FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 13, 2020, 11:30:40 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: Forum on December 13, 2020, 11:30:40 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 252
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/252.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: thamilan on December 14, 2020, 06:10:53 AM
காதலியே
சப்தம் இல்லாமல் ஒரு 
போராட்டம்
இரத்தம் இல்லாமல் ஒரு
யுத்தம்
ஆயுதம் இல்லாமல் ஒரு
படுகொலை
 பார்வையில் தீக்குளிக்கும்
பரிதாப தற்கொலை

விடுதலைக்காக அல்ல
விரும்புதலுக்காக
காதலிக்காக அல்ல
எனது காதலுக்காக

ஆன்மாவின் தலைமையில்  ஒரு
கல்லறைப் பயணம்
இரு கண்கள் நடத்தும்  ஒரு
அமைதி ஊர்வலம்
உன் காதலுக்காக மண்டியிட்ட
இதயம் கொண்டுவரும்
இரங்கல் தீர்மானம்

இறுதியாக
கண்ணீர் நிரப்பப்பட்ட பேனாவின்
கவிதை அழுகுரல்
ஒரு கவிதையின்
கண்ணீர் அஞ்சலி   
விடுதலைக்காக அல்ல ஒரு
விரும்புதலுக்காக

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: JsB on December 14, 2020, 03:27:54 PM
என் வாழ்க்கையில் வந்த வசந்த முல்லையே...
என் பிரியமே...என் ரூப வதியே...
என் இதயத்திற்கு ஏற்றவளே...என் ராஜகுமாரியே...
என் வாழ்வில் பிரகாசமாய்
தோன்றிய அழகு நிறைந்த நிலாவே...

இருளடைந்த என் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவளே...
உன்னை பார்த்த நாள் முதல் பரவசமானேன் நான்...
அப்படியொரு அழகு தேவதை நீ...

யாரும் கைப்படாத ரோஜாவாய்...உன்னை அனுதினமும்
பாதுகாத்து வரும் காவலனாய்...உன்னையே சுற்றி
வலம் வந்துக் கொண்டிருக்கிறேன்...
நான் உன் மீது கொண்ட அளவில்லா அன்பிற்கு...
சொல்ல வார்த்தையில்லை என்னிடத்தில்...
இருந்தும் என் அன்பிலும் பாசத்திலும்
சந்தேகம் கொண்டவளே...

என் சிந்தையில் மணிக்கணக்காய் இருப்பவள் நீயே...
என் இதயத்தில் நிரந்தரமாய் குடிக் கொண்டவளும் நீயே...
என் எதிர்காலமே நீதான்
என்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் எனக்கு...நீ கொடுத்த
மறக்க முடியாத வலி...
இன்று என்னை கொன்று குவிக்கிறது...

நம்பிக்கை,எதிர்நோக்கு,அன்பு
ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன
இவற்றுள் அன்பே சிறந்தது
என உன்னை நேசித்த பிறகு தான்
தெரிந்துக் கொண்டேன்..
மிருக குணம் கொண்ட என்னையும்...
நல்ல மனுஷனாய் உருவாக்கியவளே...

உன்னை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை
என்றாலும் முதல் முறையாய் மரண வலியை
உணரவைத்தாயே...
புரிந்துக் கொள்ளாமலே விலகிப் போனாயே...
ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்
என்னை குப்பையென வீசி சென்றாயே...
இறுதிவரை மௌனமாக இருந்தே
என்னை சாகடித்து சென்றவளே...
நான் சொல்வதை கூட
காது கொடுத்து கேட்காமல் போனவளே...
உன்னை மறக்க முடியாமல் தவிக்கின்றேன்...
உன்னை இழக்க  முடியாமல் துடிக்கிறேன்...

உன்னால் இனி சிரிப்பேனோ...
நீயின்றி வாழ்வேது பெண்ணே...
உன்னை காதல் செய்து...காதல் செய்து...
நான் யாரென்பதையே மறந்து போய் விட்டேன்
என்னுள் தொலைந்து போன உன்னை தேடி அலைகிறேன்...

வந்து விடு ! வந்து விடு !
எனக்காக மீண்டும் ஒருமுறை
வந்துவிடு என்னுயிரே...என்னுயிர் காதலியே...
உன் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக்
காத்துக் கொண்டிருக்கும்
உன் ஆசை காதலன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: Ninja on December 15, 2020, 06:13:25 PM
பெருநடைக்கு பிறக்கான சலிப்பொன்றை
அடைந்திருந்த மனதிற்குள் ஈரம் வற்றியிருந்தது.
எத்தனை நாட்களோ கடந்துவிட்டது,
நான்
இன்னும் கடந்து செல்ல முடியாத இடத்தில் தொக்கி நின்றிருக்கிறேன்

உன் எல்லா நாடகங்களும் வெறுப்பிற்குரியதாக இருந்தபொழுதும்
நினைவுகளை நிறைத்திருந்த தருணங்களை இழக்க
நான் விரும்பியிருக்கவில்லை.
எத்தனையோ மனிதர்கள் வலிகளை தந்து சென்றிருக்கின்றனர்,
இந்த காயம் ஆற
இன்னும் எத்தனை காலம்
நான் இந்த துன்ப நதியில் நீந்தியிருக்க வேண்டும்?

எல்லாரையும் போல நீ சிரிப்பதில்லை
மிக மென்மயாக, இதழ் விரிக்காமல்
புன்னைகைக்கும் உன் முகம் நினவுகளில் பின்னியிருக்கிறது.
நீ எப்பொழுதும் சிரித்தபடிதான் இருந்திருக்கிறாய்,
முதற் சந்திப்பிலும்,
இறுதி சந்திப்பிலும்,
எதிர்பாராத சந்திப்புகளிலும்,
நினைவுகளை மெல்ல மெல்ல
கூர்மையாக அறுக்கும் உன் சிரிப்பு
எல்லா காலமும் இருந்திருக்கிறது

என்னுடைய எல்லா வெற்றிடங்களிலும்
நீ நிறைந்திருந்தாய்
உன்னிடமிருந்து பிரிந்து செல்வது
இன்னொரு வெற்றிடத்திற்கான இடம் என்பதை
நான் எப்பொழுதும் அறிந்திருக்கிறேன்.
உன் குரலில் இருந்தும்,
உன் கோவங்களில் இருந்தும்,
உன் கர்வ புன்னகைகளிலிருந்தும்,
என்னை விடுவித்துக்கொண்டு
ஓர்
வெற்றிடத்திற்கு வெளியேறிவிட நான் விரும்பவில்லை

என்னிலிருந்து எல்லா நிறமிகளையும் எடுத்து சென்ற பிறகும்
காய்ந்த மர சருகாய்
உன் நிழலிலேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறேன்.
என் சிறகுகளை பிடிங்கிக் கொண்ட பிறகு
உன் வானில் நான் பறப்பது எங்ஙனம்?
தனிமையின் மலர்களை நான் தாங்கி நிற்கிறேன்
ஒருமுறை இதழ் விரிக்கும்
தென்றலாகவேனும் வீசிவிட மாட்டாயா?

உன்னை இழந்துவிட்டதற்காக
நானே என்னிடம் சண்டையிடுகிறேன்
உன்னை இழந்துவிட்டதற்காக
நானே என்னை சமாதானப்படுத்துகிறேன்.
உன்னிடம் இழந்துவிட்ட புன்னகைகளை
மீண்டும் மீட்டெடுக்கப்
பிரயத்தனப்படுகிறேன்.
நினைவுகளின் ஆழத்திலிருந்து
மேலெழும்பி வந்து நீ புன்னகைப்பதிற்காக
ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறேன்,
வெற்றிடத்தில் இருக்கும் என்னை மீட்டிட
உன் ஒரு துளி புன்னகை மட்டும் போதும்
சகி!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: AgNi on December 16, 2020, 12:29:37 PM


காதல் என்ற  வார்த்தையில் காயம் செய்தவளே !
நேசித்தவனின் நெஞ்சை வஞ்சித்து  போனவளே !

அன்று ...
என்னை தீண்டும் தென்றலுக்கு   பேச தெரியாது..
தெரிந்து இருந்தால் சொல்லி இருக்கும் ...
நீ காற்றோடு கலந்து போக போகும் காதல் என்று ...

பூக்களுக்கு பேச தெரியாது ...
தெரிந்து  இருந்தால்  சொல்லி இருக்கும் ...
இது வாடி போக போகும் காதல் என்று...

மேகங்களுக்கு பேச தெரியாது ...
தெரிந்து இருந்தால் எச்சரித்து இருக்கும் ...
இவள் கலைந்து போகும் சிறு துகள் என்று ....

மழைக்கு பேச தெரிந்து இருந்தால்
சொல்லி இருக்கும் ....நீ
கரைந்து போக போகும் உப்பு கல் என்று ..

நிலவுக்கு பேச தெரிந்து இருந்தால் ..
எனக்கு நினைவூட்டி இருக்கும் ...
இவள் காதலும் ஒரு நாள் மறைந்து போகும் என்று ..

கால்கள் படும் பூமிக்கு பேச வாய்ப்பு இருந்தால்
காணாமல் போக போகிறவள் இவள்..
சற்று கவனமா இரு என்று சொல்லி இருக்குமோ?

நடந்து போகும் நதியே ..உன்னை பேச விட்டு இருந்தால்
இவள் என்னை போல கடல் ஆகிய உன்னை
என்றும் அடைய மாட்டாள் என்று சொல்லி  இருப்பாயா ?

இயற்கையே ! எனக்கு நீ கொடுத்த சமிஞ்சைகள்..
கவனித்து இருந்தால் இன்று  நான்
காதல் கல்லறையில் கைதி ஆகி இருப்பேனா ?

கண்களில் காதலை காட்டி கட்டி போட்டு விட்டு ...
இரக்கம் இல்லாமல் ஏமாற்றி  சென்றவளே ...
அடி போடி ! உன் அடுத்த காதலன் ....
என்னை போல ஏமாளியாக இருக்க மாட்டான் !
வாழ்க வளமுடன் ! என் சாபங்களுடன் !


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: Dragon Eyes on December 16, 2020, 01:19:43 PM
வலைத்தளத்தில் அறிமுகம் ஆனோம் !
நிலை தவறி காதலில் விழுந்தோம் !
என் நேச   பரிமாற்றத்தை நிஜமாய்  ஏற்றாய்
காதல் வானில் பறந்து  சஞ்சாரம் செய்தோம் !

வெகு தொலைவில் நீ இருந்தாலும் ..
மனதில் அருகே இருந்து மணம் வீசினாய்  !
தொலைபேசி நம் காதலை வளர்த்தது
கனவுகளும் மனதில் விரிந்தது ..

ஓர் நாள் சந்திப்பில் உள்ளத்திற்கு முழுதாய்
உன் கயல் விழிகளுக்கு அடிமை ஆக்கினாய் !
நீதான் என் எதிர் காலம் என தீர்மானித்து
வருங்கால திட்டங்கள் தீட்டி ...
வலிமை ஆக்கினோம் காதலை !

ஒவ்வொரு    நாளும்  உன் முகஅழகினை   காண ..
கடற்கரை மணலில் கை  கோர்த்து நடக்க ...
உன் தோல் சாய்ந்து உன் கூந்தல் வாசம் பிடிக்க ..
உன் அருகிலேயேகாலம்முழுதும்  வாழ்ந்து விட ...
வரம் பெற தவம் கிடந்தேன் !

ஆனால்.....
பெற்றவர்களுக்காக என்னை தூக்கி எறிந்தாய் !
நான் பெற்ற வரங்கள் இன்று சாபங்களாய்!
 இன்று ...உன் சுயநல சுதந்திரத்தில் ..
கூண்டு  கிளியாய் அடைபட்ட நான்  !   

விலக வேண்டும் என்று நினைப்பவளுக்கு ..
என்ன விளக்கம் கொடுக்க காதலுக்கு ?
கண்கள் விற்று ஓவியம் வாங்கினாய் நீ !
கண்கள் இல்லாமல் இருளில் தவிக்கும் நான் !
பெரிய வித்தியாசம் இல்லையடி பெண்ணே !

கரை சேர முடியா அலைகள் என்றும் ..
காத்து இருக்காது ....ஆனால் ..
உனக்காக காத்து இருக்கும் நான் ..
அந்த கலங்கரை விளக்கம் ! 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: இணையத்தமிழன் on December 16, 2020, 02:46:57 PM
பிரிவு
நான் கற்பித்த காதலுக்கு
நீ  கொடுத்த பரிசு

உன்னை மாலையிட நினைத்தவனோ
மண்டியிட்டு கிடக்கிறேன்

நிரந்திரம் என்று நினைத்தேனே
நிராகரித்து சென்றாளே
நினைவுகளில் இருந்தவளோ
நிழலாய்த்தான் சென்றாளே

உன்னுள்ளே தொலைந்தவனோ- இன்று
உன்னையும் தான் தொலைத்தேனே

ஓலமிட்டும் அழுகிறேன்
உன்னை எண்ணி கரைகிறேன்

இதயத்தை எடுத்துவிட்டு
இன்னுயிரை விட்டவளே
மண்ணுள்ளே சென்றாலும்
மறையாது என் காதல்

மறுக்காதே பெண்ணே
மன்னிப்பும் கேட்டுவிட்டேன்
மன்னவனாய் இருந்தவனும்  (உன் இதயத்தில் )
மன்றாடிக்கேட்கிறேன்

மன்னிப்பாயா
                                  -இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: MoGiNi on December 16, 2020, 03:34:21 PM
இரவுகள்
இன்னும்
உறக்கம் கொள்வதாயில்லை..

அந்தகாரத்தின் ...
தனிமைப் பொழுதுகளை
சுவைத்துச் சுவைத்து
இருதயச் சுவர்களின்
நா வறண்டு கிடக்கிறது ..

மனக்கிடங்கில்
மரணிக்கும் தருவாயில்
உன் நினைவுக் கருக்கள் ..
உயிர் கொடுக்க முனையும்
ஒவ்வொரு தருணங்களிலும்
சில உதாசீனங்கள்
சில கோபங்கள்
சிறு முகத்திருப்பல்கள்
கருக்கலைப்பு செய்து விடுகின்றன ..

உனக்காக
புன்னகைக்க முயலும்
உதடுகளிடம்
விலை கேட்கிறாய்
வார்த்தைகள்
வறண்டு கிடக்கிறது ..

என் கோபங்கள்
என் நேசங்கள்
என் தாபங்கள்
பரிச்சயமானவை
இருந்தும்
பழக்கமற்றவையாக
உன் பரீட்சார்த்தங்களுக்கு
உட்படுத்தப் படுகிறது ..

தனிமைக்கும்
எனக்குமான பந்தம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
அவை நிரந்தரமானவை
ஜீவித பந்தம் .
மீண்டும்
ஒரு பரீட்சார்த்த முடிவில்
எழுதிச் செல்கிறது
காதல் பொருத்தமில்லாதது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: Raju on December 16, 2020, 03:57:19 PM
இதயத்தின்
என்னச்சுவர்களில்
வண்ண வண்ணமாய்
வரைந்தவளே
எங்கிருக்கிறாய் ...

வீசும் பொழுதில் தெரியாத
வார்த்தையின் வீரியம்
நீ விலகும் கணங்களில்
தெரிந்துவிடுகிறது ...

சில ஏமாற்றங்களின்
சிதிலமடைந்த
துகள்கள் கொண்டு
இயங்கும் இதய அறைகள்
இன்னும் உன் நினைவுகளை
இழுத்து நிறைத்துக் கொள்கிறது
கரங்களில் வராத உன்னை
கனவுகளில் படர்ந்துகொள்ள ...

மன்னிப்பு எனும்
வார்த்தையை கடந்து
மண்டியிடுகிறேன்
இறைவன்
படைத்த படைப்புகளில்
அதிர்ஷ்டம் தொலைத்தவன்
அனுசரிக்க தெரியாதவன்
கண்ணீரோடு விண்ணப்பம்
எனை கடந்துவிடு ..

கண்ணீர் கொண்டு
கனவுகளை துடைத்து விடுகிறேன் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: TiNu on December 16, 2020, 05:53:31 PM
மன்னிப்பாயா! பொன் மகளே! எனை மன்னிப்பாயா!!
நீ ஜனித்த நாளன்று உங்களை பிரிந்தேனே!!
பணமே பெரிதென..  அதன் பின்னே ஒடினேனே!!
அது என் பிழையே..  திரும்பிப்பார் அன்பே!!

நீ பூமிக்கு வந்த நாள்.. நான் இல்லை உன்னருகினிலே...
உன் விழிகள் காண்ட காட்சிகளிலும்.. நானும் இல்லையே..
உன் பிஞ்சுக்கரங்களின் ஸ்பரிசங்களும் உணர்ந்ததில்லையே
இதுவெல்லாம் என் தவறே... திரும்பிப்பார் உயிரே...

நீ பேசிய முதல் சொல் நான் அறியேனே..
நீ முதல் முதலாய் எழுந்து நின்றதறியேனே...
நீ கிறுக்கிய முதல் மொழியறியேனே...
இது என் தப்பு... திரும்பிப்பார் உறவே .....

நீ என்னை தேடிய  தருணங்களில் நான் இல்லை..
எதிர்பார்த்தது ஏங்கிய நிமிடங்களிலும் நான் இல்லை...
உன் தேவையறியாது... கடமைகளை மறந்த தகப்பனாய் 
தவறியவன் நானே... திரும்பிப்பார் கண்ணே...

12 வருடங்கள்  கடத்திவிட்டேன்... மகள் அருமை அறியாமலே.
பொருள்விட நீயே உயர்ந்தவள்...  என உணர்ந்தேனே இன்று..
உன் கோவம் முறையே... முறைதவறிய தந்தையாய்
மன்றாடி மண்டியிடுறேன்..  திரும்பிப்பார் மகளே...

உன் உறவின் பொருளறியாது..  மூடன் ஆனேனே
உயிரிகளின் அருமையறியாத குருடன் ஆனேனே..
நீயேஎன் பிறப்பின் பொருளாவாய் மகளே..
இனி பிரியேன் ஓர் கணமும்..  திரும்பிப்பார் என் வாழ்வே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 252
Post by: JeGaTisH on December 16, 2020, 08:07:12 PM
நெஞ்சிலே  பல காயங்கள்
எல்லாம் நீ  வாழ்ந்த  சுவடுகள் !

காலப் போக்கில் மாறி போக அவை
வெளிக்காயங்கள் அல்ல
மனதோடு உன்னை நேசித்து
தினம் தினம் உன்னோடு
நான் வாழ்ந்த காதல் காயங்கள் !

என் வாழ்க்கையின் துணை
நீயென அறியும் முன்பே  !
வானவில்லை போலே
வந்து சென்றாய் !

என் முகம் சுருங்கும் நேரம்
உன் மனம் உடையக்கண்டேன் !
பாசம் எனும் ஊற்று
உன் விழிவழியே
காவேரிபோல்  கரைந்தோடுகிறது
முகப்பருவின் பாதையோரம் !

உன்னை என்னை பிரிப்பதட்க்கு
விதி என்னும் மாயன்
சூழ்ச்சி வலை பின்னுகிறானோ !
நம் வாழ்வும் முடிந்து விடுமோ
அவன் வலையில் சிறைபடுமோ _  நம் இதயம் !

அன்புடன் ஜெகதீஷ்