FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on November 18, 2018, 07:43:42 AM
-
பெயரில் என்ன இருக்கிறது
ஆளற்ற நெடுமலையின்
உச்சி சாரலில் ஓராயிரம்
பச்சைக்கிடையே பூக்கும்
ஓர் ஒற்றை ஊதா பூவிற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
அலைகள் கடந்த பேரமைதி கொண்ட
ஆழியின் மேல் கண்டம் தாண்டி
வலசை செல்லும்
நீலவர்ணப் பறவைக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
நூற்றாண்டுகளாய்
நிழல் விழும் நிலத்தின் மேல்
அடர் விழுதுகள் தொங்கி நிற்கும் பெருமரத்திற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
பைம்பூ சூடி நிற்கும்
மெல்லியல் மலர்பெண் இட்ட
பசுஞ்சாண கோலத்திற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
தெரு விரித்த மஞ்சணத்தி மலர்
படுக்கையில்
கட்டிப் புரண்டு விளையாடும்
சிறு நாய்க்குட்டிகளுக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
பெருங்கருணை சுரக்கும் தாயின் கண்களை நோக்கி
'ங்க்கா' என குறுஞ்சிரிப்போடு
அமுதம் பொழியும் மழலைக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
மலைப் பிறப்பெடுத்த நீலம்பொங்கும்
நெடுநதியின் சலசலப்பில்
துள்ளிக் குதிக்கும் ஒரு மீனிற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
அந்திக்காவலன் ஒளியில்
சலனமின்றி பாதம் தொட்டுச் செல்லும்
சிறு அலைக்கு
பெயெரென்று எதுவும் தேவையில்லை
ஏதோ ஒரு உறவின் நீட்சி போல
ஏதோ ஒன்றில் தொலைந்து மீள்வது போல
ஓர் அணைப்பு தரும் பேரின்பத்தை
ஓர் பிரிவு தரும் பெரும் துயரினை
அறியவென
பெயர் தெரியாத ஒரு வனத்தில்
அன்புடை எனக் கலந்துவிட்ட
உள்ளங்களின் உறவுக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
ஏனெனில்
பெயரில் எதுவுமே இல்லை
-
பெயர் இருப்பதால் தானே இந்த அழகிய கவிதை பூத்தது
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
-
ஆஹா, நன்றி ஜோக்கர் தோழர்
-
பெயர் என்பது ஒரு அடையாளமே. குணம் மட்டுமே என்றும் நிரந்தரம். நல்ல கவிதை.
கைல கட்டு போட்டும் உங்களோட கவிதை ஆர்வத்துக்கு கட்டு இல்லைனு நிரூபிக்கிற மாதிரி கவிதை எழுத்திருக்கிங்க. உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் சிக்கு.
-
கட்டுப் போட்டு கையை கட்டுப்படுத்தலாம் மனச எப்படி கட்டுப்படுத்த gab :)
என்னைப் பொறுத்தவரைக்கும் பெயரும் ஒரு அளவுகோல் தான். எல்லையற்ற அன்புக்கு ஏதாவது பெயர் உண்டா என்ன? அதை குறிப்பதாக எழுதியது இந்த கவிதை.
நன்றி Gab :)