புறநானூறு, 6. (தண்ணிலவும் வெங்கதிரும்)
பாடியவர்: காரிகிழார்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: வாழ்த்தியலும் ஆகும்.
=======================================
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;
வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;
ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே
அருஞ்சொற் பொருள்:-
வடாஅது = வடக்கின் கண்ணது
தெனாஅது = தெற்கின் கண்ணது
உரு = அச்சம்
கெழு = பொருந்திய
குணாஅது = கிழக்கின் கண்ணது
குடாஅது = மேற்கின் கண்ணது
தொன்று = பழமை
முதிர் = முதிர்ச்சி
பெளவம் = கடல்
குடக்கு = மேற்கு
புணர் = சேர்க்கை
முறை = ஒழுங்கு
கட்டு = வகுப்பு
நிவத்தல் = உயர்தல்
ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சொர்கம்)
ஆனாது = அமையாது.
கோல் = துலாக்கோல்
ஞமன் = துலாக்கோலின் முள்முனை
திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம்
உறுதல் = நன்மையாதல், பயன்படல்
பணியியர் = தாழ்க
சென்னி = தலை
கண்ணி = தலையில் அணியும் மாலை
ஒன்னார் = பகைவர்
கமழ் = மணக்கும்
செலீஇயர் = செல்வதாக (தணிவதாக)
துனித்த = ஊடிய
வாள் = ஒளி
தண்டா = தணியாத (நீங்காத)
தகை = தகுதி
மாண் = மாட்சிமை பெற்ற
தண் = குளிர்ந்த
தெறு = சுடுகை
மன்னுதல் = நிலைபெறுதல்
மிசை = மேல்பக்கம்
இதன் பொருள்:-
வாடாஅது=====> சிறக்க
வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.
செய்வினைக்கு=====> வாள்முகத்து எதிரே
உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.
ஆங்க, வென்றி=====> நிலமிசை யானே
அடையவேண்டிய வெற்றிகளை எல்லாம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக