96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல் (இன்னிசை வெண்பா)
நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.
97, சான்றோர் முன் சொல்லும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை.
98. புகக் கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.
99. அறிவினர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்.
100. ஒழுக்கத்தினின்று விலகியவர் (பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.
ஆசாரக் கோவை முற்றிற்று