திருமணம் செய்வது வீணா
திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவசியமான ஒன்றுதான், அப்படியென்றால் ஆணின் வாழ்வில் திருமணம் அவசியமற்றது என்ற அர்த்தமில்லை. பெண்ணின் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்கிறது உளவியல், சில திருமணங்கள் மூலம் பிரச்சினைகள் அதிகமாவதும் பரவலாக சமுதாயத்தில் காணப்படுகிறது என்பதால் ஒட்டு மொத்தமாக திருமணம் செய்து கொள்வதை வீணென்றும் திருமண பந்தத்தில் சிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வதால் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுவிட முடியும் என்பது முட்டாள்தனம்.
உடல் ரீதியாக ஒரு பெண் பூபெய்திய பின்னர் அடுத்த வளர்ச்சிக்கு அவளது உடலும் மனமும் தயாராக ஆரம்பிக்கிறது, அப்படி தயாராகும் போது ஏற்ற சமயத்தில் திருமணம் செய்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாற்றங்களை எதிர்பார்க்கிறது ஒரு பெண்ணின் உடல், அத்தகைய இயற்க்கை மாற்றங்கள் உடலில் ஏற்ப்படவில்லை என்றால் சில பிரச்சினைகள் ஏற்படத் துவங்கி ஒரு கட்டத்தில் ஒரு சிலருக்கு பெரும் விளைவுகளை ஏற்ப்படுத்தி உடல் நலன் சீர்கெடுகிறது.
பிரச்சினைகளைப் பொறுத்த அளவில் திருமணமான பெண்ணிற்கு மாமனார் மாமியார் நாத்தனார் கணவன் என்கிற புதிய உறவுகளினால் ஏற்படுகின்ற மனவேற்றுமைகள் மூலம் நிம்மதியிழக்க நேரிடும் நிலைக்கு பயந்துகொண்டு திருமணம் செய்வதற்கு விரும்பாத சில பெண்கள் எண்ணிக்கை தற்காலத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்க்கு மிகவும் முக்கிய காரணம் பெண்கள் படித்து பட்டம் பெற்று பின்னர் நிறைய சம்பளத்துடன் வாழ்க்கையை சந்திக்கத் துவங்கும் போது, அவர்கள் சமுதாயத்தில் காண்கின்ற அல்லது சந்திக்கின்ற ஆண்கள் மூலம் திருமண பந்தம் மற்றும் காதலை வெருத்துவிடுகின்றனர், திருமணம் என்பது அவர்களது சுயசிந்தனையை மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளை நிராகரிக்கும் வாய்ப்பை அடையும் என்கின்ற எண்ணம் அதிகரிப்பதால் திருமணம் செய்து கொண்டு பிரச்சினைகளை சந்திக்க விரும்புவது இல்லை.
ஒரு ஆணும் பெண்ணும் தற்காலத்தில் திருமண பந்தத்திற்குள் போகும் முன்னர் முதலில் ஒருவரது குணத்தை மற்றவர் தீர அறிந்திருக்கவேண்டிய கட்டாயமும் தங்களால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்க்கையை நடத்தி செல்ல இயலுமா என்பதை பற்றி தீர ஆலோசனை செய்து பின்னர் திருமண வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தால் பிரச்சினைகள் ஏற்ப்படுவதை தவிர்க்க முடியும். அடுத்ததாக தம்பதிகளை திருமண பந்தத்தில் இணைத்துவிட்ட பின்னர் இரு வீட்டாரும் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு அவர்களது வாழ்க்கையை பயன்படுத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
புதுமணத் தம்பதியினர் அவர்கள் விருப்பட்டு பெற்றோரிடமோ உறவினர்களிடமோ ஆலோசனை கேட்டால் மட்டுமே தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் அல்லது தங்களது தலையீட்டை முற்றிலுமாக தவிர்த்துவிடுவதால் அவர்களுக்குள் ஏற்படுகின்ற வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். கூட்டு குடும்பம் என்பதின் அவசியத்தை புதுமண தம்பதியினர் விரும்பாவிட்டால் அவர்களை பலவந்தப்படுத்தி கூட்டு குடும்பத்தில் வாழ செய்வது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
மணப்பெண்ணோ ஆணோ ஒருதலைபட்ச்சமாக தங்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது, இருவரது பெற்றோர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு சரிசமமான முக்கியத்துவம் கொடுக்க முன் வரவேண்டும், அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாத உறவினர்கள் பெற்றோர் நண்பர்கள் போன்றவர்களுடனான தங்களது தொடர்பை வைத்துகொள்வதால் பிரச்சினைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். பிரச்சினை என்பது யார் மூலமாக எதன் அடிப்படையில் ஏற்ப்படுகிறதோ அதை ஆராய்ந்து ஏற்படாமல் தவிர்க்க வழி செய்வதில் இருவரும் முனைப்புடன் இருக்க வேண்டும்.
பிரச்சினைகளை துவக்கத்திலேயே களைந்துவிட இருவரும் முயற்சி மேற்கொள்வது அவசியம், விட்டுக் கொடுப்பது என்பது பெண்ணுக்கு மட்டும் உரியது என்கின்ற வகையில் ஆண் தன் அதிகாரத்தை பயன்படுத்துதல் பிரச்சினைகளை அதிகப்படுத்தும். திருமணம் செய்வதால் பிரச்சினை ஏற்ப்படும் என்று திருமணம் செய்துகொள்வதை தவிர்ப்பது மழைக்கு பயந்துகொண்டு எங்கேயும் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பது போன்றது, மழை வந்தால் நனையாமல் இருக்க குடை எடுத்துச் செல்வது போல திருமணத்திற்கு முன்னர் பல விஷயங்களில் திட்டமிட்டு வாழ்க்கையை துவக்கி அதன் படி நடந்தால் பெரும்பாலும் பிரச்சினைகளை தவிர்க்க இயலும்