ குறைத்துக் கொள்” என்றார்.


தந்தையின் வாணிபத்தில் மகன் தன் அறிவுக்கு எட்டாத, தன் விருப்பத்திற்கு ஒவ்வாத பொருள்களை எல்லாம் வாங்கி விற்பதை நிறுத்தி விட்டான். ஒரு காலத்தில் கிடைத்தபடி எல்லாப் பொருள்களும் இந்தக் கடையில் கிடைக்கும் என்ற நிலை இல்லை என்பதால் பெரும்பாலோர் அந்தக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள். வேறு கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாளாவட்டத்தில் வியாபாரம் சரிந்து கொண்டே வந்தது.


மகன் தந்தையிடம் சொன்னான். “அப்பா நான் சொன்னபடி வியாபாரம் குறைய ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா? முதலிலேயே நான் எச்சரிக்கை செய்து நாம் ஜாக்கிரதையாக இருந்ததால் பெரிய நஷ்டப்படாமல் தப்பித்தோம். நீங்கள் முன்பு செய்து வந்த மாதிரியே நாம் இப்போதும் வியாபாரம் செய்து வந்திருந்தால் விற்பனை இல்லாமல் பொருள் தேங்கி நாம் நிறைய நஷ்டப்பட்டிருப்போம்.”


அந்த வணிகருக்கு ஆமென்று பட்டது. என்ன இருந்தாலும் படித்தவன் படித்தவன் தான் என்று நினைத்துக் கொண்டார்.


மேலே சொன்ன உதாரணத்தில் அந்த வணிகரின் தொழிலின் வெற்றிக்கு ஒரு முக்கியமான அடிப்படைக் காரணம் இருந்தது. மற்ற கடைகளில் கிடைக்காத பொருட்களைக் கூட தன் கடையில் அவர் தருவித்து வைத்திருந்ததால் அவர் கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் அந்த பொருட்களுடன் மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்களையும் கூட ஒரே இடத்தில் இதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்கிச் சென்றதால் வியாபாரம் செழித்தது.


ஆனால் மகன் அதி மேதாவியாய் உலகப் பொருளாதார அளவில் சிந்தித்து அதற்கும் தந்தையின் வாணிபத்திற்கும் முடிச்சு போட்டு அதன் மூலம் ஏதோ ஒரு முடிவெடுத்தது முட்டாள்தனம். அதற்கு பதிலாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தேவைகள் என்ன, எதனால் மற்ற கடைகளை விட்டு இங்கு வருகிறார்கள் என்ற வியாபார அடிப்படை அறிவில் சிந்தித்திருந்தால் வியாபார விருத்தி ஏற்பட்டிருக்கும். ஒழுங்காக சென்று கொண்டிருந்த வியாபாரத்தைக் கெடுத்ததுமல்லாமல் தான் அதைப் பெரிய நஷ்டத்திலிருந்து காப்பாற்றியதாக மகன் நினைத்ததும், தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் விட மகன் அப்படி சொன்னதை அந்த தந்தை நம்ப ஆரம்பித்ததும் தான் வேடிக்கை.


பலரது கல்வி அவர்களுக்கு அதி மேதாவிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகம் படித்திருந்தால், பெயர் போன கல்விக்கூடங்களில் படித்திருந்தால் அத்தனை அறிவையும் பெற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தந்து விடுகிறது. அதனால் தான் எண்ணிலடங்கா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் பலரும் நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த உலகம் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும், வெற்றியையும் தரத் தவறி விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.


வாழ்க்கையில் எதற்கு என்ன தேவையோ அதை முக்கியமாக அறிந்திருங்கள். அந்த அறிவு கல்விக்கூடங்களில் கிடைக்கலாம், அதற்கு வெளியிலும் கிடைக்கலாம். அந்த அறிவே அந்த விஷயத்திற்கு உங்களுக்கு உதவும். அதில் வெற்றி பெற்றவர்களுடைய அனுபவத்தை, அவர்களின் செயல் முறையை உற்று கவனியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆயிரம் சான்றிதழ்களாலும் கிடைத்து விடாது. அதை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொண்டு விட முடியாது.


பாடசாலைகளில் கிடைக்கும் கல்வியறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிலேயே அத்தனை அறிவும் அடங்கி விடுகிறதென்று யாரும் முடிவுகட்டி விடக் கூடாது. ஏட்டில் இல்லாதது, கல்விக்கூடங்களில் கற்க முடியாதது எத்தனையோ இருக்கிறது. கல்வியறிவு சுயமாய் சிந்திக்கும் திறனுக்கு என்றுமே நிகராகி விடாது. உண்மையாகச் சொல்வதானால் கல்வியறிவே சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளும் சமயோசித  அறிவுடன் இணையா விட்டால் வாழ்க்கைக்கு உதவாது.  இதை என்றும் நினைவில் நிறுத்துவது நல்லது.


மேலும் படிப்போம்....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on December 21, 2011, 06:41:18 PM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 12

                                           (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/criticism.jpg)

சிலர் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்!


ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார்.


நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.”


அவர் விக்கித்துப் போனார்.


சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.


திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக வரும் நாகேஷ் சொல்லும் வசனம் போல் “குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள்”  நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்களின் சாதனைகளை இவர்களால் ரசிக்க முடியாது. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள மனம் இவர்களுக்கு வராது. பலரும் பாராட்டினாலும் இவர்கள் வித்தியாசப்பட்டு விமரிசிப்பார்கள். அப்படி மாறுபடுவதாலேயே அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். அதுவும் பிரபலங்களை விமர்சிப்பது என்றால் இவர்களுக்கு தனி உற்சாகம் வந்து விடும். அவர்களை விமரிசிப்பதாலேயே அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பில் இருப்பார்கள். தங்களை வித்தியாசமான அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ள நினைப்பார்கள்.


குறைகள் கண்டிப்பாக சுட்டிக் காட்டப்பட்டால் தான் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அப்படி திருத்திக் கொள்ளும் போது தான் மனிதன் முன்னேறுவதும், பக்குவம் அடைவதும் சாத்தியமும் கூட. ஆனால் நிறைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டு, குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடுவது என்பது நேர்மையான விமரிசனத் தன்மை அல்ல. மாறாக அது விமரிசிப்பவனின் தரத்தின் சிறுமையை சுட்டிக் காட்டி விடும்.


வாழ்க்கைக் கனவுகளை நனவாக்க நாம் எடுத்து வைக்கும் ஆரம்ப அடிகள் மிக மென்மையானவை. நமக்கு நம் மீதே முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்காத காலமது. நம் ஆரம்ப முன்னேற்றங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அடுத்தவர் வாய்வழியாக சில சமயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றும். அப்படிப்பட்ட சமயங்களில் இது போன்றவர்களின் கருத்தைக் கேட்கும் தவறைச் செய்து விடாதீர்கள். கேட்காமலேயே தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. அப்படி தெரிவித்தாலும் அதை அலட்சியப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவர்கள் கருத்து, விதைத்தவுடன் ஊற்றப்படும் வெந்நீராக அமைந்து விடும். அந்தக் கனவு விதைகளை ஆரம்பத்திலேயே அழித்து விடும்படியான அமிலமாக இவர்கள் விமரிசனம் அமைந்து விடலாம். மன உறுதி மட்டும் இல்லா விட்டால் உங்கள் தன்னம்பிக்கை அப்போதே காணாமல் போய் விடும்.


எத்தனையோ திறமைகள் முளையிலேயே இவர்களால் கிள்ளி விடப்பட்டிருக்கின்றன. அதிலும் இவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் மற்றவர்களின் உற்சாகத்தையும், துடிப்பையும் கண நேரத்தில் காணாமல் போகும்படி பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் பேச்சுகள் எல்லாமே குறைகளையும், பலவீனங்களையும் சார்ந்ததாக இருக்கும்.  பேச்சுகள் மட்டுமல்லாமல் பார்க்கின்ற விதமும், சொல்கின்ற தோரணையும் கூட கிண்டல் நிறைந்ததாக இருக்கும். இவர்களை அலட்சியப்படுத்தி தூர நகர்வதே புத்திசாலித்தனம். எப்பாடுபட்டாவது இவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று விடலாம் என்று நினைப்பது மலைக் கல்லில் கிணறு தோண்டுவதைப் போல் பலன் தரமுடியாத செயல். 


அதே போல ஒன்றைப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களிடமும் அதைக் குறித்த பாராட்டை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அறிஞர் அண்ணா அழகாகக் கூறுவார். “செவி பழுதுற்றவன் அருகில் சென்று சிதம்பரம் ஜெயராமன் என்ன அழகாய்ப் பாடினாலும் அவன் ‘இவருக்கு என்ன ஆயிற்று? இவர் வாய் ஏன் இப்படி கோணிக் கொள்கிறது’ என்றல்லவா நினைப்பான்?”.  நகைச்சுவையாகத் தோன்றினாலும் சில நேரங்களில் நாமும் அதே போன்ற முட்டாள்தனத்தைச் செய்து விடுகிறோம். எதையும் பாராட்டவும், விமரிசிக்கவும் கூட அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டுமே அந்த பாராட்டும், விமரிசனமும் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.


எனவே பாராட்ட மனமில்லாதவனிடமிருந்தும், பாராட்ட  தகுதி இல்லாதவனிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். முன்னவன் பாராட்ட மாட்டான். பின்னவன் பாராட்டு பொருளில்லாதது. மாறாக உள்நோக்கம் இல்லாத ஒருவன், உள்ளதை உள்ளபடி சொல்ல முடிந்தவன், உங்களைப் பாராட்டாமல் விமரிசித்தாலும் கூட அது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.


மேலும் படிப்போம்....
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:10:15 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 13


(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp13.jpg)

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!


நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.


ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே இருக்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். ஐன்ஸ்டீன் போன்ற மாமேதைகளே தங்கள் மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் வரை தான் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால் மனிதன் தன்னால் என்னவெல்லாம் முடியும், முடிவதும் எந்த அளவு முடியும் என்பதை அறியாதவனாகவே வாழ்ந்து மரிக்கிறான். இதில் தாழ்வு மனப்பான்மை என்ற கொடுமை வேறு அவனை சில நேரங்களில் ஆட்டிப் படைக்கின்றது.


நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை. இறைவன் என்னவெல்லாம் தரவில்லை என்பதை என்னேரமும் மறக்காமல் குமுறும் நாம் அவன் தந்ததை எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், பயன்படுத்தி எந்த அளவு முன்னேற்றத்தை சந்தித்திருக்கிறோம் என்பதை எல்லாம் சிந்தித்து உணர பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.


செவிடு, குருடு, ஊமை என்ற மூன்று குறைபாடுகளையும் சிறிய வயதிலேயே கொண்டிருந்த ஹெலன் கெல்லரை (1880-1968) நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.  இந்தக் குறைபாடுகள் அவரை முடங்கி இருக்கச் செய்து விடவில்லை. செவிட்டுத் தன்மையையும், குருட்டுத் தன்மையையும் மாற்ற முடியா விட்டாலும் ஊமைத் தன்மையை தன் கடும் முயற்சியால் வெற்றி கொண்டார் அவர். பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்கினார். பல உலக நாடுகளுக்கு பயணித்து சொற்பொழிவாற்றினார். பன்னிரண்டு புத்தகங்கள் எழுதினார். பார்வையிழந்தோருக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்காக வாழ்நாளெல்லாம் உழைத்தார். அவரைப் பற்றிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஊமைப்படத்தில் நடித்தும் இருக்கிறார். இத்தனையும் நிகழ முக்கிய காரணம் ஹெலன் கெல்லர் தன்னைக் குறைத்துக் கொள்ளாதது தான். செவிடு, ஊமை, குருடு என்ற மூன்று மிகப்பெரிய குறைகள் உள்ள தன்னால் என்ன முடியும் என்று சுய பச்சாதாபத்தில் தங்கி விடாதது தான்.


அதே போல் இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic). 1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் பிறந்த இவருக்குப் பிறந்த போதே கைகளில்லை, கால்களுமில்லை. இப்படிப் பிறந்த ஒருவர் வாழ்ந்து என்ன தான் செய்து விட முடியும் என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும். அவர் நடப்பார், நீந்துவார், விளையாடுவார், எழுதுவார் என்றெல்லாம் சொன்னால் அது கற்பனைக்கும் எட்டாத பொய் என்று தானே நினைக்கத் தோன்றும். ஆனால் இன்றும் அதை எல்லாம் செய்து காட்டுகிறார் அவர் என்பது தான் அதிசயிக்க வைக்கும் உண்மை.


அவருக்கு இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆறாம் விரல் போன்றதொரு பாகம் தான் அவரால் இயக்க முடிந்த ஒரு பாகம். பள்ளியில் படிக்கச் சென்ற அவரை அனைவரும் ஏளனமாகவும், வேற்றுக்கிரக வாசி போலவும் பார்ப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. 13 வயது வரை அவர் சதா தற்கொலைச் சிந்தனைகளிலேயே இருந்தார். ஆனால் தற்கொலைக்குக் கூட அடுத்தவர் உதவ வேண்டி இருந்த பரிதாப நிலை அவருடையது.


அவருடைய 13ஆம் வயதில் ஒரு பத்திரிக்கையில் மிக மோசமாக உடல் ஊனமுற்ற ஒரு மனிதர் அதையும் மீறி செய்த அற்புத செயல்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தார். படிக்கையில் அவருக்குள் ஒரு மின்னல் அடித்தது. அந்த செய்தி பெரியதோர் மாற்றத்தை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தியது. தளராத மனத்துடன் ஒவ்வொரு புதிய செயலையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டார். கம்ப்யூட்டர் இயக்குவது வரை, டென்னிஸ் விளையாடுவது வரை கற்றுக் கொண்ட தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பல நாடுகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும் நிகழ்த்தி வரும் இவர் உடல் ஊனமுற்றவர்களுக்காக லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி வருகிறார்.
 
ஹெலன் கெல்லரும், நிக்கும் உறுப்புகளில் குறையுடன் பிறந்திருந்தாலும் அந்தக் குறைகளை தங்களின் விதியைத் தீர்மானித்து விட அனுமதிக்கவில்லை. தங்களை அந்தக் குறைகள் வரையறுத்து விடவும் அனுமதிக்கவில்லை. தங்களைக் குறைத்துக் கொள்ளாத அவர்கள் மாறாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்கள். எப்படி எங்களால் முடியும் என்று நியாயமான கேள்விகளைக் கூட எழுப்பி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்கும் நிஜத்தை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து உயர முழு உற்சாகத்தோடு முயன்று இமயம் என உயர்ந்து நிற்கிறார்கள்.


சென்ற நூற்றாண்டு மனிதர்கள் நினைத்துப் பார்க்காத எத்தனையோ அற்புதங்கள் இன்று நமக்கு சர்வ சாதாரணமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் முடியாது என்று நினைத்த விஷயங்கள் இன்று நம் தினசரி வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் அளவு மலிந்து விட்டன. அதை சாதித்த மனிதர்கள் அனைவர்களும் தங்களைக் குறைத்துக் கொள்ளாமல் தங்கள் திறமைகளால் உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் உயரும் போது அவர்களுடன் மனித சமூகமே உயர்ந்தது என்பது தான் அவர்கள் கண்ட உண்மையான சிறப்பு.


உயர்த்திக் கொள்வது என்பது கர்வப்படுவது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல. அது தன்னைத் தானே உயர்வாகச் சொல்லிக் கொள்வதல்ல. நம் திறமைகளையும், சக்திகளையும் உயர்த்திக் கொள்வதே உண்மையான உயர்த்திக் கொள்ளல். நம் திறமைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே செல்வது தான் உயர்த்திக் கொள்ளல். எந்த சூழ்நிலையும் நம்மைக் குறைத்து விட அனுமதிக்காமல் நிமிர்ந்து நிற்பது தான் உயர்த்திக் கொள்ளல். அதெல்லாம் அபூர்வமான சிலருக்குத் தான் முடியும் என்று மட்டும் சொல்லி உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஹெலன் கெல்லரும், நிக் வூயிசிச்சும் கூடத் தங்களைக் குறைத்து எண்ணி விடாமல் இருக்கையில் அவர்களைக் காட்டிலும் நல்ல நிலையில் பிறந்த நாம் நம்மைக் குறைத்துக் கொண்டால் அது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகத் தான் இருக்கும்.
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:14:26 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 14

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp14.jpg)

உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!



நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம். வாழ்க்கைப் புத்தகத்தில் புதியதொரு பொலிவான பக்கத்தைத் திருப்பி அதிலிருந்து அத்தனையையும் சிறப்பாய் செய்யத் துவங்க விரும்புகிறோம். எத்தனையோ புத்தாண்டு ஆரம்பங்களில் அப்படி ஆரம்பித்தும் இருக்கிறோம். சில நேரங்களில் தவறுகளால் வாழ்க்கையில் அடிபட்டு போதுமடா சாமி இனி கண்டிப்பாய் இப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தும் இருக்கிறோம். ஆனால் நம்மையும் அறியாமல் ஒருசில நாட்களிலேயே பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறோம். இது தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையில் நியதியாக இருக்கிறது.


உண்மையாகத் தானே அப்படி ஆசைப்பட்டோம். நம் நன்மையை எண்ணித் தானே அதை செயல்படுத்த முனைந்தோம். ஆரம்பித்த நேரத்தில் மிகவும் உறுதியாகத் தானே இருந்தோம். பின் எங்கே ஏமாந்தோம்? அந்த உறுதி எப்போது தளர்ந்து போனது? ஏன் பழைய நிலைக்கே மாறி விட்டோம் என்ற கேள்விகள் ஆத்மார்த்தமாய் நமக்கு எழாமல் இருக்க முடியாது. அந்தக் கேள்விகளுக்கு பதிலை நாம் வெளியே தேடினால் கிடைக்காது. பதிலை நமக்குள்ளேயே தான் தேட வேண்டும். 


எல்லா மாற்றங்களும் உள்ளத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது. மாறுவதற்கு வெளியே இருந்து எத்தனையோ உதவிகள் கிடைக்கலாம். மாறுவதற்கு எத்தனையோ சாதகமான சூழ்நிலைகள் வெளியே இருக்கலாம். ஆனால் மனம் நூறு சதவீதம் ஆசைப்பட்டால் ஒழிய எந்த நிரந்தர மாற்றமும் நம்மிடம் ஏற்படாது. இது மிகப்பெரிய மாற்றங்களுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல. மிகச்சிறிய மாற்றங்களுக்கும் இதே விதி தான்.


எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி வீட்டை மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளக்கூடியவர். அவர் மகளோ அவருக்கு நேர்மாறானவர். வீட்டில் எல்லாம் அங்குமிங்கும் இரைந்து கிடக்கும். வேண்டியது வேண்டாதது என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாம் கண்டபடி விழுந்து கிடக்கும். தாய் மகள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது தலை சுற்றி விழாத குறை தான். மிகுந்த சிரமம் எடுத்து தாய் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியதோடு நிற்காமல் அதை அப்படியே தொடர்ந்து ஒழுங்காகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நல்ல ஆலோசனைகளும் வழங்கினார்.


தாய் முயற்சியால் வீடு மிக அழகானதைப் பார்த்த மகள் “இது என் வீடு தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது” என்று வியந்து போனார். ”ஒவ்வொன்றையும் தேடியே நான் இது வரை நிறைய சலித்து விட்டேன்.” என்றார். இனி இதே அழகுடன் வீட்டைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதாக தாயிடம் உறுதிமொழியும் தந்தார். ஆனால் தாய் போன பிறகு மூன்றே நாளில் வீடு பழைய நிலைக்கு மாறியது.


இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். மருமகன் ஏகப்பட்ட கடன் தொல்லையில் இருப்பதை அறிந்த மாமனார், தன் மகளும் பாதிக்கப்படுவதை சகிக்க முடியாமல் மருமகனுக்கு உதவ முன் வந்தார். மகளின் அத்தனை நகைகளும் அடகு வைக்கப்பட்டு வெறும் தாலிச்சரடுடன் இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மருமகனின் வருமானம் முழுவதுமே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே சரியாக உள்ளது என்பதை அறிந்த அவர் யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற கணக்கெடுத்து அத்தனையும் தந்து மருமகனைக் கடன் தொல்லையில் இருந்து முழுவதுமாக மீட்டார். மகளின் நகைகளையும் மீட்டுத் தந்தார்.


மருமகன் கண்கலங்க மாமனாருக்கு நன்றி சொன்னான். கடன் தொல்லை இல்லாததால், வட்டி கட்டும் தேவையும் இல்லாததால் இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வோம் என்று உறுதியளித்தான். மாமனாரும் நிம்மதியாக வீடு திரும்பினார். ஆனால் ஆறே மாதங்களில் அந்த மருமகன் பழைய நிலைக்கே வந்து விட்டான். பல இடங்களில் கடன் வாங்கி வட்டி கூடத் தர முடியாமல் திண்டாட ஆரம்பித்து விட்டான். மனைவியின் நகைகள் அத்தனையும் அடகுக்கடைக்கு போய் விட்டன.


இந்த இரண்டு உதாரணங்களும் அபூர்வமானதல்ல. ஒவ்வொருவரும் தினசரி காண முடிந்தவையே. மாற வேண்டும் என்கிற ஆசையும் அந்த உள்ளத்தில் தானே தோன்றியது. மாறா விட்டால் இருக்கும் சிரமங்களையும் அவர்கள் உணர்ந்தவர்கள் தானே. பின் ஏன் அவர்கள் மாறவில்லை? திரும்பத் திரும்ப பழைய நிலைக்கே அவர்களை இழுத்துச் செல்வது எது?


மனிதன் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்கள் அந்த நேரத்தில் பலம் வாய்ந்தவை அல்ல. அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப எண்ணப்பட்டு, அதனுடன் அதற்கான முக்கியத்துவமும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் போது தான் அவை பலம் பெற ஆரம்பிக்கின்றன. அப்போது தான் அவை ஆழ்மனதில் பதிகின்றன. உண்மையிலேயே மாற விரும்புபவன் அந்த எண்ணங்கள் வேரூன்றும் வரை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். சில முறை நினைத்தால், திடீர் உற்சாக தருணங்களில் நினைத்தால் போதாது. அதே நேரத்தில் அந்த எண்ணங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை, எதிரான மனோ பாவத்தை அறவே நீக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே செய்தால் மட்டுமே உண்மையில் உள்ளம் மாறும். அதன்படி எல்லாம் மாறும்.


மாற முடியாதவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு இந்த இரண்டையும் தொடர்ந்து செய்யாமல் இருப்பது தான். மேலே சொன்ன இரண்டு உதாரணங்களிலும் ஏற்பட்ட தவறுகளைப் பார்ப்போம்.


வீட்டை தாய் சுத்தப்படுத்தி விட்டு போன பிறகு அந்த மகள் முதல் நாள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டது உண்மை. ஆனால் இரண்டாம் நாள் அந்த எண்ணம் வலுவிழந்தது. மூன்றாம் நாள் அது மிக பலவீனமாகவே உணரப்பட்டது. தொடர்ந்த நாட்களில் அந்த எண்ணம் சமாதியாக்கப்பட்டது. அதனால் தாயிடம் உறுதியளித்த படி ஒவ்வொன்றையும் அந்தந்த இடத்திலேயே வைப்பதும், அவ்வப்போதே உபயோகித்த இடங்களை சுத்தப்படுத்துவதும் செய்ய முடியாமல் போனது. அந்த சில்லரை சிரமங்களைக் கூட எடுக்கவிடாமல் முன்பே பழகி இருந்த ஒழுங்கீனம் பழையபடி அவர் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக் கொள்ள காரணம் அதுவே.


அந்த மருமகனும் கடன் தொல்லையால் அவதிப்பட்ட போது இதிலிருந்து ஒரு முறை தப்பித்தால் போதும், பின் எப்போதும் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று உறுதியாக நினைத்தது உண்மை தான். ஆனால் அவனிடம் காணும் பொருளை எல்லாம் வாங்கும் பழக்கம் இருந்தது. அது தேவையோ, தேவை இல்லையோ, யாரிடமாவது பார்த்தால் தானும் வாங்கி விடுவான். தன்னிடம் இருக்கும் பொருளை அடிமாட்டு விலைக்கு விற்று அதிலேயே புதிய மாடலை கடன் வாங்கியாவது வாங்கிக் கொள்வான். இந்தக் குணம் தான் அவனை பெரும் கடனில் ஆரம்பத்தில் தள்ளியது. மாற ஆசைப்பட்டவன் மாறுதலுக்கு எதிரான, கண்ட பொருள்களை எல்லாம் வாங்கும் பழக்கத்தை விடுவதற்குத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. முதல் பொருளை வாங்கும் போது இப்போது தான் பழைய கஷ்டம் இல்லையே இதை வாங்குவதால் என்ன பெரிய பிரச்சினை வந்து விடப்போகிறது என்று நினைத்தான். அதாவது மாமனாரிடம் சொன்ன போது இருந்த உறுதிக்கு எதிராக சின்ன செயல் செய்தார். அந்த மன உறுதியை தொடர்ந்து காப்பாற்றி இருந்தால் அந்த சின்ன விலகலைக் கூட அவன்  அனுமதிக்காமல் இருந்திருப்பான். ஒரு விலகல் இன்னொரு விலகலுக்கு வழி ஏற்படுத்த, பின் ஏற்பட்ட சின்ன சின்ன விலகல்கள் சிறிது சிறிதாக ஆரம்ப உறுதியைத் தகர்த்து விட முன்பே பலமாயிருந்த அந்தப் பழக்கம் மீண்டும் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.


எனவே மாற விரும்புவர்கள் உள்ளத்தை மாற்றுங்கள். மாற்ற விரும்பும் ஆசையில் முழுமையாக இருங்கள். அடிக்கடி அதை உறுதிப்படுத்துங்கள்.  உள்ளத்தில் அதற்கு முரணாக உள்ள ஆசைகளையும் எண்ணங்களையும் அனுமதிக்காதீர்கள். உங்கள் தீர்மானம் உறுதிப்படும் வரை சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். பழைய ஆசைகளும், எண்ணங்களும் வேரோடு பிடுங்கப்படும் வரை ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் மட்டுமே விரும்பும் மாற்றங்கள் சாத்தியப்படும்.


Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:20:46 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 15

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp15.jpg)

அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். அதில் “ஒரு தாயிற்கும் தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் கூட அவர்கள் குழந்தைகளில் ஒன்றைப் போலவே எல்லா விதங்களிலும் இன்னொரு குழந்தை இருக்க முடியாது” என்று உயிரியல் விஞ்ஞானி ஒருவர் எழுதியிருந்தார். இறைவனின் சிருஷ்டிகளில் தான் என்னவொரு அற்புதம் இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி அற்புதம். கடந்து சென்ற கோடானு கோடி காலங்களிலும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் பிறந்ததில்லை. இனி வரப் போகும் கோடானு கோடி காலங்களிலும் உங்களைப் போன்ற மனிதன் பிறக்கப் போவதில்லை. இறைவனின் படைப்பில் நகல்கள் இல்லை. எல்லாம் தனித்தன்மை வாய்ந்த அசல்களே. ஆனால் மனிதர்கள் அசல்களாக வாழ்ந்து பிரகாசிப்பதற்கு பதிலாக நகல்களாக வாழ்ந்து பொலிவிழந்து போகும் கொடுமை தான் எல்லா இடங்களிலும் அதிகம் நடக்கிறது.


நம்மில் பெரும்பாலோருக்கு வெற்றிகரமான ஆட்களைப் போலவே நடந்து கொள்ள ஒரு உந்துதல் இருக்கிறது. முடிந்தால் அவர்களைப் போலவே ஆகி விடவும் முயற்சிக்கிறோம். (இந்த பொது மனப்பான்மையை உணர்ந்தே எல்லா விளம்பரங்களிலும் சினிமா நடிகர் நடிகையரைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புப் பொருட்களை வெற்றிகரமாக பெருமளவில் விற்பனை செய்கிறார்கள்).


சார்லி சாப்ளினை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் ஏழ்மையிலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப்பெரும் பணக்காரராக ஆனவர் அவர். தெருக்கோடி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு காலப்போக்கில் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சினிமா சந்தர்ப்பம் ஏழை சாப்ளினிற்கு கிடைத்தற்கரிய சந்தர்ப்பம். அதைத் தக்க வைத்துக் கொள்ள முதல் சினிமாவில் அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிரபல சிரிப்பு நடிகரைப் போலவே நடிக்க முயற்சி செய்தார் சார்லி சாப்ளின்.


அந்த சினிமா டைரக்டர் அதைக் கவனித்து சார்லி சாப்ளினை அழைத்து சொன்னார். “நீ அந்த பிரபல நடிகரைக் காப்பி அடிப்பது போல தெரிகிறது. எனக்கு அவரைப் போன்ற நடிப்பு தேவை இருந்திருந்தால் நான் அவரையே என் படத்தில் நடிக்க வைத்திருப்பேன். நீ உன்னைப் போல் நடி. அது தான் என் தேவை. இன்னொன்றையும் நினைவு வைத்துக் கொள். நீ என்ன தான் தத்ரூபமாக அந்த நடிகரைப் போல் நடித்தாலும் நீ அவரின் நகலாகவும், இரண்டாம் தரமாகவும் தான் இருக்க முடியும். நீ உன் நடிப்பில் தான் அசலாகவும், முதல் தரமாகவும் இருக்க முடியும்”


அந்த அறிவுரை சார்லி சாப்ளினிற்கு பெரும் ஞானோதயத்தை ஏற்படுத்தியது. அவர் தன் இயல்பான நடிப்பையே அன்றிலிருந்து நடிக்க ஆரம்பித்தார். ஆங்கில சினிமாவில் அவர் ஒரு சகாப்தமாகவே இருந்தார். இன்றும் சினிமா வரலாற்றில் அவருக்குத் தனி இடம் இருக்கிறது. ஆனால் அப்படி அவர் இடம் பிடிக்கக் காரணம் அடுத்தவர் நகலாகும் முயற்சியை ஆரம்பக் கட்டத்திலேயே அவர் கைவிட்டது தான். 


வெற்றியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. அவர்களிடமிருந்து கடைபிடிக்கவும் நிறையவே இருக்கின்றது. அதற்கென்று யாரும் அவர்களுடைய நகலாகி விட முயற்சிக்கக் கூடாது. ஒருவருடைய நகல் ஆக முயற்சிக்கையில் உங்களுடைய தனித்தன்மையை அழித்தே அதை சாதிக்க வேண்டி இருக்கிறது. அப்படி அந்த தனித்தன்மையை முழுமையாக அழிப்பதும் முடியாத காரியமே. கடைசியில் பாசாங்குகளும், நடிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தன்னம்பிக்கை நம்மை விட்டு விலக ஆரம்பிக்கின்றது. என்ன தான் முயற்சித்தாலும் அடுத்தவராய் மாறி விட முடிவதில்லை. இயற்கை அதற்கு ஒத்துழைப்பதில்லை. அரைகுறையாய் எப்படியோ மாறி நாம் உண்மையில் என்ன என்பதை அறியாமல் வாழ்வது கொடுமையிலும் கொடுமை. மற்றவரைப் போல ஆகவும் முடியாது, நம்மைப் போல இருக்கவும் முடியாது என்ற நிலைமையில் இருப்பது ஒரு நிம்மதியில்லாத நரகம் தான். அடுத்தவர் நகலாக மாற முயற்சிப்பதன் விளைவு இது தான்.


உலக வரலாற்றின் அனைத்து பெரும் சாதனைகளும் தங்கள் தனித்தன்மைகளை தக்க வைத்துக் கொண்டவர்களாலேயே நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுவது எல்லா சமயங்களிலும் வரவேற்கப்படுவதில்லை. ஏளனமும், கேலியும், கோபமும், வெறுப்பும் தான் பல நேரங்களில் சமகாலத்து சமூகத்தால் காட்டப்படுகின்றன என்ற போதும் அதில் பாதிக்கப்படாமல் அவர்கள் இருந்திருக்கிறார்கள். சமூகம் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்தெடுக்க முயலும் முயற்சி சிலரிடம் வெற்றி பெறுவதில்லை. அந்த சிலர் தான் சமூகத்தின் அடுத்த மாற்றத்திற்குக் காரணமாகிறார்கள். எனவே உங்கள் தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.


இப்படிச் சொல்கையில் ஒரு மிக முக்கிய கேள்வி பலர் மனதிலும் ஏற்படுவது இயற்கை. “என் தனித்தன்மை எது என்றே எனக்குத் தெரியவில்லையே. நான் அதை எப்படி அறிந்து கொள்வது?”. இதற்குப் பதிலை ஒரு சிறிய கட்டுரையில் அடக்கிவிட முடியாது, ஒரு புத்தகமும் கூட போதாமல் போகும் என்றாலும் சில ஆலோசனைகள் உங்கள் தனித்தன்மையை அறிந்து கொள்ள ஆரம்ப விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும்.


பல நேரங்களில் நாம் நம்மை அறியாமல் இருக்கக் காரணம் வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் நாம் எந்திரமாக மாறி விடுவது தான். எனவே அந்த ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது முடியா விட்டாலும் ஒரு நாளில் சிறிது நேரத்தையோ, இல்லை ஒரு வார இறுதியில் சில மணி நேரங்களையோ உங்களை அறிவதற்கு அல்லது அலசுவதற்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள். எல்லாம் உண்மையில் திருப்திகரமாக இருக்கிறதா, மற்றவர்களில் இருந்து எங்கேயாவது வித்தியாசப்படுகிறீர்களா, இல்லை வித்தியாசப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று யோசியுங்கள். அந்த பதிலில் கூட உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம்.


சில சமயம் நம் தனித்தன்மை நம்மை விட மற்றவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவதும் உண்டு. நீங்கள் எதையாவது மற்றவர்களை விட வித்தியாசமாகவும், திறமையாகவும் செய்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்து பாராட்டினால் அதில் கூட உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம். வித்தியாசமாக எதையாவது செய்தோ, வித்தியாசமாக இருந்தோ அதில் ஒரு நிறைவை நீங்கள் உணர்ந்தீர்களானால் உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம்.


அப்படிக் கிடைப்பது நூலிழை தான். ஆனால் அதை வைத்து மீதியை நீங்கள் சிறிது சிறிதாக இழுத்துக் கொள்ளலாம். அப்படி உணரும் தனித்தன்மையைக் கௌரவியுங்கள். வளர்த்துக் கொள்ளுங்கள். மெருகேற்றுங்கள். அந்தத் தனித்தன்மை உங்களுக்கு மேலும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.


ஒரு முறை உங்கள் தனித்தன்மையை, திறமையை, வித்தியாசத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்து விட்டால் அடுத்தவரிடம் இருந்து கற்றுக் கொள்வீர்களே
தவிர அவர்களின் நகலாக மாட்டீர்கள். அதற்கு அவசியமும் இருக்காது
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:26:20 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp16.jpg)

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!


வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம்.


வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற ஆங்கில மகாகவிஞன் வானவில்லைக் குறித்து எழுதிய ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. பலரும் மேற்கோள் காட்டும் குழந்தையே மனிதனின் தந்தை (The Child is father of the Man) என்ற பிரபல பொன்மொழி இந்தக் கவிதையில் இருந்தே எடுக்கப்பட்டது. அந்தக் கவிதையை அனேகம் பேர் அறிந்திருக்கலாம்.


The Rainbow

My heart leaps up when I behold   
A rainbow in the sky:   
So was it when my life began;   
So is it now I am a man;   
So be it when I shall grow old,
Or let me die!   
The Child is father of the Man;   
I could wish my days to be   
Bound each to each by natural piety.   




அந்தக் கவிஞன் சொல்கிறான். “வானவில்லை வானில் பார்க்கும் போதெல்லாம் என் இதயம் சிலிர்க்கிறது. அப்படித் தான் என் வாழ்க்கை ஆரம்பித்த குழந்தைப் பருவத்தில் இருந்தது. வளர்ந்த பிறகு இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இதே போல் என் வயோதிக காலத்திலும் இருக்கட்டும். அப்படி இல்லா விட்டால் நான் இறந்தே போவேனாக! குழந்தையே மனிதனின் தந்தை! இயற்கையின் அழகை ரசிக்கும் பக்தனாக, என் வாழ்நாள் அனைத்திலும் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.”


வளர்ச்சி என்பது மரத்துப் போவதல்ல. நம் நுண்ணிய உணர்வுகளையும் ரசனைகளையும் தியாகம் செய்வதல்ல. எனவே வளர்ந்து விட்டதால் அவற்றை இழந்து விட்டதாய் நியாயம் கற்பித்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் ஆகும். வளர வளர இழக்க வேண்டியது நம் முட்டாள்தனங்களையும், அறியாமையையும் தானே ஒழிய ரசனைகளை அல்ல.


மனோதத்துவ மேதை ஆல்ஃப்ரட் ஆட்லர் (Alfred Adler) அவர்களிடம் ஒரு பேட்டியாளர் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் மிகவும் சந்தோஷமான மனிதராக யாரை எண்ணுகிறீர்கள்?”


ஆட்லர் அவர்கள் சுற்றுலாத் தளமான ஒரு மலைமுகட்டில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவரைச் சொன்னார். அந்தப் பணியாளர் தினமும் அதிகாலை அந்த மலையேறி மேலே சென்று மாலை கடைசி சுற்றுலாப் பயணியும் கீழே இறங்கிய பின் தான் கீழே வர வேண்டும். மலை முகட்டில் ஒரு சிறிய கேபினில் கெட்டில் வைத்து தேவைப்படுகிறவர்களுக்கு தேனீர் தயாரித்துத் தரும் பணி அவருடையது.


ஆட்லர் அங்கு சென்றிருந்த சமயம் பயணி ஒருவர் மிகவும் குளிர் அதிகமாக உள்ளதென்று சொல்லி அந்த கேபினிற்குள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். அந்தப் பணியாளர் அவரிடம் சொன்னார். “ஐயா இந்த மாலை நேர சூரிய கிரணங்கள் அந்த மேகங்களினூடே தெரிகிற அழகே தனி. கதவை சாத்தி விட்டால் அதை நீங்கள் கண்டு ரசிக்க முடியாமல் போய் விடும்.  நான் எப்போதும் அந்தக் காட்சியைத் தவற விடுவதே இல்லை”


ஆட்லர் அந்த பேட்டியாளரிடம் சொன்னார். “அந்த கடுங்குளிரையும் மீறி தினமும் காண்கிற அந்தக் காட்சியை தவற விடாமல் ரசிக்கும் அந்த பணியாளர் தான் மிகவும் சந்தோஷமான ஆள் என்று நினைக்கிறேன். அவர் வாங்கும் ஊதியம் குறைவாகவே இருக்கலாம், அந்த வேலை அடுத்தவர் பார்வைக்கு சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சலிக்காமல் தினமும் ரசிக்க முடிகிற அவர் தான் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான மனிதர் என்று நினைக்கிறேன்”.


தினசரி வாழ்க்கையில் காணக் கிடைக்கிற அழகுகளை ரசிக்க மறந்து விடுவது உண்மையான எந்திரத்தனம். கிட்டத்தட்ட எந்திரங்களாய் மாறி விடுகிற போக்கு தான் வளர்ச்சி என்றால் நாம் வளராமலேயே இருப்பதே சிறந்தது. ஒரு அழகான கதையை, நெஞ்சை அள்ளும் கவிதையை, இனிமையான இசையை, குழந்தையின் மழலையை, இயற்கையின் அழகை ரசிக்க நேரமும் மனமும் இல்லாமல் ஓட்டும் வாழ்க்கையில் என்ன சிறப்பு இருக்கிறது? சதா சர்வ காலம் அதையே ரசித்துக் கொண்டிருப்பது போதுமானது என்று சொல்ல வரவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கையில் அனைத்திற்கும் அவற்றிற்குரிய கவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. ரசனை நம் வயிற்றை நிரப்பி விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால் வயிற்றை நிரப்புவதிலும் பொருள் சேர்ப்பதிலும் மட்டுமே வாழ்க்கை நிறைவு பெற்று விடுவதில்லை.


ஒருவர் ரசனை இன்னொருவருக்கு இருப்பதில்லை. இசையை ரசிக்கும் ஒருவர் அந்த அளவுக்குக் கவிதையை ரசிக்காமல் போகலாம். வர்ட்ஸ்வர்த்தை சிலிர்க்க வைத்த வானவில் அழகு இன்னொருவருக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போகலாம். ஆனால் அந்த நபர் ஒரு குழந்தையின் மழலையையும், குறும்பையும் ரசிக்க முடிந்தவராக இருக்கலாம். இப்படி ஒவ்வொருவர் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ரசனைகளே இல்லாமல் இருப்பவர்கள் குறைவு. இருக்கும் ரசிக்கும் திறனையும் இன்றைய எந்திர வாழ்வில் சிறிது சிறிதாக இழந்து விடுவது மனிதன் தன்னில் ஒரு பகுதியை மரணிக்க வைத்து விடுவது போலத் தான். அதை அனுமதித்து விடாதீர்கள்.
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:29:48 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 17

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp17.jpg)

கர்வம் என்றும் முட்டாள்தனமே!




வெற்றி மிக இனிமையானது. அதிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேர்கையில் அது கொடுக்கும் பெருமிதம் அலாதியானது. அது தற்செயலாக வராமல் நம் சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படுகிறது என்றால் அந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் நியாயமானதும் கூட. வாழ்க்கையில் நிறைய முன்னேறிய பிறகு, நிறைய சாதித்த பிறகு அந்த நிறைவு கிடைக்குமானால்  அதை நாம் பாடுபட்டதற்கான உண்மையான கூலி என்றே கருத வேண்டும். ஆனால் சில சமயங்களில் இதனுடன் இலவச இணைப்பாக ஒன்று வரக்கூடும். அது தான் கர்வம். அதை அவ்வப்போதே களையா விட்டால் அது ஒரு படுகுழியில் நம்மை கண்டிப்பாக ஒரு நாள் தள்ளக்கூடும்.


ஒரு அருமையான திருக்குறள் உண்டு.


அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


(மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல் தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான்.)


’தன்னை வியந்தான்’ என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார். கர்வம் பிடித்தவர்கள் அதிகமாகச் செய்யும் வேலை தங்களை எண்ணி வியப்பது தான். அல்லது அவர்களை வியந்து பேசுபவர்களின் வார்த்தைகளைப் பெருமையுடன் கேட்டுக் கொண்டிருப்பது தான். அவர்களால் இந்தத் திருக்குறளில் சொன்னது போல மற்றவர்களுடன் ஒத்து நடக்க முடியாது, அவர்களின் உண்மையான வலிமையின் அளவும் தெரியாது. ஒரு கற்பனைக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்கள். 


கர்வத்தால் அழிந்தவர்கள் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் அதிகம் பேர் இருக்கிறார்கள். உலகம் இது வரை பார்த்த அத்தனை சர்வாதிகாரிகளும் கர்வம் பிடித்தவர்களே. ஹிட்லர், முசோலினி முதல் இன்றைய கடாஃபி வரை தங்களையே வியந்து ஏமாந்தவர்களே. அவர்களைச் சுற்றிலும் முகஸ்துதி செய்யும் நபர்களை மட்டுமே இருக்க அனுமதித்தவர்களே.  உண்மையான நிலவரத்தை அறியாதது மட்டுமல்ல அதைத் தெரிவிக்க முயன்றவர்களை எதிரிகளாக நினைத்தவர்களாக அவர்கள் இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது. அழியும் கடைசி மூச்சு வரை கற்பனை உலகத்திலேயே இருந்த அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டை விட்டு போயிருந்திருக்கிறது.


உதாரணத்திற்காகத் தான் சர்வாதிகாரிகளை மேற்கோள் சொன்னோமே தவிர அந்த அளவிற்கு போவது மட்டுமே கர்வம் என்ற அர்த்தம் கொள்ளாதீர்கள். எந்த அளவிலும் கர்வம் முட்டாள்தனமே. அது பல நேரங்களில் இருப்பவர்களுக்கு இருப்பதே தெரியாமல் தங்கும் மகிமை வாய்ந்தது. அடுத்தவர்களை எல்லாம் அலட்சியமாக வைப்பது, அடுத்தவர்களின் சாதனைகளைக் கண்டுகொள்ள மறுப்பது, தங்களைத் தவிர யாருமே உயர்வாகத் தெரியாதது போன்ற தன்மைகள் எல்லாம் இருந்தால் கர்வம் அங்கிருக்கிறது என்று பொருள். அதனை உடனடியாகக் களைந்து விடுங்கள்.


ஏனென்றால் கர்வம் உண்மையில் ஒரு முட்டாள்தனமே. ஆழமாக சிந்திக்க முடிந்தவனுக்கு கர்வம் கொள்ள முடியாது. கர்வம் என்பது நம்மை பிறருடன் ஒப்பிடும் போது மட்டுமே எழ முடியும். ஒப்பிடாத போது கர்வம் கொள்ள முடியாது. ”அடுத்தவர்களை விட நான் திறமையானவன், நிறைய சாதித்தவன், அதிக சக்தி வாய்ந்தவன், அதிகம் வெற்றி கண்டவன், அதிகம் சம்பாதிப்பவன்...” என்பது போன்ற எண்ணங்களே கர்வம் எழ அடிப்படையான காரணம்.


அறிவுபூர்வமாக சிந்தித்தால் அந்த ஒப்பீட்டிலும் ஒரு உண்மையை நம்மால் உணர முடியும். ஒருசில விஷயங்களில் ஒருசிலரை விட நாம் நிறையவே முன்னேறி இருக்கிறோம் என்றால் வேறுசில விஷயங்களில் அதே மனிதர்களை விட பின்தங்கி இருக்கிறோம். ஒன்றிற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டால் இன்னொன்றிற்காக நாம் சிறுமைப்பட்டே அல்லவா ஆகவேண்டும்.


அதே போல் ஒரு விஷயத்திற்காக நாம் நம்மை உயர்வாக நினைத்துக் கொண்டால் அதில் நம்மை விடவும் உயர்வாக இருக்கிறவர்கள் கண்டிப்பாக இருப்பார்களே. அப்படியென்றால் கர்வப்பட என்ன இருக்கிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நம்மை விட உயர்ந்தவர்களும் என்றும் இருப்பார்கள், நம்மை விடவும் தாழ்ந்தவர்களும் என்றும் இருப்பார்கள். அப்படி தாழ்ந்தவர்கள் மத்தியில் நாம் உயர்வாகத் தெரிவது இயற்கை. இப்படி பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டுப் பார்த்து விட்டு கர்வம் கொள்வது அறிவின்மையே அல்லவா?


நம் அறிவுபூர்வமான சிந்தனையை மேலும் நீட்டினால் திறமை, உழைப்பு மட்டுமல்லாமல் நம் முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக விதியின் உடன்பாடும் சேர்ந்திருப்பதை நம்மால் அறிய முடியும். சில சமயங்களில் நம்மை விட அதிக திறமை இருப்பவர்களும், அதிகமாய் உழைப்பவர்களும் நம் அளவு வெற்றியோ, முன்னேற்றமோ காணாமல் இருப்பதை நாம் சர்வசாதாரணமாகக் காணலாம். இப்படி இருக்கையில் கர்வம் கொள்வது அறியாமையே அல்லவா?


கர்வம் என்ற இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு மனிதன் தரும் விலை மிக அதிகம். கர்வம் அடுத்தவரை மதிக்க விடாது; அடுத்தவரை அலட்சியப்படுத்தும். அது மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்காது. அது நல்ல அறிவுரைகளை மதிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ விடாது. அது உள்ளதை உள்ளபடி பார்க்கத் தூண்டாது. அது நண்பர்களை இழக்க வைக்கும்; பகைவர்களை பெருக்கி வைக்கும். மொத்தத்தில் கர்வம் நம் வாழ்க்கையில் நன்மைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி, தீமைகள் அனைத்தும் முந்தி நிற்க வைக்கும். இன்னொரு விதத்தில் சொன்னால் ஒரு மனிதன் அழிவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவன் கர்வம் செய்து முடிக்கிறது.


எனவே தன்னம்பிக்கையோடு இருங்கள். ஆனால் அது கர்வமாக மாறி விட என்றுமே அனுமதிக்காதீர்கள். சாதித்தவற்றில் மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால்
சாதிப்பதே நீங்கள் ஒருவர் தான் என்ற பொய்யான அபிப்பிராயத்தில் இருந்து விடாதீர்கள். கர்வம் தலை தூக்கும் போதெல்லாம் உங்கள் குறைகளையும், உங்களை விட அதிக உயரம் சென்றவர்களையும் நினைவில் கொண்டு கர்வத்தை விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் எல்லா மேன்மைகளையும் மங்க வைத்து, உங்களை யதார்த்தத்திலிருந்து விலக்கியும் வைக்கும் கர்வத்தை எதிரியாக எண்ணி அப்புறப்படுத்துங்கள்
.
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:32:50 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 18

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp18.jpg)

இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது!


நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.


கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.


எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, அதில் நடக்க இருப்பதெல்லாம் என்னென்ன என்பதை நாம் அறிய மாட்டோம். எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது. 


இப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும், நம் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.


இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி நடந்து கொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். நம்மால் செயலாற்ற முடிந்த இந்த ஒரு கணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நாம் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொள்கிறோம்.


நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சர் வில்லியம் ஓஸ்லர் (Sir William Osler) தன் மேசையில் நம் மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை எப்போதும் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.


“நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது”


நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் தான் அதிகமாக நம் நிகழ்காலத்தைத் திருடிக் கொள்கின்றன. கடந்த காலத்தில் அப்படியாகி விட்டதே, இப்படியாகி விட்டதே என்று வருத்தப்பட்டும், நாளை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டும் என்ன பயன்? வருத்தப்படுவதால் கடந்தகாலம் மாறி விடுமா? கவலைப்படுவதால் எதிர்காலம் தானாக சிறந்து விடுமா?


காளிதாசரின் இன்றைய தினம் கூட சற்று அகலமான காலம் என்று சொல்லலாம். இன்றில் கூட இன்றைக்குட்பட்ட கடந்த காலம், எதிர்காலம் என்பதும் அடங்கி விடுகிறது. உண்மையில் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் சூட்சுமம் இந்தக் கணத்தில் தான் உள்ளது. இந்தக் கணத்தில் தான் நாம் ஏதாவது செய்ய முடியும். நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான கணம் இந்தக் கணம் தான்.


இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.


தாமஸ் கார்லைல் மிக அழகாகக் கூறுவார். “நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்”. அப்படித்தான் இந்தக் கணத்தை நாம் சிறப்பாக உபயோகித்தால், அப்படியே ஒவ்வொரு கணம் நம் வாழ்க்கையில் வரும் போதும் சிறப்பாக பயன்படுத்தினால், எதிர்காலம் தானாக சிறப்பாய் உருவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.


நேற்றைய நிகழ்வுகளில் இந்தக் கணத்தில் ஏதாவது பாடம் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தும். நாளைய நாளின் சிறப்புக்காக திட்டமிட்டு இந்தக் கணத்தில் ஏதாவது செய்வோமானால் அது நம்மை முன்னேற்றும். ஆக இந்த நாளில் இந்தக் கணத்தில் நாம் செய்வதை வைத்துத் தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் நாம் சிறப்பை ஏற்படுத்த முடியுமே தவிர அவற்றைக் குறித்த வருத்தங்களாலும் கவலைகளாலும் அல்ல.  அப்படி செயல்படுவதை விட்டு விட்டு வருத்தங்களாலும், கவலைகளாலும் கழிக்கப்படும் காலங்கள் வீணடிக்கப்படுபவையே.


கடைசி வரை உங்களால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே.
எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனம் வையுங்கள். நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் புலம்பலிலேயே கழித்து விடாதீர்கள். புலம்பலிலும், வருத்தங்களிலும் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர எதுவும் மாறி விடாது, தீர்வும் கிடைக்காது.  தரப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் எப்படி முடிந்த அளவு சிறப்பாக செயல்படலாம் என்று யோசித்து அதன்படி செயல்படுங்கள். மோசமான சூழ்நிலைகளும் சிறிது சிறிதாக மாறி உங்களை மேலான சூழ்நிலைகளுக்குப் போக வழிவிடுவதைக் காண்பீர்கள்.


நமக்கு முழுக்கட்டுப்பாடு இருப்பது இந்தக் கணத்தில் தான் என்பதால் வாழ்க்கையின் வெற்றியின் சூட்சுமம் முழுவதும் இந்தக் கணத்தில் தான் இருக்கிறது. நதி நீரோட்டத்தில் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை காலை நனைக்க முடியாது என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே இருக்கிறது. கால ஓட்டத்திலும் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. நாம் இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொருத்தே இது நமக்கு அனுகூலமாவதும், பயனற்றுப் போவதும் தீர்மானமாகிறது.


காளிதாசர் சொன்னது போல நம் விடியலுக்கான தீர்வு இந்தக் கணத்தில் தான் உள்ளது. மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். ஏதாவது சாதிக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கான பிள்ளையார் சுழியை இந்தக் கணத்தில் போடுங்கள். நாளை செய்யலாம் என்று விட்டு வைப்பவைகளை நாம் என்றுமே செய்வதில்லை. ஏனென்றால் நாளை என்பது நம்மிடம் வருவதேயில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் இந்தக் கணம் மட்டுமே. இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.
 
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 14, 2012, 03:37:19 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 19  

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vpp19.jpg)

கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!


இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன், நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.


நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து வைத்திருப்பவனையும் பார்த்தால் நம் திருப்தி காணாமல் போகிறது. நம்மை விட அதிகமாக உலகம் அவனை மதித்தால் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பின் தங்கி விட்ட பிரமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே நம் வேகத்தை இரட்டிப்பாக்கி நாமும் ஓடி அவனை முந்தப் பார்க்கிறோம். அப்படி முந்தி விடும் போதாவது திருப்தியுடன் நிற்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அந்த நேரத்தில் நம்மை முந்தி சென்று கொண்டிருக்கும் இன்னொருவன் நம் கண்களில் படுகிறான். வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறோம். இந்தப் பைத்தியக்கார ஓட்டம் கடைசி வரை நிற்பதேயில்லை.


பசிக்கிற அளவுக்கு சாப்பிடுவது இயற்கை. அது தேவையும் கூட. ஆனால் அதிகமாக சாப்பிடுகிறவனைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்ற ஒரு நிலை இருந்து, அதற்காக அசுரப்பசியை ஏற்படுத்திக் கொண்டு, அதைத் தீர்க்க சாப்பிட்டுக் கொண்டே போனால் அஜீரணம், வாந்தி முதலான உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்ல, ஒரு வடிகட்டிய முட்டாளாக நடந்து கொள்கிறோம் என்பதும் நமக்கும் புரியலாம். ஆனால் இதையே நாம் வேறுபல விஷயங்களில் செய்கிறோம் என்றாலும் அந்த முட்டாள் தனம் நமக்குப் புரிவதில்லை.


செல்வம் மிக முக்கியம் தானே, நம் வாழ்விற்கு ஆதாரம் தானே, அப்படி இருக்கையில் அதிகமாக அதைத் தேடி அடைவது தானே வெற்றி, அது தானே புத்திசாலித்தனம் என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அவை எல்லாம் நியாயமானதாகவும் நமக்குத் தோன்றலாம். செல்வம் தேடுவது தவறல்ல. அதை அதிகமாகத் தேடி அடைவதும் தவறல்ல. தவறு எங்கே தெரியுமா நிகழ்கிறது அதற்கு நம் வாழ்க்கையில் நாம் தரும் விலையில் தான்.


ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இளம் தம்பதியரை உதாரணமாகப் பார்ப்போம். அவர்கள் இருவரும் சாஃப்ட்வேர் இன்ஜீனியர்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை வேலை பார்க்கிறார்கள். சமைக்க ஆள் இருக்கிறது. குழந்தையைக் கவனித்துக் கொள்ள ஆளிருக்கிறது. இருவரும் ஒரு ஃப்ளாட் வாங்கியாகி விட்டது. இரண்டு கார்கள் வாங்கியாகி விட்டது. விடுமுறை நாட்களில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்காவது பிக்னிக் போகிறார்கள். இரவு திரும்புகிறார்கள். விடுமுறை முடிந்து மறுநாள் பழையபடி ஓட்டம் ஆரம்பிக்கின்றது. அடுத்த விடுமுறை வரை இதே ஓட்டம் தொடர்கிறது.


இருவரும் இப்படி கடுமையாக உழைப்பதால் தான் மிக நல்ல பள்ளியில் அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தையைப் படிக்க வைக்க முடிகிறது. அவ்வப்போது பெரிய ஓட்டல்களிற்கு சென்று சாப்பிட முடிகிறது. விலை உயர்ந்த ஆடைகளையும், பொருள்களையும் வாங்க முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை காசைப் பற்றிக் கவலைப்படாமல் டூர் போக முடிகிறது. இதெல்லாம் அதில் அனுகூலங்கள்.


சரி இதில் எதையெல்லாம் விலையாகத் தருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.


பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.


குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை. மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேரும் குழந்தை டிவி பார்த்துக் கொண்டோ, வீடியோ பார்த்துக் கொண்டோ பொழுதைப் போக்கும். இல்லா விட்டால் டியூஷன் போகும். சாவகாசமாக அதனுடன் இருக்கவோ, நெருக்கமாகப் பழகவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. குழந்தை வளர வளர அதனுடன் இருக்கும் இடைவெளியும் அதிகரிக்கிறது.


உறவுகள், வேலை சம்பந்தப்படாத நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.


உண்மையான எத்தனையோ திறமைகள் வேறும் இருக்கக்கூடும். அந்தத் திறமைகளில் ஈடுபடவோ, வளர்த்துக் கொள்ளவோ, அதில் நிறைவு காணவோ நேரமில்லை.


ஒரு நாள் உடல் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டு டாக்டர்களிடம் அடிக்கடி ஓட நேர்கிறது. மருந்திற்கும், மருத்துவத்திற்கும் நிறைய செலவு செய்ய வேண்டி வருகிறது. பிள்ளை நெருக்கமாக இருப்பதில்லை. நெருங்கிய உறவுகளும் தூரப்பட்டு விடுகிறார்கள். டென்ஷன், டென்ஷன் என்று அது நாள் வரை ஓடிய ஓட்டத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள எதுவுமே செய்ய நேரமிருக்காததால் மனநிலையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன.


மொத்தத்தில் பணமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. ஆனால்  ஆரோக்கியமும் இல்லை, நிம்மதியும் இல்லை, நேசிக்கும் ஆட்களும் இல்லை. இப்போதும் வெளியே இருந்து பார்ப்பவர்கள் பொருளாதார நிலைமையை மட்டும் பார்த்து இவர்களை வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். இது தான் வெற்றியா? உயிர்வாழ எல்லாம் இருக்கிறது. ஆனால் நல்ல உணர்வுகளுடன் வாழ எதாவது இங்கே இருக்கிறதா? என்ன விலை கொடுத்து இவர்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள்?


இந்த சராசரி உதாரணத்தில் பணமும், தனிமையும் இருப்பதால் கெட்டுப் போக முடிந்த குழந்தைகளைச் சொல்லவில்லை. தேவையான நேரத்தில் பெற்றோரில் ஒருவர் கூட அருகில் இருக்காததால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான நஷ்டங்களைச் சொல்லவில்லை. அதே போல் வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுவது பற்றியும் கூட சொல்லவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் நிலைமை இன்னும் பூதாகரமாகத் தெரியும்.


ஆரோக்கியத்தை இளமையில் அலட்சியப்படுத்தி ஓயாமல் சம்பாதித்து நாற்பது வயதைத் தாண்டிய பிறகு சம்பாதித்ததை எல்லாம் மருத்துவத்திற்கு செலவு செய்வதுடன் உடல் உபாதைகளையும் தாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?


குழந்தைகளின் பிஞ்சுப்பருவத் தேவைகளை அலட்சியப்படுத்தி விட்டு அந்த நேரத்திலும் சம்பாதித்து அவர்களுக்குக் கடைசியில் சேர்த்து வைப்பதில் பெருமை என்ன இருக்கிறது?


கஷ்டப்பட்டு டென்ஷனுடன் சம்பாதித்து விலையுயர்ந்த பொருள்களை வீட்டில் சேர்த்து வைத்து நிம்மதியை தொலைத்து விட்டால், அந்த வீட்டில் நிறைவுடன் நம்மால் வாழ முடியா விட்டால், அந்த வாழ்க்கையில் வெற்றி என்ன இருக்கிறது?


மொத்தத்தில் கண்களை விற்று சித்திரம் வாங்கி எதை ரசிக்கப் போகிறோம்?


வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் சம்பாதித்து மற்ற இரண்டை அலட்சியம் செய்தால் அது குறைபாடான வாழ்க்கையாகவே இருந்து விடும்; அதில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் நாம் காண முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் பணம் ஒன்று மட்டுமே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என்று நம்பி ஏமாறுகிற போக்கை நாம் அதிகம் காண முடிகிறது. இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் போக்குத் தான். எனவே இந்த மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை உங்கள் இளமையில் இருந்தே தரும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள்!
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 19, 2012, 03:39:35 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 20


(http://4.bp.blogspot.com/-7sBfB-mqHHY/TwzVdw_pZGI/AAAAAAAAA34/-barZL-n5To/s1600/vpp+20.png)

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!


எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.


நம் முன்னோர்கள் இதை ‘கர்மா’ என்று சொல்வார்கள். நம் செயல்களின் விளைவு இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படா விட்டால் அடுத்த பிறவி வரை கூடத் தொடரும் என்றார்கள். உங்கள் நிழல் கூட இருட்டில் மறைந்து விடும். ஆனால் நீங்கள் செய்த செயல்களின் விளைவான கர்மா தன் பலனை அனுபவிக்கச் செய்யும் வரை என்றும் கூடவே வரும். அதனால் தான் பெரியோர்கள் ‘இறந்த பின்னும் கூடவே வருவது அவரவர் நல்லது, கெட்டது தான்”  என்பார்கள்.


விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன்.


எனவே நன்மைகளை தன் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மனிதன் தன் செயல்களில் நன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீமைகளைச் செய்து விட்டு தனக்கு நன்மை நடக்கும் என்று நம்புபவன் கிழக்கு திசையில் உள்ள ஊருக்குச் செல்ல ஆசைப்பட்டு மேற்கு திசை நோக்கி நடக்கும் முட்டாளுக்கு இணையாகிறான். எல்லா அக்கிரமங்களையும் செய்து விட்டு கங்கையில் மூழ்கினாலும் பாவத்தைக் கழுவி விட முடியாது. உங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க இறைவன் மாமூல் வாங்கும் அரசு அதிகாரி அல்ல. ஆகையால் கோயில் உண்டியல்களில் கோடி கோடியாய் கொட்டினாலும் உங்கள் கணக்கு சரியாகி விடாது. உங்கள் கணக்கு சரியாவது அதற்குத் தகுந்த விளைவோடு தான்.


சில சமயங்களில் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளும், தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைப்பதற்குத் தாமதமாகலாம். அந்த தாமத காலத்தில் இந்த விதி பொய்ப்பது போன்ற தோற்றம் பலருக்கும் தோன்றலாம். ஆனால் தாமதமானாலும் விளைவுகள் வட்டியோடு வந்து சேரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் செயலும் விளைவும் பிரிக்க முடியாத ஜோடி என்பதால் ஒன்றின் பின்னாலேயே மற்றது வந்து சேர்ந்து தானாக வேண்டும். 


எனவே விளைவுகளை மாற்ற விரும்பினால் மனிதன் செயல்களை மாற்ற வேண்டும். அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த விதி நன்மை, தீமைகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. செயலின் சிறப்புத் தன்மைக்கும் இதே விதி தான்.


விளைவைப் பார்க்கையிலேயே அந்த செயல் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விடும். கவனமாகச் செய்தீர்களா, ஈடுபாட்டுடன் செய்தீர்களா, முழு மனதோடு செய்தீர்களா, அந்த செயலுக்குத் தேவையான அறிவுபூர்வமாகச் செய்தீர்களா என்பதை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் செயலின் விளைவு சொல்லி விடும். விளைவைப் ’போஸ்ட் மார்ட்டம்’ செய்தால் சின்னத் தவறு கூட இல்லாமல் செயல் செய்த விதத்தைச் சொல்லி விடலாம். சிறப்பாகச் செய்யும் செயல்கள் சிறப்பான விளைவுகளாக மலர்ந்து வாழ்க்கையை சோபிக்கும். வேண்டா வெறுப்பாகவோ, திறமைக் குறைவாகவோ செய்யும் செயல்கள் அதற்குத் தகுந்தாற் போல மோசமான விளைவுகளாக வெளிப்பட்டு களையிழந்து காட்சி அளிக்கும்.


இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பலர் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். ’நான் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற்றமில்லை’ என்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். குறிப்பட்ட வகையில் எத்தனை உழைத்தாலும் முன்னேற்றமில்லை என்றால் அந்த உழைப்பில், உழைக்கும் விதத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் அப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டு போவது முட்டாள்தனம் அல்லவா? எங்கே என்ன தவறு இருக்கிறது அல்லது என்ன குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதன்படி சரி செய்து கொண்டு உழைத்தாலல்லவா நாம் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த அடிப்படை உண்மையை வாழ்க்கையில் உணர பலரும் மறப்பது தான் பரிதாபம்.


செய்கின்ற வேலையில் முன் யோசனையும், திட்டமிடுதலும், தேவையான திறமையும் இருந்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும், சிறப்பாகவும் முடியும். ஆனால் உழைப்பு மட்டும் இருந்து முன் சொன்ன மூன்றும் இல்லா விட்டால் வேலையும் முடியாது, வேலை சிறப்பாகவும் இருக்காது. வேலை எதுவாக இருந்தாலும் விதி இது தான்.


செயலின் முடிவே விளைவு என்ற உண்மையே மிகப்பெரிய பாடம் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் நிலைமையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா? நீங்கள் அடைய நினைத்த வெற்றிகளை அடையவில்லையா? உலகம் உங்களை சரியாக மதிப்பிடவில்லை என்ற வருத்தமா? இதில் எதற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால் முதலில் உங்களுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பாருங்கள். செயல்படும் முறையிலும், செயல்படும் நேரத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய ஏதோ முக்கியமானது விடுபட்டுப் போயிருக்கலாம். செய்யக் கூடாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்து கொண்டும் இருக்கலாம். சரியான கூட்டல், கழித்தலை உங்கள் செயல்களில் புகுத்தினால் கண்டிப்பாக விளைவுகள் மாற ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதை விட்டு விட்டு வருந்துவதும், குமுறுவதும், புலம்புவதும் மாற்றத்திற்கு உதவாது. 


இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வேலை செய்வேன், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்பவன் தோற்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். செயலின் விளைவு எதிர்பாராததாக இருந்தால் ஏன் என்று சிந்தித்து மாற்ற வேண்டியதை மாற்றி விட்டு மறுபடி செயல்பட வேண்டும்.
அவ்வப்போது நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும். அதுவே நம் வாழ்க்கையை மெருகுபடுத்திக் கொண்டே செல்லும். எல்லா மகத்தான மனிதர்களும், எல்லா வெற்றியாளர்களும், தாங்கள் வேண்டும் விளைவுகளுக்கேற்ப தங்கள் செயல்களை சரிப்படுத்திக் கொண்டே வந்தவர்கள் தான். உலகம் அவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்று சுருக்கமாக அழைத்தாலும் சரியான நேரத்தை, சரியானதை, சரியான விதத்தில் செய்தது தான் அந்த அதிர்ஷ்டத்தின் ரகசியம்.
இதுவே வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகப்பெரிய பாடம். இதில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் சாதிக்க முடியாத இலக்குகள் இல்லை, அடைய முடியாத சிகரங்களும் இல்லை.
 
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 19, 2012, 03:42:02 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 21

(http://2.bp.blogspot.com/-zAX-HoSEJao/TxjFhS5shXI/AAAAAAAAA4Y/0EKzBYViNFA/s1600/vpp+21.jpg)

திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்


வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.


அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.


“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.”


திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக்கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போல பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.


திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.


வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.


ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.


திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.


நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர்வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்கு பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுவது உதவும்.


திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.


ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.


திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.  
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 19, 2012, 03:44:04 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 22

(http://3.bp.blogspot.com/-eJ6lkKHKYVk/TyVoKH2MERI/AAAAAAAAA4w/6JfMbqMClGQ/s1600/vpp+22.jpg)

கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!


இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா? மகிழ்ச்சி தான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுகிறார்கள். பார்க்கின்ற பலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும் ஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா என்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள். கேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் பெற முடியுமா என்று முயற்சிக்கிறார்கள்.  ஆனால் மகிழ்ச்சி பலருக்கும் என்றும் ஒரு புதிராகவே தங்கி விடுகிறது.


சில சமயங்களில் மகிழ்ச்சி கிடைப்பது போலத் தெரிகின்றது. ஆனால் ஒருசில சின்ன மாற்றங்களில் அது மின்னல் வேகத்தில் மறைந்தும் போகிறது. இதோ கிடைத்து விடும், இப்போது கிடைத்து விடும், இதைச் செய்தால் கிடைத்து விடும், இது கிடைத்தால் கிடைத்து விடும் என்று சலிக்காமல் அதன் பின்னால் போகும் மனிதனுக்கு மகிழ்ச்சி கடைசி வரை முழுமையாக பிடிபடுவதில்லை. அதனால் தான் பல சமயங்களில் கிளர்ச்சியையே மகிழ்ச்சி என்று எண்ணி அவன் ஏமாந்து விடுகிறான். வெறுமனே ஏமாந்தாலும் பரவாயில்லை அதனால் சிறிதும் எதிர்பாராத பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறான்.


உதாரணத்திற்கு சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். செய்தி ஒன்று-கல்லூரி மாணவ நண்பர்கள் சிலர் ஜாலியாக இருக்க எண்ணி மது அருந்தி இருக்கிறார்கள். போதையில் பேசிக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. வாய் வார்த்தைகள் கைகலப்பாகி, கடைசியில் ஒரு மாணவன் தன் நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டான்.


நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து இன்ஜீனியராகும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த இரண்டு மாணவர்களில் ஒருவன் இறந்து விட்டான். இன்னொருவன் சிறையில் இருக்கிறான். அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும், வேதனையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை மதுவில் தேடியதில் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் கிடைத்தது பெருத்த சோகமே.


மது மனக்கவலைக்கு ஒரு மருந்து என்கிற எண்ணம் பலருக்கு உண்டு. இது வரை மது எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைத்ததாய் யாரும் சொல்லி விட முடியாது. போதையால் பிரச்னைகள் உருவாகலாமே ஒழிய தீராது, குறையாது. மூளையை மழுங்கடித்து மந்தமாக்கி யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. 


இன்னொரு செய்தியைப் பார்ப்போம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஒரு இளைஞன் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறான். திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தையுடன் நல்ல குடும்பஸ்தனாக இருக்கிறான். அந்த சமயத்தில் அவனுக்கு கூட வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவளுடனேயே அதிகம் இருக்கிறான், குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை, வீட்டு செலவுக்குப் பணம் தருவதில்லை என்ற நிலை வந்தவுடன் தான் அவன் மனைவிக்கு உண்மை தெரிய வருகிறது. அவள் அவளுடைய சகோதரனிடம் சொல்ல அவன் அவளுடைய கணவனுக்கு புத்திமதி சொல்கிறான். ஆனால் அது எடுபடாமல் போகிறது. சகோதரன் சிலரை வைத்து கணவனைக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் சிறை வைத்து மிரட்ட, வெளியே தப்பி வந்த கணவன் போலீசிடம் புகார் தருகிறான். சகோதரனுக்கு ஆதரவாக இருந்து இதை செய்ய வைத்த மனைவியைப் போலீஸ் கூப்பிட்டு விசாரிக்கிறது. இனி கைதும் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்ற பயம் வந்த மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த சகோதரனையும், குண்டர்களையும் போலீஸ் தேடுகிறது. இதில் பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக தாயில்லாமல் தவித்து நிற்கிறது.


கள்ள உறவு கிளர்ச்சியைத் தரலாம், அது என்றும் மகிழ்ச்சியைத் தராது. அந்தந்த நேரத்தில் மயங்க வைக்கலாம், ஆனால் என்றும் மனநிறைவைத் தராது. மனைவி, குழந்தை, அமைதியான குடும்பம், நல்ல வேலை என்று ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சியைத் தேடிப் போய் கள்ள உறவில் ஈடுபட்டு குடும்பத்தையே நாசப்படுத்திக் கொண்டு விட்டான் அந்த இளைஞன்.


இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சி என்றால் என்னதென்று அறியாமல் கிளர்ச்சியை மகிழ்ச்சியாய் எண்ணியதால் விளைந்த கொடுமைகள். கானல் நீரை நிஜமென்று எண்ணி பயணித்து ஏமாந்த கதைகள். மகிழ்ச்சியைத் தேடி ஏதேதோ செய்யப் போய் அதற்கு நேர்மாறான துக்கத்தை சம்பாதித்த கதைகள். இந்த அளவிற்கு விபரீதத்தில் போய் முடியா விட்டாலும் கிளர்ச்சிகள் என்றுமே வாழ்க்கையில் நன்மையையும், மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது என்பது மட்டும் உண்மை.


ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்திற்கு விளக்கவுரை எழுதும் போது ராஜாஜி மிக அழகாகச் சொல்வார். “இதில் என்ன குற்றம் என்று எண்ணி மோசம் போக வேண்டாம். கண்கள் வழி திருப்தி உண்டாகாது. உண்டாவது ஆசை தான். ஒருவன் தண்ணீரைத் தேடுவான். தாகத்தை யாரேனும் தேடுவரோ? தேடினால் பிறகு உடனே தண்ணீரைத் தேட வேண்டுமல்லவா? நேர்மையை இழக்க எண்ணமில்லையாயின்  ஏன் நீயாகக் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?”


தத்துவார்த்தமாகச் சொல்லப்பட்டாலும் ராஜாஜி அவர்கள் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. தண்ணீரைத் தேடுவது இயற்கை. ஆனால் தாகத்தையே தேடுவது செயற்கை. செயற்கையான எதிலும் மகிழ்ச்சி வந்து விடாது.


கிளர்ச்சிகளின் குணம் எப்போதும் ஒன்றே. அது அக்னியைப் போன்றது. எத்தனை விறகு போட்டாலும் அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும். தீனி போட்டு அதன் பசியைத் தீர்க்க முடியாது. தீனி போடுவதாலேயே பசி அதிகரிக்கும். அழிவு நிச்சயம் என்ற போதிலும் அடங்கி விடாது. அது அழித்தே அணையும்.


தீய பழக்கங்கள் தான் கிளர்ச்சிகள் என்றில்லை. ஒரு வரம்பை மீறி உங்களிடத்தில் எழும் எதுவும் கிளர்ச்சியாக மாறி விடலாம். பண ஆசை, புகழ் ஆசை, பொருளாசை முதலான எதுவும் வரைமுறைக்குள் இருக்கும் போது சாதாரண ஆசைகளாக இருக்கக்கூடியவை. ஒரு வரம்பை விட்டு மேலும் மேலும் அதிகரிக்கும் போது அவை கிளர்ச்சிகளாக மாறி விடும். கட்டுப்பாடு இல்லாமல் போகும். என்ன விலை கொடுத்தாவது அடையத் தோன்றும். மனிதன் என்ற நிலையிலிருந்து மிருக நிலைக்கும் போக வைக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுமானால் கிளர்ச்சி தன் ஆதிக்கத்தை உங்கள் மேல் செலுத்த ஆரம்பித்து விட்டது என்று பொருள்.


இத்தனையும் செய்வது மகிழ்ச்சிக்காகத் தான் என்ற பொய்யான மனோபாவத்தை அது மனதில் ஏற்படுத்தும். இதில் என்ன குற்றம் என்று அது வாதம் செய்யும். யாரும் செய்யாததா என்ற கேள்வியைக் கேட்கும். அப்போதெல்லாம் ஒரு உண்மையை மறந்து விடாதீர்கள்- கிளர்ச்சிகள் எல்லாம் மகிழ்ச்சிகள் அல்ல.


உண்மையான மகிழ்ச்சி உங்களுடன் அடுத்தவரையும் மகிழ வைக்கும். உங்களோடு சேர்ந்து உங்களுக்கு நெருங்கியவர்களையும் மகிழ வைக்கும். உண்மையான மகிழ்ச்சி நேர் வழியில் தான் வரும். பின்னால் வருந்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் கிளர்ச்சி மகிழ்ச்சியைத் தருவது போல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாது. ஆசைப்பட்டதைப் பெற எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். உங்கள் நல்ல தன்மைகளைப் படிப்படியாக அழிக்கும். உங்களையும் உங்களுக்கு நெருங்கியவர்களையும் கடைசியில் துக்கத்தில் ஆழ்த்தி விடும்.


எனவே மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள். மகிழ்ச்சியை நாடுங்கள். கிளர்ச்சியை விலக்குங்கள்.
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 19, 2012, 03:46:44 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 23

(http://2.bp.blogspot.com/-5tBP63LGzUA/TyuqKOOs4LI/AAAAAAAAA44/shTdksDiwvo/s1600/vpp+23.jpg)

காலம் அறிந்து செயல்படுங்கள்!


வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.


வெற்றிக்கான இந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி உள்ளார்.


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)


(தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.)


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். (484)


(காலத்தை அறிந்து தகுந்த இடத்தில் செயலைச் செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.)


காலம் அறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற நினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் சொன்னது பொருளில்லாமல் அல்ல. வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.


காலம் மிக முக்கியமானது. விதைக்க ஒரு காலம், விளைய ஒரு காலம், அறுக்க ஒரு காலம் என்று விவசாயத்தில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காசிருக்கும் போது விதைகள் வாங்கி, மனம் தோன்றுகிற போது விதைத்து, பொழுது கிடைக்கிற போது அறுக்க நினைத்தால் அது எப்படி மற்றவர்களின் நகைப்பிற்கிடமாகுமோ அப்படித்தான் காலம் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும்.


சின்னப் பிள்ளைகளுக்குக் கூட இது போன்ற விஷயங்களில் அதிக விவரமுண்டு. எந்த நேரத்தில் அப்பாவிடம் காசு கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் வேண்டிய பொருள்கள் கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் குறும்பு செய்வது அபாயம் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துபடி. அவர்கள் எல்லா நேரத்திலும் எல்லாமே செய்து விட மாட்டார்கள். பெற்றோரின் மனநிலையும், வீட்டின் சூழ்நிலையும் அறிந்து செயல்படுவார்கள். தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். அந்த அளவு சூட்சுமமான புத்திசாலித்தனம் அவர்களுக்கு பெரும்பாலும் உண்டு.


அதே சூட்சும அறிவு ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியத் தேவை. ஒரு காலத்தில் வெற்றி தருவது இன்னொரு காலத்தில் வெற்றி தராது. ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் அனாவசியமாகி விடலாம். ஒரு காலத்தில் பேசுவது உத்தமமாக இருக்கும் என்றால் இன்னொரு காலத்தில் பேசுவது வம்பை விலைக்கு வாங்குவது போலத் தான். இப்படி வாழ்க்கையில் பெரும்பாலானவை காலத்திற்கேற்ப மாறுபவையே. எனவே எந்த நேரத்தில் எது பயன் தரும் என்பதை உணர்ந்து அதை செய்தால் ஒழிய ஒருவன் வெற்றி பெற முடியாது.


ஒரு பணக்கார மனிதரை காலம் அறிதல் உலகப்பெரும் பணக்காரராக்கிய ஒரு உதாரணம் பார்க்கலாம். இரும்புத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ கார்னிஜி என்ற அமெரிக்க செல்வந்தர். அந்த நேரத்தில் தான் இரும்பிலிருந்து எஃகு கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடையும் தன்மை உடையது. ஆனால் எஃகோ நன்றாக வளையக்கூடியதாகவும், அதிக உறுதியானதாகவும் இருந்தது. அதனால் இனி எஃகிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி தன்னுடைய மூலதனத்தை எஃகிற்கு மாற்ற எண்ணினார். அவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த அவருடைய வியாபாரக் கூட்டாளிகள் அது மிகவும் அபாயகரமானது என்று எண்ணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இப்போதே நல்ல இலாபம் ஈட்டும் தொழில் இருக்கையில் இந்த புதிய மாற்றம் தேவை இல்லாதது என்று எண்ணினார்கள்.


ஆண்ட்ரூ கார்னிஜி புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு எஃகுத் தொழிலில் முழு மூச்சோடு இறங்கினார். அவருடைய பழைய கூட்டாளிகள் வெறும் பணக்காரர்களாக இருந்து விட்ட போது அவர் உலகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தது அவர் அப்படி காலம் அறிந்து செயல்பட்டதால் தான்.


எனவே காலம் அறிந்து செயல்படுவது மிக முக்கியமானது. காலம் வருவதற்கு முன்போ, காலம் கடந்த பின்போ கடும் முயற்சிகள் எடுப்பதும், காலம் கனியும் போது ஒடுங்கிக் கிடப்பதும் தோல்விக்கான தொடர் வழிகள். கடும் உழைப்பாளிகளில் பலர் கீழ்மட்டத்திலேயே தங்கி இருப்பதைப் பார்க்கிறோம். நல்ல திறமைசாலிகளில் பலரும் வாழ்க்கையில் சோபிக்காததையும் பார்க்கிறோம். ஆனால் காலம் அறிந்து அதற்கேற்ற மாதிரி செயல்படுபவர்களுக்கு ஓரளவு திறமையும், ஓரளவு உழைப்பும் இருந்தால் கூட போதும் நல்ல நிலைக்கு விரைவிலேயே உயர்ந்து விடுகிறார்கள். இதுவே யதார்த்தம்.


எனவே காலத்தின் ஓட்டத்தை கவனமாகக் கவனியுங்கள். எல்லாவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை அதற்குக் கொடுங்கள். காலம் கனியும் போது விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள். காலம் அறிதல் அதிகாரத்தை மிக அழகாக இப்படிச் சொல்லி திருவள்ளுவர் முடிக்கிறார்.


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)


(பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் போது கொக்கு மீனைக் குத்துவது போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்)


எனவே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக உழைக்கவும் தயாராக இருங்கள். ஆனால் காலம் அறிந்து செயல்படுங்கள். அப்படி செயல்படும் போது சந்தேகங்களோ, தயக்கமோ வைத்துக் கொள்ளாதீர்கள். (உண்மையாக நீங்கள் காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ, தயக்கமோ வரும் வாய்ப்பும் இல்லை.) அப்படி செய்யும் போது காலத்தை உங்கள் துணையாகக் கொள்கிறீர்கள். காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படுபவனுக்கு திருவள்ளுவர் கூறியது போல முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.
Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 19, 2012, 03:48:41 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 24

(http://1.bp.blogspot.com/-nTYE_XxYwUY/TzPbNZ-UzPI/AAAAAAAAA5Q/92AZLauACb0/s1600/surrend.jpg)

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!


பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான  வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.


உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத,
நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை.


ஒரு மரணம் நிகழ்கிறது. இறந்தவர் நம்மால் மிகவும் நேசிக்கப்பட்டவர், அவர் மரணம் நாம் சிறிதும் எதிர்பாராதது என்று வைத்துக் கொள்வோம். அந்த மரணம் நமக்குக் கண்டிப்பாக பெரும் துக்கத்தைத் தரும் தான். அதுவும் இறந்தவர், கணவனாகவோ, மனைவியாகவோ, பிள்ளைகளாகவோ, தாயாகவோ, தந்தையாகவோ இருந்தால் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதுவும் அவரால் ஆக வேண்டிய காரியங்கள் நிறைய இருந்தால் மனரீதியாக மட்டுமல்லாமல் எல்லா வகையிலும் நாம் பாதிக்கப்படுவதால் சிரமங்களும் மிக அதிகமாகத் தான் இருக்கும். அதனால் அந்த துக்கம் இயற்கையானது. நியாயமானதும் கூட.


ஆனால் மரணம் ஒவ்வொருவரும் சந்தித்தாக வேண்டிய ஒரு நிகழ்வு. மரண காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்கிற போது அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். உடனே தோன்றுகிற இயல்பான துக்கத்தில் இருந்து விரைவாக நாம் மீண்டு எழத்தான் வேண்டும். நடக்க வேண்டிய காரியங்களை சரியாக கவனித்து செயல்பட்டே தீரவேண்டும். இறந்தவர்களுக்காக இருக்கிறவர்களை புறக்கணித்து விடக் கூடாது. அது நியாயமும் அல்ல, விவேகமும் அல்ல. ஆனால் பலர் இந்த துக்கத்தில் இருந்து மீள்வதில்லை. ’இந்த மரணம் நியாயமா? சரியான காலத்தில் தான் வந்திருக்கிறதா? சாவுக்காக எத்தனையோ பேர் காத்திருக்கையில் இவருக்கு ஏன் வரவேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளிலேயே தங்கி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு உலகம் பதிலளிப்பதில்லை.


மரணம் போன்ற இன்னும் எத்தனையோ பெரிய விஷயங்கள் இருக்கின்றன. விபத்துகள், நோய்கள், பெரும் நஷ்டங்கள், மோசமான மாற்றங்கள் எல்லாம் நம் சீரான வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடும். வந்ததை மறுப்பதால் பிரச்சினைகள் கூடுமே ஒழிய குறையாது. உண்மை நிலையை உணர்ந்து ஏற்றுக் கொண்டால் மட்டுமே தெளிவாக சிந்திக்கவும், செயல்படவும் முடியும். அந்த வகையில் மட்டுமே ஓரளவாவது பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள முடியும். யார் காரணம் என்று ஆராய்வதிலும், குற்றப்பத்திரிக்கை தயார் செய்வதிலும், எனக்குப் போய் இப்படி ஆகி விட்டதே என்று சுயபச்சாதபத்தில் மூழ்குவதிலும் எந்த விதத்திலும் ஒருவருக்கு பயன் கிடைக்காது.


பெரிய விஷயங்களைப் பார்த்தோம். இனி சின்ன விஷயங்களைப் பார்ப்போம். முக்கிய வேலையாகப் போகிறோம். வழியில் ட்ராஃபிக் ஜாம் ஆகி விடுகிறது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இது சந்தோஷப்பட வேண்டிய சூழ்நிலை அல்ல தான். ஆனால் சிலர் அந்த நேரத்தில் படும் அவசரமும், அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல. புலம்பித் தீர்ப்பதும், குடியே மூழ்கிப் போய் விட்டது போல மன அமைதி இழப்பதும் பலரிடம் நாம் பார்க்க முடிந்த தன்மைகள்.


அந்தப் புலம்பலாலும், அவசரத்தாலும் அந்த நிலைமையை மாற்றி விட முடியுமா? சில நிமிட தாமதங்களால் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நிகழ்வுகள் நிகழ்ந்து விடுமா? சரி செய்யவே முடியாத பேரிழப்பா அது? சில நிமிட சில்லறை அசௌகரியத்திற்கு பலரும் அமைதியிழந்து தவிப்பதும், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதும் என்னவொரு அறியாமை? மன அமைதியை இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் இழக்க ஆரம்பித்தால் மனம் அந்த அளவு பலவீனம் என்றல்லவா அர்த்தம். எது வேண்டுமானாலும் எவ்வளவு சீக்கிரமும் அதைப் பதட்டமடையச் செய்து விடும் என்றும், சுலபமாக அசைத்து விடும் என்றல்லவா பொருள்.


அதே போல் நிறைய சின்ன விஷயங்கள் பலரையும் தேவைக்கும் அதிகமாக மன அமைதி இழக்கச் செய்கின்றன. மழை விடாது பெய்தால் மன சங்கடம் வந்து விடுகிறது. அலுவலகத்திலும், அக்கம்பக்கத்திலும் ஒருசிலருடைய குணாதிசயங்கள் எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தால் மன அமைதி பறி போகிறது. எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள் நடக்கா விட்டால் மனம் குமுறுகிறது. இது போன்ற சின்னச் சின்ன இயற்கையான, நம்மால் மாற்ற முடியாத விஷயங்களில் மன அமைதியை இழப்பது அதிகம் நடக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் சீண்டிப்பார்க்கக் கூடிய இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் அதிகம் வருவது இயல்பே. இதைப்பற்றி அதிகம் நினைத்து, இதைப் பற்றியே அதிகம் புலம்பி தானும் வருந்தி சுற்றியுள்ளவர்களுக்கு அந்த மனநிலையை பரப்பி அமைதியை அந்த வட்டாரத்திலேயே இல்லாமல் செய்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். 




இந்தக் கூட்டத்தில் நீங்களும் இருக்கிறீர்களா என்று பாருங்கள். வாழ்க்கையில் சகிக்க முடியாதவற்றில் மாற்றக் கூடியவை நிறைய உண்டு. அதை மாற்றும் முயற்சியில் மனிதன் ஈடுபட்டதால் மட்டுமே உலகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது. மனித சமுதாயம் வளர்ந்துள்ளதற்கும் காரணம் அதுவே. ஆனால் அதே போல மாற்ற முடியாத விஷயங்களும் நிறைய உண்டு. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை நாம் இங்கு பார்த்தோம். இவை நாம் முகம் சுளிப்பதால் தவிர்க்க முடிந்தவை அல்ல. இவை நாம் புலம்பினால் வராமல் இருப்பவையும் அல்ல. இது போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கையை நாம் லகுவாக்கிக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்ளும் போது நம் சக்தி வீணாவதைத் தடுக்கிறோம். மன அமைதியும் பெறுகிறோம்.


அப்போது ‘ஐயோ இப்படி ஆகி விட்டதே’ என்ற ஒப்பாரிக்கு பதிலாக ‘இனி என்ன செய்வது?’ என்ற ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கிறது. இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான சிந்தனையால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தும் விடுபடும் வழியோ, அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் வழியோ பிறக்கிறது. இப்படி மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் போது உலகத்துடன் போராடுவதை விட்டு விட்டு, உலகத்துடன் ஒத்துப் போய் சமாளித்து வெற்றி பெறுகிறோம்.
 

Title: Re: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
Post by: Global Angel on August 19, 2012, 03:50:44 AM
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 25  


(http://1.bp.blogspot.com/-iThwAMXnct4/T0Ed68OQ1iI/AAAAAAAAA5o/xk0CT8cS4SY/s1600/vpp+25.jpg)

எல்லாம் ஒரு நாள் முடியும்!  



இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்த பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பு பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் போது தான் நமக்குப் புரிகிறது. எல்லாப் பாடங்களையும் கற்று கடைபிடிக்க ஒரு வாழ்நாள் போதுமானதாக இருப்பதில்லை என்பதையும் பலர் உணர்கிறார்கள்.

இந்தக் கடைசி பாடம் வெற்றிகரமான சிறப்பான வாழ்க்கைக்கல்ல. வெற்றியோ, தோல்வியோ, நிறைவான வாழ்க்கையோ, குறைவான வாழ்க்கையோ, மொத்தத்தில் மன அமைதியை உணர வைக்கும் பாடம். அது தான் எல்லாம் ஒரு நாள் முடியும் என்றுணர்வது!

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!

நன்றி வாசகர்களே. வாழ்ந்து படிக்கும் பாடங்கள் ஏராளமாக இருப்பினும் இந்த அதிமுக்கிய பாடத்தோடு இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன்.